அதனால் எதுவும் சொல்லாமல் அவனுக்கு ஆராதனையை ஒற்றிவிட்டு செல்ல அவளின் புரிதலில் மனம் ததும்பியது இவனுக்கு.
ஒன்பதரை மணி ஆக இன்னும் பத்து நிமிடமே இருக்க பேப்பரை மடித்து வைத்துவிட்டு எடுத்த குறிப்புகளை தனது ஐபேடில் போட்டோக்களாக எடுத்து சேகரித்துக்கொண்டவன்,
“பூர்வி ரெடியா?…” என்றான்.
“ஹ்ம்ம்…”என்று வந்து நிற்க அவளின் புடவையை ஆராய்ந்தவன்,
“நாட் பேட்…” என சொல்ல இன்னும் கடுப்பானாள்.
“வேணும்னு ஒன்னும் எடுத்து கட்டலை. கைல கிடைச்சதேன்னு தான் எடுத்தேன். வெளில போகனும்னு இப்போ தானே சொன்னீங்க? அதான்…” என்று முறைப்புடன் சொல்ல ஒரு தலையசப்புடன் சிரித்துக்கொண்டே இரு கைகளையும் தூக்கியவன்,
“நான் எதுவும் கேட்கலையே…” என்று சொல்லவும் உதட்டை கடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டாள்.
அது புடவை எடுக்க சென்ற அன்று அவனுக்கு பிடிக்கும் என்று விமலா சொல்லிய புடவை. கட்டி முடித்து வெளியே வரும் பொழுது கொண்டவனின் பார்வையை கவர்ந்த புடவை. அன்றைய நாளும் நிகழ்வும் இருவரின் மனதில் தென்றலாய் வீசி செல்ல இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவி கோர்த்து நின்றது.
“அன்னைக்கு அந்த சின்ன கேப்ல என்னை உரசிட்டு போன தானே நீ?…” என்று வேறு விஷமமாய் அவன் கேட்டு வைக்க செம்பருத்தி பூவாய் சிவந்துவிட்ட முகத்தை மறைக்க படாதபாடுபட்டவள்,
“தத்தி…” என தன் தலையிலேயே அடித்துக்கொள்ள முகம்கொள்ளா புன்னகையுடன் அவளுடன் கை கோர்த்தபடி வெளியே வந்து கதவை பூட்டிக்கொண்டு லிப்டில் இறங்கி மூன்றாம் தளத்தில் நின்றான்.
“இங்க என்ன?…” என அவனிடம் திரும்பி கேட்க,
“வா சொல்றேன்…” என்று அவளை தோளோடு அணைத்துக்கொண்டு நடக்க அவள் தான் நெளிந்தாள்.
“கையை எடுங்க, வெளில வச்சுட்டு…” என்று முறைக்க,
“இங்க எத்தனை பேர் இருக்காங்களாம்? எல்லா கதவும் பூட்டி இருக்கு. இருக்காங்களா இல்லையான்னே தெரியாம. இதுல இவ மேலா நான் கை போடறதை பார்த்துட்டாங்களாம்…” என்று அதற்கும் அவன் வாயடிக்க,
“அவ்வ்வா ஆனாலும் நான் பார்த்தாலும் பார்த்தேன் உங்களை மாதிரி ஒருத்தரை பார்த்ததே இல்லை. வாய் வாய்…” என்று அவன் வாய் பொத்தி சொல்ல,
“அதுதான் வாசுதேவகிருஷ்ணன்…” என்று மிடுக்காய் அவன் மீசையை முறுக்கிக்கொள்ள அதை கண்ட அபூர்வாவின் கண்கள் மையலுடன் அவனிடம் மையம் கொள்ள மனம் சாய்ந்தது.
“இதை மட்டும் யாரும் பார்க்க மாட்டாங்களா கண்மணி?…” என்று அவளை கேட்க,
“தெரியாம பார்த்துட்டேன்…” என்று முகம் திருப்பினாள்.
அதற்குள் ஒரு வீட்டின் முன்னால் சென்று காலிங்பெல்லை அழுத்த உள்ளிருந்து ஒருவன் வந்து கதவை திறந்தான்.
“வாங்க ஸார்…” என்று பவ்யமாய் வரவேற்றவன்,
“வாங்க மேடம். ஹேவ் எ நைஸ் டே…” என்று வேறு சொல்லி அவர்களுக்கு நகர்ந்து வழி விட,
“இன்னைக்கு நைஸ் டே-யாம். அப்படியா கண்மணி?…” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்டவனின் குரலில் ஏகத்திற்கும் துள்ளல் நிறைந்திருந்தது.
“இங்கயும் எதுவும் பேசாதீங்க. ப்ளீஸ்….” என்று கெஞ்சும் குரலில் அவள் சொல்ல,
“நீ மட்டும் பேசின நேத்து நைட்…” என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து அவன் நிற்க,
“ஸார், நீங்க கேட்ட மாதிரியே தான் இந்த வீட்டோட ப்ளானிங். இதே மாதிரி மேல இன்னொரு வீடு இருக்கு. அதையும் பாருங்க. ரெண்டும் ஒரே ஓனர் தான். பேசி முடிச்சிடலாம்…” என்று சொல்ல,
“என் வொய்ப்க்கு தான் பிடிக்கனும். மேடம் சொல்லட்டும். எனக்கு ஓகே…” என்றவன் அபூர்வாவின் பக்கம் திரும்ப அவளோ அதிர்வுடன் நின்றாள்.
“என்னது இது நமக்கா?…” என கேட்க,
“திரும்பவும் என் வாயை கிளறாதடி. கேட்ட தானே என் வொய்ப்க்கு பிடிக்கனும்னு நான் சொன்னதை. அப்ப நீ யாராம்? என் வொய்ப் யாராம்?…” என்றான் கடுப்புடன்.
“இல்லை நாம தான் ஏற்கனவே…” என்று தயங்க,
“சொல்றேன். முதல்ல ரெண்டு வீட்டையும் பாரு…” என சொல்ல அவளோ அவனின் முகத்திலேயே பார்வையை பதித்திருக்க,
“இவ தேற மாட்டா” என நினைத்தவன்,
“சுபாஷ் ஒரு பை மினிட்ஸ்…” என்றதும்,
“ஓகே ஸார், நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன்…” என அவன் நாகரீகமாய் வெளியேறி சென்றான். அவன் போனதும்,
“என்ன பூர்வா?…” என கேட்க,
“இல்லை ஒண்ணுமில்லை. பார்த்துட்டு இருக்கேன்…” என்று சமாளிக்க,
“என் மூஞ்சியை பார்த்தா ஆச்சா? அங்க குடியிருக்க முடியுமா?…” என்று இப்பொழுது இலகுவான குரலில் பேச,
“பார்க்கறேன்…” என திரும்பி வீட்டை பார்வையிட்டாள்.
“பூர்வா என்னை பார்…” என அவன் பக்கம் திருப்பியவன்,
“இது ஏற்கனவே ப்ளான் பண்ணினது தான். நம்ம கல்யாணம் ஆன அன்னைக்கு வீட்டுக்கு வந்தவங்களை இருக்க கூட சொல்ல முடியலை…” என சொல்ல அவளின் முகத்தில் கேலி சிரிப்பு.
“சரிடி, ஓட்டாத. ஒத்துக்கறேன். அன்னைக்கு யாரையும் இருக்க சொல்லியிருக்கமாட்டேன் தான். அதுக்காக யாருமே வந்து தங்காம இருக்க முடியாது பாரு. அதான். அப்பவே லீஸ்க்கு டபுள் பி.ஹெச்.கே பார்க்க சொல்லிருந்தேன். வீடும் கொஞ்சம் பெருசா. எல்லா சம்பிரதாயங்களும் முடியவும் வந்து பார்க்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்…”
“நேத்து நடந்ததுல மைண்ட் ப்ளாங்க். அப்பவே டிஸைட் பண்ணிட்டேன். எதுக்கு லீஸ்க்கு. சொந்தமாவே வாங்கிருவோமேன்னு. நைட்டே சுபாஷை கான்டேக்ட் பண்ணி சொல்லிட்டேன். அவன் ஏற்கனேவே வீடு வாங்கறதை பத்தி சொல்லிருந்தான். இன்னைக்கு பேசிடலாமேன்னு உன்னையும் கூட்டிட்டு வந்தேன்…” என்றான்,
“இனி அடிக்கடி அம்மாவும், அண்ணனும் அண்ணியும் வருவாங்க. உங்க வீட்டுல இருந்து வந்தாலும் தங்க வேணும்ல. அதான். இப்ப உன்னோட ஒபீனியன் சொல்லு…”
“சொல்றதுக்கு என்ன இருக்கு? யோசிச்சு தான் முடிவு பண்ணியிருப்பீங்க. சந்தோஷம் தான்…” என்றவளுக்கு வேறு என்ன பேச என்றே தெரியவில்லை.
ஒருமாதிரி மனநிலையில் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உணர்ந்தாள். தனக்காய் பார்த்திருக்கிறான் என்ற எண்ணமே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
“இப்ப வீட்டை பாரு. பிடிச்சா இதையே பிக்ஸ் பண்ணிடுவோம். இல்லையா ஃபோர்த் ஃப்ளோர் ப்ளாட்டையும் பாரு. எதுவானாலும் உன்னோட சாய்ஸ் தான்…” என சொல்லவும் இருவருமாக வீட்டை அலசி ஆராய்ந்தனர்.
மூன்றாவது தளத்தில் இருந்ததோ கட்டி முடிக்கப்பட்டு யாரும் குடியிருக்காத புது வீடாக இருந்தது. நான்காம் தளத்தில் இருந்த வீடு ஏற்கனவே ஒருவர் வாழ்ந்து காலி செய்ததாக இருக்க முதலில் பார்க்க வந்ததற்கே குடி செல்ல முடிவெடுத்தனர்.
இரண்டு வீட்டில் மூன்றாவது தளத்தில் உள்ள வீடு இன்னும் விஸ்தாரமாகவும் கச்சிதமாகவும் இருந்தது. என்ன ஒன்று இது மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடாக இருக்க போட்டு வைத்திருக்கும் திட்டத்தில் இருந்து இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படும்.
சுபாஷிடம் பேசி அந்த வீட்டையே முடிக்க சித்தமானான் வாசுதேவகிருஷ்ணன். பேசி முடித்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் அவனிடம் சொல்லிவிட்டு லிப்ட்டிற்கு வந்து நிற்க இவர்கள் தளத்திற்கு செல்ல அழுத்திவிட்டு நிற்க திறக்கும் பொழுது உள்ளே இருந்தவர்களை பார்த்து ஒரு நொடி இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
“ம்மா…” என வேகமாய் உள்ளே சென்று அன்புக்கரசியை அணைத்துக்கொள்ள,
“வாசு, லட்சுமி…” என இருவரையும் சேர்த்தே கட்டிக்கொண்டார் அன்புக்கரசி.
“வாடா அண்ணா, வாங்க அண்ணி…” என அவர்களையும் மறக்காமல் வரவேற்றவன் வீடு செல்லும் வரை ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தான்.
அபூர்வாவோ அவனின் பேச்சுக்களை ரசித்தாலும் “இவனுக்கு வாய் வலிக்காதா” என்று தான் பார்த்தபடியே இருந்தாள்.
“என்ன லட்சுமி, சத்தமில்லாம நிக்கிற? இன்னும் உன் கோபம் போகலையா?…” என விமலா கேட்க,
“ஐயோ அக்கா அதெல்லாம் இல்லை. யார் மேலையும் கோபமில்லை…” என்றவள் பார்வை கணவனிடம்” உன் மேல உள்ள கோபம் மட்டும் போகலை” என்றது.
ஆமோதிப்பதை போல ஏற்றவனின் புன்னகையில் அவள் தான் பார்வையை திருப்பிக்கொள்ள வேண்டியதானது.
கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்ததும் கொண்டு வந்தவற்றை எல்லாம் பரப்பி வைத்தவர்கள் அக்கடா என அமர்ந்தனர்.
“என்னம்மா இதெல்லாம் இங்க எடுத்துட்டு வந்திருக்கீங்க?…” என கேட்க,
“இங்க எடுத்துட்டு வராம வேற எங்க எடுத்துட்டு போகவாம்?…” என்று அன்பு எதிர் கேள்வி கேட்க,
“சரி, சரி. ஆமா எப்படி அப்பா விட்டாரு? சப்ரைஸா இருக்கே…” என்றதும் விமலா தான் மடைதிறந்த வெள்ளமென அத்தனையையும் சொல்ல சொல்ல வாசுதேவகிருஷ்ணனும், அபூர்வாவும் ஆச்சர்யமாக கேட்டபடி இருக்க,
“நானும் ஏதோ நேத்து ஒரு வேகத்துல பேசிட்டேன் அத்தை. தப்பா எடுத்துக்காதீங்க…” என அபூர்வா அவரிடம் மன்னிப்பை வேண்டும் பாவனையில் சொல்ல,
“அட விடும்மா, அவருக்கு யார்க்கிட்டையாச்சும் வாங்கி கட்டலைன்னா பொழுது போகாது. நேத்து எல்லாரும் சேர்ந்து பேசிட்டோம். அவ்வளோ தான்…” என சொல்லி,
“உங்கண்ணன் விமலாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டு வரட்டும்னு சொல்லவும் மனுஷன் முகத்தை தூக்கி தெரு முக்குல வச்சதை பார்க்கனுமே?…” என்று அன்புக்கரசி சொல்லி சிரிக்க,
“அத்தனை பேச்சையும் பேசிட்டு உங்களுக்கு சிரிப்பு வேற…” என்ற வாசுதேவகிருஷ்ணன்,
“எத்தனை மணிக்குடா அப்பாய்மென்ட்?…” என்று மருதவேலிடம் கேட்க,
“பத்தரை மணிக்கு. இப்பவே டைம் ஆகிடுச்சு. நாங்க போய்ட்டு வரோம்…” என்று மருதவேல் எழுந்துகொள்ள,
“இருங்க மாமா, காபியாவது குடிச்சுட்டு போங்க…” என அபூர்வா காபி போட செல்ல,
“இரும்மா லட்சுமி…” என்ற அன்புக்கரசி,
“விமலா உன் போனை கொண்டா…” என வாங்கி டாக்டருக்கு அழைத்தவர் அவரிடம் தனக்கு மூட்டுவலி, வரமுடியவில்லை. நாளை வருகிறோம் என்று பேசிவிட்டு,
“நாளைக்கு கூட்டிட்டு போடா. நாளைக்கும் இதே நேரம் தான்…” என சொல்ல,
“இன்னைக்கே அவர் என்னை என்ன சொல்ல போறாரோ? நீங்க வேற ஏன்ம்மா?…” என மருதவேல் கவலையாக,
“ம்க்கும், இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆத்தா வையும் காசு குடுன்ற மாதிரி அப்பா வைய்யுவாரு. எங்கயும் போகமாட்டேன்னுட்டு இருக்க. ஏன்டா தெரியாமத்தானா பேசறேன். அதெல்லாம் சமாளிச்சுக்கலாம். கேட்டா நாளைக்கு கண்டிப்பா வரனும்னு சொல்லிருக்காங்கன்னு நீ சொல்லுற. அதான் நானும் இருக்கேனே? என்னடா உனக்கு பயம்?…” என சொல்லியவர்,
“விமலா, லட்சுமி வாங்க இதை எங்க அடுக்கன்னு பார்த்து வைப்போம். டேய் போயி கறியும், மீனும் வாங்கிட்டு வாங்க. சமைப்போம். நாளைக்கு போனா போதும்…” என அன்புக்கரசி வரிசையாக திட்டங்களை தீட்ட அபூர்வா அவரின் கை பிடித்து நிறுத்தி,
“மாமாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல அத்தை?…” என கேட்க,
“என்னத்துக்கு? இருந்தா நீ ஒரு மூலைக்கும், நான் ஒரு மூலைக்கும் உட்கார்ந்து மூஞ்சியை மூஞ்சியை பார்த்துட்டு இருக்கனும். சுத்தி சுத்தி வந்தாலும் அந்த மனுஷன் மூஞ்சியை வேற காமிச்சுட்டே இருப்பாரு. இல்லைன்னா பார்த்தாச்சுல வான்னு உடனே கூட்டிட்டு போய்டுவாரு…” என்றவர்,
“நீ ஒன்னும் நினைக்காத. இப்ப எனக்கு முடியலைன்னா உடனே அடிச்சு பிடிச்சு கிளம்பி சும்மா சிட்டா பறந்து வந்திடுவாரு…” என்று சொல்லவும் அவரின் பேச்சில் சிரித்தவர்கள் கொண்டு வந்ததை பிரிக்க ஆரம்பிக்க,
“அத்தை அதுக்கு முன்னால இன்னொரு விஷயம் பேசனும்…” என்றவள் கணவனிடம் தலையசைத்து சொல் என்பதை போல ஜாடை செய்ய வீடு பார்த்திருக்கும் விஷயத்தை பகிர்ந்தான்.
“எம்புள்ளைன்னு இப்பத்தான் பெருமையா இருக்குடா. இந்தாருக்கானே பெரியவனும். ஒரு வீட்டை பார்த்து பொண்டாட்டியை அங்க வச்சு பாத்துக்கனும்னு தோணுதா? அதுல என் புருஷன் தான் கெட்டி. எம்புட்டு பெரிய வீட்டை கட்டி என்னை ஆள விட்டிருக்காரு….” என்று பெருமையாய் சொல்ல,
“அம்மா, என்னை தனிக்குடித்தனம் போக சொல்றீங்களா?…” என மருதவேல் முறைக்க,
“அதானே என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியாது அத்தை. வேணும்னா உங்க பெரிய பிள்ளையையும், மாமாவையும் தனியா அனுப்பிடுவோம்…” என்று விமலா சொல்ல,
“பார்த்துக்கோ. உன் பொண்டாட்டிக்கு என்னை தான் முதல்ல புடிக்குது…” என்று அதற்கும் அன்புக்கரசி மருதவேலை முறைக்க அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.
“சரி சரி, வாங்க போய் வீட்டை பார்த்துட்டு வருவோம்…” என்று அபூர்வா சொல்ல அனைவரும் கீழே சென்றனர்.
“நல்லா இருக்கு வாசு. இனிமே வாரத்துக்கு நாலு நாள் நான் இங்க வந்து இருந்துக்குவேன். இந்த ரூம் எனக்கு…” என்று அப்பொழுதே அன்புக்கரசி சொல்லிவிட,
“ஆமா, நானும் அத்தை கூடத்தான் வருவேன்…” என்று விமலாவும் சொல்ல,
“வாயை மூடுடி. என்னை முதல்ல நினை…” என்று சற்று கடுப்புடனே சொல்லிவிட,
“அதுங்க சண்டை போட்டு முடிச்சு வரட்டும். நாம உள்ள போகலாம்…” என்று ஹாலை தாண்டி இளைய மகன், மருமகளுடன் பேசிக்கொண்டே அடுக்களைக்குள் வந்துவிட்டார்.
“வீடு நல்லா அமைப்பா விஸ்தாரமா இருக்கு வாசு. குடி வர ரெடியாவும் இருக்கு. இந்த மாசத்துல ஒரு நல்ல நாளா பாரு. பாலை காய்ச்சிடுவோம்…” என்றவர் அபூர்வாவை விமலாவை அழைக்க சொல்லி அனுப்பிவிட்டு அவள் சென்றதும்,
“வாசு, என்கிட்டே நகை நிறைய இருக்குடா. உங்கப்பா வாங்கி போட்டது இல்லை. எங்க வீட்டுல போட்டது. பொம்பளைப்பிள்ளை இருந்தா அதுங்களுக்கு குடுத்திருப்பேன். இப்ப மருமகளுங்களுக்கு குடுக்க உங்கப்பா எனக்கு போட்ட நகையே இருக்கு. வீட்டுக்கு உன் தாத்தா போட்ட நகையை எடுத்துக்கோ…”
மெல்லிய குரலில் கிசுகிசுப்பாய் மகனிடம் சொல்லி அவனின் முகம் பார்க்க அவரை அப்படியே அணைத்துக்கொண்டான் வாசுதேவகிருஷ்ணன்.
“அந்த நகை எல்லாம் அப்படியே இருக்கட்டும்மா. நீங்க கேட்டதே போதும். இந்த வீடு நானே வாங்கினதா இருக்கனும்…”
“ஏன்டா அப்பா பேசினது இன்னும் மனசுல அழுத்துதா? அம்மா தான குடுக்கேன்னு சொல்லுறேன். அவர் என்ன வேண்டாம்னு சொன்னாலும் நான் குடுப்பேன் என் பிள்ளைக்கு. லோனு அது இதுன்னு எதுக்குடா மண்டை குடைச்சல்? அம்மா சொல்றதை கேளு வாசு…”
“நீங்க சொல்ற காரணமும் கூடத்தான்ம்மா. நாளைப்பின்ன ஒரு வார்த்தை அவர் சொல்லிட கூடாது. இது கோபத்தால இல்லை. எனக்கே ஏற்கனவே வாங்கனும்னு எண்ணம் தான். இப்ப அமையவும் வாங்கறேன். அவ்வளோ தான். அதை விடுங்க. நான் கேட்கனும்னா உங்கட்ட தான் கேட்க போறேன். சரியா?…” என சொல்லவும் தலையசைத்தார் அன்புக்கரசி.
“வீடு இன்டீரியரோட ரெடியா இருக்கேடா. சீக்கிரமா பாலை காய்ச்சிடுவோம். நாளை பாரு. பத்திரிக்கை அடிக்கனும்…” என மருதவேல் பரபரப்பாய் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம் பெரியவனே. இப்பத்தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. வீடு வாங்கினது நமக்குள்ள இருக்கட்டும். நம்ம வீட்டு ஆளுங்க, வாசு மாமனார் வீடு, விமலா அப்பா போதும். இதுவே திருஷ்டி ஆகிட போகுது. இன்னும் அடுத்தடுத்து விசேஷங்கள் வரும்தானே?…” என அன்புக்கரசி சொல்லிவிட அனைவருக்கும் அதுவே சரி என்றானது.