நிஜம் – 21
மதிய உணவு வாசுதேவன் வீட்டில் அமர்க்களப்பட்டது. மாமியாரும் மருமகள்களும் சேர்ந்து பேச்சுக்கள் நீண்டு கொண்டே சென்றது. அன்புக்கரசியின் ஒவ்வொரு பேச்சிற்கும் வெடிச்சிரிப்பு தான் அந்த வீட்டில்.
மதிய உணவை முடித்துவிட்டு ஹாலில் கீழே பெட்ஷீட்டை ஒன்றை விரித்து ஐவருமாய் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்க வாசுதேவகிருஷ்ணன் தாயின் மடியில் சுகமாய் தலை சாய்த்து இருந்தான்.
நடுவில் தட்டுகளில் பலகாரங்கள் கொறிப்பதற்கு பரப்பப்பட்டிருக்க அதை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே கதை பேசிக்கொண்டு இருந்தனர்.
மருதவேலின் பார்வை நிமிடத்திற்கொருமுறை தம்பியையும் தாயையும் தீண்டி செல்ல சிறிது நேரம் பொருத்து,
“ஏங்க எழுந்தா மாமாவும் கொஞ்சம் நேரம் அத்தை மடில படுத்துப்பாங்க. எந்திங்க…” என்று அபூர்வா சொல்லவும் மருதவேல் முகம் சட்டென முக மாற்றம் பெற்று,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா தான்….” என்று தடுமாற,
“என் மடில தானடா படுக்க சொன்னா? உங்கப்பா மடில படுக்க சொன்ன மாதிரி எதுக்கு அரண்டு போற?…” என அன்புக்கரசியும் கிண்டல் பேச மருதவேலுக்கு சங்கோஜமாய் இருந்தது.
“இரு என் புருஷனுக்கு போனை போட்டு சாப்பிட்டாறான்னு ஒரு வார்த்தை கேட்டுடறேன். இல்லைன்னா அதுக்கும் மூச்சை பிடிச்சுட்டு மூக்கால அழுவாரு என்னை நினைச்சியான்னு?…” என சொல்லி தனது எண்ணிலிருந்து அவருக்கு அழைக்க முத்துவேல் எடுத்ததும்,
“என்ன கிளம்பிட்டியா?…” என்று தான் கேட்டார்.
“மனுஷனுக்கு தீயில நின்னாலும் அவரு கூடவே தான் நான் நிக்கனும். ஆற அமர எங்கயும் நிம்மதியா இருந்திட கூடாது…” என்று போனை மூடியபடி மகன்களிடம் குறை பாடியவர் அடுத்து பேசும் முன் வாசு ஸ்பீக்கரில் போட்டான்.
“இப்ப பேசுங்க…” என்று மெதுவாய் சொல்ல,
“இல்லைங்க, இங்க வரவும் படபடன்னு வந்துருச்சு. படுத்துருக்கேன்…”
“மாத்திரை போட்டியா? எதுக்குதான் உனக்கு படபடன்னு வருதோ?…”
“ஹ்ம்ம் போட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா?…” என கேட்க,
“ஹ்ம்ம், சாப்பிட்டாச்சு. இப்பத்தான் வீட்டுக்கு வரும் போது கடையில சாப்பாடு வாங்கிட்டு வந்தேன்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், சரி…” என அன்புக்கரசி சொல்லும் பொழுதே,
“அண்ணே கேரியரை கழுவிட்டேன். நைட்டுக்கு அண்ணி வர லேட்டானா கடை பையனை அனுப்பி வைங்க. நான் குடுத்துவிடறேன். வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கன்னா கேட்கவும் மாட்டேன்றீங்க…” என பேசிக்கொண்டே ராணி செல்வது அன்புக்கரசிக்கு தெளிவாய் கேட்க,
“பார்த்தியா?” என மகன்களை பார்த்து முறைத்தவர் அமைதியாய் முத்துவேல் பேசட்டும் என இருக்க,
“அன்பு…” என்றார் அன்பாய்.
“பார்ரா” என மற்ற நால்வருக்கும் சிரிப்பு. இப்படி ஒரு குழைவில் முத்துவேல் பேசி கேட்டிறாதவர்கள் ஆச்சர்யம் பொங்க அன்புக்கரசியை பார்க்க அவருக்கோ வெட்கம்.
“அன்பு கேக்கிறியா?…” என்றார் மீண்டும்.
“அதான் எல்லாத்தையும் கேட்டேனே. நான் தான் லூசுத்தனமா எல்லாத்தையும் புருஷன்கிட்டே மறைக்க கூடாதுன்னு உங்கட்ட அம்புட்டையும் சொன்னா நீங்க…” என்று நிறுத்த மறுமுனையில் முத்துவேல் பதறிப்போனார் போலும்.
“இங்க பாரு அன்பு, ராணி கொண்டு வந்தான்னு சொன்னா நீ சங்கட்டப்படுவியேன்னு தான் சொல்லலை…”
“எனக்கு இப்பத்தான் சங்கட்டமா இருக்கு. இத்தனை நாள் மனசுல ஒன்னும் வச்சுக்காம திட்டுறீங்கன்னு பார்த்தா ஒரு சாப்பாட்டு விஷயம், அதை எங்கிட்ட சொல்லாம மறைக்கிறீங்க…” என குறைபடுவதை போல சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
நிஜமாகவே கோபித்துக்கொண்டாரோ தாய் என நினைத்து அன்புக்கரசியை பார்க்க அவரோ விமலாவிடம் திரும்ப,
“இந்தாங்கத்தை தண்ணி…” என நீட்டவும்,
“கொண்டா இன்னைக்கு இதை வச்சே இங்க தங்கிடுறேன்…” என்று அன்புக்கரசி சொல்லவும் மகன்கள் இருவருக்கும் சிரிப்பு பீறிட்டது.
“ஆனாலும்அவரை நீங்க இந்த பாடு படுத்த கூடாதும்மா…” இளையவன் சொல்ல,
“அப்ப கிளம்பட்டுமா?…” என்றார் அன்புக்கரசி,
“உங்களுக்கு உங்க வீட்டுக்காரரை பார்க்கனும். நேர்ல அவரை வாங்கு வாங்குன்னு வாங்கனும். அதுக்கு என்னை சாக்கு வச்சு கிளம்பனும். என்னை என்ன அவரை மாதிரின்னு நினைச்சீங்களாக்கும்?…” என அவனும் சொல்ல,
“அட விடுடா, பாவம் அப்பா…” என மருதவேல் சொல்ல,
“வேணும்னா நேர்ல போய் சொல்லிட்டு வாயேன்…” என்றான் வாசுதேவகிருஷ்ணன். அவன் பதில் சொல்லும் முன் மீண்டும் அழைத்துவிட்டார் முத்துவேல். அன்புக்கரசி எடுத்ததும்,
“நீ கிளம்பி வா அன்பு. பேசிக்கலாம். அதான் உன் புள்ளையை பார்த்துட்ட தானே?…” என சொல்ல,
“அதான் உங்க தங்கச்சி கவனிச்சிக்கிட்டா தான? சாப்பிடுங்க. நீங்க சாப்பிட்டீங்களோ என்னமோன்னு நான் போன் போட்டா எனக்கு முன்ன சாப்பிட்டு முடிச்சாச்சு. இப்பத்தான் புள்ளைங்கட்ட சொல்லிட்டு இருந்தேன் என் கையால தான் உங்கப்பா பிடி சோறுன்னாலும் சாப்பிடுவாரு. என்ன செய்யிறாரோன்னு. அந்த கவலை எல்லாம் எனக்குத்தான் போல…”
அன்புக்கரசி விடாமல் பேச பேச முத்துவேலுவிற்கு என்ன பதில் பேசுவதென்றே தெரியவில்லை. அதிலும் பதில் சொல்லமுடியாத அளவிற்கு மனைவி பேசுவதும் முக்கியமாக மகன்கள் மருமகள்களை வைத்துக்கொண்டு பேசுவதுமே தலைவேதனையாக போனது.
“அன்பு எல்லார் முன்னுக்கா பேசுற?…” என கேட்க,
“அதான் உங்க தங்கச்சி முன்னுக்கவே நீங்க பேசிட்டேங்களே? என்னைய நாளைப்பின்ன மதிப்பாளா? என்னை விடுங்க, அண்ணிக்கு பயந்து அண்ணன் கடையில சாப்பிட்டதா சொல்லி சிரிக்கமாட்டாளா? அம்புட்டு என்ன நான் உங்களை பயம்ங்காட்டி வச்சிருக்கேனாம்?…” என்று விசும்பினார்.
சுத்தமாய் நொந்து போனது முத்துவேல் தான். என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது எதுவும் விளங்கவில்லை. ஆனால் எல்லாமே தனக்கு எதிராய் நடக்கிறது. தன்னால் எதிர்வினையாற்ற முடியாத அளவிற்கு நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
ஏனோ அன்புக்கரசியின் பேச்சுக்கள் ஒருவகையில் அவரை தாக்கியது. இதுவரை தனக்கெனவே வாழ்ந்த ஒரு பெண்மணி. இன்று வருத்தத்துடன் பேச ஏனோ உடனே பார்க்கவேண்டும் போல தோன்றியது.
“அன்பு…” என மீண்டும் அழைக்க,
“அதான் இல்லன்னு ஆகிபோச்சே, என்னத்த அன்பு? நான் வைக்கிறேன்…” என்று போனை வைத்துவிட,
“உங்களுக்கு ஆஸ்கார் கன்பார்ம் அம்மா. வாவ் வாவ் வாவ்…” என வாசுதேவகிருஷ்ணன் கை தட்ட,
“என்னடா ரொம்ப பேசுற? அவர் இன்னைக்கு இங்க வருவாரு பாரு. பார்த்துக்கிட்டே இரு…” என சொல்லி,
“லட்சுமி வெங்காயத்தை கொண்டா நீட்டுவாக்குல வெட்டுவோம். வெங்காய பக்கோடான்னா உன் மாமனாருக்கு ரொம்ப இஷ்டம். அதுவும் நான் செஞ்சு குடுத்தா. எல்லாரும் தேங்காய் சட்னி தான் செய்வாங்க அதுக்கு. ஆனா இவருக்கு மல்லி, புதினா சட்னி தான் புடிக்கும்…” என அளவளாவ ஆரம்பித்தனர்.
மருமகள்கள் இருவரோடும் பேசிக்கொண்டே அடுக்களையில் அன்புக்கரசி வேலையில் கவனத்தை செலுத்த அபூர்வாவும், விமலாவும் அவரிடம் பேசி சிரிக்க மனைவியின் சத்தமான சிரிப்பில் திரும்பி பார்த்தான் மருதவேல்.
பார்த்தவன் பார்த்தபடியே தான் இருந்தான். மனம்விட்டு அவள் சிரிக்கும் ஒரு சிரிப்பு. இவனின் மனம் வருடுவதாய் இருக்க புதிதாய் பார்ப்பதை போல தான் பார்த்தான்.
திருமணமாகி ஐந்து வருடத்தில் தன்னுடன் இப்படி புன்னகைத்ததாய் ஞாபகமே இல்லை அவனுக்கு.
பேசி சிரிப்பார்கள். அளவாய் அவசியத்திற்காய் என்பதை போல. இத்தனை சத்தமாய் கூட கலகலத்து பார்த்ததில்லை எனலாம். துடுக்காய் பேசி வாங்கிக்கொள்வாள் அவனிடத்தே.
ஆனால் அந்த பேச்சில், சிரிப்பில் ஒரு அளவுகோல் இருந்ததை போல தான். தாயிடம் ஒட்டுதல் என்று தெரியும். ஆனால் தாயிடம் ஒன்றும் சேயாய் இன்று தெரிந்தாள். அத்தனை பிரகாசம் அவர்கள் மூவரிடத்திலும்.
இதுவரை தோன்றாத ஒரு எண்ணம். மீண்டும் விமலாவோடு இரு நாட்கள் எங்காவது சென்று வந்தால் என்ன என நினைத்தான். ஆசைப்பட்டதோடு இல்லாமல் எப்படி நிறைவேற்ற என்று மனதினுள் யோசிக்க ஆரம்பித்தான்.
அந்த நேரம் பார்த்து முத்துவேல் அவனுக்கு அழைக்க ஒரு நொடி தயங்கியவன் பின் விமலாவை பார்த்துக்கொண்டே அழைப்பை ஏற்றவன்,
“சொல்லுங்கப்பா…” என்றான்.
“எங்கடா இருக்க பெரியவனே?…” என கேட்க,
“தம்பி வீட்ல தான் இருக்கோம்ப்பா…” என்று அவன் பதில் சொல்லவும் அமர்ந்திருந்த அன்புக்கரசி எழுந்து வேகமாய் ஓடி வந்தார். ஸ்பீக்கர் போடு போடு என சைகை காட்டவும் அதன்படியே செய்தவன்,
“சொல்லுங்கப்பா, சாப்பிட்டீங்களா?…” என கேட்க,
“ஹ்ம்ம், சாப்பிட்டேன்…” என்று அவர் லேசாய் தயங்கியதை போல தெரிய,
“சொல்லுங்கப்பா…” என்றான் மீண்டும்.
“அங்க உங்கம்மா சாப்பிட்டாளா?…” என கேட்க மயங்குவதை போல பாவனை செய்தான் வாசுதேவகிருஷ்ணன். அவனின் தலையில் லேசாய் கொட்டு வைத்த அன்புக்கரசி கணவரின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்.
“இல்ல இதோ, இப்பதான்…” என அன்புக்கரசி பேசியதை வைத்து பதில் சொல்ல,
“ஏன்டா வீட்டுல அத்தனை பேரு இருக்கீங்க? உங்களால அவளை சாப்பிட வைக்க முடியாதாமா? மவன் தான் பெருசுன்னு போனா? அவனும் முந்தானையை புடிச்சுக்கிட்டே தான சுத்திட்டு இருப்பான். அவன் சொல்லலையா? இதுக்காடா உங்களை பெத்து வளர்த்தா?…” என முத்துவேல் திட்ட மருதவேல் ஒருநொடி திகைத்தவன் பின்,
“உங்கட்ட பேசிட்டு சாப்பிடறதா தான் இருந்தாங்க. இப்ப ராணியத்தை சாப்பாடு கொண்டு வந்ததை நீங்க சொல்லாம மறைச்சீங்க தான? அதான் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்காங்க…” என சொல்ல ஜாங்கிரி ஒன்றை அப்பொழுதுதான் வாய்க்குள் அதக்கி இருந்தார் அன்புக்கரசி.
“ஹ்ம்ம், நேத்து அத்தனை பேச்சு பேசினா, சரி இன்னைக்கு அங்க இருந்து கொண்டுவந்தாங்கன்னு தெரிஞ்சா கோவிச்சுக்குவாளோன்னு தான் இல்லைன்னு பொய் சொன்னேன்…” என பெருமூச்சுடன் சொன்னவர்,
“ஏலே பெரியவனை உன் பக்கத்துல யாருமில்லைல…” என அவசரமாய் கேட்க மருதவேலை தவிர மற்ற அனைவரும் சத்தமில்லாமல் தலையாட்டினார்கள் இல்லை என்று. அதில் மருதவேலுவுக்கு சிரிப்புவர பார்க்க,
“ரொம்ப சோகமா இருக்காளோ? சுகரு இருக்குடா அவளுக்கு. மாத்தரை போட வேண்டாமா? சாப்பிட சொல்லு…” என சொல்ல,
“சொல்றேன்ப்பா….” என்றான் அமைதியாக.
“எப்ப வரீங்க?…” என்றார் அடுத்த கேள்வியில்.
“எப்போன்னு தெரியலை…” என அவன் இழுக்க,
“ஏன்டா அதான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தாச்சுல. அப்பறம் என்ன?…” என்று எரிந்து விழ “அன்புக்கரசி நான் சொன்னதை சொல்லு” என்றார் சைகையில்.
“வந்துப்பா இன்னைக்கு பார்க்க முடியாது. நாளைக்கு தான்….”
“என்ன விளையாடுறியா? இதுக்குத்தான் உன்னை அனுப்ப கூடாதுன்றது. என்ன நினைச்சுட்டு இருக்க? பேசாம ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு நேரா கடைக்கு வான்னு சொல்லியிருக்கனும்…” என சூடாக அவர் பேச பேச வாசுதேவகிருஷ்ணன் முகம் கடுமையாய் மாறியது.
தன் அண்ணனை முறைத்தான். அவனோ விமலாவின் முகத்தை பார்த்தவன் முகம் மென்மையாய் மாற,
“இல்லைப்பா எனக்கும் சேர்த்து பார்க்கனும்னு சொல்லியிருக்காங்க…” என்றான் பட்டென்று.
இதுவரை விமலா மட்டுமே குழந்தையின்மை என்று மருத்துவமனை சென்று வந்தது. சில ஊட்டச்சத்துகளுக்காகவும், மனதளவின் இறுக்கங்கள் தளரவே அவளுக்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. அதுவும் இந்த ஒரு வருடமாக ஊரார் கேட்கும் கேள்விகளுக்காக தான் சென்று வந்தது.
ஒரு முறை கூட மருதவேல் சென்றதில்லை. செல்லவேண்டும் என்ற நினைப்பும் கூட இருந்ததில்லை. கடமைக்கென்று வாழ்ந்தவன் தந்தை சொல்வழி நடந்தவன் அப்படி யோசிக்கவும் நேரமில்லை அவனுக்கு.
விழுப்புரம் சென்ற அன்று அன்புக்கரசி பேசியது, அதன் பின் விமலாவின் மனதோட்டம், இன்றைய அவளின் மலர்ந்த முகமும் புன்னகையும் அவனை புரட்டியிருந்தது.
“இத்தனை நாள் நீ வாழ்ந்தது ஒரு வாழ்க்கையா?” என அவனின் வாழ்க்கையே அவனை எள்ளி நகையாடியது.
அதனை கொண்டு தான் தந்தையிடம் அவன் அப்படி சொல்லிவிட குடும்பமே அதிர்ந்து பார்க்க வாசுதேவகிருஷ்ணன் மெலிதாய் புன்னகைத்தான் அண்ணனின் பேச்சில்.
“பெரியவனே என்னடா சொல்லுற?…” என கேட்க விமலாவிற்கு அழுகை முட்டியது. பார்வையால் “அழாதே” என அதட்டியவன்,
“ஆமாம்ப்பா, எனக்கும் தான் பார்க்கனும். அதனால தம்பி வீட்டுக்கு பக்கம் தானேன்னு இருந்து பார்த்துட்டு வரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்….” என்று நேரடியாக சொல்லிவிட அன்புக்கரசிக்கு “தன் மகனா?” என்று அதிசயமாய் போனது.
“முடிவே பண்ணிட்டியா?…” என்றார் பல்லை கடித்துக்கொண்டு.
“ஆமாப்பா…” என்றான் ஸ்திரமாய்.
“நீயா உனக்கு பார்க்கனும்னு சொல்றியா? அந்த டாக்டர் சொன்னாளா? உனக்கென்னடா கு?…” என பேசும் முன்,
“அப்பா இதை குறைன்னு சொல்லாதீங்க…” என்றான் சட்டென்று உயர்ந்த குரலில்.
அனைவரின் முகத்திலுமே ஒரு ஸ்தம்பித்த பாவனை. விமலாவை அணைத்தபடி அபூர்வா அவளுக்கு ஆறுதலாய் நிற்க சோபாவில் சாய்ந்தபடி தாடையில் கைவைத்தபடி அவனை பார்த்து வாசுதேவகிருஷ்ணன் யோசனையுடன் அமர்ந்திருந்தான்.