“என்னடா பெரியவனே?…” என முத்துவேல் அதிர்வுடன் கேட்டதும் தான் தன்னுணர்விற்க்கு வந்தான் மருதவேல்.
“தப்பா நினைக்காதீங்கப்பா. நாங்க நாளைக்கு வரோம்…” என்று சொல்லி போனை வைத்தவன் எழுந்து,
“நான் கீழே போய்ட்டு வரேன்…” என சொல்லி அவன் கதவை திறந்து சென்று விட விமலா அப்படியே மடங்கி அமர்ந்துகொண்டாள்.
“இந்தா எதுக்கு இப்ப அழுகற? உன் புருஷன் பேசினதுக்கு சந்தோஷப்படுடி. எம்புட்டு ஏத்தம் அந்த மனுஷனுக்கு. வரட்டும் பேசிக்கிறேன்…” என சொல்ல,
“ஆமா உடனே வந்துடுவாரு…” என இளையவன் கிண்டலாய் பேச,
“வரத்தான் போறாரு. பாத்துக்கிட்டே இரு. வித்தாடு போக சொச்சாடு முழிக்கிறாப்ள முழிச்சுக்கிட்டு நிப்பாரு…” என சொல்லவும் அதை கேட்டு சிரித்தவள்,
“விமலாக்கா அதான் மாமா பேசினதை கேட்டீங்கல்ல. சந்தோஷமா இருக்கனும். சிரிங்க…” என அபூர்வா சொல்லவும் கண்ணீரை துடைத்துவிட்டு,
“வாசு அவர போயி…” என,
“அதான பார்த்தேன். இந்தா போறேன்…” என்று சிரித்தபடி எழுந்து சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
கீழே அப்பார்ட்மென்ட் பார்க்கில் அமர்ந்து வெட்டவெளியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் மருதவேல்.
“என்னடா அண்ணா இந்த வெயில்ல கனவு கண்டுட்டு இருக்க?…” என்று அவனின் தோளை தட்டி சுற்றிக்கொண்டு அவனெதிரே வந்து அமர்ந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“ப்ச், இப்ப எதுக்கு வந்த? விமலா அனுப்பினாளாக்கும்?…” என கேட்டதும்,
“பார்ரா அண்ணி தான் அனுப்பினாங்கன்னு உனக்கு தெரியுமாக்கும்?…”
“பின்ன நீயா தேடி வந்தியாக்கும்?…” என அவனும் நொடித்துக்கொள்,
“சரி வா…” என பேசிக்கொண்டே மருதவேலை அழைத்துக்கொண்டு புதிதாய் வாங்கியிருக்கும் வீட்டை திறந்து அவனை உள்ளே அழைத்து வந்தான்.
“இங்க எதுக்குடா?….” என மருதவேல் கேட்க,
“நாம பேசறது எல்லாரும் கேட்கறதுக்கா?…” என்றவன் அடுக்களைக்குள் இருந்த திண்டில் அமர்ந்துகொள்ள மருதவேலும் சேர்ந்து அமர்ந்தான்.
“இந்தளவுக்கு அண்ணியை புரிஞ்சு வச்சிருக்க நீ ஏன்டா இப்படி இருக்க?…” என கேட்டதற்கு மௌனமே பதிலாக இருக்க,
“நான் ஒன்னு சொன்னா கேட்பியா?…” என்றவனை மருதவேல் நிமிர்ந்து பார்த்தான்.
“நாளைக்கு என் கூட நீயும் வாயேன்?…” என அழைக்க,
“நீ எங்க போற?….” என்றான் மருதவேல்.
அப்பொழுது தான் யாரிடமும் மறுநாள் கிளம்பிவதை பற்றி சொல்லாமல் விட்டது ஞாபகத்திற்கு வந்தது.
“நாளைக்கு ஹனிமூன் போறதுக்கு கமிஷனர் ஸார் ஏற்பாடு பண்ணிருக்கார்…” என சொல்ல,
“நல்லபடியா போய்ட்டு வாடா. இது தெரியாம நாங்க தங்கனும்னு வந்துட்டோம் பாரு…” என,
“அடிச்சேனா பாரு…” என வாசுதேவகிருஷ்ணன் கோபத்துடன் எழுந்து நிற்கவும்,
“சும்மா லூஸு மாதிரி பேச கூடாது. இது நீயும் லட்சுமியும் போக போறது. எதுக்குடா நாங்க? நீங்க போய்ட்டு வாங்க. நாங்க கிளம்பறோம்…” என மருதவேல் சொல்ல,
“நிஜமாவே அடி வாங்குவ பார்த்துக்கோ…” என்றவன் பின் சத்தத்தை குறைத்துக்கொண்டு,
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ? மருந்து மாத்திரை வச்சு வைத்தியம் பார்த்தா சரியாக கூடியதா? தம்பியா போய்ட்டேன்னு சில விஷயம் பேச முடியாம இருக்கேன். அவ்வளோ தான்…” என்று அழுத்தமான குரலில் மருதவேலிடம் சொல்ல அசையாது நின்றான் அவன்.
“முதல்ல மனதுக்கு சந்தோஷம் இருக்கனும். மன அழுத்தமில்லாம இருந்தாலே பாதி நோய் குணமாகிடும்னு சொல்வாங்க. அதே மாதிரி தான் குழந்தை பிறப்புக்கும். சொன்னியே புதுசா கல்யானம ஆனவங்கன்னு. நீ மட்டும் எப்படி இருக்கியாம்?…” என்று கேட்கையில் சற்று வெட்கமாகி போனது அவனுக்கு.
“வாசு…”
“நீ எதுவும் பேச வேண்டாம். அப்பா இப்பத்தான் கொஞ்சம் விட்டு பிடிக்கிற மாதிரி இருக்காரு. இதுதான் சான்ஸ். கிளம்புடா…” என்று சொல்ல சரி என்பதை போல தான் இருந்தது.
ஆனாலும் எங்கும் செல்லவேண்டும் என்றால் பணம் என்ற ஒன்று வேண்டுமே? நினைக்கையில் மற்ற அழுத்தங்களை விட மிகப்பெரிய அழுத்தமாக உணர்ந்தான் மருதவேல். ஒருமாதிரி குறுகிப்போய் முகம் சுண்டி நின்றான்.
கூட்டி செல்வதென்றால் இப்போதிருக்கும் மனநிலைக்கு எங்கு வேண்டுமென்றாலும் கூட்டி செல்ல தயார். ஆனால் அதற்கு தேவையான பணம். தம்பியானாலும் சொல்ல அசிங்கமாக இருந்தது. கண்கள் கலங்குவதை போல இருக்க அமைதியாய் நின்றான்.
“அண்ணா…” என அழைக்கவும் மெதுவாய் நிமிர்ந்து பார்த்தவன்,
“நான் என்னடா வாழ்ந்திருக்கேன். இப்ப இங்க இருந்து அவளை அவங்கப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போகனும்னா கூட…” என சொல்லும் பொழுதே அவனை அணைத்துக்கொண்டவன்,
“லூஸு தான்டா நீ. ஏன்டா இப்படி இருக்க? நான் இல்லையா உனக்கு? இப்படி பேசறது தான் என்னை நீ தள்ளி வைக்கிற மாதிரி இருக்கு….” என சொல்லி அதட்டியவன்,
“நீ வர அவ்வளோ தான். வேற எதுவும் பேச கூடாது. எனக்கு நீ வரது மட்டுமே போதும்…” என முடிவாய் சொல்லி அவனை அழைத்துக்கொண்டு மேலே வீட்டிற்கு வந்தான்.
வந்ததும் விஷயத்தை சொல்ல அன்புக்கரசிக்கும் அதுவே சரி என்று பட்டது. உடனே போய் வர சொல்லியவர்,
“எப்ப கிளம்பனும் வாசு?…” என கேட்க,
“நாளைக்கு நைட் தான்ம்மா. மூணு நாள் ட்ரிப்…” என சொல்லவும் மருதவேல் விமலாவை பார்க்க,
“இல்லை, இருக்கட்டும் வாசு. நீங்க போய்ட்டு வாங்க. நாங்க எதுக்கு இப்ப?…” என சொல்லிய விமலா கணவனை பார்க்க,
“போய்ட்டு வரலாம் விமலா….”
“இல்லை வந்து…” அவளுமே கணவனை போல தான் நினைத்தாள்.
முத்துவேலிடம் வாசுதேவகிருஷ்ணன் வீட்டில் தங்கவே அத்தனை ஏச்சும் பேச்சும் வாங்க வேண்டியதாக இருக்கிறது இதில் மூன்றுநாள் வெளியூர் என்றால் கேட்கவே வேண்டாம்.
அதிலும் அபூர்வாவின் வீட்டில் தங்கிவிட்டு வந்ததனால் தான் முதல் நாள் அத்தனை பிரச்சனை. அந்தா கோபம் தான் இடம் மாறி அபூர்வாவிடம் பிரச்சனை செய்ய வைத்தது.
அனைத்திற்கும் மேலாக வெளியூர் செல்வதென்றால் எத்தனை செலவுகள். வாசுவிடம் நிற்பதை விரும்பவில்லை விமலா. எதற்கு இதெல்லாம்? செல்லாமலே இருந்துகொள்ளலாம் என்று தான் நினைத்தாளே தவிர மருதவேலை பற்றி குறையாய் நினைக்க தோன்றவில்லை அவளுக்கு.
“விமலா அதான் அவன் சொல்றானில்ல. பேசாம இரும்மா…” என்ற அன்புக்கரசி விமலாவை சற்று தனியே அழைத்து வந்து,
“நான் இருக்கேன்ல. நான் இருக்கற வரைக்கும் எதுக்கும் நீயும் மருதுவும் கலங்க கூடாது. நீ என்ன நினைச்சு மருகி நிக்கன்னு எனக்கு புரியுது. என்ன செய்யனுமோ நான் பார்த்துக்கறேன். உன் புருஷன் காசுல தான் நீ போக போற…” என்று சொல்லவும் உடைந்து போய் அவரை கட்டிக்கொண்டாள் விமலா.
“விமலாக்கா இங்க வாங்க…” என தங்கள் அறைக்குள் அழைத்து சென்ற அபூர்வா புதிதாய் ஐந்தாறு புடவைகளை எடுத்து வைத்தவள்,
“விமலாக்கா இது நாளைக்கு கிளம்பும் போது கட்டிக்கலாம். உங்களுக்கு இதுல எது பிடிச்சிருக்குன்னு பாருங்க. வாங்க சொல்லுங்க…” என அபூர்வா அவளிடம் கேட்க விமலாவின் உணர்ச்சிகளின் அளவு அவளின் கட்டுப்பாட்டில் இல்லை.
இத்தனை சொந்தங்கள் கிடைக்க என்ன செய்தேனோ? என உணர்வு மிகுதியில் பேச்சின்றி சந்தோஷத்தில் இருந்தாள்.
அதற்குள் வாசுதேவகிருஷ்ணன் தங்களுடன் தன் அண்ணனுக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்வதாகட்டும் தங்குவதற்கான ஏற்பாடுகளை பார்ப்பதாக இருக்கட்டும் என சட்டென்று வேலையை பார்த்தான்.
எங்கெங்கே செல்லவேண்டும் என்று பேசி கூடி திட்டமிட்டு அந்த இடங்களை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் லேப்டாப்பில். அன்புக்கரசி சொல்லியது சரியாக மாலை வந்து சேர்ந்தார் முத்துவேல்.
வந்தவர் நேராக வீட்டிற்கு செல்லாமல் கீழே இருந்து அன்புக்கரசிக்கு போன் செய்தவர்,
“அன்பு நான் தான். கீழே இருக்கேன். வாங்க எல்லாரும்…” என்று சொல்ல,
“ஏன் கீழே இருக்கீங்க? மேல வாங்க…”
“என்னது மேல வரனுமா? என்னை மதிக்காதவன் வீட்டுக்கு நான் வரமாட்டேன். வேணும்னா கீழே வா. நாம கிளம்புவோம்…” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட,
“இவரோட பெரிய இம்சையா போச்சு…” என்று அன்புக்கரசி விஷயத்தை சொல்ல,
“அத்தை நீங்க இருங்க. நான் போய் கூட்டிட்டு வரேன்…” என்று அபூர்வா கிளம்பிவிட்டாள்.
“பூர்வா…” என வாசுதேவகிருஷ்ணன் அழைக்கவும்,
“நான் போய் கூட்டிட்டு வரேன்…” என்று சொல்லி கீழே இறங்கிவிட்டாள்.
அன்புக்கரசிக்காக காத்திருக்கும் முத்துவேல் அபூர்வாவை அங்கே எதிர்பார்க்கவில்லை. சட்டென அவளின் மீதான கோபம் ஞாபகத்திற்குள் வர முகத்தை திருப்பிக்கொண்டார்.
“வாங்க மாமா…” என அவள் அழைத்ததும்,
“ஹ்ம்ம் இருக்கட்டும். அன்பு எங்க?…” என முறைப்புடன் கேட்க,
“அத்தை மேல இருக்காங்க. வாங்க நீங்க…” என்று அழைக்க,
“அதெல்லாம் தேவையில்லை. போயி பெரியவனையும் அன்புவையும் வர சொல்லு…”என மீண்டும் சொல்லியதையே சொல்ல,
“இப்ப என்ன என் மேல கோபம்னா நான் வேணும்னா இங்க கீழே இருக்கேன். நீங்க போய் பார்த்துட்டு வாங்க. அது வரைக்கும் நான் கீழே இருக்கேன்…” என சொல்லி அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்துகொள்ள திகைத்து போனார்.
“இதென்ன யாருமே சொல்வதை கேட்கிறதில்லை” என்ற யோசனையை தள்ளி வைத்துவிட்டு,
“ஏம்மா எந்திம்மா. என்ன இது? சரி வா போவோம்…” என்று அழைக்கவும் அபூர்வாவும் எழுந்து அவருடன் சேர்ந்து நடந்தாள்.
“அன்பு…” என கதவை திறந்ததும் உள்ளே வந்து அவரை தேட சோபாவில் ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்தவர்,
“வந்துட்டீங்களா? எனக்கு தெரியும் நீங்க வருவீங்கன்னு…” என ஆவலுடன் சொல்லிய அன்புக்கரசியை பார்த்ததும் மனதே நிறைந்து போனது முத்துவேலுவுக்கு.
“வாங்க, உட்காருங்கப்பா…” என வாசுதேவகிருஷ்ணன் சொல்லவும் ஒரு தலையசைப்பில் அதை வாங்கிக்கொண்டவர்,
“கிளம்புவோமா?…” என்று எடுத்ததுமே கேட்க,
“எங்க?…” என்று வந்து நின்றான் இளையவன்.
“எங்க போவாங்க? வீட்டுக்கு தான்….” என்றாய் விறைப்புடன்.
“அதுதான் அம்மா சொன்னாங்கல்ல நாளைக்கு வரதா? அப்படியே நானும் அண்ணனும் கேரளா போறோம்…” என்று அடுத்த இடியை அவரின் தலையில் இறக்க,
“என்னது? உன் கூட ஊருக்கா? நீ போறியா?…” என்று கேட்டு அதிர்ந்துபோய்,
“அன்பு என்னது இது புது பழக்கம்?…” என்று மனைவியிடம் எகிற,
“நான் என்ன செய்ய?…” என்று அன்புக்கரசி கையை விரித்துவிட,
“என்னது?…” என்றவர் இளைய மகனை முறைக்க,
“கமிஷனர் தான் அரேஞ்ச் பண்ணியிருக்காரு. வேணும்னா அவர்க்கிட்ட கேளுங்க…” என்று அவன் இடக்காய் சொல்ல,
“உனக்கே வேண்டம்னு சொல்றேன். நீ என்னன்னா உன் அண்ணனையும் இழுத்துட்டு சுத்தறேன்னு சொல்ற?…” என்று குரலை உயர்த்த,
“உங்களையும் அம்மாவையும் சேர்த்து தான் கூட்டிட்டு போக சொன்னாரு. நீங்க வரமாட்டீங்கன்னு அம்மாவை மட்டும் கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்…”
“என்னது உன் அம்மாவுமா?…” என்று இன்னும் அதிர்ந்து பார்க்க,
“ஆமா அண்ணனை கூட்டிட்டு போகவா? இல்லை அம்மாவையா?…” என்று அவன் சொல்ல,
“என்னடா?…” என்றவர் பாவமாய் அன்புக்கரசியை பார்க்க,
“அம்மா தான் உங்களை விட்டுட்டு வர முடியாதுன்னு சொல்றாங்க. சொல்லுங்க நீங்களே…” என்றதும் வாஞ்சையுடன் மனைவியை அன்பொழுக பார்த்தவர் பின் முறைப்புடன் மகனை பார்த்து,
“என்னடா விளையாடுறியா?…” என முறைக்க உடனே ஜெயபாலுக்கு அழைத்தவன்,
“ஹலோ ஸார் நான் தான்…” என சொல்ல,
“சொல்லு வாசு, ஊருக்கு போக ரெடி ஆகிட்டியா மேன்?…” என கேட்க,
“எல்லாம் ரெடி தான் ஸார். அப்பா தான் உங்கக்கிட்ட பேசனும்னு சொன்னாரு…” என சொல்லி மொபைலை முத்துவேல் கையில் திணித்துவிட,
“வணக்கம் முத்துவேல் ஸார். எப்படி இருக்கீங்க?…” என கேட்க முத்துவேல் பதில் பேச திணற,
“ஹலோ…” என்றார் மீண்டும் ஜெயபால்.
“ஹாங் நல்லா இருக்கேன் ஸார். வாசு ஊருக்கு என்னமோ…”
“ஆமா நான் தான் சொன்னேன்…” என்றதும் அதற்கு மேல் பேச முடியாதவராக மொபைலை அவனிடம் தந்துவிட,
“என்ன வாசு? என்ன பண்ணி வச்சிருக்க? என்னை வச்சு ஏதோ ப்ளான் பண்ணிட்ட போல?…” என அவனை அறிந்தவராக சொல்லவும் சிரித்தவன்,
“நானே நாளைக்கு கால் பன்றேன் ஸார். பை…” என்று சொல்லி வைத்துவிட இப்பொழுது முத்துவேலை பார்த்து,
“சொல்லுங்க, அண்ணனை கூட்டிட்டு போகவா? இல்லை அம்மாவையுமா?…” என்று கேட்க முத்துவேலுக்கு பயமாகி போனது.
ஏற்கனவே தன் மீது கோபத்தில் இருக்கும் மனைவி கிளம்பினாலும் கிளம்பிவிட்டால் என்ன செய்வது என பயந்து பார்த்தார்.
இரக்கமில்லாமல் மனைவியையும் அழைக்கும் மகனை கோபத்துடன் பார்த்தவருக்கு அதை காண்பிக்கத்தான் முடியவில்லை.
அவர் எதுவும் பேசுவாரா என பார்த்து மருதுவும், விமலாவும் நின்றனர்.