“நீங்க வேற, மகன் வீட்டுக்கு வந்துட்டு அவ கையால சாப்பிடாம போனா நம்ம மகனுக்குத்தான தலையிறக்கம். நாளைக்கு ஒத்த வார்த்தை சொல்லி காமிச்சுட கூடாதுல. அதுக்குத்தான்…” என அன்புக்கரசியும் அவரிடம் குரலை தாழ்த்தி சொல்ல,
“என்னது சொல்லி காமிப்பாளா?…” என வெடுக்கென முத்துவேல் எழுந்துகொள்ள போக,
“அட இருங்க. நீங்க வேற. சொல்லி காமிக்கிறதுன்னா இன்னைக்கேவா? என்னைக்காவது சொல்லி காமிச்சா? உங்கப்பா பாருங்க இன்னும் கோபத்தை மனசுல வச்சுட்டு நம்ம வீட்டுக்கு வந்து கை நனைச்சாரான்னு கேட்டா வாசு தான் பதில் சொல்ல முடியாம நிக்கனும். உங்களை மாதிரி…”
“என்னது? நான் என்ன நின்னேன்?…”
“ஆமா, என்கிட்டே மத்தியானம் பொய் சொல்லிட்டு பதில் சொல்லி சமாளிக்க முடியாம திணறுனேங்க தானே? எனக்கு தெரியும் உங்களை பத்தி. அது மாதிரி நாளைக்கு வாசுவும் அவளுக்கு பதில் சொல்லமுடியாம நின்னுட கூடாது. நம்ம மகனுக்காக தான்…”
“ஓஹ் நீ அப்படி சொல்றியா?…” என்றார் வெள்ளந்தியாய்.
அவருக்கு வெங்காய பக்கோடா சட்னியுடன் சாப்பிட்டது, கை கழுவினது எல்லாம் மனைவியின் பேச்சில் மறைந்துவிட்டிருந்தது. மறக்கடித்திருந்தார் அன்பு.
“புள்ளைங்கட்ட கோபத்த காட்டி நாம என்னத்த கண்டோம்? அந்த பொண்ணு வந்ததுல இருந்து உங்களைத்தான் கேட்டுட்டே இருந்தா. மாமாவுக்கு என்ன புடிக்கும்? எது புடிக்கும்னு. விமலாவுக்காவது கூடவே இருக்கா எல்லாம் தெரியும். இந்த பொண்ணு உங்களை மாதிரியே. பாக்கத்தான் படபடன்னு பேச்சு. மனசு அம்புட்டும் பலாச்சுளை தான்…”
மொத்தமாக முத்துவேல் அன்புக்கரசியின் அன்பு பேச்சுக்களின் கடலில் இருந்து எழ முடியாத அளவிற்கு மூழ்கிக்கொண்டு இருந்தார். அபூர்வா தோசையுடன் வரவும்,
“வா லட்சுமி, நீயே உன் மாமாவுக்கு வை. வா…” என மருமகளை பார்த்து கண்ணடிக்க அபூர்வாவிற்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.
“சாப்பிடுங்க மாமா…” என அவள் பார்த்து பார்த்து பரிமாற முத்துவேல் குளிர்ந்துதான் போனார்.
“ஹ்ம்ம் இருக்கட்டும். போதும்…” என அவர் சொல்லவும் அவரருகிலேயே நின்று பார்த்து செய்ய சாப்பிட்டு முடித்தவரிடம்,
“அவக்கிட்ட ஒத்த வார்த்தை நல்லாருக்குன்னு சொல்லிருங்க…” என அன்புக்கரசி காதை கடிக்க,
“என்னது? இதென்ன புது பழக்கம்?…” என்று முறைத்தார் மனைவியை.
“எல்லாம் இப்ப பழகினா சீக்கிரம் பழக்கமாகிடும். இனி அவளுக தான் பாத்துக்கணும் நம்மளை. இதெல்லாம கத்து வச்சுக்கங்க. ஒத்த வார்த்தை அவளுக்கும் ஒரு சந்தோஷம். நமக்கும் குறைஞ்சு போய்டாது…” என சொல்லவும் ஒருவாறு தலையசைத்தவர்,
“நல்லா இருக்கும்மா…” என சொல்லவும் அபூர்வாவிற்கு முகம் மலர்ந்தது. மற்றவர்களுக்கோ ஆச்சர்யம்.
“சரி நான் கிளம்பறேன்…” என சொல்லி எழுந்து கொள்ள,
“நானும் கீழ வரேன்…” என இளைய மகனும் சேர்ந்து எழுந்து நிற்க என்னவோ என்று பார்த்தார் அன்புக்கரசி.
“சரி சரி….” என்று முத்துவேல் செருப்பை மாட்டிக்கொண்டு வெளியேற,
“வாசு என்னடா?…”
“வந்து சொல்றேன்ம்மா…” என வாசுதேவகிருஷ்ணன் சொல்லி செல்ல,
“நானும் போய்ட்டு வரட்டுமா?…” என மருதவேல் கேட்க,
“ஒன்னும் வேண்டாம். பேசாம உட்கார்…” என சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டனர்.
“என்ன பேசனும்?…” என கீழே தான் வந்த வாடகை காரின் அருகே நின்றுகொண்டார் முத்துவேல்.
“நாளைக்கு நாங்க கிளம்பும் போது அண்ணனுக்கு எவ்வளோ குடுத்து அனுப்புவீங்க?…” என்றான் நேரடியாக.
“என்னது, என்ன குடுத்தனுப்பனும்?…” என வேண்டுமென்றே புரியாததை போல கேட்க,
“உங்களுக்கு தெளிவாவே புரியுது. பதில் சொல்லுங்க…” என்றான் விறைப்பாய்.
“கூட்டிட்டு போறவனுக்கு செலவளிக்கவும் தெரியனும். இப்ப வந்து காசு குடுன்னு நிக்கற?…” என்றார் எள்ளலுடன்.
“அதை நீங்க சொல்லனும்னு அவசியமில்லை. அண்ணனை யாரும் சொல்லாமலே கூட்டிட்டு போகனும்னு நினைச்சவன் நான். அவனுக்கு செய்யறதுக்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை…”
“இல்லையில்ல, அப்பறம் எதுக்காம் என்கிட்டே கேட்கற?…”
“உங்கட்ட கேட்காம? அவன் என்ன ஒன்னும் இல்லாதவனா தம்பி காசுல வரதுக்கு? விவரம் தெரிஞ்சதுல இருந்து கடையில உழைக்கிறான். என்ன அவனுக்குன்னு தனியா குடுத்தீங்க நீங்க?…”
“என்னடா நேத்து என்னன்னா சொத்து பிரிச்சு வாங்குவேன்னு சொன்ன? இப்ப என்னன்னா அண்ணனுக்கு பங்கு குடுன்னு சொல்ற மாதிரி இருக்கே…”
“மாதிரி எல்லாம் இல்லை. பங்கு தான குடுக்கனும். அவனுக்குன்னு ஏதாவது சோர்ஸ் வச்சிருக்கீங்களா நீங்க…” என கேட்க ஒரு கணம் தடுமாறி பின்,
“வேணும்னா கூட்டிட்டு போ. இல்லைனா விட்டு போ. போனாலும் போகாட்டியும் எனக்கென்ன? என்னமோ என்னை கேட்டு முடிவு பண்ணின மாதிரி சொல்ற?…”
“ஓஹ் அப்ப இதுக்கும் நானே முடிவு பண்ணிக்கறேன். நாளைக்கு எதுவும் கேட்க கூடாது ஏன் இப்படி பண்ணினன்னு…” என்று அப்பட்டமாய் மிரட்ட,
“என்னடா அப்பன்கிட்டையே சட்டம் பேசற?…”
“பேச வைக்கிறீங்களே. பேசத்தான் செய்வேன். ஒன்னு அவனுக்கு அக்கவுன்ட் ஓபன் பண்ணி கடைல வர இன்கம்ல அவனுக்கு ஒரு அமௌன்ட் ஷேர் போடுங்க. இல்லையா கடையை அவனோட பொறுப்புல விட்டுட்டு நீங்க மேற்பார்வை பாருங்க…” என சொல்ல,
“நீ சொல்ற மாதிரி உன் இஷ்டத்துக்கு எதுவும் பண்ண முடியாது. என் காலம் முடியிற வரைக்கும் கடை என்னோட பொறுப்பு தான்…”
“அவ்வளோ என்ன பிடிவாதம் உங்களுக்கு. அப்ப கடைசி வரைக்கும் அவன் அண்ணிக்கு உங்கக்கிட்ட கையேந்தி தான் எல்லாம் வாங்கி குடுக்கனும் அப்படித்தானே?…” என கோபத்துடன் கேட்க,
“என்கிட்டே கேட்கிறதுக்கு என்னடா? அவன் கேட்கவும் மாட்டானே?…”
“ஹ்ம்ம், இதுதான். ஒன்னொண்ணுக்கும் பொண்டாட்டிக்கு அது வாங்கனும், இது வாங்கனும்னு சொல்லி சொல்லி வாங்கறதுக்கு உங்கக்கிட்ட கையை கட்டி நிக்கறதுக்கு பதில் வாங்காமலே இருந்திருக்கலாம்னு தான் வாங்கறதில்லை…” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் சீற ஒரு அடி பின்வாங்கினார் முத்துவேல்.
“நான் என்னோட கூப்பிட்டதுக்கு அவன் சொல்றான் என் மாமனார் வீட்டுக்கு உங்கண்ணியை கூட்டிட்டு போகனும்னா கூட என் கிட்ட எதுவுமில்லைடா, உன்னோட வரமுடியாதுன்னு. இதுதான் நீங்க அவனை வச்சிருக்கற நிலைமை. புரியுதா உங்களுக்கு?…” என்று சொல்லிவிட அது முத்துவேலுவுக்கு சுருக்கென இருந்தாலும்,
“குடும்பத்தை கட்டுக்கோப்பா கொண்டு வந்து உங்களை இந்த நிலையில நிப்பாட்ட நான் என்னலாம் கஷ்டப்பட்டு இருப்பேன். அப்ப நான் செஞ்சது தப்பில்லை. இப்ப தப்போ? நான் என்ன போறப்ப அள்ளியா கொண்டு போக போறேன்…”
“உயிரோட இருக்கும் போது தவிச்ச வாய்க்கு தண்ணி குடிச்சா தான் தாகம் அடங்கும்ப்பா. யாரோ ஒருத்தர் உன் வீடு உனக்கே பத்தாதுன்னு சொல்லவும் ராப்பகலா உழைச்சு வீட்டை கட்டி கடையை பெருக்கி வாழ்ந்தா மட்டும் போதாது. உங்க பிள்ளைங்க அதனால சந்தோஷமா இருக்கங்களான்னு பாருங்க…”
“உங்க சந்தோஷத்துக்கு என்ன குறை வச்சேன். ரெண்டு பேருக்கும் கண்ணுக்கு நிறைவா கல்யாணம் செஞ்சு வச்சேனே. நீ கூடத்தான் முறுக்கிட்டு நின்ன. கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு. இப்ப நல்லா தான இருக்க…” என சொல்ல,
“இப்பவும் சொல்றேன். எனக்கு விருப்பம் இருந்ததால, நான் மனசு வச்சதால மட்டும் தான் இந்த கல்யாணம் நடந்தது. இல்லைன்னா தலைகீழா நின்னிருந்தாலும் கல்யாணம் நடந்திருக்காது…” என்று சிரிப்புடன் அவன் சொல்ல ஆவென மகனை பார்த்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.
“அதை விடுங்க, நீங்க நாளைக்கு அவனுக்கு பணம் குடுத்து அனுப்பறீங்க. அவன் அவனோட உழைப்புல தான் அவன் காசுல தான் அண்ணிக்கு ஒருமடக்கு தண்ணினாலும் வாங்கி குடுக்கனும்…” என சொல்ல வேண்டுமென்றே வீம்புடன்,
“இல்லைன்னா என்ன பண்ணிடுவ?…” என கடுப்பாய் கேட்க,
“சிம்பிள், இங்கயே இன்னொரு வீடு பார்த்து அவனை இங்க இருக்க வைப்பேன். நானே சூரிட்டி சைன் பண்ணி அவன் பேர்ல லோன் வாங்கி இங்கயே பக்கத்துல ஒரு சின்ன கடைய போட்டு அவனை முதலாளியா உட்கார வைப்பேன். மூலதனம் உழைப்பு. அவன் எங்க உழைச்சாலும் முன்னேற முடியும்…”
“என்னது?…” என அதிர்ந்து போக,
“எலி வலையா இருந்தாலும் தனி வலை வேணும். என் அண்ணன் என்னைக்கும் இனி யார் முன்னாடியும் கண்ணு கலங்கி நிக்க கூடாது. நானாவே இருந்தாலும். எனக்கு இதுதான் வேணும்…”
“பெத்தவங்கட்ட இருந்து நீ பிரிஞ்சு வந்ததும் இல்லாம அவனையும் உன்னோட கூட்டு சேர்க்க பார்க்கறியா நீ?…” என்ற எகிற,
“ம்ஹூம். இல்லவே இல்லை. அவனுக்கான முன்னேற்ற பாதையை நான் காமிக்கறேன். அவனும் தனிச்சு நிக்கனும். அவன் பிள்ளை வரும் போது தன்னோட அப்பாவை ஹீரோவா பார்க்கனும்…”
“இந்தா நீ பார்க்கிற பாரு…” என நக்கலாய் மகனை பேச,
“நிச்சயம் எனக்கும் நீங்க ஹீரோ தான். உங்க குடும்பத்தை யார்கிட்டயும் போய் கையேந்த விடாம உயர்த்தி கொண்டு வந்து ஊர் மெச்ச வாழ வச்ச விதத்துல நீங்க ஹீரோதான். ஆனா அதே பிள்ளையை வாய்விட்டு ஒத்த பைசா கேட்க யோசிக்க வச்ச இடத்துல நீங்க…” என்ற என்றவன் வார்த்தையை நிறுத்த,
“பேசுடா இன்னும் என்ன பேசனுமோ பேசு. போலீஸ்காரன்ல. அப்படித்தான் இருப்ப…”
“நேர்மையா பேசறேன். தப்புன்னு இங்க எவனயாச்சும் சொல்ல சொல்லுங்க பார்ப்போம்? உங்க கடையில வேலை பார்க்கற பசங்களுக்கு கூட மாசா மாசம் கை நிறைய சம்பளம். என்னைக்காச்சும் அண்ணனுக்கு தேவை இருக்கும்னு யோசிச்சீங்களா நீங்க?…”
“அவன் கேட்டு நான் குடுக்கமாட்டேன்னு எப்பவும் சொல்லலை…”
“இதோ இப்ப சொல்றீங்களே…” அவனிடம் பேசி ஜெயிக்கமுடியாமல் மூச்சு வாங்கியது முத்துவேலுவுக்கு.
“இப்ப என்ன நாளைக்கு குடுத்தனுப்பனும். அதான?…”
“சும்மா பால் காசு குடுக்கற மாதிரி குடுத்தீங்க பாருங்க. அவனும் அண்ணியும் அங்க இருக்கற வரைக்கும் சந்தோஷமா இருக்கனும். ஞாபகம் இருக்கட்டும். இல்லைன்னா ஹனிமூன் ட்ரிப் ஃபேமிலி டூராகிடும்…”
சொல்லும் பொழுது கடைசி வார்த்தையை சிரிப்புடன் அவன் சொல்லவும் அவனை முறைத்தவர்,
“என்னமோ இந்தளவுக்கு ரெண்டுபேரும் ஒத்துமையா இருக்கீங்களே. சந்தோஷம். உங்கம்மாவை இழுத்துட்டு எல்லாம் உங்களால சுத்த முடியாது. மூட்டுவழின்னு முட்டியை பிடிச்சுட்டு உட்கார்ந்துப்பா. நீங்களே போய்ட்டு வாங்க…” என போனால் போகிறதென்பதை போல சொல்ல,
“அப்படியே இன்னொரு விஷயம், அண்ணனுக்கு ஆரம்பிச்ச அக்கவுன்ட் இது. இனி அமௌன்ட் இதுல போடுங்க. இந்த கார்ட், பாஸ்புக்கை நீங்களே அவன்கிட்ட குடுங்க…” என பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து தர,
“இது எப்ப ஆரம்பிச்சது?…” என்றார் வாங்கி பார்த்து,
“என் கல்யாணத்துக்கு முன்னாடி. அவனுக்கே தெரியாது. நானும் சொல்லனும்னு இருந்தேன். நேரம் கிடைக்கலை. அதான் இப்ப நீங்களே போட போறீங்களே. இனி மாசா மாசமும் போட்டுடுங்க…”
“பெரிய மகாராஜா ஆடர் போடறாரு…” என வெடுக்கென வாங்கிக்கொண்டவர்,
“கிளம்பறேன்…” என்று கோபத்துடன் சொல்லி காரில் ஏறி செல்லவும் ஒரு சிரிப்புடன் அதனை பார்த்தபடி நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.
மீண்டும் லிப்ட்டிற்கு திரும்பியவனுக்கு போன் வர எடுத்து பேசியவனின் முகம் பயங்கரமாக மாறியது.
“இன்னும் அரைமணி நேரத்தில இருப்பேன் துரை…” என்று சொல்லியவன் சொன்னதை போலவே அங்கே அரைமணி நேரத்தில் இருந்தான்.