“என்னடா இது? அவளோட பேரன்ட்ஸ் வந்தா அட்ரஸ் கூட வாங்கி வைக்க மாட்டாங்களா?…” என்று எரிச்சலில் கத்தியவன் அங்கிருந்த டாக்டரை முறைக்க,
“ப்ச், சரி. வா அதான் காலேஜ் தெரியுமே. நாம அழுத்தி கேட்டாலும் சொல்லமாட்டாங்க. ஒரு வேலை எந்த டீட்டயிலும் ரிஜிஸ்டர் பண்ணலையோ என்னவோ? இது நமக்கு தேவை இல்லாத பிரச்சனை. ஏன்டா நமக்கு தெரியாதா?…” என சொல்ல,
“இப்பவே நான் யார்ன்னு சொல்லி வாங்கிடலாம். ஆனா இது என்னோட பர்சனல். அதான் பேசாம இருக்கேன்…” என்றவன் நிலைகுலைந்ததை போல இருக்க அவனை சென்னை அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றானது.
இரண்டு நாட்களில் அந்த கல்லூரிக்கு சென்று விசாரிக்கலாம் என நினைக்க வெறும் பெயரை வைத்துக்கொண்டு எப்படி தேட என முகேஷ் கேட்கவும் வாசுதேவகிருஷ்ணன் எதுவும் வேண்டாம் என்று விட்டான்.
“அவ என் கண்மணியாக இருந்தா கண்டிப்பா வருவா? யாருக்கு தெரியும் இது ஒரு பாஸிங் க்ளவுடா கூட இருக்கலாம்…” என சிரித்தபடி இலகுவாக சொல்லிவிட்டாலும் அவனுக்கு அதனை இலகுவாக இல்லை கண்மணியின் நினைவுகள்.
முகேஷிற்கு வாசுதேவகிருஷ்ணனின் கண்மணியாகப்பட்டவள் முகத்தை எத்தனை முறை யோசித்தும் கண்களுக்குள் கொண்டு வரமுடியவில்லை. அவளின் முகமே ஞாபகத்தில் இல்லை.
ஒன்று இரண்டு மூன்று வருடங்கள் கடந்தது. செல்லும் வழிகள் எல்லாம் பார்க்கும் இடங்கள் எல்லாம் கண்மணியை தேடினான். யாராவது பாவாடை தாவணி அணிந்திருந்தாலே உடனே பரபரத்து பார்ப்பான் அவளாக இருக்குமோ என்று.
அதற்கிடையில் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை. செல்வம் தன்னுடைய தொழிலை தனது மருமகன் தான் பார்க்க வேண்டும் என்று பவானியின் திருமணத்தை பற்றி பேச உடனே முத்துவேல் சம்பிரதாய பெண்பார்க்கும் படலத்திற்கு செல்ல வாசுதேவகிருஷ்ணனுக்கு தெரிவிக்க படாமலே அங்கே வரவழைக்கப்பட்டான்.
சென்ற இடத்தில் அவனின் வேலையும் அவனின் தன்மானமும் சீண்டப்பட ஏற்கனவே இந்த பேச்சுவார்த்தையில் விருப்பமின்றி இருந்தவன் அன்றைய பேச்சுக்களில் உறவே வேண்டாம் என்னும் அளவிற்கு கொந்தளித்தான்.
அதன் விளைவு தந்தைக்கும் அவனுக்குமான மோதல் உட்சபட்ச நிலையை எட்ட வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ ஆரம்பித்தான்.
முதலில் கஷ்டமாக இருந்தாலும் தனிமைகள் கண்மணியுடனான நினைவுகளில் கரைந்தது. அதன் பின்னர் வெளியே பெண் பார்க்கிறேன் என்று ஆரம்பிக்கும் பொழுதெல்லாம் பிரச்சனை செய்து திருமணத்தை நிறுத்துபவன் மனக்கண்ணில் கண்மணி மட்டுமே.
ஒரு கட்டத்தில் அவனுக்கே ஒரு பயம். மேகங்களை பார்க்கும் பொழுதுகளில் அவன் விளையாட்டாய் சொல்லிய பாஸிங் க்ளவுட் ஞாபகத்திற்கு வந்து அந்த நேரங்கள் அவனை வதைத்து விளையாடும்.
காத்திருப்பு சுகத்தையும் வலியையும் ஒருசேர அனுபவித்துக்கொண்டு இருந்தவனின் கண்களில் ஒருநாள் அவன் எதிர்பாராமலே மலைசாரலாய் மனம் நனைத்தாள்.
தனது கட்டுப்பாட்டில் இருந்த அந்த ஸ்டேஷனுக்கு ஒரு முக்கியமான விஷயமாக வந்தவன் கண்களில் அதற்கு அருகே இருந்த கடையில் அவள் நின்றிருந்ததை பார்த்தவன் அந்த அதிர்ச்சியில் பார்த்தபடியே நிற்க அவளருகே இன்னொருவன் எதையோ பேசியபடி இருந்தான்.
அது ஒரு பழச்சாறு கடை. இவன் வந்து நின்றதை கவனியாமல் அவர்கள் பேசிக்கொண்டு இருக்க உள்ளிருந்து வந்த கான்ஸ்டபிளும் வாசுதேவகிருஷ்ணனை கவனிக்கவில்லை.
வேகமாய் அவர்களின் அருகில் நின்றவர்களிடம் எதுவோ சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு பின் அவளிடம் பேசியவன் கான்ஸ்டபிளுடன் உள்ளே செல்ல,
“சுந்தர்…” என்ற அழைப்பில் திரும்பி கான்ஸ்டபிள் அவனுக்கு சல்யூட் வைக்க அதை ஏற்றவன்,
“யார் இவங்க? சொந்தமா?…” என்றான் வேகமாய்.
“இல்லை சார். ஒரு பைக் மிஸ்ஸிங் கேஸ். அதான் கம்ப்ளைண்ட் குடுக்க வந்திருக்காங்க…” என சொல்லவும் அவருடன் நின்றவன்,
“வணக்கம் ஸார், நான் தினேஷ். என்னோட பைக் தான் மிஸ் ஆகிடுச்சு…” என சொல்லவும் அவனுக்கு பின்னால் வாசுதேவகிருஷ்ணன் பார்வை செல்ல தினேஷும் திரும்பி பார்த்தவன்,
“அது என் தங்கச்சி, லட்சுமி. நாங்க ரெண்டு பேரும் வந்த பைக் தான். பார்க் பண்ணிட்டு கடைக்கு உள்ள போயிருந்தோம். வெளில வந்தா பைக் இல்லை…” என்று சொல்ல அவன் பின்னால் சொல்லிய எதுவும் அவனின் காதில் விழவில்லை.
அவள் பெயர் லட்சுமி. இதுவே அவனின் காதில் ரீங்காரமிட கண்ணை மூடி திறந்தவன் முகம் தன் கண்மணியானவளை உச்சி முதல் பாதம் வரை வருடியது. அன்று போல் இன்றும் பாவாடை தாவணியில் தான் இருந்தாள்.
“கண்மணி இல்லையா?” வருடங்களாய் உருப்போட்டு கண்மணி கண்மணி என கனவிலும் நினைவிலுமாக உருகி ததும்பிக்கொண்டிருந்தவனுக்குள் அலையலையாய் கொந்தளித்த உணர்வை விழுங்கிக்கொண்ட பார்வையில் தினேஷை பார்த்தான்.
“உங்க பேர் என்ன சொன்னீங்க?…” என்றவன் தினேஷிடம் பார்வையை திருப்பி அவன் பதில் சொல்லும் முன்,
“ஏன் லேடீஸை ஸ்டேஷன் வரை அழைச்சுட்டு வரீங்க?…” என கேட்டு,
“சுந்தர், அந்த பொண்ணை ஆப்போஸிட்ல இருக்கிற எமி ஷாப்ல வெய்ட் பண்ண சொல்லுங்க. நீங்க அழைச்சிட்டு போங்க. இவரை நான் டீல் பண்ணிக்கறேன்…” என சொல்லி அனுப்ப அவனின் இந்த செயலை சுந்தர் நம்ப முடியாமல் பார்த்து செல்ல,
“நீங்க உள்ள வாங்க…” என தினேஷுடன் உள்ளே வந்தவனின் பார்வை சுந்தரோடு செல்பவளிடம் நிலைபெற்று நகர்ந்தது.
“ஹ்ம்ம், உட்காருங்க…” என்றவன் முதலில் காரியத்தில் கண்ணாக அவனின் குடும்பத்தையும் இருப்பிடத்தையும் கேட்டு தெரிந்துகொண்டான்.
“ஹ்ம்ம் அவ பேர் அபூர்வலட்சுமி. சோ வாட். ஷி இஸ் மை கண்மணி. எனக்கு அவ கண்மணி தான். கண்மணின்னு பேர் வைக்காதது அவ தப்பு. பேரண்ட்ஸ் தான் பேர் வைக்கனுமா? ஹஸ்பண்ட் கூட பேர் வைக்கலாம்” என மனதிற்குள் பேசி முடித்தவன் முகத்தை விரைப்பாய் வைத்துக்கொண்டு அவன் சொல்லியதை கேட்க ஆரம்பித்தான்.
“விழுப்புரம்னு சொல்றீங்க. இங்க எப்படி?…” என கேட்க,
“இது என் மாமனார் ஊர். வீடு இதே ஏரியா தான். வொய்ப் அம்மாவுக்கு முடியலைன்னு என் வொய்பை இங்க விட்டிருந்தேன். இன்னைக்கு ஊருக்கு கிளம்புவோம்னு கூட்டிட்டு தங்கச்சியோட போக வந்தேன். அப்போ தான் தங்கச்சிக்கு ஷாப்பிங் பண்ண வந்தோம். வந்தது மாமனார் வண்டி…”
கவலையுடன் தினேஷ் சொல்ல அவனிடம் வண்டிக்கான விபரங்களை வாங்கிக்கொண்டவன் அதை பற்றி விசாரிக்க சொல்லவும் வாசுதேவகிருஷ்ணனே நேரடியாக தலையிட்டதால் உடனே ஆக்ஷன் எடுத்தனர்.
வண்டியை திருடியவனுக்கு, அதிலும் அந்த ஏரியாவில் திருடியவனுக்கு மனதிற்குள் நன்றியை தெரிவித்தவன் தினேஷின் பக்கம் திரும்பும் நேரம் அவன் போன் பேசி முடித்திருந்தான்.
“என் மாமனார் தான் , இப்ப வரேன்னு சொல்லிருக்கார்…” என்று சொல்லவும்,
“இன்னைக்கு லட்டு லட்டா சிக்குறாங்க. மச்சான். மச்சான்.” என மனதிற்குள் மச்சானிற்கு தீபாவளி மத்தாப்பூ வெடித்தான்.
மேலும் அவனிடம் பேசிக்கொண்டு இருக்க மாமனார் நாயகம் வந்து சேர்ந்தார் அந்த போலீஸ் ஸ்டேஷனிற்கு.
அதற்குள் அங்கிருந்த காவலர்களுக்கு தினேஷ், நாயகம் இருவரும் வாசுதேவகிருஷ்ணனிற்கு வேண்டப்பட்டவர்களாக அறியப்பட்டனர்.
அவரிடமும் பேசி அட்ரஸ் வாங்கிவிட்டு அனுப்பி வைத்தவன் மறுநாள் கண்டிப்பாக வண்டி வந்து சேரும் என்னும் உத்திரவாதத்துடன் விடை கொடுத்தான். அவர்களுடன் வெளியில் வந்தவன் பார்வை அபூர்வாவிடமே இருக்க இதழ்களில் ரகசிய புன்னகை.
“நீ என் கண்மணியே தான். நாலு வருஷம் காக்க வச்சிட்டியே” என உதடுகள் முணுமுணுக்க மீசையை நீவியவனின் முகமும் மலர்ந்து இருந்தது.
மறுநாள் சொல்லியதை போல வண்டியை வந்து எடுத்து செல்லுமாறு சொல்ல நாயகம் அவனை நாயகனை போல தான் பார்த்தார்.
அவரறிந்தவரை காணாமல் போன வண்டி கண்டிப்பாக கிடைக்காதோ என்னும் முடிவிற்கே வந்துவிட்டிருக்க வாசுதேவகிருஷ்ணனால் சாத்தியமாகி இருந்தது.
அதன் பின்னர் தாமதிக்காமல் காத்திருப்பின் கனம் தாளாமல் நாயகனிடம் சென்று பேச முடிவெடுத்தான். முடிவென்னவோ அவனுக்கு சாதகம் தான்.
தன் அப்பா தனக்கு பெண் பார்க்க சொல்லியிருக்கும் ஜோசியரை இரண்டு தட்டு தட்டவேண்டிய அவசியமின்றி இரண்டு வார்த்தைகளில் மிரட்டி இருக்க சத்தமின்றி ஜாதக பரிமாற்றம் நடந்தது.
நாயகனும், ஜோஸியரும் ரகசியத்தை உயிரென காத்துவர முத்துவேல் உடனே மகனிற்கு திருமணத்தை நடத்தவேண்டும் என்று மீண்டும் பிடிவாதத்தை பிடிக்க அன்புக்கரசியின் மூலம் வாசுதேவகிருஷ்ணனுக்கு தகவல் வர வேண்டாவெறுப்பாய் போனால் போகிறதென்பதை போல அவனும் சம்மதித்தான்.
அவனின் சம்மதம் கூட முத்துவேலுக்கு சந்தேகமாய் இருந்தது. மகன் இதையும் நிறுத்த திட்டமிடுகிறானோ என. அதற்காகவே பெண் பார்த்து நிச்சயத்தையும் ஒரே நாளில் முடிக்க திட்டமிட்டவர் அவனை வர கூடாதென்று சொல்லிவிட்டார்.
வந்தால் திருமணத்தை நிறுத்த பார்ப்பான் என்று அவரின் எண்ணம். வாசுதேவகிருஷ்ணனுக்கோ நான் பார்த்த பொண்ணை நான் பார்க்க வர கூடாதா? என்னும் வீம்பில் நிச்சயத்திற்கு வந்து நின்று அவரின் ரத்த அழுத்தத்தை ஏற்றி இறக்கினான்.
திருமணத்தின் முதல் நாள் வாசுதேவகிருஷ்ணன் வர தாமதமானதால் அனைவருமே பதறி இருக்க நாயகம் மட்டும் அவன் வருவான் என்று நம்பிக்கையுடன் இருக்க அவர்களுக்கு நம்பிக்கை சொல்லியவர் மருமகனின் மன சுணக்கம் தாளாமல் தனியே அழைத்து ஒரு வேகத்தில் மருமகனிடம்,
“என்ன மாப்பிள்ளை நீங்க? நம்ம பொண்ணை நாலு வருஷமா விரும்பி, தேடி ஆசைப்பட்டு கல்யாணம் பண்ண ஏற்பாடு செஞ்சவர் இப்ப கை கூடி வரப்போ வராம போயிடுவாரா?…” என்று வார்த்தையை விடவும் தான் தினேஷிருக்கு சகலமும் தெரிய வந்தது.
“மாமா, நீங்களுமா?…” என்று அதிர்ந்து போக அப்போது தான் அனைத்தையும் நாயகம் சொல்லி முடித்தார்.
“இவ்வளோ நடந்திருக்கா?…” என்று சொல்லியவனுக்குமே மனதிற்குள் அத்தனை நிறைவு.
அன்று இரவே அவன் வந்ததும் பார்க்க சென்றவன் நாயகம் சொல்லியதையும் அவனிடம் பகிர்ந்து கொள்ள,
“மூச்சு விடக்கூடாது. முக்கியமா உன் தங்கச்சிட்ட…” என்று தினேஷை உரிமையாக மிரட்டியிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
இப்பொழுது நினைத்தாலும் நினைவுகள் சக்கரையாய் தித்தித்தது. அன்று அந்த வண்டி காணாமல் போகாமல் இருந்திருந்தால்? இல்லை தான் அந்த ஸ்டேஷனுக்கு செல்லாமல் இருந்திருந்தால் இப்படி எந்த எண்ணமும் இல்லை அவனிடத்தில்.
கண்மணி எனக்கான கண்மணி. அதனாலே அவளிடம் என்னை சேர்ப்பிக்க விதி அங்கே கொண்டு நிறுத்தியது என இன்றளவும் எண்ணிக்கொள்வான்.
கண்ணை மூடி இருந்தவனின் நினைவலைகள் கதவு தட்டும் ஓசையில் அவிழ்ந்து விழ மெல்ல கண்விழித்து எழுந்தவன் அபூர்வாவின் உறக்கம் கலைக்காமல் நகர்ந்து சென்று கதவை திறந்தான்.
“ஸார், சாய் (டீ) ரெடி. வந்தீங்கன்னா சூடா பஜ்ஜி போட்டுடுவேன்…” என சொல்ல,
“கொஞ்சம் நேரம் ஆகட்டுமே…” என்றவன் முழுதாய் வெளியே வந்து பார்க்க ஓரிடத்தில் படகு கட்டப்பட்டு நின்றிருந்தது.
“இப்ப இங்க ஷாப்பிங் போவாங்க. ஆனா நல்லா மழை பெய்யுது. போகனும்னா குடை எடுத்துக்கோங்க. நைட்டுக்கு என்ன வேணும்னு சொன்னா சமைச்சிடுவேன்…”
சமையல்காரன் சொல்ல இரவு என்ன கிடைக்கும் என கேட்டுக்கொண்டு அதையே செய்ய சொல்லியவன் அவரை அனுப்பிவிட்டு போனை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தான்.
உறங்க செல்லும் பொழுது மழை அப்பொழுதுதான் ஆரம்பித்து இருந்தது. இப்பொழுதோ அடித்து பெய்துக்கொண்டிருக்க இதில் எங்கே வெளியே செல்வது என்ற கவலை தோன்றினாலும் இதுவே பார்க்க நன்றாக தான் இருக்கிறது என புன்னகையோடு வேடிக்கை பார்த்தபடி மருதவேலுவுக்கு அழைத்தான்.
சிறிது நேரம் கழித்தே அவன் அழைப்பை ஏற்க அவனின் குரலே சரியாக கேட்கவில்லை. கட் செய்துவிட மீண்டும் மருதவேலே அழைத்தான்.
“என்ன வாசு?…” என சத்தமாய் கேட்க,
“எங்கடா இருக்க? ஒரே இரைச்சலா இருக்கு?…” என்ற தம்பியிடம்,
“நானும் விமலாவும் இங்க வெளில வந்தோம்டா. உன்னை காணோமே? இங்க நிறைய கடைங்க இருக்கு. ஷாப்பிங் போகனும்னா போய்ட்டு வாங்கன்னு சொன்னார். அதான் கிளம்பிட்டோம்…” என சொல்ல வாசுவின் முகத்தில் புன்னகை.
“இந்த மழைல, ஒரே குடையா? கலக்கற அண்ணா. என்ஜாய்….” என்றான் சிரிப்புடன்.
“ஏய் ச்சீ…” என வெட்கப்பட்டவனாக,
“நீ வரலையா?…” என கேட்க,
“நீ முடிச்சுட்டு வா. நாங்க கிளம்ப நேரமாகும். பூர்வா தூங்கறா…” என சொல்ல,
“தூங்கவாடா இங்க வந்தீங்க? ரசனையே இல்லைடா உனக்கு…” என்று தம்பியை திட்டிவிட்டு மருதவேல் வைத்துவிட,
“பார்ரா” என வியந்துபோனான் வாசுதேவகிருஷ்ணன்.
மேலும் பத்து நிமிடங்கள் பார்த்தவன் அபூர்வா இன்னும் விழிக்காமல் இருப்பதை பார்த்து அவளை எழுப்ப உள்ளே வந்தான்.
போர்வையை நன்றாக போர்த்தியபடி இன்னும் உறங்கிக்கொண்டு இருந்தவளை கட்டிக்கொண்டு எழுப்புவதற்காக சில்மிஷம் செய்ய அவளோ எதையும் உணர்ந்தாள் இல்லை.
பொருத்து பார்த்தவன் அவளின் காதை நறுக்கென்று கடித்து வைக்க எரிச்சலுடன் காதை தடவியபடி திரும்பி அவனை பார்த்து முறைத்தவள்,
“தூங்கவே விடமாட்டீங்களா? எப்ப பாருங்க தூக்கத்தை கலைக்கிறதே வேலையா போச்சு…” என்று அவனின் கையில் கிள்ளிவிட்டு எழுந்து அமர,
“அப்ப இவ்வளவு நேரம் கண்மணி என்ன பண்ணுனீங்களாம்?…” என கேட்டு அவளின் மடியில் சாய அவளும் சாய்ந்து அமர்ந்து அவனை தாங்கிக்கொண்டாள்.
“நல்ல கனவு, கனவுல நீங்க. இப்படி எழுப்பி விட்டுட்டீங்களே…”
“நான் உன்னோட கனவில்லை கண்மணி. நிஜம்…” என்றான் ஆத்மார்த்தமாக.
“ஆமாம், நிஜம்…” என அவளும் ஒப்புக்கொள்ள அவனிடம் தன்னை ஒப்புக்கொடுத்தாள்.
“வெளில மழை பெய்யுது. அண்ணாவும் அண்ணியும் ஷாப்பிங் போயிருக்காங்க. உனக்கு ஓகேனா சொல்லு நாமளும் போவோம். இல்லைனா வேண்டாம்…” என சொல்ல,
“ஹ்ம்ம், உங்க இஷ்டம்…” என்றாள் புன்னகையுடன்.
அந்த புன்னகையில் மனம் மயங்க அவளை தன் பக்கம் சாய்த்தவன் இழுத்த இழுப்பிற்கு ஏற்ப அவளும் வளைந்து வர அவளின் நெற்றியில் முட்டியவன்,
“இது வேலைக்காகாது. ஏற்கனவே டீ ரெடி, பஜ்ஜி ரெடின்னு வந்து நின்னார். திரும்பவும் ரூமை நாக் பண்ண போறார் பார். இப்ப வெளில போவோமாம். நைட்ல வந்து தூங்குவோமாம். ஓகேவா கண்மணி?…” என்று கண்சிமிட்ட புன்னகையுடன் தலையசைத்தாள் அபூர்வா.