நிஜம் – 26
முகத்தை கழுவிவிட்டு உடையை சரி செய்து வெளியே வர இவர்களுக்காக காத்திருந்தவர் உடனே சூடாக பஜ்ஜிகளை போட்டு கொண்டு வந்து தரவும் அந்த மழை நேரத்தில் இதமாய் உள்ளிறங்கியது.
கொஞ்சம் வலுவிழந்து பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தபடி இருந்தவளிடம்,
“பூர்வி ஒரு வாக் போவோமா?…” என கேட்டான்.
“இதென்ன கேள்வி? போகலாமே?…” என மழை துளியை கையில் பிடித்தபடி அவள் சொல்லி,
“இங்கயும் மழை பெய்யுதேன்னு அடைஞ்சு கிடக்க முடியாது. இப்ப என்ஜாய் பண்ணினாத்தான் உண்டு. நீங்க என்னை கொஞ்சம் சீக்கிரமாவே எழுப்பிருக்கலாம்…” என்றும் சொல்ல,
“ஏன் சொல்லமாட்ட? சரி இந்த சேரியே ஓகே வா? இல்லை வேற மாத்திக்க போறியா?…” என்றதும் தன் உடையை பார்த்தவள்,
“ஹ்ம்ம், இதுவே போதும்…” என்று சொல்லி தலையை மட்டும் சீவிவிட்டு வருவதாய் உள்ளே செல்ல அவளின் பின்னோடு வந்தவன்,
“ஒரு சுடிதாராவது போடேன்டி. எப்ப பார்த்தாலும் சேரில இருக்க. நைட்டி நைட்ல மட்டும் தான்…” என்று அவளிடம் முணுமுணுக்க,
“ப்ச், எதுவும் எடுத்துட்டு வரலையே. அதெல்லாம் காலேஜ்ல போட்டது. கல்யாணம் ஆனதும் அம்மா அண்ணியை சுடிதார் போட விட்டது இல்லை. யாராச்சும் கிண்டலா கூட எதுவும் சொல்லிட கூடாதுன்னு ரொம்ப கவனம். நானும் காலேஜ் முடிஞ்சதும் தாவணி, புடவை தான்….”
“இப்ப அது எல்லாம் மறந்தே போச்சு. சுடிதார்னு ஒன்னு நான் போட்டதே ஞாபகத்துல தேடற மாதிரி. கல்யாணம் முடியவும் எந்த சுடிதாரும் அம்மா எடுத்து வைக்க விடலை. எல்லாம் யாருக்கோ குடுக்கறதா பேக் பண்ணி வச்சுட்டாங்க…”
“உன்னை இங்க போட கூடாதுன்னு யாருடி சொன்னா?…” என அவன் எகிற,
“ப்ச் அப்படி இல்லை. உன் மாமியார் வீட்டுல இது புடிக்குமோ புடிக்காதோ. அதனால இப்போதைக்கு எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. உங்களை கேட்டு உங்க விருப்பம் எதுவோ அப்படி ட்ரெஸ் பண்ணிக்கோன்னு சொன்னாங்க. அதுவும் வீட்டுல மட்டும்னு…” என சிரித்தாள்.
“என் விருப்பம் போலவா?…” என கேட்டு கள்ளப்புன்னகை புரிந்தவனின் கன்னத்தை வலிக்க கிள்ளியவள்,
“கிளம்புவோம்…” என கை பிடித்து நிறுத்த,
“ஓகே, அப்போ நான் எடுத்து தந்தா போடுவ. அப்படித்தானே?…” என கேட்டதும்,
“ஒன்னும் வேண்டாம் சாமி. இப்ப கிளம்புவோம்…” என்று அவனை இழுத்துக்கொண்டு வெளியே வர பெரிய குடை ஒன்றை விரித்து இருவரும் ஒன்றாக நடக்க ஆரம்பித்தனர்.
ஏற்கனவே குளிர் காலம் தான் அங்கே. மழை வேறு. லேசாய் நடுங்கியபடி நடந்த அபூர்வாவை ஒரு கையால் அணைத்தபடி இன்னொரு கையால் குடையை பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டே நடந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
தூரத்தே ஒரு நடைவண்டி கடையில் மருதவேலுவும், விமலாவும் நின்று சூப் குடித்துக்கொண்டு இருக்க அவர்களை நெருங்கினார்கள்.
“என்னடா அண்ணா…” என கேட்க,
“இப்பத்தான் உனக்கு வரனும்னு தோணுச்சோ?…” என்றான் மருதவேல்.
ஒரே ஒரு பவுல் சூப். இருவரும் அதனை பகிர்ந்து குடிக்க பார்த்த இருவருக்குமே மனம் நிறைந்து போனது.
“இன்னொன்னு வாங்கட்டா? ஏன் ஒண்ணுல குடிச்சிட்டு இருக்க?…” என வாசுதேவகிருஷ்ணன் வேண்டுமென்றே கேட்க,
“அது எனக்கு தெரியாதா? ரெண்டு ரெண்டா வாங்கினா எல்லாத்தையும் சாப்பிட்டு பார்க்க முடியாதுல…” என்று சொல்லவும் தம்பியாகப்பட்டவன் வாயை பிளக்க அபூர்வா கிளுக்கி சிரித்தாள்.
விமலாவின் முகத்தில் வெட்கத்தின் அச்சாரம் செவ்வானமாய் ஒளிரிட கண்களில் புதிதாய் இதுவரை காணாத மயக்கம் மின்னியது.
“விமலா, இவனுக்கு போன் பண்ணினா லட்சுமி தூங்குதுன்னு சொல்லுறான். தூங்கவா வந்தாங்க. நல்லா திட்டிட்டேன்…” என்று சொல்ல நமுட்டு சிரிப்பு சிரித்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அவனின் சிரிப்பே ஏடாகூடமாய் ஏதோ பேச போவதாய் பறையடித்து சொல்லியது அபூர்வாவிடம். அவனின் கையை பிடித்து தடுக்கும் முன்,
“ஆமா, தூங்கத்தான் வந்தோம். வேணும்னா பூர்விட்ட கேளேன். இல்லைன்னு சொல்லமாட்டா…” என்று கண்ணடிக்க,
“என்ன பொண்ணும்மா நீ? இப்ப ஊருக்கு போய்ட்டா வீட்டுக்குள்ள தான இருக்க போறீங்க. அப்ப நல்லா தூங்க வேண்டியது தானே?…” என்று அப்பாவியாய் சொல்ல,
“வீட்டுக்குள்ளயும் தூங்க சொல்றான்…” என அபூர்வாவின் காதில் கிசுகிசுக்க மருதவேலோ அதற்கும் மேல் சென்று,
“என்ன விமலா பார்த்துட்டு இருக்க? நீ எடுத்து சொல்லி அந்த பொண்ணுக்கு புரிய வை…” என்று சொல்ல அடக்கமாட்டாமல் வாய் விட்டு சிரித்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“யக்கா புரிஞ்சதா?…” என இப்பொழுது சத்தமாய் அபூர்வாவிடம் கேட்க அவனின் கையில் நறுக்கென்று கிள்ளியவள்,
“ரூம்க்கு வாங்க பேசிக்கறேன்…” என்று அவனிடமிருந்து நகர,
“ஹேய் மழை பெய்யுது பூர்வி…” என்ற பேச்சையும் கேட்காமல் முன்னே நடந்தாள் அவனுக்கு ஒரு ரகசிய முறைப்பை கொடுத்துவிட்டு. கணவனாகப்பட்டவனுக்கு முகம் கொள்ளா புன்னகை.
“என்னடா நீ பொண்டாட்டியை யக்கா சொக்கான்னுட்டு இருக்க…” என மீண்டும் மருதவேல் ஆரம்பிக்க தலையில் அடித்துக்கொண்ட விமலா,
“அவங்க எப்படி பேசிக்கிட்டா உங்களுக்கு என்ன?…” என்று அவனை கண்டிக்க,
“முதல்ல நீ போய் லட்சுமியை பாரு. நான் இவனை என்னன்னு கேட்டுட்டு வரேன். பேச்சு மட்டும் லத்தி நீளத்துக்கு கிழியும். ஒரு விவரமும் பத்தாது…” என சொல்ல அதற்கும் வாசுதேவகிருஷ்ணன் வெடி சிரிப்பு சிரிக்க விமலா ஓடியேவிட்டாள்.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த வேகத்துல ஓட்டமெடுக்குறா?…” என்று தம்பியிடம் கேட்ட மருதவேல்,
“சரி வா நாமளும் போவோம்…” என்று அழைக்க இருவருமாக சேர்ந்து நடந்தனர்.
அங்கே கைவினை பொருட்கள் செய்து விற்றுக்கொண்டு இருந்த இடத்தில் நின்று விமலாவும், அபூர்வாவும் பேசிக்கொண்டு இருக்க மனைவியை நெருங்கியவன் அவளின் தோளில் இடித்து தன்பக்கம் திருப்ப,
“டேய் பாத்து நடடா, லட்சுமி விழுந்துட போகுது. இந்த இடி இடிக்கிற…” என்றான் பொறுப்பாய் அண்ணனாய்.
விமலாவிற்கு மருதுவின் தலையில் ஒரு கொட்டு கொட்டினால் என்னவென்று வந்தது.
முதலிலேயே மருதுவேல் தூக்கத்தை பற்றி பேசும் போது வாசுவின் பார்வையும், அபூர்வாவின் வெட்கமும், அங்கிருந்து அவள் நகர்ந்து வந்ததுமே அவர்களுக்குள் ரகசியமாய் எதுவோ இருக்கிறது என்பது புரிந்துபோனது.
இவனானால் விடாமல் பேசுகிறானே என நினைத்து சலிப்புடன் கணவனை பார்க்க வாசுதேவகிருஷ்ணன் தன் அண்ணனை பார்த்து,
“ம்ஹூம் தேற மாட்டே, நீ தேறவே மாட்ட. உன் ஷாப்பிங்கை முடிச்சுட்டா நீ கிளம்பு….” என்றவன்,
“ஆமா நைட் டின்னருக்கு என்ன செய்ய சொல்லிட்டு வந்திருக்க?…” என கேட்க,
“ஒன்னும் சொல்லலையே…” என முழித்தான் மருதவேல்.
“அவர் கேட்டிருப்பார் தானே?…”
“கேட்டாரு, வந்து பார்த்துக்கலாம்னு சொன்னேன்…” என சொல்லவும்,
“சுத்தம், எல்லாத்துக்கும் சேர்த்து தான் பே பண்ணிருக்கோம். உனக்கு என்ன வேணுமோ செய்ய சொல்லு. முக்கியமா சாம்பாரு, ரசம் துவையல்ன்னு இல்லாம இந்த ஊர் சாப்பாட்டை செய்ய சொல்லு. மீன் இவங்க செய்யறது ரொம்ப நல்லா இருக்கும்…” என்று அவனிடம் சொல்லித்தர தலையை ஆட்டியவன்,
“வாசு இப்படியே நடந்து போனா அங்க இடியாப்பம் அவிச்சு விக்கிறாங்க. நாட்டுசர்க்கரை, தேங்காய்ப்பூ போட்டு. நல்லா பூ மாதிரி இருக்கு. வாங்கி சாப்பிட்டு பாரு. அப்பறம் லட்சுமி…” என்றவனுக்கு பெரிய கும்பிடாய் போட,
“அதெல்லாம் அவங்க உங்களை விட நல்லாவே பார்த்துப்பாங்க. முதல்ல நாம இடத்தை காலி பண்ணுவோம். எதையாச்சும் பேசி மானத்தை வாங்காதீங்க…” என்று முணுமுணுக்க,
“ஏன்டி அவனுக்கு ஒரு யோசனை சொன்னா நீயேன் புரியாம பேசற. சின்ன பையன்…” என மருது விமலாவிடம் சொல்ல வாசுதேவகிருஷ்ணனோ,
“போதும் போதும். நீ கிளம்பு ராசா, முதல்ல அண்ணியை பாரு. பூர்வியை நான் பார்த்துக்கறேன்…” என கிண்டலுடன் சொல்ல,
“சரி சரி. போயி தூங்கிடாம கொஞ்சம் நேரம் பேசிட்டு இருங்க…” என்று சொல்ல,
“அடேய்…” என்று வாசு இன்னுமின்னும் சிரிக்க ஒரு கையால் முகத்தை மூடிக்கொண்டாள் அபூர்வா.
மருதுவோ பத்திரம் என சொல்லிவிட்டு செல்ல அபூர்வாவை திரும்பி பார்த்து சிரித்தவனின் சிரிப்பில் நாணமுற்றவள் அவனின் பின்னால் நகர்ந்து தோளில் முகம் மறைத்துக்கொள்ள அவளின் கையை பற்றி முன்னிழுத்தான்.
“இந்த அண்ணனுக்கு தூக்கத்தை பத்தி சொல்லி குடுக்கனும்…” என்று சொல்ல,
“ஆஹா இனி நீங்க எங்க பேசினாலும் நான் காலி. வாயை வச்சிட்டு சும்மா இருங்க. யாருக்கும் எதுவும் பாடம் எடுக்க வேண்டாம். இல்லை நான் திரும்பி போய்டுவேன் போட்டுக்கு…” என மிரட்ட,
“தூங்கவா கண்மணி…” என்று குறும்புடன் கேட்டு அவளிடம் சிலபல செல்ல அடிகளை வாங்கிக்கொண்டான்.
குடையை மடக்கிவிட்டு அந்த பூவாய் தூறும் சாரலில் நனைந்தபடி அவர்கள் நடந்துகொண்டே கடைகளை பார்வையிட தேவையானவற்றை வாங்கவும் மறக்கவில்லை.
பூங்கோதைக்கு அழைத்து ஏதாவது வேண்டுமா என கேட்க அவரோ பிடித்து சத்தம் போட்டுவிட்டார் அபூர்வாவை.
“போனோமா புருஷனுக்கு, மாமியார் வீட்டுக்கு என்ன வாங்கனுமோ வாங்கு. எங்களுக்கு வாங்கினா என்ன நினைப்பாங்க. எங்களுக்கு வேணும்னா உங்கண்ணனை அனுப்பி வாங்க சொல்லிக்கறேன்…” என கண்டித்து சொல்ல,
“அப்ப நான் வாங்கி குடுத்தா வாங்க மாட்டீங்க?…” என்ற மருமகனின் குரலில் பதறி போனை கீழே போட போனவர் அரண்டுபோனார்.
“மாப்பிள்ளை…”
“ஒரு இலையும் இல்லைன்னு சொல்லிட்டீங்களே?…” என்றான் இடக்காக.
“என்னது?…” என புரியாமல் பூங்கோதை திருதிருக்க,
“மாப்பிள்ளையாவது வேப்பிலையாவதுன்னு காட்டிட்டீங்கள…” என்றதும்,
“ஐயோ அப்படி எல்லாம இல்லைங்க மாப்பிள்ளை, நீங்க அங்க போன நேரத்துல என்னத்துக்கு எங்களுக்கும் சேர்த்து சுமந்துட்டு, உங்களுக்கும் சிரமம்னு தான்…”
“இதான் விஷயமா? சரி விடுங்க. சிரமம் இல்லாத அளவுக்கு வாங்கிட்டு வரோம்…” என்று சொல்ல பதில் சொல்லமுடியாமல் சரி என்றதும் தான் போனை வைத்தான் மருமகப்பிள்ளை.
“எங்கம்மாவை இவ்வளோ மிரட்டுறீங்க…” என அபூர்வா முறைக்க,
“உன்னையும் மிரட்டுவேன். பார்க்கிறயா?…” என்று கேட்க கோபமாக சொல்கிறானோ என்று நினைத்தவள் அவனின் முகத்தில் இருந்த புன்னகையில் தன் தலையில் அடித்துக்கொண்டாள்.
“இனி எதுவும் கேட்கமாட்டேன்…” என்று முறுக்கிக்கொண்டு திரும்ப சிரித்தபடி அடுத்தடுத்து அழைத்து சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.
மீண்டும் மழை வலுக்க தொடங்குவதை போல தோன்ற இதற்கு மேலும் அங்கே தொடர வேண்டாம் என நினைத்து மீண்டும் படகுவீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
ஓரளவிற்கு நனைந்துவிட இவர்கள் வந்த நேரம் உணவும் தயாராக இருக்க உடை மாற்றவெல்லாம் நேரமின்றி முதலில் சாப்பிட்டுவிட்டு பின் உறங்க செல்வோம் என்றுவிட்டான் அவன்.
உணவு அத்தனை சுவைக்க சுவைக்க அத்தனை ருசியாக இருந்தது. ஏற்கனவே சொல்லியே சென்றிருந்தான் காரம் சற்று தூக்கலாக வேண்டுமென்று. மழைக்கும் குளிருக்கும் இதமாக சுள்ளென்று சுவைத்தால் தான் உணவிறங்கும் அவனுக்கு.
ஆப்பமும், கறிமீனும், கோதுமை பரோட்டாவும், இறால் தொக்கும் இன்பமாய் இறங்கியது அவனுள். ரசித்து சாப்பிட்டவன் அவளையும் சாப்பிட வைத்தான்.
“இதுக்கு மேல சுத்தமா முடியாது. இப்பவே டயர்ட், குளிருது. அப்படியே கண்ணை சுத்துது…” என்று களைப்புடன் கண்ணை சொருகியவளை கண்டவன் கன்னத்தில் கை வைத்து வாய்க்குள் சிரிக்க அவனை முறைத்து அவனின் கையை கரண்டியால் ஒரு போடு போட்டாள்.
“என் வாயும் நிக்கமாட்டிக்கு. உங்கட்ட இப்படி வாங்கிக்கட்டறேன்…” என்று அலுத்துக்கொள்ள,
“சரி முதல்ல சாப்பிடு…” என சிரித்தபடி அவன் சொன்னலும் உடல் குலுங்கியதில் அவன் தன்னை நக்கலடிக்கிறான் என்று புரிந்தவள் தட்டில் இருந்ததை வேகமாய் சாப்பிட்டு முடித்து கையை கழுவியவள்,
“இன்னைக்கு நிஜமாவே தூங்க போறேன்…” என உறுதியாக சொல்ல அடக்கமாட்டாமல் சிரித்தவன்,
“ஓகே கண்மணி…” என்றான் விஷமமாய்.
அவனின் சிரிப்பு சத்தம் அறைக்குள் வரை கேட்க உதட்டில் உறைந்துவிட்ட புன்னைகையுடன் உள்ளம் குறுகுறுக்க கதவை மூடிவிட்டு உடைமாற்றி படுக்க போனவள் பின் ஜன்னலை மூடியிருந்த திரையை விலக்கிவிட்டு கண்ணாடி கதவை ஒட்டி அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து கண்ணாடியில் தலை சாய்த்தாள்.
தூரத்தில் நிலா வெளிச்சமும் படகை நிறுத்தியிருந்த இடத்தில் இருந்த விளக்கின் வெளிச்சமும் வெளியே போட்டுக்கொண்டிருந்த தூறல்களை துல்லியமாய் காண்பிக்க இருக்கில் படகு லேசாய் அசைந்தாட மனதிற்குள் சுகானுபவம்.
பத்து நிமிடங்களுக்கு பின் அறைக்குள் நுழைந்தவன் ஓவியமாய் மங்கிய விளக்கொளியில் அவள் அமர்ந்திருந்ததை பார்த்து ரசித்தபடி வந்தவன் அவளருகே நெருக்கிக்கொண்டு அமர்ந்தான்.