“அங்க இடம் இருக்குல. பின்ன எதுக்கு இப்படி ஒட்டிட்டு உட்காருறீங்க?…” என வேண்டுமென்றே சீண்டியவள் பின் சட்டென அவனின் வாயை மூடி,
“கேட்கலை, சத்தியமா கேட்கலை. எதையும் பேசிடாதீங்க…” என்று முன்னெச்சரிக்கையாக சொல்லவும் அவளின் கையை எடுத்துவிட்டு சிரித்தவன் இன்னும் நன்றாய் தள்ளி அமர்ந்து தனது மடியில் அவளை அமர்த்திக்கொண்டான்.
பேச விஷயங்களா இல்லை. பேசிபேசி தீர்த்தாலும் பேசியதையே பேசினாலும் புதிதாய் கேட்பதை போலவே கண்களால் கவிபாடினார்கள்.
என்ன சொல்லி அபூர்வா உள்ளே வந்தாளோ அவளால் அதை செயல்படுத்தமுடியாத அளவிற்கு அவளின் மனதை மாற்றி மயக்கியவன் மொத்தமாய் அவளிடம் மயங்கி போனான்.
விடியலில் கண்விழித்ததும் எழுந்து அமர்ந்தவள் அவனை தலையணையால் மொத்திவிட்டு குளித்துவிட்டு வர அவளுக்காக காத்திருந்தவன்,
“எதுக்குடி என்னை அடிச்சுட்டு போன?…” என்றான் வேகமாய்.
“நான் என்ன சொன்னேன்? வந்து தூங்கனும்னு சொன்னேன்ல…” என்று இடுப்பில் கை வைத்து கேட்டதும் சிரித்து,
“ஹ்ம்ம் ஆமா, தூங்கினோம் தானே?…”
“நான் கோபமா இருந்தேன்…”
“அதுக்கு…” சாவகாசமாய் பின்னால் சாய்ந்து அவளை நோக்கி கை நீட்டியபடி கேட்க அவனின் கையை தட்டிவிட்டவள்,
“எனக்கு மறந்தே போச்சு நான் சொன்னது?…” என்று முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு சொல்லவும் அபூர்வாவின் முகபாவனையில் வயிற்றை பிடித்துக்கொண்டு உருண்டு புரண்டு சிரித்தவன்,
“நீ மறந்துட்டா நான் என்ன பண்ணுவேன்? என்னை அடிச்சா சரியா போச்சா?…” என்று இன்னும் விளையாட்டாய் கேட்டவன் எழுந்து வந்து அவளின் முகம் நோக்கி குனிந்து,
“பூர்வி இன்னைக்கும் இந்த போட் ஹவுஸ்ல ஸ்டே பண்ணிடுவோமா? ஐ லவ் இட். ஓகே சொல்லு இன்னைக்கு நிஜமா தூங்கலாம்…” என கண்ணடித்து அவளை சீண்ட,
“ஒன்னும் தேவை இல்லை. உங்களை நம்பவே மாட்டேன்…” என்று சொல்லி தலையை உலர்த்த வெளியே வர மருதவேல் போன் செய்துவிட்டான்.
“எத்தனை மணிக்குடா இதை விட்டு போகனும்?…” என கேட்க அப்பொழுது நேரம் காலை எட்டரை மணிதான் காண்பித்தது.
“பதினோரு மணிக்கு செக்கவுட். அதை இப்பவே ஏன்டா கேட்கற?…” என வாசுதேவகிருஷ்ணன் கேட்க மருதவேல் அந்தபக்கம் தயங்குவது தெரிய,
“டேய் அண்ணா என்னன்னு சொல்லேன். எல்லாம் ஓகே தானே? உடம்புக்கு ஏதாவது?…” என பதற,
“ச்சே, ச்சே. அதெல்லாம் ஒண்ணுமில்லை. இது இங்க இன்னைக்கு மட்டும் தான் இங்க இருக்க முடியுமா?…” என்றதும் சிரிப்பு வந்துவிட,
“இதுக்காடா தயங்கின? உனக்கு ஓகேனா சொல்லு. நாளைக்கும் அங்கயே நீ இருக்கலாம்…” என்றான் இலகுவாக,
“உனக்கு வேற எதுவும் ப்ளான் இருக்கா?…”
“எனக்கு எந்த ப்ளான் இருந்தாலும் உனக்கு பிடிச்சதை நீ செய். என்னை நீ கன்ஸிடர் பண்ணாத. புரியுதா? இங்க நீ மட்டும் அண்ணியோட வந்திருக்கன்னு நினைச்சுக்கோ….”
“ஹ்ம்ம், சரி சரி. ரிட்டர்ன் எப்போ?…”
“நாளை மறுநாள் தான்….” அசராமல் சொல்ல அதிர்ந்துவிட்டான் மருதவேல்.
“மூணு நாள்னு தான சொன்ன?…”
“ஆமா சொன்னேன். அதுக்குன்னு மூணு நாள் தான் இருக்கனுமா என்ன? கேட்ட ட்ரெயின் கேன்சல்ன்னு சொல்லிடலாம். நான் பார்த்துக்கறேன்…”
ஒழுங்கா சும்மா சும்மா எல்லாத்துக்கும் எனக்கு கால் பண்ணாம அங்க பாரு. என்ஜாய்டா அண்ணா. இங்க ஹோட்டல்ல நான் பேசிக்கறேன். அவங்க உனக்கு பேசுவாங்க. நாளை மறுநாள் செக்கவுட் பண்ணினா போதும். அன்னைக்கு ஈவ்னிங் லோக்கல்ல பார்த்துட்டு அப்படியே ஸ்டேஷன் போய்டலாம்…” என்று சொல்லி முடித்து ஹோட்டலுக்கு போன் செய்து பேசிவிட்டான்.
“இன்னும் ரெண்டு நாள் இங்க தான் கண்மணி…” என்று சிரிப்புடன் உள்ளே அவனை அழைக்க வந்தவளிடம் சொல்ல,
“ஐயோ மருது மாமாவும், விமலாக்காவும் என்ன நினைப்பாங்க. அவங்களை கூட்டிட்டு வந்துட்டு இப்படி செய்யலாமா?…” என அபூர்வா பதற அவளை பிடித்து அணைத்தவன்,
“அடங்குடி. அவன் தான் போக மனசில்லைன்னு எனக்கு கால் பண்ணினான். நீயும் இருக்கியே…” என முறைக்க அதில் தோள்களை குலுக்கியவள்,
“ஓகே ஓகே, அதான் ப்ராமிஸ் பண்ணிட்டீங்களே. எனக்கு நோ அப்ஜெக்ஷன்…” என்று கண்களில் சிரிப்புடன் மிதப்பாய் சொல்ல,
“ஆஹாங், அது நான் சொல்லும் போது. இப்ப அந்த ப்ராமிஸ் எல்லாம் இந்த தண்ணில விட்டாச்சு…” என்று சிரிக்க,
“பிராடு…” என முணுமுணுத்தவளின் வார்த்தைகள் அவனின் புன்னகை சிந்தும் இதழ்களுக்குள் தேன்மழை பொழிந்து ஒளிந்தது. வார்த்தைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தனர்.
“என் கண்ணுக்குள்ள உன்னை தேடு தேடுன்னு சொல்லி உனக்குள்ள என்னை தேடி இப்ப மொத்தமா தொலைஞ்சு போய்ட்டிருக்கேன் கண்மணி…” என்னும் பிதற்றல்கள் கீர்த்தனையாய் அவனிடமிருந்து இசைக்கும் பொழுதெல்லாம் தன்னிலை மறந்து பெண்ணவள் தான் முற்றிலும் தொலைவாள் அவனிடத்தில்.
அடுத்த இரண்டு நாட்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் ஓடிவிட்டது. சந்தோஷமும் கொண்டாட்டமுமாய் அந்த நாட்கள் நீங்காமல் நெஞ்சில் பொதிந்து போயின.
தேவைகள் தண்ணீரின் தாகமாய் தவிப்பெடுக்க மிடறுகளாய் மிச்சம் வைக்காமல் சொச்சமில்லாமல் ஊற்றிகொண்டனர்.
வெளியே சென்று சுற்றி பார்த்ததை விட அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் சுற்றிக்கொண்டது தான் அதிகம்.
விமலாவிடமும், மருதவேலிடமும் வரும் போது இருந்ததை விட இப்பொழுது நெருக்கம் அதிகமாக இருந்தது. அவளின் கண்பார்த்து நடக்க ஆரம்பித்திருந்தான் அவன்.
சின்ன சின்ன விஷயத்திற்கு கூட தானே முன்வந்து அவளிடம் கேட்டுக்கொள்ள விமலாவிற்கு சந்தோஷத்தை விட நான்கு நாட்கள் அனுபவித்துவிட்டோம், இது மாறிவிட்டால் என்ன செய்வது என்கிற புது ஏக்கமும் உருவானது.
அதை அறியாத மருதவேல் இந்த நான்கு நாட்களை போல இனி வாழ்நாள் முழுவதும் அவளுடன் இணக்கமாக சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
அவனுக்கு ஒன்று தெளிவாய் விளங்கியது. வாம் வாழ்க்கைக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை. மனதை பொறுத்தே பார்ப்பதும் பழகுவதும் என்று உணர்ந்துகொண்டான்.
ஊருக்கு வந்ததும் நேராக முத்துவேல் வீட்டிற்கு தான் வந்து சேர்ந்தனர். வாங்கி வந்ததை எல்லாம் அன்புக்கரசி முத்துவேலுவுக்கு காண்பிக்க இருவருக்கும் மகிழ்ச்சிதான்.
முத்துவேல் அதை காண்பித்து கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொன்றையும் ஆர்வமாய் பார்த்து கொண்டார். அவரையே பார்த்தபடி இருந்த இளையமகன்,
“அண்ணா, உன்னோட மிச்ச பணத்தை உன் அக்கவுண்ட்ல போட்டு வச்சுக்கோ. புரியுதா?…” என சத்தமாய் சொல்லி தந்தையை பல்லை கடித்தபடி பார்க்க அவருக்கு அப்பொழுதுதான் ஞாபகமே வந்தது.
“என்னடா சொல்ற? எனக்கு அக்கவுண்டா?…” என புரியாமல் கேட்க முத்துவேலுவுக்கு வெலவெலத்து போனது.
எங்கே மறுத்து பேசினால் புது கடை, தனிக்குடித்தனம் நினைக்கும் போதே உதறல் எடுக்க,
“ஆமாடா, தெரியாதா? அப்பா தான் உனக்கு அக்கவுன்ட் ஆரம்பிச்சு வச்சிருக்கார். இனி மாசா மாசம் உனக்கு அதுல தனி அமௌண்ட் டெபாசிட் பண்ணிடுவார். இனிமே சும்மா ஹாஸ்பிட்டல் போக, கோவிலுக்கு போகன்னு அவர்க்கிட்ட கேட்டுட்டு நிக்க வேண்டாம் பாரு. அண்ணியோடதையும் சேர்த்து தான் உன்கிட்ட குடுக்க போறார்…” என்றவன் முத்துவேலை பார்த்துக்கொண்டே,
“அவருக்கு நீ ட்ரிப்க்கு காசு கூட கேட்கலைன்னு வருத்தம் போல. இப்படி எங்கயும் கேட்காம இருக்கானேன்னு உனக்காகவே அக்கவுன்ட் ஓபன் பண்ணி எல்லாம் ரெடியா வச்சிருந்தார். ட்ரிப்ல கூட நீ ATM தேட வேண்டாமேன்னு தான் கேஷா உன்கிட்ட கொடுத்தது…” என்று சொல்ல சொல்ல மருதவேலுவுக்கு இன்னும் நம்ப முடியவில்லை.
“நிஜமாவா?” என்பதை போல பார்த்து நின்ற பெரியமகனின் ஆவலான முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியாமல் அவராகவே உள்ளே சென்று வாசு கொடுத்தவற்றை எல்லாம் எடுத்து வந்து அவனின் கையில் திணித்தார்.
“என்னப்பா திடீர்ன்னு…” என மருதவேல் கேட்க,
“ஆங், சும்மா தான். சரி சரி நான் கடைக்கு கிளம்பறேன்…” என்று சொல்லிகொண்டு இருக்கும் பொழுதே வாசலுக்கு சென்றிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். முத்துவேல் வரவும்,
“ட்ரிப்க்கு போய்ட்டு வந்துட்டா அப்படியே மறந்திருவேன்னு நினைச்சீங்களா நீங்க? ஏன் என் வீட்டுக்கு போகாம இங்க வந்தேன்னு இப்ப புரியுதா? அப்படியே மறந்துட்டா நான் குடுத்ததை குடுக்காமலே இருந்திறலாம்னு நினைப்பு. ம்ம்ம் அதானே?…” என்று கிண்டலுடன் கேட்டாலும் முகத்தில் அப்பட்டமான கோபம் இருந்தது.
“என்னை என்னடா வில்லன் மாதிரி நினைக்கிற நீ? உங்க நல்லதுக்கு எல்லாம் செய்யறேன்ல, நீ பேசத்தான் செய்வ…” என்று கோபமாக உறுமிவிட்டு சென்றுவிட்டார்.
அன்று அங்கே இருந்துவிட்டு மாலை தங்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டான் வாசுதேவகிருஷ்ணன் அபூர்வாவுடன்.
வந்த மறுநாளே வேலையில் சேர்ந்துவிட அபூர்வாவிற்கு அவனின் நேரங்கள் பிடிபட முதலில் கடினாமாக இருந்தாலும் போக போக பழகிக்கொண்டாள்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் முத்துவேலுவுக்கு அழைத்து அவசரமாக வீட்டிற்கு வருமாறு சொல்ல அவரோ என்ன பிரச்சனையோ என்று அன்புக்கரசியுடன் கிளம்பி வந்தார்.
அப்பொழுது தான் வீட்டை பற்றி அவரிடம் சொல்லியவன் அவரையும் கூட்டிக்கொண்டு போய் காண்பித்துவிட்டு வர,
“பார்த்தியா என்னதான் உன் புள்ளை எடுத்தெறிஞ்சு பேசுனாலும் ஒரு நல்லதுன்னு வரும் போது என்கிட்டே தான் முதல்ல சொல்லுறான். வீடு நல்ல அதான் இருக்கு. நானே அவன்கிட்ட எப்படி சொல்லன்னு தான் இருந்தேன். சரி வாங்கட்டும்…” என்று பெருமை பீற்ற,
“ஆமாமா, எங்கிட்ட எல்லாம் சொல்லுவானா?…” என வேண்டுமென்றே அபுக்கரசி நொடித்துக்கொள்ள,
“பொறாமை படாத அன்பு. இதுக்குத்தான் வீட்டுக்கு ஒரு குடும்ப தலைவன் இருக்கனும்ன்றது…” என சொல்ல,
“நான் என்னத்த கண்டேன்? எனக்கு தெரிஞ்சு எல்லா வீட்டுலையும் ஒரு குடும்பத்தலைவன் தான் இருப்பாங்க. நீங்கதான் என்னமோ புதுசா சொல்றீங்க…” என்று சொல்லி செல்ல முத்துவேல் தான் திருதிருவென விழித்தார்.
அதன் பின் மகனிடம் வீடு வாங்க பணம் தருவதாய் சொல்ல அவன் மறுத்துவிட அதற்கு வேறு கோபம். அங்கேயே ஒரு ஆட்டம் ஆடிவிட்டு தான் வந்தார்.
வந்தவர் வீட்டிற்குள் நுழைந்து வாயை திறக்கும் முன்னரே அன்புக்கரசி அவரை பேச வாய்ப்பளிக்காமல்,
“விமலா தண்ணி கொண்டாடி…” என கேட்டதுமே தொப்பென்று அமர்ந்துகொண்டார் முத்துவேல்.
“என்னாச்சு அத்தை? வரும் போதே நெஞ்சை பிடிச்சுட்டு வரீங்க?…” என பதறி பார்த்தாள்.
அவளுக்கு அதற்கு முன்பே அபூர்வா அழைத்து விஷயத்தை சொல்லியிருக்க மாமியாரின் அடுத்தகட்ட நடவடிகைக்காக காத்திருந்தவள் அவர் வரும் முன்னரே தண்ணீர் சொம்பை நிரப்பி ஹாலிலேயே வைத்திருக்க கேட்டதும் எடுத்துகொடுத்து நெஞ்சை நீவிவிட்டாள்.
அதை கூட கவனிக்காதவராக முத்துவேல் அன்புக்கரசியை கவலையுடன் பார்த்தார். இப்போதெல்லாம் அன்புக்கரசிக்கு அடிக்கடி உடம்பிற்கு முடியாமல் போகிறதே என்பதை போல.
“நான் என்னத்த சொல்லுவேன்? என் மவன் ஏதோ அவனா ஒரு வீடு வாங்கனும்னு நினைச்சு பெத்தவருக்கு பிடிக்கனும்னு கூட்டிட்டு போயி காமிச்சா நான்தான் பணம் குடுப்பேன்னு நின்னு அதை கெடுத்துவிட்டுட்டாரு. வருஷமெல்லாம் அந்த குருவி கூட்டுக்குள்ள பொழப்பை நடத்தனும்னு எம்மவனுக்கு எழுதியிருக்கு போல…” என்று மூக்கை சீந்த,
“இந்தாங்கத்தை தண்ணி…”
“இருடி, ஒரு வேகத்துல போறேன்ல. தண்ணி குடிச்சா தழுதழுப்பு போயிரும்…” என்று அவளின் காதை கடித்துவிட்டு,
“பொண்டாட்டியோட சொந்த வீட்டுல வாழனும்னு நினைச்சது ஒரு குத்தமா? அதுவும் சொந்த காசுல வாங்கினா எம்பாட்டு பெருமை அவனுக்கு. இவரு மட்டும் தான் ஊரை அடைச்சு வீட்டை கட்டி பெருமை பேசுவாராம். ஆனா மக்களுக்கு அந்த பெருமை இருக்க கூடாதாம்…” என சொல்ல முத்துவேலுக்கும் அது சரி என்று தோன்ற,
“விமலா அந்த தண்ணிய எடுடி. போராடி போராடியே என் பொழைப்பு முடிஞ்சு போச்சே…” என்று வராத கண்ணீரை துடைக்க,
“சங்கடபடாத அன்பு. இப்ப என்ன அவனே அந்த வீட்டை வாங்கட்டும். எனக்கு பெத்தவன் குடுக்கேன். வேண்டாம்னு சொல்றானேன்னு கோபம். அம்புட்டு காசுக்கும் லோன் போடனுமேனு வருத்தம். அதன சொன்னேன். சரி விடு. நாள் பார்க்க சொன்னான்ல. பாரு…” என்றவர்,
“உடம்பை பார்த்துக்கோ அன்பு…” என எழுந்து சென்றுவிட அப்போதுதான் நிம்மதியாக எழுந்து அமர்ந்தார் அன்புக்கரசி.
“இந்த மனுஷன்கிட்ட நெஞ்சை பிடிச்சு வேளை வாங்கறதே எனக்கு பொழப்பா போச்சு….” என சொல்லியவர் உடனடியாக ஜோசியருக்கு அழைத்து அந்த மாதத்திலேயே ஒரு நல்லநாளை பார்த்துவிட்டார்.
அடுத்த பதினான்காம் நாள் நன்றாக இருப்பதாக சொல்லவும் அன்றைக்கே பால் காய்ச்சிவிடலாம் என்று முடிவாகியது.