நிஜம் – 27
“அம்மா இந்த தேங்காயை எங்க வைக்கறது?…” என கேட்டுக்கொண்டே மருதவேல் வர,
“இன்னுமாடா அதுக்கு மஞ்சளை பூசலை? என்ன பண்ணிட்டு இருக்க?…” என்று அன்புக்கரசி சத்தம் போட,
“அத்தை அம்மா மஞ்சள் பூசிட்டாங்க. இது தட்டுக்கு சேர்த்து வைக்க. இதை நான் செய்யறேன், நீங்க வேற பாருங்க…” என தினேஷ் அதனை வாங்கிக்கொண்டான்.
ஒரு ஓரமாய் மகிழ்தினி அமர்ந்திருக்க அவளுடன் பேசியபடி தாமோதரன் அமர்ந்து இருந்தார்.
அதிகாலை நேரம். பால் காய்ச்சுவதற்கான அனைத்து வேலைகளையும் பம்பரம் போல சுழன்று செய்துகொண்டு இருந்தார் அன்புக்கரசி. அவருக்கு உதவியாக பூங்கோதை.
வாசுதேவகிருஷ்ணன் திருமணத்திற்கு விடுப்பு எடுத்திருந்ததனால் எதிலும் பங்கெடுக்க முடியாத அளவிற்கு அவனிற்கு வேலையும் நெட்டி முறித்தது. அதிலும் தற்போது ஆராய்ந்து வரும் வழக்கு அவனை சற்று இழுத்தடிக்கத்தான் செய்தது. முடிக்கும் தருவாய் வேறு.
ரவியின் மூலம் நிறையவே துப்புகள் கிடைத்தாலும் இன்னும் இன்னும் அவனுக்கு புதிதாய் தோன்றிய சந்தேகங்கள் ஏனைய முக்கியஸ்தர்களை பெரும் புள்ளிகளை தனது வட்டத்திற்குள் கொண்டு வந்திருந்தான்.
அதனாலேயே அவனால் இந்தா விசேஷத்தை மொத்தமாய் அன்புக்கரசியிடம் ஒப்படைத்து இருந்தான்.
“இன்னுமாடா உன் தம்பி வரலை. போய் அவனையும் லட்சுமியையும் வர சொல்லு. ஆரம்பிக்க வேண்டாமா?…” என்று மருதவேலை அனுப்ப,
“நான் போய் வர சொல்றேன் அத்தை….” என்ற விமலாவை பார்த்தவன்,
“வா வா, சேர்ந்தே போய் கூட்டிட்டு வருவோம்…” என அவளின் கை பிடித்து அழைத்து செல்ல,
“அதுசரி, இப்ப எங்க போனாலும் அவ இல்லாம நீ போறதே இல்ல பாரு. ஏன்டா?….” என நக்கலாக கேட்க விமலாவும் சிரித்துக்கொண்டு அத்தையுடன் சேர்ந்து நின்றுகொண்டாள்.
தலையை சொறிந்தபடி மருதவேல் நகர்ந்து செல்ல அங்கே நடப்பவற்றை எல்லாம் பொம்மை போல அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார் முத்துவேல்.
முகத்தில் அத்தனை இறுக்கம். பால் காய்ச்ச நாள் பார்த்ததும் பத்திரிக்கை அடிக்கவேண்டும் என்று சொல்லியவரை வேண்டாம் என்று தடுத்த இளையமகன் வீட்டு ஆட்களை மட்டும் வைத்து செய்துகொள்வோம் என்று சொல்லியிருக்க சரி என்று விட்டுவிட்டார்.
அவரின் எண்ணம் எப்படியும் கிரகப்ரவேஷம் நடத்த தங்கை குடும்பத்தை அழைப்பான் என்ற நினைப்பில் அவர் இருக்க அவனோ அந்த எண்ணமே இல்லாததை போல நடந்துகொண்டான்.
“என்ன அன்பு, உன் மகனை வந்து ராணி வீட்ட அழைக்க சொல்லு. இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. நாளைக்கு அங்க போயிருவோம். நாளை மறுநாள் விசேஷம். இன்னும் சொல்லாம இருந்தா எப்படி?…” என கேட்க,
“அவனை தான் கேட்கனும். ஏற்கனவே சொல்லிருந்தேன்…” என கவலையுடன் சொன்னார் அன்புக்கரசி.
அன்புக்கரசியும் சொல்லியிருந்தார் ராணிக்கு மட்டுமாவது போன் செய்து அழைத்துவிடு என்று. முடியவே முடியாதென நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான் அவன்.
அன்புக்கரசியின் முகத்தை பார்த்திருந்த முத்துவேல் மகன் மாட்டேன் என்று தான் சொல்லியிருப்பான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்க அவனுக்கு அழைத்துவிட்டார்.
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ? என் தங்கச்சியை ஏன் இன்னும் கூப்பிடாம இருக்க?…” என எடுத்த எடுப்பிலேயே அவர் எகிற ஏற்கனவே டென்ஷனில் ஸ்டேஷனில் இருந்தவன்,
“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? அவங்களை கூப்பிட முடியாதுன்னு ஏற்கனவே சொல்லிட்டேன். என்னை அசிங்கப்படுத்தினவரு அவரு. உறவே வேண்டாம்னு தானே இருக்கேன். உங்களுக்கு உங்க தங்கச்சி முக்கியமா வச்சுக்கோங்க. என்னை கட்டாயப்படுத்தாதீங்க. என்னால கூப்பிட முடியாது…” என ஒரே போடாக போட்டுவிட்டு வைத்துவிட திகைத்துபோய் நின்றார்.
கோபமாய் பேசுவான் தான். சண்டை போட்டிருக்கிறான் தான். இன்றைக்கென்ன இப்படி ஒரு ஆவேசம்? நினைக்க நினைக்க தாங்கமுடியவில்லை.
“என்னையே எடுத்தெறிஞ்சு பேசறான். நானும் வரமாட்டேன். நீங்களே எல்லாத்தையும் செஞ்சுக்கோங்க…” என சொல்லிவிட்டு கடைக்கு சென்றுவிட, அன்றைக்கே மருதவேலையும் விமலாவையும் மட்டும் அனுப்பிவிட்டு அன்புக்கரசி போகவில்லை.
மாலை கூட வீட்டிற்கு வராமல் கோபத்தில் இருந்தவர் இரவு வந்திருக்க மூத்த மகனையும், மருமகளையும் காணாமல் தேடியவர் மனைவியை பார்த்ததும் அமைதியாக நின்றார்.
“இன்னைக்கு பெரியவன் போய்ட்டானா? சொல்லாம கிளம்பிட்டான்….” என சாப்பிடும் போது கடுப்புடன் கேட்க,
“ஆமா நான் தான் அனுப்பினேன். நாளைக்கு வரைக்கும் இருந்து நீங்க யாருமே போக கூடாதுன்னு சொல்லிடுவீங்களோன்னு தான் இன்னைக்கே அனுப்பினேன். வாசுவுக்கு அம்மா அப்பா இல்லைன்னாலும் அண்ணன் வந்திருக்கான்னு ஒரு திருப்தி கிடைக்கட்டும்…” என்றார் அமைதியாக.
“அன்பு நான் என்ன சொன்னா நீ என்ன பேசற? சின்னவன் பண்ணினது சரின்னு சொல்றியா?…” என்று கோபமாக கேட்க,
“நான் யார் சரி, யார் தப்புன்னு சொல்ல வரலை. நீங்க போகாத விசேஷம் நானும் போகலை. எனக்கு வேண்டாம். ஆனா என் புள்ளையையும் தவிக்க விட கூடாது பாருங்க. அதான் பெரியவனை அனுப்பிருக்கேன். அவன் மாமனார் வீட்டாளுங்க இருக்கும் போது அவனுக்கு யாருமில்லாம நிக்க கூடாது பாருங்க…”
என்றைக்கும் இல்லாமல் அன்புக்கரசி உணர்ச்சிவயப்பட்டு பேசிக்கொண்டு இருந்தார். அவரின் முகத்தில் இருந்து எதையும் கண்டுகொள்ளமுடியவில்லை. அழுகையும் இல்லை.
“ராணி பாவமில்லையா அன்பு…” என்றார் மெதுவாக.
“அது எனக்கு தெரியாதுங்க. முதல்ல எனக்கு நீங்க முக்கியம். அடுத்து என் புள்ளைங்க, மருமகளுங்க. அதுக்கு அப்பறம் தான் யாரா இருந்தாலும். ஆனாலும் ஒண்ணு சொல்லிக்கிறேன். யாரு என் புருஷனையோ, புள்ளைகளையோ குறைச்சு பேசி மதிப்பில்லாம நடத்தினா அவங்க மூஞ்சில கூட முழிக்க மாட்டேன்…”
“அன்பு…”
“உங்களுக்காக தான் இன்னமும் உங்க தங்கச்சி வீட்டோட உறவாடிட்டு இருக்கேன். இப்ப இந்த இடத்துல நான் என் புள்ளையையே விட்டுக்குடுத்து ரோசமில்லாம அவங்களோட கூடி குலாவறது எனக்காக இல்லை. நீங்க விசனப்பட கூடாதேன்னு தான்…”
“அன்னைக்கு ராணி கூட புருஷன், புள்ளைக்காக தான் பேசினா. எனக்கு தான் அந்த வக்கில்லை. என் புள்ளைக்காக வாயை திறக்க முடியலை. இதுதான் என் நிலமை இங்க. என் புருஷனே அவங்க பக்கம் நிக்கும் போது யார்க்குன்னு பார்க்க?…”
“உறவு முக்கியம் தான். கூடவே மரியாதையும். உறவு வேணும்னா காலப்போக்குல வாசு மனசு மாறும். அவனுக்கும் குழந்தைன்னு வரும் போது அப்ப ஒரு பக்குவம் வரும். போகுதுன்னு ஏத்துப்பான். ஆனா இப்பவே அவனை கட்டி வைக்கனும்னு நினைச்சா திமிறிட்டு உடைச்சுட்டு போக தான் பார்ப்பான்…”
பட்டு பட்டென்று அவர் பேசிவிட்டு சாப்பிட்ட தட்டை தூக்கிக்கொண்டு எழுந்து சென்றுவிடவும் முத்துவேல் அப்படியே தான் இருந்தார்.
அன்புக்கரசி என்னவோ பேசிவிட்டார், மனதில் உள்ளதை கொட்டிவிட்டார் தான். ஆனால் முத்துவேலுக்கு தான் உறக்கம் பறிபோனது. இரவு முழுவதும் மனைவியின் வாடிய முகமே அவரை வாட்டி எடுக்க காலை எழுந்ததும்,
“அன்பு…” என தேடிக்கொண்டு சென்றார் அடுக்களைக்கு.
அங்கே இவருக்காக டீ போட்டுக்கொண்டு இருக்க குளிக்காமல் அடுக்களை வரை வந்திருக்கும் மனிதரை ஆச்சரியமாக பார்த்தவர்,
“போய் குளிங்க. டீ போட்டுட்டு இருக்கேன்…” என சாதாரணம் போல சொன்னாலும் முகத்தில் பழைய மலர்ச்சி இல்லை.
படபடப்பு வரும் நேரங்களில் கூட வாய் ஓயாமல் பேசியே தன்னை நிலைகுலைய செய்யும் அன்புக்கரசி இன்று முகமே அருளின்றி இருப்பதை போல பார்க்கவே சகிக்கவில்லை.
குளித்துவிட்டு உடை மாற்றி வந்தவர் டீயை வாங்கி குடித்தபடி அன்புக்கரசியை பார்க்க சாம்பார் வைக்க வெங்காயத்தை உரித்துக்கொண்டு இருந்தார்.
“இப்பவே ஏன் சமைக்கிற? மணி அஞ்சரை தான ஆகுது…” என கேட்க,
“பழக்கத்துல உரிச்சுட்டு இருக்கேன். தினமும் செய்யிற வேலை தான? என்ன ஒன்னு இன்னைக்கு நம்ம ரெண்டுபேத்துக்கு தான் செய்யனும்….” என சொல்லியவர் சோக சித்திரமாய் தெரிந்தார் முத்துவேலுவுக்கு.
“ஹ்ம்ம், சரி இப்ப ஒன்னும் பண்ண வேண்டாம். எல்லாத்தையும் எடுத்து வச்சிடு குளிச்சு இரு. வந்துடறேன்…” என சொல்லிவிட்டு கடை சாவியை எடுத்துக்கொண்டு செல்ல,
“ஹ்ம்ம், ஊர் உலகத்துல எந்த சூப்பர் மார்ட் வச்சிருக்கறவனும் விடியறதுக்குள்ள கடையை திறக்கறதில்லை. மனுஷனுக்கு மளிகைக்கடை நினைப்பு போகுதா பாரு…” என தன் போக்கில் புலம்பிக்கொண்டு உரித்த வெங்காயத்தை தூக்கி கழுவி வைத்தவர் குப்பையை வெளியே கொண்டு போய் தோட்டத்தில் வைத்திருந்த டின்னில் போட்டு மூடினார்.
அதன் பின்னர் அன்புக்கரசி குளித்துவிட்டு வருவதற்குள் வேகமாய் வந்த முத்துவேல்,
“அன்பு கிளம்பு, போவோம்…” என சொல்ல அன்புக்கரசிக்கு விளங்கிவிட்டது. ஆனாலும்,
“எங்க போக? சொன்னா தான கிளம்ப முடியும்?…” என்று கேட்க,
“எல்லாம் உன் மகன் வீட்டுக்கு தான். போவோம் கிளம்பு…” என சொல்ல,
“அதென்ன என் மகன். அப்ப உங்களுக்கு யாராம்? எனக்கு என் மகன் வீட்டுக்கு இப்ப போக தேவையில்லை, விடுங்க…” என்று பிகு செய்ய,
“இவ ஒருத்தி நேரங்காலம் புரியாம முறுக்கிக்கிட்டு. சரி சரி என் மவன், ம்ஹூம் நம்ம மகன் போதுமாத்தா? இப்ப கிளம்பு…” என்று சொல்லவும் அன்புக்கரசி முகமே மலர்ந்துவிட முத்துவேலுக்கு மனது நிறைந்து போனது.
பெரிதாய் அவரிடம் அன்பாக பேசியதோ, அமர்ந்து சிரித்ததோ இல்லை தான். காட்டியதெல்லாம் கடுமை, சிடுசிடுப்பு. அந்த கடுமையிலும் முகம் வாடாமல் புன்னகையுடனே வலம் வரும் மனைவியை கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.
காட்டிக்கொள்ள தனது வளர்ப்பும் சரி, அதன் பின்னாக வாழ்ந்துகாட்டவேண்டும் என்ற சவாலை செயல்படுத்துவதிலும் சரி அவரால் அன்புக்கரசியிடம் அனுசரணையாக நடந்துகொள்ள முடியவில்லை. அது அவருக்கு தெரியவில்லை என்றும் சொல்லலாம்.
தந்தையின் இறப்பின் பின்னர் தான் மளிகைகடையின் பொறுப்பு அவரிடம் வந்து சேர்ந்தது. அதையே வேதமாக எண்ணி தன் மகன்களும் அவ்வாறு இருக்க நினைத்தவருக்கு காலமாற்றத்தின் வேகம் புரியவில்லை.
“நெசமாத்தான் சொல்லுறீங்களா…” என அவரை நெருங்கி ஆவலுடன் கேட்டவரின் கன்னத்தை கிள்ளவேண்டும் என்று ஆசை கிளர்ந்தெழ செய்ய முடியாமல் தயக்கம் சூழ தூக்கிய கையை கீழே போட போனவர் பின் லேசாய் தட்டிவிட்டு,
“கிளம்புத்தா…”என்று சிரித்தபடி சொல்லி வாசலுக்கு செல்ல அன்புக்கரசி சிலை தான்.
“ஆத்தீ தண்ணி குடுக்க விமலா கூட இல்லையே. நெசத்துக்கே எனக்கு இப்ப படபடன்னு வருதே…” என முத்துவேல் தட்டிய கன்னத்தை பிடித்தபடி தலைசுற்றி போய் நின்றார்.
“இன்னும் கிளம்பலையா அன்பு…” என வாசலில் இருந்தே முத்துவேல் சத்தம் தர,
“இதோ வந்துட்டேன்…” என்று அவரை நோக்கி ஓடத்தான் ஆசை அன்புக்கரசிக்கும்.
“இப்ப கிளம்பிடுறேன்…” என பதவிசாக சொல்லி குதித்துக்கொண்டு உள்ளே ஓடினார். இருவருக்குமான உடைகளை எடுத்து வைத்துவிட்டு அங்கே என்னவெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என அத்தனையையும் மூட்டையாய் கட்டி வைத்துவிட்டார்.
உள்ளே வந்த முத்துவேல் இரண்டு மூட்டையையும் பேக்கையும் பார்த்தவர் மனைவியாய் ஒரு பார்வை பார்க்க திட்டிவிடுவாரோ என நினைத்து,
“இது இன்னைக்கு கொண்டு போகலாம்னு ஏற்கனவே வாங்கி வச்சது. மருதுக்கிட்ட குடுத்து அனுப்பனும்னு இருந்தேன். மறந்துட்டேன். அதான் நாம கொண்டு போகலாம்னு…” என சொல்லவும்,
“கார் வந்துருச்சு. போய் ஏறு…”
“மருது எடுத்துட்டு போய்ட்டானே?…”
“கூட கூட பேசுவியா நீ? கடையை திறந்துட்டு நம்ம கணக்குக்கிட்ட காருக்கு சொல்லிட்டு தான் வந்தேன். பொறப்படு…” என சொல்லி கிளம்ப அதிகப்படியான பூரிப்பையும், சந்தோஷத்தையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க அன்புக்கரசி படாதபாடுபட்டார்.
அதிலும் முத்துவேல் கன்னத்தை தயக்கமாய் தட்டி சென்றது வேறு னியாநித்து நினைத்து சிரிப்பு வர அடக்குவதற்கு அத்தனை சிரமம்.
“கிழவனுக்கு நினைப்பு தான்” என உள்ளுக்குள் பொங்கிக்கொண்டிருந்தார் சந்தோஷத்தில்.
“கொஞ்சம் நல்லாத்தான் பல்லை காட்டி சிரியேன். நானும் பாக்கத்தான. எதுக்கு இம்புட்டு கஷ்டப்பட்டு அடக்கிட்டு வர…” என்று கேட்டுவிட திருதிருவென அவர் முழித்த முழியில் முத்துவேலுவுக்கே சிரிப்பு வந்தது.
விடியற்காலை வந்திறங்கிய மாமனாரையும், மாமியாரையும் கண்டு ஆச்சர்யமாய் உள்ளே வரவேற்ற அபூர்வா,
“உட்காருங்க மாமா…” என சொல்லி வேகமாய் அப்போது தான் போட்டிருந்த டீயை கொண்டு வந்து அவருக்கு நீட்டினாள்.
“எங்க பெரியவனை காணும்?….” என அன்புக்கரசி கேட்க,
“இப்பதான் கீழே புது வீட்டுக்கு போனாங்க அத்தை. வந்திருவாங்க…” என சொல்ல,
“வாசுவை எங்க? தூங்கறானா?…” என கேட்க,
“இல்லை, ராத்திரி ரெண்டு மணிக்கு ஒரு போன் வந்திருக்குன்னு கிளம்பி போனாங்க. எப்ப வருவாங்கன்னு தெரியலை…” என அவருக்கும் டீயை ஊற்றி கொடுத்தவள் விமலாவிற்கு அழைத்து சொல்ல அவர்களும் வந்துவிட்டனர்.
பின் மதியம் போல அபூர்வாவின் குடும்பமும் வந்துவிட வீடே விசேஷ வீட்டிற்கான களையை சட்டென சுமந்துகொண்டது.
அன்றைக்கு விடிய விடிய உறக்கம் என்பதே இல்லை. முத்துவேல் மட்டும் உறங்கிபோனார். அதிகாலையே நல்ல நேரம் என்பதால் யாரும் தூங்கவில்லை.
வாசுவும் நள்ளிரவு தான் வந்து சேர்ந்தான். உடனே குளித்து கிளம்பி பூஜைக்கு ஐயர் வந்துவிட நேரம் ஆக ஆக முத்துவேலுக்கு மனதெல்லாம் தங்கையிடம். முதல்நாள் இரவே ராணி அழைத்துவிட்டார்.
வந்ததில் இருந்து அவருமே நன்றாக தான் பேசிக்கொண்டு இருந்தார். தங்கை போன் வரும் வரை. வந்த பின்னர் ராணி அவரிடத்தில் ஒருபாடு வருத்தத்துடன் அழுகையுடன் பேச பேச அன்புக்கரசி பேசியதெல்லாம் பின்னால் சென்றாலும் இனி இதில் தான் எதுவும் செய்ய போவதில்லை என்ற முடிவுடன் அவருக்கு ஆறுதல் சொல்லி போனை வைத்துவிட்டார்.
இதோ ஹோமம் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மகனும் மருமகளும் மாலையுடன் அமர்ந்திருக்க அவர்களை கவனிக்க ஆரம்பித்தார் முத்துவேல்.
மகிழ்தினியை தவிர அத்தனை பேரும் அங்கே தான் இருந்தனர். பிள்ளை உண்டாகியிருக்கும் நேரம் இங்கே இந்த புகையில் வேண்டாம் என பூங்கோதை சொல்லிவிட மேலே சென்று இருந்துகொண்டாள் அவள்.
நேரம் செல்ல செல்ல புகையில் அபூர்வாவிற்கு மூச்சு திணறியது. அமர முடியாமல் நெளிந்தவள் முகம் வியர்க்க ஆரம்பிக்க படபடப்பாய் வர லேசாய் வாசுதேவகிருஷ்ணன் மீதே சாய்ந்துவிட்டாள்.
அவள் தன் மீது விழவும் தான் அவளை கவனித்தான் வாசுதேவகிருஷ்ணன். பதறி மடியில் சாய்த்து அணைத்தவன்,
“பூர்வி, பூர்வி என்னாச்சு? இங்க பாரும்மா. பூர்வி…” என அவளை தட்டி எழுப்ப முயன்று கண்விழித்து பார்த்தவளின் மனக்கண்ணில் அலையலையாய் சில நினைவுகள்.
அந்த குரல். அவளுக்குள் அவனின் பதட்டமும் தவிப்பும் அட்சுரம் பிசகாமல் மடிந்துவிட்டிருந்த ஞாபக நரம்புகளை சுண்டியிழுக்க யோசிக்க ஆரம்பித்தாள்.