நிஜம் – 29
“லட்சுமி மாப்பிள்ளை…” என வெளியே தனியே வந்த தங்கையை பார்த்து தினேஷ் கேட்க,
“அவர் முக்கியமான போன் கால்ல இருக்கார். நாம கிளம்புவோம்…” என படபடப்பாய் சொல்ல அவளின் முகமே சரியில்லாததை போன்று தோன்றியது.
“என்னம்மா?…” என அண்ணன் வாஞ்சையாக கேட்டதும் உடனே முகத்தை சிரித்தபடி வைத்தவள்,
“ஒண்ணுமில்லைன்னா, திடீர்ன்னு கிளம்பவும் இன்னும் அத்தை மாமாக்கிட்ட கூட சொல்லலை…”
“அவ்வளோ தானே? போறப்போ பேசிக்கலாம்…” என்றவன் மீண்டும் கதவை பார்க்க,
“போகலாமா வேண்டாமா?…” என அபூர்வா கேட்கவும் திரும்ப போனவன்,
“இதோ மாப்பிள்ளையே வந்துட்டாரே…” என்று சிரித்தபடி சொல்ல,
“இவரை யார் இப்ப வர சொன்னா?…” என முணுமுணுத்து கோபத்துடன் இருந்தவள் மறந்தும் வாசுதேவகிருஷ்ணன் நிமிர்ந்து பார்க்கவில்லை.
“கிளம்பறோம் மாப்பிள்ளை. முடிஞ்சளவுக்கு வர முயற்சி பண்ணுங்க…” என தினேஷ் நடந்துகொண்டே சொல்ல அபூர்வா தனக்கும் அந்த பேச்சுக்கும் சம்பந்தமே இல்லாததை போல முன்னே நடக்க ஆரம்பித்தாள்.
தினேஷ் அறியாமல் அவளின் கையை பிடித்து தன்னுடன் சேர்த்து நிறுத்தியவன் உடன் நடக்க வாய் மட்டும் மச்சானிடம் பேசிக்கொண்டே தான் இருந்தது.
காரில் ஏறும் வரை பிடித்த கையை அவன் விடவே இல்லை. ட்ராலியை வாங்கி தினேஷ் பின்னால் வைக்க அதற்குள் அபூர்வா அவனின் கையை உதறிவிட்டு காரில் ஏறி அமர்ந்திருந்தாள். அவள் பக்கம் வந்தவன் ஜன்னலின் புறம் குனிந்து,
“நீ இப்படி எல்லாம் குடுப்பன்னு தெரிஞ்சிருந்தா அடிக்கடி உன்னை ஊருக்கு அனுப்பலாம் போல…” என்று விஷமமாய் அவன் சொல்ல முறைக்க கூட முடியாமல் மறுபுறத்தில் பார்வையை பதித்துக்கொண்டவளின் கைகள் படபடவென நடுங்கியது. அவளின் கையை பிடித்து லேசாய் அழுத்தி கொடுத்தவன்,
“டேக்கேர் கண்மணி…” என சொல்லவும் அவனின் குரலில் அவனை நிமிர்ந்து பார்க்க கார் நகர்ந்தது.
சில நொடிகள் தான் அவன் நின்றதும். கார் கண்ணை விட்டு மறைந்ததும் தனக்கு காத்திருந்த ஜீப்பில் ஏறியவன் முகம் கடுகடுவென மாற கோபத்தை குறைக்க தொடையில் தட்டியபடி அமர்ந்திருந்தான்.
ட்ரைவரின் முகமோ அச்சத்துடன் இருக்க அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன். அந்த கட்டிடத்தின் முன் இறங்கியவன் விடுவிடுவென உள்ளே செல்ல இவனை பார்த்ததும் துரை வேகமாய் வந்தான்.
“என்ன துரை பையன் வாயை திறந்தானா?…” என கேட்க,
“இல்லை ஸார், நான் ஒன்னும் பண்ணலைன்னு சாதிக்கிறான்…” என சொல்லவும் அங்கிருந்த மேஜையின் மேல் அமர்ந்தவன்,
“எங்க கூட்டிட்டு வாங்க. என்ன சொல்றான்னு பார்ப்போம்…” என சொல்லவும் ஒருவனை இழுத்து வந்தனர். நடக்க முடியாமல் நடந்து வந்தவனின் உடல் மொத்தமும் ஊமை அடிகள் தான. ஒரு காயமும் இல்லை. ஆனால் வலி உயிர் போனது அடி வாங்கியவனுக்கு.
“ஸார்…” என்ற துரையின் அழைப்பில் திரும்பியவன்,
“அடடே நம்ம கோவாலு…” என கை நீட்டியவனின் அருகே அவன் வந்து நின்றதும் அவனின் உச்சி முடியை பிடித்த வாசுதேவகிருஷ்ணன் பல்லை கடித்தபடி,
“கோவாலு என்னமோ வாயைவே திறக்கமாட்டேன்னு சொன்னியாமே? என்னது இதெல்லாம் கோவாலு?. கேட்டா கேட்டதுக்கு நல்ல புள்ளையா பதில் சொல்லனும் கோவாலு…” என அடக்கப்பட்ட கோபத்துடன் அவனின் தலை முடியை மாவாட்டுவது போல சுற்ற உச்சியில் சுரீரென்றது அவனுக்கு.
“ஸார், வலிக்குது ஸார். ரொம்ப வலிக்குது. என் பேர் பிரவீன். கோவாலு இல்லை…” என சொல்லி அழ அதை கண்டுகொள்ளாமல்,
“உனக்கு நான் உன்னை தொடும் போதெல்லாம் என்ன சொல்லனும்னு சொல்லியிருக்கேன் கோவாலு?…” என இப்பொழுது முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே கையின் அழுத்தத்தை கூட்ட,
“ஸ்ஸ், ஆஆஆ, ஸார் இன்பமாய் இருக்கிறதைய்யா, இன்பமாய் இருக்கிறதைய்யா…” என அழுதுகொண்டே பிரவீன் சொல்ல,
“பார்த்தா அப்படி தெரியலையே? எனக்கு அழுதா சுத்தமா பிடிக்காது. எங்க நல்லா சிரிச்சுட்டே சொல்லு. அட சொல்லு கோவாலு…” என இன்னும் முடியை இழுக்க விட்டால் கையுடன் வந்துவிடும் அளவில் இருந்தது வாசுதேவகிருஷ்ணன் பிடி.
“இப்படித்தானடா இருக்கும் மத்தவங்களுக்கும். மவனே நீ செத்த…” என்று ஓங்கி ஒரு உதை உதைக்க தூரமாய் போய் விழுந்தான் பிரவீன்.
“துரை ப்ளான் பக்கா தானே?…” என கேட்க,
“எல்லாமே நீங்க சொன்ன படி பக்கா தான். செம்ம பக்கா…” என துரையும் சொல்ல கோபத்துடன் அவனை பார்த்தவன்,
“இவன் எந்த ஓட்டை வழியாவும் வெளில வரவே கூடாது. அதோட இவன்கிட்ட இருக்கிற எந்த வீடியோஸ், போட்டோஸ் ஒன்னு கூட நம்ம டிபார்மென்ட்க்கோ, இல்லை மீடியாவுக்கோ வேற யாருக்கோ போகவே கூடாது. புரியுதா?…” என்று சொல்ல,
“ஸார் எங்கப்பா…”
“ஒங்கப்பனையும் சேர்த்து உள்ள இழுக்கறேன்டா. வாயை திறந்த பேச வாய் இருக்காது ஜாக்கிரதை. வாய்க்குள்ள பட்டாசை வச்சு கொளுத்திவிட்டுட்டு சூஸைட் அட்டம்ப்ட்ன்னு கேஸை முடிச்சிருவேன். வெந்து போன வாயோட தான் சுத்தனும் ஜெயிலுக்குள்ள. எப்படி கவனமா கேளு. அப்பவும் ஜெயிலுக்குள்ளதான் கோவாலு உனக்கு வாழ்க்கை…” என சொல்ல பீதியுடன் அவனை பார்த்தான் பிரவீன்.
“நீ என்ன நினைச்சுட்டு இருக்க? இந்த கேஸ்ல உன்னை உள்ள தள்ள போறேன்னா? என்னை என்ன அவ்வளோ லேசா நினைச்சியா? அடேய் என்கிட்டே சிக்கி எவனும் தப்பிக்க முடியாது. அது எவனா இருந்தாலும்…” என்றவனின் கண்ணில் தெரிந்த வெறியில் கிடுகிடுவென நடுங்கி போனான் பிரவீன்.
“உன்னை மாதிரி ஆளுங்களை இந்த வீடியோஸ் வச்சு எல்லாம் சிக்க வைக்க முடியாது. உன் பணத்தால கூட வெளில வரமுடியாத கேஸ் எல்லாம் எதுக்கு இருக்குன்ற. இருக்கற ஆதாரத்தை அழிக்க ஏகப்பட்ட மூளைன்னா அதே ஆதாரத்தை உருவாக்க என்னால முடியுமே…”
“கண்டுபிடிக்கத்தான்டா கஷ்டப்படனும். க்ரியேட் பண்ண அத்தனை கஷ்டம் தேவையே இல்லை. உங்கப்பன உடுத்தின துணியோட ஊரை பார்த்து ஓடவிடலை. ஓட வைக்கறேன். பணத்தை வச்சுத்தான படம் காமிச்சீங்க அப்பனும். மவனும். சேர்த்து அடிக்கிறேன் ஆப்பு. கைல பத்து பைசா இல்லாம பிச்சை எடுக்க வைக்கறேன்டா…”
“புரியலையா? க்ரியேட் பன்றது ஈஸின்னு சொல்றேன். உனக்கு தெரியாததா கோவாலு? பொண்ணுங்கட்ட நீ அப்பாவின்னு காட்ட எத்தனை கிரியேட் பண்ணிருப்ப. அதே மாதிரி மாட்டிக்கிட்டப்ப வெளில வரதுக்கு எத்தனை யோசிச்சிருப்ப. அதான் நீ பாவின்னு காமிக்க நானும் பண்ணிருக்கேன். சோ ஜாலியா போயி கம்பி எண்ணு…” என்றவன்,
“துரை, கிளம்பறேன். அடிச்ச தடம் ஒன்னும் தெரிய கூடாது. அங்க வச்சு அடிச்சேன்னு அவன் சொல்ல சொல்ல இவன் மேல நாம போட்டிருக்கற ஒவ்வொரு கேஸையும் ஸ்ட்ராங் பண்ணனும். ஒருத்தனும் இவனுக்கு ஆஜராக கூடாது. இவன் பேரை கேட்டாலே ஒவ்வொரு வக்கீலும் தெறிச்சு ஓடனும். காட் இட்…” என்றவன் இன்னும் சில உத்தரவுகளை பிறப்பிக்க பிரவீனுக்கு தலை சுற்றியது.
இந்த ஜென்மத்தில் இவன் நம்மை விடமாட்டானோ என்னும் பயத்தில் அவனின் காலை பிடித்துவிட்டான்.
“ஸார், என்னை மன்னிச்சிருங்க. இனி எந்த தப்புமே செய்ய மாட்டேன். சத்தியமா எந்த பொண்ணையும் தப்பா பார்க்க மாட்டேன். ஸார் நம்புங்க ஸார். என்னை விட்டுடுங்க. நான் இந்த கேஸ்லையே உண்மையை ஒப்புக்கறேன். நான் பண்ணின எல்லா தப்பையும் சொல்லி சரணடைஞ்சிடறேன். ப்ளீஸ் ஸார்…” என்று அவன் கெஞ்ச கெஞ்ச அவனை இரக்கமின்றி பார்த்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“துரை, இவனை பார்த்துக்கோங்க. இன்னைக்கு கோர்ட்ல ஆஜர் படுத்தனும். இங்க இருந்து நேரா கோர்ட் தான். என்னமோ சொல்றேன்னு சொன்னானே? சொல்லலைன்னா நம்மோட எவிடன்சை கொடுக்கனும். இவனுக்கு வாய்ல என்னத்தையாச்சும் ஊத்தி கூட்டிட்டு வாங்க. சாப்பாட்டு குடுக்க கூடாது…” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான்.
அன்றைக்கே அவனின் அத்தனை வழக்குகளையும் தோண்டி எடுத்து நீதிமன்றத்தில் நிரூபித்து அவனின் ஒப்புதல் வாக்குமூலத்தின் படி அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுத்த பின்னர் தான் நிம்மதியானான் வாசுதேவகிருஷ்ணன்.
மனைவியின் மூலம் உண்மை தெரிந்த பின்னரும் அவனால் கையை கட்டிக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை.
செயலில் இறங்கியவன் பிரவீனை முதலில் தூக்கினான். எங்கிருக்கிறான் என்பதே தெரியாத இடத்தில் வைத்து விஷயங்களை அவன் பாணியில் வாங்கியவன் அடுத்து அவனின் அப்பாவை செயல்படாமல் இருக்க ஆவன செய்த பின்னர் தான் கோர்ட்டில் ஒப்படைக்கும் முடிவிற்கு வந்தான்.
இவை எல்லாம் முடிந்து இதோ ஆசுவாசமாக வீட்டில் அமர்ந்து இருந்தவனின் ஒவ்வொரு அணுவும் மனைவியை தேடியது. அவளின் அருகாமைக்காக தவித்தவனுக்குமே அந்த பிரிவு அவசியம் என்று தோன்றியது.
இப்படியாக அனுப்பவில்லை என்றால் அவளும் அங்கு சென்று இருக்கமாட்டாள். இங்கிருந்து தேவையில்லாமல் பிரச்சனை வேறு.
புரியாமல் பேசும் அவளை நினைக்க நினைக்க அப்பொழுதே கிளம்பிவிட்டால் என்னவென்று தான் தோன்றியது. ஆனால் அப்படி செய்யவிடாமல் வேலைகள் அவனை இழுத்துக்கொள்ள அடுத்த ஐந்து நாட்களும் அவனை நகரவிடவில்லை.
அவளிடம் போனில் கூட பேச முடியாத அளவிற்கு வேலை பளு இருக்க வெள்ளிக்கிழமை அன்று மாலை தான் அவனின் எண்ணிற்கு அழைத்தாள் அபூர்வா.
முக்கியமான விசாரணையில் இருந்தவன் போனை சைலண்டில் போட்டிருக்க அழைப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது.
வெகு நேரம் கழித்தே மொபைலை எடுத்து பார்த்தவன் அழைப்பு வந்துகொண்டே இருந்தது. மனைவி தானாகவே அழைத்திருக்க உதட்டில் குறுநகை தவழ ஆர்வமாய் எடுத்தவன்,
“எப்படி இருக்க பூர்வி?…” என்றான் அக்கறையாய்.
அவனின் குரலை கேட்டதுமே அடங்கியிருந்த ஆசை எல்லாம் ஆவலாய் ஆர்ப்பரிக்க,
“எப்போ வருவீங்க? எனக்கு உங்களை பார்க்கனும். உடனே உங்களை பார்க்கனும்…” என்றாள் சிறு விசும்பலுடன்.
கண்ணை மூடிக்கொண்டு அவளின் தவிப்பை உள்வாங்கி தனக்குள் கிரகித்துக்கொண்டவன்,
“புரிஞ்சுக்கோ பூர்வி…” என சொல்லும் பொழுதே போனை கட் செய்திருந்தாள். மீண்டும் இவன் அழைக்க அவள் எடுக்கவே இல்லை.
ஒரு பெருமூச்சுடன் மனதை ஒருநிலைப்படுத்தியவன் கடமையின் புறம் கண்ணை திருப்பினான்.
பிரவீனின் தந்தை வேறு சிறு சிறு குடைசல் கொடுத்துக்கொண்டு இருக்க அதை எல்லாம் அசால்ட்டாய் சமாளித்தபடி இருந்தவனுக்கு அபூர்வாவின் எதிர்பார்ப்பும் தவிப்பும் அலைகடலில் அமிழ்த்துவதை போல மூச்சுக்கு திணறினான்.
“பூர்வி ஏன்டி இப்படி பன்ற?” என தலையை அழுத்தமாய் கோதியவனின் மனது அவளுக்காக அலைமோதியது.
மறுநாள் இரவு நேரமே வீட்டிற்கு வந்ததும் தானே அவளுக்கு அழைத்தான். ஐந்து முறை விடாமல் இவனும் அழைத்தான்.
“இன்னைக்கு உன்னை ஒரு கை பார்க்கறேன்டி…” என போனில் தெரிந்த அவளின் புகைப்படத்தில் சூளுரைத்தவனாக சொல்ல அபூர்வா எடுத்தாள்.
இவன் பேசுவான் என அவள் அமைதியாய் இருக்க, அவள் பேசட்டும் என இவனும் அமைதியாய் இருக்க இருவருமே பின் ஒரே நேரத்தில்,
“ஹலோ…” என்றனர். பின் அபூர்வாவே,
சொல்லுங்க….” என கேட்டதும் தன்னை இத்தனை தூரம் இழுத்தடித்ததற்காக அமைதியாய் இருக்க,
“சொல்ல ஒண்ணுமில்லைன்னா வைங்க…” என போனை கட் செய்த பின்னர் தான் அவன் உண்டானா, இல்லையா என கேட்கவில்லையே என தன்னையே திட்டிக்கொண்டு மீண்டும் போனை எடுத்து அவனுக்கு மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தாள்.
“சாப்ட்டாச்சா?…” என அனுப்ப இதை எதிர்பார்த்திருந்ததை போல அவனும்,
“ஓ எஸ், திவ்யமா சாப்ட்டேன்…” என்று சொல்லி ஒரு ஸ்மைலியை பார்சல் அனுப்ப அதை பார்த்தவள் கடுப்பானாள்.
“ரொம்ப நிம்மதியா இருக்கீங்க போல?…” என அவள் கேள்வி வந்து விழ அதன் வேகத்தில் அவளின் கோபத்தை உணர்ந்தவன் மேலும் விசிறிவிடுவதை போல,
“இல்லைன்னு சொல்லவே மாட்டேன். ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். இதுல உனக்கு என்ன டவுட்?…” என்று டான்ஸ் ஆடும் அனிமேஷன் க்ளிப்பிங்கை அனுப்ப அதை பார்த்தவள் எரிமலையானாள்.
“கொழுப்பு கொழுப்பு அத்தனையும் கொழுப்பு” என்று வாய் நிறைய வசைபாடியபடி,
“நானும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்களை நினைக்கவே இல்லை…” என சொல்ல,
“இதுக்கு தான்டி வெய்ட்டிங்” என நினைத்தவன்,
“உங்கட்ட அதை நான் கேட்கவே இல்லையே பூர்வி. என்னை நினைச்சீங்களா இல்லையான்னு?…” என்று அடக்கமாட்டாமல் உருண்டு புரண்டு சிரிக்கும் ஸ்மைலியை அனுப்ப மாட்டிக்கொண்ட விதமாய் விழித்தவள்,
“நான் பொதுவா சொன்னேன். அடுத்து நீங்க கேட்பீங்கன்னு…” என்று சமாளிக்க,
“யக்கா ரீல் அந்து போச்சு…” என்றவன் உடனே வீடியோ காலுக்கு வரவும் அவள் எடுக்கவே இல்லை. பார்த்தபடி இருக்க,
“மரியாதையா அட்டன் பண்ணுடி. இல்ல உங்கம்மாவுக்கு கால் பண்ணி நீ என்னை வேண்டாம்னு சொல்றன்னு சொல்லுவேன்…” என்றான் மிரட்டலாய்.
அதை பார்த்தவளுக்கு அவன் மீதான கோபம் இன்னும் கூடியது. ஆனால் அவன் முகத்தை பார்த்துவிட்டால் எங்கே தன்னை கூட்டி செல் என்று தன்னையே சொல்ல வைத்துவிடுவானோ என நினைத்து இருக்க மீண்டும் அழைப்பு.
அட்டன் செய்ததும் அவனின் முகத்தை பார்க்காது வேறு புறம் பார்க்க அவளின் முயற்சி புரிந்தவன் புன்னகை மீசைக்கடியில் திருடனென ஒளிந்துகொண்டது.
“யக்கா…” என்று அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் அழைக்கவும் கோபமாய் திரும்பி அவனை திட்ட போக சொல்லியதற்கு சம்பந்தமே இல்லாத பார்வையுடன் அவளை ஊடுருவினான்.
ஒரு நொடி அவனின் பார்வை வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விழிகளை தாழ்த்தியவள்,
“ப்ச், இப்ப எதுக்கு கால் பண்ணுனீங்க?…” என்றாள் எரிச்சல் குரலில்.
முகமும், குரலுமே அவள் இன்னும் சாப்பிடவில்லை என்பதை காட்டிக்கொடுக்க சோர்வுடன் லேசாய் தலை சாய்ந்து இருந்தவளை பார்த்தவன் போனை கட் செய்துவிட்டான்.
“இவன் நினைச்சா பேசுவான். நினைச்சா கட் பண்ணுவான். வச்ச ஆளா நான். போடா அட்டன் பண்ணமாட்டேன் இனி…” என்று கடுப்புடன் லேசாய் கண்களும் கலங்கிவிட அடுத்த ஐந்து நிமிடத்தில் அறையின் கதவு தட்டப்பட்டது.
“லட்சுமி, கதவை திற…” என மகிழ் அழைக்க திறந்தவள் அவளின் கையில் இருக்கும் தட்டை பார்த்தத்தும் புரிந்துபோனது அவனின் வேலை என்று.
“இந்தா அப்பவே சாப்பிடுன்னு சொன்னா கேட்டியா நீ? சொல்ற ஆளு சொல்லனும். இல்ல?…” என்று இடக்காய் சொல்லிவிட்டு,
“சாப்பிட்டு கதவுக்கு வெளில தட்டை வை. நான் அந்த ரூம்க்கு போறேன். திரும்பி வரப்போ எடுத்துக்கறேன்…” என சொல்லிவிட்டு சென்றதும் மீண்டும் கதவை பூட்டிவிட்டு வந்து அமர வாசுதேவகிருஷ்ணன் அழைத்துவிட்டான். அபூர்வா எடுத்ததும்,
“சும்மாவே இருக்க மாட்டீங்களா? எனக்கு பசிச்சா சாப்பிட போறேன். ஏன் பிரச்சனை பன்றீங்க? அண்ணி என்ன நினைப்பாங்க?…” என்று அவனிடம் பொரிய,
“நான் லைன்ல தான் இருப்பேன். என் முன்னால நீ சாப்பிடு. இல்லைன்னா உங்கம்மாவுக்கு கால் பண்ணி என் பொண்டாட்டியை பட்டினி போடறீங்களான்னு சண்டை போட்டு கேட்பேன்…” என்று மீண்டும் மிரட்ட அழுதுவிடுவதை போல பார்த்தவள்,
“மிரட்டி மிரட்டி எல்லாத்தையும் சாதிக்கனும்னு பார்க்கறீங்க…” என்றாள் குற்றம் சாட்டுவதை போல உடனே அவன் அழைப்பை துண்டிக்க எங்கே தாய்க்கு அழைத்துவிடுவானோ என்று பயந்து அபூர்வாவே அவனுக்கு அடுத்த நொடி அழைத்துவிட்டாள்.
அவனின் முகம் அதில் தெரியவும் கோபத்துடன் அவனை முறைத்தவள் வேறு வழியின்றி தட்டை கையில் எடுத்து,
“சாப்பிடறேன், போதுமா?…” என கேட்டு வேகம் வேகமாய் சாப்பிட பசியும் அழுகையும் போட்டி போட்டது அவளிடத்தில்.
அவள் சாப்பிடுவதையே அசையாமல் பேசாமல் பார்த்தபடி அவன் இருக்க உண்டு முடித்து தண்ணீர் குடித்ததும் அவனை பார்த்து எதுவோ சொல்ல போக அதற்குள்,
“குட்நைட் பூர்வி…” என மிதமான புன்னகையுடன் சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டான்.
அந்த பேச்சுக்களே அவளை அமைதியுற செய்ய நிம்மதியுடன் படுத்து உறங்கினாள். விடிந்தால் வளைகாப்பு வேலைகள் இருக்கும் பட்சத்தில் தாய் தன்னை எழுப்ப போவதில்லை என நினைத்தபடி நாளை வருபவர்களுக்கு என்ன சொல்ல என்னும் யோசனையுடன் உறங்கி போனாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் வயிற்றுக்குள் எதுவோ குறுகுறுக்க மெல்ல கண்களை திறந்தவள் திடுக்கிட்டு பார்க்க அவன் தான். அவனே தான். வாசுதேவகிருஷ்ணன் மாயக்கண்ணனாய் மனதை அள்ளும் புன்னகையுடன்.
“தொப்பை போட்டுடுச்சு போல?…” என்றவனின் கை அவளை வருட நம்பமுடியாமல் அவன் புறம் திரும்பி படுத்தவள்,
“நிஜமாவே வந்துட்டீங்களா?…” என்றாள் கண்களை விரித்து.
“பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு இவ்வளோ தொப்பை இல்லையே? இங்க வந்து நல்லா சாப்ட்டு சாப்ட்டு குண்டாகிட்டடி…” என்று அவள் கேட்டதே காதில் விழாதது போல மீண்டும் இதை வேறு சொல்ல முறைத்தாள் அவனை.
“உன்னை பார்த்துட்டு எப்படி வராம இருப்பேன் கண்மணி…” என்று அவளை அணைத்துகொண்டவனின் அணைப்பின் இறுக்கத்தில் அத்தனை நாள் கவலை மறந்துபோக அவனை அவளும் இறுக்கிக்கொண்டாள்.
“நான் உங்க மேல ரொம்ப கோபம், தெரியுமா?…” என்றவளின் வார்த்தைகளுக்கு எதிர்பதம் அவனிடம் வேறுவிதமாக வார்த்தைகளின்றி பிரதிபலிக்க காத்திருப்புகள் அவளுக்கு மட்டுமில்லை அவனுக்குமே என்பதை உணர்த்தினான் வாசுதேவகிருஷ்ணன்.
இருவருக்குமான மௌனயுத்தம் முடிந்து நிமிடங்கள் கரைய இருவரும் தங்களின் துணையின் அருகாமையை சுவாசத்தில் ஏற்றியிருக்க,