நிஜம் – 30
“கைல லேசா அடி அவ்வளோ தான். நீங்க நினைக்கிற மாதிரி பெருசா எதுவுமே இல்லை…” என்றதும் வாசுதேவகிருஷ்ணன் மனமோ சமாதானம் ஆகவே இல்லை.
“எதுக்கும் ஸ்கேன் எடுத்து பார்த்திடலாமே. கைல வீக்கம் இருக்கற மாதிரி இருக்கே…”
“நத்திங் ஸார். நான் குடுத்த ஆயின்மென்ட் அப்ளே பண்ணுங்க. ரெண்டு நாள்ல வீக்கம் வைத்திடும். அப்பவும் இல்லைன்னா ஸ்கேன் எடுத்துக்கலாம்…” என டாக்டர் சொல்லிவிட்டு அவனை புன்னகையுடன் ஏறிட்டவர்,
“இன்னொரு முக்கியமான விஷயம். இனிமே இந்த மாதிரி அட்வெஞ்சர் எல்லாம் அவாய்ட் பண்ணிடுங்க. அவங்களுக்கு இப்போ நிறைய ரெஸ்ட் தேவை…” என்று சொல்லும் பொழுதே ஓரளவு யூகித்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
“ரியல்லி…” என சந்தோஷத்துடன் கேட்க,
“நான் இன்னும் சொல்லியே முடிக்கலையே ஸார்…” என டாக்டரும் சிரிக்க,
“எல்லாம் கெஸ்ஸிங் தான்…” என்றான் மலர்ச்சி பொங்க.
“எஸ், ரைட் கெஸ்ஸிங். உங்க மிசஸ் அம்மா ஆக போறாங்க…” என சொல்லி அவனுக்கு கை நீட்டவும் குலுக்கிக்கொண்டவன்,
“நாங்க கிளம்பலாம் தானே?…” என்று எழுந்து கொண்டான்.
“யா சூர். தாராளமா கிளம்பலாம்…” என்று சொல்லி விடைகொடுக்கவும் அபூர்வாவை ஓய்வெடுக்க வைத்திருந்த அறைக்குள் நுழைந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“ஹேய் கண்மணி…” என உள்ளே நுழைந்தவன் அவளின் முகமெங்கும் முத்திரை பதித்து,
“கை வலி இப்போ எப்படி இருக்கும்மா?…” என கேட்க மீண்டும் மீண்டும் அவனின் கண்களுக்குள் ஆழ்ந்தாள் அபூர்வா.
“என்னவாம்? என் கண்ணுக்குள்ள உன்னை தேடறியா பூர்வி?…” என்றான் வழக்கம் போல.
அவன் சொல்ல சொல்ல பேசும் பொழுது கண்ணை ஒரு நொடி மூடி அடிமனதினுள் எதையோ துழாவினாள். நூல் சிக்கிய உணர்வு. கண்களை திறந்தவள்,
“வீட்டுக்கு போகனும். எனக்கு இங்க இருக்கவே மூச்சு முட்டுது…”
“போகலாம். போகலாம். உன்கிட்ட ஒன்னு கேட்கனுமே…” என சொல்லவும் எழுந்து அமர்ந்தவளை அப்படியே சாய்ந்து அமர வைக்க தலையணையை முதுகிற்கு கொடுத்தவன்,
“எனக்கு நீ கால் பண்ணின தானே? எதுவும் சொல்லனும்னு கூப்பிட்டியா?…” என்று கேட்க,
“ம்ஹூம், உங்கக்கிட்ட பேசனும்னு தோணுச்சு. அதான் கூப்ட்டேன்…” என சொல்ல,
“ஓஹ், வேற எதுவும் இல்லையா?…” என கேட்கும் பொழுதே வலது கையை அசைத்தவள் வலியில் முகம் சுருக்கினாள்.
“ரொம்ப வலிக்குதா?…” என அவளின் அருகே பெட்டில் அமர்ந்தவன்,
“உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லனும் பூர்வி…” என்றான் அவளின் கையை பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு.
“அதுக்கு முன்னாடி எனக்கு பதில் சொல்லுங்க. நீங்க எப்பவாவது தாடி வச்சிருக்கீங்களா? ஒரு நாலு வருஷம் முன்ன? திருப்பதிக்கு வந்திருந்தீங்களா? இல்லை திருப்பதில அந்த ரூட்ல எங்கையாச்சும் போய்ட்டு வந்தீங்களா?…” என்று கேட்டதும் என்னமாதிரி உணர்ந்தான் என்றே பிரித்தறியமுடியாத கலவையான உணர்வுகளின் பிடியில் சட்டென்று மாட்டிக்கொண்டான்.
அவளின் கையை விட்டுவிட்டு எழுந்து சுவற்றோடு ஒட்டி போட பட்டிருந்த அமரும் மெத்தையில் அமர்ந்தவன் மூச்சுக்காற்று கூட அத்தனை மெதுவாய் பயணித்தது அவனிடத்தில்.
அலைந்து திரிந்து ஆய்ந்து ஓய்ந்து போய் கூடு சேர்ந்த ஒரு ஆசுவாசம். இத்தனை நாள் இந்த ஒரு கேள்விக்காக இந்த ஒரு வார்த்தைக்காக தானே காத்திருந்தான்?
என்றோ அவள் அதை பற்றி பேசியிருந்தால் கூட அவன் சொல்லியிருப்பான் தான். அதற்கு இத்தனை நாட்களா? நினைத்தபடி சில நொடி கண்ணை மூடி அமர்ந்திருந்தவன்,
“இதை கேட்க உனக்கு இத்தனை மாசமா கண்மணி?…” என சொல்லவும் தன் சந்தேகம் சரிதான் என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
“அப்போ அங்க என்னை காப்பாத்தினது, ப்ளட் குடுத்தது? இது எல்லாம்…” என கேட்க புன்னகையோடு அப்படியே பார்த்திருந்தான்.
“சத்தியமா ஞாபகம் இல்லை எனக்கு. அன்னைக்கு நடந்தது எல்லாம் ஏதோ கனவு மாதிரி. சுத்தமா ஞாபகம் இல்லை. உங்க குரல் இந்த கண்மணி, எனக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்லிட்டே இருந்துச்சு. ஆனா புரியவே இல்லை. சட்டுன்னு நினைப்பு வரவே இல்லை…” என்றவள் இன்னும் நம்பமுடியாமல் கண்ணீரோடு அமர்ந்திருக்க,
“ப்ச், இப்ப எதுக்கு அழற? அதான் எல்லாம இப்ப நல்லபடியா முடிஞ்சதுல…” என தன் முகத்தை அழுத்தமாய் துடைத்தபடி சொல்ல,
“நீங்க என்னை விரும்பினீங்களா?…”என்றாள் மீண்டும் யோசனையாக.
அவள் கேட்டதில் வந்த சிரிப்பை வெடிக்க செய்தவன் முகத்தில் ஆயிரமாயிரம் வர்ண மத்தாப்பூக்கள்.
“சொல்லுங்க, ஆமா ஏன் என்னை கண்மணின்னு சொன்னீங்க?…” என்றாள் மீண்டும்.
“அதையும் நீ தான் சொல்லனும்…” என்றவன் நடந்தவற்றை விளக்க அவனின் காத்திருப்பும் காதலும் பெண்ணவளை நிலைகுலைய தான் செய்தது.
“எந்த நம்பிக்கையில் இவன் என்னை தேடியிருப்பான், எனக்காக காத்திருந்திருப்பான்?” நினைக்கவே சிலிர்த்தது அவளுக்கு.
கணவனானவனிடத்தில் நான்கு நாட்கள் பார்க்கவோ பேசவோ இல்லை என்னும் பொழுதுகளில் தன் தவிப்புகள் எந்தளவிற்கு தன்னை தாக்கியது.
நான்கு வருடங்கள், யார் எங்கே என்று கூட தெரியாத தன்னை நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறானே? நினைக்க நினைக்க பிரமிப்பு.
“என் கண்ணுக்குள்ள உன்னை தேடுறியா பூர்வி? எப்போ கண்டுபிடிப்ப?” என்ற அவனின் கேள்விக்கான பதில் இதோ கிடைத்துவிட்டது. நெஞ்சம் விம்மியது. அவன் சொல்லியதன் கனம் தாளமாட்டாத தவிப்பில் ஒரு நொடி அனைத்தையும் கண்மூடி கிரகித்துக்கொள்ள முயன்றாள்.
திரும்பி கணவனை பார்க்க அவனும் இவளின் உணர்வுகளை அவதானித்தபடி தான் கைகட்டி அமர்ந்திருந்தான்.
கட்டிலில் இருந்து கீழே வேகமாய் ஓடி வந்து அவனை அணைத்துக்கொள்ள அவள் வருவதை பார்த்து அந்த இருக்கையில் இருந்து எழுந்து அவளை நெருங்கும் முன் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்திருந்தது.
அபூர்வா விழுந்த வேகத்தில் அவளுடன் சேர்ந்தே இருக்கையில் சாய்ந்தவனை விட்டு விலகுவேனா என்பதை போல அணைத்திருந்தாள்.
“ஹேய் பூர்வி, என்ன இது?…” என தன்னிலிருந்து பிரித்தவன் அவளை நேராய் அதில் அமர்த்தி,
“இப்படிலாம் ஓடி வர கூடாது. குண்டக்கமண்டக்க மேல விழ கூடாது. கன்னாபின்னான்னு கட்டிபிடிக்க கூடாது…” என வரிசையாக அடுக்க,
“நான் எவ்வளோ சந்தோஷமா வந்தா இப்படி ரூல்ஸ் போடறீங்க…” என்றவளின் விழிகளில் கண்ணீர் மின்ன புன்னகையோடு அவனிடம் சொல்ல,
“சந்தோஷம் தான். உனக்கும் சரி, எனக்கும் சரி ரெட்டிப்பு சந்தோஷம்…” என்றவன் அவளின் வயிற்றில் கை வைத்து,
“குழந்தை பயந்துக்கும் இல்லையா அதுக்காக தான் சொல்றேன்…” என்று கண்சிமிட்டி சொல்ல அவனின் கை மேல் கை வைத்தவள் வயிற்றோடு அழுத்தி பிடிக்க கைகள் லேசாய் நடுங்கியது.
“நிஜமாவா?…” என்று கேட்டவளின் வார்த்தைகள் கூட தடுமாறியது.
“நிஜமாவே தான். இது கூட உனக்கு தெரியலை…” என்று அவளின் நெற்றியோடு முட்டியவன்,
“குட்டிக்குட்டியா கை காலோட சீக்கிரமே உன்னையும், என்னையும் மிரட்ட ஒரு குழந்தை வர போகுது…” என்று சிரித்தவனின் இதழ்களின் மினுங்கிய புன்னகையில் விம்மிய சந்தோஷ உணர்வுடன் அவனின் தோள் சாய்ந்தவள்,
“ப்ளீஸ், ப்ளீஸ். கொஞ்சம் நேரம் எதுவும் பேச வேண்டாம். எனக்கு அழுகையா வருது…” என சொல்லிக்கொண்டே தன் வயிற்றை வருட அவளின் தலையை கோதினான் வாசுதேவகிருஷ்ணன்.
அவனின் நான்கு வருட காதலில், வார்த்தைகளின்றிய, தான் தொலைத்த அந்த தொலையுணர்வில் அவனுடன் ஒருமித்து தொலைந்து போக ஏங்கினாள்.
“எமோஷனல் ஆகாத பூர்வி. ரிலாக்ஸ்…” என்று அவளை உணர்ச்சிகளின் பிடியிலிருந்து வெளிக்கொணர முயன்றான்.
“ஹ்ம்ம்….” என்னும் முனங்கலை தவிர அவளிடத்தில் பேச்சில்லை.
“வீட்டுக்கு கிளம்புவோம் பூர்வி. நேரமாகுதே. இன்னும் சாப்பிடவும் இல்லை…” என சொல்லவும் மெதுவாக எழுந்துகொண்டாள்.
வெளியே வந்து தங்களின் காரை பார்க்கவுமே முகத்தில் ஒரு பீதி படர்ந்தது அபூர்வாவிற்கு.
“ஏன் இப்படி ஆச்சு? வேணும்னே பண்ணாங்களா? யார் பண்ணாங்க?…” என கேட்க,
“அதை நினைச்சு நீ குழப்பிக்க கூடாது. நான் பார்த்துக்கறேன்…” என சமாதானம் சொல்லி காரில் அவளை அமரவைத்து கிளப்பியவன்,
“சாப்ட்டுட்டு போகலாமா?…” என கேட்க,
“உங்களுக்கு என்ன தோணுது…” என்றாள்.
அவனின் முகத்தில் இன்னொரு உணர்வும் அலைபாய அதை கண்டுகொண்டவள் அவனிடத்தில் கேட்க,
“அம்மாவை பார்க்கனும்னு தோணுது பூர்வி…” என்றான் ஆழ்ந்த குரலில். அவனின் மனம் அன்புக்கரசியை வெகுவாய் தேடியது.
“இதை அம்மாக்கிட்ட முதல்ல சொல்லனும். அவங்களை கட்டிப்பிடிச்சு அவங்க மடியில படுத்துக்கனும். நிறைய தோணுது. எனக்கு அம்மாவை பார்க்கனும். போகலாமா?….” என கேட்கவும் புன்னகையுடன் அவள் தலையசைக்க தலையில் கைவைத்து லேசாய் ஆட்டியவன்,
“குட் கேர்ள்…” என்றான் சிரித்தபடி.
“என்கிட்டே கேட்க எதுவுமே இல்லையா உங்களுக்கு?…” என்றவள் அவனின் பதிலற்ற சிரிப்பில் தானாகவே சொல்ல ஆரம்பித்தாள்.
“சென்னைல தான் இன்ஜினியரிங் படிக்க ஆரம்பிச்சேன். ரெண்டாவது வருஷம். அங்கயே ஹாஸ்டல்ல தங்கி தான் படிச்சேன். பிடிச்ச படிப்பு. பிடிச்ச காலேஜ்ன்னு. ப்ரெண்ட்ஸ்ன்னு. எங்க டிபார்மென்ட் ஸ்டாப்ஸ் கூட நாங்க அவ்வளோ க்ளோஸ். எங்க மேம்க்கு மேரேஜ். அதுக்கு தான் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் திருப்பதி போனோம்…”
“கல்யாணம் முடிஞ்சதும் அன்னைக்கே கிளம்பறோம்னு சொன்னதை கேட்கவே இல்லை எங்க மேம். இருந்துட்டு மறுநாள் கிளம்பலாம்னு சொன்னாங்க. அன்னைக்கு தான் அந்த ஆக்ஸிடன்ட். சென்னைக்கு திரும்பிட்டு இருக்கும் போதுதான்…”
“கண்மணி…” என்றான் கேள்வியாய் அப்போது.
“கண்மணி என் ப்ரெண்ட் மதுவோட தங்கச்சி. காது கேட்காது. பேச்சு கொஞ்சம் வரும். அங்க வந்ததுல இருந்து என்னோட ரொம்ப ஒட்டிக்கிட்டா. என் பக்கத்துல தான் இருந்தா நீங்க சொன்ன சம்பவத்தப்போ. அவளை தான் மது கூப்பிட்டு நான் பதில் சொன்னேன். அதை வச்சு என்னை நீங்க கண்மணின்னு நினைச்சு…”
“சோ வாட்? நீ எனக்கு கண்மணி தான். அதை சேஞ்ச் பண்ண பார்க்காதே. ஈனஃப்….” என்றான் அசால்ட்டாக. அதில் சிரித்தவள்,
“நீங்க என்னை கூப்பிடறப்போ இல்லைன்னு தான் சொல்ல வந்தேன். அது கூட சரியா ஞாபகம் இல்லை. அதை மறக்கத்தான் நினைச்சேன். அதனால நினைக்கவே கூடாதுன்ற பிடிவாதம் எனக்கு. ஏனா அதுக்கப்பறம் வீட்டுல அம்மா பட்ட பாடு சொல்லி மாளாது…”
“அப்பா அன்னைக்கே வந்து என்னை அழைச்சுட்டு போய்ட்டாங்க போல. கடைசியா அங்க நான் பார்த்தது கலங்கலான உங்க முகம் தான். அதுலயும் தாடியோட. நீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?…”
“அப்போ தாடி வச்சிருந்தா கண்டுபிடிச்சிருப்பியா?…” என முறைக்க,
“தெரியலை. இல்லைன்னு தான் நினைக்கேன். ஏனா…”
“நீ அதை நினைக்க விரும்பலை. போதும் விடுடி. இங்க ஒருத்தன் அதை மறக்க முடியாம தினம் தினம் நினைச்சு பைத்தியக்காரன் மாதிரி புலம்பிட்டு இருக்கேன். உனக்கு அது தெரியலை…”
“கோபம் வேற வருதோ உங்களுக்கு? என்னை நினைச்சு யாரோ ஒருத்தி பேசி சொல்லி இவர் உருகுவாராம். நான் மட்டும் ஞாபகமா வச்சிருக்கனுமாம்…” என பதிலுக்கு அபூர்வாவும் பேச,
“முதல்ல பவானி, இப்ப கண்மணியா? பிச்சுடுவேன் ராஸ்கல்…” என்று அவளை மிரட்டியவன்,
“திரும்ப ஏன் சென்னை வரலை? ஏன் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்த? இன்ஜினியரிங் இங்க கண்டினியூ பண்ணிருக்க வேண்டியது தானே?…”
“அதை ஏன் கேட்கறீங்க? கால் சரியாகவே ஆறு மாசம் ஆச்சு. நல்லா நடக்கவும் காலேஜ் போகனும்னு சொன்னா அப்பப்போ அடிபட்டதுல தலைவலி வேற வந்துட்டே இருந்துச்சு. அதனால படிக்க அனுப்பவே அம்மா யோசிச்சாங்க…” அவள் சொன்னதும் இடதுகையால் அவளின் நெற்றியை வருடினான்.
“ஒழுங்கா ரோட்டை பார்த்து காரை ஓட்டுங்க..” என கிண்டல் பேசியவள்,
“அண்ணா தான் பேசி அப்பா வேலை பார்க்கிற காலேஜ்ல ஆர்ட்ஸ் அன்ட் சைன்ஸ் காலேஜ்ல சேர்த்துவிட்டாங்க. ரொம்ப படிக்கனும்னு இல்லை, ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கனும்னு இல்லைன்னு என்னென்னவோ சமாதானம் செஞ்சு சேர்த்தாலும் தெரியாம கூட லேசா தலையில கை வச்சிட கூடாது நான்….”
“உடனே புக்கை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு என் பக்கத்துலையே உட்கார்ந்துப்பாங்க அம்மா. இப்படி வீட்டுக்குள்ளயே ரொம்ப பயந்து போய் இருந்தாங்க. அண்ணி கல்யாணம் ஆகவும் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனாங்க. அதுக்கப்பறம் படிப்பு முடியவும் அலையன்ஸ். அதான் நீங்க. இப்ப உங்க பக்கத்தில நான்…” என்று சிரித்தவள்,
“எனக்கு தெரியலை நீங்க இப்படி நினைச்சுட்டு இருப்பீங்கன்னு. அப்பா என்னை தேடி அங்க வந்தப்போ நீங்க என்னை கண்மணின்னு சொல்லித்தான் அட்மிட் பண்ணிருந்தீங்கலாம். அங்க உள்ள டாக்டர் சொல்ல அப்பாவுக்கு எதையும் கேட்கிற மனநிலை இல்லை. ப்ளட் குடுத்தது எல்லாம் நர்ஸ் மூலமா அண்ணா கேட்டு தெரிஞ்சிக்கிட்டது…” என்று முடித்தாள்.
“அந்த காலேஜ் சம்பந்தப்பட்டவங்க யாரோடையும் காண்டேக்ட் கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. அவங்களுக்கு பிடிக்கலை. அங்க போனதால தான் இப்படி ஆச்சுன்னு கோபம்…” என்று சொல்லி கணவனை திரும்பி பார்க்க,
“ரொம்ப பேசிட்ட, இப்ப கண்ணை மூடி அப்படியே இரு. வீட்டுக்கு போய்டுவோம்…” என்று சொன்னவன் அன்புக்கரசிக்கு போன் செய்யலாம் என நினைத்து பின் சப்ரைஸாக இருக்கட்டும் என விட்டுவிட்டான்.
கண்ணை மூடி அபூர்வா சாய்ந்துகொள்ள வழக்கமாக அவன் கேட்கும் அந்த பாடலை இன்றும் கேட்க ஆரம்பித்தான்.
வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
அதில் மீண்டும் திரும்பி அவனை பார்க்க முகத்தில் வாடா புன்னகையுடன் ஸ்ர்டியரிங்கிள் தாளமிட்டபடி அவனது விரல்கள் அசைய,
“இவ்வளவு நாள் இந்த வரி ஏன் பிடிக்குதுன்னு தெரியாம இருந்தேன். இப்ப புரியுது…” என ஆசையுடன் சொல்ல,
“மூச், தூங்குடி. இல்லைன்னா வீட்டுக்கு வண்டியை விட்டுடுவேன். இந்த சாங் கேட்கும் போது எனக்கு யாரும் டிஸ்டர்ப் செய்ய கூடாது. உனக்கு தெரியும் தானே?…” என்று அவளை அதட்ட,
“ரொம்பத்தான். கட்டின பின்னாலும் இன்னும் வானத்துலையே தேடிட்டு இருங்க…”
“நீயும் தான் கட்டின பின்னாடி கூட என் கண்ணுக்குள்ள உன்னை கண்டுபிடிக்கலை. நான் கேட்டேனா? போடி…” என்றான் அவளின் கன்னத்தில் லேசாய் இடித்து.
அங்கே முத்துவேல் வீட்டில் இவன் வீட்டிற்குள் நுழையும் பொழுதே முத்துவேலும், மருதவேலும் கடையை அடைத்துவிட்டு வந்திருந்தனர்.
வாசுதேவகிருஷ்ணன் அபூர்வாவுடன் அந்த நேரம் வரவும் இவர்களை எதிர்பார்க்காதவர்கள் சந்தோஷத்துடன் வரவேற்க முத்துவேலோ மகனிடம் முறைத்துக்கொண்டு மருமகளை மட்டும் “வாம்மா” என்று அழைத்தார்.
வந்ததும் அபூர்வா விமலாவை பார்க்க அவளின் அறைக்குள் சென்றுவிட அவளை அதற்கு மேல் யாரும் கவனிக்கவில்லை. வாசுதேவகிருஷ்ணனோ வேண்டுமென்றே முத்துவேலின் அருகே தொப்பென அவர் அதிரும்படி குதித்து அமர,
“அன்பு…” என்று கத்தினார் அவர்.
“இப்ப எதுக்கு முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கீங்க? சும்மா எப்ப பார்த்தாலும் கடுகடுன்னு…” என்று அன்புக்கரசி கேட்க,
“நானும் கடையில வச்சு கேட்க வேண்டாமேன்னு தான் இருந்தேன். என்னப்பா ஏன் கோபமாவே இருக்கீங்க?…” என்று மூத்தவனும் கேட்க,
“ஏன்டா கேட்கமாட்ட? உன் தம்பி பண்ணின காரியம் அப்படி. லட்சுமி வீட்டு விசேசத்துக்கு போனா அங்க இவன் புள்ள புடிச்சு விளையாடிட்டு இருந்தான்டா…”
“என்னது புள்ள புடிச்சா?…” என மருதவேல் பார்க்க,
“நாங்க விடியக்கருக்குல போய்ட்டோமே. சரி ஆளுங்க வரதுக்கு முன்ன மருமகளை பார்த்துட்டு, இவன் எப்போ வருவான்னு கேட்டுட்டு வருவோமேன்னு மாடிக்கு போனா எங்களுக்கு முன்னாடி அங்க இவன் இருக்கான். அதுவும் சம்பந்தியம்மாவையும் சேர்த்து கத்தி கலவரப்படுத்தி. அதை கூட ஒருபக்கம் விட்டுடுவேன்….” என்றவர்,
“அங்க பயந்து நான் நிக்கறேன், என்னைய ஒரு மனுஷனா கூட யாரும் மதிக்கலை.இவனுக்கு நான் கல்யாணம் பண்ணிவச்சாலாச்சும் பொறுப்பு வரும்னு பார்த்தா பாவம் அந்த பொண்ணு. அது கூட பார்த்ததும் வாங்கன்னு கேட்டுட்டு மரியாதை குடுத்துச்சு…” என்றவர்,
“இவனுக்கு இப்படி ஒரு நல்ல பொண்ணை பார்த்து கட்டிவச்சேன்ல எனக்கு வேணும். அங்க வச்சு இடம்பொருள் தெரியாம என்னை பார்த்து கண்ணடிக்க வேற செய்யிறான். யாராச்சு பார்த்தா என்ன நினைப்பாங்க?…” என்று கடுகடுக்க அடக்கமாட்டாமல் சிரித்தவன் தாயை அருகில் அமர்த்திக்கொண்டான்.
“ஒத்த நாலு அவனை பார்த்து நீங்க கண்ணை அடிச்சிருப்பீங்களா? எல்லாரும் பொட்டப்புள்ளையை பார்த்து கண்ணடிச்சா என் புள்ளை பெத்த அப்பாவை பார்த்து தான அடிச்சிருக்கான். அந்தமட்டுக்கும் என்புள்ளையை நல்லாத்தான் வளர்த்திருக்கேன்…” என நொடித்த அன்புக்கரசி,
“நீங்க கட்டி வைக்காட்டி அவனா லட்சுமியை கட்டிருந்திருக்கமாட்டானாக்கும். நினைப்புத்தான்….” என அன்புக்கரசி அர்த்தம் பொதிந்த பார்வையுடன் மகனை பார்த்துக்கொண்டே சொல்ல,
“என்னது அவனா கட்டுவானா?…” என கேட்டதும் சுதாரித்தவர்,
“நீங்க கல்யாணம் பண்ணலைன்னா அவனா ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சிருப்பான். அதை சொல்ல வந்தேன். சரி இருங்க போய் எல்லாருக்கும் இட்லி ஊத்திட்டு வரேன்…” என எழுந்து உள்ளே செல்ல அவருடனே இவனும் போக,
“போறான் பாரு இன்னும் அம்மா சேலையை புடிச்சுக்கிட்டு…” என அதற்கும் பேசினார் முத்துவேல்.
“விடுங்கப்பா, சின்ன பையன்…” என மருதவேல் தான் சமாதானம் செய்தான்.
“இப்ப எதுக்குடா பின்னாடியே வர? என்னமோ நீ வருவன்னு தோணிட்டே இருந்துச்சு. அதான் கறி எடுத்துட்டு வந்து பிரட்டி வச்சிருக்கேன். நாளைக்கு உனக்கு கொண்டு வரலாம்னு இருந்தேன்…” என்றபடி சொல்ல,
“ப்ச், இப்ப இதுவா முக்கியம்? ஏன் அப்பாட்ட அப்படி சொன்னீங்க? அதுக்கு பதில் சொல்லுங்க…” என்று அவரிடம் சுற்றி வர, வேலை பார்த்துக்கொண்டே அங்குமிங்கும் திரும்பிக்கொண்டு இருந்தவர்,
“முதல்ல உங்கப்பா என்ன செய்யறாருன்னு எட்டி பார்த்துட்டு வா…” என்று அனுப்ப அவன் பார்த்துவிட்டு சென்றதை முத்துவேலும் பார்த்துவிட்டார்.
“என்னமோ பேச போகுதுங்க.” என்றபடி அவரும் மெதுவாய் எழுந்து வந்து ஒளிந்துகொள்ள வாயை திறக்க போன அன்புக்கரசி முத்துவேலை கண்டுகொண்டார். உடனே பேச்சை மாற்றி,
“ஏன்டா வாசு, உங்கப்பாவை கொஞ்சமாச்சும் மதிச்சியா நீ? என்னத்த சொல்லு எனக்கு எம்புருஷன் தான் முக்கியம் பார்த்துக்கோ. என்னமோ அவருக்கிட்ட உங்கள விட்டுகுடுக்க கூடாதேன்னு ஆத்தமாட்டமா பேசி வைக்கறேன். அதுக்குன்னு அவரை பார்த்து கண்ணடிச்சு வச்ச…”
திடீரென அன்புக்கரசி ஏன் அப்படி பேசுகிறார் என புரியாமல் நின்றவன் பின் அவரின் கண்ஜாடையில் கண்டுகொண்டான்.
“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு வாழறவடா இந்த அன்பு. இந்த அன்போட அன்பு முதல்ல அவருக்குத்தான். அப்பறம் தான் உங்களுக்கு…”
“அன்பு அன்பு…” என நெக்குருகி நின்றார் முத்துவேல்.
“ஜாக்கிரதை. நீ அவர பேசும் போதெல்லாம் உன்னைய நான் திட்டுறேன் தான?…”என கேட்க,
“ஆமா, ஆமா…” என்று தலையாட்டினான் வாசுதேவகிருஷ்ணன்.
“பயந்துட்டியா…”
“ரொம்ப…” என்று வேறு சொல்ல,
“ஞாபகம் இருக்கட்டும். போயி பிரிட்ஜ்ல தேங்காய் மூடி இருக்கும். எடுத்து சில்லெடு…” என்று சொல்லிக்கொண்டே கணவனை கவனிக்காததை போல இட்லி மாவை உப்பு போட்டு கரைக்க அப்பொழுது தான் முத்துவேலை பார்ப்பதை போல பார்த்தவர்,
“என்னங்க, எதாச்சும் வேணுமா?…” என பாசமாக கேட்க,
“அன்பு…” என வந்தவர் இளையமகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“இல்லை ஒண்ணுமில்லை. சும்மா தான். சரி நீ வேலையை பாரு…” என்று சொல்லி செல்ல,
“சரிங்க சரிங்க…” என்றவர் முத்துவேல் சந்தோஷத்துடன் செல்லவும்,
“உங்கப்பாவுக்கும் விவஸ்தை இல்லை. உனக்கு புத்தி இல்லை….” என மகனின் தலையில் கொட்டு வைக்க போனவர்,
“குனிடா, எட்டமாட்டிக்கு…” என்று அவனை தன் உயரத்திற்கு குனியவைத்து ஒரு குட்டு குட்டி,
“அவருதான் அம்மாவும் புள்ளையும் என்ன பேசறாங்களோன்னு ஒட்டுகேட்க வந்தாருன்னா நீ அவரை கூடவே கூட்டிட்டு வர உன் ரகசியத்தை அம்பலமாக்க. நல்ல வேளை ஒளியக்கூட தெரியாம உடம்பை விட்டுட்டு தலையை மட்டும் ஒளிச்சுக்கிட்டு நிக்கறாரு…” என்று தலையில் அடித்துக்கொள்ள,
“ப்ச், அதை விடுங்க அதான் போய்ட்டாருல. சொல்லுங்க. எப்படி தெரியும்?…” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.
“நீ என்னன்னு போலீஸ் வேலை பார்க்கன்னே தெரியலை. ஒரு ஆளு உருப்படியா செட் பண்ண தெரிஞ்சதா உனக்கு? உன் நிச்சயத்தன்னைக்கே அந்த ஜோஸியரும், நாயகமும் பேசினதை நான் கேட்டுட்டேன்….” என்று சொல்ல,
“அன்னைக்கேவா? அப்போ ஏன் என்கிட்டே கேட்கலை…” என மகன் முறைக்க,
“எனக்கு தெரியாத மாதிரி நீ இருந்த. உனக்கு தெரியாத மாதிரி நான் இருந்தேன். ரெண்டுக்கும் சரியா போச்சு. நானே என்னைக்கு இந்த மனுஷன்கிட்ட உளறி வைப்பேனோன்னு பக்கு பக்குன்னு இருக்கு. நான் பாத்த பொண்ணு நான் பார்த்த பொண்ணுன்னு சொல்லிட்டு இங்கிட்டும் அங்கிட்டும் தவ்வும் போதெல்லாம் வாயை வச்சுட்டு சும்மா இல்லாம எடக்கு மடக்கா பேசிருவேனோன்னு படபடன்னு வருது…”
“ப்ச், விடுங்கம்மா தெரிஞ்சா தெரியட்டும்…” என சொல்லி சமையல் மேடையில் தாவி ஏறி அமர்ந்தான்.
“ஏன்டா சொல்ல மாட்ட. தெரிஞ்சா இப்ப பெருமை பீத்திக்கிட்டு திரியற மனுஷன் நெஞ்சை பிடிச்சுட்டு நீயுமா அன்புன்னு பார்ப்பாருடா என்னை. எம்புட்டு பேசினாலும் தாங்கிருவேன். அந்த பார்வையை மட்டும் சுத்தமா பார்க்க முடியலை. தூக்கத்துல கூட பயந்து முழிச்சுக்குவேன்னா பார்த்துக்கோ…”
“ஓஹோ இது வேற ஓடுதா? அதான பார்த்தேன். மனுஷன் சும்மாவா தேன்மிட்டாய் குடுத்திருப்பாரு…” என்று சிரிக்க,
“இங்க என்னடா பன்ற நீ?…” என மருதவேல் வர,
“நீ தான் போன் வந்துச்சுன்னு போய்ட்ட…” என சொல்லிவிட்டு,
“அம்மா, ஸ்வீட் எதாச்சும். ப்ளீஸ்…” என்றவன்,
“பருப்பு பாயாசம் செய்ங்க…” என சொல்லிவிட்டு அண்ணனுடன் பேசிக்கொண்டே வெளியேறினான்.
விமலாவிடம் பேசிக்கொண்டிருந்தவளை தேடி சென்றவன் அண்ணியிடம் நலம் விசாரித்தபடி அமர அவள் பார்வையால் சொல்லியாச்சா என கேட்க அவன் இல்லை என்று தலையசைத்தான்.