“தனியா பேசனும்னா போய் பேசிட்டு வாங்க. ஏன் இங்கயே இருந்து மாத்தி மாத்தி மண்டையை ஆட்டிட்டு இருக்கீங்க?…” என்று விமலா கேட்க,
“அதான் வரமாட்டேன்னு சொல்றாளே. அப்பறம் அண்ணி எங்கண்ணனை நல்லா பார்த்துக்கறீங்களா?இப்பலாம் ரொம்ப விரட்டறீங்க போல?…” என கேட்க,
“யாரு நானு? நீ வேற ஏன் வாசு? என்னை சேர்ந்தாப்ல கொஞ்சம் நேரம் உட்கார விடமாட்டேன்றாரு. வெளில நடக்க விடறதில்லை. அத்தை அதுக்கு மேல. அதான் சில நேரம் டென்ஷன்ல கத்திடறேன்…” என்று சொல்ல,
“எல்லாம் உன் நல்லதுக்கு தானடி சொல்றேன். அது ஒரு குறையா?…” என்ற கையில் தட்டில் இட்லியுடன் வந்து நின்றான் மருது.
“இன்னிக்காச்சும் வெளில வந்து சாப்பிடறேனே?…” என்று கெஞ்ச,
“ம்ஹூம், நீ முதல்ல சாப்பிட்டு மாத்திரை போடு…” என்று அதட்ட வாங்கிக்கொண்டவள் பாவமாய் பார்த்து,
“எல்லாரோட சேர்ந்து சாப்பிடனும்னு ஆசையா இருக்கு…” என்று சொல்லும் பொழுதே கண்கள் கலங்கி போனது அவளுக்கு.
“இதுக்காடி அழுவ. முன்னாடி எதுவுமே கேட்காம படுத்தின. இப்ப ஒண்ணொண்ணா கேட்டு படுத்தற. சரி இரு அம்மாட்ட கேட்டுட்டு வரேன்…” என்று அவன் வெளியேற கனிவுடன் பார்த்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“ரொம்ப கஷ்டமா இருக்கா அண்ணி?…” என்று கேட்கவும் இல்லை என்று சிரிப்புடன் தலையசைத்தாலும் கண்ணீர் வந்துவிட்டது.
“அண்ணி…” என சொல்லவும் அவளின் கண்களை துடைத்துவிட்ட அபூர்வா,
“இன்னும் கொஞ்சம் நாள்ல எல்லாம் நார்மல் ஆகிடும் அக்கா. சும்மா நினைச்சு வருத்தப்பட்டா குழந்தைக்கும் கஷ்டம்ல…” என்று தேற்ற,
“இதை பெத்து குடுத்துட்டா போதும் லட்சுமி. வேற எதுவுமே வேண்டாம். மனசு பாரமா இருக்கு நினைக்கும் போதே. அதே நேரம் நானும் அம்மா. எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா நான் அம்மான்றது…” என்றவள்,
“கிறுக்கு புடிச்ச மாதிரி இந்த அந்த மனுஷன் இந்த ஸ்கேன் ரிப்போர்ட்டையே பார்த்துட்டு இருக்காரு. அவருக்கும் பயம் எனக்கு என்னவும் ஆகிடுமோன்னு. ஆனாலும் காட்டிக்கறதில்லை. சந்தோஷம்னா கொஞ்சம் கஷ்டத்தோட தான் நான் அனுபவிக்கனுமோ? இவரால முழுசா சந்தோஷப்பட முடியலை….” என வருத்தத்துடன் சொல்ல,
“இதுக்குத்தான்டி உன்னைவிட்டு அங்கிட்டு இங்கிட்டு நான் நகரதில்லை. இந்த தண்ணியை குடி. அம்மா உன்னை கூட்டிட்டு வந்து உட்கார சொன்னாங்க…” என்றதும் வேகமாக எழ போனவளை பிடித்து தன் கை வளைவிற்குள் நிறுத்தி எழுப்பினான் மருதவேல்.
விமலா காட்டிய அந்த ஸ்கேன் ரிப்போர்டையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தாள் அபூர்வா. மனது முழுவதும் தான் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை பற்றியதான எண்ணங்கள் அணிவகுக்க இப்பொழுதே லேசான பயம் பிடித்தது. அவளையே பார்த்திருந்த வாசுதேவகிருஷ்ணன்,
“பூர்வி வா வெளில இருப்போம்…” என அபூர்வாவை அழைத்துக்கொண்டு வெளியே செல்லவும் விமலாவை கடிந்தான் மருது.
“உனக்கு எதுக்குத்தான் அழுகை வருதுன்னு தெரியலைடி. ஆனா பார்க்க கஷ்டமா இருக்கு. இத நல்லா பெத்துக்குடுப்பன்னு உனக்கு நம்பிக்கை இல்லையா?…” என்று அவளை அணைத்துக்கொள்ள அவனிடம் ஒன்றியவள்,
“நீங்க எல்லாரும் இப்படி பார்த்துக்கறது எனக்கு இன்னும் பயத்தை குடுக்குது. என்னை ரெஸ்ட் எடு ரெஸ்ட் எடுன்னு சொல்றது தான் கஷ்டமா இருக்குது…” என சொல்ல,
“உன்னை அப்படி கவனிக்கிறோம்டி. என் பொண்டாட்டியை கைக்குள்ள வச்சு தாங்க எனக்கொரு வாய்ப்பு. உன்னை இப்படி பார்த்துக்கிட்டதில்லைல. ஒரு வேளை முன்னாடியே பார்த்திட்டு இருந்திருந்தா நமக்கும் குழந்தை அப்பவே நல்லபடியா பிறந்திருக்குமோ?…” என தழுதழுத்தவனின் கைகளுக்குள் பாந்தமாய் நின்றிருந்தாள் விமலா.
நாள் தள்ளி போனது கூட தெரியாமல் விமலா அவளிஷ்டத்திற்கு எப்பொழுதும் போல வளையவர அன்புக்கரசி தான் கேட்டார்.
“உனக்கு நாள் முடிஞ்சுடுச்சா விமலா. கோவிலுக்கு போகனும்…” என கேட்க,
“இல்லையே அத்தை. வரவே இல்லை…” என்று சொல்லியவள் கடைசி நாளை கணக்கிட்டு பார்த்தவளின் முகம் வியர்த்து போனது.
“என்னம்மா? விமலா?…” என அவளை பார்க்க,
“இல்லை இல்லை. அது ஒண்ணுமில்லை…” என்று அன்புக்கரசியிடம் சொல்ல,
“என்னன்னு சொல்லுடி. வரலையா?…” என கேட்டவருக்கும் அப்படித்தான் இருக்குமோ என்னும் ஆசை பிறக்க அவளிடமும் அதை சொல்ல கூடாதென நினைத்தவர்,
“இரு வரேன்…” என்று மருதவேலுக்கு அழைத்து ஹாஸ்பிட்டல் போவதாக சொல்லியவர் காரை எடுத்து வர சொன்னார்.
“அத்தை இப்ப எதுக்கு?…” என விமலா சொல்ல,
“வாயை மூடுடி. இது கூட இத்தனை நாள் கவனிக்காம இருந்திருக்க. எனக்கு மனசுக்கு போகனும்னு படுது. போவோம். அம்புட்டு தான்…” என்றவர் பிடிவாதமாய் அழைத்து செல்ல அங்கே அவரின் எண்ணம் போல் தான் இருந்தது.
“என் வயித்துல பாலை வார்த்தீங்க டாக்டரம்மா. இந்த பொண்ணுக்காக நான் வேண்டாத தெய்வமில்ல. இத்தனை வருஷத்துல இன்னைக்குத்தான் எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு….” என அவரின் கையை பிடித்து ஆனந்த கூத்தாடினார் அன்புக்கரசி.
“என்னம்மா இது பெத்த பொண்ணு உண்டான மாதிரி இம்புட்டு சந்தோஷம்…” என டாக்டரே சொல்ல,
“இல்லையா பின்ன? பொண்ணை பெத்தாத்தானா? இவளும் என் மவ தான். அதுக்கும் மேல பெரிய உசத்தி தான் என் மருமகளுங்க. என் மகனுக்கு வாழ்க்கைக்கு ஒரு புடிப்பை குடுக்கறவ இப்ப வாரிசையும் குடுக்கா. குடும்பம் நடத்த தொழில் விருத்தி பன்றது அந்த மகாலட்சுமின்னா வம்ச விருத்தி குடுக்கற மருமகளும் அந்த சாமி தான்….”
“உங்களை நினைக்கும் போது உண்மையில் ஆச்சர்யமா இருக்கும்மா. ரொம்ப சந்தோஷம்…” என்றவர்,
“கொஞ்சம் தனியா பேசனும். என் ரூம்க்கு வந்து பாருங்க…” என சொல்லிவிட்டு செல்ல மருதவேலை பார்க்க விமலாவும் அவனுமாக தனி உலகில் தான் இருந்தனர்,
இருவரின் விழிகளிலும் சந்தோஷ கண்ணீர் வழிந்தது. அவர்களை பார்க்கவே மனதிற்கு நிறைவாக இருக்க,
“அடேய் நீயும் அழுது அவளையும் அழ வைக்காதே. கண்ணை துடை. வா போயி மருந்து மாத்திரை வாங்கிட்டு வருவோம்….” என சொல்லி விமலாவின் கன்னம் வழித்து நெட்டிமுறித்தவர்,
“அம்புட்டுத்தான்டா. இனி உன் மனசு போல எல்லாமே சுகமா தான் நடக்கும்…” என சொல்லியவர் மருதவேலை அழைத்துக்கொண்டு டாக்டரை போய் பார்த்தனர்.
“சொல்லுங்கம்மா…” என கேட்க,
“ஹ்ம்ம், இங்க பாருங்கம்மா, சொல்றதை சரியாய் புரிஞ்சுக்கனும்…” என்று பீடிகையுடன் ஆரம்பித்தவர் அவளின் குழந்தை நன்றாக இருந்தாலும் சில சிக்கல்கள் இருப்பதாக சொல்ல பயந்துபோனார்கள் இருவரும்.
இதுவரை குழந்தையின்மைக்கு எடுத்த மருந்துகளும் மனஅழுத்தமும் அவளின் உடலையும் சிறிது பாதித்திருந்ததால் விமலாவுக்கு நல்ல ஓய்வும், சந்தோஷமான மனநிலையும் அவசியம் என்று உணர்த்த சொல்லிய விஷயத்தை இன்னும் அழுத்தமாக புரிந்துகொண்டனர்.
அதனை பொருட்டு கண்ணாடி பொருளை கையாள்வதை போல அவளை பார்த்து பார்த்து கவனிக்க அதுவே விமலாவுக்கு புரிந்தாலும் மருதுவின் மனநிலை தான் அவளை முற்றிலும் புரட்டி போட்டது.
தன்னிடம் தைரியமாக இருந்தாலும் அவன் மனதிற்குள் பயந்துபோய் இருப்பது விமலாவிற்கு புரிய அவனை சமாதானம் செய்யவும் முடியாமல் அவனுக்கு விளக்கவும் முடியாமல் தவித்து போனாள். அதிலும் இரவுகளில் சரியாக உறங்காமல் தன்னையே பார்த்திருக்க அதுவே பெரும் கவலை.
“என்னடி நின்னுட்டே தூங்கிட்டியா?…” என அணைப்பிற்குள் இருந்தவளிடம் சீண்டலாய் கேட்க,
“விட்டா தூங்கவச்சிடுவீங்க. விடுங்க என்னை…” என்று திமிறி விலகியவளை,
“அடியேய், இதுக்குத்தான் ரூமை விட்டு வர கூடாதுன்னேன். மெதுவா வா…” என சொல்ல சலிப்புடன் அவனுடன் நடந்தாள் விமலா.
“ஏன்டா அவளை மெதுவா கூட்டுட்டு வான்னா, விறுவிறுன்னு நடக்கற?…” என அன்புக்கரசி வேறு திட்ட,
“பார்த்தியா…” என்று மருதவேல் விமலாவை முறைக்க,
“வாசு, லட்சுமி, என்னை இங்க இருந்து கூட்டிட்டு போய்டுங்களேன். படுத்தறாங்க…” என்று சிரிப்புடன் சொன்னாலும் என்னை அழைத்து செல்லேன் என்னும் வேண்டுதல் இருந்தது.
சிரிப்புடன் பேசியபடி உணவுகளை பரிமாறிக்கொண்டு இருக்க அன்புக்கரசியை பார்த்த வாசுதேவகிருஷ்ணன்,
“அம்மா உன் மருமகளுக்கு முதல்ல இனிப்பை வைங்க. அப்பறமா சாப்பாடு சாப்பிடட்டும்…” என சொல்லவும் அவரும் ஒரு கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு அவளுக்கு நீட்டியவர்,
“என்னடா?…” என மகனிடம் கேட்க அவனோ இன்னொரு கிண்ணத்தில் இருந்ததை அவருக்கு ஊட்டினான்.
“ஆனாலும் அதிர்ஷ்டம் ஒரே நேரத்துல இந்த அன்புக்கரசியை ஆட்டிவைக்க கூடாது. இந்த வீட்டையே அன்பால ஆளும் இந்த அன்புக்கரசி அம்மாவை ஆட்டிப்படைக்க இன்னொரு சின்ன குட்டி இந்த குடும்பத்துக்குள்ள வர போகுது…” என்று சொல்ல,
“வாசு, நிஜமாவா சொல்ற?…” என்றவர் வேகமாய் ஆசையோடு அபூர்வாவின் கையை பிடிக்க அது வீங்கி இருந்த கை. அவள் வலியில் உடனே உதற,
“என்னடா ஆச்சு…” என அப்பொழுது தான் வீக்கத்தை பார்த்து பதறினார்.
“நத்திங்ம்மா. லேசா இடிச்சுக்கிட்டா வரும் போது. ஹாஸ்பிட்டல் போய்ட்டு தான் வந்தோம். அப்ப தான் தெரிஞ்சது…” என்று சொல்ல உடனே திருஷ்டி எடுத்தவர்,
“அம்புட்டும் கண்ணு தான்…” என இரு மருமகளுக்கும் சேர்த்தே திருஷ்டி எடுக்க மற்றவர்கள் சிரிப்புடன் பார்த்தபடி நின்றனர்.
“வாசு, எனக்கு என்ன சொல்லன்னே தெரியலைடா. ஐயோ நான் பாட்டி ஆகிட்டேன். இன்னொருக்க பாட்டி. ரெண்டு பாட்டி ஆகிட்டேன்…” என துள்ளி குதிக்காத குறையாக அவர் குதூகலிக்க,
“கிழவிக்கு இப்ப மட்டும் கால் வலிக்காதே.” என நினைத்த முத்துவேலுவுக்கும் தன் குடும்பமே இப்பொழுது முழுமை அடைந்தது போல ஒரு உணர்வு. ஆனாலும் வாயை வைத்துக்கொண்டு இல்லாமல்,
“புள்ளை வர போகுது. பொறுப்பா இரு. வயசுக்கு தகுந்த வேலை பார்க்கறதில்லை. இனியாவது புள்ளை புடிக்கிறத விட்டுட்டு பொழப்பை பாரு…” என்று அறிவுரை சொல்ல அவருக்கு பதில் சொல்ல போனவனின் கையை பிடித்து தடுத்த அன்புக்கரசி,
“விடுடா, பாவம் அவரு. நாளைக்கு பேசிப்போம். அவர் மூஞ்சில லைட் எரியுது பாரேன்…” என்று மகனிடம் கலாய்க்க சிரிப்புடன் சாப்பிட அமர்ந்தான்.
அனைவருமாக சாப்பிட்டு முடித்ததும் அபூர்வாவையும் மாடிக்கு அனுப்பாத அன்புக்கரசி கீழே உள்ள ரூமிலேயே இருக்க வைத்துக்கொள்ள முத்துவேலோ வீட்டிற்குள் லிப்ட் வைக்கும் யோசனையில் இருந்தார்.
“அன்பு முதல்ல லிப்ட் போடனும். மாடி ஏறி இறங்க ரெண்டு பொண்ணுங்களும் சிரமம். எங்க போடலாம்?…”என வீட்டை சுற்றி சுற்றி ஆராய்ந்துகொண்டு இருந்தார் இரவுறக்கம் தொலைத்து.
“அதை அப்பறம் பார்த்துக்கலாமம். இப்ப தூங்குங்க…” என அதட்டி உறங்க அனுப்பிவைக்க பெரும்பாடானது அன்புக்கரசிக்கு.
கீழே உள்ள அறையில் படுத்திருந்த அபூர்வா இன்னும் உறங்காமல் இருக்க அவளை அணைத்தபடி இருந்தவன்,
“தூங்கலையா பூர்வி?…” என தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளை கேட்க,
“ம்ஹூம், வேண்டாம்…” என்றாள்.
“என்னது வேண்டாம்?…” என்று சிரிப்புடன் அவளின் முகம் நிமிர்த்தி பார்க்க,
“எதுவும், எதுவுமே. தூங்கறதோ, நிஜமா தூங்கறதோ. எதுவுமே வேண்டாம். இது இப்படியே இருக்கட்டும். இது போதும். ப்ளீஸ்…” என சொல்ல,
“நோ ப்ராப்ளம். ஆனா நான் தூங்கனும். நிஜமா நல்ல தூங்கனும். மனசுக்குள்ள எப்போ உனக்கு என்னை தெரியவரும்னு நினைச்சு நினைச்சு பலநாள் முழிச்சே இருந்திருக்கேன் உன்னை பார்த்துட்டு. சொல்லிடனும்னு பலநாள் உன்னை எழுப்பிருக்கேன். ஆனா சொல்ல முடிஞ்சதில்லை. பட் இன்னைக்கு நல்லா தூங்குவேன்…” என்றவன் அவளின் நெற்றியில் இதழொற்றி,
“குட்நைட் பூர்வி…” என்று சொல்லி கண்ணை மூடிக்கொண்டான்.
கண்களைத்தான் மூடியிருந்தான். மூளையோ பலவிதமான சிந்தனைகளின் வயம் சிக்கியிருந்தது. யார் யார் என தேடல் அவனிடத்தில். மறுநாள் அதற்கான விடை கிடைத்தது.
காலை எழுந்ததும் அபூர்வாவோடு அன்புக்கரசியை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றான்.
அன்புக்கரசி முதலிலேயே சொல்லிவிட்டார் டாக்டரிடம் பேசிய பின்னால் அபூர்வாவின் வீட்டிற்கு சொல்லிக்கொள்ளலாம் என்று.
அனைத்து செக்கப்களையும் எடுத்து முடித்து முழு ஆரோக்யத்துடன் இருப்பதாக சொல்ல அங்கே வைத்தே வாசுதேவகிருஷ்ணன் கேட்டுவிட்டான் விமலாவின் உடல்நலனை பற்றி. வீட்டில் அவளை நடக்க கூட விடாமல் படுத்துவதையும் சொல்ல,
“என்ன அன்பும்மா இதெல்லாம்?…” என கேட்ட டாக்டர்,
“கேர்ஃபுல்லா பார்த்துக்கனும்னு தான் சொன்னேன். அதுக்குன்னு அந்த பொண்ணை ப்ரீயா விடாம இருந்தா அதுவே பெரிய ஸ்ட்ரெஸ் குடுக்கும். பயந்துபோயிடும் தனக்கு என்னமோன்னு. வெளில கூட்டிட்டு போக வேண்டாம். அலைச்சல் வேண்டாம். வீட்டுக்குள்ள நடக்கறதால எந்த பிரச்சனையும் இல்லை…”
இன்னும் அன்புக்கரிசியிடம் விளக்கோ விளக்கு என்று விளக்கி முடிக்கவும் அனைத்தையும் தலையை ஆட்டியபடி கேட்டுகொண்டார்.
“மூணு மாச கேப்ல உங்களுக்கு அடுத்தடுத்து பேரக்குழந்தைங்கள். வாழ்த்துக்கள் அன்பும்மா…” என்று வேறு சொல்ல அன்புக்கரசிக்கு வாயெல்லாம் பல்.
“ப்பா, செம்ம ஸ்மைல். விட்டா ஒரே நேரத்தோல் பத்து பிள்ளைங்களை வளர்த்துடுவீங்க…” என்று சிரித்து அவர்களுக்கு விடைகொடுக்க மனைவியையும், தாயையும் அழைத்துக்கொண்டு வீட்டில் கொண்டு வந்து விட்டவன்,
“பூர்வி இங்க இரு. வந்து உன்னை கூட்டிட்டு போறேன்…” என சொல்லி கிளம்ப,
“அதென்ன வந்து கூட்டிட்டு போறது, இங்க தான் ஒரு வாரம் இருப்பா. நீயும் இருக்கறதுனா இரு. இல்லை உன் ஸ்டேஷன்லயே இரு…” என அன்புக்கரசி சொல்ல சிரித்தபடி,
“எனக்கு என் பொண்டாட்டி சொல்றது தான். அவ சரின்னா எனக்கு நோ அப்பீல்…” என்று சொல்லி அபூர்வாவை பார்த்து கண்ணடிக்க அவள் முறைத்தாள்.
“இரு தண்ணி குடிச்சுட்டு போவியாம்…” என தண்ணீர் எடுக்க உள்ளே சென்றதும் அவரை பார்த்துவிட்டு திரும்பிய அபூர்வாவின் இதழோடு தன் கன்னம் உரசியவன்,
“பை கண்மணி…” என சொல்லிவிட்டு செல்லல,
“தண்ணி…” என்று சொல்லி அப்படியே நின்றாள்.
“உள்ள போ பூர்வி…” என்று சொல்லி காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட மெதுவாய் அவளும் வர அன்புக்கரசி விமலாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“என்ன லட்சுமி கிளம்பிட்டானா?…” என்று கேட்க,
“நீங்க தண்ணி கொண்டு வருவீங்கன்னு சொல்லியும் கிளம்பிட்டாரு…” என சொல்லி விமலாவுடன் அமர,
“அவன் நான் கொண்டு வரமாட்டேன்னு தெரிஞ்சு தான் கிளம்பிட்டான்…” என சிரித்தார் அன்புக்கரசி.
நேராக கமிஷனர் ஆபிஸினுள் நுழைந்தவன் முகம் கண்டிப்புடன் இருக்க அவனின் வேக நடையில் அவனின் கோபத்தின் அளவை அங்கிருந்தவர்கள் புரிந்துகொண்டனர்.
“இவருக்கு மட்டும் தினைக்கும் ஒரு கோவம், என்னனுதான் இப்படி இருக்காரோ? பாவம் இவரு பொண்டாட்டி. கோவக்காரரை சமாளிக்குதோ அந்த பொண்ணு” என அவன் கடந்ததும் அவனை பற்றி பேசிக்கொண்டனர் இரு காவல்துறை பணியாளர்கள்.
அந்த அறையின் வாசலில் கதவை நாகரீகமாய் தட்டியவன் கதவை திறந்து உள்ளே செல்ல,
“வாங்க வாசு…” என்றார் ஜெயபால். அவருக்கு சல்யூட் வைத்தவன் அவரின் எதிரில் அமர்ந்திருந்தவரை கண்டு பல்லை கடித்தான்.
“என்ன வாசு ஏர்லி மார்னிங் இவருக்கு கால் பண்ணி மிரட்டுனேங்களாம்?…” என கண்டிப்பதை போல கேட்க அந்த அவராகப்பட்டவரோ பிரவீனின் தந்தை மனோகரன்.
“ஆமா ஸார், மிரட்டவெல்லாம் இல்லை. சும்மா எப்படி இருக்காருன்னு விசாரிச்சேன்…” என சொல்ல,
“முதல்ல உட்காருங்க…” என அவனை அமர சொல்ல அவன் அமர்ந்த விதத்தில் மனோகரன் தள்ளி அமர்ந்தார். உடல் வியர்த்துபோய் இருந்தது.
“இங்க பாருங்க ஸார், இவர் காரை ஆக்ஸிடன்ட் பண்ணினதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எந்த பிளானும் போடலை. இவர் நான் தான் பண்ணினேன்னு சொல்றாரு…” என்று பயத்துடன் சொல்ல,
“வாசு…” என கேட்க அவன் மனோகரனையே முறைத்துக்கொண்டு இருக்க அதற்குள் ஜெயபாலுக்கு ஒரு அழைப்பு வந்ததும் கவனத்தை அவர் அதில் திருப்பியதும் மனோகரனின் பக்கம் சாய்ந்தவன்,
“நீயும் உன் புள்ளையும் மூஞ்சிக்கேத்த பேர் வைக்கமாட்டீங்களாடா? பேரை பாரு. உன் புள்ளை உன்னை பிரிஞ்சு இருக்க முடியாம ஜெயிலுக்குள்ள தேடறான் போல. போறியா?…” என கேட்க அரண்டு போனார் மனோகரன்.
“ஹ்ம்ம் என்ன வாசு சொல்ற?…” என ஜெயபால் போன் பேசி முடித்து திரும்ப,
“இவர் பையனை பத்தி தான் ஸார் பேசிட்டு இருந்தேன்…” என அவனும் பவ்யமாய் சொல்ல எச்சிலை கூட்டி விழுங்கியபடி வாசுதேவகிருஷ்ணனை பார்த்த மனோகரன்,
“நான் கிளம்பறேன் ஸார். நீங்க தான் பார்த்து செய்யனும்…” என்று எழுந்து நின்று சொல்லிவிட்டு விட்டால் போதும் என ஓடியேபோனார். அவர் சென்றதும்,
“ரொம்ப அடாவடி பண்ண ஆரம்பிச்சுட்ட நீ. அவர் பண்ணலைன்னு உனக்கு தெரியும்ல. அப்பறம் ஏன் போட்டு அவரை கலவரப்படுத்தனும்?…” என சிரித்தபடி கேட்க,
“சும்மா மிரட்டி வச்சா தானே நாளைப்பின்ன அந்த நினைப்பு கூட வராது. காலையில பொழுது போகலை. தூக்கமும் வரலை. அதான் சும்மா போன் பண்ணி வார்ன் பண்ணிவிட்டேன். தலைவரு இங்க வந்து நிக்கிறார்…” என்று சிரித்தவன்,
“நானே இருந்திருந்து நாலுவருஷமா அவளை தேடி தேடி கட்டிக்கிட்டா அவளோட இருக்கும் போது தட்டி தூக்க பார்த்திருப்பான்…” என்றவனின் பேச்சிலேயே தெரிந்து போனது அவனுக்கு யார் செய்திருப்பார்கள் என்று தெரியுமென.
“வாசு…” என ஜெயபால் சொல்லும் போதே,
“ஓகே ஸார், நான் கிளம்பறேன்…” என சிரிப்புடன் எழுந்துகொள்ள,
“படவா என்னமோ ப்ளான் பண்ணிட்ட…” என சொல்லவும் அவருக்கு கண்சிமிட்டி சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.