முத்துவேலுவுக்கு சிலிர்த்து போனது. இத்தனை நாள் இளையமகன் தன் மீது பாசமில்லாமல் இருக்கிறான் என நினைக்க அவனோ தனக்காக கொதிக்கிறான் என புரிந்து அவனை மெய்மறந்து பார்த்தவர்,
“அப்பனா உன்னையை நினைச்சு பெருமை படறேன்டா. எல்லாம் நான் பார்த்து வச்ச பொண்ணு வந்த மகிமை. அவ வந்த நேரம் நீயும் மனசு மாறிட்ட. இது போதும்…” என்று வசனம் பேச வந்த சிரிப்பை அடக்க வாசுதேவகிருஷ்ணனை விட அவனின் மனைவிதான் வெகுவாய் சிரமப்பட்டாள்.
“ஐயோ இவங்க மைண்ட்வாய்ஸ் எனக்கு கேட்குது மாமா. உங்களுக்கு கேட்கலையா? உருகறீங்களே?” என மனதிற்குள் அடக்கமாட்டாமல் சிரித்தவள் உதட்டை கடித்துக்கொண்டு அமைதியாக நிற்க,
“சரிப்பா நான் கிளம்பறேன். அன்பு ரொம்ப வருத்தமா இருக்கா…” என சொல்ல,
“மாமா சாப்பிட்டு போகலாமே. அப்பவே சாப்பிட சொன்னேன். பசிக்கலைன்னு சொல்லிட்டீங்க…” என அபூர்வா சொல்ல,
“இருக்கட்டும்மா, நான் போயி அன்பு கையால சாப்பிட்டுக்கறேன். அவ பேசினது நெஞ்சை பிசையுது…” என வருத்தத்தோடு சொல்லியவரை பார்த்தவன் முகம் மென்மையுற,
“வாங்கப்பா நான் கூட்டிட்டு போறேன்…” என்றவனை மறுக்க,
“இருக்கட்டும் நீங்க வாங்க போகலாம்…” என்று வம்படியாய் அவரை அழைத்துக்கொண்டு கிளம்பினான் வாசுதேவகிருஷ்ணன்.
“நான் வேணும்னே விமலாவை அங்க விடனும்னு சொல்லலைப்பா. அங்க விமலாவுக்கு ஒத்தாசையா யாரையாச்சும் வேலைக்கு அமத்தனும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ளே இம்புட்டு பேச்சு பேசிட்டாங்க. பெரியவன் இப்படி பேசுவான்னு நினைக்கலைப்பா…”
முத்துவேல் வருத்தமான குரலில் சொல்லும் பொழுது கேட்டுக்கொண்டிருந்த மகனுக்கு வலிக்கத்தான் செய்தது. எதையும் யோசிக்காமல் பேசிவிட்டு இப்பொழுது இப்படி மருகுகிறாரே என்று.
“விடுங்கப்பா. பார்த்துக்கலாம். அண்ணன் தானே?…” என அவனும் சமாளிக்க,
“சரிதான். இருந்தாலும் இவனும் அங்க போய்ட்டா எனக்கு யாருய்யா இருக்கா…” என்று தழுதழுத்த குரலில் சொல்லியவரை பார்த்து துணுக்குற்றான் அவன்.
“அப்பா, என்னாச்சு?…” என கேட்க கண்ணை லேசாய் துடைத்தவர்,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, வேகமா காரை ஒட்டாத. கண்ணுல தூசி வந்து விழுது…” என சமாளிப்பாய் சொல்லிவிட்டு விரைப்பாய் முகத்தை வைத்துக்கொள்ள அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“ஆனாலும் மீசையில மண்ணு ஒட்டலை தான்…” என முணுமுணுத்து சிரித்துக்கொண்டான்.
வீட்டிற்கு வரவும் அன்புக்கரசி கோபம் போல முகத்தை திருப்பிக்கொண்டு அறைக்குள் சென்றுவிட முத்துவேலோ அனைவரையும் மறந்து கண்டுகொள்ளாமல் அவரின் பின்னே,
“அன்பு நானா வந்துட்டேன். இங்க பாரேன். அன்பு…” என பின்னாடியே சென்று மறைய,
“பார்ரா…” என வாய்விட்டு சிரித்தவன்,
“டேய் அண்ணா, கலக்கிட்ட போ. இதுதான் வேணும். இப்ப அவங்களை தனியா விடு. தானா சமாதானம் ஆகி வரட்டும். நீ போ…” என சொல்ல மருதவேலும் தம்பியுடன் பின் அங்கு சிலநிமிடங்கள் இருந்துவிட்டே கிளம்பினான்.
தன் வீடு வந்து சேர்ந்தவன் அபூர்வாவிடம் பேசிக்கொண்டே அங்கு நடந்ததை சொல்லியபடி சாப்பிட,
“ஆனாலும் மாமாவை இம்புட்டு படுத்த கூடாது. அவருக்கு எதுவுமே தெரியலை…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், சரிதான் பூர்வி. கார்ல போகும் போது அவருக்கு கண்ணு கலங்கிருச்சு. ஆனாலும் எதையும் காமிச்சுக்காம எவ்வளோ கெத்துன்ற…” என்று சொல்லி சிரித்தான்.
“இன்னும் மூணு நாள் தான் வளைகாப்புக்கு. நாம நாளைக்கே கிளம்புவோமா?…” என கேட்க,
“ஏன் போகாம, இன்னைக்கே கூட போயிருக்கலாம்…” என்று அவளும் சொல்ல,
“ரொம்ப படுத்தறேனா உன்னை. லோன்லியா பீல் பன்றியா பூர்வி?…” என அவளுக்கு தரவேண்டிய மாத்திரைகளை பிரித்து தர வாங்கி போட்டபடி அவனை முறைத்தவள்,
“இப்ப எதுக்கு இந்த சந்தேகம்?…” என்றாள் அனைத்தையும் போட்டு முடித்தவளாக.
“இல்லை இன்னைக்கே கூட போகலாம்னு வேகமா சொல்ற. உங்க வீட்டுல கூப்பிட்டப்போ கூட நான் அனுப்பலைன்னு சொல்லவும் நீயும் அக்ஸப்ட் பண்ணிக்கிட்ட. நிஜமாவே உனக்கு போக தோணலையா?…”
அப்போது தான் மாத்திரை போட்டதனால் மெதுவாய் வீட்டிற்குள்ளேயே நடக்க வைத்தபடி தானும் சேர்ந்து நடந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“போகாம இருக்க யாருக்குமே மனசு வராது தான். எனக்கும் ஆசை தான் அம்மா வீட்டுக்கு போகனும்னு. ஆனா அங்க என் கூட நீங்க இருக்க மாட்டீங்களே? அதான் போகலை…”என்று சிரிக்க அவளின் நெற்றியுடன் முட்டியவன்,
“ஓகே கொஞ்சம் நாள் அம்மா கூட நம்ம வீட்டுல இருப்போம். மாமனார் வேற மருமகளுக்காக லிப்ட் எல்லாம் போட்டு வச்சிருக்கார்…” என்ற கிண்டல் பேசியவன் அவளின் கையை பிடித்தபடி அன்றைய நிகழ்வுகளை அவளிடம் பகிர்ந்துகொண்டு இருந்தான்.
இப்பொழுதெல்லாம் தன் வேலை பற்றிய விஷயங்களை அவளிடத்தில் சொல்ல ஆரம்பித்து இருந்தான். அதுவும் அவளுக்கு தைரியமூட்டும் விதமாக சொல்வதில் தான் அவன் கை தேர்ந்தவன்.
மறுநாள் மாலையே அபூர்வாவை கூட்டிக்கொண்டு அங்கே வந்துவிட முத்துவேலுவுக்கு சந்தோஷம் என்றாலும் அவர்களுடன் இணைந்து அரட்டியடிப்பதில்லை.
மேலே மொட்டை மாடி வரை லிப்ட் போட்டிருப்பதால் அங்கிருந்த நாட்கள் எல்லாம் மொட்டை மாடி உணவு தான் இரவுகளில். அதிலும் முத்துவேலுக்கு தெரிந்தே.
“என்ன அன்பு இதெல்லாம்?…” என கேட்டவரிடம்,
“வாயும் வயிறுமா இருக்கற புள்ளைங்க ஆசையை கெடுப்பானேன்? அதான் அங்க கொண்டு போயிடறோம். கொஞ்ச நாளுக்குத்தான? வேணும்னா நீங்களும் வாங்க….” என சொல்ல,
“இல்லை இல்லை. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” என்று சொல்லிவிட்டார்.
“இவரு என்ன அன்பு இதெல்லாம்னு கேட்கும் போதெல்லாம் என்ன சிம்ரன் இதெல்லாம்னு காதுல விழுகுதுடா வாசு…” என்று சொல்லி வேறு புலம்பினார்.
வளைகாப்பு முடியவும் மாலை விமலாவின் வீட்டிற்கு அவளை அழைத்து சென்றுவிட மறுநாளே சென்று அவளை மீண்டும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டான் மருதவேல்.
வளைகாப்பிற்கு வந்த ராணி வீட்டிற்குள் மேலும் கூடியிருக்கும் வசதியை பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டவராக,
“என்னண்ணி லிப்ட் எல்லாம் போட்டிருக்கு?…” என்று கேட்க,
“பின்ன மருமகளுங்கன்னா என் புருஷனுக்கு உயிராச்சே. அதான் அவங்க காலு தரையில பாவாமா தாங்கறார். பேரப்பிள்ளைங்க வர போறதுல மனுஷனுக்கு கையும் ஓடல காலும் ஓடலை. ஒரே பெருமை தான். இப்பத்தான் என் புருஷனுக்கு புள்ளைங்களுக்கு பின்னால தான் மத்தவங்களுக்குன்னு தெளிச்சி கிடைச்சிருக்குது…” என்று வேண்டுமென்றே சொல்லி செல்ல ஆற்றமாட்டாமல் தன் அண்ணனிடம் பேச போனார் ராணி.
முத்துவேலோ முன்பு போல பேசாமல் ஓரிரண்டு வார்த்தைகளில் முடித்துக்கொண்டார்.
“சரியாய் பேசறது கூட இல்லைண்ணே நீங்க…” என்று கண்ணை கசக்க,
“என்னம்மா செய்ய? எல்லாரும் பாடம் கத்து குடுக்கறீங்க. இது கூட நீ கத்துக்குடுத்தது தான், பொண்டாட்டி புள்ளைங்களுக்கு மிஞ்சித்தான் மத்தவங்கன்னு. அது எனக்கு இப்பத்தான உரைச்சிருக்கு…” என சுருக்கென சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
இனி அங்கே தனக்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து கொண்ட ராணி ஒதுங்கிக்கொண்டார். முன்பு போல அன்புக்கரசியும் பேசுவதில்லை என்பதால் இன்னும் வருத்தமே.
தான் மட்டும் குடும்பத்திற்கு கட்டுப்பாட்டு இருக்க வேண்டும். ஆனால் மற்றவர்கள் குடும்பத்தை மீறி பழகவேண்டும், மதிக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் பெருத்த அடி அவருக்கு.
விமலாவிற்கு பெண்குழந்தை பிறந்திருக்க பார்க்க அப்படியே அன்புக்கரசியை உரித்து வைத்திருந்தது அக்குழந்தை.
“அன்பு அன்பு உன்னை மாதிரியே பேத்தி. அப்படியே உன்னை மாதிரி தான். அன்பு தான்…” என கையிலிருந்து இறக்காமல் வைத்து கூத்தாடிவிட்டார் முத்துவேல்.
“இந்த மனுஷன் என்ன என்னையைவே சொல்லி பினாத்திட்டு இருக்காரு. போற வர நர்ஸ் எல்லாரும் என்னைய பார்த்து தாத்தாவுக்கு உங்க மேல எம்புட்டு பாசம்னு வேற சொல்லிட்டு போறாளுக. எனக்கு வேற வெக்கமா வருது. இவர் வாயை அடைங்கடா…” என்று பொங்கி தள்ளிவிட்டார் அன்புக்கரசி.
அந்தளவிற்கு இருந்தது முத்துவேலின் ஆர்ப்பாட்டம். பேத்தியை யாருக்கும் கொடுக்காமல் வைத்து பார்த்துக்கொண்டே இருக்க,
“உத்து உத்து பார்த்தா மட்டும் என்னைய மாதிரியே உடனே வளர்ந்து வந்து நின்னுடுவாளா? முதல்ல தொட்டில்ல போடுங்க. கை சூட்டுக்கு பழகினா ரொம்ப கஷ்டம்…” என்று அதட்ட அதற்கும்,
“அன்பு பாரேன் உன்னை மாதிரியே முறைக்க கூட செய்யறா…” என்று தான் சிரிப்பார்.
“இவரு எப்பருந்துடா அன்பு அன்புன்னு ஆரம்பிச்சாரு…” என்று மகன்களிடம் கவலையுடன் கன்னத்தில் கை வைக்க,
“அன்புக்கு அவர் அடிமைன்னு சொல்லாம சொல்றாரும்மா…” என்று வாசுதேவகிருஷ்ணன் கிண்டல் பேச,
“இந்நேரம் அவங்கம்மா இருந்திருக்கனும். அதான் என் மாமியாரு. காதுல ரயில் இன்ஜின் மாதிரி புகை விட்டு ச்சூ மந்திரகாளின்னு ஆரம்பிச்சிருக்கும்…” என்றுவேறு சொல்லி மகன்களுடன் சேர்ந்து சிரித்தார்.
ஒன்பதாம் மாதம் தான் அபூர்வாவிற்கு வளைகாப்பு வைக்கவேண்டும் என வாசுதேவகிருஷ்ணன் திட்டவட்டமாக சொல்லிவிட அவனை மீறமுடியவில்லை எவராலும்.
பிரசவத்திற்கு பதினைந்து நாட்கள் முன்னதாக வளையல் போட்டு அவளை அழைத்து சென்ற பின்னர் எப்பொழுது வந்து நிற்பானோ என பதறி பதறி தான் இருந்தார் பூங்கோதை. ஏனெனில் நினைத்த நேரமெல்லாம் விழுப்புரத்தில் திடுதிப்பென்று வந்து நிற்பான். வருகிறேன் என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல்.
சரியாய் வலி வந்த நேரத்தில் அவனும் வந்துவிட அதிக சிரமம் கொள்ளாமல் அழகான ஆண்மகவை பெற்றெடுத்தாள் அபூர்வா.
அங்கே அவளுடன் மூன்று நாட்கள் தங்கி இருந்தான். மூன்று நாட்களும் பூங்கோதைக்கு சோதனை காலம். அவன் சாதாரணமாக பேசினாலும் கூட பதறித்தான் பதில் பேசுவார்.
இன்னும் இரண்டு நாட்களில் அபூர்வாவை ஐந்தாம் மாதம் தொடங்கி அழைத்து செல்வதாக இருக்க அப்பொழுதுதான் இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் உறங்க சென்றிருக்க கதவை அடைத்துவிட்டு பூங்கோதையும் மகளுடன் படுக்க சென்றார்.
நடு இரவில் கண் விழித்தவள் தாகமாய் இருக்க எழுந்து செல்ல முடியாமல் மகன் சிணுங்க ஆரம்பித்தான்.
“அம்மா குடிக்க தண்ணி வேணும்…” என சொல்லியவள் குழந்தையை தூக்கி பசியாற்றி கொண்டிருக்க அவளின் போன் வைப்ரேட் ஆகியது. கணவனின் அழைப்பில் புன்னகையுடன் எடுத்ததும்,
“பூர்வி கதவை திற…” என சொல்ல,
“என்னது? என்ன சொல்றீங்க?…” என்றாள் புரியாமல்.
“உனக்கு என்னைக்கு தான் நான் சொன்னது உடனே புரிஞ்சிருக்கு. கதவை திறக்க வா. கீழே வெய்ட் பன்றேன்…”
“ஹேய் நிஜமாவா சொல்றீங்க?…” என்றவள்,
“இதோ வரேன், வெய்ட் தம்பியை தொட்டில்ல போட்டுட்டு வரேன்…”
“இல்லை இல்லை, நீ பேபியோட வா. அவன் தான் என்னை பர்ஸ்ட் பார்க்கனும்…” என்றவனின் குரலில்,
“என்னவாம் உங்க பையனுக்கு வச்சிருக்கீங்க? நான் பார்த்தா ஆகாதா? சரி இருங்க…” என்றவள் போனை வைத்துவிட்டு அவளை தூக்கி தோளில் போட்டு முதுகில் தட்டியபடி கீழே இறங்க போக வாசுவோ அவளின் நடமாட்டம் தான் உள்ளே என நினைத்து கதவை லேசாய் தட்ட தண்ணீரை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்ற பூங்கோதை நின்றுவிட்டார்.
அவருக்கு நிச்சயம், இந்த சில மாதங்களில் வாசுதேவகிருஷ்ணன் வருகை எப்பொழுது வேண்டுமானாலும் இருந்ததால் இப்பொழுதும் அவன் தான் என்று சரியாக நினைத்தவர் சென்று கதவை திறக்க,
“ஹேண்ட்ஸ் அப்…” என சொல்லியவனின் தோற்றத்திலும் தன் முன்னே நீட்டிய கையில் இருந்த துப்பாக்கியையும் பார்த்தவர்,
“ஐயோ துப்பாக்கி, நானில்லை நானில்லை…” என்று அலறி கையில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை கீழே போட்டுவிட்டு,
“லட்சுமி, லட்சுமி…” என்று அலற வீடே கூடிவிட்டது.
இவர் போட்ட சத்தத்தில் மகிழின் பெண்ணும் பயந்து எழுந்து அழ ஆரம்பித்திருந்தாள்.
“ஐயோ அத்தை, இங்க பாருங்க. அத்தை. பயப்படாதீங்க…” என அவரின் பயத்தில் வாசுதேவகிருஷ்ணன் தான் பயந்து போனான்.
அப்போதும் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பார்த்து மிரண்டு மிரண்டு பின்னால் போனவர் முகத்தை மூடிக்கொண்டு,
“துப்பாக்கி துப்பாக்கி…” என சொல்ல சட்டென அதை உள்ளே வைத்தவன்,
“இங்க பாருங்க என் கையில எதுவுமே இல்லை…” என்று சமாதானம் செய்ய மகிழும் தினேஷும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
“என்னங்க இதெல்லாம்?…” என்று அபூர்வா கண்டிப்பான குரலில் கேட்க,
“பிறந்ததுல இருந்து என்னை இந்த ட்ரெஸ்ல அவனும் பார்க்கலை. இங்க வந்ததுல இருந்து நீயும் பார்க்கலை. அதான் உங்களுக்கு ஒரு சப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு ட்யூட்டி முடிஞ்சு அப்படியே கிளம்பி வந்தேன். ரெண்டு நாள் லீவ் போட்டு…” என சொல்ல,
“நீங்க மேலே போங்க மாப்பிள்ளை. காலையில பேசிக்கலாம். போய் ரெஸ்ட் எடுங்க…” என்ற தாமோதரன்,
“லட்சுமி கூட்டிட்டு போ…” என மகளுக்கு சொல்லிவிட்டு தினேஷின் குழந்தையை வாங்கி தோளில் போட்டு சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.
இன்னும் பூங்கோதை நடுங்கியபடியே இருக்க அவரை பார்த்தவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
அறைக்கு வந்தவன் நினைத்து நினைத்து பார்த்து சிரித்தான். குழந்தையை அவனின் கையில் கொடுக்காமல் கட்டிலில் கிடத்தியவள் அவனை போட்டு மொத்த,
“பன்றதெல்லாம் சேட்டை…” என்று திட்ட,
“உனக்கு புடிக்குமேன்னு உனக்காக தான்டி அப்படியே வந்தேன். ரசிச்சுட்டே என்னை பார்ப்ப பாரு. அந்த பார்வைக்காக தான் வந்தேன். இப்படி புஸ்ஸுன்னு போய்டுச்சு…” என்றவனின் சிரிப்பு இன்னும் அடங்காமல் இருக்க,
“உங்கம்மா என்னை அந்த ட்ரெஸ்ல பார்த்ததே இல்லயா? சும்மா என்னையே குறை சொல்லாத பூர்வி. நானும் பாவமில்லை. என்னமோ டார்கெட் பண்ணி அவங்களை கலாய்க்கிறதா என்னை கார்னர் பண்ணாத…” என்று அவளை கொஞ்ச,
“அவங்க முன்னாடி இந்த நேரத்துல துப்பாக்கி காமிச்சா பயப்படாம என்ன பண்ணுவாங்க? தெரியும்ல தீபாவளி பட்டாசுக்கே அம்மா பயப்படுவாங்கன்னு…” என்று சொல்ல தலைதீபாவளியை நினைத்து பார்த்தவன் இன்னும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.
அபூர்வாவை பயம் காட்டுகிறேன் என சரவெடியை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டு இவன் விளையாட்டு காட்ட வீட்டிற்குள் ஜன்னலுக்கு அப்பால் இருந்து எட்டி பார்த்தபடி பதறிக்கொண்டு இருந்த பூங்கோதைக்கு அவனின் விளையாட்டில் மயக்கம் வராத குறை தான்.
அவனின் கையில் பட்டுவிடுமோ என அபூர்வா வேகமாய் தட்டிவிட எதிர்பாராத விதமாக அது ஜன்னலில் பட்டு கீழே விட பார்த்துக்கொண்டிருந்தவரோ பதறி கீழே விழுந்து அடித்துப்பிடித்து அடுப்படிக்குள் ஓடிப்போனார் பூங்கோதை.
“என்ன ப்ளாஷ்பேக்கா?…” என இடுப்பில் கை வைத்து முறைக்க,
“தள்ளி நின்னு பேசாத பூர்வி…” என்று தன்னுடன் அமர்த்திக்கொண்டவன் இதழ்கள் அவளின் கழுத்தில் ஊர்வலம் போக,
“முதல்ல குளிக்கனும். அப்பறமா மத்த வேலை…”
“எது தூங்கறதா?…” என்று விஷமமாய் சொல்ல,
“நினைப்புத்தான். இன்னும் மூணு மாசம் நிஜ தூக்கம் தான்…” என்று கறாராக அவளும் சொல்ல,
“அதை அப்பறம் பார்த்துப்போம். இந்த பேசாம தூங்கறதை பத்தி நானும் கேட்டுட்டே இருக்கேன். சொல்லித்தரமாட்டேன்றியே…” என்றவனை இழுத்துக்கொண்டு குளியலறைக்குள் விட்டவள்,
“வந்தது பிள்ளையை பார்க்கன்னு. ஆனா பன்றதெல்லாம் வில்லங்கம். போய் குளிங்க முதல்ல….” என்று கதவை மூட,
“பூர்வி டவல்…”
“எடுத்து குடுக்கவெல்லாம் முடியாது. அங்கயே இருக்குது பாருங்க. யார்க்கிட்ட…” என்று சிரித்தவளின் முகமெல்லாம் காதல் வெளிச்சங்கள்.