நிஜம் – 32
மூன்று வருடங்களுக்கு பின்…
“பூர்வி…” என வீடே அதிரும் படி கத்திக்கொண்டு இருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“இப்ப எதுக்குடா வந்ததும் வராததுமா கத்துற? அப்பா தான் கூட்டிட்டு வர சொன்னாரு. நானும் விமலாவும் அவ அப்பா வீட்டுக்கு போய்ட்டு அப்படியே கூட்டிட்டு வந்தோம். இப்ப என்னவாம் அதுக்கு?…”
அன்புக்கரசி சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே உள்ளே இருந்து லிப்ட் ஓபன் ஆகும் சத்தத்தில் திரும்பி பார்க்க அங்கிருந்து சிறுவன் ஒடி வந்து அவனின் காலை கட்டிக்கொண்டான்.
“மிஸ் யூ டாடி…” என்ற குழந்தையை குனிந்து கைகளில் அள்ளிக்கொண்டவன்,
“செல்லக்குட்டி அப்பாவும் மிஸ் யூ தான்…” என அவனின் கன்னத்தில் முத்தமிட இவனை பார்த்துக்கொண்டே வந்தா அபூர்வா கையில் விமலாவின் குழந்தையான ஆராதனாவுடன்.
“ம்க்கும், இன்னைக்குத்தான் உன் மகன் தடுக்குல இருந்து எட்டி பாக்குதான் உன்னையவே. மிஸாம். எங்க மிஸ்ஸல்லாம் பயங்கரம் தெரியுமா?…” என பேரனிடம் வம்பிழுத்தார் அன்புக்கரசி.
மகனை பார்க்க அவனோ அவளை நன்றாக முறைத்தவன் மகனை மட்டும் தூக்கிக்கொண்டு மாடிக்கு செல்ல படியேற,
“இப்ப என்னன்னு அவளை போட்டு முறைக்கிற? அப்பா தான் எல்லாரையும் கூட்டிட்டு வர சொன்னாங்க. எல்லாரும் சேர்ந்து இங்க இருந்தே திருப்பதிக்கு கிளம்பனும். நீ ஒரு இடத்துலையும் நாங்க ஒரு இடத்துலையும் இருந்தா எப்படி கிளம்ப முடியும்? லட்சுமி அப்பா வீட்டுல நாளைக்கு நேரா இங்க வந்துருவாங்க…” என சொல்ல,
“அதான் கூட்டிட்டு வந்தாச்சுல. அப்பறம் என்னவாம்?…” என வாசு சொல்ல,
“அப்பப்பா, சிலுத்துக்குற. போடா. போயி உடுப்பை மாத்திட்டு வா. டிபன் செஞ்சு வைக்கறேன். எப்ப பாரு நேரங்கெட்ட நேரத்துல வரது…” என்று திட்டிக்கொண்டே அன்புக்கரசி செல்ல,
“மத்தியானம் மூணு மணி உங்களுக்கு நேரம் கெட்ட நேரமா?…” என்று சத்தமாக சொல்ல,
“எனக்கு எதுவுமே கேட்கலை…” என்று அடுக்களையில் இருந்து அவர் குரல் கொடுக்க சிரிப்புடன் திரும்பியவனை,
“வாசுப்பா…” என அபூர்வாவின் கைகளில் இருந்த ஆராதனா வாயில் வைத்து கடித்துக்கொண்டிருந்த விரல்களை எச்சிலுடன் அப்படியே அவனை நோக்கி கை நீட்ட மீண்டும் கீழே இறங்கி வந்து இன்னொரு பக்கம் அவளையும் சேர்த்து தூக்கிக்கொண்டான்.
“அம்முக்குட்டிக்கு அப்பாவை இப்பத்தான் தேடினீங்களா?…” என்று அவளிடம் செல்லம் கொஞ்சியபடி அபூர்வாவை ஓரக்கண்ணால் பார்க்க,
“பூவிம்மா பாப்பா புச்சு…” என்று நிறுத்தி நிறுத்தி குழந்தை சொல்ல,
“பூர்வி விடாம புடிச்சுட்டாங்களா?…” என்று சொல்லியவன்,
“என்னை தவிர பூர்விம்மா எல்லாரையும் புடிச்சு வைப்பா. என்னை மட்டும் கிட்ட சேர்க்கமாட்டா உங்க பூவிம்மா…” என்று சீண்டலாக அபூர்வாவுக்கு கேட்கும்படி சொல்லியவன்,
“வாங்க ரூம்க்கு போகலாம்…” என மாடியேற,
“ம்க்கும் புடிச்சாலும்…” என்று சொல்லி சோபாவில் போய் அமர போனாள் அபூர்வா. திரும்பி பார்த்தவன்,
“பூர்வி வான்னு சொன்னா தான் வருவியா? மேல வா…” என பாதி படியில் இருக்கும் பொழுதே அதட்டி அழைக்க,
“ம்ஹூம், எனக்கெதுக்காம்? வந்தா எதாச்சும் பேச நான் சொல்ல சண்டை தான் வரும்…” என்று மறுக்க,
“ஆமா, நாம சண்டை போட்டுக்கிட்டதே இல்லை பாரு. மேல வான்றேன்…”
“இங்க பாருங்க நான் நீங்க வரவும் தான் சேர்ந்து வரேன்னு சொன்னேன். அத்தை தான் இன்னும் எத்தனை வருஷத்துக்கு புருஷனை புடிச்சுட்டே வருவன்னு சொல்லி என்னை கூட்டிட்டு வந்துட்டாங்க. இப்ப கூட உங்க குரல் கேட்கவும் தான் கீழே இறங்கி வந்தேன்…”
வாக்குமூலம் கொடுப்பதை போல அபூர்வா அவனுக்கு சொல்லிக்கொண்டு இருக்க மைதாமாவை கரைத்த கையுடன் வெளியே வந்த அன்புக்கரசி,
“ஒப்புதல் குடுத்தாத்தான் சேப்பானாம இவன்?…” என வெளியே வந்து மகனை முறைத்து பார்த்தார் அன்புக்கரசி.
“இப்ப எதுக்குடா அவளை கோச்சுக்கற? ஏதோ ஒரு வேகத்துல அந்த மனுஷன் வார்த்தையை விட்டுட்டாரு. அவளும் ஆரம்பத்துல தனியா வராம உன்னோடவே வந்தா. அது வருஷக்கணக்காவா? இதுவும் அவ வீடு தான. அவளுக்கு அம்புட்டு உரிமையும் இருக்கு…”
அன்புக்கரசி பேச பேச வாசுதேவகிருஷ்ணன் பார்வை எல்லாம் அபூர்வாவினிடத்தில் தான். அவளுக்காக தான் அவன் பார்த்தது.
“அத்தை அவங்க எதுவும் திட்டலை. இன்னைக்கு வேற ஒரு ப்ளா…” என சொல்லும் பொழுதே அவளை பேசவிடாமல்,
“ப்ச், பூர்வி வா…” என அதட்டலாய் சொல்லியவன் மாடியேறிவிட,
“போ, போ. போறப்ப கறிவேப்பில்லை கொத்து தாரேன். மண்டையில நாலு அடி அடி. சரியா போயிரும் அவனுக்கு…” என்று சொல்லி உள்ளே செல்ல சிரிப்புடன் அவரை தொடர்ந்தவள் தர்பூசணி பழத்தை எடுத்து வெளியில் வைத்து நறுக்க ஆரம்பித்தாள்.
“எல்லாரும் வேப்பிலையை வச்சு தான் மந்திரிப்பாங்க. நீங்க கறிவேப்பில்லை சொல்றீங்க…”
“அதுக்குன்னு நான் வேப்ப மரத்தையா தேடி போகமுடியும்? போதும் போதும் இவனுக்கு கறிவேப்பில்லையே. அதுலயும் வேப்பிலை இருக்குல…” என சொல்லிக்கொண்டே மாவை பதம் பார்த்துவிட்டு மூடி வைத்தார்.
“என்ன செய்யறீங்க அத்தை?…” என கேட்க,
“மைதால கார போண்டாவும், இனிப்புக்கு ரவை அப்பமும் செய்ய போறேன். உனக்கு வேற எதுவும் வேணுமா லட்சுமி?…” என கேட்க,
“இப்பவே எதுக்கு அத்தை? இருங்க நான் வந்திடறேன். சேர்ந்து செய்வோம்…”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இது ஊறவே இருவது நிமிஷம் ஆகும். நீ முதல்ல மேல போயி இதை அவனுக்கு குடு. மாடில தண்ணி வச்சிருக்கியா? ஒரு பாட்டிலை தூக்கிட்டு போ. இல்லைன்னா அதுக்கும் கத்துவான்…” என்று அவளை அனுப்ப,
“சட்னி நான் வந்து பன்றேன்…” என சொல்லி செல்ல,
“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சுடன் ஹாலில் வந்து டிவியை போட்டு அமர்ந்தார் அன்புக்கரசி.
அன்று முத்துவேலும் வேலையாக வெளியே சென்றிருக்க மருதவேல் கடையில் தனக்கு உதவியாக இரு என விமலாவையும் அழைத்து கொண்டு சென்றுவிட்டான்.
இப்பொழுதெல்லாம் கடையின் முக்கால்வாசி பொறுப்பு மருதவேல் கைகளுக்குள் வந்துவிட்டது.
இடையில் முத்துவேலின் உடல்நல பின்னடைவால் அவரை ஓய்வுக்கு அறிவுறுத்த கடையின் வேலைகள் எல்லாம் மருதவேலிடம். அவ்வப்போது விமலாவும் அவனுக்கு துணைக்காக அழைத்துக்கொண்டு சென்று விடுவான்.
அபூர்வா கதவை திறந்துகொண்டு அறைக்குள் செல்ல அங்கே குழந்தைகள் மட்டுமே கட்டிலில் விளையாடிக்கொண்டு இருந்தனர். இவளை கண்டதுமே,
“வாசுப்பா பூவி, பூவி…” என்று கத்த கணவனை அறை முழுவதும் தேடியவள் பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சத்தத்தில் அவன் அங்கே இருப்பதை உணர்ந்து கொண்டு வந்த பழத்தையும் தண்ணீரையும் டேபிளில் வைத்தவள் சிறு சிறு கிண்ணங்களில் கொண்டு வந்த பழத்தை பிள்ளைகளுக்கு ஊட்டினாள்.
“ம்ஹூம், அதுதா…” என இன்னொரு பெரிய ப்ளேட்டில் இருந்த பழத்தை கேட்க,
“அது காரம், உஸ்ஸ், குட்டீஸ்க்கு உரைக்கும்…” என சொல்ல அவளை அருகில் அழைத்த இருவரும் இரு கன்னங்களிலும் குத்துவிட்டு,
“தும்த்ததா…” என்று சொல்லி சிரிக்க,
“என்னடா இது இன்னைக்கு புதுசா…” என கன்னத்தை தடவியபடி அபூர்வா கேட்டாள்.
“சேட்டை ப்ரைஸ், வாசுப்பா சொல்லி…” என்று இரண்டும் கை தட்டி குதிக்க,
“நான் பண்ணினது சேட்டைன்னா அதுக்கு இது பனிஷ்மென்ட்ன்னா உங்க வாசுப்பா பன்றதெல்லாம் எந்த கணக்குலடா சேர்ப்பீங்க? ஆனாலும் ரெண்டுபேரும் இப்படி வாசுப்பா கோண்டுகளா இருக்க கூடாது…” என்று இருவரையும் சேர்த்து அணைத்துக்கொண்டவள்,
“இதை சாப்பிட்டு முடிங்க கீழே போவோம். விம்மா வந்திருவாங்க…” என்று விமலாவின் வருகையை சொல்ல டிவியில் ரைம்ஸ் பார்த்தபடி இரண்டும் சமத்தாய் அமர்ந்து சாப்பிட்டபடி இருக்க சட்டென அவளின் மேல் தண்ணீர் தெளிக்கப்பட சில்லென்ற உணர்வில் திரும்பி பார்த்தாள்.
“ஹாய் யக்கா…” என்றான் தலையை துவட்டியபடி வந்தவன்.
“ப்ச், பிள்ளைங்க முன்னாடி அக்கான்னு சொல்லாதீங்கன்னு எத்தனை தடவை சொல்ல உங்களுக்கு? கேட்க மாட்டீங்களா?…” என்று முறைக்க,
“பதிலுக்கு அன்னைக்கு சொன்ன மாதிரி நீயும் என்னை தம்பின்னு கூப்பிட்டு பழிக்கு பழி வாங்கிரு. சரியா போய்டும்…” என்று சிரித்தவன் அவள் முறைத்து பார்க்கவும்,
“இந்த முறைப்பு ஒன்னு தான்டி நான் கேட்காமலே குடுக்கற. விடு, அவங்க கவனிக்கவே இல்லை. நீ ஏன் நான் மெதுவா சொன்னா கூட கண்டுபிடிக்க?…” என்று அவளையே திருப்பியவன் அவளின் காதை பிடித்து திருகியபடி,
“உன்கிட்ட சொல்லிட்டு தான போனேன்? இன்னைக்கு வெளில போறோம்னு. அப்பறம் ஏன்டி இங்க கிளம்பி வந்த?…” என்று முறைக்க,
“ஆஹா நீங்க வெளில கூட்டிட்டு போற லட்சணம் தான் எனக்கு தெரியுமே. வழக்கம் போல லாங் ட்ரைவ் அந்த நம்ம பர்ஸ்ட் மீட் ஆக்ஸிடென்ட் ப்ளேஸ்க்கு. வழக்கம் போல அதே ஹைவேஸ் ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சு திரும்ப வீட்டுக்கு. எனக்கு போர் அடிச்சு போச்சு…”
“அதெல்லாம் நம்ம காதல் சின்னம்டி. அதுவும் இன்னைக்கு என்ன நாள்?…” என்று அவளிடம் சண்டைக்கு நிற்க,
“சொல்லிருங்களேன்…” என்றாள் அவனின் கோபத்தை கண்டுகொள்ளாத குரலில்.
“உன் வாயால என்னை தம்பின்னு என்னை தத்தெடுத்தியே, அந்த பொன்னான நாள். கொண்டாட வேண்டாமா?…” என அவன் கேட்ட விதத்தில் பக்கென்று சிரித்தவள்,
“உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா?…” என கேட்க,
“பூவிம்மா பினிஷ்…” என்று இரு பிள்ளைகளும் பழத்தை உண்டு முடித்திருந்தனர்.
“வெரி குட். இப்ப போய் மௌத் வாஷ் பண்ணிடு வாங்க…” என பிள்ளைகளை அனுப்பியவள் அவனை பார்க்க அதற்குள் ஒரு போன் வந்ததும் அதில் மூழ்கி போனான் வாசுதேவகிருஷ்ணன்.
“இப்போதைக்கு திரும்ப மாட்டார்…”என முணுமுணுத்தவள் பிள்ளைகள் வரவும் சத்தம் போடாமல் அவர்களை அழைத்துக்கொண்டு கீழே சென்றுவிட்டாள்.
“என்னம்மா வந்துட்ட?…” அன்புக்கரசி கேட்க,
“அவங்களுக்கு போன் வந்திருக்குது அத்தை. அதான் கூட்டிட்டு வந்தேன். அங்க இருந்தா விளையாடிட்டு இருப்பாங்க. அவருக்கு தொந்தரவா இருக்கும்…” என சொல்ல பிள்ளைகளுக்காக கார்ட்டூன் சேனலை மாற்றினார் அன்புக்கரசி.
“நீங்க பாருங்கத்தை, நான் பில்டிங் செட் குடுக்கறேன். ரெண்டுபேரும் அதை செய்யட்டும்…” என்று விளையாட வைத்திருக்கும் பொருட்களை எடுத்து வந்து அவர்களுடன் கீழே அமர்ந்து கொள்ள அன்புக்கரசியும் டிவியை ஆஃப் செய்துவிட்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.
ஒவ்வொரு நிறத்தையும், ஒவ்வொரு வடிவங்களையும் விலக்கிக்கொண்டே அவர்களுடன் சேர்ந்து விளையாட,
“பூர்வி…” என மேலிருந்து அவன் அழைத்ததுமே,
“போ நான் பார்த்துக்கறேன் இவங்களை…” என சொல்லவும்,
“வருணேஷ் சேட்டை பண்ணாம இரு. பாட்டியை டென்ஷன் ஆகாம பார்த்துக்கோ…” என சொல்லி ஆராதனாவிடமும் சொல்லிவிட்டு மாடிக்கு செல்ல,
“இங்க நான் சாப்ட்டேனா என்னன்னு கூட கவனிக்காம ஏண்டி போன?…” என்ன்று வந்ததும் அவள் மீது பாய்ந்தவன் சட்டென முகத்தை மாற்றி,
“நிஜமாவே போர் அடிக்குதா?…” என்றான் கல்மிஷ புன்னகையோடு.
“இதை கேட்கத்தான் கூப்பிட்டீங்களா? நம்பலைன்னா போங்க…” என்று முறுக்கிக்கொள்ள,
“சரி நம்பிட்டேன். சொல்லு இப்போ வேற எங்க போகலாம்?…” என அவளின் தோள் மீது மாலையாய் கைகளை கோர்த்துக்கொண்டு கேட்க,
“எங்கயும் வேண்டாம். பக்கத்துல இருங்க. இந்த கண்ணுக்குள்ள நான் தேடிட்டே இருக்கேன். இன்னும் இன்னும்…” என்று மையலுடன் அவனிடம் புன்னகை சிந்தியவள் அவனின் மார்பில் சாய,
“மயக்கற கண்மணி. இப்பலாம் நிறைய பேச பழகிட்ட. திட்ட பழகிட்ட. முக்கியமா என்னை கொஞ்ச கூட பழகிட்ட…” என்று அவளை தன் அணைப்பிற்குள் பொதிந்தபடி அவனும் சொல்ல,
“வாசுப்பா…” என்ற குரல் கீழே கேட்க பதறி விலகியவன்,
“கதவை பூட்ட மாட்டியா நீ? பாரு பே-ன்னு திறந்து வச்சு இப்ப ஆரம்பிச்சுட்டாங்க…” என்று சலித்தவன்,
“வா…” என்று கீழே இறங்கினான்.
அங்கே முத்துவேல் இரு கன்னத்திலும் கையை வைத்தபடி பாவமாக அமர்ந்திருக்க அன்புக்கரசி சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றார்.
“என்னடா பண்ண?…” என மகனை கேட்க,
“நான் தாத்தா தும்தத்தா ப்ளே பண்ணேன். பை மிஸ்டேக்கா தாத்தா பெய்னிங்….” என்று குனிந்து ஒரு கையின் உள்ளங்கையை விரித்து உன்னொரு கையின் விரல்களை மடக்கி குத்துவிட்டு, “தும்த்தத்தா” என சொல்லி குனிந்து நிமிர,
“அடேய் மகனே…” என வேகமாய் வாசுதேவகிருஷ்ணன் வந்து அவனை தூக்கி,
“தப்பு வருண், என்ன பழக்கம் இது தாத்தாவை டிஷும் பண்ணலாமா?…” என கண்டிப்புடன் கேட்டவன்,
“அம்முக்குட்டி நீயுமா?…” என சிரிக்காமல் கேட்டதுமே எதுவோ தப்பு செய்துவிட்ட பாவனையுடன் அவனின் கால்களை கட்டிக்கொண்டாள் குழந்தை.
“வாசுப்பா, நோ நோ கோச்சு…” என கட்டிக்கொள்ள அனைவருக்குமே முகத்தில் புன்னகை. கீழே அமர்ந்து கொண்டவன் இருவரையும் மடியில் அமர்த்திக்கொண்டு,
“இல்லைடா குட்டீஸ், தாத்தா பாவம்ல, வயசானவங்க. நாம விளையாடலாம். டிஷ்யூம் எல்லாம் பண்ண கூடாது தானே?…”
“ம்க்கும், அவங்க அவங்கப்பாட்டுக்கு விளையாடிட்டு தான் இருந்தாங்க. உங்கப்பா வரவும் நீ இவங்களுக்கு புது கேம் சொல்லி குடுத்தன்னு சொல்லவும் அவருக்கு புரியலை. உடனே செஞ்சு காமிக்க சொல்லவும் ரெண்டும் ஆளுக்கொரு கன்னத்துல குத்திருச்சுங்க. புள்ளைங்க சொன்னா புரியாட்டிலும் புரிஞ்ச மாதிரி தலையாட்டிட்டு கையை தட்டிட்டு போகனும்…”
“ம்மா, அதுக்கு நீங்களும் ஒன்னும் சொல்லாம இருப்பீங்களா?…” என்று தாயை முறைத்தவன்,
“நானா கேட்க சொன்னேன்? அடுப்புல எண்ணையை காய வச்சிருக்கேன். போயி அப்பத்தை உருட்டுறேன்….” என சொல்லிவிட்டு செல்ல முத்துவேல்,
“அன்பு…” என்று அழைத்தவரை கண்டுகொள்ளாமல்,
“இவரு ஒருத்தரு அன்பு கொண்டா தண்ணி சொம்புன்னு…” என ஓடிவிட அதன் பின்னர் அங்கேயே அமர்ந்து குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருக்க மருதவேல் வந்துவிட்டான் விமலாவுடன்.
“மாப்பா…” என்று அவனை ஆர்ப்பாட்டத்துடன் சென்று அணைத்துக்கொள்ள,
“வருக்குட்டி. எப்போ வந்தீங்க. அப்பா கடையில வேலை இருந்ததால வர முடியலை கண்ணா…” என அவனை மேல தூக்கி போட்டு பிடித்தவன்,
“எப்போ வந்தடா?…” என தம்பி மகனுடன் சோபாவில் அமர வாசுதேவகிருஷ்ணன் அப்படியே சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டான். லேசாய் தலை வலிப்பதை போல இருக்க கண்கள் எரிச்சலில் காய்ந்தது.
“என்னடா உக்கார்ந்துட்டே தூங்கற?…” என கேட்க தலையை மட்டும் அசைத்துவிட்டு அப்படியே இருந்தான்.
“விம்மாக்கூட வந்தேன்…” என்று சொல்ல,
“ஏன்டி என்கிட்டே சொல்லவே இல்லை…” கேட்டுவிட்டு,
“உன் விம்மா என்கிட்டே சொல்லவே இல்லைடா குட்டி…” என அவனை கொஞ்சிவிட்டு அப்போதுதான் தந்தையை பார்த்தான்.