சில நொடிகள் தான் விதுரன் அப்படியே நின்றது. அவள் வைத்துவிட்டு சென்றவற்றை எல்லாம் நன்றாக பார்த்தவன் கதவை தட்ட அவள் எழுந்து கொள்ளவே இல்லை.
அதன் பின்னரே திறக்க முயற்சிக்க தாள் போடாத கதவு திறந்துகொண்டது. இதை முதலிலேயே செய்திருக்கலாமே என நினைத்தபடி வேகமாய் உள்ளே பார்த்தால் ரோஜா கண்ணை மூடி படுத்திருந்தாள்.
“ஹேய் ரோஜா, என்னடா இது?…” என அவளருகே அமர்ந்து எழுப்ப மெதுவாய் தலையை அவனின் மடியில் வைத்துகொண்டாள். அவளை அணைத்தபடி நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவன் சிறிது நேரம் கண்மூடி இருந்தான்.
“நீங்க தான சொன்னீங்க, ஒரு விஷயம் நமக்கே கன்பார்ம் ஆகாம யார்ட்டையும் சொல்ல கூடாதுன்னு. எனக்கு சொல்லவும் யோசனையா இருந்தது. அதான் சரின்னு எனக்கு தெரிஞ்ச ஒரு லேடி டாக்டர்கிட்ட போனேன் நேத்து…”
“நேத்தே போயிருக்க ஏன் சொல்லலை?…” என கேட்டவன் மனது வெகுவாய் சுருண்டு போனது.
அன்று தான் பேசியது எந்தளவிற்கு அவளை காயப்படுத்தியிருக்கிறது என அவனால் இப்பொழுது புரிந்துகொள்ள முடிந்தது.
“சொல்லலாம் தான். ஆனா அன்னைக்கு மாதிரியே இப்பவும் இல்லன்னா? அதான் சொல்லலை. இப்ப அவங்க க்ளாரிபிகேஷன் குடுத்த பின்னால தான் வீட்டுக்கு வர சொல்லலாம்னு கூப்பிட இருந்தேன். ஆட்டோ பேசும் போது கூப்பிட்டீங்களா எடுக்க முடியலை…”
“எவ்வளவு தைரியம் உனக்கு? இவ்வளோ பெரிய விஷயத்தை சொல்லாம விட்டிருக்க. தனியா போயிருக்க. ஏன்டா இப்படி பன்ற? அன்னைக்கு பேசினதுக்கு நான் ஸாரி கேட்டுக்கவா?…” என்றவனை வயிற்றோடு அணைத்தவள்,
“ம்ஹூம், அன்னைக்கு நானும் தப்பு தான் செஞ்சேன். நானும் சொல்ல வேணா, நீங்களும் சொல்ல வேணா. ரெண்டுக்கும் சரியா போச்சு…” என்றவளின் குரலில் இருந்த சோர்வு விதுரனுக்கு கவலையை கொடுத்தது.
“அம்மாவுக்கு சொல்லிடறேன்…” என்று மொபைலில் தாய்க்கு முதலில் சொல்லி அவரே தந்தைக்கு சொல்லுமாறு சொல்லி வைத்துவிட்டு ரோஜாவை பார்க்க அவள் இவனிடம் எதையோ எதிர்பார்த்து முகம் பார்த்தாள்.
“என்ன எல்டி?…” என்றான் குழைவான குரலில்.
“நீங்க அங்கிள்ல இருந்து டாடி ஆகிட்டீங்க…” என சொல்லி சிரிக்க,
“ஹ்ம்ம், எனக்கு இதை எப்படி எக்ஸ்போஸ் பன்றதுன்னு சத்தியமா தெரியலை ரோஜா. பட் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கு. பாரேன் நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சுக்குது. உன்கிட்ட எப்படி ரியாக்ட் பண்ண? என்னென்னவோ தோணுது. ஆனா எதுவும் முடியலை. வார்த்தை வரலை…”
பேச பேச அவனின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கி மின்ன அவனின் வார்த்தைகள் கூட அடைத்துக்கொண்ட தொண்டையில் இருந்து சிரமப்பட்டு வெளிவருவதை போல இருக்க அவனின் சந்தோஷத்தை பார்வையால் பருகினாள்.
“சொல்லு இதுக்கு என்ன பண்ணனும்? உனக்கு எப்படி இருந்துச்சு. அப்பவே எனக்கு சொல்லனும்னு தோணலையா உனக்கு?…” சற்று ஆதங்கத்துடன் வந்தது. அவனின் கேள்வியில் தவிப்பில் விழிகளை தாழ்த்திக்கொண்டவள் மெதுவாய் எழுந்து அவனின் தோள் சாய்ந்தாள்.
“அழனும் போல இருந்துச்சு. வேற எதுவும் இல்லை. அதுவும் கொஞ்சம் பயம்…” என்று சொன்னவளின் கண்களில் இன்னமும் அந்த பயம் மிச்சமிருப்பதை பார்த்தான்.
“என்ன பயம் என் லிட்டில் டெவிலுக்கு? அதுவும் அங்கிள் நான் இருக்கப்போ?…” என்று ஆதுரமாய் அவளின் தலையை வருடி கேட்க,
“எனக்கு எதுவும் தெரியாது. குட்டீஸ்னா விளையாடுவேன். ரொம்ப குட்டி குழந்தைன்னா தூக்கவும் கூட தெரியாது. பழக்கம் இல்லை. விஸ்கி பேபியை கூட நான் ரொம்ப கொஞ்சினதில்லை. அவ விடமாட்டா. அதனால வெளில அந்தளவுக்கு க்ளோஸ்ட் சர்க்கிள் இல்லை…”
“இதெல்லாம் தெரிஞ்சிட்டு யாரும் அம்மா ஆக முடியாது எல்டி…” என விதுரன் சிரிக்க,
“அது எனக்கும் தெரியும் எல்ஈடி…” என்று அவனின் காதை பிடித்து இழுத்தவள்,
“சொல்லும் போது ஊட பேசாம கேட்கனும். ஹ்ம்ம் சொல்லனும். ஓகே…” என மிரட்ட,
“ஓகே…” என்றவன் முகத்தில் தெரிந்த கேலியை கண்டுகொள்ளாதவள்,
“இப்ப வரைக்கும் எங்க என்ன பேசறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்…”
“யாரு நீ? உனக்கு பேச தெரியலை. அதுவும் எங்க என்ன பேசனும்னு…” என்று விதுரன் விளையாட்டாய் முறைக்க,
“ப்ச் அங்கிள். மூச். கண்டினியூட்டி மிஸ் ஆகுது…” என்று அவனின் வாயை கைகளால் பொத்தியவள் இன்னும் வாகாய் திரும்பி அமர்ந்து கொண்டு,
“எனக்கே எதுவும் தெரியலை. அப்போ நான் என்ன சொல்லி குடுப்பேன் பிள்ளைக்கு? என்னை மாதிரியே சொல் பேச்சு கேட்காம வளர்ந்துட்டா? ராஜமாதா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?…” என அப்பாவியாய் கேட்டவளை அள்ளிக்கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு.
“சோ ஸ்வீட் லிட்டில் டெவில். ஆனா பாரு. கண்டிப்பா உன்னை மாதிரியே மட்டும் தான் வேணும். குட்டி ரோஜா. என்னோட ப்ரின்சஸ்க்கு நான் சொல்லிக்குடுப்பேன் உன்னோட அடாவடி எல்லாம்…” என்று சிரிக்க,
“ம்ஹூம் இந்த உலகத்துக்கு இந்த ஒரு ரோஜா போதும்…” என உள்ளடங்கிய குரலில் ரோஜா சொல்லியதன் அர்த்தம் ஓரளவு யூகித்தவன்,
“நான் சேகரனும் இல்லை, நீ வளர்மதியும் இல்லை. ரோஜா விதுரன் குழந்தைகள் அவங்களோட தனித்துவம் மாறாம சந்தோஷமா வளருவாங்க. ஏனா சுமக்க போறது ரோஜா. பார்த்துக்க போறது விதுரன்….” என்றவனின் வார்த்தையில் இலக்கில்லாமல் பறந்தாள் ரோஜா.
“அங்கிள்…” என்றவளை அணைத்துக்கொண்டவனின் மென்னகையில் தன் சுமையெல்லாம் ஒரு நொடியில் பனியென விலகியதை போல அவனின் மார்பில் சாய்ந்துகொண்டவள்,
“இது இதுதான் வேணும் எனக்கு…” என சொல்லி,
“டாக்டர் உங்களை பார்க்கனும்னு சொன்னாங்க. நான் கேட்டேன். என்னோட ஹெல்த் பத்தி பேசனும்னு சொன்னாங்க…” என்றவளின் குரலில் இருந்த பதட்டம் விதுரனை பற்றினாலும் அவன் நிதானமாக,
“நம்மளோட பேமிலி டாக்டர்கிட்ட காண்பிப்போம். அம்மா வரட்டும். நீ எதுக்கும் பயப்பட கூடாது. இதென்ன இப்பலாம் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ரோஜா நெவர்ஸ் ஆகற?…” என்றவன் அவளிடம் பேச்சுக்களை மாற்ற வேறு விஷயங்கள் பேசி பேசி உறங்க வைத்துவிட்டான்.
கயல்விழி வரும் பொழுது நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் அவள் இருக்க வந்ததுமே விதுரனை கட்டி அணைத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டார் கயல்விழி. அவருடன் வைத்தீஸ்வரியும் ஹர்ஷியும் வந்திருந்தனர்.
“திடீர்ன்னு சொல்ற. எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை…” என வைத்தீஸ்வரி சொல்ல கயல்விழி டேபிளில் இருந்த மருத்துவ சம்பந்தமான பொருட்களை கண்டு விதுரனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அதை எடுத்து பார்த்தவர் அதில் இருந்த தேதியையும் பார்த்து அவனிடம் கேள்வியாய் முறைத்தார்.
“என்ன விது இது? நேத்தே செக்கப் போன மாதிரி இருக்கே. சொல்லியிருந்தா நாங்க நேத்து வந்திருப்போம் தானே?…” என்றவர் குரலில் மிதமிஞ்சிய வருத்தமிருந்தது.
“கல்யாணத்துக்கும் நாங்க தேவைப்படலை. இப்பவும் கூடவா?…” என்று கேட்டுவிட்டு வாசல் கதவின் மேல் சாய்ந்து அவர் நின்றுகொள்ள,
“அம்மா சொல்றது நிஜமா விது?…” என தன் சித்தியும் கேட்க,
“ஐயோ சித்தி எனக்கே அம்மாவுக்கு கால் பன்ற பத்து நிமிஷம் முன்ன தான் தெரியும்…” என்றவன்,
“அன்னைக்கு வாமிட் பண்ணிட்டான்னு எல்லாருக்கும் கால் பண்ணி சொல்லிட்டான்னு நான் சத்தம் போட்டேன்….” என்றவன் அன்று தான் பேசியதை சொல்லி ரோஜாவின் பதிலையும் சொல்ல,
“தப்பு விது, அன்னைக்கே சொன்னேன் ரோஜாவை அவங்க வீட்ல நார்மலா ட்ரீட் பண்ணலைன்னு. சம்திங் எதுவோ அவளை போட்டு படுத்துது. இப்பதான் புரியுது. கல்யாணம் ஆகி அந்த இன்சிடென்ட் முன்னாடி எல்லாம் அவளா சும்மாவேணாலும் கால் பண்ணி கலகலன்னு பேசும் பொண்ணு. திடீர்ன்னு பேச்சும் குறைஞ்சிருச்சு…”
“நாங்களா கேட்டா, நாங்களா கால் பண்ணினா மட்டும் தான் அவ பேசுவா. அப்பவும் எதுவும் முடியலைனாலும் சொல்லிக்கிட்டதில்லை. சின்ன சின்ன விஷயத்தை கூட ஷேர் பண்ணின பொண்ணு, இப்ப புரியுது எதையும் பகிர்ந்துக்க யாருமில்லாம இருந்திருக்கான்னு…” வைத்தீஸ்வரி,
“ஓஹ் காட், நிஜமா நான் அதுக்கு பின்னால எதுவுமே சொல்லலையே. அவளும் அதுல வருத்தம் போல எதையும் காமிச்சுக்கலை…” என தலையில் கைவைத்து விதுரன் அமர்ந்துவிட அவனருகே வந்த கயல்விழி,
“விது, என்ன இது? இதுக்கு போய் பீல் பண்ணிட்டு. அவ நார்மலாகிட்டா உனக்கு இந்த டென்ஷன் இருக்காது. எழுந்துக்கட்டும். எதையும் சொல்லி புரியவைக்க முடியாது. தானாவே போக போக புரிஞ்சுப்பா. நீ கூலா இருந்தா மட்டுமே அவளும் ரிலாக்ஸா இருப்ப…”
இப்படி மேலும் அரைமணிநேரம் நகர பொதுவாய் பேசிக்கொண்டிருந்தனர். ஹாஸ்பிட்டலுக்கு செல்லும் முன்பு சடகோபன் சொல்ல சொல்லியிருந்தார் தான் நேராக அங்கே வந்துவிடுவதாய்.
இப்போதைக்கு வேறு யாரிடமும் சொல்லவேண்டாம் என வைத்தீஸ்வரி சொல்ல அதை சரி என்றுவிட்டனர் குடும்பத்தினர்.
அரைகுறையாய் சாப்பிட்டு உறங்கியதாலோ என்னவோ ரோஜா விழித்துக்கொண்டாள்.
எழுந்துகொள்ளாமல் சோம்பலுடன் புரண்டு படுத்தவள் விதுரனை தேட வெளியே பேச்சு சத்தம் கேட்டதும் எழுந்து வந்தாள்.
“ரோஜா…” என கயல்விழி வேகமாய் அவளின் கன்னத்தில் முத்தமிட்டவர் அப்படியே அணைத்துக்கொள்ள அத்தனை நேரமிருந்த கம்பீரத்தை எல்லாம் விட்டொழித்திருந்தார்.
இதை மற்றவர்கள் ஆச்சர்யம் கலந்த புன்சிரிப்போடு பார்த்து நிற்க வைத்தீஸ்வரியும், ஹர்ஷியும் அவளின் கையை பிடித்து வாழ்த்து சொன்னார்கள்.
“என்னம்மா இப்படி பண்ணிட்ட? ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லியிருந்தா நானே வந்திருப்பேன் இல்லையா? எங்களுக்கு இதை விட வேற என்ன வேலை சொல்லு?…” என்று மென்மையாய் கடிந்துகொள்ள அப்போதும் விதுரனை குற்றம் சாட்டும் பார்வை பார்க்காமல் அவனிடம் கண்சிமிட்டி புன்னகைத்தாள்.
“வந்து உட்கார்…” என்றவர் அவளிடம் யார் அந்த டாக்டர் என்ன ஏதென்று விசாரிக்க அவளோ அதற்கு பதில் சொல்லாமல்,
“பசிக்குது அத்தம்மா…” என வயிற்றை பிடித்துக்கொண்டு கேட்க,
“வாயாடி இதை சொல்ல உனக்கு இத்தனை மாசம் ஆகிடுச்சுல. ராஜமாதா ராஜமாதான்னு சொல்லிட்டு…” என்று கயல்விழி அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவர்,
“இரு கொஞ்சம் நேரத்துல வரேன்…” என எழுந்து வைத்தீஸ்வரியுடன் சேர்ந்து சமைக்க சென்றார்.
“லஞ்ச் சாப்பிடாம இருப்பாங்களா ரோஜா? என்ன நீ?…” என்று வைத்தீஸ்வரி கேட்க,
“அங்க ஹாஸ்பிட்டல் வெளில சாப்பிட்டு தான் வீட்டுக்கே வந்திருக்கா சித்தி…” என விதுரன் மாட்டிவிட,
“இனிமே ஹோட்டல் ஃபூட் எடுத்துக்க கூடாது. குறைச்சுக்கோ…” என்று சொல்லிக்கொண்டே சட்னி அரைத்துவிட கயல்விழி வெங்காய தோசை வார்த்து எடுத்துவந்துவிட்டார் அவளுக்கு.
“அம்மா எனக்கும்…” என விதுரன் கேட்க,
“பெரியம்மா எனக்கும் எனக்கும்…” என ஹர்ஷியும் போட்டிக்கு வர ஊற்றி முடித்து சாப்பிட்டு கிளம்பினார்கள் ஹாஸ்பிட்டலுக்கு.
சடகோபனின் தம்பி பெண் வேலை பார்க்கும் மருத்துவமனை தான் அது. அவள் அங்கே நரம்பியல் மருத்துவர்.
“என்ன பெரியம்மா கால் பண்ணி அப்பாயின்மென்ட் வாங்க சொன்னீங்க?…” என வந்து நின்றாள் அப்பெண்.
ரோஜாவிற்கு அவளின் முகம் மங்கலாக நினைவிருந்தது. அருப்புக்கோட்டையில் வைத்து பூஜை அன்று பார்த்தது அவளை. அதன் பின் இன்றுதான் பார்க்கிறாள். வந்தவள் ரோஜாவை கவனிக்காமல் கயல்விழியிடம் பேச,
“உன் அண்ணிக்குத்தான் பார்க்க வந்தோம் அபி…” என்று சொல்லியவரின் குரலில் அவளிடம் கேள் என்னும் மறைமுக கட்டளை இருந்தது.
குடும்பத்திலேயே சற்று ஒட்டாத குணம் கொண்டவள் விதுரனின் திருமணம் அவளுக்கு கொஞ்சமும் பிடித்தமில்லாத ஒன்று. ரோஜாவை வெறுக்கவும் இல்லை. பிடிக்கவும் இல்லை என்னும் பாங்கு தான் அவளிடத்தில். அதனாலே பேசுவதை தவிர்த்திருக்க இப்பொழுது பெரியம்மாவின் பேச்சை மீற முடியாதே.
“நல்லா இருக்கீங்களா அண்ணி?…” என்று வேண்டாவெறுப்பாய் அவள் கேட்க,
“ஹ்ம்ம்…” என்று மட்டுமே ரோஜா பதில் சொன்னாள். இருவரையும் பார்த்த கயல்விழி,
“என்ன அபி, இங்கயே வெய்ட் பண்ணனுமா? இல்லை நாங்களே போய் பார்த்துக்கலாமா?…” என அழுத்தமாய் கேட்க,
“இதோ, போலாம் பெரியம்மா…” என சட்டென அவர்களை அழைத்துக்கொண்டு அவள் முன்னே செல்ல,
“இவ எப்பத்தான் மாற போறாளோ ஹர்ஷி….” என வைத்தீஸ்வரி மகளிடம் முணுமுணுக்க,
“அவ பாட்சா எல்லாம் பெரிம்மாக்கிட்ட பலிக்காதும்மா. அவளோட மைண்ட் வாய்ஸ் கூட கேட்ச் பண்ணித்தான பெரியம்மா அண்ணிட்ட அவளை பேச வச்சது…” என்று சொல்ல தாயும் ஆமோதித்தார்.
அபியின் மனதிலும் அதுவே. “இதுவரை மொத்த குடும்பத்தையும் மாமியார் ஆண்டார், இனி மருமகள்” என்ற எரிச்சல். ஆனால் அது வன்மம் என்றளவில் இல்லை.
அனைத்திற்கும் கயல்விழியிடம் சென்று நிற்பது தான் சற்று கோபத்தை தரும். அதுவும் சில நேரங்களில் தான். இப்பொழுது ரோஜாவின் வரவின் பின்னர் எதற்கெடுத்தாலும் ரோஜா ஆஹா ரோஜா ஓஹோ என தன் முன்னே பேச பேச இன்னும் கடுப்பாக்கியது அபியை.
“டாக்டர் ப்ரீ தான் பெரியம்மா. வாங்க…” என்று அந்த அறைக்குள் அழைத்து செல்ல,
“வாங்க கயல்விழி, எப்படி இருக்கீங்க?…” என கேட்டுக்கொண்டு மற்றவர்களிடமும் ஒரு வரவேற்பான தலையசைப்பை தர பதில் சொல்லிய கயல்விழி,
“ஓகே அபி, நீ உன் ட்யூட்டியை பாரு. கிளம்பறப்போ கூப்பிடறேன்…” என்றதும் தலையசைத்து கிளம்பியவள் விதுரனை முறைத்துவிட்டே செல்ல அவனுக்கு சிரிப்பு.