“வளர் நேரமாகுது, கிளம்பு. முதல் நாள் ஸ்கூலுக்கு போறப்ப நல்ல ஜம்முன்னு இருக்க வேண்டாமா? இந்த சடையை ஒழுங்கா போட்டுவிடு…” என்று மனைவியை கடிந்து கொண்டிருந்தார் சேகரன்.
ரோஜா முதன் முதலில் பள்ளி செல்லும் நாள். மூன்று வயது மட்டுமே நிரம்பிய குழந்தை தன்னை எங்கே அழைத்து செல்ல இருக்கிறார்கள் என்று தெரியாமல் தத்தி தத்தி தாயின் பின்னால் நடந்து கொண்டிருந்தாள்.
“நீ மட்டும் போய்ட்டு வான்னா கேட்கறதே இல்லை. நானும் வரனும்னு என்ன அவசியம்?…” என சேகரன் திட்டிக்கொண்டிருந்தாலும் பெரிய மகளின் புத்தக பையில் அனைத்தும் இருக்கிறதா என்றும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“பார்த்து போய்ட்டு வாங்கடா. ரோசா குட்டிய நல்லா பாத்துக்க சொல்லுங்க. சூதுவாது தெரியாத புள்ள…” என சேகரனின் தாய் செல்லம்மாள் சொல்லிக்கொண்டிருக்க,
“அதெல்லாம் பாத்துப்பாங்கம்மா, கிளம்பும் போது நீங்க வேற தொணதொணன்னு…” என்று நேரமாகும் அவசரத்தில் அவர் பேச,
“பிரபு, பாப்பாவை கூட்டிட்டு வாசலுக்கு போ, ஸ்கூல் பஸ் வந்திரும்…” என வளர்மதி சொல்ல,
“ஏன்டா சொல்ல மாட்ட? ரோஜா என்ன மூத்தவ கணக்கா அடிச்சு வாங்க தெரிஞ்சவளா? அடிச்சுட்டு கேட்டா கூட குடுக்குற புள்ளடா. மூத்தவள சொல்லு, ஊரையே வித்துட்டு வருவா…” என்று பிரஷாந்தியை சொல்லி நொடித்துக்கொள்ள எட்டு வயது பிரஷாந்தி பாட்டியை முறைத்து பார்த்தாள்.
எப்பொழுதுமே தன்னை கண்டிக்கும் பாட்டியை அவளுக்கு சுத்தமாக பிடிக்காது. ரோஜா பிறந்த பொழுது அவளுக்குமே தனக்கு தங்கை பிறந்துவிட்ட சந்தோஷம் தான் இருந்தது.
அவளை வைத்து விளையாட சிறு குழந்தை கையசைக்க, காலசைத்து சிரிக்க என்று ஒவ்வொன்றையும் ரசித்து குதூகளித்தவள் தான் அவளும். ஆனால் அதனை வளரவிடாது செய்தது அவளை பெற்றவர்களும், சேகரனின் தாயும் என்றால் மிகையாகாது.
ரோஜா பிறக்கும் வரை வீட்டில் என்ன வாங்கினாலும் அது முதலில் பிரஷாந்திக்கு என்று தான் இருக்கும். எங்காவது போக வேண்டும் என்றாலும் மகளிடம் முதலில் சொல்லி செய்வார்கள்.
இப்படி அவர்கள் அறியாமலேயே அவளுக்கு ஒரு தனி பிம்பத்தை ஏற்படுத்தி இருக்க ரோஜாவின் வரவின் பின்பு அது சற்று மாறுபட ஆரம்பித்தது.
சிறு குழந்தை, அவளுக்கு என பார்க்க வருபவர்கள் பரிசுகளும் உடைகளும் வாங்கி வர முதலில் அது பெரிதாய் தோன்றாமல் இருந்தது பிரஷாந்திக்கு. அதன் பின்னர் எதுவாவது ரோஜாவிற்கென தனியாய் சேகரன் அறிந்தோ அறியாமலோ வங்கி வந்தால் முகத்தை தூக்கி வைக்க ஆரம்பித்தாள்.
பெரியவர்களாக சொல்லி திருத்த வேண்டிய இடத்தில் இருந்தவர்களோ அதை வேறு விதமாய் திசை திருப்ப ஆரம்பித்தனர்.
“என்னங்க நீங்க பெரிய பாப்பாவுக்கு வாங்காம. சின்னவளுக்கு இப்ப என்ன ரொம்ப முக்கியமா? பாருங்க அவ முகமே வாடிருச்சு. போங்க, போய் அவளுக்கு பர்ஸ்ட் வாங்கி குடுங்க. பாப்பாவை கூட்டிட்டு போங்க…” என பிரஷாந்தியின் முக சுருக்கத்திற்கு கூட வளர்மதி சேகரனை திசை மாற்ற அவரும் உடனே பிரஷாந்தியை தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தார்.
அதன் பின் எந்த ஒரு செய்கையிலும் விஷயத்திலும் நீ தான் எங்களுக்கு முதல் என்று அவளை வேறு ஒரு பாதைக்கு தங்களறியாமல் செலுத்த ஆரம்பித்தனர்.
அதனை விடுத்து ‘நம்ம பாப்பா நீயே அவளுக்கு போட்டு பார்’ என்று அவளை முன்னிறுத்தி இருந்தால் பிரஷாந்தி இந்தளவிற்கு ரோஜாவின் மீது வெறுப்பை வளர்த்திருக்கமாட்டாளோ என்னவோ?
வளர்ந்தது வெறுப்பு மட்டுமல்ல எங்கேயும் எது நடந்தாலும் தான் தான் முன்னிலை என்னும் எண்ணமும் தான். ஆனால் அதனை முகம் மாறாமல் பெற்றுகொள்வதில் தான் கில்லாடியாக இருந்தாள்.
“பெரியவள பெத்தப்ப உன்னை உறங்கவே விடாம நய்யி நய்யின்னு அழுதுட்டே இருப்பா. பாரு சின்னவ தோள்ல போட்டு ரெண்டு தட்டு தட்டி குடுத்தா கூட உடனே உறங்கிடறா. எம்புட்டு சமத்து சின்னவ…” என செல்லம்மாள் வேறு இரு குழந்தைளுக்குமான வேறுபாட்டை சொல்ல சொல்ல பிரஷாந்தியின் மனதில் அது ஆழ பதிய ஆரம்பித்தது.
இப்படி சின்ன சின்ன விஷயங்களையும் தங்களுக்கு தெரிந்த விதத்தில் வடிவமைத்து பேச பெரியவர்கள் செய்த தவறினால் காரணமின்றி பாதிக்கப்பட்டது ரோஜா மட்டுமே.
இதில் செல்லம்மாள் ரோஜாவிடம் அதிக ஒட்டுதல் காட்டுவதாக நினைத்த பிரஷாந்தி அவரை அறவே ஒதுக்கினாள்.
தன்னை மட்டும் கண்டித்து தன் தங்கையை கொண்டாடும் பாட்டியை பிடிக்காமல் போனது. செல்லம்மாள் கண்டிப்பின் காரணம் மகனும், மருமகளும் அதிக செல்லம் கொடுத்து பிரஷாந்தியை கெடுப்பதாக நினைத்து தான் அவளின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த நினைத்தார்.
ஆனால் பாட்டியிடம் மட்டுமல்ல அந்த வீட்டிலேயே தனி பிறவி பிரஷாந்தி. தனக்கு மூன்று வயதே மூத்தவனான அண்ணன் கூட தன்னை தான் கொஞ்ச வேண்டும் என்னும் பிரயாசை நாள் பட நாள் பட பேரும் பேராசையாய் மாறி இருந்தது.
உடன் பிறந்தவளை தோழியாய் என்ன வேண்டிய பிரஷாந்தி தனக்கு போட்டியாய் நினைக்க ஆரம்பித்தாள்.
ரோஜா பிரபுவின் முகத்தோடு அவன் விளையாடுவதை போல சிரித்துக்கொண்டே தானும் நெற்றியோடு உரச நெற்றியில் தவழ்ந்த முடி அவளின் கண்ணில் விழுந்தது. அதை அவன் ஒதுக்கிவிட்டு எழுந்து கொள்ள மெதுவாய் பிரஷாந்தியிடம் வந்து அவளின் பள்ளி சீருடையை பிடித்து இழுத்து,
“அகா, அகா…” என விளையாட அழைக்க குனிந்து அமர்ந்தவள் பிரபுவை போல தானும் நெற்றியில் உரசி செய்ய மீண்டும் முடி சிலிப்பிக்கொண்டு கண்ணுக்குள் விழ இப்பொழுது பிரஷாந்தி ஒதுக்காமல் பார்த்து,
“இப்படி செய், பாப்பா, இப்படி செய்…” என்று சொல்லி காண்பிக்க ரோஜாவும் அக்காவை பின்பற்றினாள்.
அதனை ஒதுக்க தெரியாமல் புறங்கையால் தள்ள நெற்றியில் வைத்த கண் மை கையோடு ஈஷிக்கொண்டு வர அதை தன் வெள்ளை உடையில் அவள் துடைத்துக்கொள்ள,
“அம்மா, பாப்பா மையை எல்லாம் அழிச்சு ட்ரெஸ்ல அப்பிட்டா. போச்சு, வந்து பாருங்களேன்…” என்று சொல்ல,
“ஐயோ இவளோட இதே வேலையா போச்சு. கிளம்பற நேரத்துல கூட இப்படி சேட்டை பண்ணிட்டு. பெரியவளை வச்சு கூட இந்த தொந்தரவு இல்லை. ஆனா இவளை பாருங்க…” என கடிந்துகொண்டே வளர்மதி ரோஜாவை தூக்கிக்கொண்டு உடைமாற்றி முகம் கழுவ செல்ல,
“பாப்பா, இங்க வா…” என அழைத்தார் செல்லம்மாள். அவரின் முன்னால் சென்றவள் என்ன என்று கேட்காமல் பார்க்க,
“நீ தான அவட்ட இப்படி செய்ன்னு சொன்ன? குழந்தைக்கு என்ன தெரியும்? நீ ஒதுக்கி விட்டிருக்கனும் தானே? உன்னால இப்ப அவ திட்டு வாங்கிட்டா. தப்பு பாப்பா…” என்று ஆவர் சொல்லும் பொழுது முறைத்தவள் தந்தையும் அண்ணனும் வாசலில் இருந்து உள்ளே வருவதை பார்த்ததும் ஓவென அழ ஆரம்பித்தாள்.
“என்ன பாப்பா, ஏன் அழற?…” என சேகரன் வந்து கேட்க வளர்மதி ரோஜாவுடன் வரும் வரை அழுகையை நிறுத்தவே இல்லை. அவர் வந்து கெஞ்சி கேட்டதும்,
“பாட்டி என்னை திட்டறாங்க, இனி நான் பாப்பாவோட விளையாட மாட்டேன். என்னால தான் பாப்பாவை திட்டுனீங்களாம். நான் தான் பாப்பாவுக்கு எல்லாம் செய்யனுமாம்…” என்று அப்படியே திருப்பி பேச செல்லம்மாளுக்கு அன்றுதான் சுருக்கென்று இருந்தது.
அதன் முன்னால் சின்ன சின்ன விஷயங்களில் மாற்றி பேசும் பேத்தியை அப்படியே கண்டுகொள்ளாமல் இருந்தவர் இப்பொழுது தன்னை வைத்தே பிரச்சனையை மாற்றுவதை அறிந்து துணுக்குற்று பார்த்தவருக்கு பதில் சொல்ல கூட தோன்றவில்லை.
இத்தனை சின்ன வயதில் எத்தனை பெரிய சூது இது? இப்படியெல்லாம் சிறு பெண்ணிற்கு பேச வருமா? என்று யோசித்தபடி அவர் மகனை பார்க்க,
“ஏம்மா சும்மாவே இருக்க மாட்டீங்களா? எப்பவுமே அவளை குறை சொல்லிட்டே இருப்பீங்க. இன்னைக்கு இப்படி அழவும் வச்சுட்டீங்க. பிள்ளைங்களுக்குள்ள எதுக்கு இந்த பேச்சு உங்களுக்கு?…” என்ற சேகரன் தாய் சொல்ல வருவதையே கேட்கவில்லை.
மகளின் கண்ணீர் ஒன்றே பெரிதாய் இருந்தது அவருக்கு. ரோஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றிலும் என்ன நடக்கிறதென தெரியாமல் விழிக்க,
“நான் ஸ்கூலுக்கு போகலை…” என பிரஷாந்தி அடுத்த அஸ்திரத்தை தூக்க,
“ப்ச், இப்ப என்னடா? இரு உன்னோட மம்மி வரேன். என் கூட ஸ்கூலுக்கு வருவா தானே?…” என்ற வளர்மதி,
“நீங்க பாப்பாவை கூட்டிட்டு ஸ்கூல்ல போய் விட்டுடுங்க. பாவம் பெரியவ உங்கம்மாவால ரொம்ப அழுதுட்டா. அப்படியே ஸ்கூல் பஸ்ல அனுப்ப மனசு வரலை…” என சொல்லவும் உள்ளுக்குள் குதூகலித்த பிரஷாந்தி பாவமாய் தாயை பார்த்தாள்.
“பிரபு வா போகலாம்….” என மகனோடு முன்னே செல்ல,
“எல்லாம் உங்களால தான். பேசாம இருங்க…” என சேகரன் சொல்லி ரோஜாவை கை பிடித்து அழைத்து செல்ல பாட்டிக்கு டாட்டா காண்பித்துவிட்டு சென்றாள் ரோஜா.
அன்று மாலை பிரஷாந்தி வந்ததும் செல்லம்மாள் அழைத்து பேச முனைய வளர்மதி அதற்கு விடவே இல்லை.
சின்ன சின்ன விளையாட்டுகளிலும் யாருமறியாமல் ரோஜாவை அழ வைத்து பார்த்தாள். விளையாடும் நேரம் ஏதாவது தானாக விழுந்தால் கூட ரோஜா தான் தட்டிவிட்டாள் என்று வந்து நிற்பாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியான ரோஜாவை பெற்றோர் முன்னிலையில் சேட்டைக்கார ரோஜா என்று சொல்ல வைத்தாள்.
பெற்றோரும் அதன்படி சேட்டை சேட்டை என்றே அவளை பேசும் பொழுதும், கொஞ்சும் பொழுதும், அதட்டும் பொழுதும் சொல்ல,
“அம்மா, இப்படி நீங்க செல்லம் கொஞ்சினா அவ இன்னும் சேட்டை தான் செய்வா…” என்று பெரிய பெண்ணாய் தாய்க்கு அறிவுரை சொல்ல ரோஜாவிடம் கண்டிப்பாக இருக்க ஆரம்பித்தனர் மூத்த மகளின் சொல்லில்.
நாள்பட ரோஜா செல்லம்மாவோடு இரவில் உறங்க ஆரம்பிக்க உடன் விளையாடுகிறேன் என்று லைட்டை அமர்த்தி பயமுறுத்தும் பொம்மைகளை வைத்து இருட்டில் தெரியும் நிழலாக மாறி தங்கையை அழவிட,
“சின்னதால நைட் தூக்கம் கூட இல்லை. நிம்மதியே இல்லை. எப்ப பாரு அலறி எழுந்துக்கறது…” என்று வளர்மதி திட்ட,
“அம்மா அக்கா தான்…” என சற்று விவரம் தெரிந்தவளால் சொல்ல ஆரம்பிக்க,
“பார்த்தீங்களாம்மா, ரோஜாவுக்கு என்னை புடிக்கவே இல்லை. நான் விளையாட தான் செஞ்சேன். ஆனா அவ நான் பயம்காட்டறேன்னு சொல்றா…” என்று கண்ணை கசக்க உருகிவிடும் வளர்மதிக்கு.
சேட்டைக்கார பிள்ளை ரோஜாவின் கண்ணீர் பாசாங்காக, தப்பித்தல் கண்ணீராக தெரிய, அமைதியே உருவான விட்டுகுடுக்கும் சாதுவான பிரஷாந்தியின் கண்ணீர் அங்கே துடைக்கப்படவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிக்கொண்டிருந்தது.
வளர்ப்பா? இல்லை ரத்தத்தில் ஊறியதா? எதுவோ ஒன்று. வளர்மதியின் சிறு பாராபட்சம் பிரஷாந்தியின் வளர்ச்சியில் அபரிமிதமாக வளர்ந்தது. சேகரனும் முழுமையான துணை என்றால் மிகையாகாது.
உண்மை தெரிந்த செல்லம்மாவின் பேச்சு அங்கே எடுபடாமல் போக சாப்பிடுவதை கூட செல்லம்மாள் ஊட்டிவிட கூடாது ரோஜாவிற்கு.
“ஸ்கூல் போறா, பெரிய பிள்ளையாகிட்டா. அவளே சாப்பிட விடுங்கம்மா…” என அறிவுரை சொல்ல சிறு சிறு ஆசைகள் மரித்துபோயின அக்குழந்தையிடம். இப்படியாக சின்ன சின்ன விஷயங்களில் பிரஷாந்தியின் நுழைதல் பொறுக்கமுடியாத செல்லம்மாள்,
“நீ என்ன அவள சொல்லுத? நீ எல்லாத்தையும் அனுபவிச்ச தான உன் அம்மாட்ட. அவளும் அவ பெத்தவட்ட அனுபவிச்சா என்ன உனக்கு?…” என்று சத்தம் போட்டுவிட,
“பாட்டி நான் ரோஜாவுக்காக தான் சொல்றேன். என்னை மாதிரி அம்மாவை பார்த்து அவ நிக்க கூடாது பாருங்க. அதுதான் எந்தங்கச்சியை இப்ப இருந்தே போல்டா வளர்க்கனும்னு நினைக்கறேன். தப்பா?…” என்று கேட்க அவளை மறுத்து பேசிவிடுவார்களா பெற்றோர்.
“அம்மா, பேசாம இருக்க மாட்ட. நீயே ரெண்டையும் பிரிச்சு விட்டுடுவ போல? பெரியவளுக்கு இருக்க அனுசரனை ஒனக்கு இருக்கா? பேசாம இரு. பாக்கறீங்க தானே சின்ன பாப்பா பண்ணுற சேட்டையை. நாளைக்கு வெளில நாலு இடத்துக்கு போனா புள்ள வளர்த்து வச்சிருக்கான் பாருன்னு பேச மாட்டாங்களா?…” என்று அதட்டிவிட்டார்.
செல்லம்மாள் வாயில் கைவைத்து அமர்ந்துவிட்டார். இனி அவரின் பேச்சு அங்கே எடுபடுமா? ரோஜாவிற்கு அவர்கள் பேசியதன் சாராம்சம் புரியவில்லை. ஆனால் தானே சாப்பிட வேண்டும். அதைத்தான் சொல்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது.
அந்த வீட்டில் இன்னொன்றும் தலைகீழாக நடந்தது. அனைத்து வீட்டிலும் சின்னகுழந்தைக்கு எதுவும் தெரியாது, பெரியவள் நீ விட்டுகொடு என்று தான் சொல்லுவர்கள். இங்கே தலைகீழ்.
“உனக்காக அக்கா என்னவெல்லாம் செய்கிறாள். நீ விட்டுவிடு…” என்று ரோஜாவிற்கு சொல்லிக்கொடுக்க பிரஷாந்தி இன்னுமின்னும் தன் செய்கை சரி என்றே நினைத்தாள்.
சின்னமகள் வருகையால் மூத்தமகள் ஏங்கி கூடாதென அவளை வளர்ந்த பின்னும் தாலாட்ட இங்கே சின்ன மகள் அவர்களை விட்டு தள்ளிசென்றுகொண்டே இருப்பதை அறியாமல் போயினர்.
செல்லம்மாள் இருந்த வரை இரவு ரோஜா பயமில்லாமல் அவருடனே உறங்கி இருக்க ஒரு நாள் அதிகாலை நேரத்தில் சுவாசிக்க முடியாமல் மூச்சிரைக்க செல்லம்மாள் அவஸ்தையுடன் கட்டிலில் புரள விடிவிளக்கு அவர் கை அசைவில் கீழே விழ அறை இருள் சூழ்ந்தது.
உறக்கத்திலிருந்து எழுந்த ரோஜா அந்த இருட்டும் அதில் செல்லம்மாள் கொடுத்த சத்தமும், உருண்டு புரண்ட அவரின் துடிப்பும் உயிர்பயத்தை விளைவிக்க,
“அக்கா வேண்டாம், விட்டுட்டு. நான் சேட்டை பண்ணமாட்டேன். ஒன்னும் பண்ணமாட்டேன். பாட்டியை விட்டுட்டு. விட்டுட்டு…” என்று கதவை திறக்க கூட தோன்றாமல் அறையின் மூலையில் சென்று முகத்தை மூடிக்கொண்டு கதறியபடி மூர்ச்சையாகி சரிந்திருந்தாள்.