மறுநாள் காலையில் எழும் பொழுதே ரோஜா மிக புத்துணர்ச்சியாக உணர்ந்தாள். மனதில் இருந்ததை இறக்கி வைத்ததன் பலனோ அவளின் முகமே தெளிவாய் இருந்தது.
எழுந்து குளித்து வெளியே வர கயல்விழியுடன் சடகோபனும் மணிவாசகமும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். விதுரனை காணவில்லை.
“குட்மார்னிங் ராஜமாதா…” என்று வேகமாய் சொல்லியவள் பின் நாக்கை கடித்துக்கொள்ள,
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. என்னவோ முதல் தடவை சொல்ற மாதிரியே எப்படித்தான் சொல்லிட்டு இப்படி ரியாக்ட் பன்றியோ?…” என்று கேட்டுக்கொண்டே காபி எடுத்துவர சென்றார்.
“நானும் வரேன், நானும் வரேன்…” என கொஞ்சியபடி அவரின் பின்னால் சென்றவள்,
“சொல்ல கூடாதுன்னு நினைப்பேன். ஆனா டக்குன்னு வந்திருது. என்ன செய்ய?…” என கேட்டு சமையல் மேடை மீது அமர போக,
“ரோஜா, முதல்ல இனி இப்படி குதிச்சு உட்கார்றது எல்லாம் ஸ்டாப் பண்ணு. குழந்தை இருக்குது. ஞாபகம் இருக்கா இல்லையா?….” என்று கண்டிக்க,
“ஆமால, இப்ப நான் அம்மா…” என அப்போதுதான் நியாபகம் வந்ததை போல அவள் சொல்லியவிதம் கயல்விழிக்கு சிரிப்பை உண்டாக்கினாலும் சற்று பயமே.
“உன்னை என்னன்னு சமாளிக்க?…” என்றவர் காபியை தர,
“டாக்டர் இதெல்லாம் குறைச்சுக்கனும்னு சொல்லிருக்காங்க. ஆனா நீங்க தரீங்க பார்த்தீங்களா?…” என்று அவரை வாரிவிட,
“ப்ச், உன்கூட பேசினாலே எல்லாம் மறந்திருது…” என தலையில் லேசாய் தட்டிக்கொள்ள,
“ஓகே ஓகே, நான் காபி குடிக்கறேன்…” என்று அவள் எடுத்து ஹாலுக்கு வர விதுரன் வெளியே இருந்து வந்தான்.
“குட்மார்னிங் அங்…” என்றவள் அப்படியே அங்கிளை அந்தரத்தில் விட்டுவிட அதை கண்டு கொள்ளாதவன்,
“உனக்கு யார் காபி குடுத்தா?…” என அவன் வேகமாய் கேட்டான்.
“ராஜமாதா…” என கயல்விழியை கை காட்டியவள் சடகோபன் அருகில் அமர்ந்துகொள்ள அவளை ஆதுரமாய் தலையை வருடினார் அவர்.
“என்னாச்சு மாப்பா? ரொம்ப பீலிங்க்ஸ் ஆஃப் பெரியவீடா?…” என்று கிண்டல் பேச மணிவாசகம் அவளின் உடல் நலனை குறித்து பேச ஆரம்பித்தார்.
இங்கே கயல்விழியிடம் சென்று பேசிய விதுரன் அவர் மறுக்க மறுக்க தீவிரமாய் எதையோ சொல்வதை போல இருக்க எழுந்து சென்று கேட்க முடியாமல் பார்வையை அங்கே வைத்துக்கொண்டே இங்கே பேசிக்கொண்டிருந்தாள் ரோஜா.
“முடிவா தான் சொல்றியா விது? இது சரி வருமா? என்ன தான் தப்பு பண்ணிருந்தாலும் கல்யாணம் ஆனா பொண்ணு. சின்ன பிரச்சனை கூட நம்ம பக்கம் தப்பு சொல்ல வாய்ப்பாகிடும்…” என கயல்விழி சொல்ல,
“அதுக்கு அவளை சும்மா விட சொல்றீங்களா? பார்த்தீங்கள்ள ரோஜா பேசினதை….” என்று கோபத்துடன் கையை மடித்துவிட்டவன்,
“உங்கக்கிட்ட ஒரு விஷயம் மறைச்சுட்டேன்…” என பிரஷாந்தியை மாலில் வைத்து பார்த்ததை சொல்ல கயல்விழி முகம் சுளித்தார் அவள் பேசியதை கேட்டு.
“என்ன பொண்ணு இவ? இதுக்கு தான் சொல்றேன் விது, இப்படி பட்ட பொண்ணு நாளைக்கு உன் மேல என்ன வேணாலும் சொல்வா. வேண்டாம்…”
“இல்லைம்மா எனக்கு முடியலை. நான் பேசிட்டு வந்திடறேன். ரோஜாவை நீங்க தான் பார்த்துக்கனும்…”
“இன்னும் நாலு நாள்ல சக்தி கல்யாணத்தை வச்சுட்டு உன் கூட அவனையும் அனுப்ப முடியாதே…” என தயங்க,
“எங்க போகனும் அண்ணி?…” என மணிவாசகம் வந்தார்.
கடைக்கு கிளம்ப சொல்லிக்கொண்டு செல்ல வந்தவர் இருவரின் பேச்சையும் கேட்டுவிட்டு நிற்க,
“சித்தப்பா…” என சொல்ல தயங்கியவன் தாயை பார்க்க கயல்விழி சுருக்கமாக நடந்ததை சொன்னார்.
“என்ன விது நீ? இதெல்லாம் நாம தண்டி போய்டனும். இதுக்காக அந்த வீட்டுக்கு போகனும்ன்றது சரியா வருமா?…” என அவரும் யோசனையுடன் பார்க்க,
“ப்ச், நான் போகனும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா புட்டேஜ் கிடைக்க வெய்ட்டிங். இப்ப கிடைச்சா கூட கிளம்பிருவேன்…” என்று உறுதியாய் சொல்ல,
“அப்ப சரி உன்னை தடுக்கலை. ஆனா போக முன்ன எங்கட்ட ஒரு வார்த்தை சொல்லிடு. நான் உன்னோட வருவேன். இதை நீ தடுக்க கூடாது. ஆனா சக்தி கல்யாணம் முடியவும் போகலாம். இந்த கல்யாணத்துக்கு நீயும் ரோஜாவும் தானே பொறுப்பெடுத்தது. அதை முழுதா முடிங்க…” என்று அவரும் அழுத்தமாய் சொல்லி,
“நான் கிளம்பறேன் அண்ணி. சொல்லிட்டு போக தான் வந்தேன். வரேன் விது…” என்று கிளம்பிவிட கயல்விழி அவருடன் வெளியே வந்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் சமைக்கும் பெண் வந்துவிட அவரிடம் ரோஜா உண்டாகியிருக்கும் விஷயத்தை சொல்லி என்ன சமைக்க வேண்டும் என்றும் விளக்கி சொல்லிவிட்டு வைத்தீஸ்வரிக்கு அழைத்தார் கயல்விழி.
அங்கே வீட்டின் நிலவரங்களை கேட்க அவரும் சொல்லிவிட்டு மதியம் உணவு சமைத்து எடுத்து வருவதாக சொல்ல மறுக்கவில்லை.
அவர்கள் வரவும் விதுரனும், சடகோபனும் கடைக்கு கிளம்பிவிட வைத்தீஸ்வரி வரவும் மாலை வரை பொழுது நன்றாகவே சென்றது.
மதிய உணவிற்கும் கூட விதுரன் வீட்டிற்கே வந்து சென்றான். மாலை அவன் மீண்டும் வரும் நேரம் ரோஜா மட்டுமே கிட்சனில் இருக்க வீட்டில் வேறு யாரும் இல்லாமல் மெதுவாய் உள்ளே நுழைந்தான்.
அவனின் வருகையை கூட உணராத ரோஜா அடுப்பில் குக்கருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தாள்.
“அட கூறுகெட்ட குக்கரே. வச்சு எவ்வளோ நேரம் ஆச்சு? ரெண்டே விசில். இது அடிக்க உனக்கு இவ்வளவு நேரமா? உனக்கு நான் என்ன பண்ணேன். இந்த கிட்சனுக்கும் எனக்கும் மட்டும் எப்பவும் வெட்டிக்கிட்டும் முட்டிக்கிட்டுமே இருக்குதே…” என்று சொல்லி புலம்ப சிரிப்புடன் அவனை பின்னிருந்து விதுரன் அணைக்க,
“அங்கிள்…” என்று தலை திருப்பி பார்த்தவள்,
“சொல்லிட்டு ஹக் பண்ணா நானும் திரும்பி நிப்பேன்ல. இப்ப பாருங்க குக்கர்ல விழுந்திருப்பேன். எனக்கும் அதுக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து போகுது…” என்று அதற்கும் அவனுக்கு குட்டு வைக்க அவளின் பேச்சில் வாய்விட்டு சிரித்தவன்,
“லிட்டில் டெவில் இப்ப குக்கருக்கும் டெவில். என்ன பன்ற? பேச்சுவார்த்தை பலமா இருக்கே…” என கேட்க மாடியில் இருந்து தாயும், சித்தியும் பேசிக்கொண்டே இறங்கிவரும் சத்தம் கேட்டது.
சட்டென அவளை விட்டு விலகி தள்ளி நின்ற விதுரன் பாலை எடுத்து அடுப்பில் வைக்க,
“நீ எப்போ வந்த விது?…” என்று வைத்தீஸ்வரி கேட்டார்.
“விசில் வந்திருச்சா ரோஜா?…” என்றார் கயல்விழி.
“ம்ஹூம், இன்னும் வரலை. நானும் பக்கத்துல இருந்து எவ்வளவு நேரம் தான் பார்க்க? விசில் வரவே இல்லை…” என்று உதட்டை பிதுக்க,
“இந்நேரம் வந்திருக்கனுமே?…” என சொல்லிக்கொண்டே வந்து எடுத்து பார்க்க கேஸ்கட் போடவே இல்லை அவள்.
“குக்கர் மூடும் முன்ன கேஸ்கட் எடுத்து மாட்ட வேண்டாமா?…” என வைத்தீஸ்வரி பார்த்து சொல்ல திருதிருவென கண்ணின் கருவிழியை இங்குமங்குமாய் உருட்ட,
“இதுல நீ எனக்கு எப்படி ப்ரைட் ரைஸ் பண்ணிட்டு வந்த?…” என அதிமுக்கிய சந்தேகத்தை கேட்க,
“எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்ல செஞ்சேன். அது டக்குன்னு ஆகிடுச்சு. ஆனா இதுல வச்சதில்லை…”
“சரி தள்ளு, இந்நேரம் தண்ணீர் வத்தி சுண்டல் பிடிக்க ஆரம்பிச்சிருக்கும்…” என்றவர் அவளிடம் காட்டிக்கொண்டே கேஸ்கட் போட்டு குக்கரை மூடி வைக்க சற்று நேரத்திற்கெல்லாம் விசில் பறந்தது.
“இதை முதல்லையே சொல்லிருக்கலாம்ல…” என்று கயல்விழியை பார்த்து கண்ணடித்தவள் அங்கிருந்து வெளியேற,
“இதுல நீ சமைக்க கத்துக்க போற? எங்க பையன் பாவம் ரோஜா…” என வைத்தீஸ்வரி கிண்டலடிக்க இரவு மணிவாசகம் வந்து அழைத்து செல்லும் வரை அத்தனை கலகலப்பாய் இருந்தது.
இதுதானே வேண்டும் ரோஜாவிற்கு. தனக்கே தனக்கென பார்த்து பார்த்து செய்யும் ஒரு உறவைத்தான் அவளும் வேண்டினாள். ஒரு உறவிற்காய் இவள் காத்திருக்க குடும்பமே தாங்கியது இவளை.
இன்னும் மூன்று நாட்களே சக்தி, ஸ்ரீநிதி திருமணத்திற்கு இருக்க ஸ்ரீநிதி சங்கவி தங்கியிருந்த அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட் காலியாக இருக்க சங்கவி சொல்லி சக்தி வாடகைக்கு எடுத்துவிட்டான் அவர்களின் தனிக்குடித்தனத்திற்கு.
இரண்டு படுக்கையறைகள் கொண்ட அந்த வீடு அவர்கள் மூவருக்கும் போதுமானதாய் இருந்தது. திருமணம் முடிந்ததும் கண்ணனும் சக்தி ஸ்ரீநிதியுடன் இருந்துகொள்ள ஒருமனதாய் முடிவெடுத்தனர்.
ஸ்ரீநிதி குடும்பம் திருச்சியில் இருந்து புலம்பெயர ஆவன செய்துவிட்டான் சக்தி. தங்கள் வீட்டிற்கு சற்று அருகிலேயே வீட்டை பார்த்து குடி வைத்துவிட இப்பொழுது சங்கவி மட்டுமே அந்த பிளாட்டில் இருப்பதால் விலாசினியின் தோழி ஏற்கனவே கேட்டுக்கொண்டு இருந்ததால் சங்கவியுடன் தங்க ஏற்பாடானது.
இப்படி ஊர் கூடி தேரிழுத்ததை போல சக்தி ஸ்ரீநிதி திருமணம் அனைவராலும் நடந்தேறியது மிக எளிமையான முறையில் கோவிலில் வைத்து.
சக்தியின் வீட்டில் அதிகபட்சம் ஒருமணி நேரம் மட்டுமே சாஸ்திரத்திற்கு விளக்கேற்ற சென்றவர்கள் அதன் பின் அப்பார்ட்மென்ட்க்கு வந்து சேர்ந்தனர்.
ஏற்கனவே குடும்பம் நடத்த தேவையான அனைத்து உபகரணங்களும் வீட்டை அலங்கரித்திருந்தது ரோஜா, சங்கவி உபயத்தால்.
சொந்தங்கள் சிலர் வந்து மாலை வரை இருந்து காபி ஸ்நாக்ஸ் முடித்துக்கொண்டு கிளம்பிவிட சக்தியின் வீட்டிலும் ஸ்ரீநிதியின் வீட்டிலும் கிளம்பிவிட்டனர். ரோஜாவும் விதுரனும் சங்கவியும் மட்டுமே அங்கிருக்க இரவு உணவும் சங்கவியின் வீட்டில் இருந்து வந்துவிட அதுவரை அனைத்தும் சரியாக தான் போய்க்கொண்டிருந்தது.
சக்தியின் தாய் மட்டும் மீண்டும் வந்துவிட்டார் இங்கே. சங்கவியை அங்கிருந்து அனுப்பிவிட்டு ஸ்ரீநிதியை இரவு சடங்கிற்கு தயார் செய்ய சொல்லி ரோஜாவிடம் சொல்ல அவள் ஸ்ரீயிடம் சொல்ல முறைப்பு தான்.
மாட்டேன் என்று மாமியாரிடம் சொல்ல முடியாமல் ரோஜாவிடம் பேச சொல்லி சொல்ல,
“ப்ச் டேக்ஸ், இது ஒரு சம்பிரதாயம். போய் குப்புற படுத்து தூங்கிடு. யார் கேட்பா. இப்ப மாட்டேன்னு சொன்னா தான் ஸீன் ஆகும். சரியா? அதுவும் நம்ம கண்ணா இருக்கான் தானே?…” என்று அப்படி இப்படி பேசி அவளை தயார் செய்ய விதுரனுக்கு ரோஜாவின் முகத்தில் இருந்த அதிகப்படியான குறும்பில் சந்தேகம் உண்டானது.
“எல்டி, என்ன பண்ணி வச்சிருக்க?…” என தனியாக கேட்க தேமே என்று பிடித்து வைத்த சிலை போல அமர்ந்திருந்த சக்தியை பார்த்தவள்,
“ஒன்னும் பண்ணலையே…” என்றாள் அப்பாவியாய்.
“ம்ஹூம், நீ சக்தியை பார்க்கவும் சிரிக்கவுமா இருக்க. என்ன ப்ளான் உன்னோடது? இப்ப சொல்ல போறியா இல்லயா?…”
“அதை ஸ்பாட்ல தெரிஞ்சுக்கோங்க…” என்று மிதப்பாய் சொல்லி நகர்ந்துவிட,
“எந்த ஸ்பாட்ல. போச்சு சக்தி நீ காலிடா…” என நண்பனிடம் வந்தவன்,
“உஷாரா இருடா சக்தி…” என்றான் பாவமாய்.
“ஆமா என்ன உஷாரு? போய் தூங்கறதுக்கு உஷார் வேற? ப்ச்….” என்று சலிப்பாய் ஸ்ரீநிதியை பார்க்க,
“நினைப்பை பாரு உனக்கு. நான் அதை சொல்லலை…” என விதுரன் முறைக்க,
“ச்சீ போடா. தேவையில்லாம பேசிட்டு. நானே ஸ்ரீ முகத்துல கடுகு வெடிக்கிற அளவுக்கு ஹீட்டை பார்த்துட்டு இது தேவையான்னு இருக்கேன்…” என்று புலம்ப,
“சக்தி கண்ணன் எங்க?…” என்று வந்தார் அவனின் தாய்.
“ஆன்ட்டி அவன் சங்கவியோட கார்ட்டூன் மூவி பார்க்க போய்ட்டான். நைட் நான் பார்த்துக்கறேன்…” என சொல்லிய ரோஜா அவரிடம் தலையசைக்க,
“சரிப்பா, நீ போய் இந்த பட்டு வேஷ்டியை கட்டிக்கோ…” என்று நீட்ட வேண்டா வெறுப்பாய் வாங்கியவன் உள்ளே செல்ல,
“அப்படியே முகத்தை கழுவி லைட்டா பட்டி டிங்கரிங் முடிச்சுடுங்க அண்ணா…” என்று ரோஜா வேறு வெறுப்பேற்ற கடுப்புடன் உள்ளே சென்றான்.
“ஏன் ரோஜா அவனை சீண்டற?…” என விதுரன் பரிந்துகொண்டு வர,
“அவ பேசாம யார் பேசுவாப்பா? இல்லைன்னா மட்டும் சந்தோஷமா வாங்கிட்டு போய்டுவாங்க…” என சக்தியின் அம்மா பேச சற்று நேரத்தில் சக்தி வந்துவிட்டான்.
ஸ்ரீநிதியையும் சேர்த்து அழைத்து சாமி கும்பிட வைக்க சாமியை வணங்கிவிட்டு சக்தியின் தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
“சந்தோஷமா இருக்கனும் கண்ணுங்களா…” என இருவரையும் மனதார வாழ்த்தியவர் சக்தியை அறைக்கு அனுப்பிவிட்டு ஸ்ரீநிதியை கிட்சனிற்குள் அழைத்து சென்றார். விதுரன் வாசலுக்கு வெளியே சென்று நின்றுகொண்டான்.
பால் ஊற்றி வைத்திருந்த பெரிய தம்ளரை அவளின் கையில் கொடுத்தவர் அவளின் கையை பற்றி அழுத்தம் கொடுத்துவிட்டு,
“உனக்கு நான் சொல்லனும்னு இல்லைம்மா. நீங்க ரெண்டுபேரும் சந்தோஷமா இருந்தா அது போதும்…” என்று கண்கலங்க சொல்ல,
“நீங்க போங்க ஆன்ட்டி, போய் படுங்க. நான் அனுப்பறேன்…” என சொல்லி அவர் இன்னொரு அறைக்குள் செல்லவும் ஸ்ரீயை அனுப்ப உடன் ரோஜா சென்றாள்.
“ஆல் தி பெஸ்ட் டேக்ஸ்…” என்று சொல்லி அவளிடம் முறைப்பை வாங்கிக்கொண்டு சிரித்தபடி சற்று தள்ளி நின்று தனது போனை ஆன் செய்தாள்.
“ஹேய் எல்டி, போயாச்சா எல்லாரும்?…” என விதுரன் மெதுவாய் வாசலில் நின்று கேட்க வாயில் கை வைத்து பேசாதே என்று சைகை செய்தாள் அவள்.
“என்ன பன்ற நீ?…” என கதவை சாற்றிவிட்டு வர ஹாலில் வந்து இவளும் அமர்ந்தாள்.
“இன்னும் கொஞ்சம் நேரத்துல சக்தி அண்ணா கதவை தட்டுவாங்க பாருங்க…” என்று அவள் சொல்லி அடுத்த ஐந்து நிமிடத்தில் கதவை தட்டினான் சக்தி.
“வெளில இருந்து பூட்டியிருக்கியா நீ? கேடி. என்ன பண்ண?…” என கேட்டுக்கொண்டே சக்தியின் அறை கதவை திறந்துவிட கோபமாய் வெளியே வந்தவன் ரோஜாவை பார்த்து,
“செஞ்ச வரைக்கும் போதும் தெய்வமே. அந்த போனை எடுத்து குடுங்க ப்ளீஸ்…” என்று கையெடுத்து கும்பிட மெதுவாய் உள்ளே சென்று போனை எடுத்து கொடுக்கவும் வாங்கியவன் மீண்டும் கதவை சாற்றி வந்து கட்டிலில் அமர்ந்தான்.
ஸ்ரீநிதி அவனை பார்த்தபடியே நிற்க அவள் பக்கம் திரும்பவே இல்லை சக்தி. அமரவும் சொல்லவில்லை.
ஸ்ரீநிதி அறைக்குள் வந்ததும் அவளிடம் அமைதியாக பேச வேண்டும் என்று இவன் நினைத்துக்கொண்டு மனதிற்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் திரும்பி பார்த்தான்.
அதுவரை மனதில் இருந்த எரிச்சல், ஸ்ரீயின் முகவாட்டம், அவளின் பிடித்தமின்மை கொடுத்த கடுகடுப்பு என்று இருந்தவன் மனம் இப்பொழுது தானாய் கனிந்தது. முகம் மென்மையை பூச,
“வா ஸ்ரீ…” என்றான் வரவேற்பாய்.
அட்லீஸ்ட் வாழ்க்கையை இன்றே தொடங்கவில்லை என்றாலும் நல்ல புரிதலுக்கான அடிப்படையாய் அன்றைய நாளை மாற்ற நினைத்தான்.
அவன் அழைத்ததும் நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் இருந்த அமைதியில் இன்னும் அவளை நெருங்க அடியெடுத்து வைக்க,
“ஆஹா ஆரம்பிச்ச அன்னைக்கே முதுகுல ஆபாயில் போட ப்ளான் பண்ணிட்டாங்களே தங்கச்சி. போன் எங்க அடிக்குதுன்னே தெரியலையே…” என அறை முழுவதும் தேடி தேடி பார்த்தவன் வேலைக்காகாமல் கதவை திறக்க பார்க்க அதுவோ வெளியே பூட்டியிருந்தது.
அவன் தேட தேட மீண்டும் மீண்டும் அதே ரிங்க்டோன். தனது மொபைலாக தான் இருக்கவேண்டும் என்று நன்றாக புரிந்தது அவனுக்கு.
கதவை திறந்து ரோஜா வந்து மொபைலை எடுத்து தந்துவிட்டு செல்லவும் மீண்டும் கதவை பூட்டிவிட்டு வந்து கட்டிலில் மொபைலை போட்டவன் தண்ணீரை அருந்த அவனின் செயல்களை முகத்தில் எந்த மாறுபாடும் இல்லாமல் பார்த்தபடியே இருந்தாள் ஸ்ரீநிதி.
“இங்க பாரு ஸ்ரீ, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சும்மா என்னை முறைக்காத…” என்று தன்னிலை விளக்கம் போல சொல்ல ஸ்ரீநிதி கையில் வைத்திருந்த பாலை டீப்பாயில் வைக்க வைத்த வேகத்தில் நங்கென்று சத்தம் கேட்டது.
“இம்புட்டு கோபமா?…” என அவளை இவன் பார்க்க,
“நான் கீழே படுத்துக்கறேன்…” என ஸ்ரீ சொல்லவும்,
“என்னம்மா நீங்க இப்படி பன்றீங்களேம்மா? போலீஸை கூப்பிடுவேன்…” என அடுத்த சத்தத்தில் அடித்துபிடித்து மொபைலை எடுத்து பார்த்து அணைப்பதற்குள் அது பேசியே முடித்துவிட்டது. இப்பொழுது வந்தது வாட்சாப் வாய்ஸ் கால்.
“போச்சு மொத்தமா ஆத்தாவை மலையேத்தாம விடமாட்டாங்க போல. இதுக்குத்தான் மாங்கு மாங்குன்னு மேக்கப் செஞ்சாங்க போல…” என்று அவன் புலம்பி,
“இங்க பார் ஸ்ரீ, சத்தியமா இது ரோஜா பன்ற வேலை. எப்போ செட் பண்ணினாங்கன்னே தெரியலை. நீ கோபமா இருக்கன்னு நானும் டென்ஷனா இருந்தேன். இதுக்கு என் மேல காயாத. சண்டை போடற மூட்ல நான் இல்லை…” ஸ்ரீயின் சிரிப்புக்குரலில் அதிசயமாய் நிமிர்ந்து பார்த்தான்.
“நிஜமாவே நீ தான் சிரிச்சியா?…” என ஆச்சர்யம் ததும்பிய பார்வையில் பார்வையை தளர்த்தியவள் பின்,
“ரோஜா என்ன பண்ணுவான்னு எங்க எல்லார்க்குமே அனுபவம் தான். அதனால இப்படி ஓவர் ரியாக்ட் பண்ண வேண்டாம்…” என்று சொல்ல ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன்,
“இங்க வா, இப்படி உட்கார்…” என சொல்ல அதற்கு ஸ்ரீ முறைக்க,
“ப்ச், எப்ப பாரு தப்பாவே ஜட்ஜ் பன்றது. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு தான் உட்கார சொன்னேன்…” என்றவன் அவள் அமர்ந்ததும்,
“உண்மையை சொல்லட்டுமா? உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஸ்ரீ. நமக்கு கல்யாணம் ஆகாம இருந்தா உன்கிட்ட சொல்லியிருக்க மாட்டேன். இப்ப நீ என் வொய்ப். இதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும், ஈகோவும் இல்லை. இதை நீ தெரிஞ்சுக்கோ. உன்கிட்ட என்னோடது நான் நினைக்கிறது எல்லாம் தெரியனும் தானே?…” என புன்னகை மின்ன சொல்லியவனை பற்றி ஸ்ரீநிதி மனதில் ஒரு புது பிம்பம் உருவானது.
ஸ்ரீநிதி பதில் ஒன்றும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்க ஒரு ஓரத்தில் படுத்துவிட்டான் சக்தி.
“நீயும் தூங்கு, ஆனா கீழ வேணாம். இதுக்கு மேல உன் விருப்பம்….” என சொல்ல அவனை திரும்பி பார்க்க கண்களை மூடியிருந்தான் அவன்.
சில நொடிகள் தான் அவள் யோசித்தது பின் மறு ஓரத்தில் வந்து படுத்துக்கொள்ள மெதுவாய் கண்களை திறந்து பார்த்தவன் முகத்தில் புன்னகை விரிந்தது. மீண்டும் கண்களை மூடி தூங்கிவிட்டான்.
இரண்டு நாட்கள் தான். அங்கே ஸ்ரீநிதி சக்தியுடனும் கண்ணனுடனும் சேர்ந்து வாழ மெல்ல பழகி கொண்டாள். பேச்சுவார்த்தைகள் சொற்பமென்றாலும் முகத்திருப்பல்கள் என்பது இல்லை அங்கே.
அதிலும் கண்ணனை வைத்து அவர்களின் பொழுதுகள் சிறப்பாகவும் சந்தோஷமாகவுமே கழிந்தது.
மூன்றாம் நாள் விதுரன் திருப்பூர் வந்துவிட்டான். வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் உடன் சக்தியும். இருவரையும் தனியே அனுப்ப மனமில்லாமல் மணிவாசகமும் உடன் வர அந்த காலை நேரத்தில் சேகரனின் வீட்டிற்கு வந்துவிட்டனர்.
அப்பொழுது தான் மில்லிற்கு கிளம்பிக்கொண்டு இருந்தார் சேகரன். அவருடன் இணைந்து சாப்பிடுவதற்காக பிரஷாந்தி டைனிங்ஹாலில் அமர்ந்திருக்க மாடியில் இருந்து இறங்கியவருடன் வளர்மதி ஏதோ பேசிக்கொண்டே வந்தார்.
“ஐய்யா உங்களை பார்க்க சென்னையில் இருந்து யாரோ வந்திருக்காருங்க. அனுப்பட்டும்ங்களா?…” என வாட்ச்மேன் கேட்க தன் சொந்தத்தில் தான் யாரோ என நினைத்த வளர்மதி,
“அனுப்புப்பா…” என்றார்.
“யார் என்னன்னு கேட்காம உடனே வர சொல்லுவியா?…” என்று சேகரன் கடிய,
“சென்னையில நமக்கு வேற யார் இருக்காங்க? எல்லாம் என் வீட்டாளுங்க தான்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே உள்ளே வந்தனர் சக்தியும் விதுரனும். மணிவாசகம் உள்ளே வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
“டேய் உன்னை யார்ரா இங்க வர சொன்னது? பாவி நீன்னு தெரிஞ்சிருந்தா விட சொல்லியிருக்கவே மாட்டேனே…” என சேகரன் வேகமாய் விதுரனை நோக்கி வர பிரஷாந்தி அவர்களின் வருகையில் யோசனையுடன் வந்து தாயருகே நின்றாள்.
“இங்க பாருங்க, உங்கக்கிட்ட அமைதியா பேச தான் வந்திருக்கோம். பிரச்சனை பண்ண இல்லை…” என சக்தி சொல்ல விதுரன் சேகரனையும் பிரஷாந்தியையும் இகழ்ச்சியாய் பார்த்தபடி நின்றான்.
திருமணத்தன்று பார்த்த அதே தெனாவெட்டான தோரணை அவனிடத்தில். அதனை கண்டதும் சேகரனுக்கு இன்னும் கொதித்துக்கொண்டு வந்தது.
“என்னடா பேசறோம் அது இதுன்னு படம் காட்டறீங்களா?…” என எகிற,
“படம் தான் காட்ட போறோம். பாரேன் சேகரு. பார்த்துட்டு பேசேன்…” என சோபாவில் அமர்ந்தவன் கால்மேல் கால்போட்டு திமிராய் பார்த்தபடி பிரஷாந்தியை உறுத்து விழித்தான்.
“இந்த படம் பலபேரோட தோலை உரிச்சுக்காட்ட போற படம்….” என தன் கையில் இருந்த பென்ட்ரைவை தூக்கிப்போட்டு பிடிக்க பிரஷாந்தி நாக்கெல்லாம் வறண்டது.
அவனின் பார்வையில் நடுங்கியபடி நின்றவளின் கண்களில் தெரிந்த அந்த பயம் விதுரனுக்கு போதவில்லை.