இத்தனை திமிருடன் அவன் வந்து அமர்ந்திருக்கும் விதமே பிரஷாந்தியின் மனதிற்குள் அபாய ஒலியை உயிர்பித்தது.
“அம்மா இப்ப இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்? அப்பாட்ட சொல்லி போக சொல்லுங்க…” என சொல்ல,
“இரு பாப்பா…” என்ற வளர்மதி,
“இங்க பாருங்க, பிரச்சனை வேண்டாம். என்னன்னு கேட்டு அனுப்ப பாருங்க. ஏற்கனவே சின்னவ விஷயத்துல நடந்த சண்டை போதும்…” என்று விதுரனை விரும்பாத ஒரு பார்வை பார்த்து வளர்மதி கணவனுக்கு சொல்ல,
“இவன் எப்ப பார்த்தாலும் நம்ம பொண்ணுங்கட்ட பிரச்சனை பண்ணனே வரான். முதல்ல பெரிய பாப்பாட்ட. இப்ப என் சின்ன பொண்ணையும் கல்யாணம்ன்ற பேர்ல பிரிச்சுட்டான்…” என்று துள்ள,
“ஆஹாங், நிஜமாவா? உங்க பெரிய பொண்ணுட்ட நான் பிரச்சனை பண்ணினேன்? அதை நீங்க பார்த்தீங்க?…” என ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு நிறுத்தி நிறுத்தி சொல்ல சேகரனுக்கு பிபி ஏறியது.
“டேய்…” என்று மீண்டும் கத்த,
“ஏங்க, எதுக்கு வந்தோம்னே கேட்காம நீங்க பாட்டுக்கு தாட்பூட்ன்னு குதிச்சா என்ன அர்த்தம்? நாங்க இருக்கறது புடிக்கலைன்னா என்ன விஷயம்னு கேட்டுட்டு அனுப்ப பாருங்க. நாங்களும் சொல்ல வந்ததை சொல்லிடறோம்.. கிளம்பிடறோம்…” என்ற சக்தி,
“சரிதானம்மா பிரஷாந்தி?…” என்று பல்லை கடித்துக்கொண்டு சக்தி பேச அவளின் மிரட்சி கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது.
எச்சிலை கூட்டி விழுங்கியவள் தந்தையை பார்த்தாள். ஆனால் சேகரன் கொஞ்சமே கொஞ்சம் நிதானித்தார். பின் கோபத்தை குறைத்தவராக அமைதியாக வந்து விதுரனின் முன்னால் அமர்ந்தவர்,
“இங்க பாருப்பா, எனக்கு உன்கூட பேச கொஞ்சம் கூட விருப்பமே இல்லை…”
“எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா?…” என்றான் நக்கலாக விதுரன்.
“ப்ச், என் பொறுமையை சோதிக்காம வந்த விஷயத்தை சொல்லிட்டு வந்த வழியே கிளம்புங்க. அதுதான் நல்லது…”
“எனக்கும் பொறுமை ரொம்பவே கம்மி. அதை எத்தனை தடவை தான் உங்க பொண்ணு சோதிப்பா?…” என விதுரனும் அழுத்தமாய் சொல்ல,
“என்னது என் பொண்ணு சோதிக்கிறாளா? அவளுக்கு என்ன பிரச்சனை? நினைச்சேன்டா அத்தனை பேச்சு பேசி என் பொண்ணை கட்டிட்டு போன அன்னைக்கே நான் நினைச்சேன் இப்படி ஒரு நாள் வந்து நீ நிப்பன்னு. பெருசா சவடால் விட்டுட்டு போன. இன்னக்கு பழசை மனசுல வச்சு அவளோட பிரச்சனை பன்றியா? எங்கடா என் பொண்ணு?…”
சேகரன் ரோஜாவிற்கு பிரச்சனையோ என்று மீண்டும் குதிக்க ஆரம்பிக்க பிரஷாந்தி இதை கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை.
அவள் மேல் கோபத்தில் இருப்பார் என்று இவள் கொஞ்சம் கொஞ்சமாய் நீரூற்றி வளர்த்திருக்க ஒரு நொடியில் அந்த மகளுக்கு பிரச்சனை என்று அவளுக்காக வாதாடி அவள் பக்கம் சாய்ந்துவிட்டாரே என அதிர்ந்து பார்த்தாள்.
“என்னம்மா அப்பாக்கு திடீர்ன்னு ரோஜா மேல பாசம்?…” என தாயிடம் கேட்க,
“கொஞ்சம் இரு பாப்பா, உனக்காவது நாங்க இருக்கோம். ஆனா சின்னவ, ஐயோ என்ன பிரச்சனைன்னு தெரியலையே…” என தன் பங்குக்கு வளர்மதி சொல்ல,
“விட்டா இப்ப அவ வந்தா உடனே சேர்த்துக்குவீங்க போல?…” என பிரஷாந்தி வெறுப்புடன் கேட்கவும்,
“ப்ச், கொஞ்சம் பேசாம இரு பாப்பா…” என பெரியமகளை அமைதியாக்கியவர் விதுரனிடம் பார்வையை பதிக்க,
“பார்ரா பொண்ணு மேல பொங்கறதை? உனக்கு இவ்வளவு பாசமிருக்கா ரோஜா மேல…”
“என்ன கேள்வி இது? பெத்தவனுக்கு புள்ளை மேல பாசமில்லாம இருக்குமா என்ன? சுத்த லூசுத்தனமால இருக்கு…”
“அதே தான் எனக்கும் தோணுது. சுத்த லூசுத்தனமால இருக்கு நீ பேசறது. இங்க நடந்ததுக்கும் நீ பேசறதுக்கு சம்பந்தமே இல்லாம…” விதுரன் இன்னமும் எள்ளலான புன்னகையுடனே பேசிக்கொண்டிருக்க அவனை ஓரளவு அறிந்திருந்த பிரஷாந்திக்கு கிலி பிடித்தது.
அவன் கோபத்துடன் பேசிவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் ஒளித்து மறைத்து இப்படி பேசினால் என்ன நடக்கும் என்பதை கல்லூரி காலத்திலேயே கண்டிருக்கிறாள் தானே?
“இப்ப எதுக்கு வந்த? என் பொண்ணு எங்க? கொண்டு வந்து விடு….” என மீண்டும் சேகரன் கேட்க,
“இங்க தான இருக்க உங்க பொண்ணு…” என பிரஷாந்தியை காண்பித்தவன் அமர்த்தலாய் பார்த்து வைக்க,
“சோதிக்கிறான்னு சொன்னியேடா, கொண்டுவந்து விட்டுட்டு போய்ட்டே இரு. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நாங்க அமைச்சு குடுக்கறோம்…”
“சோதிக்கிறான்னு சொன்னேன். உங்க பொண்ணுன்னும் சொன்னேன். இது கூட உனக்கு புரிய தெரியலையே. நான் சொன்னது உன் பொண்ணை. உன் பெரிய பொண்ணை….” என அவளை கை காண்பித்துவிட,
“என்னடா இப்ப திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கிற?…”
“ப்ச், எனக்கு இந்த வளவளன்னு சுத்தி வளைச்சு போர் அடிக்குது. நேரடியா பேசுவோமா?…” என்றவன் சட்டென எழுந்து நின்று,
“கொஞ்சம் நாள் முன்ன சென்னைல வச்சு இவளை மால்ல பார்த்தேன். ஹ்ம்ம் நோ நோ, அவ தான் என்னை பார்த்தா. பார்த்து பேசினா…” என பிரஷாந்தியை பார்த்துக்கொண்டே அவன் சொல்ல சொல்ல அவளின் கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. நிற்க முடியாமல் சோபாவை பிடித்துக்கொண்டாள்.
“என்னது என் பொண்ணு உன்கிட்ட பேசினாளா?…” என்ற சேகரன்,
“என்ன பாப்பா? இவனை பார்த்து ஏன் நீ பேசின? இவன் உன்னை எதுவும் மிரட்டினானா?…” என்று சொல்லவும் கடகடவென விதுரன் சிரிக்க அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது அவனின் நகைப்பொலி.
“வாட்? நான் மிரட்டினேனா? குட் ஜோக். குட் ஜோக்…” என்று சிரித்தவன்,
“ஓகே, ஓகே சொல்லிக்கோ. ஆனா என்ன பேசினான்னு இப்ப அவ வாயாலையே சொல்லிட்டா நான் சொல்ல வந்ததையும் சொல்லிட்டு கிளம்பறேன்…” என்றும் சொல்லி பின் வேண்டுமென்றே,
“என்னோட வொய்ப் எனக்காக காத்திட்டு இருப்பா. சீக்கிரமே வரேன்னு சொல்லியிருக்கேன். நேரமே போகனுமில்லையா? எங்க குழந்தையை அவ சுமக்கறப்போ அவளை காக்க வைக்க கூடாது பாருங்க…” என்று பேசியவன் அவர்களின் முகபாவனைகளை அச்சுபிசகாமல் அவதானித்தான்.
“சின்ன பாப்பா உண்டாகியிருக்காளா?…” என்று சந்தோஷத்துடன் வேகமாய் வளர்மதி சொல்ல அவர் வார்த்தைகளில் வெளிப்படுத்தியது சேகரனின் முகத்தில் அப்பட்டமாய் வெளிப்பட்டது. ஆனாலும் மறைத்துக்கொண்டவர் முகம் லேசாய் நெகிழ்ந்திருந்தது.
ஆனால் அதற்கு நேர்மாறாய் பிரஷாந்தி முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி. அதையும் தண்டி தாயின் குரல் அவளை புரட்டியது. அதனை வெறுப்புடன் பார்த்தான் விதுரன்.
“ஓகே அதெதுக்கு உங்களுக்கு. சம்பந்தம் இல்லாத விஷயத்தை உங்கக்கிட்ட போய் சொல்லிட்டு இருக்கேன். ப்ச், என்ன பேசினேன். ஆஹ், உங்க பெரிய பொண்ணு அன்னிக்கு ஒரு விஷயமில்லை. ரெண்டு மூணு விஷயம் பேசினா. அதான் அதுக்கான பதிலை உங்க முன்னாடியே சொல்லிடலாமேன்னு வந்தேன்…”
நேராக மீண்டும் அவன் பாயிண்ட்டை பிடிக்க பிரஷாந்தியின் பயம் போய் இப்பொழுது ஆத்திரம் குடிகொண்டது.
“என்னடா மிரட்டறியா? இது எங்க வீடு. ஒரு போன் பண்ணினா போதும். உன்னை அள்ளிட்டு போய்டுவாங்க. பார்க்கறியா?…” என்று படபடக்கும் குரலில் அவள் மிரட்டி,
“அப்பா மில்லுக்கு போன் பண்ணுங்கப்பா. இவனை ஒரு கை பார்த்திருவோம்…” என்று வேறு சொல்ல,
“ப்ச், பாப்பா, பேசாம இருக்க மாட்ட. அதான் சொல்லிட்டு போறேன்னு சொல்றான்ல? ஹ்ம்ம், சொல்லிட்டு கிளம்பட்டும். திரும்ப ஊரை கூட்ட சொல்றியா?…” என்று கடுமையாய் பேசிவிட கண்ணீர் நிறைந்துவிட்டது அவளுக்கு.
“ம்மா…” என தாயை பார்க்க அவரோ அவளின் கையை தட்டிக்கொடுத்து எதுவும் பேசாதே என சொல்ல,
“ஓஹ் கூப்பிடலாமே? தாராளமா எல்லாரையும் கூப்பிடலாம். அப்படியே மிஸ்டர் நிர்மலையும் சேர்த்தே கூப்பிடலாம். அவரை வச்சே அன்னைக்கு நீ என்கிட்டே பேசினதை சொல்லிடேன். இது இன்னும் வசதி தான்…” என விதுரன் இன்னும் நக்கலாய் சொல்ல சேகரனுக்கு இதில் எதுவோ இருப்பதாய் தோன்றியது.
“என்ன சொல்றப்பா? எதுக்காக இப்ப இப்படி பேசிட்டு இருக்க? அதுவும் என் மூத்த மருமகப்பிள்ளையை வர சொல்லி. என்னவோ பூடகமாவே இருக்கு…” என்று சரியாக சொல்ல,
“அப்பா இவனை போக சொல்லுங்க…” என நடுங்கும் குரலில் பிரஷாந்தி சொல்ல அவளை அசையாமல் பார்த்தான் விதுரன். நிர்மல் என்ற ஒற்றை பெயர் அவளை ஆடிப்போக வைத்திருந்ததே.
“அப்படி எல்லாம் போக முடியாது…” என மீண்டும் சட்டமாய் அமர்ந்தவன்,
“அன்னைக்கு என்ன பேசின என்கிட்டே? அதான் மால்ல வச்சு பேசினியே. அதை இப்ப நீ அப்படியே வார்த்தை மாறாம உன்னை பெத்தவங்கட்ட நீயே சொல்ற. அப்படி சொன்னா நான் பேசாம எழுந்து போய்டுவேன். இல்லை இந்த வீடியோவை போட்டு காண்பிப்பேன் உன் புருஷனுக்கும் சேர்த்து…”
“விது….” என்று பிரஷாந்தி அலற அமர்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாய் எழுந்து வந்தவன்,
“மூச், என் பேரை சொன்ன? மூஞ்சி முகரையை எல்லாம் பேத்துடுவேன் பார்த்துக்க. யார் என்னன்னு பார்க்க மாட்டேன். என் பேரை இத்தனை உரிமையா கூப்பிடற? என்ன தைரியம் உனக்கு? தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ….” என்று அவன் எகிறியதில் வளர்மதியின் பின்னால் சென்று அவள் ஒடுங்கி நிற்க,
“என்ன தம்பி இதெல்லாம், நான் கொஞ்சம் பொறுமையா பேசினா என் பொண்ணையே மிரட்டறீங்க. இது நல்லதுக்கு இல்லை. என்ன பிரச்சனை உங்களுக்கு?…” என்று சேகரன் பேச அவரறியாமல் விதுரனை மரியாதையுடன் அழைத்திருக்க அதை புரிந்தவன்,
“இந்த மரியாதை, பூசி மழுப்பறது எல்லாம் என்கிட்டே வேண்டாம். இப்ப அன்னைக்கு பேசினதை அப்படியே உன் பொண்ணு சொல்லனும். பிரச்சனையே அங்க தான். சொல்ல சொல்லு…” என்று கத்த,
“என்னத்த பேசின பாப்பா? அப்பா கேட்கறார்ல, சொல்லேன்…” என்று வளர்மதியும் அவளை பிடித்து முன்னிறுத்த கேவி கேவி அழ ஆரம்பித்தாள் பிரஷாந்தி.
“ஐயோ என் பொண்ணு அழறாளே? நீ அழாதடா. போற வாறவன் எல்லாம் உன்னை பேச நான் விடுவேனா?…” என்று மகளின் கண்ணீரை துடைத்த வளர்மதி,
“ஏங்க இவனை இங்க இருந்து போக சொல்லுங்க. போக சொல்லுங்க முதல்ல…” என்று அவர் அதற்கு மேல் கத்த,
“வாய மூடு வளர். என்ன பேசினேன்னு இவ சொல்லிட்டா அவங்க ஏன் இங்க நிக்க போறாங்க? சொல்ல சொல்லு உன் பொண்ணை. அதை விட்டுட்டு ஏன் அழனும்?…” என்றவர் பார்வை பிரஷாந்தியை துளைத்தது.
விதுரன் சொல்லியது போல இவளுக்கு என்ன அவன் மீது அத்தனை உரிமை. அவளின் அழைப்பே சொல்லியதே? இங்கே ஏதோ தவறிருக்கிறது என மீண்டும் மீண்டும் அவரின் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.
“அப்பா என்னை நம்பாம அவன் சொல்றதை…”
“பாப்பா, இப்ப பேச்சு அதில்லை…” சேகரன் மகளின் அழுகையில் சற்று தடுமாறினாலும் விஷயத்தை அறிவதில் முனைப்புடன் இருந்தார்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை, நான் நிர்மலை வர சொல்றேன். அவரை வச்சு பேசலாம்…” என தன்னுடைய மொபைலை எடுத்தவன் அவளின் முன்னால் நீட்டி,
“இது தானே உன் புருஷன் நம்பர்…” என்று காண்பிக்க பிரஷாந்தி விழிகளே தெறித்துவிடும் போல் ஆனது.
“போன், பண்ணாத, போன் பண்ணாத. விது ப்ளீஸ்…” என கையெடுத்து கும்பிட்டபடி அவனின் முன்னால் சென்று போனை பறிப்பதை போல போக சட்டென இரண்டடி பின்னால் நகர்ந்தவன்,
“ஏய்…” என ஆத்திரத்தில் கத்த அதை பொறுக்க முடியாத சேகரன் தனக்கு எதுவும் தெரிய வேண்டாம் என நினைத்தார்.
“இது சரியில்லை, முதல்ல இங்க இருந்து நீங்க போங்க. என் பொண்ணு தப்பு பண்ணிருக்கமாட்டா…” என்றவர் பின் கோபத்துடன்,
“என்னை மதிக்காம அத்தனை பேர் கூடி இருந்த சபையில் நீங்க பேச பேச மறுக்காம தாலி கட்டிட்டு எங்களை உதறிட்டு உங்க கூட திரும்பியும் பார்க்காம போனவளை விட எனக்கு இப்ப எங்க பெரிய பொண்ணு தான் முக்கியம். அதான் சந்தோஷமா இருக்கீங்கள்ள. போதும். நீங்க கிளம்பிருங்க…”
சக்திக்கும் விதுரனுக்குமாக பொதுவாய் ஒரு வணக்கத்தை வைத்தவர் முகம் கடுக்க திரும்பி நின்று பிரஷாந்தியின் கண்ணீரை துடைக்க,
“நீங்களாம் திருந்தாத ஜென்மம்…” என்ற விதுரன்,
“சக்தி, போடுடா இதை…” என்று பென்ட்ரைவை தூக்கி போட அதனை கேட்ச் பிடித்தவன் டிவி எங்கே என்று சுற்றிலும் தேடி ஒரு சுவற்றில் மாட்டப்பட்டிருக்க அங்கே சென்று அதனை இயக்கலானான்.
இருவரும் என்ன செய்கிறார்கள் என சேகரன் பார்க்க பிரஷாந்திக்கு அழுகை கூடியது. இத்தனை வருடம் தான் ஏற்படுத்தி வைத்திருந்த பிம்பம் இதோ உடைக்க போகிறார்கள், நினைக்கவே அச்சமாய் இருந்தது.
“எப்படி தடுக்க, எப்படி தடுக்க? என மூளை வேகமாய் குறுக்கும் நெடுக்குமாய் யோசனையில் தறிகெட்டு ஓட வேகமாய் விதுரன் அருகே வந்தவள்,
“விது…” என வாய்தவறி மீண்டும் அழைக்க அவன் திரும்பிய வேகத்தில் பயந்தவள்,
“சொல்லலை, சொல்லலை. சத்தியமா இனி அப்படி சொல்லலை. இனிமே உன்னை அப்படி கூப்பிடலை. போதுமா? இதை போடாத. எதுவும் போடாத. உன்னை பார்த்தா கூட இனி நான் பேசலை. பேசலை…” என்று தலையில் அடித்துக்கொண்டு அவள் அழ பெற்றோர்கள் அவளின் பேச்சில் கல்லென நின்றார்கள்.
அதை எல்லாம் கண்டுகொள்ளாத பிரஷாந்தி அதற்கு மேல் எதையும் மூடி மறைக்காமல் வெடிக்க ஆரம்பித்தாள் தன்னை மறந்து.
“என்னை என்னடா பண்ண சொல்ற? என் மனசுல அப்படியே பதிஞ்சுட்டேன். உன்னை அப்படி கூப்பிட்டே பழகிட்டேன். என் விதுரன்னு உருபோட்டு உரு போட்டு எத்தனை ஆசையா இருந்தேன் தெரியுமா? ஆனா நீ என்னை கொஞ்சமாவது மதிச்சியா?…” என்று அழ அவளை தடுக்காமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் அவன்.
“உனக்கும் அத்தனை செல்வாக்கா அழகா இருந்த நான் வேண்டாம். இப்ப வந்த ரோஜா புடிக்குது. நீன்னு இல்லை, எங்கலாம் அவளை மட்டம் தட்டனும்னு நினைக்கறேனோ அங்கலாம் அவளை தான் தூக்கி வைக்கிறாங்க. என்னை வேணும்னே வெறுப்பேத்தறாங்க…”
“நான் என்ன தப்பு பண்ணினேன்? இந்த வீட்டில கூட அதுவரைக்கும் என்னை கொண்டாடிட்டு அவ பிறக்கவும் மொத்த கவனிப்பும் அவ பக்கம். போதாததுக்கு என்னை மாதிரி அவ இல்லைன்னு சொல்லி சொல்லி எத்தனை பேச்சு எனக்கு. நானாவா இப்படி வளர்த்தேன்? ஏன் என்ன பெத்தாங்கள்ள. சொல்லி புரியவைக்க வேண்டியது தானே?…” என பெற்றோர்களையும் குற்றம் சடடியவள் அவர்கள் பக்கம் திரும்பினாள்.
“எனக்கு நான் தான் முக்கியம். ஆமா இவனை எனக்கு புடிச்சது. அதான் அப்படி பண்ணினேன். என்ன தப்பு? ஆசைப்படறது தப்பா? இவனுக்கும் என்னை விட அவ தான் உசத்தி. அவ என்னன்னா நான் எத்தனை சொல்லியும் நான் கஷ்டப்பட்டு அவளை கீழே தட்டி வச்சா அதுக்கும் மேல வேகமா என்னை தள்ளி எழுந்து வரா…”
“எல்லோரும் சேர்ந்து கண்டிச்சு வச்சா ஒடுங்கி இருப்பான்னு பார்த்தேன். எனக்கு கிடைக்காத படிப்பு, எனக்கு கிடைக்காத சுதந்திரம், எனக்கு கிடைக்காத வேலைவாய்ப்பு, கடைசியில எனக்கு கிடைக்காத இவன் எல்லாம் அவளுக்கு. அவளுக்கு திரும்ப திரும்ப அவ விருப்பப்படியே எல்லாம் நடக்குது. என்னால அதை தனகிக்கவே முடியலை. அவளை விட எதுல குறைஞ்சிட்டேன் நான்?…”
“அவ பிறக்கற வரைக்கும் நான் ராணி. ஆனா எனக்கும் மேல தான் வாழ்க்கை அவளுக்கு கிடைச்சிருக்கு. ஆனா எனக்கு? என்னோட பர்சனல் லைப்? காதல் அது சுத்தமா இல்லையே. இல்லவே இல்லை. ஆசைப்பட்டவனும் கிடைக்கலை. கிடைச்ச வாழ்க்கையை வாழவும் எனக்கு தெரியலை…”
“என்னடி சொல்ற? ஏன் இப்படிலாம் பேசற? நீ என்ன பண்ணி தொலைச்ச? பாப்பா, அம்மாட்ட சொல்லுடா…” என வளர்மதி மகளின் கதறலில் அவளின் வட்டத்திற்குள் நுழைந்தார். இதுதானே அவளுக்கும் வேண்டும்.