பிரச்சனை தான். கை மீறி வலுத்துவிட்டது. ஆனால் அதிலிருந்து தானும், தன் பிம்பமும் சேதாரமில்லாமல் தப்பிக்க வேண்டுமே. புத்திகெட்டு கோபத்தில் உளறியதை மாற்ற வேண்டுமே. சுதாரித்தாள். (https://punandjokes.com/)
“எனக்கு நிர்மலோட ஒத்து போகலையா? இல்லை அவருக்கு என்னோட ஒத்துபோகலையா எதுவுமே தெரியலை. ஆனா நான் சந்தோஷமா இல்லையே. என்னை பெத்தவங்க எனக்கு அமைச்சு குடுத்த வாழ்க்கையை நான் வாழனும்னு அவங்களுக்காக தான் வாழ்ந்துட்டு இருக்கேன்…”
“ஐயோ என் பொண்ணு இத்தனை கஷ்டப்பட்டறாளே?…” என வளர்மதியும் அழ ஆரம்பித்தார். சேகரன் மட்டும் அமைதியாய் அவள் பேசியதை ஜீரணிக்க முடியாமல் நின்றார்.
அவள் கண்ணீர் சிந்த சிந்த உணர்வற்று அவளை பார்த்தபடி இருந்த விதுரன் சக்தியை திரும்பி பார்த்து கண்ணசைக்க டிவி உயிர்பெற்று வீடியோ ஓட ஆரம்பித்தது.
“நான் தான் போடாதன்னு சொன்னேன்ல?…” என்று பிரஷாந்தி மீண்டும் தன்னுடைய் கோபக்குரலில் கத்த அதை எல்லாம அவன் கண்டுகொள்ளவே இல்லை.
முதலில் விதுரனிடம் தன் காதலை அவள் வெளிப்படுத்தியதும் அறை வாங்கியதும் ஓட, அதன் பின்னர் பிரின்ஸிபால் ரூமில் விதுரன் தனித்து நிற்கும் பொழுது பதிவானது ஓடியது.
தளர்ந்து போய் சேகரன் அமர வளர்மதி மகளின் பிடியில் இருந்து நகர்ந்தார். கொஞ்சமும் நம்ப முடியவில்லை தன் மகளா என்று.
பார்வை தொலைகாட்சியின் திரையிலேயே பதிந்திருக்க சக்திக்கு வருத்தமாய் இருந்தது அவர்களை பார்க்க. பென்ட்ரைவை எடுத்து வைத்துக்கொண்டவன்,
“விது பேசிட்டு வாடா, நான் வெளில நிக்கறேன்…” என சொல்லி,
“மிஸ்டர் சேகரன், ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன். நீங்க வளர்த்தது பொண்ணு கிடையாது. விஷமுள்ள ஜந்து. இதனால் பாதிக்கப்பட்ட ஒரே ஜீவன் உங்க ஸாரி, எங்க ரோஜா தான்….” என்று சொல்லிவிட்டு அவன் வெளியேறிவிட அவனின் பேச்சில் நிமிர்ந்து மகளை பார்த்தார் சேகரன்.
“உனக்கு என்னம்மா குறை வச்சோம்? என்ன பண்ணி வச்சிருக்க? இதுல இன்னொருத்தன் மேல பழி போட்டு. ச்சீ…” என்று கோபத்துடன் முகத்தை சுளித்தார். அவளின் வாய் வார்த்தையாய் கேட்டதை விட பார்த்தது இன்னும் பாதித்தது.
“நான் சொல்றதையும் கேட்டுட்டு மொத்தமா கோபப்பட்டுக்கோங்க…” என்றவன் ரோஜா சொல்லியவற்றை எல்லாம் சொல்லி கடைசியில் தன்னிடம் மாலில் அவள் பேசியதையும் சொல்ல சொல்ல பிரஷாந்தி முகம் அவமானத்தில் சிறுத்து கன்றியது.
“அடிப்பாவி, நீயெல்லாம் என்ன பொண்ணுடி? மனுஷியா?…” என வளர்மதி அடிக்க ஆரம்பிக்க,
“இப்ப மட்டும் நான் சொல்றதை நம்ப முடியுதோ? பெத்த பொண்ணை கவனிச்சு பார்க்க துப்பில்லை, நீங்கல்லாம் என்னன்னு பெத்து வளர்த்தீங்க?…” என்றவன்,
“இன்னைக்கு நான் சொன்னதால புரிஞ்சது. இதுக்கும் காரணம் என்ன தெரியுமா?…” என்று சொல்லி செல்லம்மாவின் மரணத்தையும் அன்று ரோஜா பட்ட வேதனையையும் சொல்ல சேகரன் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
“இத்தனை வன்மமா ஒரு பொண்ணு, அதுவும் கூட பிறந்த தங்கச்சியை கூட விரோதியா பார்க்கற பொண்ணு. ச்சீ…” என்று சொல்ல,
“ஐயோ எங்களுக்கு இது தெரியாமலே போச்சே, நாங்க எவ்வளவு பெரிய பாவி…” என வளர்மதி சொல்ல,
“அட நிறுத்துங்கம்மா, இங்க அவ இருந்த வரைக்கும் தாயா பார்க்க முடியாத நீங்க இன்னைக்கு அழறீங்களோ? இந்த மனுஷனை கூட ஒரு விதத்துல தள்ளலாம். ஆனா நீங்க தாய் தானே? தாயை விட வேறு யாராலையும் தன் குழந்தைகளை கணிக்கவும், கவனிக்கவும் முடியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா நீங்க…”
“அவளோட ஒழுக்கத்தை கூட எவனோ ஒருத்தன் ஒரு போட்டோவை காட்டினதும் சந்தேகப்பட்டுட்டீங்க. என்ன தாய் நீங்க? உண்மையை சொல்லனும்னா ரோஜாவை நீங்க வளர்க்கலை. தானா உருவானா. அவளை சுத்தி நல்லவங்களை அவளே உருவாக்கிக்கிட்டா. தேங்க் காட். இல்லைன்னா இதோ இவளை மாதிரில வளர்த்திருப்பீங்க…” என பிரஷாந்தியை காட்டி காறி உமிழாத குறையாய் சொன்னான்.
அவனின் பேச்சும், பார்வையும் வளர்மதியை அத்தனை கீழாய் உணர வைத்தது. தலையை குனிந்தபடி விசும்பிக்கொண்டே அவர் நிற்க,
“என்னவோ பண்ணுங்க. இது உங்க குடும்ப விஷயம், இதுல தலையிட நான் யாரோ. எனக்கு அது வேண்டாம். ஆனா ஒரு விஷயம் சொல்லிக்கறேன். இனி இவ எங்க வாழ்க்கையில் தலையிட கூடாது….” என்று சொல்லியவன் பிரஷாந்தியை பார்த்து,
“உன் மேல கொலை காண்டுல இருக்கேன். இன்னொருக்க ரோஜாவுக்கு என் வொய்ப்க்கு கால் பன்றேன் தத்துபித்துன்னு உளருறேன்னு எதையாச்சும் பண்ணின நான் யாருக்கும் பார்க்க மாட்டேன். உன் புருஷனை கூட….” என விரல் நீட்டி எச்சரித்தவன்,
“இனியாச்சும் உன் புருஷன் உன் குழந்தைன்னு வாழுன்னு எல்லாம் நான் சொல்ல போறதில்லை. இப்படி எல்லார் முன்னாடியுமே உன் புருஷன் சரில்லைன்னு சொல்றியே. உன் புத்தியோட உட்சபட்ச லட்சணத்தை இதை விட நீ புரிய வைக்க முடியாது…”
“விது…” என கண்ணீருடன் அழைக்க,
“அடிக்க கூடாதுன்னு ரொம்ப கண்ட்ரோலா இருக்கேன். வாங்கிடாத…” என ஓங்கிய கையை இறக்கிவிட்டு,
“உங்களுக்கும் தான், இனி ரோஜான்ற ஒருத்தியை நீங்க நினைப்பா கூட நினைக்காதீங்க. அந்த தகுதி உங்க யாருக்கும் கிடையாது. இதை சொல்லிட்டு போக தான் வந்தேன். உங்களோட அருமை பெருமையான பெரிய பாப்பாவையே வச்சு சீராட்டுங்க. அத தான இவளும் விரும்பினா…” என்றவன்,
“இவங்க உன்னை பெருசா நினைக்கனும்னு தான அத்தனையும் செஞ்ச. இன்னைக்கு அது எல்லாமே மொத்தமா நொறுங்கிடுச்சு. இப்ப என்ன செய்ய போற? மொத்தமா வச்சுக்கோ…” என்றவன்,
“இத்தோட விட்டுட்டு போறேன்னு பார்த்தியா? இதுக்கு மேல உனக்கான தண்டனையை உன் அப்பாம்மா தருவாங்க. கொஞ்சமாச்சும் உப்புப்போட்டு சாப்பிடறவங்களா இருந்தா? ரோஜாவையும் அவங்க பொண்ணுன்னு நினைச்சா அவளுக்கு செஞ்சதுக்கு நீ அனுபவிப்ப. நிராதரவு எப்படி இருக்கும்னு உனக்கும் தெரியனும் பாரு…” என்று அவளிடமும் சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட பிரஷாந்தி அப்படியே நின்றாள்.
பெற்றோரிடம் என்ன பேச என தெரியாமல் தைரியமற்று அவள் நிற்க சேகரன் இன்னும் அமர்ந்த விதத்திலேயே தான் இருந்தார்.
“நிராதரவு” விதுரன் சொல்லி சென்ற இந்த வார்த்தையே தகப்பனாய் அவரை சுக்குநூறாய் உடைத்தெரிந்திருந்தது.
தன் மக்களை நன்றாக வளர்ப்பதாக இறுமாந்திருந்த அவருக்கு தகுந்த பட்டத்தினை வழங்கி சென்றுவிட்டான் அவன். சேகரனின் காலடியிலேயே அமர்ந்திருந்த வளர்மதி கண்ணீர் வடித்தபடி இருக்க அவர்களை நெருங்கவே பயமாய் இருந்தது அவளுக்கு.
செய்த தவறின் வீரியம் புரிந்தாலும் அத்தனை சுலபத்தில் தனது தவறை அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனால் கணவனிற்கு தெரிந்தால்? இந்த எண்ணம் அவளை பின்னடைய செய்தது.
இனி யார் எப்படி போனால் என்ன? என் வாழ்க்கை எனக்கு முக்கியம் என்று தான் நினைத்தாள். ஏற்கனவே நிர்மலுக்கு அவளை அத்தனை நெருக்கமாய் பிடிக்காதென்று தெரியும்.
உண்மையிலும் உண்மை அவள் சொல்லியது, காதலை நிர்மல் காட்டியிருந்தால் கூட கொஞ்சம் மாறியிருப்பாளோ என்னவோ? அவனானால் இவளின் குண இயல்பில் கடமையுடன் தான் வாழ்ந்தான்.
அந்த கடமை உணர்வில் அவளுமே அப்படியான பற்றில்லாத ஒரு வாழ்க்கை. ஊர் உலகத்திற்கு பெருமையாய் காட்டிக்கொள்ள ஒரு வாழ்க்கை. இப்படித்தான் நினைத்துக்கொண்டாள்.
அதனால் அவளின் கவனம் மொத்தமும் தன் குடும்பத்தில் தான் இருந்தது. அதை நிர்மலும் ஆட்சேபிக்கவில்லை. விட்டால் போதுமெனும் மனப்பான்மை அவனுக்கு. அதுவே பிரஷாந்திக்கு வெறுப்பை கொடுத்தது.
பாவத்தின் சம்பளம் என்று செல்லம்மாள் இருந்தால் சொல்லியிருப்பார். ஆனால் அதை ஏற்பாளா பிரஷாந்தி? கடமையான வாழ்க்கையாக இருந்தாலும் அதை கணவனுடனே வாழ நினைத்தாள். அதனை இழக்க விரும்பவில்லை.
சற்று நேரம் அமைதியுடனே இருக்க அவர்களோ இவள் புறம் திரும்பாமல் இருக்க மெதுவாய் எழுந்து சென்று தாயருகே அமர்ந்தாள். அவளின் துருப்பு சீட்டல்லவா? ஆட்டிப்படைக்கும் மந்திரக்கோல்.
“அம்மா…” என்ற அவளின் அழைப்பில் இருவருக்கும் உயிர் திரும்பியதை போல இருக்க அதுவரை மனதினுள் அனைத்தையும் ஓட்டிப்பார்த்த சேகரன்,
“வளர், மாப்பிள்ளைக்கு போன போட்டு சொல்லு. நாளைக்கு ப்ளைட்ல இல்லை நாளான்னைக்கு ப்ளைட்ல இவளை அனுப்பி வைக்கறோம்னு. இனி இங்க இவ இருக்க கூடாது. என்னைக்கு நான் செத்தேன்னு சேதி தெரியுதோ அன்னைக்கு வந்தா போதும்…” என்று சொல்லிவிட்டு வேகமாய் எழுந்து சென்றுவிட்டார் வெளியே.
இப்படியான ஒரு செயலை பிரஷாந்தி எதிர்பார்க்கவே இல்லை. விதுரன் சுட்டிக்காட்டிய போது உணராத ஒன்றை இப்பொழுது உணர்ந்தாள். உள்ளுக்குள் ஒரு வலி. தாயை திரும்பி பார்த்து,
“அம்மா, பார்த்தீங்களா அப்ப சொல்லிட்டு போறதை? அப்போ நான் வேண்டாமா? புதுசா ஒரு உறவு கிடைச்சதும், பொண்ணு உண்டாகியிருக்கான்னு தெரிஞ்சதும் உங்களுக்கு நான் வேண்டாதவளா ஆகிட்டேன்ல?…” மீண்டும் அவள் அதே தவறை செய்ய எழுந்து நின்ற வளர்மதி,
“உன்னை கையெடுத்து கும்பிடறேன். இதே வார்த்தையை அவர்க்கிட்ட பேசிடாதம்மா. உசுர விட்டாலும் விட்ருவாரு. கிளம்பி போற வரைக்கும் நல்லவிதமா இருந்துட்டு போ. இப்ப நீ உன் மாமியார் வீட்டுக்கு கிளம்பு. உன் பிள்ளை அங்க தான இருக்கான். போய் கூட்டிட்டு அப்படியே கிளம்பிரு…”
வளர்மதி அவளிடம் முகம் பார்க்காமல் கூட சொல்லிவிட்டு அவளின் மாமியாருக்கு அழைத்து பிரஷாந்தி அங்கே வருவதாய் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு உள்ளே செல்ல விக்கித்து நின்றாள் பிரஷாந்தி.
நிராதரவு. ஒரு நொடியில் அது எப்படி இருக்கும் என்பதை தன் பெற்றோர் உணர்த்திவிட்டு சென்றதை ஜீரணிக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள்.
கோபம் தான். ஒரு நொடியில் தன்னை உதறிவிட்டு செல்லும் உறவுகள் மீது அத்தனை கோபம். இப்பொழுது கூட ஏன் என உணர முடியாத அளவிற்கு கோபம். அழுகையாய் வந்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் பிரஷாந்தி.
இனி தனது வாழ்க்கையையாவது காத்துக்கொள்ள வேண்டுமே? புறப்பட்டுவிட்டாள். பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல் கூட. வளர்மதி எங்கே என்று தேடும் பொழுது அவள் வீட்டில் இல்லை. காரை எடுத்துக்கொண்டு சென்றதாய் வாட்ச்மேன் சொல்ல ட்ரைவருக்கு அழைத்தார்.
அவள் மாமியார் வீட்டிற்கு சென்றுகொண்டு இருப்பதாய் அவன் சொல்லவும் மறுபக்கத்தில் பிரஷாந்தியே “தாயிடம் பேச விரும்பவில்லை என்று சொல்” என சொல்வதை கேட்டவர் நிம்மதியுடன் போனை வைத்துவிட்டார்.
விஷயத்தை சேகரன் மகனிடம் சொல்ல குடும்பமாய் அமர்ந்து ரோஜாவை நினைத்து நினைத்து மருகத்தான் முடிந்தது அவர்களால்.
உடலளவில் மனதளவில் மிகவும் தளர்ந்து போயினர். பிரபு இப்பொழுது தாய் தந்தை உடனே இருந்து கவனித்துக்கொண்டான்.
கணவனிடம் சென்ற பிரஷாந்தியோ பெற்றோரிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தாள். நிர்மல் மட்டும் அவ்வப்போது அழைத்து விபரம் கேட்டுக்கொள்வான்.
அதன் பின்னர் சேகரனும் பிரபுவும் ரோஜாவை சந்திக்க எத்தனை முயற்சிகள் எடுத்தும் விதுரன் விடவே இல்லை. அவனை மீறி அவளை சந்திக்கவும் முடியவில்லை.
———————————————–
“ஏழாவது மாசமே போடலாம்ன்னா இவன் கேட்டானா? ஒன்பதுல போடுங்கன்னு படுத்திட்டான். இப்ப பாருங்க. நாளைக்கு வளைகாப்பு. இவளுக்கு இப்ப வலி வருமோ அப்ப வலி வருமோன்னு படபடப்பா இருக்கு…” என கயல்விழி மகனை தாளித்துக்கொண்டு இருந்தார் கணவரிடம்.
பெரியவீட்டில் நடுநாயகமாக சோபாவில் அமர்ந்து சீரக தண்ணீர் குடித்தபடி ரோஜா கணவனை கண்களால் ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தாள்.
“பார்த்தியா லிட்டில் டெவில், உன்னை இங்க கடத்திட்டு வர உன் ராஜமாதாவுக்கு எவ்வளவு ஈகர்ன்னு…” என தாயை மனைவியிடம் புகார் சொல்ல,
“அங்கிள், இதையெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடனும். இத்தனை நாள் அதை தானே செஞ்சீங்க. இப்பவும் அதையே செய்ங்க…” என்ற ரோஜா சொல்ல,
“நீ என்னை கலாய்க்கறையா?…” சந்தேகமாய் அவளை பார்க்க முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு,
“அச்சோ அங்கிள் சத்தியமா…” என்றவள் முகம் குறும்பில் ஜொலிக்க,
“ஆமாங்கறேன்…” என்றவளின் சிரிப்பில் விதுரனும் இணைந்து சிரிக்க,
“ஹப்பா கொஞ்சம் நேரத்துல எத்தனை பாடு படுத்திட்டா. நல்ல வேளை…” என்று சொல்லிய வைத்தீஸ்வரி,
“சரி சரி எல்லாரும் போய் தூங்குங்க…” என்று குழுமியிருந்த குடும்பத்தினரை அனுப்ப அனைவரும் கலைந்து சென்றனர். விதுரனும் ரோஜாவின் கை பிடித்து எழுப்ப,
“நீ எங்க அவளை கூட்டிட்டு போற? அவ கீழே என்னோட தூங்கட்டும். இல்லைன்னா எனக்கு தூக்கம் வராது. சும்மா சொல்ல சொல்ல கேட்காம மாடிக்கும் கீழையும் இழுத்தடிச்சுட்டு இருக்க…” என கடுமையாய் மகனிடம் காய சலிப்புடன் தாயை பார்த்துவிட்டு ரோஜாவை பார்த்தவன்,
“அப்போ நானும் இங்கயே இருக்கேன்…” என ரோஜாவை கூட்டிக்கொண்டு கயல்விழி அறைக்கு சென்றவன் அவளை கட்டிலில் அமர வைத்துவிட்டு தனக்கு கீழே விரித்துவிட்டான் மெத்தையை.
“அப்பா வாங்க நீங்களும் தூங்குங்க…” என சடகோபனையும் துணைக்கழைக்க அவர் கயல்விழியை பார்த்தார்.
“அதான் கூப்பிடறான்ல. போங்க…” என சிரித்தபடி சொல்லியவர் விளக்குகளை அணைத்துவிட்டு வந்து ரோஜாவின் அருகே படுக்க அவரின் மேல் கை போட்டு உறங்கிவிட்டாள் ரோஜா.
கயல்விழிக்கு தான் உறக்கம் வரவில்லை. வாட்சை பார்த்தார். நேரம் இரண்டு மணி என்றது.
முதல்நாள் காலை தான் ரோஜாவை அழைத்துக்கொண்டு பெரிய வீட்டிற்கு வந்திருந்தான் விதுரன். அதிலும் மொத்த குடும்பமும் இவர்கள் வளைகாப்பு விழாவிற்கென வந்திறங்கி இருக்க ரோஜாவிற்கு தங்கள் வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. அவனை படுத்தி எடுத்து இங்கே வந்துவிட்டாள்.
எல்லோரிடமும் சேர்ந்து அரட்டை ஆர்ப்பாட்டம், பாட்டு என்று வீடே அவர்கள் ஆர்ப்பரிப்பில் மிரண்டது.
இரவு உணவை முடித்துக்கொண்டு கயல்விழி சொல்ல சொல்ல ரோஜாவுடன் தங்கள் அறைக்கு சென்றவன் நடு ராத்திரியில் வீடே அதிரும்படி கத்திக்கொண்டு ரோஜாவை தூக்கிக்கொண்டு கீழே ஓடி வந்தான்.
என்னவென பார்த்தால் பொய்வலி. அதற்கே வெகுவாய் தளர்ந்து போனாள் ரோஜா. உடலெல்லாம் வியர்த்து கண்கள் சிவந்து போனது. மொத்த குடும்பமும் விழித்து அவளுக்காக வந்து பார்க்க அதிலேயே அவளின் வலி எல்லாம் குறைந்ததை போல இருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் வலி மட்டுப்பட கயல்விழிக்கு அதுவரை ஒரு நிம்மதி இல்லை.
பிரசவத்திற்கு இன்னும் பத்து நாட்கள் இருக்க ரோஜாவுடனே தங்கி அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். மெல்ல மெல்ல கயல்விழியும் உறக்கத்தில் ஆழ சற்று நேரத்தில் விடிந்தது மிக அழகாய்.