திருமணத்தில் வசீயை எதிர்பாராத இழை ஒருவழியாக அவனிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்தவள் ஆஷ்மியின் குரல் காதில் விழாததுபோல சட்டென மணமகள் அறையினுள் நுழைந்திருந்தாள்.
வேகமூச்சுக்களுடன் மெத்தையில அமர்ந்தவளுக்கு இன்னுமே படபடப்பு அடங்கவில்லை மேஜையில் இருந்த நீரை எடுத்து பருகி தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவள் மனதினுள் பயபந்து உருள தொடங்கியிருந்தது.
அவசரமாக கைகளை கூப்பி கண்கள் மூடி வேண்டுதல் கொண்டிருந்தவளுக்கு அறையை விட்டு வெளியில் வரும் எண்ணம் சுத்தமாக இல்லை.
‘ஆமா அம்மூ படிச்சு முடிச்சு இப்போ வேலை பார்த்துட்டு இருக்கா.., இங்கதானே இருந்தா எங்க போனா தெரியல இரு நான் அவளை வர சொல்றேன்’ என்றவர் மகளுக்கு அழைக்க உடனே அழைப்பு ஏற்கப்படவில்லை.
‘ஏதோ வேலையா இருக்கா போல அவளே கூப்பிடுவா.. எங்க அம்மூ தம்புவை காணோம்..?? நான் கடைசியா பார்த்தப்போ டென்த்தோ லெவன்த்தோ படிச்சிட்டு இருந்தாங்கல்ல இப்போ ஆளே அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டு இருப்பாங்க… காலம் எவ்ளோ வேகமா ஓடுதுல’
‘டென்த் இல்ல கவி லெவன்த்..’
‘ஓஒ ஆமாமா தம்பு லெவெந்த்ல இருந்தப்போ தானே எங்கம்மா தவறினாங்க… ஆனா அப்பவும் படிப்பு விளையாட்டுன்னு எவ்ளோ வேலை இருந்தாலும் அதுக்கு நடுவுல அம்மாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக ஒருநாளும் தம்பு யோசிச்சதே இல்ல … மத்தவங்களுக்கு உதவறதுல அப்படியே திரு அண்ணா மாதிரி.. அம்மூ நிஜமா சொல்றேன்டி அன்னைக்கு எங்கம்மாவோட கடைசி காலத்துல என்கூட தம்பு இல்லைன்னா ரொம்ப திண்டாடி போயிருப்பேன் தெரியுமா..?? திருண்ணா மாதிரியே தம்புக்கும் இளகின மனசு..’ என்று பேசிக்கொண்டிருந்த பார்கவியின் முன்,
‘பெரிம்மா உங்களை பெரிப்பா கூப்பிடுறாங்க’ என்றவாறு வந்து நின்றான் சுஜித்…
‘ஸ்ஸ் இதோ வந்துட்டேன்னு சொல்லு’ என்றவர் ‘ஸாரிடி அம்மூ உன்னை பார்த்த சந்தோஷத்துல நிச்சயத்தை மறந்துட்டு வந்துட்டேன் ஒரு அரைமணி நேரம் வைட் பண்ணு நான் நிச்சயம் முடிச்சிட்டு வந்துடுறேன் எங்கயும் போயிடாத உன்கிட்ட பேசவேண்டியது நிறைய இருக்கு.. திருண்ணா, பசுபதிண்ணா, தம்பு, ஜித்து எல்லாரையும் பார்க்கணும்.. நான் சீக்கிரம் வந்துடுறேன் இரு’
‘சரி சரி நீ போயிட்டு வா நாங்க இங்கயே இருக்கோம்’ என்றவருக்கு திருவேங்கடத்திடம் இருந்து அழைப்பு..
‘ஹலோ!!’
‘அம்மூ எங்க இருக்கீங்க..??’
‘ஏங்க உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் நீங்க எங்க இருக்கீங்க அதை முதல்ல சொல்லுங்க…’
‘என்ன சொல்ல சொல்ற..?? இப்போதான் கல்யாண மண்டப வாசல்ல இருந்து அப்படியே மண்டபத்துக்கு வெளியில முழுக்க ஒரு ரவுன்ட் போயிட்டு வரேன்…’
‘என்னது ரவுண்ட்ஸ்ல இருக்கீங்களா என்னங்க பேசுறீங்க எதுக்கு இந்த காத்துல வெளில சுத்திட்டு இருக்கீங்க ..?? மழை வரமாதிரி இருக்கு உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்காது… முதல்ல உள்ள வாங்க’
‘உன் பையன் கொடுத்திருக்க அடையாளத்தை வச்சு வேற என்ன செய்ய சொல்ற..?? ஜித்துவும் ப்ரணவும் டைனிங் ஹால்ல சாப்பாடு போடுற சாக்குல அந்த பெண்ணை தேடிட்டு இருக்காங்க… பசுபதி ஃப்ரூட்ஸ்டால் கிட்ட இருக்கான் இவ்ளோ நேரமாகியும் அந்த பொண்ணு எங்க யார் கண்ணுலயும் படல.. உன் பையன் வேற அந்த பொண்ணு இல்லைன்னா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்லிட்டான் அதான் தேடிட்டு இருக்கோம்’
‘என்னங்க தேடினவரை போதும் நீங்க உள்ள வாங்க.. உங்களுக்கு ஒரு முக்கியமான ஆளை காட்டனும்..’
‘இரு அம்மூ இன்னும் ரெண்டு இடம் விட்டுபோச்சு அங்கயும் பார்த்துட்டு வந்துடுறேன் என்றவரின் தீவிரத்தை கண்ட நாயகி ‘சரி பார்த்துட்டு வாங்க’ என்றவர் கைபேசியை அணைத்து விட்டு,
‘அபி பொண்ணு கிடைச்சதா..??’
‘இல்லக்கா நானும் இந்த பக்கமெல்லாம் பார்த்துட்டேன் எங்கயும் கிடைக்கலை இரு அந்த சைட் பார்த்துட்டு வரேன்’ என்று அவர் கிளம்பவும் மெல்ல எழுந்த நாயகியும் விழிகளை கூட்டத்தில் ஓடவிட்டு இழையை தேட தொடங்கினார்.
ஆனால் இழையோ மணமகள் அறையில் சாற்றியிருந்த கதவின் வழியே வசீகரனின் நடவடிக்கைகளை அவதானித்து கொண்டிருந்தாள்.
*********************
இங்கு மேடைக்கு வந்த மனைவியிடம், ‘என்ன கவி இங்க நிச்சயம் நாம தான் நடத்தி கொடுக்கணும் நீ என்னடான்னா சாவதானமா உட்காந்து அரட்டை அடிச்சிட்டு இருக்க..??’
‘என்னங்க அவங்க யாருன்னு தெரியாம பேசாதீங்க..??’
‘யாரும்மா அவங்க எனக்கு தெரியலையே..’
‘ஏங்க நான் அடிக்கடி சொல்லுவேனே என்னோட க்ளோஸ் பிரெண்ட் அம்மூ அது அவதாங்க… என்று நாயகியை சுட்டிகாட்டியவர்.., கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷம் கழிச்சு இப்போதாங்க பார்க்கிறேன்…, தர்மபுரில நாங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடு சின்ன வயசுல இருந்து ஒன்னாதான் படிச்சோம்… பிங்கி பிஃப்த் படிக்கிறப்போ நடந்த பிரச்சனையில என்னை எங்கம்மா வீட்ல விட்டுட்டு நீங்க குவைத் போனீங்களே நியாபகமிருக்கா..??’
‘இருக்கு..’
‘அங்க நான் ரெண்டு வருஷம் இருந்தப்போ எங்கம்மாக்கு உடம்பு முடியாம இருந்தது நியாபகமிருக்கா..??’
‘இருக்கும்மா.. நீ கூட பக்கத்து வீட்டுக்காரங்க ரொம்ப உதவினாங்கன்னு சொன்னியே நான் உங்களை கூட்டிட்டு போக வந்தப்போகூட எனக்கு அறிமுகபடுத்தி வச்சியே எல்லாமே நியாபகமிருக்கு’
‘ஹ்ம்ம் அதாங்க சொல்ல வந்தேன் அங்க பக்கத்து வீடு இவங்களோடது தான்.. திரு அண்ணா மிலிட்டரில இருந்தவரு.. ரொம்ப பாசமானவர்… அன்னைக்கு எந்த ஆண் துணையும் இல்லாம நீங்களும் பக்கமில்லாம இருந்த எங்களுக்கு திரு அண்ணனும் அவரோட பிள்ளையும் கூட இல்லைன்னா அந்த ஒன்றரை வருஷம் எங்கம்மா என்கூட இல்லாம போயிருந்திருப்பாங்க அப்போ என்கூட பிறந்த பிறப்பாட்டம் எனக்காக கடைசிவரை கூடநின்னதே அவங்கதான்..’ என்றவருக்கு இப்போதுமே அன்றைய நாளின் நினைவில் கண்களில் நீர் சுரந்தது.
பார்கவி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.. பெற்றோருக்கு ஒரே பெண்.. அவர் தந்தை இவரது சிறுவயதிலேயே தவறிவிட அவர் அன்னை அரும்பாடுபட்டு பார்கவியை படிக்க வைத்தார்.. ஒத்த வயதுடைய நாயகிக்கு திருமணமாகி வசீகரன் பிறந்த பிறகும்கூட பார்கவிக்கு சரியான வரன் அமையாது தள்ளி சென்றுகொண்டே இருந்தது. அபிராமிக்கும் பசுபதிக்கும் நிச்சயமான பிறகே பார்கவிக்கு கைலாசத்துடன் திருமணதேதி குறிக்கப்பட்டது. ஒரே பெண்ணை திருமணம் செய்து கொடுத்த அவர் அன்னைக்கு அடுத்த சில வருடங்களில் உடல்நலக்கோளாறு ஏற்பட்டிருந்தது. அதேநேரம் பார்கவியின் புகுந்தவீட்டில் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவும் பார்கவியும் இழையும் தருமபுரிக்கு வந்துசேர்ந்தனர்.
‘எனக்கு ஞாபகமிருக்கு கவி.. இவங்க ஃபோன் நம்பர் தொலைச்சிட்டேன்னு தானே நீ ரொம்ப நாளா வருத்தபட்டுட்டு இருந்த..? சரிம்மா முதல்லா நிகழ்ச்சியை முடிச்சிட்டு அவங்களை பார்த்து பேசலாம்’ என்றவர் மனைவியோடு சேர்ந்து சாரதி ஆஷ்மியின் நிச்சயத்தை நல்லபடியாக முடித்தனர்.
அதன்பின் ரிசெப்ஷன் தொடங்கிட மெல்ல கூட்டம் மேடையை நோக்கி நகர பார்கவி கைலாசத்தோடு கீழே இறங்கியவர் மீண்டும் தோழியை தேடி சென்றார்.
‘ஒருநிமிஷம் ஸ்டேஜ்க்கு வா..’ என்றழைக்கவும் மேடையேறியவனிடம் விஷயத்தை கூறி ‘கொஞ்சம் எமெர்ஜென்சிடா வேற யாரை கேட்கிறதுன்னு புரியலை தப்பா எடுத்துக்காத மச்சான்’ எனவும் புரிந்துகொண்டவனும்,
‘டேய் எதுக்கு தயங்கற? ஒன்னும் பிரச்சனையில்ல நான் பார்த்துக்குறேன் விடு..’ என்றவன் உடனே தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
இங்கு பார்கவியையும் கைலாசத்தையும் கண்டதும், ‘எப்படிம்மா இருக்க பார்கவி..??’ என்றவாறு முன்னே வந்தார் திருவேங்கடம்..
‘ரொம்ப நல்லா இருக்கேண்ணா… நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க..?? என்றவர் கணவரையும் அவர்களுக்கு அறிமுகபடுத்த பரஸ்பர நலம் விசாரிப்புகள் முடிந்து ஆண்கள் அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்க ஜித்துவையும் பிரணவையும் நெருங்கிய பார்கவியிடம்,
‘இவன் என் பையன் சர்வஜித் இவன் ப்ரணவ் கவிக்கா உங்களுக்கு நியாபகம் இருக்கா..??’ என்று அபி கேட்கவும்..,
‘ஜித்துவை எப்படி மறப்பேன் அபி..?? பிங்கியும் இவனும் ஒரே செட் இல்லையா? ரெண்டு பேரும் ஸ்கூல் போறது ஹோம்வொர்க் செய்றதுன்னு எப்பவும் ஒண்ணாதானே சுத்திட்டு இருப்பாங்க… அதுவும் இந்த சின்னகுட்டி என் வீட்லதானே பாதிநேரம் இருப்பான் ஆனா இவங்களுக்கு என்னை நியபகமிருக்கான்னு தெரியலையே’ என்றிட..,
‘என்னத்தை பேசுறீங்க உங்களை எல்லாம் மறக்க முடியுமா..?? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு உங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தேன் ஆனா முடியலை… ஆமா பிங்கி எங்க ? இப்போ என்ன பண்ணிட்டு இருக்கா? என்னை எல்லாம் நியாபகம் வச்சிருக்காளா இல்ல மறந்துட்டாளா..??’ என்றிட
‘இரு உன் பிரெண்டையே கூப்பிடுறேன் நீ அவகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோ’ என்றவர் இழைக்கு அழைத்தார்.
‘அச்சோ அம்மா வேற கூப்பிடுறாங்களே கண்டிப்பா அவரை அறிமுகபடுத்ததான் இருக்கும்… ஆனா எப்படி அவர்கிட்ட சகஜமா பேச..?? பேசாம கால் சுளுக்குன்னு சொல்லிடலாமா..?? என்று யோசிக்க…,
‘என்ன விஷயமுன்னு தெரியாம எதுக்கு இழை பயப்படற ஒன்னும் நடக்காது தைரியமா வெளில போ.. ஒரு ஹாய் சொல்லு ஏதாவது பேசினா உனக்கு செலெக்டிவ் அம்நீஷியான்னு சொல்லிடு’ என்று மனசாட்சி எடுத்து கொடுக்க..,
‘பொய் சொல்லனுமா..??’
‘அது உன் விருப்பம் என்று மனசாட்சி விலகிக்கொள்ள மெல்ல அறையில் இருந்து வெளியேறினாள் இழையாள்.
***********************************
அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த சேர்ந்த இழையை கண்ட நாயகிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
‘என் தங்கம்’ என்று ஓடிசென்று அவளை அணைத்து கொண்டவருக்கு மகிழ்ச்சியில் நெஞ்சம் விம்மியது..
‘ஆன்ட்டி…’ என்று இழை புரியாமல் நிற்க..,
‘பிங்கி அவங்கதான் உன்னோட அம்மூ அத்தை..’ என்ற பார்கவி அனைவரையும் அறிமுகபடுத்தவும் இழை முகத்திலும் பெருமகிழ்ச்சி தாண்டவமாடியது.
‘அதான் எனக்கு உங்களை ஏற்கனவே பார்த்த ஃபீல் இருந்ததா அத்தை’ என்று தானும் நாயகியை கட்டிக்கொண்டவள் ‘எப்படி இருக்கீங்க அத்தை.. நீங்க அபித்தை?’ என்று இருவரையும் நலம் விசாரித்தவளை தன்னருகே அமர்த்தி கொண்ட நாயகிக்கு அதீத மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்று புரியாமல் அவள் முகத்தையே மெளனமாக பார்த்திருந்தார்.
ஆம் என்பதாக சந்தோஷக் கண்ணீருடன் தலையசைத்தவர், ‘எல்லாம் கடவுள் சித்தம் அபி! என் பிள்ளைக்கும் எனக்கும் பிடிச்ச பொண்ணு நம்ம பிங்கி.. நம்பவே முடியல.. கடவுள் எப்படி முடிச்சு போட்டிருக்கார் பாரு’
எவ்ளோ நேரம் குழந்தையை பார்த்துட்டே இருப்பீங்க என்றவாறே அங்கே வந்த திருவேங்கடத்தையும் பசுபதியையும் கண்ட இழை ‘எப்படி இருக்கீங்க மாமா..??’ என்றவாறு அவர்களிடம் ஆசி பெற இழையை தன்னருகே அமர்த்திய திரு, ‘நான் நல்லா இருக்கேன்டா பிங்கிகுட்டி நீங்க எப்படி இருக்கீங்க..??’
‘ரொம்ப நல்லா இருக்கேன் மாமா.. அம்மா ஃபோன் நம்பர் தொலைச்சதால திரும்ப உங்களை எல்லாம் பார்க்க முடியாம ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா? முக்கியமா உங்களோட இடியாப்பம் அத்தையோட கொழுக்கட்டை.., அபி அத்தையோட ஸ்வீட்ஸ் எல்லாமே ரொம்ப மிஸ் பண்ணினேன்…’
‘நாங்களும் தான்டா நீ இருந்தவரை வீட்ல பெண் குழந்தை இல்லங்கிற ஏக்கமே இல்லாம இருந்தோம் நீ கிளம்பின பிறகு ஏதோ ஒரு வெற்றிடம்… அடிக்கடி நினைச்சுப்போம் அப்போலாம் அம்மூக்கு கவி மேல தான் கோபம் திரும்பும்…’
‘பிங்கி அதான் சோஷியல் மீடியா அது இதுன்னு இருக்கே எதுலயாவது எங்களை கண்டுபிடிக்க முயற்சி எடுத்திருக்கலாமே… எங்களுக்கு தான் உங்கப்பா பேர் தெரியாது ஒரு ரெண்டு மூணு முறை ஜித்து கவி அப்புறம் பிங்கின்னு உன் பேரை தேடி பார்த்தான் ஆனா எங்களுக்கு கிடைக்கலை.. ‘ என்றார் அபி.
‘அச்சோ அத்தை அதை ஏன் கேட்கறீங்க முதல்ல எனக்கு சோஷியல் மீடியா அக்கவுன்ட்டே கிடையாது அப்பப்போ நான் என் பிரென்ட்கிட்ட சொல்லி ஜித்து நேம்ல சர்ச் பண்ணி இருக்கேன் ஆனா எனக்கு கிடைக்கலை. அதேபோல திரு மாமா பசுபதி மாமா பேருலயும் தேடினோம் ஆனா கிடைக்கலை.. ‘
‘இல்லம்மா எங்களுக்கும் தனிப்பட்ட எந்த அகவுன்ட்டும் இல்ல… பிசினஸ் அகவுன்ட் மட்டும்தான் அதுகூட ஜித்துவே பார்த்துப்பான்’ எனவும்,
‘ஏன் ஜித்து உன்னோட அகவுன்ட் எதுவுமே எனக்கு காட்டலை’ என்று நண்பனை கேட்க….
‘பிங்கி என்னோட சோஷியல் மீடியா அகவுன்ட் எல்லாமே சர்வான்னு தான் இருக்கும் .. வீட்ல கூப்பிடற பேரை வச்சு நீ தேடினா எப்படி கிடைக்கும் சர்வா இல்ல சர்வஜித்ன்னு தேடி இருக்கலாமே… ‘
‘அச்சோ எனக்கு உன்னை ஜித்துன்னு மட்டும் தான்டா தெரியும்… ஃபுல் நேம் தெரியாது.. ‘
‘ரெண்டு பேரும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ஆனா முழு பேர் தெரியாதா…?? நம்ப முடியலையே’ என்று பிரணவ் கேட்க..,
‘அப்பு நானும் பிங்கியும் ஒரே ஸ்கூல் ஒரே ஸ்டாண்டர்ட் ஆனா வேற வேற செக்ஷன்.. ஸோ பிங்கிக்கு என்னோட ஃபுல் நேம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை’ என்று சர்வஜித் தோழிக்காக பேச..,
‘அப்படியும் யோசிச்சு ஒருமுறை டாக்டர் விஸ்வஜித்ன்னு ட்ரை பண்ணி இருக்கேன்டா ஆனா இந்த நேம் எனக்கு நியாபகமே வரலை தெரியுமா..??’
‘டேய் ப்ரோ நீ டாக்டரா சொல்லவே இல்ல..??’ என்று பிரணவ் சிரிக்க..