“இப்ப இருக்கறதுக்கு அந்த பொண்ணு உங்க கூடவே வரட்டும். நான் ராகாவோட வீட்டுக்கு போய் ஏதாவது எடுக்கனும்னா எடுத்துட்டு வரேன்…” என்று அடைக்கலம் சொல்ல,
“நானும் வரேன்ப்பா. நாம ராகாவோட கார்ல போவோம்…” என சாதனாவும் வருவதாய் சொல்ல சுரேனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டான்.
“ஓகே, அப்போ நானும் அம்மாவும், சுபாவும் இங்க இருக்கோம் கீர்த்தனா கூட. எல்லாம் நார்மல்னாலும் நாளை வரை அப்சர்வேஷன்ல இருக்கனும்னு சொல்லியிருக்காங்க…” என்ற பன்னீர்செல்வம்,
“அப்பப்ப அப்டேட் பண்ணிட்டே இரு. பத்திரம்…”
உடனடியாக ஆம்புலன்சில் தங்கதுரையுடன் கனகாவும், அக்னியும் கிளம்ப அடைக்கலத்துடன் வீட்டிற்கு புறப்பட்டாள் ராகா.
கனகாவிற்கு, தனக்கு, குழந்தைக்கு என உடைகளும் குழந்தைக்கு அவசரத்திற்கு குடுக்கக்கூடிய மருந்துகளும் எடுத்துக்கொண்டவள் மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு வந்து காரில் ஏறிவிட்டாள்.
சுரேன் காரை ஓட்ட முன்னால் அடைக்கலம் அமர்ந்துகொண்டார். பின்னிருக்கையில் குழந்தையுடன் ராகாவும், அவளருகே சாதனாவும் அமர்ந்திருக்க சற்று நேரத்திற்கெல்லாம் உறங்க ஆரம்பித்திருந்த வினய் பதறி எழுந்து அழுது ராகாவை கட்டிக்கொண்டு பிதற்ற ஆரம்பித்தான்.
உடலில் வெகுவாய் சூடு ஏறியிருக்க என்ன ஒருநொடி செய்வதென புரியாமல் செயலிழந்ததை போலானாள் ராகா.
“ராகா குழந்தைக்கு காய்ச்சல் அடிக்குது போல…” என்று சாதனா சொல்லி வினயை தொட அவனோ பயந்து பயந்து உளறி அழ மகனையே பார்த்திருந்த ராகாவும் அவனின் பேச்சில் உளறலில் முகத்தில் அடித்துக்கொண்டு வெடித்து கதற ஆரம்பிக்க வெளிச்சமான ஒரு பகுதியில் காரை ஓரங்கட்டி நிறுத்தினான் சுரேன்.
“மருந்து ஏதாவது வச்சிருந்தா அவனுக்கு குடிக்க குடுங்க. தோள்ல தூக்கி போட்டு தட்டி குடுங்க…” என சுரேன் சொல்ல அடைக்கலம் ஒன்று சொல்ல என அவர்கள் பேச்சு எதுவோ புரியாத பாஷையை கேட்பதை போல மலங்க மலங்க விழித்தவள் கண்களில் கண்ணீர் மட்டும் வற்றவில்லை.
பார்க்கவே பரிதாபமாய் இருக்க சாதனாவே அழுதுவிட்டாள். எப்போதும் அழுதிடாத மனைவி கூட அழுவதை பார்த்தவன் மனது அந்த சின்னஞ்சிறு பிஞ்சிற்காக கலங்கி போனது.
“அப்பா நீங்க வந்து ட்ரைவ் பண்ணுங்க….” என்று இறங்கி மறுபக்கம் வந்தவன்,
“சனா பின்னாடி தானே இவங்க திங்க்ஸ். மெடிசின் இருக்கா பாரேன்…” என்றவன் மறுபக்க கதவை திறந்து ராகாவின் மடியில் இருந்த வினயை தூக்கிகொண்டான்.
வெளியே தூக்கி வைத்ததுமே குளிரில் உடல் நடுங்க குழந்தை அவனின் கழுத்தை இறுக்கியது.
“டவல் எடு, பிள்ளைக்கு குளிருது…” என கேட்டு வாங்கி அதை போர்த்திக்கொண்டான்.
“ராகாம்மா டேய் அப்பாவை பாரேன்…” என அடைக்கலம் அவளை தேற்ற இன்னும் அழுதுகொண்டே தான் இருந்தாள்.
“ராகா அழுது என்னாக போகுது? உங்க குழந்தையை பாருங்க. முடிஞ்சதை நினைச்சு அழாதீங்க…” என சுரேன் சத்தமாக அதட்டிவிட கேவல் விசும்பலாய் மாறியது.
அதற்குள் சாதனா மருந்தை எடுத்து வினய்க்கு குடுத்துவிட குடித்த நொடி அத்தனையையும் இரவு உணவுடன் வெளியேற்றினான் குழந்தை. பதறி ராகா கீழே இறங்க,
“நீங்க இருங்க. பார்த்துக்கலாம்..” என்று அவளை தடுத்தவன்,
“போதும், ஹாஸ்பிட்டல் போய் பார்த்துப்போம்…” என்று அந்த உடையை கழற்றி ஒரு கவருக்குள் போட்டுவிட்டு வேறு உடையை அணிவித்து முன்னிருக்கையில் வினயுடன் ஏறிக்கொண்டான்.
“என்கிட்டே இருக்கட்டும் இவன். நீங்க முதல்ல அமைதியாகுங்க. நீங்களே இப்படி இருந்தா கனகா அத்தைக்கு யார் ஆறுதலா இருப்பா? நாங்க இத்தனை பேர் இருந்தாலும் நீங்க இருக்கற மாதிரி வருமா? கீர்த்தி அண்ணியும் அங்க முடியாம இருக்காங்க…” என்றவன்,
“உங்கள அண்ணின்னு கூப்பிடலாம்ல…” என கேட்கவும் சாதனாவுக்கு அத்தனை ஆச்சர்யம். அவனின் மாற்றம் எத்தகைய மகிழ்ச்சியை தருகிறதென்று சுரேனுக்கு விளங்க வாய்ப்பில்லை.
ராகாவின் கையை இருக்கமாய் பற்றிக்கொண்ட சாதனா,
“எஸ் சொல்லிடு ராகா. இல்லைன்னா இவர் வாய்ல இருந்து இப்படி வார்த்தை எல்லாம் எப்போவாவது அபூர்வம் தான்…” என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாய் பேசி ராகாவை இறுக்கத்தில் இருந்து சற்றே இலகுவாக்கினார்கள்.
ஹாஸ்பிட்டல் வரவுமே தங்கதுரையை பார்க்க அவருக்கு மறுநாள் இரவு வரை பார்த்துவிட்டு உடல்நிலை முன்னேற்றம் இல்லை என்றால் ஹார்ட் சர்ஜரி செய்யவிருப்பதாகவும், இன்னும் கனகாவுக்கு சொல்லவில்லை என்றும் அக்னி சொல்ல அப்போது தான் வினயை பார்த்தான்.
உடனடியாக அவனுக்கும் பார்க்கப்பட பயத்தினால் வந்த காய்ச்சல் இரண்டுநாட்களில் சரியாகிவிடும் என்று சொல்லி மருந்து தந்திருந்தனர்.
மறுநாள் காலையே கீர்த்தனா இங்கே அழுதுகொண்டே இருப்பதால் அவளை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் வருவதாய் பன்னீர்செல்வம் சொல்ல சுரேனை அனுப்பி அழைத்துவர சொல்லிவிடவும் அவனும் கிளம்பி சென்றான்.
மதியம் போல கீர்த்தனாவும் வந்துவிட அழுகை ஓய்ந்து ஓரளவிற்கு மருத்துவர்களின் நம்பிக்கையான பேச்சில் பெண்கள் தேறியிருந்தனர்.
அங்கேயே ஒரு விசிட்டர் அறையை கேட்டு பெற்றிருந்தான் அக்னி. குழந்தையை வைத்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருக்க முடியாது என்பதால் அவர்களுக்காக வாங்கியிருந்தான்.
சாதனாவின் தந்தை யோகேஷ் முதல்நாள் இவர்கள் செல்வதற்கு முன்பே அங்கு வந்திருந்து அனைத்தையும் உடன் இருந்து பார்த்துக்கொண்டார்.
அக்னியின் மீதான கோபம் அனைத்தையும் மறந்தவராக அந்த சூழலை பக்குவமாக கையாள அக்னியும் ஒரு வார்த்தை அவரிடம் சொல்லிவிட்டு ‘இது சரியா?’ என்று கேட்டுக்கொள்ள பயங்கர திருப்தி அவருக்கு.
கீர்த்தனா வந்ததும் அவளை தேற்றி ஆறுதலாய் பேசிக்கொண்டு இருந்தான். பொள்ளாச்சி வீட்டை அடகு வைத்திருக்கும் நபர் விஷயம் கேள்விப்பட்டு வந்துவிட, ஒருவழியாய் சர்ஜரி செய்தாகவேண்டிய சூழ்நிலை இருப்பதை மெதுவாய் சொல்லிக்கொண்டு இருந்தான் அக்னி.
“ஒண்ணுமில்லை சின்ன சர்ஜரி தான். செஞ்சிட்டா மாமா பழையபடி ஆகிடுவாங்க…” என்று சொல்ல நிலைகுலைந்து போனார் கனகா.
“அம்மாடி கனகா என்னம்மா இதெல்லாம்? ஒரு வார்த்தை போன்ல சொல்லிருக்க கூடாதா? தற்செயலா பேங்குக்கு போனப்ப விஷயம் தெரியவந்துச்சு. ஊருல கேட்டப்ப இப்படி வந்திருக்கறதா தகவல். அதான் உடனே வந்தேன்…” என்று அந்த மனிதர் வந்து நின்றதும் அவரை பார்த்ததும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் பொலபொலவென கொட்டியது கனகாவின் கண்களில் இருந்து.
“இவர்க்கிட்ட தான் அப்பா பொள்ளாச்சி வீட்டை அடமானம் வச்சிருக்கார்…” என கீர்த்தனா மெல்லிய குரலில் சொல்ல,
“பரமண்ணே எனக்கு ஒரு உதவி செய்யிவீங்களா?…” என்று கையேந்தினார் கனகா.
“சொல்லும்மா, உதவின்னு சொல்லாம கேளும்மா. என் சக்திக்குட்பட்டு கண்டிப்பா செய்யறேன்…” என்றவர் அக்னியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சொல்ல,
“அந்த பொள்ளாச்சி வீட்டை மொத்தமா நீங்களே எடுத்துட்டு அதுக்காகற பணத்தை குடுங்கண்ணே. அப்படியே…” என்று மகள்களை பார்த்தவர் அடுத்து செய்தது யாரும் எதிர்பாராதது.
“தங்கம்னு என் கழுத்துல கிடக்கற தாலிக்கொடியை தவிர எதுவும் இல்லை. அதனால இதையும் வித்து…” என்று சொல்லவும் ராகாவும் கீர்த்தனாவும் பாய்ந்து தாயை கட்டிக்கொண்டு,
“இப்படிலாம் பேசாதம்மா. முடியல. நாங்க இல்லையா? இல்லையா?…” என்று கேட்டு அழ அக்னி கைகள் இறுகியது.
தொண்டை அடைக்க திரும்பிக்கொண்டான் அதை எல்லாம் பார்க்கும் திராணியற்றவனாக.
அந்த சூழ்நிலையிலையும் அக்னி செலவை பார்த்துக்கொள்வான் என்று நினைக்காமல் தனி ஒரு மனுஷியாய் கணவனின் உயிரை காக்க நினைக்கும் அவரை என்னவென்று சொல்வது?
கனகாவின் தன்மானத்திலும், செயலிலும் உண்மையில் அடைக்கலம் பிரமித்து நின்றார்.
“என்னம்மா பேசறீங்க நீங்க? உங்களுக்கு இன்னும் விஷயமே தெரியாதா?…” என்ற அந்த பரமு,
“ஏன் ஸார், இப்பவுமா நீங்க உண்மையை சொல்லலை?…” என்று அவனை பார்த்து கேட்க அழுகையை நிறுத்தி அவர் என்ன சொல்லவருகிறார் என்று புரியாமல் பார்த்து நின்றனர் மற்றவர்கள்.
விஷயம் தெரிந்த அடைக்கலமும் அமைதியாய் இருக்க அக்னி கனகா செய்ததில் பேச்சற்று நின்றான்.
“உங்க சின்ன மாப்பிள்ளை தான் போன முறை வீட்டை அடகு வச்சப்போ பணம் குடுத்து உங்களுக்கு கொடுக்க சொன்னார். சும்மான்னா நீங்க வாங்க மாட்டீங்கன்னு தான் பத்திரத்தை வாங்கிட்டார். இப்பவும் நீங்க குடுக்கற வட்டிப்பணம் உங்க பேர்லையும், உங்க வீட்டுக்காரர் பேர்லயும் தான் சேர்ந்துட்டு வருது…” என்று உண்மையை போட்டுடைத்தார் அவர்.
ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அப்படி ஒரு நிசப்தம் அங்கே. ஒவ்வொருவரும் உணர்ச்சிபிரவாகத்தில் செயலற்று நிற்க கனகா இரு கைகளையும் உயர்த்தும் முன் சென்று கையை பிடித்து தடுத்தவன் வார்த்தை இன்றி தடுமாறி நின்ற கீர்த்தனாவை தோளோடு சாய்த்துக்கொண்டான்.
“ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்லடா. இங்க பாரு கீர்த்தி…” என்று பயந்துபோனான்.
“சித்தப்பா…” என்றதுமே அனைவரும் சட்டென திகைப்பிலிருந்து வெளிவந்தவர்களாக கீர்த்தனாவை பார்க்க தண்ணீர் கொடுத்து உடனடியாக ஒரு நர்ஸ் வந்து அவளின் பிபி லெவலை செக் செய்துவிட்டு சென்றதும் தான் நிம்மதியானது.
“இதுக்கு தான் உன்னை வரவேண்டாம்னு சொன்னேன். பாரு இப்படி எமோஷனலாகி எல்லாரும் பயந்துட்டோம்…” என்று கடிந்துகொள்ள,
“நீங்க ரொம்ப நல்லவரு. உங்கள போய் எப்படிலாம் பேசிட்டேன். திட்டிட்டேன்…” என்று கண்ணீருடன் மூக்கை உறிஞ்ச அவளின் பேச்சை கேட்டவனுக்கு லேசாய் புன்னகை அரும்பியது.
“விடு விடு, அதுக்கு திரும்ப நானும் பேசி பழி வாங்கிடறேன் உன்னை. போதுமா…” என்று இலகுவாக்கினான்.
பின் அவளை விட்டு எழுந்தவனின் பக்கம் வந்த கனகா கண்ணீர் தளும்ப நெகிழ்ச்சியுடன்,
“உங்களுக்கு பெரிய மனசு மாப்பிள்ளை, வெறும் நன்றின்னு….” என்றவரின் கையை பிடித்துக்கொண்டவன்,
“இது எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை அத்தை. என்னால முடிஞ்சது. அதான் செஞ்சேன். நீங்க இதை விடுங்க. தைரியமா இருங்க…”என்று அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றினான்.
அதன்பின் சர்ஜரி நடைபெற்று நல்லவிதமாய் முடிந்தது. இனி எந்தவித பிரச்சனையும் இல்லையென்று மருத்துவர்கள் நம்பிக்கையாய் சொல்லிருக்க உயிர் போய் உயிர் வந்ததை போல தான் அவர்களுக்கு நிம்மதியானது.
மறுநாள் காலை தங்கதுரை மயக்கம் தெளிந்ததும் அனைவரும் ஒருவர் பின் ஒருவராய் சென்று பார்த்துவிட்டு வந்தனர். பேசமுடியவில்லை என்றாலும் குடும்பத்தை பார்த்த சந்தோஷம் அவரின் கண்களில் அப்பட்டமாய் மின்னியது.
தங்கதுரை உணர்ச்சிவசப்பட கூடாது என்பதால் அவரை மிக கவனமாக கவனித்து வந்தனர். இன்னும் முழுதாய் மயக்கம் தெளியாததால் அதிகமாய் அவருடன் கனகா மட்டுமே இருந்தார்.
அறையில் வினயுடன் கீர்த்தனா இருக்க ராகா வெளியே வந்து தாயை பார்த்துவிட்டு வினய்க்கு தர ஏதாவது வாங்கி செல்லலாம் என வெளியே வந்தாள்.
ஸ்ரீநிவாஸ் வந்துவிட்டான் குடும்பத்துடன் கோவை மருத்துவமனைக்கு. ஒரு காலில் கட்டு போட்டுக்கொண்டு ஒருபக்கமாய் சாய்ந்து நடந்தபடி வந்தவன் ராகாவின் எதிரே வந்து நிற்க,
“ராகா…” என்றவனின் அழைப்பில் திரும்பி பார்த்தவள் அவனை யாரோ எவனோ என்பதை போல பார்த்து வைக்க அந்த பார்வையின் அந்நியத்தன்மை அவனை ஆட்டம் காண செய்தது.
ஆனாலும் ஒரு நம்பிக்கையுடன் கையில் இருந்த அந்த திருமாங்கல்யத்தை நீட்டி அவளிடம் காண்பித்து,
“இது எதுக்கு கொண்டு வந்தீங்க?…” என்றதுமே ஆடிப்போனான்.
“உன்னோடது தான் ராகா…”
“இனி இந்த சுருக்கு எனக்கு தேவை இல்லைன்னு நான் முடிவு பண்ணிட்டேன்…”