ஸ்ரீநிவாஸ் அதிர்ந்து நின்றது ஒரு நொடி தான். சட்டென சுதாரித்து அவளை மறித்து நின்றான்.
“இங்க பாரு ராகா என்னால முடியலை. எனக்கு உடம்பெல்லாம் வலி. அதை பத்தி கூட நீ கேட்கலை. ஆனாலும் என்னால உன்னை, நம்ம பையனை பார்க்காம இருக்க முடியாம தான் வந்தேன்…”
அவளின் இரக்கத்தை பெறுவதை போல அவன் பேசியதை வெறுப்புடன் கேட்டவள் அவனை நிதானமாக பார்த்தாள்.
“லேசான வெளிக்காயத்துக்கே இத்தனை அலம்பலா? உள்ள போக இருந்த உயிரை போராடி மீட்டுட்டு படுத்திருக்கார் என் அப்பா. இப்ப கூட அவர் எப்படி இருக்காருன்னு கேட்க தோணலைல. மாசமா இருக்கற பொண்ணை புடிச்சு கீழே தள்ளி விட்டீங்களே. அவ எப்படி இருக்கான்னு கேட்க தோணலை இல்ல?…”
“ப்ச், ராகா அதெல்லாம் இப்ப நல்லா தான இருக்காங்க. எல்லாம் விசாரிச்சாச்சு. இப்ப சரி பண்ண வேண்டியது நம்ம வாழ்க்கையை…” என்றவன் பேச்சை கேட்க பிடிக்காமல்,
“சரி பண்ண எதுவும் இல்லை. இப்பத்தான் ரொம்ப சரியா இருக்கேன் நான்…” என்று கத்தரித்து பேச,
“என்ன பேச்சு இது ராகா?…” இன்னுமே அதிர்ந்து பார்த்தான் ஸ்ரீநிவாஸ்.
“உங்களுக்கு அந்த வீடுதான் வேணும்னா இப்படி என்னை கல்யாணம் செஞ்சுதான் வாங்கனும்னு அவசியமில்லையே. எனக்கு அந்த வீடு வேணும்னு கேட்டிருந்தா கூட குடுத்திருப்பார் தானே?. உங்கம்மாவுக்கு எல்லாத்தையும் குடுத்துட்டு அவர் எடுத்துக்கிட்டது அந்த வீடு மட்டும் தானே? அதையும் பறிக்க உங்களுக்கு நான் தான் துருப்பு சீட்டு. இல்லயா?…”
“டேய் இவக்கிட்ட என்ன பேச்சு ? புள்ளைய தூக்கிட்டு நாம போய்ட்டே இருப்போம். புள்ளை வேணும்னா வரட்டும். இல்லைன்னா இங்கயே கிடக்கட்டும்…” என சாரதா துள்ள,
“என்ன? என் புள்ளைய நீங்க தூக்குவீங்களா? முடிஞ்சா தூக்குங்களேன். பத்து மாசம் உடல் நோக வலி தாங்கி பெத்து எடுத்து வளர்த்தது நானு. என்னை பெத்தவங்க என்னைக்கோ ஒருநாள் வந்து அவனை கொஞ்சுறது பொருக்காம புள்ளையை அபகரிக்கிற மாதிரி தூக்கிட்டு போறது நீங்க. வச்சு அப்படியே வளர்த்திடுவீங்க தான்…”
“ஏன் என்னால முடியாதுன்றியா?…” சாரதா பொங்க,
“ஆமாங்கறேன். முடியாதுன்றேன். ஒரு நாளாவது நீங்களா அவனை தூக்கிட்டு போய் ஆசையா வச்சு பார்த்திருந்திருக்கீங்களா? சொல்லுங்க…” என கேட்க திணறினார் சாரதா.
ஆம், என்றுமே வினயை தானாக அழைத்து சென்று வைத்து பார்த்ததில்லை தான். ராகா குடும்பத்தினர் வந்துவிட்டால் மட்டுமே அன்று அவர்கள் பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார்.
“ப்ச், இப்ப எதுக்கு அதை எல்லாம் பேசிட்டு? ராகா நான் சொல்றதை கேளு…” என்று மீண்டும் அவளை தன் பக்கம் திருப்பினான் ஸ்ரீநிவாஸ்.
“அப்போ இதெல்லாம் உங்களுக்கு ஒண்ணுமே இல்லை அப்படித்தானே?…” என கேட்டு,
“தள்ளி நின்னு பேசுங்க. என்ன பேசனுமோ அதை இன்னைக்கே முடிச்சுக்கலாம். இனி உங்கக்கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லாத அளவுக்கு எல்லாமே முடிச்சிடலாம்…” என அவள் திட்டவட்டமாக கூற ஸ்ரீநிவாஸ் கோபத்திற்கு அழவே இல்லை.
‘என்ன பேச்சு பேசுகிறாள்?’ என்று ஆத்திரமாக வந்தது. இப்படி பொதுவெளியில் கெஞ்சவேண்டி உள்ளதே என்று தலையிறக்கமாக போனது அவனுக்கு.
“சொன்னேனே கேட்டியா? என்ன ஒரு திண்ணக்கம் இவளுக்கு? பேச்சை பாரேன், முடிச்சுக்கலாமாம். இவளை கட்டனும்னு சொன்னப்பவே வேண்டாம்னு சொன்னேன். வீட்டுக்கு வீடும் ஆச்சு. வாய் பேசாம சொன்னதை கேட்டு காலுக்கடில கிடக்கறதுக்கு பொண்டாட்டியும் ஆச்சுன்னு கட்டின தானே?…”
சாரதா மகனை கண்டிக்கிறேன் பேர்வழி என்று அவன் தன்னிடம் சொல்லியதை ராகாவின் முன் போட்டுடைக்க,
“பூனைக்குட்டி வெளில வந்திருச்சு…” என்றாள் ராகா.
“அம்மா, நீ வாயை மூடு…” என தாயிடம் இரைந்தவன் ராகாவின் துட்சமான பார்வையில் இன்னும் கூனிக்குறுகினான்.
வேறு யாராகவும் இருந்தா போடா என்று விட்டிருப்பான். ராகாவின் முன் இத்தனை இறக்கமாய் நிற்கும் நிலையில் உள்ளுக்குள் தீ எரிந்தது.
“அது ராகா நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கறதுக்காக அம்மாக்கிட்ட சும்மா சொன்னது. இதை நீ…”
“ஆனா சும்மா சொன்னதை தானே நிஜமாக்கி என் தாலியை பிடுங்கி, என் அப்பாவை, என் தங்கச்சியை இந்த நிலைமைக்கு தள்ளியிருக்கீங்க? இதுவும் சும்மாவா? என் அப்பாவை போய் பார்த்து வீட்டை எழுதி குடுத்தா தான் உங்க பொண்ணோட வாழ்வேன்னு சொன்னீங்களாமே? அதுவும் சும்மாவா?…”
“ப்ச், ராகா நான் நம்ம எதிர்கலாத்துக்காக தான் கேட்டேன். நம்ம ஊர்ல நாமளும்…”
“அப்ப நீ உழைச்சு சம்பாதிக்கனும். என் அப்பா சம்பாத்தியத்தை, அவரோட உரிமையை ஏன் பறிச்சுக்க பார்த்த? உயிர் வாழ ரத்தத்தை உறிஞ்சும் மிருகத்துக்கும் கேவலம் நீ பண்ணினது…” என்று மரியாதையை விடு பொறுமை இழந்தவளாய் பேச,
“என்னடி மரியாதை எல்லாம் தேயுது. நான் உன் புருஷன். பார்த்து பேசு…” என்றான் ஸ்ரீநிவாஸ் அடிக்குரலில் சீறிக்கொண்டு.
கேண்டீன் செல்வதற்கும் ஹாஸ்பிட்டலின் இன்னொரு வளாகத்திற்கும் இடைப்பட்ட மரங்கள் சூழ்ந்த பகுதி அது. அங்காங்கே ஒருசிலரே அங்கே இருக்க யாரின் கவனத்தையும் கவரவில்லை.
“அந்த உறவு தான் வேண்டாம்னு சொல்றேன்…” என்றவளின் ஸ்திரமான பேச்சில் துணுக்குற்றவன் இப்போதைக்கு இறங்கி போகலாம் என முடிவெடுத்து,
“ப்ச், இங்க பாரு ராகா, நீ கோபத்துல பேசற. இந்த சூழ்நிலை எப்போவேணா மாறும்…” என்ற ஸ்ரீநிவாஸ் பேச்சில் இடைபுகுந்தவராக,
“ஆமா, அப்பறம் வாழ்க்கையே போச்சுன்னு கத்த கூடாது. பேசாம அவன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு புள்ளைய தூக்கிட்டு வந்து சேரு. ஆனா உன் குடும்பத்தோட பேசனும்னா உன் தங்கச்சி புருஷன் என் புள்ளைக்கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகனும்…” என சாரதா பேச,
“நீங்க எல்லாம் நிஜமாவே என் அப்பாவோட தான் பிறந்தீங்களா?…” என்றாள் அருவருப்பான பார்வையில்.
“அம்மா, நான் பேசிப்பேன். இதுக்குத்தான் கூட வராதன்னு சொன்னேன்…” என்று தாயை அடக்கியவன்,
“நாம போகலாம் ராகா. எதுவா இருந்தாலும் வீட்டுல போய் பேசிப்போம். நீ வா…” என்று அழைக்க,
“அப்போ என் அப்பா?…”
“அதான் அவன் இருக்கானே அக்னி. அவன் பார்த்துப்பான்…” என கொஞ்சமும் இரக்கமில்லாமல் பேச,
“நீயெல்லாம் என்ன மனுஷன்யா…” என்று அவனை விரல் நீட்டி கேட்டவள் கண்கள் கலங்கியது.
“இதே மாதிரி ஒருதடவை என் அப்பாவுக்கு முடியலைன்னு கேட்டப்போ ஹாஸ்பிட்டல்க்கு வந்து பார்த்துட்டு ஒரு பைசா கூட உதவாம போனியே. அதையெல்லாம் மறந்துடுவேனா? என்னோட நகையை குடுக்க விட்டியா நீ? இல்லை கூட தான் என்னை இருக்க விட்டியா?…”
ராகா கேட்க கேட்க பதில் சொல்ல விரும்பாமல் எரிச்சலுடன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு நின்றான் ஸ்ரீநிவாஸ்.
பணத்திற்கு கனகா தவித்ததும், ராகா தன் நகையை தருவதாக சொல்லியதும் அன்று அவன் ஆடிய ஆட்டம்.
“இதுக்குத்தான் அவருக்கு முடியலைன்னு உடனே கிளம்பி வர சொன்னீங்களா? நகையை போடற மாதிரி போட்டுட்டு, இப்ப ஆப்பரேஷன், உடம்புக்கு முடியலைன்னு கேட்டு வாங்கிக்கறது. என்ன குடும்பம்டா?…” என்ற ஸ்ரீநிவாஸ் பேச்சில் அதிர்ந்து போன கனகா,
“இல்லை மாப்பிள்ளை, சத்தியமா நான் கேட்கலை. அவ அப்பா மேல இருக்கற பாசத்துல அப்படி பேசிட்டா நீங்க தப்பா எடுத்துக்காதீங்க…” என்று மன்னிப்பு வேண்டும் பாவனையில் கேட்டும் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டவன் ஒருமணி நேரம் கூட அங்கே நிற்கவில்லை.
“பார்த்தாச்சுல, ஆப்பரேஷன் முடியவும் வீட்டுக்கு வரவும் வந்து பார்த்துப்போம். எனக்கு இங்க ரொம்ப அலர்ஜியா இருக்கு. வா போகலாம்…” என்று ராகாவை அழைத்து செல்ல பார்க்க,
“இல்லைங்க அம்மா நைட்ல தனியா…” என்று ராகா பரிதவிக்க,
“என்ன தனியா? இந்த ஹாஸ்பிட்டல்ல உன் பேமிலி மட்டும் தான் இருக்காங்களா? வா கிளம்புவோம்…” என்று அவளை அதட்ட,
“நீ கிளம்புடாம்மா, ராகா…” என்று மகளை தேற்றி அனுப்பியவர் அழுத அழுகை அன்று எண்ணிலடங்காது.
வயது பெண்ணை தந்தைக்கு துணையாய் வைத்துவிட்டு கனகா கடன் வாங்குவதற்கென அலைந்தது.
அன்று அவனின் அந்த வார்த்தையில் தான் செத்து மடியும் வேளையில் தவிக்கும் வாய்க்கு சொட்டு தண்ணீர் கூட அவனின் கையால் வாங்கிவிடகூடாது என்று உறுதியாக நினைத்தார்.
ஆனாலும் அவ்வப்போது ராகா தங்களுக்கென ஏதாவது செய்தாலும் முடிந்தளவிற்கு மறுத்து தவிர்த்துவிடுவார்.
அவர்களே அறியாதது அன்று எத்தேர்ச்சையாக அடைக்கலமும், அக்னியும் அந்த ஹாஸ்பிட்டலுக்கு வேறொருவரை பார்க்க வந்ததும், இந்த நிகழ்வை கண்டுகொண்டு அவர்களுக்கு உதவியதும், அன்று இரவு அவர்களுக்கு துணையாக அங்கே தங்கி இருந்ததும்.
இப்போதும் அதை எல்லாம் நினைக்க நினைக்க ராகாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. உடலெல்லாம் எரிவதை போல இருந்தது.
“அப்பவே நீயும் வேண்டாம் உன் வாழ்க்கையும் வேண்டாம்னு நான் உதறிருக்கனும். ஆனா என் தங்கச்சி அவளோட எதிர்காலம். என்னோட அப்பாம்மா நம்பிக்கை. என்ன நம்பிக்கைன்னு உனக்கு தெரியாதுல. உன் மேல ஒரு நம்பிக்கை அவங்களுக்கு இருந்துச்சு. என்னதான் அவங்கக்கிட்ட நீ அப்படி சுயநலமா நடந்துக்கிட்டாலும் என்னை உனக்கு புடிக்கும்னு நம்பினாங்க…”
“ராகா நிஜமாவே உன்னை எனக்கு புடிக்கும் தான். நம்பமாட்டியா நீ?…” என ஸ்ரீநிவாஸ் கேட்க,
“ஓஹ், எனக்கும் கல்யாணம் பண்ணினப்போ உன்னை புடிச்சது தான். உனக்காக தான் நீ பண்ணின எல்லாமே சகிச்சேன். உன்னை பெத்தவங்களை அனுசரிச்சு போனேன். என் வீட்டுக்கு நீ அத்தனை குடைச்சல் குடுத்தும் நான் பொறுமையா போனேன். நீ என்ன பண்ணின?…”
“என்ன என்ன கேட்கிற?…” ஸ்ரீநிவாஸ் திகைக்க,
“இல்லை என்னை புடிச்சு கல்யாணம் பண்ணினதுக்காக என்னை பெத்தவங்களை மதிச்சி பேசினியா? அவங்கக்கிட்ட மரியாதைக்கு ஒரு வார்த்தை அனுமதி கேட்டுட்டு எங்க வீட்டுக்குள்ள குடித்தனத்துக்கு போனியா? அவங்களை என்னைக்காவது சாப்பிட்டீங்களான்னு கேட்டிருப்பியா?…”
“இதென்ன பேச்சு ராகா? இதெல்லாம் செஞ்சா தான் உன்னை புடிக்கும்னு சொல்லுவியா என்ன?…”
“ஆனா நீ சொன்னியே. வார்த்தைக்கு வார்த்தை சொன்னியே. உனக்காக என் பெத்தவங்களை எதிர்த்து உன்னை கல்யாணம் பண்ணினேன். அதனால எனக்காக அவங்களை அட்ஜஸ்ட் பண்ணி போன்னு. அதை ஏன் சொன்ன?…” என்று கேட்க பதிலின்றி திகைத்து நின்றான்.
“உன்னோட வாழ ஆரம்பிச்ச பின்னால முக்கால்வாசி நாள் இந்த கல்யாணத்தை பண்ணியிருக்கவே கூடாதோன்னு தான் நினைச்சேன். எதையாவது செஞ்சாலாவது நீ திருப்தி ஆகி அவங்க பொண்ணை நல்லா வச்சுப்ப. நான் சந்தோஷமா இருப்பேன்னு நம்பினாங்க என்னை பெத்தவங்க….”
“இந்த கல்யாணத்தை முடிச்சதுல இருந்து அவங்க நிம்மதி போய், என்னோட சந்தோஷம் போய், கடைசியில என் தங்கச்சி அவ வாழ்க்கையை, எதிர்காலத்தை நினைச்சு பயப்படற அளவுக்கு கொண்டு வந்து நிப்பாட்டின நீ. எல்லாத்துக்கும் மொத்தமா இன்னைக்கு எங்க குடும்பம் மொத்தமும் இங்க…”
“ப்ச், ராகா இப்பதான் சொன்னேன். முடிஞ்சதை பேசாதன்னு. இப்ப என்ன செய்யனும்? இதை எல்லாம் பேசி சண்டை போடனுமா? வீட்டுக்கு வந்து போடு. கேட்டுக்கறேன். இப்ப வா போவோம்…”
ஸ்ரீநிவாஸ் மனதிற்குள் உண்மையான பயமே இப்பொழுதுதான் முளைவிட ஆரம்பித்தது. இந்த ராகா அவனுக்கு பரிட்சயமில்லாதவள்.
அவனுக்கு பிடிக்கவில்லை இப்படி இவள் பேசுவது. எப்படியாவது கூட்டிக்கொண்டு சென்று சிறிது நாட்கள் அவள் போக்கில் விட்டு பிடித்து பழையபடி மாற்றிவிடலாம் என்று நம்பினான்.
ஆனால் மகன் அப்படி மருமகளிடம் கெஞ்சிக்கொண்டு நிற்பதை காண விரும்பாத சாரதா பொங்கிக்கொண்டு வந்தார்.
“என்னடி ரொம்ப துள்ளிட்டு இருக்க? ஒன்னுக்குமத்தவ உனக்கே இம்புட்டு ஏத்தமா? அவ்வளோ பேசற நீ? வர விருப்பமில்லைன்னா எழுதி குடுத்துட்டு நடைய கட்டு. என் மகனுக்கு நான் இன்னொருத்தியை ராணியாட்டம் ஒருத்தியை பார்த்து கட்டிவைப்பேன்…”
சாரதாவின் பேச்சில் கண்கள் மின்ன பார்த்த ராகாவின் பார்வையை கவனிக்காத ஸ்ரீநிவாஸ் தாயின் பேச்சை ரசிக்கவில்லை. இன்னொரு திருமணம் என்னும் பேச்சிற்கே அவன் செல்லவில்லை.
“டைவர்ஸா? ஓஹ் தரனுமா? நீங்க கேட்டதுமே எழுதி குடுக்கனுமா?…”
“அதான் வாழ வரமாட்டேன்னு சொல்லிட்டியே. அப்ப என்னத்துக்கு உனக்கு என் புள்ளையோட பொண்டாட்டின்ற அந்தஸ்து?…”
“உங்களுக்கு மூளை இல்லைன்றது இப்பவும் நிரூபிக்கிறீங்க. பொண்டாட்டின்றது எல்லாம் அதுவும் உங்க மகனுக்கு பொண்டாட்டின்றது எனக்கு சத்தியமா அந்தஸ்து இல்லை. என்னோட சாபம். என்னால என் குடும்பத்துக்கு கிடைச்ச சாபம். அது எனக்கு தேவையே இல்லை…”
“அப்ப எழுதி குடு…”
“மாட்டேன். குடுக்கமாட்டேன். உங்களால ஆனதை பாருங்க…” என வெறி வந்தவள் போல கத்திய ராகா,
“டைவர்ஸ் கேட்டா என்னையும் என் குடும்பத்தையும் கொலை பண்ண வந்ததா கம்ப்ளைண்ட் பண்ணுவேன். என்னை அடிச்சு பிரச்சனை பண்ணினதை ஊரே பார்த்திருக்கு. சாட்சிக்கு கூப்பிடுவேன். உங்களையும் உங்க மகனையும் வெளில வரவிடாம பண்ணிடுவேன். ஜாக்கிரதை…”