“அப்ப நீயும் வாழமாட்ட. அவனையும் வாழ விடமாட்ட…” சாரதாவிற்கு ராகாவை அடித்து துவம்சம் பண்ணும் துவேஷம் எழுந்தது.
“ஆமா. விடமாட்டேன். என்னை மாதிரி இன்னொரு ராகா உருவாக விடமாட்டேன். இன்னொரு தங்கதுரை, கனகாவோட உயிர் துடிக்க அனுமதிக்க மாட்டேன்…” என்றவள் ஸ்ரீநிவாஸ் பக்கம் பார்த்து சொடக்கு போட்டவள்,
“முடிஞ்சா உன்னால முடிஞ்சா இன்னொரு கல்யாணம் பண்ணி காமியேன். பார்ப்போம்…” என்று சவாலாய் அவள் சொல்ல,
“ராகா…” என்றான் பதறிக்கொண்டு.
கோர்ட், கேஸ் எல்லாம் தாண்டி இப்படி அவள் எடுதெறிந்து பேசுவதை கேட்டவனுக்கு பொறுக்கவே இல்லை. கோபத்தையும் காண்பிக்கமுடியாது. குடும்பம் கைவிட்டு போகும் நிலை.
இரண்டாவது திருமணம், இன்னொருத்தியுடனான வாழ்க்கை, நினைக்கவே உடல் கூசியது அவனுக்கு. அந்தவகையில் ராகாவை எந்த சூழ்நிலையிலையும் விட்டுவிட அவன் நினைக்கவில்லை.
ஒருபக்கம் இதில் அவனின் சுயநலமும் இருந்தது. இனி தன்னுடைய எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயத்தை தாண்டி அவமானப்பட்ட ஊருக்கு முன்னால்,
‘இதோ என் மனைவி என்னிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ வந்துவிட்டாள்’ என ஊருக்கு முன் காண்பிக்கவேண்டும், அந்த அவமானத்தை துடைத்தெறிந்து பழையபடி வாழவேண்டும் என்று நினைத்து வந்திருந்தான்.
மீண்டும் ராகாவின் குடும்பத்தை ராகாவின் மூலம் பழையபடி தன் கைகளுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே அவை எல்லாம் சாத்தியம் என்று நம்பினான்.
“என்ன ஆனாலும் உன்னை தவிர வேற யாரையும் நினைக்க முடியாது ராகா. அம்மா அது ஒரு லூஸு. அது பேச்சை நீ எடுக்காத…” என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான்.
மனதிற்குள் ‘அப்பா’ என்று தன்னை பார்த்ததும் துள்ளிக்கொண்டு வரும் மகனை காண மனம் தவித்தது.
“வினய் எங்க ராகா? நான் அவனை பார்க்கனும். அவனை பார்த்துட்டா போதும்…” என்று கேட்க அவனை எள்ளலாய் பார்த்தவள்,
“ஓஹ் இன்னைக்கு தான் அவனையும் பார்க்க தோணுச்சா உனக்கு?…” என்றவள்,
“ப்ச், போ போ. உன்கிட்டலாம் பேச இனி எதுவும் இல்லை…” என்று நகர போனவள் பின் மீண்டும் ஸ்ரீநியை பார்த்து,
“அப்பறம் நீ ஒன்னு சொல்லுவியே. என்னோட சிரிச்ச முகம் தான் புடிக்கும்னு. இனி நான் சிரிப்பேன். சிரிச்சுட்டே இருப்பேன். சந்தோஷமா, நிம்மதியா. ஆனா ஒண்ணே ஒண்ணுதான் என் மனசுல இருக்கறது. என் புள்ளையை மட்டும் நான் உன்னை மாதிரி வளர்த்திட கூடாதுன்றது தான்…”
ராகாவின் பேச்சு ஒவ்வொன்றும் ஸ்ரீநிவாஸ் முகத்தில் அறைந்ததை போல இருந்தது. என்ன சொல்லி சமாதானம் செய என்று மூளை குறுக்கால் தான் பாய்ந்து ஓடியது.
‘ராகா வந்தால் பின்னால் தானே வந்துவிட்டு போகிறார்கள்’ என்ற எண்ணம் மட்டும் தான் ஸ்ரீநிவாஸ் மனதில்.
அவனையும் அவனின் தாயையும் பார்வையில் தூர நிறுத்தியவள் அங்கிருந்து செல்ல அவளின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினார் சாரதா.
“என்னடி அந்த குடும்பமே உன் பின்னால இருக்குதுன்னு தெனாவெட்டா? அதுசரி நீ ஏன் என் புள்ளையை வேண்டாம்னு சொல்றன்னு இப்பத்தான புரியுது…” என்ற சாரதாவின் வாயில் இருந்து வந்த வார்த்தையின் அர்த்தத்தில் வெகுண்ட ராகா பளாரென அவரின் கன்னத்தில் அறைந்துவிட இதை யாருமே அங்கு எதிர்பார்க்கவில்லை.
“ராகா…” என ஸ்ரீநிவாஸ் கையை ஓங்கிக்கொண்டு வர,
“இப்ப கூட என்னை இத்தனை கேவலமா பேசின உன் அம்மாவை கேட்க துப்பில்லை. வந்துட்டான் கையை தூக்கிட்டு. போயா…” என அவனை தள்ளியவள்,
“உனக்கு அவ்வளோ தான் மரியாதை பார்த்துக்க…” என்று சாரதாவையும் எச்சரிக்க,
“என்னையே அடிச்சியா நீ? நான் கேட்டதுல கொஞ்சமாச்சும் குன்னி போக வேண்டாமாடி நீ? எம்புட்டு எகத்தாளம் பொம்பளைக்கு…” என அதிர்ச்சியுடன் பார்த்தார் சாரதா.
“ச்சீ உன் சாக்கடை புத்தி இப்படித்தான் போகும்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ எல்லாம் ஒரு மனுஷி, உன் பேச்சை கேட்டு நான் குறுகி நிக்கனுமா? என் அப்பா நீ வரைமுறை இல்லாம பேசினப்பவே இப்படி ஒன்னு குடுத்திருந்தா வாயை மூடிட்டு ஓரமா மூலையில கிடந்திருப்பல….”
“ஏய்…”
“என்ன ஏய்? இன்னொன்னு குடுக்கனுமா? வாங்கிக்கறியா? சொல்லு சொல்லு…” என்று எகிறிக்கொண்டு சாரதா மேல் ராகா பாய,
“இப்ப முடிவா என்னதான்மா சொல்ற நீ?…” என கடைசியாக வந்து கேட்டார் மகேஸ்வரன் ஸ்ரீநிவாஸ் தந்தை.
“ஓஹ் இவ்வளவு நேரமா நீங்க இங்க இல்லையோ? நான் கவனிக்கவே இல்லை. எல்லாம் உங்க புள்ளைக்கிட்டையும், உங்க பொண்டாட்டிக்கிட்டையும் சொல்லிருக்கேன். கேட்டு தெரிஞ்சுக்கோங்க…” என்றதும்,
“ராகா. இதுக்கெல்லாம் விளைவு…” என ஸ்ரீநிவாஸ் அவளின் கையை பிடிக்க போக,
“தொட்ட பளார்ன்னு அறைஞ்சிருவேன் பார்த்துக்க. அந்த விளைவு விளையும் போது பார்த்துப்பேன். அவ்வளோ தான்…” என்று அவனை எச்சரித்தவள் சென்றுவிட்டாள்.
புயல் அடித்து சென்றதை போல இருந்தது அவர்களுக்கு. ராகா என்னும் புயல் அவர்களை சுழற்றியடித்துவிட்டு தான் சென்றிருந்தது.
ஸ்ரீநிவாசை திரும்பி பார்க்க அவன் அங்கேயே தொய்ந்து போய் அமர்ந்துவிட தேற்றுவார் யாருமின்றி அநாதை போல அமர்ந்திருந்தான். மனைவி போனால் சகலமும் போனது. அவனுக்கும் சகலமும் போனது தான்.
எத்தனை செய்தாலும் மனைவி என்ற பந்தம் தன்னை விட்டு செல்லாது என்னும் இறுமாப்பில் இருந்தவனின் அகம்பாவத்திற்கு கிடைத்த சவுக்கடி.
இனி ராகா, தன் மகன், அவர்களுடனான தன் வாழ்க்கை அவ்வளவு தானா? முடிந்தேவிட்டதா? நினைக்க நினைக்க ஆறவில்லை அவனுக்கு.
ராகா வேண்டும், மகன் வேண்டும். பழைய கௌரவம், மரியாதை, மிடுக்கு எல்லாம் வேண்டும், வேண்டும் என மனது கூச்சலிட்டது.
“கிளம்புவோம்ப்பா ஸ்ரீநி. இணி இவளை மொத்தமா தலையை முழுகுவோம்…” என சாரதா சொல்லிக்கொண்டிருக்க,
அவனை அங்கே எதிர்பார்க்காத ஸ்ரீநிவாஸ் வேகமாய் எழுந்து நின்றுவிட்டான் பழக்கதோஷத்தில்.
“அச்சச்சோ, இன்னொரு கால் நல்லா இருக்கற மாதிரி இருக்கே. தப்பாச்சே…” என்று உச்சுக்கொட்டிய சுரேன் பின் ஸ்ரீநிவாசை நிமிர்ந்து பார்த்து,
“அப்புறம் என்ன மதிப்புரிய மண்ணில் புரண்ட ஸ்ரீநிவாஸ் என்ன இந்த பக்கம்? மிச்சசொச்ச அவமானத்தையும் கேட்டு வாங்கிட்டு போகலாம்னு வந்தீங்களா?…” என்ற சுரேனின் எள்ளலில் கோபமாக அவனை பார்க்க,
“என்ன? என்ன? இந்த முறைப்பெல்லாம் வேற எங்கையாச்சும் வச்சுக்க. அக்னி உன்னை எரிக்க காத்திட்டு இருக்கான். வேலையை பார்க்கறேன்னு சொல்லி வான்ட்டடா வந்து பாய்லர்ல விழுந்திடாத. போ போ உசுர காப்பாத்திக்க…”
“ஸார் கொஞ்சம் மரியாதையா பேசுங்க…”
“மாமனார்ட்ட அடிச்சுப்புடுங்கி சொகுசா வாழ நினைக்கிற உனக்கெல்லாம் என்னடா மரியாதை? அட ச்சீ போ. போ…” என விரட்டினான் சுரேன்.
“இங்க பாருங்க தம்பி…” என்ற சாரதாவை திரும்பி பார்த்தவன்,
“பளார்ன்னு இங்க ஒரு சத்தம் கேட்டுச்சே. என்னன்னு தெரியுமா உங்களுக்கு?…” என்று கேட்கவும் அவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்திருக்கிறான் என புரிந்துபோனது அவர்களுக்கு.
“ப்ச், இவங்கட்ட எல்லாம் என்ன பேச்சு நமக்கு? நாம நம்ம வேலையை பார்ப்போம். வாங்க…” என சாதனா அவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
“பார்த்தியாடா அவங்க பவிசை காமிக்கறதை. இதை இப்படியே சும்மா விட்ட கூடாது. இவங்க ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டவாச்சும் உனக்கு இன்னொருத்தியை கட்டிவச்சு இதுங்க எல்லார் மூஞ்சிலையும் நான் கரியை பூசலை…” என்று சூளுரைக்க,
“அவ சொன்னா? நானும் கோர்ட்ல சொல்லுவேன் அவ போக்குவரத்து சரியில்லன்னு. என்ன செய்ய முடியும் அவளால? குடுத்துதான ஆகனும்…” என்று வன்மத்துடன் சொல்ல,
“வாய மூடு நீ. என்ன ஜென்மமோ நீயெல்லாம். உன்னால தான் என் வாழ்க்கையே போச்சு. அவளை எப்படியாச்சும் பேசி சமாதானம் செஞ்சிருப்பேன். ஊடால வந்து கழுத்தறுத்திட்டியே நீ. அவ மேல பழி சொன்னா என்னைத்தான் ஆம்பளையான்னு பார்ப்பானுங்க. கொஞ்ச நஞ்ச மரியாதையும், கௌரவமும் போகத்தான?…”
ராகாவிடம், சுரேனிடம் காண்பிக்கமுடியாத கோபத்தை எல்லாம் தாயின் மீது கொட்டினான் ஸ்ரீநிவாஸ்.
அப்படி ஒரு ஆக்ரோஷம் அவனிடத்தில். பெற்ற இருவரும் ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு அஞ்சி நிற்க,
“அவளை எப்படி பேசி கூட வாழ வைக்கனும்னு எனக்கு தெரியும். இங்க தான இருப்பா? ஓடியா போய்டுவா? எனக்கு என் வாழ்க்கையை பார்த்துக்க தெரியும். உன் வேலையை பாரு நீ. இனி மகனேன்னு சொல்லிட்டு வந்த பார்த்துக்க. போயிரு…” என்று எரிந்து விழுந்தவனாக காலை இழுத்துக்கொண்டு மெல்ல மெல்ல விந்தி நடக்க,
“ஆமா இவன் அவ மேல உள்ள பாசத்துலையா பேசறான்?…” என மகேஸ்வரன் கேட்க,
“ச்சே, ச்சே. அவளை சொன்னா நம்ம மகனை தானே போசுவாங்க. அதுக்கு தான் யோசிக்கறான். கொஞ்சம் நாள் போனா நாம அவ நல்லதுக்கு தான் சொல்றோம்னு அவனாவே வருவான் பாருங்க…”
சுயநலம். கொஞ்சமும் இரக்கமின்றி வாழும் மனிதர்களின் சுயநலம். பசிக்கு வேட்டையாடி உண்ணும் விலங்குகளை விட உணர்வுகளை கொண்டு புசித்து வாழும் மனித விலங்குகள் இவர்கள்.
———————————————————-
இரண்டு நாட்களில் பரிபூரணமாக தேறி வந்தார் தங்கதுரை. பேசுவதற்கு முதலில் சிரமமாக இருக்க வார்த்தைகள் எண்ணி எண்ணியே பேசினார்.
அவசரசிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றும் வரைக்கும் கனகா ஒருநிலையில் இல்லை.
“உங்களுக்கு எப்படி இருக்கு?…” என கேட்டு கேட்டு தங்கதுரை லேசாய் தலையசைப்பதில் தான் உயிர்பிழைத்தார் அவர்.
மனைவியின் மருகல், அதை கண்டு மகள்களின் தவிப்பு இதையெல்லாம் காண முடியாமல் அவராகவே பேசிவிட்டார்.
“என் கண்ணு முன்னாடியே என் ரெண்டு பொண்ணும் உசுருக்கு போராடற நிலைமையில் விடுட்டு உன்னையும் விட்டுட்டு போய்டுவேனாம்மா? உன் குடும்பத்துக்காக நீ போன்னு அந்த எமனே அனுப்பிட்டாரு போல. உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல வழி செய்யாம என் கட்ட வேகாது…” என திணறி சொல்லும் போதே கனகா கதறிவிட அவரின் தலையை ஆதுரமாய் தடவி கொடுத்தார்.
“இப்படியெல்லாம் பேசாதீங்க. நல்லாகிட்டீங்க. நல்லாகிட்டீங்க…” என்று கையை தடவி, காலை தடவி, தலையை கோதி என கண்களில் நிரப்பிக்கொள்ளும் கனகாவை பார்ப்பவர்களின் நெஞ்சம் விம்மியது.
மகள்களுக்கு முன்னால் தைரியமாக இருப்பதை போல காட்டிக்கொண்டாலும், அவர்களுக்கு ஆறுதல் சொன்னாலும் அவரின் பரிதவிப்பு தங்கதுரை கண்விழித்த நொடியில் இருந்து துவங்கியது.
தங்கதுரை லேசாய் கண்ணயர்ந்தால் கூட சாதாரணம் மயக்கம் தானா என நொடிக்கு நொடி உயிர் தவிப்பவரின் வலியை அங்கிருப்பவர்களாலேயே தாளமுடியவில்லை.
சிறுபிள்ளையென கைபொருளை காப்பாற்ற தவிக்கும் சிறுமியென எவரையும் கவனிக்கும் நிலையில் இல்லை அவர். அவரின் தவிப்பு உணர்ந்தே கனகாவை தங்கதுரையின் அருகிலேயே இருக்க செய்து யாராவது கூடவே இருந்துகொண்டே இருந்தனர்.
அவர்களின் பெரும்பாலான பொழுதுகள் கொஞ்சமேனும் இலகுவாக கடக்க வினய் பெரிதும் காரணமாக இருந்தான் என்றால் மிகையில்லை.
‘தாத்தா தாத்தா’ என தொட்டுக்கொண்டே இது என்ன? அது எப்படி? என்று அங்கிருந்தவர்களை ஒருவழி ஆக்கினான்.
இதில் அக்னியை விட சுரேனை அவனுக்கு மிகவும் பிடித்தது. சுரேன் வந்துவிட்டால் வினயை யாரிடமும் தரமாட்டான். மடியில் வைத்துக்கொண்டு பேசுவது, இல்லை அவனை தூக்கிக்கொண்டு வெளியே செல்வது என்று அவனை கொஞ்சிக்கொண்டே தான் இருந்தான்.
சுபாவும், சந்திரிகாவும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து பார்த்துவிட்டு தான் சென்றார்கள். அங்கி அங்கேயே இருக்க சுரேன், பன்னீர்செல்வம், அடைக்கலம் என்று தொழிலை கவனித்துக்கொள்ள இங்கிருந்தே அக்னி அதை பார்த்துக்கொண்டான்.
ஒருவாரம் சென்றது. தங்கதுரை நன்றாகவே எழுந்தமர, தானே உணவுண்ண, சரளமாக பேச என்று முன்னேறி இருந்தார்.
அன்று மாலை டிஸ்சார்ஜ். அதை பற்றி பேசிவிட்டு தங்கதுரை இருந்த அறைக்குள் அக்னி நுழையும் பொழுதே அவரின் குரல் உணர்ச்சிமிகுதியில் நடுங்கியபடி ஒலித்தது.
“இங்க பாரும்மா, என் பொண்ணுக்கு வேண்டாம்ன்னா அப்படியே இருக்கட்டும். அவளை என் பேரனை பார்த்துக்கனும், வளர்த்துக்கனும்னாலே என் உடம்புல ஆயிரம் மடங்கு வலு வந்துரும். என் மகளை, என் பேரனை என் சக்தியுள்ளவரைக்கும் கூடவே இருந்து நான் காப்பாத்துவேன். என் கண்ணுமுன்னாடியே அவ கழுத்தை பிடிச்சு நெறிச்சானே அவனோட அனுப்ப சொல்லி கேட்கிறியே நீ?…”
கனகாவிடம் கேட்டுக்கொண்டு இருந்தார் தங்கதுரை. அவரின் குரலில் அதனை ஆவேசம்.