தங்கதுரையுடன் வீட்டிற்கு வந்து பத்து நாள் ஆகவிருக்கிறது. நன்றாக உடல் தேறிவந்துகொண்டிருந்தார் அவர்.
அன்று ராகாவின் வாழ்க்கையை பற்றி கனகா சொன்னதோடு சரி. அக்னியின் பேச்சிற்காக அமைதியாக இருந்துகொண்டார். இன்றுவரை அதை பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வீட்டிற்கு வந்ததில் இருந்து யாரேனும் வந்து தினமும் பார்த்து சென்றுகொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்பொழுது கீழ் வீட்டில் தான் தங்கள் ஜாகையை மாற்றிக்கொள்ள வேண்டியதாகிற்று. கனகா எத்தனை மறுத்தும் ராகா கேட்கவில்லை.
அக்னியிடம் விஷயத்தை கொண்டு போக அவன் என்னவென கேட்க வாயை திறக்கும் முன் சம்மதமாய் தலையசைத்தார் கனகா.
மனதிற்குள் ராகாவின் எதிர்காலம் அவரை வண்டாய் குடைய ஆரம்பித்தது. கவலையை காட்டிக்கொள்ள முடியாதபடிக்கு வேலை அவரை இழுத்துக்கொள்ள பேசமுடியாமல் தவித்து போனார்.
சாரதா வந்து பார்க்கவே இல்லை தங்கதுரையை. கேட்பவர்களிடம் எல்லாம் மருமகனை அடித்து துரத்தியப்பின் உறவெதற்கு என்று கேட்டு தெருவே கேட்கும் படி அவரின் குடும்பத்தை திட்டி தீர்த்தார் சாரதா.
ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கு வருவதும் தெரியாது போவதும் தெரியாது. வேலைக்கும் செல்லமுடியாமல் இருக்க அடைக்கலத்தை தேடி சென்றான் அவன். தோப்பில் இருந்தவர் அவனை பார்த்ததும்,
“வாங்க ஸ்ரீநிவாஸ்…” என பட்டுக்கொள்ளாதவாரு அழைக்க அதிலேயே தெரிந்துபோனது அவரின் பதில் என்னவாக இருக்கும் என்று.
“சும்மா உங்களை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் சார்….” என்று அவனும் பொதுவாய் பேச,
“ஓஹ், ஆனா பாருங்க. எனக்கு வேலை நிறைய இருக்குது. இந்த லோட் எல்லாம் பிரிச்சு தேங்காயை உரிக்கனும். தேங்காய் எண்ணைக்கு அனுப்பி வைக்கனும்…”
கிளம்பு என்று சொல்லாமல் சொல்லிய அவரின் பேச்சில் இன்னுமே அவமானமாய் தான் உணர்ந்தான். என்ன ஒன்று முன்பு போல கோபம் வரவில்லை.
ராகாவிடம் பேசிய அன்று அவள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தாள். அவளை பேசி அழைத்து செல்வதொன்றே முனைப்பாக இருக்க உண்மையில் பேசியவற்றை எல்லாம் புறம் தள்ளி ‘ என்னுடன் வா’ என்பதில் தான் நின்றான்.
அவளின் கோபமும், குற்றசாட்டுகளும், தாயை கை நீட்டியதும் என அவள் மீதான கோபத்தை பலமடங்கு கூட்டியது தான்.
இரண்டு மூன்று நாட்கள் இப்படியே செல்ல நான்காம் ஐந்தாம் நாள் மகனை, மனைவியை தேட ஆரம்பித்தது.
அதிலும் தாயின் சில அசிங்கமான வார்த்தைகள் சகிக்கமுடியாமல் வீட்டில் இருப்பதையே தவிர்க்க ஆரம்பித்தான். வேலைக்கு செல்லமுடியுமா என்றும் தெரியவில்லை. யோசனைகள் தான் மனம் எங்கும்.
“என்ன ஸ்ரீநிவாஸ்?…” என அடைக்கலம் மீண்டும் கேட்க,
“தெரியலை ஸார்…” என்றான் அப்போதைய நிலையில்.
அவனிடம் பேசிவிடுவது என முடிவெடுத்தவராக சற்று தள்ளி அவனுடன் நடந்து வந்தவர்,
“என்ன பார்க்கற? வேலையை விட்டு தூக்காம நீயே ரிஸைன் பண்ண போற மாதிரி சைன் கேட்கறேன்னு பார்க்கறியா? என்ன செய்ய? உன்னோட பொழைப்புல மண்ணள்ளி போட கூடாது பாரு. நாங்க எல்லாம் பாவத்துக்கு அஞ்சுறவங்க. உன்னோட நியாயமில்லாத மனக்கொதிப்பு கூட எங்க குடும்பத்துக்கு சேர்ந்திட கூடாதுன்னு தான்….”
“இதை நான் எதிர்பார்க்கலை ஸார். என் மேல உள்ள கோபத்துல…”
“கோபம் தான், உன் மேல பயங்கரமான கோபம். மத்தபடி நீ திறமைசாலி. எங்க போனாலும் வேலை கிடைக்கும். ஆனா குடும்பம் இல்லாம திறமையை மட்டும் வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது. புரிஞ்சு புத்திசாலித்தனமா நடந்துக்கோ. நான் புத்திசாலித்தனம்னு சொல்றது அடுத்தவங்க கண்ணீருல உன் வாழ்க்கை படகை ஓட்டலாம்னு நினைக்கறதா புரிஞ்சுக்காதன்னு….”
“ஸார் நான்…”
“எந்த தப்பையும் நியாயப்படுத்தறது அதைவிட தப்பு. நீ கிளம்புப்பா…” என்றவர் திரும்பி பார்க்காமல் தேங்காய்களை உரிக்கும் இடத்திற்கு சென்றுவிட அங்கேயே நின்றான் ஸ்ரீநிவாஸ்.
அந்த இடம் அத்தனை உரிமையாய் வந்து சென்ற இடம். அவன் வந்தாலே அங்கே அத்தனை பயத்துடனும், மரியாதையுடன் பார்ப்பார்கள். இன்று அங்கே நிற்க கூட முடியவில்லை.
மெதுவாய் தளர்ந்து நடந்தபடி வந்துகொண்டு இருந்தான். அவனும் மீண்டும் ராகாவையும், குழந்தையையும் பார்க்கவேண்டும் என வீட்டின் பக்கம் போனால் யாரேனும் அக்னியின் குடும்பத்தினர் இருந்துகொண்டே தான் இருந்தார்கள்.
இத்தனை நாட்கள் மகனை பிரிந்து இருந்ததே இல்லை. அவனை பார்க்கவேண்டும், அள்ளி அணைக்கவேண்டும் என்னும் ஆவல் பிறக்க இன்று என்னவானாலும் பார்த்துவிடுவது என்ற முடிவுடன் நடையை எட்டி போட்டு தங்கதுரை வீட்டிற்கு வந்துவிட்டான்.
வேகமாய் நடந்ததில் அடிபட்ட கால் வலித்தது. லேசாய் காலை உதறிக்கொண்டு உள்ளே நுழையும் முன்னர் மாடியில் இருந்து அக்னி இறங்கி வந்துவிட அங்கிருந்து செல்லவும் முடியாமல், உள்ளே நுழையவும் முடியாமல் அப்படியே நின்றான்.
“என்ன ஸ்ரீநிவாஸ் இந்த பக்கம்? யாரையாவது பார்க்க வந்தீங்களா?…” என்றான் வாசலை மறித்து நின்றபடி.
அவனை மீறி செல்லமுடியாது. ஆனால் பேசவும் விரும்பவில்லை. தன்னை அக்னி அடித்ததை மறக்கமுடியாமல் முகம் கன்றி போய் நின்றவன்,
“நான் ராகாவையும், என் பையனையும் பார்க்க வந்தேன்…”
“அப்படியா? நான் கூட இத்தனை நாள் குற்றவுணர்ச்சில மாமாவை பார்க்கமுடியாம இருந்ததுல வருந்தி இன்னைக்கு வந்துட்டதா நினைச்சேன்….” என்று நக்கலாய் சொல்ல,
“நிஜமா நான் வருந்தறேன் ஸார். ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு…” என்றான் ஸ்ரீநிவாஸ் பட்டென்று.
அக்னி தன்மையாக பேசியதில் அவன் அனைத்தையும் மறந்துவிட்டானோ என்று ஒருநொடி நம்பி ஸ்ரீநிவாஸ் அதை அப்படியே பிடித்துக்கொள்ள அந்த நிமிடத்திலும் அவனின் சமயோசித பேச்சில் கோபம் தெறிக்க,
“ஓஹ் உனக்கெல்லாம் குற்றவுணர்ச்சி இருக்குதா?ஆச்சர்யம் தான் போ. ஆனா இப்பவும் நீ மாறவே இல்லை. பிஸ்னஸ்ல உன்னோட பேச்சு சாமர்த்தியத்தை பார்த்திருக்கேனே…” என எள்ளலாய் அவன் பேச தலையை குனிந்துகொண்டவன் சட்டென,
“ஸார் நான் ராகாக்கிட்ட பேசிப்பேன். இதுல நீங்க தலையிடாதீங்க. இது என் குடும்ப விஷயம்…” என்றான் முயன்று வரவழைத்துக்கொண்டு கடுமையான தொனியில்.
“என்ன உன் குடும்ப விஷயமா? எப்போ என் பொண்டாட்டியை அடிச்சு கீழே தள்ளினியோ அப்பவே இதுக்குள்ள நானும் வந்துட்டேன். இன்னொரு விஷயம் ஞாபகப்படுத்தறேன் உனக்கு. இது என்னோட குடும்பமும் தான். கீர்த்தனாவோட குடும்பம் என்னோட குடும்பமும் தான். சோ நான் வரத்தான் செய்வேன். உன்னால முடிஞ்சா தடுத்து பாருடா…”
அக்னியோடு ஸ்ரீநிவாஸ் பேசிக்கொண்டிருப்பதை வீட்டிற்குள் இருந்தே பார்த்துவிட்ட கனகா வேகமாக வெளியே வந்து,
“வாங்க மாப்பிள்ளை, உள்ள வாங்க…” என்று ஸ்ரீநிவாசை பார்த்து அழைத்ததும் பட்டென்று அக்னி திரும்பி பார்த்து,
“என்னை தானே அத்தை, நீங்க போங்க. இதோ வரேன்…” என்று அனுப்ப அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் மனம் பதைத்தபடி உள்ளே சென்றார்.
“அவங்க என்னைத்தான் கூப்பிட்டாங்க…”
“அப்படி தெரியலையே…” என்றான் அக்னி தெனாவெட்டாக.
“இல்லை நீங்க வேணும்னே என்னை இந்த குடும்பத்தை விட்டு விலக்க பார்க்கறீங்க…”
“அதுக்கான அவசியம் எனக்கு இல்லை. நீ கிளம்பலாம்…”
“ராகாவை பார்க்காம நான் போக மாட்டேன்…” என்று சட்டமாய் அவன் நிற்க சுரேனுடன் பைக்கில் வந்து இறங்கினான் வினய்.
“சித்தப்பா…”என்ற கூவலுடன் வந்தவனை பாய்ந்து தூக்கிக்கொண்ட ஸ்ரீநிவாஸ்,
“வினய் குட்டி, அப்பாடா…” என கன்னத்தில் முத்தமிட சென்றதும் குழந்தை தகப்பனின் ஆவேச தூக்கலில் மிரண்டு கத்த ஆரம்பித்தது.
ஸ்ரீநிவாஸ் ராகாவின் கழுத்தை நெரித்தது, கீர்த்தனா விழுந்தது, தங்கதுரை உடல்நிலை சரியில்லாமல் போனது என அனைத்தும் ஞாபகம் வர காலை உதறிக்கொண்டு தகப்பனின் முகத்தில் அறைந்து விடு விடு என்று துள்ளி அழ திகைத்து போனான் ஸ்ரீநிவாஸ்.
வேகமாய் அவனின் கைகளில் இருந்து வினயை வாங்கி சமாதானம் செய்த அக்னி ஸ்ரீநிவாஸ் முகத்தை பார்த்ததும் ஒரு நொடி அவனுக்காக மனம் இரங்கத்தான் செய்தது.
அதற்குள் வீட்டிற்குள் இருந்து ராகாவும், கீர்த்தனாவும் வந்துவிட கனகா பார்த்துவிட்டு செய்வதறியாமல் நின்றார்.
ஸ்ரீநிவாஸ் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. பார்வை மொத்தமும் அக்னியின் கழுத்தை கட்டிக்கொண்டு அழும் மகனின் மீதே இருந்தது. வாசலில் வந்து நின்று தன்னை பார்த்தவர்கள் மீது கூட கவனம் செல்லவில்லை.
அந்தளவிற்கு வினயின் ஒதுக்கத்தில் நிலைகுலைந்து போனான். இதுவரை வீட்டினர் தான் மகனை வெளியே அனுப்பாமல் இருப்பதனால் பார்க்கமுடியவில்லை என்று நினைத்திருக்க இன்று அவனின் அழுகையும் அடியும் அவனை அதிரசெய்தது.
“நீ அன்னைக்கு பண்ணின அத்தனை அராஜகத்தையும் பார்த்து குழந்தை பயந்து காய்ச்சல்ல விழுந்து எழுந்திருச்சிருக்கான். முதல்ல இங்க இருந்து கிளம்பு. அப்புறம் திரும்பவும் அவனுக்கு முடியாம போய்ட போகுது…” என்று பைக்கில் அமர்ந்தவாறே சுரேன் சொல்ல,
“சுரேன், இதை விடு. நீ கிளம்பு…” என்று அவனை அனுப்ப ஸ்ரீநிவாசை முறைத்துக்கொண்டு வண்டியை கிளப்பி சென்றான்.
“வினய்…” என்று மெதுவாய் அவனை நெருங்க பார்க்க அக்னியின் தோளில் இருந்த மகனை வாங்கிக்கொண்டு விருட்டென வீட்டிற்குள் சென்றுவிட்டாள் ராகா.
“இங்க நின்னு உன் நேரத்தை வேஸ்ட் பண்ணாத ஸ்ரீநிவாஸ்…” என்று அக்னி சொல்ல சில நொடிகள் அப்படியே அந்த வீட்டையும் வீட்டினுள் சென்ற மனைவி, மகனையும் தேடியவன் பின் தளர்ந்த நடையுடன் மெதுவாய் வீதியில் சென்றான்.
அவனையே பார்த்தபடி நின்ற அக்னி ஒருசில நொடிகள் கழித்தே வீட்டிற்குள் வந்தான்.
அங்கே கனகா ஒருபுறம் அழுதுகொண்டு இருக்க ராகா இறுகிப்போய் நின்றாள். கீர்த்தனா கோபமாய் அவளை பேசிக்கொண்டு இருக்க,
“அவசரப்பட்டுட்டோம் தான். ஆசைப்பட்டு கேட்டாறேன்னு யோசிக்காம குடுத்தோம் தான். அதுக்குன்னு அவளை இப்படியே வச்சுக்க முடியுமா?…” என்று கீர்த்தனாவிடம் வாக்குவாதத்தில் இருந்தார் கனகா.
“அவசரப்பட்டுட்டோம்னு இப்ப புலம்பி என்ன செய்ய அத்தை? விரும்பறேன்னு கேட்டாலும் அடுத்தவனா இருந்தா கூட நீங்க விசாரிச்சு குடுக்க வேண்டியதா தான் இருக்கும். ஆனா உங்க புருஷனோட சொந்த அக்கா. அவங்க மகன். உங்களுக்கே தெரிஞ்சிருக்க வேண்டாமா இத்தனை வருஷ ஒட்டுதல் எப்படின்னு?…”
“மாப்பிள்ளை…”
“இல்லை நீங்க பேசுங்க. என்னை மாப்பிள்ளைன்னு எனக்காக பேசாம இருக்காதீங்க. ஸ்ரீநிவாஸ்ட்ட பண்ணின அதே தப்பை என்னை வச்சு செய்யாதீங்க. நீங்க என்ன நினைக்கறீங்கன்னு எல்லாருக்கும் புரியனும். ஒரு வேளை நான் நினைக்கிறதும், பேசறதும் கூட தப்பா இல்லையான்னு எனக்கு தெரியனும் இல்லையா?…”
அக்னி அவ்வாறு சொல்லவும் கனகா மௌனமாக நின்றார் அவனிடம் எப்படி பேசுவதென்று யோசித்து. மகளிடம் அத்தனை பேசியவரால் அக்னியிடம் பேசமுடியவில்லை.
“அவர் தான் கேட்கிறார் தானேம்மா. பேசு. இப்ப பேசு நீ…” என கீர்த்தனா கோபமாய் சொல்ல,
“என்ன பேச? எனக்கு இப்ப இவளோட எதிர்காலம் தான் பயத்தை குடுக்குது. நாங்க இருக்கற வரைக்கும் சரி. அதுக்கப்பறம்? யோசிக்காம குடுத்தோம்னு இல்லை. பிடிச்சு விரும்பி கேட்டப்போ நாங்க நம்பினோம். அம்மாவும், அப்பாவும் அப்படி இருந்தா பிள்ளையும் அப்படியே தான் இருக்கனுமான்னு நினைச்சோம். நல்லவிதமா பேசவும் யோசிக்காம விட்டுட்டோம். தப்பு தான்…”