மாலை வரை அங்கேயே இருந்துவிட்டு கீர்த்தனாவை கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள் சந்திரிகாவும், சுபாவும். அவர்களுடன் சாதனாவும் கிளம்பிவிட சட்டென வீடு வெறுமையானத்தை போல இருந்தது.
“இவ்வளவு நேரமும் கலகலன்னு இருந்துச்சுல. இன்னும் கொஞ்சம் நேரம் அவங்க இருந்திருக்கலாம்…” என்று ராகா தங்கதுரையிடம் கேட்க,
“அதுசரி, கீர்த்தனாவை இத்தனை நாள் இங்க இருக்கவிட்டதே பெருசு. உள்ளூர்ன்றதால அவங்க எதுவும் நினைக்கலை. இங்க தான இருக்கா பார்த்துக்கலாம்…” என கனகா சொல்லவும் ராகாவும் ஆமோதித்தாள்.
“ஆடிக்கு நாம இன்னும் எதுவுமே செய்யலை. அதுக்குள்ளே இவ்வளவு போராட்டம். இந்த முறையை நாம எப்போ செய்யறதாம்?…” என்று கவலையுடன் தங்கதுரை பேச,
“ஆரம்பிச்சுட்டீங்களா? நாம இங்க என்ன சூழ்நிலையில இருக்கோம்னு தெரியாம ஒன்னும் இல்லை அவங்களுக்கு. இதை செய்யாமலே விட போறோமா என்ன? கண்டிப்பா செஞ்சிருவோம்…” என கனகா அவரை தேற்றினார்.
அதன் பின்னர் மேல் வீட்டில் இருப்பவற்றை கொஞ்சம் கொஞ்சமாய் சுத்தம் செய்து கீழே இறக்கி வைத்து அதை பிரித்து அடுக்க ஆரம்பித்தார்கள்.
“இப்பவே செய்யனுமா என்ன? நாளைக்கு கூட பார்த்துக்கலாம்லம்மா…”
“இல்லைப்பா, ஆவணில குடித்தனத்துக்கு வராங்கலாம். அதுக்குள்ளே சுத்தம் பண்ணி முடிச்சா புது பெய்ன்ட் அடிச்சுடலாம்னு கீர்த்தி வீட்டுக்காரர் சொன்னார்…”
ராகா தங்கதுரைக்கு பதில் சொல்லிக்கொண்டே மாடியில் இருந்து இறக்கி வந்த பொருட்களை தனித்தனியாக பிரித்து வைத்தாள். மேலேயே சுத்தம் செய்துவிட்டதால் அடுக்கும் வேலை மட்டுமே.
இதுவும் அக்னியின் ஏற்பாடு. மேல் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு கீழே இவர்களை இங்கே இருக்கவைப்பதென முடிவெடுத்து இருந்ததால் வீடு தேடிக்கொண்டிருந்த தன் தொழிற்சாலை ஊழியருக்கே வீட்டை விடுவதென முடிவானது.
ஏற்கனவே கீர்த்தனா திருமணத்தின் பொழுது மாடியில் எடுத்துக்காட்ட முடிவெடுத்த அக்னி வெளிப்புற படிக்கட்டும் வைத்தே கட்டியிருந்தான்.
அதனால் முதல் மாடியில் உள்ள வீட்டிற்கு உள்ளிருந்து செல்லும் பாதையை மட்டும் அடைத்துவிட்டு அந்த தளத்தை அப்படியே வாடகைக்கு விட்டுவிட தீர்மானித்தனர். வருமானத்திற்கும் ஆனதால் பிரச்சனை இல்லாமல் போனது.
தங்கதுரை வேலை செய்த பேங்கில் கூட பேசி அவரின் வேலையில் இருந்து விருப்ப ஒய்வு பெறுவதை பற்றியும் பேசி வைத்துவிட்டான்.
இனி எக்காரணத்தை கொண்டும் மீண்டும் அந்த ஊரைவிட்டு அவர்கள் செல்லவேண்டாம் என அன்புக்கட்டளை இட்டுவிட அதை மீறும் மனமில்லை அவர்களுக்கு.
சில நேரங்களில் தோன்றும், அவர்களை அதிகம் சார்ந்திருக்கிறோம் என்று. அந்த நினைவிற்கு அவசியமில்லை என்பதை போல அந்த குடும்பத்தினர் நடந்துகொள்ள நினைக்க நினைக்க நெஞ்சம் ஆனந்தத்தில் விம்மி தணிந்தது.
அங்கே பன்னீர்செல்வம் வீட்டில் வேலையை எல்லாம் ஒத்தி வைத்தவனாக நேரமாவதை உணர்ந்து கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்தபடி அலுவலக அறையை விட்டு வெளியே வர எதிரே பெண்கள் நால்வரும் பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள்.
“நீங்க வர நேரமாகும்னு நினைச்சேன். அதுக்குள்ளே வந்துட்டீங்க?…” என்ற அக்னி,
“நான் கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டு தானே வந்தேன்?…” என கீர்த்தனாவை பார்த்து கேட்க,
“மாலதி அக்கா…” என்று கீர்த்தனா அழைக்கவும் அக்னிக்கு சிரிப்பு வந்தது.
“மருமக ஆரம்பிச்சுட்டா…” என்று சாதனாவும் அக்னியோடு சேர்ந்துகொள்ள,
“ஏன் அத்தை மாலதியை நான் மாலதி அக்கான்னு கூப்பிட கூடாதா?…” என்று சந்திரிகாவிடம் திரும்பினாள் கீர்த்தனா.
“யார் சொன்னா? கூப்பிடேன்…” என சந்திரிகாவும் மருமகளை தாங்க மாலதி வரும் பொழுதே தண்ணீருடன் வந்துவிட்டாள்.
“டீ எதுவும் வேண்டாம், டின்னர் மட்டும் லைட்டா செய்…” என்ற சந்திரிகா உள்ளே சென்றுவிட,
“நானும் கொஞ்சம் படுக்கறேன்…” என கீர்த்தனாவும் நகர,
“என்ன கால் வலிக்குதா?…” என முறைத்தான் அவளை.
“அங்க ஒரு இடத்துல நிக்கலை. சும்மா நடந்துட்டே இருந்தா? போ போ போய் ஒத்தனம் குடு…” என்று சாதனா போட்டுக்கொடுத்துவிட்டு சென்றுவிட,
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. சிலபேருக்கு இப்படி இருக்கும். சூடான தண்ணில கொஞ்சம் நேரம் காலை வை. அவ்வளோ தான்…” என சுபாவும் சொல்லிவிட்டு மாலதியிடம் இரவுக்கு என்ன செய்கிறாள் என்று பார்க்க சென்றுவிட்டார்.
அனைவரும் கலைந்து சென்றதும் கீர்த்தனாவின் தோளில் கை போட்டுக்கொண்டவன் இணைந்து நடந்தான்.
“சொல்லி சொல்லி ஒன்னும் எதுவும் செய்ய வேண்டாம்…” என்று கீர்த்தனா முறுக்கிக்கொண்டாள். அவளின் முறைப்பில் சிரித்தவன்,
“சொல்லாம எதுவுமே செஞ்சதில்லை தான் போ…” என நமுட்டுச்சிரிப்பு சிரிக்க,
“நீங்க தீப்பொறி இல்லை, கடலைபொரி. என்ன சொன்னாலும் பறந்து பறந்து சிரிக்கிறது…” என்று சொல்லும் பொழுதே அறை வந்துவிட உள்ளே சென்றதும் அவளை சேரில் அமரவைத்தவன்,
“நீ கூட தான் கீர்த்தனா இல்லை. என்னை ஈர்த்தனா. உன் பக்கமா மொத்தமா என்னை ஈர்த்த என் வாழ்க்கையோட கனா….” என்று அவளின் தலையை பிடித்து ஆட்டிவிட்டு பாத்ரூம் நோக்கி சென்றான்.
“கவித கவித…” என்று கிண்டலாய் கீர்த்தனா சில்லாகிக்க,
“வந்து வச்சிக்கறேன் உன்னை…” என சொல்லிவிட்டு உள்ளே சுடுநீரை பிடித்துக்கொண்டு வந்தான்.
“இந்த ஹீட் போதுமா பாரு? இல்லைன்னா கொஞ்சம் ஆறவிடலாம்…” என கேட்க சுண்டுவிரலை நீட்டி தொட்டு பார்த்தவள்,
“ஹ்ம்ம் கொஞ்சம் சூடா இருந்தா தான் பெட்டரா இருக்கும். நைட் நல்லா தூக்கம் வரும்…” என இரண்டு கால்களையும் மெதுவாய் பக்கெட்டில் இருந்த தண்ணீரில் வைத்தாள்.
முதலில் சூடு சுர்ரென்று இருக்க லேசாய் அசைந்தவளுக்கு நேரம் செல்ல செல்ல சுகமாய் இருந்தது.
அவளின் முகத்தில் வந்துபோன பாவனைகளை பார்த்தபடி இருந்தவன் அவளின் கையை எடுத்து பிடித்துக்கொண்டான்.
“என்னை ரொம்ப தேடினியா கீர்த்தி?…” என்று கேட்க கண்ணை மூடி அமர்ந்திருந்தவள் அவனின் கேள்வியில் திரும்பி பார்த்தாள்.
“இல்லையே…” என சிரித்தபடி சொல்ல அவளை முறைத்து,
“இப்படி நான் கேட்டா ஆமா, தேடினேன்னு சொல்லனும். உண்மையை எல்லாம் சொல்ல கூடாது…” என்று அவளின் காதை திருக,
“நிஜமாவே தேடலை. என் கூட இல்லைன்ற நினைப்பே இல்லையே எனக்கு. அப்போ எப்படி தேடினதா தோணும்?…” என்றாள் அவள்.
ஆனால் அக்னிக்கு அது போதாதே. இரண்டு மாதங்கள் தொழிலில் ஆழ்ந்து அவளை கவனிக்காமல் இருந்ததனால் எத்தனைய மன உளைச்சலுக்கு ஆளானாள் அவள். அதனாலேயே இந்த பிரச்சனையில் அதே போல தன்னை தேடி துவண்டிருப்பாளோ என்று நினைத்தான்.
அதிலும் இடைப்பட்ட நாட்களில் அவனை போட்டு படுத்திய பாட்டில் எந்தளவிற்கு அவளின் மனது தன்னை தேடியுள்ளது என்பதை உணர்ந்துகொண்டானே.
கிட்டத்தட்ட மருத்துவமனையில் ஒருவாரத்திற்கு மேல், கீர்த்தனா வீட்டில் பத்துநாட்கள் என்று கீர்த்தனா அவர்களுடனே தான் இருந்தாள். அவ்வப்போது தான் அங்கு சென்று வருவதும் போவதுமாக இருந்தான்.
அங்கிருந்து அழைக்கவும் மனம் வரவில்லை. அவளின் குடும்ப சூழ்நிலை அப்படி இருக்க தன் விருப்பத்திற்காக அழைத்து வந்து அதுவும் ஒருவகையில் அவளை பாதித்தால்?
இப்படி பலவிதமான யோசனைகளை அவனை சுற்றலில் விட இன்று எப்படியாகினும் அழைத்து வந்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் இருந்த போது தான் ஸ்ரீநிவாஸ் ‘நான் என் குடும்பம்’ என்று வந்து நின்றது.
‘சுத்தம்’ என்று நினைத்துக்கொண்டவன் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் போல என நினைத்துக்கொண்டிருந்தான்.
மாலை கிளம்பியது கூட அவளின் மனநிலையை பார்த்து, வீட்டின் நிலவரத்தை பார்த்து முடிவு செய்துகொள்ளலாம் என்று தான் சற்று தாமதமாகவே கிளம்பியது. அதற்குள் கீர்த்தனாவே வந்துவிட வீட்டினர் சொல்லி கூட்டிக்கொண்டு வந்தனரோ என்ற எண்ணம்.
“என்ன ஆச்சு? ஒரே யோசனை?…” என அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டாள் கீர்த்தனா,
“ஸ்ஸ்ஸ் ஆஆ, இப்படியா வலிக்கிற மாதிரி கிள்ளுவ…” என கன்னத்தை தேய்த்துக்கொண்டவன்,
“இன்னுமா என் மேல உன் கோபம் போகலை?…” என்று சாய்ந்து அமர்ந்துகொள்ள அவனின் தோளில் தானும் தலைசாய்த்துக்கொண்டாள்.
“நான் எங்க கோவப்பட்டேன்?…”
“அப்போ என்னை போட்டு படுத்தினதுல்லாம்?…”
“அது சும்மா விளையாட்டுக்கு தான். வேணும்னு பண்ணுவாங்களா?…”
“ஆனா நீ வேணும்னு தானே பண்ணின…” என்றதும் லேசாய் சிரித்தவள்,
“உண்மை தான். கொஞ்சம் வில்லத்தனமாவும் தான் யோசிச்சேன். முதல்ல இப்படிலாம் இருக்க கூடாது, நாம எவ்வளவு பொறுமை. குடும்ப பொறுப்பு உணர்ந்து நடக்கிற பொண்ணு. இதை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகனும். இந்தளவுக்கு கூடவா மெச்சூரிட்டி இல்லை இப்படிலாம் யோசிச்சேன்….”
“ஹ்ம்ம் அப்பறம்?…” என அவன் கதை கேட்க,
“அப்பறம் தான் ஒரு விஷயம் தோணுச்சு. புருஷன்கிட்டே நம்ம மெச்சூரிட்டியை காண்பிச்சு மெடலா வாங்க போறோம்னு. பாதி கோவம், பாதி ஆசை. உங்க கூட எப்படிலாம் இருக்கனும்னு தோணுதோ அப்படி வம்பு பண்ணி டென்ஷன் ஆக்குவேன். சில நேரத்தோல் நிஜமாவே சில எரிச்சல் என்னையும் அறியாம. ஆனா இதை எல்லாம் உங்கக்கிட்ட தானே காட்டிக்க முடியும்…”
“அப்கோர்ஸ், யூ கேரி ஆன்…” என்று அக்னி சிரிக்க,
“இப்ப பார்த்தா நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு…” என கண்ணை விரித்து அவள் சொல்லவும் அதில் இன்னமும் வெடித்து சிரித்தான்.
“திரும்ப திரும்ப இதையே சொல்லி என்னை படுத்தாத. நீ நல்லவன்றப்போ எல்லாம் எனக்கு நாயகன் பிஜிஎம் பேக்ரவுண்ட்ல கேட்குது…” என்றவன்,
“எனக்கு இவ்வளவு சர்ட்டிபிகேட் குடுக்காத கீர்த்தி. மனசு குறுகுறுக்குது…” என்று முழிக்க,
“என்ன பண்ணினீங்க, இப்ப எனக்கு விஷயம் வரனும்…” என்றாள் மிரட்டலாய்.
“சொல்லிடுவேன், அப்பறம் உங்களை அப்படி நினைச்சேன், இப்படி நினைச்சேன்னு பாட கூடாது சொல்லிட்டேன்…”
“என்னமோ இருக்குது. இப்போ சொல்ல போறீங்களா இல்லையா?…”
“கடவுள் தான் காப்பாத்தனும்…” என்றவன் சற்று தள்ளி அமர்ந்து,
“நான் உன்னை நிறைய நோட்டம் பார்த்திருக்கேன்…”
“நோட்டம்ன்னா?…” என்றவள்,
“சைட்டடிச்சீங்களா? நீங்களா? அவ்வ்வா…” என வாயில் கை வைக்க,
“மொத்தமா ஷாக் ஆகிக்கோ…” என்று அவளின் கையை எடுத்துவிட்டவன்,
“நீ நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி திருவிழாவுக்கு வந்த தானே? அதுக்கு முன்னவே வீட்டுல பேசி சம்மதம் வாங்கிட்டேன். அன்னைக்கு நீ மழையில ஸ்ரீநிவாஸ்க்கு வெய்ட் பண்ணிடு இருந்தப்போ உன்னை பார்த்தேன். இங்க இந்த உன் இடுப்பை…” என விரல் நீட்டி சொல்ல,
“பிராடு பிராடு, உங்களுக்கு போய் தீப்பொறி திருமுகம்னு பேர் வச்சேனே. சரியான ஊசி பட்டாசு. ஆளை பாரு…” என்று அவனை இழுத்து வைத்து முதுகில் மொத்த அவனோ அவளின் மடியில் அப்படியே சாய்ந்துகொண்டான்.
“இப்படித்தான், இன்னும் நாலு தட்டு தட்டு. தூங்கிடுவேன்…” என்று அவளின் வயிற்றை கட்டிக்கொண்டு மேடிட்டிருந்த வயிற்றிற்கு முத்தம் வைக்க அடுத்த அடிகள் எல்லாம் வீரியமிழந்து வருடலாய் மாறியது.
“என்னவாம்? பாவமேன்னு விட்டுட்டியா?…” என்று அதற்கும் கேலி பேச,
“உங்களை எல்லாம் சும்மாவே விட கூடாது. எழுந்திருங்க…” என்று அவனை எழுப்பியவள்,
“தண்ணி ஆறிடுச்சு…” என பக்கெட்டை பார்த்தபடி சொல்லவும்,
“இரு டோர் மேட் போடறேன்…” என அவன் எடுத்துக்கொண்டு வந்து போட்டுவிடு ஒரு டவலையும் இருக்கையில் வைத்துவிட்டு பக்கெட்டை தூக்கிக்கொண்டு பாத்ரூமில் வைத்துவிட்டு வர கீர்த்தனா குனிந்து கால்களை துடைத்துக்கொண்டு இருந்தாள்.
“ப்ச், இப்ப ஏன் வயித்தை அமுக்கிட்டு துடைக்கிற?…” என டவலை பிடுங்க,
“துடைச்சுட்டேன் விடுங்க…” என சொல்லியவள் மெதுவாய் எழுந்து நடந்துகுடுக்க ஆரம்பித்தாள்.
“என்ன செய்யுது கீர்த்தி?…”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, ரொம்ப நேரம் தண்ணில வச்சிருந்தது ஒரு மாதிரி இருக்கு. அதான் லேசா நடந்தேன்…”
“சரி, நீ உட்காரு…” என கட்டிலில் சாய்ந்து அமர வைத்தவன் தானும் லேப்டாப்பை தூக்கிக்கொண்டு வந்து அமர்ந்தான்.
“கொஞ்சம் நேரம் படுப்பியாம். நான் ஒரு சின்ன வேலையை முடிச்சுட்டு வருவேனாம்…” என்று அவளின் கன்னம் தட்டி சொல்ல தலையசைத்தவள் லேசாய் சரிந்து ஒருக்களித்து படுத்தாள்.
கால் வேறு இன்னும் என்னவோ போல இருக்க மெல்ல தன் கைகளாலேயே உடலை வளைத்து காலை பிடித்துவிட்டபடி கண்ணை மூடி படுத்திருக்க,
“கால் வலிக்குதா கீர்த்தி?…” என்றான் அவளை பார்த்து.