“இப்போலாம் நீ ரொம்ப தெளிவு இல்லை…” என சாதனா சிரிக்க,
“ஹ்ம்ம், கண்டிப்பா நீயும், அடைக்கலம் அப்பாவும் மட்டும் இல்லைன்னா நான் என்ன ஆகிருப்பேன்னே தெரியாது…” என கண்கலங்க.
“அட ச்சீ, இதுகெல்லாம் போய் பீல் பண்ணிட்டு. ஆனா பாரேன். அவங்க ரெண்டு பேர் கல்யாணத்தை நடத்த நாம என்னென்ன வேலை பார்த்திருக்கோம். அது தெரியாம சுத்திட்டு இருக்காங்க…” என்றவள்,
“ஆனா அக்னி மாமாவுக்கு தெரிஞ்சிருச்சு அவர் கல்யாணத்தப்போவே. ஸ்மெல் பண்ணிட்டாரு. கீர்த்தி தான் இன்னும் தெரியலை…”
“அவளுக்கு மட்டுமா வீட்டுல யாருக்குமே தெரியாது நம்ம கூட்டணி…” என ராகாவும் சிரிக்க,
“என்ன பொண்ணுங்களா பார்த்தீங்களா எல்லாம் சரியாகவும் என்னை விட்டுட்டு ரகசியம் பேசறீங்க…” என அடைக்கலம் வந்துவிட்டார்.
“ஆனாலும் நீங்களும் சில விஷயங்களை எங்ககிட்ட சொல்லலை தானேப்பா…” என்று சாதனா கேட்க கீர்த்தனாவின் வீட்டு விஷயத்தை பற்றி சொல்கிறாள் என்று புரிந்த அடைக்கலம்,
“உங்களை பத்தி வேற யார்க்கிட்டயும் சொல்லாத மாதிரி, மத்ததையும் சீக்ரெட்டா வச்சிருக்கேன். நான்லாம் சுவிஸ் பேங்க் லாக்கர் மாதிரி…” என்று சிரிக்க,
“தாத்தா இந்த சாக்கியை ஓபன் பண்ணி தாங்க…” என்று வினயும், நட்சத்திராவும் வந்து நிற்க,
“யார்டா தம்பி உனக்கு சாக்லேட் குடுத்தா?…” என கேட்டுக்கொண்டே பிரித்து கொடுக்க,
“இங்க ஒரு அண்ணனுக்கு பர்த்டேவாம். குடுத்தாங்க…” என்றவன்,
“அடடே நீ எந்த மாசம் பிறந்த?…” என வினயிடம் கேட்க அவனும் ராகாவிடம் கேட்டுவிட்டு,
“தை மாசமாம் தாத்தா…” என்று சொல்ல,
“அடடா நானும் தான் தையில பிறந்தேன். எங்கம்மா சர்க்கரை பொங்கலாம் வச்சு தருவாங்க. இனி நாம ரெண்டுபேரும் ஒரே மாசம் கொண்டாடலாம்…” என்று ஹைபை கொடுத்துக்கொண்டார்.
அவரின் பேச்சில் பெண்கள் இருவரும் சிரிக்க சற்று தள்ளி இதை பார்த்தபடி இருந்த ஸ்ரீநிவாஸ் முகமும் புன்னகை தான். தன்னிடம் அவர் பேசிய ஞாபகத்தில் சிரித்தபடி நின்றவனை பார்த்தவர்,
“என்ன ஸ்ரீநிவாஸ்?…” என்று சிரிப்புடன் கேட்டபடி லேசான தலையசைப்புடன் நகர்ந்தார்.
பழையபடி பேச அவருக்கு மனமில்லை. ஆனாலும் ஒதுக்குவதை போல யாரும் நடந்துகொள்வதில்லை ராகாவையும், வினயையும் மனதில் வைத்து. அவனுக்குமே புரியத்தான் செய்தது. ஆனாலும் தானே சற்று ஒதுங்கி தான் நின்றான் அவன்.
வழக்கம் போல மாலதியை வைத்து சந்திரிகா வேலை பார்த்துக்கொண்டு இருக்க கீர்த்தனாவும், சுபாவும், கனகாவும் ஆளுக்கொன்றாய் கவனித்துக்கொண்டனர்.
தங்கதுரையை யாரும் எதுவும் செய்யவிடவில்லை. அக்னியும், பன்னீர்செல்வமும் மற்றதை கவனிக்க சாதனாவும், ராகாவும் குழந்தைகளை பொறுப்பெடுத்துக்கொள்ள சுரேனும், அடைக்கலமும் இங்கே பாதி அங்கே பாதியென பார்த்துக்கொண்டனர்.
மொட்டை போட்டு முடித்ததும் வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு கிளம்ப குடும்பத்தினர் மட்டுமே கோவிலில் இருந்தனர்.
ஸ்ரீநிவாஸ் கூட கிளம்பிவிட்டான். அங்கே அவர்களுடன் இருக்க ஆசை தான். ஆனாலும் அங்கிருந்து மனதை கஷ்டப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
“நேரமாகுது, மழைவரும் போல இருக்குது. கிளம்புவோம். மத்ததை பசங்க பார்த்துப்பாங்க. நான் கூட இருக்கேன்…” என அடைக்கலமும், பன்னீர்செல்வமும் சொல்ல,
“நான் இருக்கேன். நீங்க கிளம்புங்க. நானும் சுரேனும் பார்த்துக்கறோம். எப்ப பாருங்க எங்களை போக சொல்லிட்டு நீங்க பார்க்கறது. இனி நாங்க பொறுப்பெடுத்துக்கறோம். புரியுதா?…” என அக்னி பேசவும்,
“சரிப்பா நான் எதுவும் பேசலை. நீங்களே பாருங்க…” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றார் பன்னீர்செல்வம்.
இரண்டாம் பெண்ணின் வாழ்வு சிறக்க அமைந்துவிட்டதில் தங்கதுரையும் கனகாவும் நிறைவுடன் இருந்தாலும் மூத்த மகளின் வாழ்வு என்றாவது முழுமை பெரும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
மனநிறைவுடன் அங்கிருந்து அவர்களும் ராகா, வினயுடன் கிளம்பிவிட்டனர். கண்டிப்பாக தங்கள் நம்பிக்கை வெற்றிபெறும் என்ற வேண்டுதலுடன்.
“கீர்த்தி…” என்ற அக்னி அவள் திரும்பி பார்த்ததும் சைகையில் எதுவோ சொல்ல,
“பக்கத்துல போய் பேசிட்டு வாம்மா…” என்று சந்திரிகா சொல்ல,
“இல்லை புரிஞ்சிடுச்சு அத்தை. வாங்க போகலாம்…” என்றவள் அக்னியை முறைத்துக்கொண்டு சென்றாள்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் வந்த ஸ்ரீநிவாசை பார்த்த சுரேன்,
“என்ன?…” என்றான்.
“இல்லை எதாச்சும் ஹெல்ப்…”
“நீ எங்களுக்கு ஹெல்ப் பன்றியா?…” என்று சுரேன் கடுப்பாய் எகிற,
“இல்லை ஸார், எல்லாரும் போறதை பார்த்தேன். அதான் திரும்ப வந்தேன்…” என ஸ்ரீநிவாஸ் சொல்ல,
“சுரேன், பேசாம இரு…” என்ற அக்னி,
“அந்த தட்டுல பழங்கள் எல்லாம் இருக்குது. உள்ள நிறைய அட்டை பெட்டி இருக்குது. அதுல அடுக்கிடுங்க ஸ்ரீநிவாஸ்…” என்று அவனை அனுப்ப ஸ்ரீநிவாஸ் சென்றதும்,
“என்னால இன்னும் நம்ப முடியலை…” என்றான் எரிச்சலுடன்.
“அவன் மாறிட்டானா இல்லையான்ற பேச்சுக்கே வரலை நான். சப்போஸ் அப்படி ஒரு எண்ணத்துல இருக்கறவன் மாற முயற்சி பண்ணும் போது நாம கை குடுத்தா தப்பில்லை. இதனால ஒரு குடும்பம் வாழும். அதை விட்டுட்டு உன்னை நம்ப மாட்டேன் மாட்டேன்னு சொல்லி திரும்ப நாமே அவனை பழைய பாதைக்கு அனுப்பிட கூடாது….”
“நீ என்ன சொல்லு, எனக்கு இப்பவும் பசிக்குதுன்னு கேட்ட வினய் தான் கண்ணுக்குள்ள வந்து நிக்கறான்டா….” என்று சுரேன் சொல்ல,
“ஏமாத்தனும்னு அவன் திரும்ப நினைச்சா இந்த வாழ்க்கை அவனை ஏமாத்தும். நம்பிக்கை கூட சாமி மாதிரிதான். உண்மையா இருந்தா பலமடங்கு பலன் தரும். பொய்யா நடிச்சா என்னைக்காச்சும் அதோட விளைவு இன்னும் மோசமா இருக்கும். குடும்பத்தை இழந்துட்டு தேடிட்டு இருக்கறான். பார்க்கலாம் வாழ்க்கை அவனுக்கு என்ன வச்சிருக்குன்னு…”
ஸ்ரீநிவாஸ் காதிலும் இது விழத்தான் செய்தது. அவனுக்கும் என்றாவது தன்னை புரிந்து ராகா ஏற்றுக்கொண்டால் போதுமென்று தான் இருந்தது.
அக்னி சுரேனை ஒருவாறு தேற்றி வேலையை முடித்துவிட்டு மற்றவர்களை அனுப்பிவிட்டு வீட்டிற்கு வர வெகுநேரம் ஆகிவிட்டது.
அதற்குள் வீட்டினர் சாப்பிட்டு முடித்து உறங்க சென்றிருக்க சுரேனும், அக்னியும் தங்களுக்கு தேவையானதை எடுத்துவைத்து சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு தங்களின் அறைகளுக்குள் நுழைந்துகொண்டனர்.
குழந்தையை உறங்க வைத்தபடி கீர்த்தனாவும் சீரான உறக்கத்தில் இருக்க உடையை மாற்றிவிட்டு கைகால் முகம் கழுவிவிட்டு அவளருகே வந்து படுத்தவன் இடையோடு சேர்த்து தனக்கு நெருக்கமாய் இழுத்துக்கொண்டான் தன்னருகே.
“தூங்கிட்டியா கீர்த்தி…” என்று மெதுவாய் கேட்க அவளோ பதில் பேசாமல் அசையாமல் இருக்க அவள் உறங்கவில்லை என்பதை தெரிந்துகொண்டவன் சில்மிஷம் செய்ய பொறுக்கமாட்டாமல் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
“பாப்பாவை வச்சுட்டு என்ன பேசனும்னு தெரியாதா உங்களுக்கு?…” என்று நெற்றிக்கண் திறந்து கேட்க அவளின் கோபத்தை புரிந்தவன்,
“என்ன பேசினேன்? நீயும் மொட்டை போடறோம். கோவிலுக்கு விரதம் அப்படின்னு ரெண்டு வாரமா பிரச்சனையே பண்ணலை. இன்னைக்கு பிரச்சனை உண்டா இல்லையான்னு கேட்டேன். இது ஒரு பிரச்சனையா?…” என்று சிரிக்க,
“உங்களுக்கு எதாச்சும் இருக்கா?…”
“என்னடி பொசுக்குன்னு இப்டி கேட்டுட்ட? வர வர உன் வேர்ட்ஸ் எல்லாம் ரொம்ப பேட் பேர்ட்ஸ் வேகத்துல பறக்குது…” என்றவன் தன் மீது அவளை சாய்த்துக்கொண்டான்.
“பேசாம. நான் நிறையவாட்டி உங்கட்ட சொல்லிருக்கேன். என்கிட்டே பேசறப்போ பக்கத்துல யார் இருக்கான்னு பார்த்து பேசுங்கன்னு. கோவில்ல இருந்து வரப்போ பிரச்சனைன்னா ப்ராப்ளம் தானேம்மா? நீ அப்பாகூட சண்டை போட போறியன்னு கேட்கறா. என் மூஞ்சியை எங்க வச்சுக்க…”
“இப்படி என் நெஞ்சுக்குள்ள வச்சுக்கோ. மாட்டேன்னா சொல்றேன்…” என்றவன்,
“நீ மட்டும் சண்டை போடறப்போ டாப்ஸ்லிப் வரேன்னு சொல்லிட்டு இப்ப வரைக்கும் வரமாட்டேன்னு சொல்லி ஏமாத்தற…”
“அது… அது ஒரு வேகத்துல சொல்லிட்டேன். குழந்தையை வச்சுட்டு அங்க நைட்ல தங்க முடியுமா? பாப்பா பயந்துட்டா?…”
“விவரம் தான்டி நீ. அவ பயந்தா, நீ பார்த்த…”
“அங்க தவிர வேற எங்கயும் போக முடியாதா?…”
“அங்க தான் போகனும். அட்லீஸ்ட் ஒரு ஒன் வீக் அங்க ஸ்பென்ட் பண்ணனும். அதுக்கப்பறம் தான் வேற எங்கயும்…” அவனும் பிடிவாதமாய் சொல்ல,
“இப்படி சொல்லி சொல்லிய இந்த ஊர் எல்லையை தாண்டறதே இல்லை. அப்பப்ப மனசு வந்தா பொள்ளாச்சி வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்க. வர வர அதுவும் குறைஞ்சு போச்சு…” என்று கீர்த்தனா சிணுங்கலாக சொல்ல,
“என்னடா…” என்றான் அவளின் நாடி பிடித்து நிமிர்த்தி,
“தெரியலை. சும்மா தான்…” என மீண்டும் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
சாதனா குழந்தை பெற்று வந்த பின்பு எங்கும் செல்ல முடிவதில்லை. பொள்ளாச்சிக்கு சென்று எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டிருக்க வாய் திறந்து கேட்காமல் இருந்தவள் ஏதோ வேகத்தில் அவனிடம் சொல்லிவிட்டாள்.
“எனக்கு புரியுதுங்க உங்க வேலை பத்தி. சும்மா தோணிச்சு. வேற ஒண்ணுமில்லை…” என்றவள் இன்னும் அவனின் முகம் தெளியாமல் இருக்க,
“தீப்பொறி ரைம்ஸ் பாடுவோமா?…” என அவனை வம்பிழுக்க சிரிப்புடன் அவளை பார்த்தவன்,
“ஆனா நான் தான் சொல்லி தருவேன். ஓகே தானே?…” என்றவன் பேச்சில் நாணத்துடன் முகம் மறைத்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன்,
“டயர்டா இருக்க. தூங்கு…” என்றான்.
“நிஜமா?…” என விழிவிரித்து அவள் கேட்க,
“நிஜமா தான்…” என்று சொல்லி அவளுக்கு தட்டிகொடுத்தபடி தானும் உறங்கினான்.
மறுநாள் தொழிற்சாலை சென்றவன் சுரேனிடம் பேசி வேலைகளை பார்த்துக்கொள்ள சொல்லி ஒப்படைத்துவிட்டு கீர்த்தனாவை கிளப்பிக்கொண்டு பொள்ளாச்சி வீட்டிற்கு வந்துவிட்டான். வந்து முழுதாய் ஒருநாள் சென்றிருந்தது.
நட்சத்திரா உள்ளே உறங்கிக்கொண்டிருக்க மாலை கவிழும் நேரம் அக்னியும் கீர்த்தனாவுமாய் சந்தனமுல்லை பூக்களை பறித்துக்கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தனர்.
கீர்த்தனா சரம் தொடுக்க பேசியபடி அவளுக்கு இரண்டிரண்டாய் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தான் அக்னி.
“அடேய் என்னடா பன்ற?…” என்ற சத்தத்தில் திரும்பி பார்க்க சத்தமின்றி சுரேன் நிற்க அவனுடன் தோளில் உறங்கிய மகனுடன் சாதனா இருந்தாள்.
“ரெஸ்ட் எடுக்கறேன், ரெஸ்ட் எடுக்கறேன்னு இங்க வந்து இந்த வேலை தான் பார்க்கறியா நீ?…” என்று சுரேன் கிண்டல் பேச,
“உன்னை யாருடா இங்க வர சொன்னா?…”
“ஏன் ஏன் ஏன்? நாங்க வந்தா என்ன? நாங்களும் ரெஸ்ட் எடுக்கத்தான் வந்திருக்கோம்…” என வம்பாய் சொல்லிவிட்டு சாதனா குழந்தையை உள்ளே சென்று படுக்க வைக்க அக்னி சுரேனை முறைத்தான்.
“விட்ரா விட்ரா. இதெல்லாம் சகஜம்….” என்றவன் சாதனாவையும் பூ கட்ட சொல்லி தானும் அமர்ந்துகொண்டான்.
“இனிமே ஒரு மாசம் நீ, ஒரு மாசம் நான். இங்க தான் டேரா. என்ன சனா?…” என மனைவியை கேட்க,
“வேஸ்ட் நீங்க. மாசத்துக்கு ஒருக்கன்னு சொல்லனும்…” என்று அவள் திருத்த,
“தாராளமா வாங்க. இப்போ சேர்ந்து வந்தது நல்லா இருக்குல. அது மாதிரியே சேர்ந்தே வருவோம். என்னக்கா?…” என கீர்த்தனா சொல்லி சாதனாவுடன் ஹைபை போட்டுக்கொள்ள,
“நீயும் எப்ப இருந்துடா இப்படி ஆனா?…” அக்னி சுரேனிடம் கேட்டான்.
“எல்லாம் உன்னை பார்த்து கத்துக்கிட்டது தான்…” என்று சுரேன் அக்ன்னடிக்க,
“ஒன்னு கூடிட்டாங்களே…” என்று முறைப்புடன் பார்த்தவனின் முகத்திலும் புன்னகையே.
ஒரு நாள் மட்டும் சுரேன் சாதனாவுடன் இருந்துவிட்டு நட்சத்திராவையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட மேலும் இரண்டுநாட்கள் கீர்த்தனா கிளம்புவோம் என்று சொல்லும் வரை இருந்தான் அவன்.
மொட்டைமாடியில் வைத்திருந்த சின்ன சின்ன செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு வந்தமர்ந்தவள் ஊருக்கு கிளம்புவோம் என்று ஆரம்பிக்க பதிலின்றி பாயில் சாய்ந்திருந்தான் அக்னிசெல்வன்.
“ரொம்ப நல்லவங்கன்னு மட்டும் சொல்லிடாத தாயே. கேட்டு கேட்டு சலிச்சு போச்சு. சட்டுன்னு எமோஷனல் ஆகிடற…” என்றவன்,
“நான் கோபக்காரன், முரடு தான். ஆனா பொண்டாட்டிட்ட அந்த கோபத்தை காமிச்சு என்ன புண்ணியம்? அப்புறம் பிரச்சனையே வராது போனா?…” என்று சிரிக்க,
“உங்களை. அவனவன் பிரச்சனை வந்துருமோன்னு கோபத்தை காமிக்காம இருந்தா நீங்க பிரச்சனை வரனும்னே காமிக்காம இருக்கேன்னு சொல்றீங்க. சரியான ஆள்…” என அவனின் நெஞ்சில் சலுகையாக சாய்ந்துகொண்டாள்.
“கீர்த்தி…” என்றவன் சட்டை பையில் இருந்து கயிற்றை எடுத்து நீட்ட,
“அதானே பார்த்தேன்…” என்றவள் சிரிப்புடன் வாங்கி அமர்ந்தவள் அவனின் கையில் கட்டிவிட்டு தனக்கும் கட்டிக்கொண்டாள்.
“இருட்டிருச்சு. கீழே போவோம். கொஞ்சம் நேரத்துல கொசு கடிக்க ஆரம்பிச்சிடும். நாளைக்கு ஊருக்கு கண்டிப்பா கிளம்பனும்…” என்று சொல்லிக்கொண்டிருக்க அவனோ வானத்தில் மின்ன ஆரம்பித்திருந்த நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருந்தான்.
“ம்ஹூம், இப்ப வரமாட்டீங்களே நீங்க…” என்று மீண்டும் அவனின் தோளில் சாய்ந்துகொண்டாள் கீர்த்தனா.
“இந்த வானம்…”
“நானே சொல்லிடறேன். பாப்பா பிறந்ததுல இருந்து இதே பிதற்றல். வானம் நான், நிலவு நீ. நட்சத்திரங்கள் எல்லாம் பாப்பாவும் அவளோட சிரிப்பு சிதறல்களும் இப்படி நித்தமும் ஒன்னு சொல்லிட்டே இருங்க…”
வானமென அவனின் நேசக்கரங்கள் பரந்து விரிந்திருக்க நிலவுப்பெண்ணின் பாதச்சுவட்டின் பின்னெடுத்து வந்த நட்சத்திரங்களின் ஒளிர்வாய் அவர்களின் வாழ்க்கை ஊர்வலம் ஒளிர்ந்து சுகம்பெற்றது.
கவிதை பேசிய வானத்தின் காதல் கனவுகள் நனவென கனிந்து முற்றுபெறாத சந்தோஷங்களின் சாம்ராஜியங்களென உருவெடுத்து என்றென்றும் வாழும்.