வெளியே மேளச்சத்தம் காதை பிளக்க அதற்கு மேல் பாட்டுச்சத்தம் வேறு மண்டபத்தை அதிர வைத்துக்கொண்டு இருந்தது.
வீட்டு மாப்பிள்ளையாய் மூத்த மாப்பிள்ளையாய் அனைவரையும் அதிகாரம் செய்ய முடியாமல் ஸ்ரீநிவாஸ் பம்பரமென சுழன்றுகொண்டு தான் இருந்தான். இதில் பெரும் சோதனையாக,
“என் நம்பிக்கையை காப்பாத்திரு ஸ்ரீநி…” என பார்க்கும் இடமெல்லாம் அடைக்கலம் வார்த்தைக்கு வார்த்தை சொல்லி அவனை கலவரமூட்டினார்.
“இவர் ரோதனை தாங்க முடியலையே” என உள்ளுக்குள் பொருமத்தான் முடிந்தது.
முன்பே இத்திருமண பேச்சில் தன்னை அதிகமாய் இழுத்துவிடுவது அடைக்கலம் என்கிற காண்டில் இருந்தவன் நகை எடுக்கும் சமயம் அவனை வைத்தே கீர்த்தனாவிற்கு பதினைந்து பவுன் நகையை அவனின் செலவில் வலுக்கட்டாயமாய் சாதுர்யமாய் பேசியே எடுக்க வைத்துவிட்டார்.
அதிலிருந்து அவரின் மீது கடுங்கோபம் தான் அவனுக்கு. பார்க்கும் பொழுதெல்லாம் அடுத்து என்ன சொல்வார் என்கிற பயம் வேறு.
“ஸ்ரீநிவாஸ்…” என பன்னீர்செல்வம் அழைக்க,
“ஸார்…” என சென்று நின்றான் அவன்.
“முறை சொல்லியே கூப்பிடுப்பா…” என அவர் சொல்ல அவனுக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா என்ன? சட்டென அழைக்க வந்தால் தானே?
“அது அது பன்றேன். பார்க்கறேன்…” என உளற,
“சரி சரி, அக்னி எங்க ரூம்ல இல்லை?…” என கேட்க,
“நான் பார்க்கலையே…” என்றவனுக்கும் தெரியாது எங்கே என,
“அப்படியே எங்கையாச்சும் ஓடிருப்பாரோ? ம்க்கும் எங்க ஓட? நான் ஓட வேண்டியது தான்?” என ராகாவை தேடியவன்,
“மாப்பிள்ளையை காணுமாம் ராகா. போச்சு இப்ப என்ன செய்ய?. உன் அப்பாவுக்கு தெரிஞ்சா பதறிடுவாரே…” என்றான் வேண்டுமென்றே. அவள் என்ன செய்கிறாள் என பார்க்க.
“அவ்வளவுக்கு ஸீன் இல்லை. அவர் கீர்த்திட்ட பேசிட்டு இருக்கார். உங்களை அடைக்கலம் மாமா தேடிட்டு இருந்தார். போய் பாருங்க…” என அவனின் பேச்சை பெரிதாய் எடுக்கவே இல்லை அவள்.
அவள் அவன் பேசியதை கண்டுகொள்ளாததை போல சொல்லி சென்றதை விட அடைக்கலம் தேடுகிறார் என்பது தான் தலைவலியாக போனது.
“நாலு நாளைக்கு எங்கையாச்சும் போய் ஒளிஞ்சுக்கனும்” என வெறிவெறியாய் வந்தது. கீர்த்தனாவின் அறையில் அவள் அமர்ந்திருக்க கதவருகே நின்றபடி அவளிடம் பேச வந்திருந்தான் அக்னி.
வந்ததுமே அடித்துபிடித்து அவள் எழுந்து நிற்க உடன் இருந்தவர்கள் வெளியேற கதவை பூட்ட போனவனை பார்த்தவள் முகம் அழுகைக்கு மாறுவதை போல தோன்ற திறந்து வைத்தே கதவருகே நின்றான்.
வந்து இரண்டு நிமிடங்கள் கூட முழுதாய் இருக்காது. கீர்த்தனாவின் படபடப்பு குறைய காத்திருந்தவன்,
“தண்ணி குடி கீர்த்தனா…” என சொல்லவும் வேகமாய் எடுத்து அவள் அருந்த அடுத்து அவளிடம் பேசுவதற்குள் அவனின் பின்னோடு சாதனாவும், சுபாவும் வந்துவிட்டார்கள்.
“இங்க என்ன பன்றீங்க?…” என சாதனா கேட்க,
“கிப்ட் குடுக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ளே நீங்க வந்துட்டீங்க…” என சொல்ல,
“குடுத்தாச்சா அக்னி?…” என சுபா கேட்க,
“இல்லையே, அதுக்குள்ளே நீங்க வந்துட்டீங்க?…” என சிரிப்புடன் சொல்லியவன் கீர்த்தனாவை பார்க்க அவள் திரும்பும் வழிதான் இல்லை. கண்ணாடி மேஜையை பிடித்தபடி நின்று இருந்தாள்.
“உன்னை அங்க மேடைக்கு தேடிட்டு இருக்காங்க அக்னி. நீ இங்க இருக்க. கிளம்புப்பா…” என சுபா சொல்லவும் தான் கிளம்பினான்.
நேராக தனக்கு கொடுக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தவன் சற்று நேரத்திற்கெல்லாம் அறையில் இருந்து வெளியேறி மேடைக்கு வந்துவிட்டான். சம்பிரதாயங்கள் துவங்கப்பட்டு மந்திரங்கள் சொல்லப்பட்டது.
“ஸ்ரீநிவாஸ்…” என மேடையில் இருந்த அக்னி குரலில் வேகமாய் ஒடி வந்தான்.
“சொல்லுங்க…” என கேட்க,
“சுரேன்கிட்ட ஒரு பாக்ஸ் குடுத்து வச்சிருந்தேன்…” என கேட்க,
“நானே வந்துட்டேன். என் கைல அதான் இருக்கு…” என வந்து நின்ற சுரேன் ஸ்ரீநிவாஸிடம்,
“போய் வந்தவங்களை கவனிங்க…” என அனுப்பிவிட்டு,
“என் மாமனார் வந்திருக்கார் அக்னி…” என்றான் சுரேன்.
அவன் காட்டிய பக்கம் பார்க்க முன் வரிசையில் யோகேஷ் குடும்பத்துடன் அமர்ந்திருந்தார்.
“ஓஹ்…” என சொல்லியவன் அவரை பார்த்து கையசைக்க அவரும் மரியாதை நிமித்தம் வணக்கம் வைத்தார்.
இருவருக்கும் முகூர்த்த உடைகள் வழங்கப்பட்டு மாற்றிக்கொண்டு வந்து முதலில் அக்னி அமர்ந்துவிட்டான்.
“இன்னுமா புடவை மாத்தறாங்க?” என கையில் கட்டியிருந்த வாட்சில் நேரத்தை பார்த்தான்.
அங்கே மணப்பெண் அறையில் கலங்கும் கண்களுடன் கனகாவிடம் பேசினாள் கீர்த்தனா.
“இந்த செயின் மட்டும் போட்டுக்கறேன்ம்மா. என் வாழ்க்கையில் நடக்கற ஒரு முக்கியமான நிகழ்வு. என் வீட்டு நகை தான் எனக்கு பெருசு. போட்டுக்கறேன். சரின்னு சொல்ல கூட யோசிக்கிற நீ. நாளைப்பின்ன மொத்தமா மறந்துடுவியா என்னை?…” என கேட்க,
“ஏன்டாம்மா இப்படிலாம் பேசற? இப்ப அவங்க நகையோட இதை போட்டா எதுவும் நினைச்சுக்க மாட்டாங்களா? அவங்களா இதையும் ரெண்டு எடுத்து போட்டுவிட்டா நமக்கு சந்தோஷமா இருக்கும். நாமளா எப்படி செய்யறது?….” என கேட்கும் பொழுதே தலையில் கை வைத்து சேரில் அமர்ந்துவிட்டாள் கீர்த்தனா.
“சொன்னேன்ல நான் முதல்லையே சொன்னேன்ல. பார்த்தியா அம்மா பேசறதை. இப்பவே அவங்க என்ன நினைப்பாங்கன்னு நினைச்சு கவலைப்பட ஆரம்பிச்சுட்டாங்க. என்னையும் உன்னை மாதிரியே மாத்தறாங்க…” என ராகாவை கட்டிக்கொண்டு சொல்ல,
“அழாத கீர்த்தி பாரு கண்ணு கலங்குது. மை கரைய போகுது. யாராச்சும் பார்த்தா இப்பதான் ஏதாச்சும் நினைப்பாங்க…” என ராகா எத்தனை சமாதானம் சொல்லியும் கீர்த்தனாவுக்கு ஏற்க முடியவில்லை.
பெற்றோர் தூரம் தள்ளி நிற்பதை போலவே தோன்றியது. சிறுபிள்ளை என அடம் பிடிக்க தோன்றியது. எனக்கு என் பெற்றோர் செய்வதற்கு கூட இன்னொருவரின் அனுமதி வேண்டுமா? என தோன்றியது.
திருமணம் வேண்டுமா என தோன்றிய நிமிடம், “உனக்கு நான் வேண்டாமா?” அக்னிசெல்வன் எதிரே நின்று கேட்பதை போலவே இருந்தது.
இந்த இரண்டுமாத இடைவெளியில் அதிகம் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவன் மீதான சிறு ஈர்ப்பு வருங்கால கணவன் என்னும் லேசான உரிமையில் விருப்பமான பிடித்தமென உருவெடுத்திருந்தது.
என்ன முடிவெடுப்பது என்று கூட தெரியாமல் தவித்து தான் அமர்ந்திருந்தாள். குழப்பங்கள் மேலெழும்பி ஒவ்வொன்றாய் வந்து நிற்க,
“கல்யாணம் அதுக்கு இந்த சின்ன நகையை போட அவங்களை கேட்கனும். என்னை பார்க்க வர, என் கூட பேச இப்படி இன்னும் எல்லாத்துக்கு இப்படித்தான இருப்பீங்க? என்னம்மா? ஏன்மா இப்படி இருக்கீங்க நீங்க? உரிமைன்னு ஒன்னு உங்களுக்கு வருதா இல்லையா?…”
“அப்படிலாம் இல்லைடா கீர்த்தி. இங்க பாரு, உன்னை விரும்பி கேட்டு இவ்வளவு சிறப்பா கல்யாணம் செய்யறாங்க. அவங்களுக்கு நாம மதிப்பு குடுக்கனும்ல…”
“அப்போ உங்களுக்கு மதிப்பு. எனக்கு மதிப்பு? என்னோட மதிப்பே நீங்க தானம்மா? நாம ஒன்னும் போடறோம்னு சொல்லி போட முடியாம இல்லை. நமக்கு இருக்கற நகையை போட்டு என்னை நீங்க சபைக்கு அனுப்பறது தான உங்களுக்கு மதிப்பு. அதுதான் எனக்கு விருப்பம். புரியுதா இல்லையா?…”
கீர்த்தனா கேட்கும் அனைத்தும் சரியாக இருந்தாலும் கனகாவால் அதற்கு சரி என சொல்லிவிட முடியுமா?
“என் வீட்டுல எனக்கு போட்டது எவ்வளவுன்றது முக்கியமில்லை. இதையும் நான் போடமாட்டேன்னு சொல்லலை. அதோட எனக்காக நீங்க இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு சேர்த்ததை குடுங்கன்னு சொல்றேன். உங்க உழைப்போட அருமை எனக்கு தான தெரியும். அதை சேர்க்க எத்தனை கஷ்டப்பட்டீங்கன்னு எனக்கு தான் தெரியும்…”
“கீர்த்தி, என்ன இது? இவ்வளவு எமோஷனல் ஆகற? இங்க குடுத்தா தானா? நீ உன் புகுந்த வீட்டுக்கு போறப்ப அதை கொண்டுட்டு தான் போக போற?…”
“அது ஏன்க்கா அப்படி யாருக்கு தெரியாம கொண்டு போக? இது என்னை பெத்தவங்க எனக்காக பார்த்து பார்த்து செஞ்சது. அது எனக்கான பெருமை. புரிஞ்சுக்கோக்கா. இப்பவே இப்படி…” என சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே சாதனா சுபாவுடன் உள்ளே வந்துவிட்டாள்.
“என்ன இன்னும் ரெடி ஆகலயா? பேசிட்டு இருக்கீங்க? செண்டிமெண்ட்ஸ் தானே?…” என கலகலத்தவள்,
“அதெல்லாம் பயப்படாம வா. உனக்கு துணைக்கு அங்க நான் இருக்கேன். உன் அக்கா ராகா மாதிரி…” என்றவள் கனகாவின் கையில் இருந்த நகை பெட்டியை பார்த்துவிட்டு,
“வாவ் இந்த டிஸைன் அழகா இருக்கே. என்னம்மா இதை போட்டு விட்டிருக்கலாம்ல…” என கேட்டவள்,
“சுபாம்மா இதை பாருங்களேன், இந்த டிஸைன் கீர்த்தி சேரிக்கு மேட்ச் ஆகும் தானே?…” என கழுத்தில் வைத்து சொல்ல சுபாவும் மருமகளை ஆமோதித்தார்.
“அது வந்தும்மா சம்பந்தியம்மா இந்த நகையை எல்லாம்…” என கனகா சொல்ல,
“அத்தை எதுவும் சொல்லமாட்டாங்க. சொல்ல போனா அவங்க பார்த்தாலும் இதை தான் சொல்லுவாங்க…” என சொல்லிக்கொண்டே கழுத்தை ஒட்டி இருந்த அட்டிகையை நன்றாக கீழே இறக்கியவள் பார்வையாய் இருந்த அந்த தங்க நெக்லஸை மாட்டிவிட்டவள் தள்ளி நின்று பார்த்து,
“கூல், செம்ம சூப்பர் போ. இப்பதான் ஃபுல் ஃபில் ஆகிருக்கு உன் மேக்ஓவர். இப்ப போகலாமா?…” என சாதனா கேட்க,
“தேங்க்ஸ் அக்கா…” என அவளை கட்டிக்கொண்டாள் கீர்த்தனா.
“இதுக்கெல்லாமா தேங்க்ஸ். இரு லைட்டா டச்அப் செஞ்சிருவோம்….” என சூழ்நிலையை இலகுவக்கினாள் அவள்.
“கீர்த்தி, எந்த சூழ்நிலையிலையும் அழ கூடாது. உடைய கூடாது. என் பொண்ணு எதையும் சமாளிக்கற பக்குவத்தோட இருக்கனும். எந்த நேரத்திலையும் நிதானம் தவறிடாம பொறுமையா இருக்கனும். எங்களோட உண்மையான பெருமை அதுல தான்ம்மா இருக்குது…” என கனகா சொல்லிவிட்டு அவளை ஆசிர்வாதம் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
“சீக்கிரம் பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ…” என்ற ஐயரின் குரலில் அடுத்த சில நொடிகளில் கீர்த்தனா சபைக்கு அழைத்து வரப்பட்டாள்.
இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையும் அணிகலன்களும் என பார்க்க கொள்ளை அழகு தான். முகம் மட்டும் லேசாய் கன்றி சிவந்து இருக்க கலங்கி இருந்தது கண்கள். பயமும் பதட்டமும் உட்சநிலையை எட்டி இருந்தது.
“சிரிச்ச முகமா வா கீர்த்தி. எல்லாரும் பார்க்கறாங்க. வீடியோ எடுக்கறாங்க…” என ராகா சொல்ல,
“ஹேய் மிரட்டாத ராகா. அவளே இவ்வளவு க்ரவுடா இருக்கேன்னு பதட்டத்துல இருக்கா. நீ வேற…” என சாதனா சொல்ல,
“அதுக்கில்லை…” என்ற ராகா,
“அம்மாவும் அப்பாவும் பார்க்கறாங்கடா…” என்றதும் பார்வை அவர்களிடத்தில் சென்றது கீர்த்தனாவிற்கு.
கனகாவின் சந்தோஷ முகமும், தங்கதுரையின் நெகிழ்ச்சியும் கீர்த்தனாவின் மனதிற்கு நிறைவை தர அவர்களை பார்த்து புன்னகைத்தவள் அதை அவனின் அருகே அமரும் வரை வாடவிடவில்லை.
அமரும் பொழுதே பெற்றோரை பற்றி நினைத்துக்கொண்டே அமர்ந்தவள் அக்னியை நெருக்கிக்கொண்டு அமர்ந்து பின் நகர்ந்து அமர்ந்தாள்.
“தாராளமா ஒட்டி உட்காரலாம். கைல கட்டினதை கழுத்துக்கு கட்ட போறேன்…” என மாலையை சரி செய்வதை போல அவளிடம் சொல்ல,
“நான் வேணும்னு உட்காரலை…” விளக்கம் போல சொல்ல,
“வேணும்னு கூட செய்யலாம்னு தான் சொல்றேன்…”
“எல்லாரும் பார்க்கறாங்க…”
“அதுக்குத்தான் வந்திருக்காங்க…”
“ப்ச், சும்மா இருங்க…” அவனை அடக்க பார்த்தாள்.
“எனக்கு ஏதோ பேர் வச்சிருக்கியாமே? தாலி வரதுக்குள்ள அந்த பேர் என்னன்னு சொல்லு…” என கேட்க அதுவரை குனிந்தபடி அவனிடம் முணுமுணுத்தவள் சட்டென திரும்பி அவனை பார்க்க,
“சொல்லு, என்ன பேர் அது?…” என்றான் மீண்டும்.
அவனின் கேள்வியில் இவனுக்கு எப்படி தெரியும் என்ற யோசனையுடன் திருதிருத்தவள்,
“அப்படிலாம் எதுவுமே இல்லையே…” என திணறலுடன் உடனே மறுக்க,
“இப்பவே நீ சொல்லிட்டா பெட்டர். இல்லைன்னா…”
“இல்லைன்னா?…”
“நானா அதை சொல்ல மாட்டேன்…” என சொல்ல “என்ன செய்வானோ?” என மிரட்சியுடன் மெதுவாய் கூட்டத்தையும் அவனையும் அடிக்கண்ணால் பார்த்தவள்,
“நிஜமா இல்ல…” என சொல்ல அவன் அதை கண்டுகொள்ளவே இல்லை.
அவனும் அவளுமாய் பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருக்க அதற்குள் ஆசிர்வாதத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாங்கல்யம் அவனின் கைவந்து சேர்ந்தது.
“கெட்டிமேளம் கெட்டிமேளம்…” என சொல்ல தாலியை வாங்கியவன்,
“என்ன பேர்…” என்றான் மீண்டும் இப்பொழுது நன்றாக குனிந்து,
“கோவப்பட கூடாது. அப்ப தான் சொல்லுவேன்…” என்றவள் அவன் லேசாய் புன்னகைக்கவும்,
“தீப்…தீப்பொறி திருமுகம்…” என சொல்லி படக்கென விழிகளை பூட்டிக்கொள்ள அவளின் செயலில் விளைந்த புன்னகையுடன் அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை சூட்டியவன்,
“கண்ணை திற கீர்த்தனா…” என்றான் மெதுவாய்.
விழி திறந்து பார்த்தவள் கழுத்தில் உறவாடிய மாங்கல்யத்தை குனிந்து பார்த்தவள் நெற்றி வகிட்டில் குங்குமத்தை சூட்டியவன்,
“இப்போ பயம் போய்டுச்சா?…” என கேட்டவன்,
“இங்க பாரு இந்த அக்னி சாட்சியா உன்னோட சரிபாதி மட்டுமில்லை நான். உனக்கு நான் வாக்கு தரேன். இனி எதுக்கும் மருகவோ, வருத்தப்படவோ, கவலைப்படவோ கூடாது. நான் இருக்கேன். எப்பவும் உன் கூட. புரியுதா?…” என கேட்க மெதுவாய் தலை அசைத்தவள்,
“அன்னைக்கு நீங்க சொன்னதால தான், வேணும்னு வைக்கலை…”
“அப்படியே வச்சுக்கோ. உனக்கு நான் தீப்பொறி தான்….” என்றவன் அதற்கடுத்த சடங்குகளிலும் அவளை சேர்த்து தன்னுடன் இயல்பாக உரையாட வைக்கவே பார்த்தான்.
“சுரேன்…”
“இதோ தரேன்…” என்றவன் ஒரு பெட்டியை நீட்ட அதில் இருந்து மோதிரத்தை எடுத்தவன்,
“கை நீட்டு கீர்த்தனா…” என சொல்லி அந்த மோதிரத்தை அவளுக்கு அணிவித்தான்.
பெற்றோர்களும் வந்திருந்தவர்களும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். ஷானா கூட தன் அக்காவிடம் கேட்டுவிட்டாள்.
“அக்னி மாமா முகத்துல இவ்வளோ எக்ஸ்ப்ரஷன்ஸ் இருக்குமா? மனுஷன் சிரிச்ச முகமா இருக்காரு…” என சொல்லி கேலி செய்தாள்.
விருந்து அமர்க்களப்பட்டது. ஊரே கொண்டாடிய திருமணம் போல தொழிற்சாலை தொழிலாளர்கள் பணியாளர்கள் என அனைவருமே சேர்ந்து அமர்க்களப்படுத்தினார்கள்.
மதிய உணவு முடிந்து நேராக பெண் வீட்டுக்கு கிளம்ப முதலில் பெண் மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு ஒரு காரில் அடைக்கலமும், சுபாவும் சாதனா சுரேனுடன் செல்ல உடன் ராகவும்.
பின்னாலே இன்னொரு பன்னீர்செல்வம், சந்திரிகா, தங்கதுரை கனகா வந்துவிட்டார்கள் ஸ்ரீநிவாஸுடன்.
கீழே வைத்து ஆரத்தி எடுப்பதாக இருக்க சுபா மாடியில் வைத்து எடுக்க சொல்லி சொல்ல மாடி வாசலில் வைத்து ஆரத்தி எடுக்கப்பட்டது. வீட்டிற்குள் செல்பவர்களை கீழே இருந்தே பார்த்தபடி இருந்த ஸ்ரீநிவாஸின் முகத்தை பார்த்த அடைக்கலம்,
“என்ன கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது?…” என டயலாக் விட,
“ஸார்…” என திரும்பி பார்த்தான் ஸ்ரீநிவாஸ்.
“உன்னோட கண்ணீர் சொல்லுது இந்த கல்யாணத்தை நடத்த நீ பட்ட கஷ்டத்தை. ஆனந்த கண்ணீர் எப்படி கொட்டுது பாரு. உன்னை பத்தி பெருமையா நினைக்கறேன் நான்…” என அவனின் கண்களில் இருந்த நீரை சுண்டிவிட்டவர்,
“என் நம்பிக்கையை நீ இனிமே தான் காப்பாத்தனும் ஸ்ரீநிவாஸ். இதுவரைக்கும் செஞ்சது பெருசு இல்லை. இனி தான் நீ செய்யனும்…” என அவனின் தோள்களை ஒரு பிடி அழுத்தி பிடித்து விட்டவர்,
“அழாம கண்ணை துடைச்சுட்டு மேல வா. டீயும் மிக்ஸரும் சாப்பிடலாம்…” என அவனின் கன்னத்தை தட்டிவிட்டு மாடி ஏற,
“கிழவா கையை கையோட கழட்டிட்டியே…” என தோளை தடவிக்கொண்டவன்,
“ஏன்யா எனக்கு கண்ணீரு வராது. இந்த வீட்டு மேல நான் வச்சிருந்த கனவு மொத்தத்தையும் அந்த அக்னி எரிச்சுட்டானே. கண்ணுல கண்ணீர் வராம கங்கையா ஓடும்” என வாய்விட்டே சொல்லி புலம்பிக்கொண்டே மாடிக்கு சென்றான்.
வீடு வீடாக இல்லாமல் அத்தனை அழகாய் மாறி இருந்தது. அதிலும் மேல் மாடி அதை விட கண்ணை கவர்வதாய். வயிறு எரிந்தது ஸ்ரீநிவாஸ்க்கு.
“இங்க பாரு ராகா, சுளையா பதினைஞ்சு பவுனுக்கு ஆப்படிச்சுட்டாங்க. சும்மா தூக்கி குடுத்திருக்கேன். இப்ப உன் தங்கச்சியும் வெல் செடில்ட் ஆக போறா. அவங்க வசதிக்கு இந்த வீடெல்லாம் ஒரு விஷயமில்லை. அதனால இந்த வீட்டை நமக்கு எழுதி தர சொல்லிரு…” என கட் அன்ட் ரைட்டாக சொல்ல ராகாவிற்கு அதிர்ச்சி.
“என்ன விளையாடறீங்களா? அதெல்லாம் முடியாது. கடைசி காலத்துல எங்க போவாங்க அப்பா? ஏற்கனவே பொள்ளாச்சி வீடு கடன்ல இருக்குது. இதையும் நமக்கு குடுத்துட்டு எங்க போவாங்க? எங்க இருப்பாங்க?…” என ராகா துடித்து போய் அவனிடம் வாதிட,
“அதை பத்தி எனக்கென்ன? சம்பாதிக்கார் தானே? இந்த வீடு எனக்கு வேணும். அவ்வளோ தான்…” என ஸ்ரீநிவாஸ் சொல்லிய மறுநாள் மூக்கு வேர்த்ததை போல வந்து நின்றான் அக்னி.
“ஸ்ரீநிவாஸ் வீட்டை ஆல்ட்டர் பண்ணனும். மேல மாடி எடுக்கனும். நீங்க தான் கவனிக்கனும்…”” என வந்து சொல்ல அவனின் தலையில் இடி இறங்கி மயங்காதது தான் குறை.
“உன்னை எல்லாம் எவன்டா எனக்கு முதலாளியா வர சொன்னா?…” என கதறாத குறை தான்.