இன்னும் குரு தன்னோடே ஒட்டிக் கொண்டிருப்பதுபோல் இருக்க, தன்யாவிடம் பதிலளிக்க திண்டாடினாள் ஷிவன்யா. பிரச்சனையென்றதும் அவன் கொடுத்த முத்தம் உதட்டை குருகுருக்க செய்ய மொத்தமாய் சிவந்தவள்.. தன்யாவின் முறைப்பில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து.. “இல்ல, பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்ல.” என்றாள் சன்னக்குரலில்.
“நான் எவ்வளோ டென்ஷன்ல கேட்டுட்டு இருக்கேன், நீ என்னவோ கூலா பதில் சொல்ற.? உன்னை கைப்பிடிச்சி இழுத்துட்டு போனதை யாராவது பார்த்தாங்களா? அக்கா மாமியார்லாம் இங்கதான் இருக்காங்க.” என கண்கலங்கினாள்.
தன்யாவின் கலக்கத்தில் குருவின் மாயையிலிருந்து வெளிவந்தவள்.. “யாரும் பார்க்கல தனு.. அவர் பிரச்சனை பண்ண வரல. அம்மாவை பார்க்க வந்திருக்கார். அம்மா காணோம்னதும் நம்மகிட்ட வந்துட்டார். கல்யாணத்துல நவீனால எதாவது பிரச்சனை வந்தா தயங்காம கால் பண்ணுனு சொல்லிட்டு போக வந்தாராம்.” என்றாள்.
“இதையா இருபது நிமிஷமா சொல்லிட்டிருந்தார்?” என புருவம் சுருக்க.. “ப்ச்.. அவர் பேசினதெல்லாம் சொன்னா உன் தூக்கம் கெட்டுடும்னு ஷார்ட்டா சொன்னேன், இப்போவே ரொம்ப லேட்டாகிடுச்சி, நாளை காலைல சீக்கிரம் எழனும்ல? தூங்கு.. மத்தது விபரமா கல்யாணம் முடிஞ்சி ஃப்ரீயாகிட்டு பேசிக்கலாம்.” என்றாள் அக்கறையாக.
அன்று உதவி செய்ய வந்த குருவை கண்ணீரோடு புறக்கணித்தவளுக்கு, இன்று அவர் இழுத்த இழுப்பிற்கு சென்று வந்ததோடில்லாமல், முகத்திலும் கோபமில்லையே என யோசிக்க, அதற்குள் அபிநாதனிடமிருந்து குறுஞ்செய்தி வரவும், ஷிவன்யா மீதான பதட்டம் மறந்து இன்முகத்தோடு தன்னவனிடம் பேசலானாள்.
அடுத்தநாள் காலை தன்யாவை அலங்கரிக்க வந்த பெண்களிடம் ஷிவன்யாவையும் அலங்கரித்துக்கொள்ள ப்ரக்யா பணிக்க, நேற்றிரவுபோல் அல்லாமல், தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.
மணப்பெண் போலில்லாமல் லேசான ஒப்பனைக்கே ஷிவன்யாவின் முகம் ஜொலித்ததில் பெருத்த நிம்மதி கொண்டார் லதா. தன்யா அபிநாதன் திருமணம் இனிதே நடைபெற்றுக்கொண்டிருக்க மலர்ந்த முகத்தோடு பங்குபெற்றாள் ஷிவன்யா.
“தன்யா கல்யாணமாகி போற டென்ஷனை விட உன் கவலைதான் அம்மாக்கு அதிகம்.. உன்னை வேணாம்னு சொன்னவனை எதுக்கு நினைச்சிட்டிருக்க?
இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தா பார்க்கிறவங்க இன்னும்தான் தப்பா பேசுவாங்க, கல்யாணத்துலயாவது இயல்பா இருன்னு நேத்து சொன்னேன்ம்மா, ஆனாலும் நேத்தெல்லாம் டல்லாதான் இருந்தா, இன்னைக்குத்தான் பழைய ஷிவன்யாவா மாறியிருக்கா.” என்றாள் சந்தோசத்தோடு.
அன்றெல்லாம் மனமகளின் முகமலர்ச்சிக்கு போட்டிபோட்டது ஷிவன்யாவின் முகம். திருமண வைபவத்தில் மகனுக்கு மருமகள் தேடும் அன்னையர்களை கொள்ளை கொண்டாள் ஷிவன்யா. நாலைந்து பேர்வரை லதாவிடம்.. அடுத்த வாரத்தில் வீட்டிற்கு வருவதாக சொல்லிச் சென்றனர்.
இப்படியாக இனிதே திருமணம் முடிவடைய.. புதுமணத் தம்பதிகளோடு லதா வீடு வர மதியம் ஆனது. வீட்டிற்கு வந்ததும் உடைகளைந்து மாற்றுடை அணிந்து, மதிய உணவு செய்ய ஷிவன்யா ஆயத்தமாக.. “ரெஸ்ட் எடு ஷிவா.. எல்லாரும் டையர்டா இருப்போம்னு மதிய சாப்பாட்டுக்கு கடையில சொல்லிட்டேன்.” என்றார் லதா.
ப்ரக்யா, தன்யா அவரவர் கணவனோடு அறையிலிருக்க, தனதறைக்கு வந்தவளுக்கு தன்போல் குருவின் நியாபகம் வர.. இவனால எவ்வளோ அவஸ்த்தை பட்டோம்? எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி அவனோடு இழைந்தேன்? என நினைக்க அடி வெக்கங்கெட்டவளே என திட்டத்தான் தோணியது.
ம்ஹும்.. நாம இடம் கொடுக்கவும்தான் அந்தளவுக்கு உரிமை எடுத்துக்கிட்டான் என்ற உண்மையும் புரிய.. ஏன் என்னை பிடிக்கல என உரிமையாய் கேட்டதை நினைத்தவள்.. எவ்வளோ உரிமை? எத்தனை தைரியம்? என சிறு கோபத்தோடு நினைத்தாலும் நேற்றிரவிலிருந்து மனம் அத்தனை நிம்மதி கொண்டது.. உங்கூர்ல இப்படித்தான் ப்ரப்போஸ் பண்ணுவிங்களா? என நினைக்க மொத்தமாய் சிவந்தாள்.
இப்படியாக நேற்றிரவெல்லாம் பல முறை அவனை நினைத்து சிவந்ததுதான் மிச்சம்.. சுத்தமாய் தூங்கவில்லையாதலால் தற்போது தூக்கம் கண்களை சுழற்ற கண்மூடியதும் தூங்கியிருந்தாள்.
மாலை ஐந்து மணிபோல் லதா எழுப்ப, “ம்மா.. இன்னும் கொஞ்ச நேரம்.” என சிறு பிள்ளைபோல் சிணுங்கி கண்மூட.. “அடி எழுந்துருடி, தனுவை அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போக வந்திருக்காங்க.” என அதட்ட, முயன்று கண்விழித்தாள்.
“ப்ச் தனு.. நிரஞ்சனை அப்படி கண்ணோட்டத்துல என்னால எப்பவும் பார்க்க முடியாது. இப்போ உளறுனதை போல எதையாவது உளறி வச்சிடாத, உன் மாமியார்வேற நேத்தெல்லாம் என்னையேதான் பார்த்துட்டிருந்தாங்க. அப்புறம் ப்ரக்யாக்கா மாமியார் மாதிரி இவங்களும் ஆரம்பிச்சிடுவாங்க.” என அதட்டினாள் கண்டிப்போடு.
“ம்மா.. அபி வெய்ட் பண்ணிட்டிருக்கார்.” என ப்ரக்யா உள்ளே வர.. பிறகு தன்யாவிற்கு அறிவுரை கூறி வழியனுப்பினர். ப்ரக்யா இரண்டு நாள் கழித்து வருவதாக சொல்ல, வெங்கடேஷ் குடும்பமும் கிளம்பினார்கள்.
எத்தனை இயல்பாய் காட்டிக்கொண்டாலும் மகளைப் பிரியும் துயரம் லதா முகத்தில் அப்பட்டமாய் தெரிய.. தான் திருமணமாகி போனபோதும் இப்படித்தானே இருந்திருப்பார்கள்? இப்போ தனு.. நாளை ஷிவன்யாவிற்கும் திருமணமாகிவிட்டால் அன்னை எப்படி தனித்திருப்பார்.?
தன் மாமனார் மாமியாரும் நிச்சயம் அன்னையோடு இருக்க அனுமதிக்கமாட்டார்கள். தன்யா புகுந்த வீட்டிலும் பெண்கள் இல்லை, அவளின் மாமியாருக்கு துணையாக அவளும் அங்குதான் இருந்தாக வேண்டும்.
இனி ஷிவன்யாவிற்கு எப்படி வாய்க்கப்போகுதோ? இவ்வளோ பெரிய வீட்டுல தனியா எப்படி இருப்பாங்க? திடீரென உடலுக்கு எதாவதென்றால் ஆபத்திற்கு அருகிலிருக்க கூட ஆளில்லையே? இதற்குத்தான் ஒரு ஆண்மகன் வேண்டுமென நினைக்கிறார்களா என பலதும் நினைக்க ப்ரக்யாவிற்கு கண்ணீர் பெருகியது.
“அதில்ல ஷிவா.” என தன் கவலையை தெரிவிக்க.. ஷிவன்யா.. “என் அம்மாவை அவங்கம்மாபோல நினைக்கிறவங்களைத்தான் நான் கல்யாணம் செய்துப்பேன். அம்மாப் பத்தின கவலையை விடு.” என்றாள் நம்பிக்கையோடு.
“உன் மாமாவும் அப்படித்தான் நினைக்கிறார், வெறும் நினைப்பு போதுமா? என் மாமியாரை வச்சிக்கிட்டு சின்ன உதவி கூட செய்ய முடியறதில்ல.. தொல்லை தராம இருந்தா போதும்னு நினைக்க வைச்சிடறாங்க.. எல்லாம் சொல்றதுக்கு நல்லாயிருக்கும். ஆனா நடக்குமா?” என்றாள் வருத்தத்தோடு.
அச்சோ இவளுக்கு எப்படி புரிய வைப்பேன் என நினைத்தவள்.. “சரி சரி.. உன் குழந்தை வந்த பின்ன அவனை அம்மாக்கு கொடுத்துடு, உன் மாமியார் அவங்க மகனைத்தான கண்ட்ரோல் பண்ண முடியும்? உன் மகன்கிட்ட உனக்குத்தான முதல் உரிமை.?” என்றாள் இலகுவாக.
“ப்ச்.. உனக்கு எல்லாமே விளையாட்டுத்தான்.” என முறைத்தாள் ப்ரக்யா.
“அக்கா.. இந்த நேரத்துல ரொம்ப கவலை கூடாது, அது குழந்தையோட ஆரோக்யத்தை பாதிக்கும்.” என தேற்ற அப்பொழுதும் ப்ரக்யா முகம் கவலையிலேயே இருக்க..
“சரி உன் பேச்சுக்கே வரேன்.. என்னை கட்டிக்கிறவன் அம்மாவ பார்க்கலனா என்ன? என் அம்மாவை நான் பார்த்துப்பேன். இப்போ சொன்னா நீ நம்ப மாட்ட, எல்லாம் நடக்கும்போது நம்புவ.” என்றாள் நம்பிக்கையோடு.