ஷிவன்யா இந்தளவிற்கு இயல்பானதே லதாவிற்கு பெருத்த சந்தோசமானது. நேற்று திருமணத்தில் நான்கைந்து பேர் ஷிவன்யாவை கேட்க, அதில் இரண்டு இடம் நல்ல இடம்.. வரண்களும் நல்ல வேலையில் இருந்தனர். திருமணம் பொறுத்தவரை கைகூடும்போதே முடித்திட வேண்டும். இல்லை தள்ளி போய்டும் என்ற கவலை ஆட்கொள்ள..
இவளிற்கும் ஒரு திருமணத்தை நடத்திவிட்டால் தன் கடமையணைத்தும் முடிந்திடும் என ஆசைகொண்டது மனம். ஆனாலும் தற்போதுதான் மீண்டு வருகிறாள், இந்த நேரம் திருமணம் குறித்து பேசவேண்டாம், இரண்டு மூன்று மாதங்கள் போகட்டும் சமயம் பார்த்து பேசலாம் என நினைத்துக்கொண்டார்.
மறுவீட்டு அழைப்பிலிருந்து சீர் கொடுப்பதென அனைத்தும் முடிந்திட, ப்ரக்யாவும் தன் கணவன் வீட்டிற்கு கிளம்பினாள். வீடே கலையிழந்து காணப்பட, குருவின் நியாபகம் வழக்கத்தைவிட அதிகமாக இம்சித்தது.
அர்த்த ராத்திரில வந்து அத்தனை அடாவடி செய்துட்டு, அதுக்கப்புறம் ஒரு போனாவது செய்தானா? மெஸேஜ் கூட இல்லையென ஏக கடுப்பிலிருந்தாள் ஷிவன்யா.
அடுத்த நாள் காலை.. “கடை போட்டு ஒரு மாசம் பக்கம் ஆகிடுச்சிம்மா, இன்னைலயிருந்து போடலாம்.” என்றாள் ஷிவன்யா.
“இனி ஹோட்டலுக்கு மட்டும் சமைச்சிக்கலாம் ஷிவா.. கார்மண்ட்ஸ், ஸ்கூல்க்கெல்லாம் வேணாம்.” என்றார்.
“செய்யிறது செய்யிறோம்.. சேர்த்தே செய்திடலாம்மா, கல்யாணம் முடிஞ்சி ஒரு வாரம் ஆகிடுச்சி, இனியாவது சாப்பாடு வருமானு நேத்தே கார்மண்ட்ஸ்லயிருந்து கால் பண்ணினாங்க, நாளைலயிருந்து செய்யிறோம்னு சொல்லிட்டேன்.
ஸ்கூலுக்கு சாப்பாடு கொடுக்க எத்தனை பேர் போட்டி போடுறாங்கனு உனக்கே தெரியும். ஒருமுறை முடியாதுனு சொல்லிட்டா திரும்ப வாய்ப்பு கிடைக்காதும்மா.. நான்தானே செய்யிறேன்.” என்றாள் கெஞ்சலாக.
லதா அமைதியாகவே இருக்க.. “நான் படிச்சதே சமையலுக்குத்தான். படிக்க வச்சிட்டு தொழில் செய்ய வேணாம்னா எப்படி?” என்றாள் பொய் முறைப்போடு.
“அதுக்கில்ல ஷிவா.. ஹோட்டலுக்கு மட்டும்னா யாரும் எந்த பிரச்சனையும் செய்ய முடியாது, கொடுத்தனுப்பவும்தான சுதர்சனம் மாதிரி ஆளுங்க பிரச்சனை பண்றாங்க? திரும்பவும் எதாவது பிரச்சனைனா மருமகனுங்க்கிட்ட போய் நிக்கனும். நாம சம்பாதிக்கிறதுக்கு அவங்களை சங்கடப்படுத்துறதானு இருக்கு.” என்றார் கவலையாக.
மகளுக்கு குருவென்றால் ஆகாது என்பதால் ஷிவன்யா கோபம் உண்மை என நினைத்து.. “எனக்கொன்னுனா நான் சொல்லாமலே குருதம்பி ஓடோடி வந்திடும்.” என பெருமையாக சொல்லி, “ஆனாலும் யாருக்கும் தொல்லை கொடுக்க வேணாமேனு பார்க்கிறேன்.” என்றார்.
“உடம்பு முடியலனா கூட வடிச்சிகொட்ட போவிங்கள்ல? அதுக்காவது செய்யட்டும்.” என்றாள் குரு போன் செய்யாத கோபத்தில்.
“ஷிவா.. செய்ததை சொல்லிகாட்டுறதுக்கு செய்யாமலே இருக்கலாம். இனி இப்படி சொல்லாத.” என கண்டித்து.. “அதோட நானொன்னும் சும்மா ஆக்கி போடல, சம்பளம் வாங்கிட்டுதான் செய்தேன்.” என்றார் கோபமாக.
“ப்பா.. அவங்களைப் பத்தி ஒத்த வார்த்தை சொல்லிடக்கூடாதே..” என பெருமையாய் நொடிக்க.. இதையும் கோபமென்றே நினைத்த லதா.. “இப்போ உனக்கென்ன? சோறாக்கனும்.. அவ்வளோதான? ஆக்கிக்கோ.. அதுக்கெதுக்கு தேவையில்லாம குருவை இழுக்குற?
அந்த புஷ்பாவும் நவீனும் பண்றதுக்கு குரு என்ன பண்ணுவார்? எனக்கென்னாச்சோனு உதவிக்கு வந்தவரையும் துரத்திவிட்டோம். ஆனாலும் மனசு கேட்காம நமக்காக வீட்டை விட்டு வெளில வந்து கஷ்டப்பட்டிருக்கு.. பாராட்டலனாலும் பரவால்ல, இனி குருவை திட்டாத.” என கண்டித்தார்.
“ம்..” என மெச்சுதலான பார்வை பார்த்து தன் பணியை செய்ய ஆயத்தமானாள் ஷிவன்யா.
ஒரு மாதம் கழித்து ஊருக்கு வந்த குரு, இன்னும் இரண்டு நாளில் கிளம்ப வேண்டுமாதலால் குளித்ததும் தந்தைக்கு அழைத்தான். ஒரு மாதத்திற்கு பிறகு மகனிடமிருந்து அழைப்பு ஆதலால் உயிரை தேக்கி அழைத்தார் சேதுராமன்.
தந்தையின் குரலே அவரின் ஏக்கத்தை வெளிப்படுத்த.. “அப்பா.. நான் இங்கதான் இருக்கேன்.. நல்லாயிருக்கிங்களாப்பா?” என்றான் கனிவாக.
“நான் வரேன் குரு.” என இணைப்பை துண்டித்து கிளம்பினார் மகனைப் பார்க்க.
பத்து நாட்களுக்கு முன்பு ஷிவன்யாவிற்கு அழைத்தான்.. அவள் அழைப்பை ஏற்காததால் கோபத்திலிருக்கிறாள் என மீண்டும் முயற்சிக்கவில்லை. அதன்பிறகு இன்றைய பயணத்தின்போதும் அழைத்தான், தற்போதும் ஷிவன்யா ஏற்கவில்லையாதலால் இவளை எப்படி சந்திப்பது என்ற யோசனையிலிருந்தான்.
குரு வீட்டிற்கு வந்தால் கோபம் வேண்டாம் என சமாதனப்படுத்தி சேதண்ணாவோடு சேர்த்திட முயற்சிக்கவேண்டும் என்ற எண்ணத்திலிருந்த லதா.. குரு வந்தால் தனக்கு தகவல் சொல்ல கல்யாணியிடம் பணித்திருக்க, குரு வந்ததை கண்டுகொண்ட கல்யாணி லதாவிற்கு தகவல் கொடுக்கவும், மகளுக்கு தெரியாமல் குருவிற்கு அழைத்தார் லதா.
முன்பானால் இயல்பாய், உரிமையாய் பேசுவான். தற்போது குற்றவுணர்விருக்க.. “லதாம்மா..” என்றான் தடுமாற்றத்தோடு.
“இங்கதான் இருக்கிங்களா தம்பி? எப்போ வந்திங்க? நல்லாயிருக்கிங்களா? சாப்பிட்டிங்களா?” என அதீத அக்கறையோடு விசாரிக்க.. அவரன்பில் தடுமாற்றம் மறைந்து உரிமை வந்திட.. “இப்போ இவ்வளோ கேக்குறிங்க.. தன்யா கல்யாணத்துக்கு என்னை கூப்பிடல” என்றான் வருத்தமாக.
“தம்பி..” என ஒரு கணம் தடுமாறியவர், “சும்மாவே உங்க சித்தி பிரச்சனை பண்ணும், நவீன் செய்த பிரச்சனைக்கப்புறம் நீங்க கல்யாணத்துக்கு வந்தா தேவையில்லாத பிரச்சனை கிளம்பும். அதோட ஷிவன்யாவும் உங்களை கண்டாலே கோபப்படுவா.
“சரி விடுங்க.” என்க.. “ம்மா யார்கிட்ட பேசிட்டிருக்க?” என்ற ஷிவன்யாவின் குரல் கோபத்தோடு வெளிவர.. இன்னும் சற்று நேரத்தில் தந்தையும் வந்திடுவார் என்பதால்.. “உங்களுக்கு இது சமையல் டைம்ல லதாம்மா? ஷிவாக்கு ஹெல்ப் பண்ணுங்க, நான் அப்புறம் பேசுறேன்.” என இணைப்பை துண்டித்தான்.
சற்று நேரத்தில் சேதுராம் வந்திட, தந்தையைப் பார்த்ததும் அதிர்ந்துதான் போனான்.
“அப்பா.. என்னயிது? இவ்வளோ இளைச்சிட்டிங்க? டாக்டர்கிட்ட போனிங்களா? சுகர் செக் பண்ணுனிங்களா?” என கேள்விகளை அடுக்க.. “பெத்த பையனை பக்கத்துல வச்சிக்க முடியாதவனுக்கு எந்த டாக்டர்கிட்டயும் மருந்திருக்காது குரு.” என்றார் வேதனையாக.
“என்னை விடு குரு.. நீ எங்க வேலைக்கு போற? நவீனுக்காக உன்னை எதுக்கு வருத்திக்கிற?” என்றார் கவலையாக.
“என ஃப்ரண்ட் தாமஸ்கிட்டதான்ப்பா வேலைக்கு போனேன். சம்பளத்துக்கு போகல, ப்ராஜக்ட்ல பர்சன்ட்டேஜ் கொடுத்தான். இனியும் அப்படித்தான்.. அதனால இன்னொருத்தனுக்கு கீழ வேலைசெய்யிறேனு கவலைப்படாதிங்க, அங்க நான் பார்ட்ன்ர் மாதிரி.” என தந்தையின் மன நிம்மதியை எண்ணி உண்மையை விளக்கினான்.
சேதுராமன்.. “இனியும் அப்படித்தான்னா? இனி மாலுக்கே வரமாட்டியா?” என்றார் கவலையோடு.
“நவீன் பேசின பேச்சுக்கும், இப்பவரைக்கும் பேசினது தப்புன்னே உணராம இருக்கிறதுக்கும் அங்க இருந்தேன்னா பெரிய பிரச்சனையாகும். உங்களாலயும் அவனை எதுவும் கேட்க முடியல.. இப்போதைக்கு நான் விலகியிருக்கிறதுதான்ப்பா பரவால்ல.” என்றான் இறுகிய முகத்தோடு.
சேதுராமன் முகம் தாள முடியாத வேதனை கொள்ள.. “முக்கியமா உங்களுக்கு மன உளைச்சல் கூடாதுனுதான் நான் வெளில வந்துட்டேன். “ என கனிவோடு சொல்லி.. “மால் மால்னு அலைஞ்சானில்ல? பார்க்கட்டும்.. அவன் விருப்பப்படி விட்டாலாவது திருந்துறானா பார்க்கலாம்.” என்றான் கோபம் குறைத்து.
வஞ்சகம் வைக்காமல் நவீன் திருந்த வாய்ப்பளிக்கும் மகனை சேதுராமன் பெருமையாய் பார்க்க.. தந்தையின் பார்வை புரிந்து.. “அவன் நடத்தை நம்ம குடும்பத்தை பாதிச்சா பரவால்ல..
லதாம்மா பொண்ணை அசிங்கப்படுத்த அவனுக்கென்ன உரிமையிருக்குன்றதை நினைக்க நினைக்கத்தான் இன்னும் கடுப்பாகுது. அதனாலதான் விலகியிருக்கேனே தவிர, மத்தபடி அவன்மேல எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லப்பா..” என்றான்.
எப்படியாவது மகனை தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டுமென நினைத்து வந்த சேதுராமனிற்கு, நவீனை கண்டிக்கும் திறமை தன்னிடமில்லை என்பதோடு தான் சொன்னாலும் கேட்கமாட்டான் என்ற உண்மையும் சேர்ந்துகொள்ள, குருவிடம் தன் விருப்பம் சொல்ல தயங்கி அமைதியானார்.
ஆர்டர் செய்த உணவு வந்திட.. “சாப்பிட்டிங்களாப்பா?” என கேட்டபடி கை, தட்டு கழுவி வந்தவன்.. இரண்டாய் பகிர்ந்து.. “சாப்பிடுங்கப்பா.” என்க.. மறுக்காமல் சேதுராமன் சாப்பிட தானும் சாப்பிட்டான்.