முன்பு போலல்லாமல், இம்முறை நவீன் செயலையும், அதற்கு லதாவின் பதிலையும் உடனடியாக குருவிற்கு தெரிவித்தார் சேதுராமன்.
“சரிப்பா.. நான் பார்த்துக்கிறேன்.” என இணைப்பை துண்டித்தவன், ஷிவன்யாவிற்கு அழைத்தான். லதா அருகிலிருக்கவும் அழைப்பை ஏற்கவில்லை ஷிவன்யா. உடனே லதாவிற்கு அழைத்தான்.
லதாவின் மொபைல் சமையலறையில் இருப்பதால் அவரும் ஏற்காமல் போகவே, கோபத்தில்தான் ஏற்காமலிருக்கிறார்கள் என நினைத்து, அவன் சொன்னா எதுக்கு அழனும்? கோபப்படனும்? ஆமான்டா நான் குருவை விரும்பறேன், உங்கண்ணனும் என்னை விரும்பறார், உன்னால ஆனதை பார்த்துக்கோனு நிமிர்வோட சொல்ல வேண்டியதுதான? என ஷிவன்யா மீதுதான் கோபம் வந்தது.
இனி போனில் அழைத்து லாபமில்லையென நேரில் செல்ல முடிவெடுத்து, நண்பனுக்கு அழைத்து.. “ஊருக்கு போகனும், இரண்டு நாள்ல வந்துடறேன்.” என்றான்.
“குரு.. நாளைக்கு சைட்ல நீ இருந்தே ஆகனும்டா, நாளைக்குத்தான் தியேட்டர்ல ஸ்க்ரீன் மெஸர் பண்ணப்போறாங்க.”
“ஒரு கிரிட்டிக்கலான சுட்டிவேஷன் தாமஸ், நான் போயே ஆகனும், முடிஞ்சா போன உடனேகூட வந்துடறேன். நீ கொஞ்சம் பாரு.” என முடிவாய் சொல்லி கிளம்பினான்.
** ** **
யாருக்கு கட்டிகொடுத்தாலும் அந்த வீட்டுக்கு என் பொண்ணை கொடுக்கமாட்டேன் என சொல்லிவிட்டு, விரும்புபவன் யாரென கேட்டால் எப்படி சொல்வேன்? என லதாவிற்கு பதிலளிக்க முடியாமல் ஷிவன்யா திணறிக்கொண்டிருக்க, “ம்மா..” என தன்யா அழைத்தாள்.
“தன்யா ஊருக்கு கிளம்புவா, வெளில வா.” என லதா வெளியே வர.. “நாங்க கிளம்புறோம்ங்கத்தை.” என்றான் அபிநாதன்.
“மாப்பிள்ளை.. ஷிவன்யா யாரை விரும்பினானு விசாரிச்சி அந்த பையனுக்கே கல்யாணம் செய்துடலாம்னு நினைக்கிறேன், முடிஞ்சவரை சீக்கிரம் செய்துடலாம்னு இருக்கேன், அதனால..” என லதா தடுமாற..
“நான் கேட்டதே வீட்டுல யாருக்கும் தெரியாதுங்கத்தை, வேணாம்னு சொன்னதுக்கப்புறம் வற்புறுத்தக்கூடாது, இனி ஷிவன்யா பேச்சு வேணாம்னு நிரஞ்சனும் அப்பவே சொல்லிட்டான்.
ஆனாலும் ஆசைப்பட்டுடானேனு எனக்குத்தான் மனசு கேக்காம ஒருமுறை கேட்டுப்பார்க்கலாம்னு கேட்டேன், நான் கேட்டதை நினைச்சி வருந்திட்டிருக்காதிங்க, ஷிவன்யாக்கு உங்க விருப்பப்படியே செய்யிங்க.” என முழுமனதோடு சொல்லி,
“திரும்ப எதாவது பிரச்சனை செய்தான்னா கால் பண்ணுங்க, தயவுதாட்சண்யமே பார்க்காம கம்ப்ளைன் கொடுத்து ஜென்மத்துக்கும் இந்த வீட்டு பக்கம் வராதமாதிரி செய்துடலாம்.. ஷிவன்யாவை தைரியமா இருக்க சொல்லுங்க.” என தேற்றி கிளம்பினார்கள்.
மகளுக்கு டீ வைக்க சமையலறை சென்றவர் அப்பொழுதான் மொபைலை பார்த்தார். குரு அழைத்திருப்பது தெரியவும் கோபம்தான் வந்தது.
திரும்ப கூப்பிடட்டும், எங்களை நிம்மதியா வாழ விடவே மாட்டாங்களானு வச்சே பார்க்காம கேட்கறேன். இனிமேலும் பாக்கியத்துக்காக பார்த்தா என் பொண்ணு வாழ்க்கை கேள்வியாகிடும் என குருவோடு சண்டை போட மனதளவில் தயாரானார் லதா.
*** *** ***
ஷிவன்யாவை மருமகளாக்கிக்கொள்ள சேதுராமன் முடிவே செய்துவிட்டார். எனவே வீட்டிற்கு வந்ததும் நடந்ததை புஷ்பாவிடம் சொன்னதோடு சரி, புஷ்பாவிடமும் சண்டையிடவில்லை, நவீனையும் ஏதும் சொல்லவில்லை, வழக்கம்போல் திட்டியிருந்தாலாவது பரவாயில்லை, இத்தனை பிரச்சனை நடந்திருக்க ஏதும் சொல்லாமல் இருந்ததே புஷ்பாவின் பயத்தை மேலும் அதிகமாக்கியது.
ஷிவன்யாவோடு இணைத்து பேசியதற்கே அத்தனை அடியடித்தும் கோபம் தாளாமல் வீட்டைவிட்டு போய்ட்டான், இப்போ திரும்பவும் அதையே செய்து, போதாமல் அடிதடி வரைக்கும் பண்ணிட்டு வந்திருக்கானே.. குருக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவானோ?
போனமுறை மாதிரி நவீனை அடிச்சா கூட பரவாயில்ல, அப்படியல்லாமல் ஷிவன்யா வாழ்வை சரிசெய்யவேண்டி அவளையே திருமணம் செய்ய முடிவெடுத்தால் என்ன செய்வது? வேலைக்காரியா இருக்கும்போதே அந்த லதாவை ஒன்னு சொல்லிடக்கூடாது, இதுல சம்மந்தி ஆகிட்டாள்னா அவ்வளோதான்.‼
இல்லாத விசயத்தை பேசி, இந்த கூறுகெட்டவன் செய்த வேலையால என்னென்ன நடக்குமோ என உண்மையில் புஷ்பாவிற்கு பயம் கலந்த வேதனை உண்டானது.
சேதுராமன் தனதறையில் இருக்க, மகனிடம் வந்த புஷ்பா.. “குரு வந்தா என்ன முடிவெடுப்பானோனு திக்குதிக்குங்குதாடா. இல்லாத விசயத்தை பேசி, நீயே குரு மனசை கெடுத்துடுவ போலயிருக்கு..” என தலையில் அடித்துக்கொண்டார்.
“ம்மா.. நானொன்னும் இல்லாத விசயத்தை பேசல, அவ உண்மையாவே அண்ணனை விரும்பறாம்மா, நான் மட்டும் பிரச்சனை பண்ணலனா அண்ணனை மயக்கி கல்யாணம் செய்திருப்பா, அதான் நேரா அங்க போனேன்..
அப்பாவும் அண்ணனும் என் மேல கோப்பட்டாலும் பரவால்ல, அவ திட்டம் நிறைவேறக்கூடாது. நீ எப்படியோ தெரியாது, அவளுக்கெல்லாம் அண்ணின்ற ஸ்தானத்தை என்னால கொடுக்க முடியாது.
அப்பாவை கூட நினைச்சி பார்க்காம அவளுக்காக வீட்டை விட்டு போனவர், சப்போஸ் விரும்ப ஆரம்பிச்சிட்டார்னா அதுக்கப்புறம் நீ என்ன சொன்னாலும் உன் பேச்சை கேட்கமாட்டார், அதான் அண்ணனே பொண்ணு கேட்டாலும் அந்த லதா ஒத்துக்காத அளவுக்கு பிரச்சனை பண்ணிட்டு வந்திருக்கேன், நான் செய்ததுல தப்பேயில்ல.” என்றான் திடமாக.
ஆமாம்மாம், உன்னாலதான் என் பொண்ணு பேரு கெட்டுடுச்சினு அந்த லதா ஒரு சொட்டு கண்ணீர் விட்டுட்டா போதும், நானிருக்கேன் லதாம்மானு இவன் கிளம்பிடுவான் என நினைத்தபோதும்.. “ஆனாலும் அந்த சுதர்சனம் பேச்சை கேட்டுட்டு நீ அவசரப்பட்டுட்டியோனு பயமா இருக்குடா. அந்த ஷிவன்யா முந்துறதுக்கு முன்ன அம்சமான பிள்ளையா பார்த்து குருக்கு கல்யாணம் செய்துருப்பேன், அதுக்காகத்தான் உன்னை மன்னிப்பு கேட்க சொன்னேன், நீ இப்படி பண்ணிட்டு வந்திருக்க.” என்றார் கவலையோடு.
நவீன்.. “ப்ச்.. நீ கவலைப்படாத, கொஞ்சநாள் கத்துவாங்க, அந்த ஷிவன்யாக்கு கல்யாணம் ஆகிடுச்சினா எல்லாம் சரியாகிடும், அப்புறம் உன் இஷ்டப்படி அண்ணாக்கு பொண்ணு பாரு. இப்போ இடத்தை காலி பண்ணு. எனக்கு ரெஸ்ட் எடுக்கனும்.”
மகனை முறைத்தவாறே வெளியேறியவர் தனதறை வர, அங்கே சேதுராமனை காணவில்லையென்றதும் அவருக்கு அழைக்க வேறொருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என வர, அச்சோ எங்க போய் யார்கிட்ட பேசிட்டிருக்காருனு தெரியலையே என தளர்ந்தமர்ந்தார் கட்டிலில்.
** ** ** **
“எங்கப்பா இருக்க? எத்தனை முறை போன் பண்றது?” என்றார் சேதுராமன்.
அங்கதான் வந்திட்டிருக்கேன் என சொல்ல வந்ததை முழுங்கி, “என்ன விசயம்ப்பா.?”
குரலிலேயே குருவின் கோபம் புரிய.. “நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேட்பியாப்பா?” என்றார் கெஞ்சலாக.
“யாரை பத்தியும் எனக்கு தெரிய வேணாம்ப்பா.” என்றான் ஒட்டாத குரலில்.
“நேர விசயத்துக்கே வரேன்.” என சற்று இடைவெளி விட்டு, “எனக்கு ஷிவன்யாதான் மருமகளா வேணும்னு ஆசையா இருக்குப்பா.”
குருவிடம் பதிலில்லாமல் போக, “குரு..”
“சொல்லுங்கப்பா, லைன்லதான் இருக்கேன்.”
“இப்படி பேச்சு அடிப்பட்டதால சொல்றேன்னு நினைக்காதப்பா, முன்னவே ஏன் தோணாம போச்சுனு வருத்தமாயிருக்கு. ஷிவன்யா நீ நினைக்கிற அளவுக்கு கோபக்காரி இல்ல, அன்னைக்கு எதோ மிருதுளாவை கை நீட்டிட்டா. மத்தபடி ரொம்ப பாசமான பொண்ணுப்பா.”
“பாசமான பொண்ணுனா ரோசமிருக்காதாப்பா? உங்களால நவீனை மன்னிப்புதான் கேட்க வைக்க முடியல.. மேற்கொண்டு பிரச்சனை பண்ணாம கூட இருக்கவைக்க முடியலனா என்னப்பா அர்த்தம்?
இரண்டு அடி அடிப்பாங்க, அப்பா கத்துவார், மத்தபடி என்ன நடந்திடப்போகுதுன்ற தைரியத்துலதான லதாம்மா வீட்டுக்கு போய் பிரச்சனை செய்திருக்கான்.. முன்ன பேசினதுக்கு சிவியரா எதாவது பண்ணிருந்திங்கனா இப்போ தைரியம் வந்திருக்குமா?
இத்தனையும் செய்துட்டு எந்த தைரியத்துலப்பா ஷிவாவை கேட்பிங்க? அப்படியே கேட்டாலும் எனக்கு கொடுக்கனும்னு அவங்களுக்கு என்னயிருக்கு?”
நடந்ததனைத்தும் சேதுராமன் சொல்லியிருக்க, இந்த நிலையிலும் ஷிவன்யா லதாவிடம் அவளின் காதலை வெளிப்படுத்தாதிருப்பதும், யாருக்கு கட்டிகொடுத்தாலும் உங்க குடும்பத்துக்கு பொண்ணு கொடுக்கமாட்டேன் என லதா சொன்னதும் மனதை ரணமாக்கியிருக்க, இதில் தந்தை பெண்கேட்டால் பிரச்சனை அதிகம்தான் ஆகும் என சேதுராமனின் காலம் கடந்த விருப்பத்திற்கு பதிலளிக்காமலிருந்தான்.
“உனக்கு ஷிவன்யாவை பிடிக்கலயா குரு?”
இதற்கு மேல் பேசப்பிடிக்காமல், “என் கல்யாண விசயத்தை நான் பார்த்துக்கிறேன்ப்பா.. நீங்க சித்தி குடும்பத்தை பாருங்க.” என இணைப்பை துண்டித்தான்.
சித்தி குடும்பம் என்ற ஒற்றை வார்த்தையில் நொந்துபோனார் சேதுராமன். புஷ்பாவுடனான தன் குடும்பம் வேறு, குரு வேறு, என நினைக்கும் அளவிற்கு நடந்துடுச்சே, இனி என்ன செய்து சரி செய்வேன்.? என்ற வேதனையோடு இரண்டுமணிநேரம் வரை மாடியில் நின்றிருந்தவர்.. சில உறுதியான முடிவுகளோடு கீழிறங்கினார்.
** ** ** ** ** ** **
நிச்சயம் சேதுராமன் குருவிடம் நடந்ததை சொல்லுவார். கூடிய விரைவில் அம்மாவைப் பார்க்க குரு வருவான், அவன் வருவதற்குள் தான் குருவைத்தான் விரும்பறேன் என அன்னையிடம் சொல்லிவிட வேண்டும், இனியும் காலம் தாழ்த்தினால் குருவின் மனம் நோகும்படி நிச்சயம் ஏதேனும் நிகழும்..
தன் விருப்பமும் குருவிருப்பமும் ஒன்றேதான் எனத்தெரிய வந்தாலும், இத்தனை நடந்த பிறகு சேதுராமன் பெண்கேட்காமல் அன்னை சம்மதிப்பத்து கடினம் அல்ல, மிக மிக கடினம்..
அதோடு மகனின் விருப்பம் தெரிந்தாலும் சேதுராமன் தன்னை பெண் கேட்பார் என்பதில் சிறிதும் நம்பிக்கையில்லை ஷிவன்யாவிற்கு. நவீன் அத்தனை பேசும்போதும் அவனை திட்டினாரே தவிர, அவனின் செயலால் தனது மனநிலையை நினைத்து பார்த்தாரா? குறைந்தபட்சம் அம்மாவிற்காவது ஆறுதல் சொன்னாரா?
எனில் எங்கு கொடுத்தாலும் அங்கு கொடுக்கமாட்டேன் என அன்னை சொன்னதில் தவறேதும் இல்லையே என்ற கசப்பான உண்மை மனதை அழுத்த, வேதனையோடு அதிகாலை மூன்று மணிவரை விழித்திருந்து, அதற்கு பின்தான் கண்ணயர்ந்தாள்.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் லதா வீட்டிற்கு வந்தடைந்தான் குருப்ரசாத். லதா அப்பொழுதுதான் முறைவாசல் செய்து உள்ளே சென்றிருந்தார் என்பதால் கதவு திறந்துதான் இருந்தது.
வெளியில் நின்று அனைவர் முன்னும் மீண்டுமொரு நாடகம் அரங்கேற வேண்டாமென அனுமதி கேளாமல் உள்ளே வந்தான். லதா விளக்கேற்றிக்கொண்டிருக்க பூஜை முடியும்வரை அமைதிகாத்தவன், “லதாம்மா.” என்றான்.
திடுக்கிட்டு திரும்பியவர்.. “எதுக்கு தம்பி வந்திங்க?” என்றார் இறுக்கமான முகத்தோடு.
லதாவின் கேள்வியில் செருப்படி வாங்கிய உணர்வை பெற்றான் குருபிரசாத். ஆகினும் இவர்களின் நிலையை எண்ணி, தன் வலியை மறைத்து, “இங்க வராம எங்க போவேன் லதாம்மா?” என்றான் கரகரப்பாக.
குருவின் ஏக்கமான கேள்வியில் திடமனைத்தும் இழந்தார் போல் உணர்ந்தார் லதா. “தம்பி..” என ஒரு கணம் தடுமாறினாலும், மனதை கல்லாக்கி, “நாங்க நல்லாயிருக்கனும்னா தயவு செய்து இங்கயிருந்து போய்டுங்க தம்பி..”
“போறேன் லதாம்மா, நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்பிடறேன்.” என்றவன் கண்கள் ஷிவன்யாவைத் தேடியது. அவளின் அறை திறந்துதான் இருந்தது. ஆனால் எழவில்லை போலும் என நினைத்திருந்தான்.
முன்பு கனவில் பேசியதை போலுணர்ந்தவள், தற்போதைய குருவின் குரலில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள். அச்சோ.. இன்னைக்கு அம்மாகிட்ட பேசிடலாம்னு நினைத்தேனே.. இப்படியா விடிஞ்சும் விடியாம வந்து நிற்பான்? நம்ம காதல் தெரியாம அம்மா என்ன சொல்வாங்களோ எனப் பதறி வெளியே வந்தாள்.
இரவெல்லாம் தூங்காததாலும், நேற்றிரவு அழுததாலும் ஷிவன்யாவின் கண்கள் கோவைப்பழமாய் சிவந்திருந்தது. இவள் அழுதாள்.. குரு அழவில்லை அவ்வளவுதான் வித்யாசம். மற்றபடி குருவின் கண்களும் சிவப்பேறியே காணப்பட்டது.
“நான் ஒரு பொண்ணை விரும்பறேனு சொன்னேன்ல லதாம்மா? அது வேற யாருமில்ல.. ஷிவாவைதான். என் விருப்பம் நிறைவேறுமா லதாம்மா?” என்றான் லதாவை ஆழ்ந்து பார்த்தவாறு.
ஷிவன்யாவிற்காக வீட்டை விட்டு வந்தவன், தற்போது நடந்த கலவரங்களால் தன்மீதுள்ள பாசத்தாலும், தம்பியின் செயலுக்கு விலையாக நினைக்கிறான் என்றும் நினைத்த லதா.. “பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்குற அளவுக்கு என் பொண்ணு எந்த தப்பும் பண்ணல தம்பி. நவீன் ஒரு விதமா எங்களை அசிங்கப்படுத்துனா, அதையே நீங்க ஒரு விதமா செய்ய நினைக்காதிங்க.”
“அப்படியில்ல லதாம்மா, நான் உண்மையா ஷிவாவை விரும்பறேன்.”
நம்பாத பார்வை பார்த்தவர்.. “அப்படியேன்னாலும் என் பொண்ணுக்கு உங்களை பிடிக்கனும்ல? எனக்கு மரியாதையில்லாத இடத்துல என் பொண்ணு வாக்கப்பட மாட்டா, வாக்கபடறதென்ன? ஒரு நிமிஷம் நிக்கக்கூடமாட்டா.”
அன்னையின் பேச்சு த்வணி, குருவை அவமானப்படுத்துவதாய் இருக்க.. “ம்மா..” எனப்பதறிய ஷிவன்யாவின் குரல் தொண்டையை விட்டு வெளியேறவில்லை.
லதாவிற்கும் குருவிற்கும் ஷிவன்யாவின் பதட்டம் புரியாமல் போகவே, தான் பேசிக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் மகள் இருக்கிறாள் என லதா நினைத்திருக்க, இப்பொழுது கூட அவளின் காதலை வெளிப்படுத்தமாட்டாளா?
அன்னையின் தன்மானம் நினைப்பது முற்றிலும் தவறில்லைதான், ஆனாலும் தன் நிலையையும் நினைக்கலாமல்லவா? என ஷிவன்யாவைப் பார்த்தான் ஏக்கமாக.
“நா.. நான் அம்மாகிட்ட பேசறேன், நீங்க போங்க.” என்றாள் தவிப்பாக.
ஷிவன்யாவை விடுத்து லதாவிடம்.. “என் விருப்பத்தை சொல்லிட்டேன் லதாம்மா, இனி உங்க இஷ்டம்தான். உங்க பொண்ணை எனக்கு கொடுக்க விருப்பம்னா கால் பண்ணுங்க..” என ஏக்கத்தோடு சொன்னவன்..
“உங்க பொண்ணுக்கு மட்டுமில்ல லதாம்மா.. உங்களோட தன்மானம் எனக்கும்தான் முக்கியம். ஷிவாவை எனக்கு கொடுக்க விருப்பமில்லனாலும் உங்களுக்காக அதையும் மனதாற ஏத்துக்கிறேன்.” என இறங்கிய குரலில் வேதனையோடு சொல்லி.. “இனி உங்க அனுமதியில்லாம எப்பவும் இங்க வரமாட்டேன்.” என வேக நடையோடு கிளம்பினான் குருபிரசாத்.