அடுத்தவருக்கு அன்பைக் கொடுக்கலாம், அறிவைக் கொடுக்கலாம், இப்படி எத்தனையோ உணர்வுகளைக் கடத்தலாம். ஆனால் ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு செய்யக் கூடாத ஒன்று துரோகம்! அதுவும் நம்பிக்கைத் துரோகம் தீதினும் தீது.!
நஞ்சைக் காட்டிலும் கொடியது நட்புக்குச் செய்யும் துரோகம்.! அப்படியொரு துரோகம்தான் சக்கரபாணி வெங்கட கிருஷ்ணனுக்கு செய்தது.
வெங்கட கிருஷ்ணனின் தந்தை ஒரு அடிமட்ட தொண்டனாய்க் கட்சியில் இருக்க, அப்பாவைப் பின்பற்றி வீகேவும் கட்சியில் சேர்ந்துவிட அப்போதுதான் சக்கரபாணி பழக்கமானார்.
சக்கரபாணிக்கு அரசியலில் தீவிர ஆர்வம், எப்படியாவது கட்சியில் முன்னேறிவிட வேண்டும் என்ற எண்ணம். ஆனால் வாய்ப்புகள் அமையவில்லை. மாறாக வெங்கட கிருஷ்ணனின் தந்தை இறக்கும்போது மாவட்ட செயலாளராக இருந்தார். அவருக்குப் பின் வீகேவுக்கு அந்த பதவி வழங்கப்பட, சக்கரபாணிக்கும் வீகேவுக்குமான நட்பு நல்லவிதமாய் பலப்பட்டது. இருவரும் இணைபிரியா தோழர்கள் ஆனார்கள்.
காலங்கள் ஒட, கட்சி வளர இருவருக்கும் கட்சியில் உயர்வுதான். இருந்தும் வீகேவுக்கு தனி செல்வாக்கு இருக்க, அவருக்கு எம்.எல்.ஏ, எம்பி பதவிகளுடன் அமைச்சர் பதவியும் கிடைத்துவிட, சக்கரபாணிக்கு கட்சியில் பதவி இருந்த போதிலும் பெரிதாய் மரியாதை இல்லை, தேர்தலில் நிற்க சில முறை வாய்ப்புக் கிடைத்தபோதும் அப்போது எல்லாம் தோற்றுவிட்டார். வீகே அளவு பண பலமும் இல்லை.
வெங்கட கிருஷ்ணனுக்கு எப்போதும் வெற்றியே! அது எல்லாம் சக்கரபாணியின் அடிமனதில் காயங்களை விட்டுச் சென்றிருக்க, வீகேவைக் கண்டு எழும் பொறாமை உணர்வைத் தடுக்க முடியவில்லை, கோபம் வந்தாலும் கூட ஐம்பது ஆண்டு கால நட்பு ஒன்றும் செய்ய முடியாமல் தடுத்துவிடும். அந்த பொறுமையும் தேர்தலில் அன்பழகனுக்குச் சீட் தராது, கார்வண்ணனுக்குத் தர காணாமல் போனது, வஞ்சம் வந்து நெஞ்சத்தில் நஞ்சாய் கலந்தது.
அன்பழகன் பெரிதாய் காட்டிக்கொள்ளவில்லை. அவருக்கு மகனைத் தெரியும். தோல்வியை விரும்பாதவன் அவன். ஆனால் அவனே
“பரவாயில்லப்பா, நம்ம கார்வண்ணனுக்குத்தான கொடுத்தாங்க, நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம்” என்றான் தன் வருத்தம் மறைத்து.
நட்பு எனும் பெரும் புதைக்குழி தன்னைப் போல் தன் மகனையும் இழுக்கிறதோ என்ற அச்சம் அவருக்கு. இப்படியே விட்டுக்கொடுத்து தன்னைப் போல் தன் மகனும் கார்வண்ணனின் நிழலில் நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று தந்தையாய் ஒரு பயம், கவலை. அப்போது நட்பெல்லாம் பின்னால் சென்று விட்டது.
கார்வண்ணனுக்கு இளைஞர்கள் மத்தியில் அத்தனை செல்வாக்கு. அடுத்த முறை தேர்தலில் நின்றால் நிச்சயம் அமைச்சராகிவிடுவான், வீகேவுக்குப் பின் அவன் என்ற நிலைதான் கட்சியில். ஆனால் அன்பழகன்?
தான், தன் எனும் உணர்வு தலைத்தூக்கியது.
அது என்ன கார்வண்ணனுக்கு அடுத்துதான் என் மகனா? என்ற பேச்சு அவரைக் கொடூரமாய் யோசிக்க வைக்க, அவன் இல்லாமல் போனால் என்ற எண்ணம் தோன்ற, இல்லாமல் ஆக்கிவிட எண்ணம் கொண்டார்.
தந்தையாய் தன் மகனுக்கு நியாயம் செய்ய நினைத்து கார்வண்ணனுக்கு அநியாயம் செய்ய துணிந்தார்.
அவர் நினைத்தது போலவே எல்லாம் நடந்தது, நடத்திக்கொண்டார். கார்வண்ணனைக் கொன்று, பழியை அமராவதியின் மேல் போட்டு கொஞ்சமும் தன் மீது சந்தேகம் வராத வண்ணம் கதைக் கட்டிவிட்டார்.
ஆசை! பதவி ஆசை! ஆசை என்பதையும் தாண்டி வெறி! நாற்காலிக்கான போரில் நட்பென்ன? தப்பென்ன? வெற்றி ஒன்றே அங்கே குறிக்கோள். பதவி பாசமெல்லாம் பார்க்காது,
தப்பு செய்துவிட்டு தப்பி விட்டோம் என்று நினைத்து நிம்மதியாயிருந்த நேரத்தில் ஜெயசீலனுக்கும் அதே பதவி மோகம் கண்ணை மறைத்தது.
ஜெயசீலன் சக்கரபாணியின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகன், அவனுக்கு பதவி, பணம் எல்லாவற்றின் மீதும் ஆசை, பேராசை. நல்லவனாய் வேடமிட்டு எப்படியோ சக்கரபாணியின் பெண் சரஸ்வதியை மணந்து கொண்டான். ஆனால் அவன் நினைத்தது போல் பணமோ பதவியோ கிட்டவில்லை.
சக்கரபாணிக்கு வாரிசென்றால் மகன்தான், மகளுக்கு நகைகள் போட்டுக் கட்டிக்கொடுத்ததுடன் கடமை முடிந்தது என்றிருக்க, அரசியலிலும் சரி குடும்பத்திலும் சரி தான் நினைத்தது போல் கொடி நாட்ட முடியவில்லை ஜெயசீலனால், பெயரில் இருந்த ஜெயம் வாழ்வில் இல்லை அவனுக்கு. தொழிலும் அன்பழகன் பெயரில்தான். இவையெல்லாம் சேர்ந்து ஜெயசீலனை வெறிக்கொள்ள வைத்தன, பெரிய வீட்டு மருமகனாய் இருந்தும் பெருமை இல்லை.
அதற்காக கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் குணமும் இல்லை, எத்தனை வருட திட்டமிடல், கனவு, ஆசை. அப்படியே விடுவானா என்ன? நேரம் பார்த்து காத்திருந்தான்.
அவர் கார்வண்ணனுக்குக் குழி வெட்ட, அவர் மகனுக்கு ஜெயசீலன் குழி பறித்தான்.
அன்பழகன் இல்லையென்றால் அவன் தானே ராஜா என்ற எண்ணம் கொண்டு அவனை இல்லாமல் ஆக்க நினைக்க, அதுவே சக்கரபாணியை இங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது.
*************
“ஸர், ஜெயசீலனுக்கு எதிரா எந்த எவிடன்சும் இல்லாம இருந்துச்சே, அரை நாள்ல அரெஸ்ட் பண்ற அளவுக்கு என்ன நடந்துச்சு? அதுக்குள்ள அந்த கூலிப்படை ஜெயசீலன் பெயரை சொல்லிட்டாங்களா?” பரத் ஆச்சரியமாய்க் கேட்டான்.
“அவனுங்க எங்க சொன்னாங்க” என்று சிரஞ்சீவி கேட்க
“ஸர்” அதிர்ச்சியாகப் பார்த்தவனுக்கு சிரஞ்சீவி என்ன செய்திருப்பான் என்று நொடியில் புரிய
“போட்டு வாங்குனீங்களா ஸர்?” என்றான் சிரிப்போடு.
“எஸ் பரத், வேற ஆப்ஷன் இல்லை. எவிடன்ஸ் இல்லாம நம்ம இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்க முடியாது. ஜெயசீலனை சந்தோஷ் மாதிரி ஈசியா அன் அஃபிஷியல் கஸ்டடி எடுக்கமுடியாது. அந்த கூலிப்படையைக் கண்டுபிடிச்சாலும அவங்களுக்கு ஜெயசீலனைத் தெரியப்போறது இல்லை, வேஸ்ட் ஆஃப் ஃபைம். ஸோ பாட்டம் அப் அப்ரோட் விட டாப் டவுன் அப்ரோச் பெட்டர்னு தோணிச்சு” சிரஞ்சீவி சொல்ல சொல்ல பரத்தின் புன்னகை விரிந்து கொண்டே போனது.
“ஸோ அந்த கூலிப்படையை அரெஸ்ட் பண்ணி உண்மையை வாங்கிட்டோம்னு சொல்லி அதை என் மூலமா ஜெயசீலனுக்குத் தெரிய வைச்சு பக்காவா ப்ளான் பண்ணின ஜெயசீலன் பதட்டமாக உடனே அவனோட காண்டாக்ட்ஸுக்குப் போன் பண்ணி இதைப் பத்தி விசாரிக்க, அந்த கால்ஸை டேப் பண்ணிட்டீங்க, ரைட் ஸர்?”
“கச்சிதங்கா பரத், எக்சாக்ட்லி” என்ற சிரஞ்சீவி
“ஜெயசீலன் கண்டிப்பா டென்ஷன் ஆவான்னு தெரியும், அவசரத்துல யோசிக்காம அவன் பேச எல்லா கால்ஸும் ட்ரேஸ் பண்ணி ஆளுங்களை தூக்கியாச்சு, சிம்பிள். இப்போ நீங்க அவன் மேல எப்.ஐ.ஆர் ஃபைல் பண்ணுங்க, ஸ்டேட்மெண்ட் வாங்கிடுங்க” என்று உத்தரவிட்டான்.
“எஸ் ஸர்” என்ற பரத்வாஜ் “சந்தோஷ் மேல நமக்கு டவுட் இருந்துச்சு அவனை தனியா விசாரிச்சீங்க ஓகே, ஆனா சரவணனன் எப்படி கேஸுக்குள்ள வந்தான் ஸர், அவன் எப்படி உண்மையை சொன்னான்?”
“சந்தோஷ் அடிச்ச அடியில உண்மையை சொல்லிட்டான், அவன் சக்கரபாணியோட பெயரை சொல்லவும் எல்லாமே சிங்க் ஆச்சு பரத்”
“அமராவதி சொன்ன அந்த திருட்டு, அது மூலம் அவங்க கிட்ட இருந்த இன்ஹேலர்ல டாக்சின் கலந்துட்டாங்க. கார்வண்ணனோட இன்ஹேலர்லையும் அதே மாதிரி டாக்சின் இருந்துச்சுன்னு கேஸ் ஃபைல்ல இருந்துச்சு. அப்போ அதை எப்படி மாத்தியிருப்பாங்கன்னு யோசிச்சேன்”
“சந்தோஷ் சக்கரபாணி பெயரை சொன்னதும் இட் வாஸ் ஈஸி, மினிஸ்டர் கிட்ட கேட்டு அவங்க கட்சி ஆபிஸ் ஃபுட்டேஜ் செக் பண்ணினேன் இந்த சரவணன்தான் அன்பழகன் கூடவும் கார்வண்ணன் கூடவும் சுத்திட்டு இருந்தான். அதான் அவனைத் தூக்கினேன், அவன் உண்மையை அவ்வளவு சீக்கிரம் சொல்லல. ரொம்ப விசுவாசமா இருந்தான்”
“அதை உடைக்க நினைச்சேன், ஐம்பது வருஷ ப்ரண்ட் பையனையே பதவிக்காக கொல்ல நினைச்ச மனுஷன், நீ எங்கிட்ட மாட்டின விஷயம் தெரிஞ்சா உன்னை விடுவாரா கேட்டேன், நீ உண்மையை சொல்லாம இருந்தாலும் நீ சொல்லிட்டேன்னு சொல்வேன் அப்படின்னு ஒரு மிரட்டல், எல்லாத்தையும் சொல்லிட்டான், சிம்பிள்” சிரஞ்சீவி வெற்றிப்புன்னகையுடன் சொல்ல சொல்ல விரிந்த புன்னகையுடன் கேட்டான் பரத்வாஜ்.
“சக்கரபாணி கிட்ட ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வரேன் பரத், நீங்க ஜெயசீலனைப் பாருங்க. மேஜிஸ்ட்ரேட் கிட்ட ரிப்போர்ட் செய்யனும்” என்று சொல்லி அவன் சக்கரபாணியை வைத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.
விசாரணைக்காகத் தன் முன் இருந்த சக்கரபாணியைத் துளைத்தது சிரஞ்சீவியின் பார்வை. சக்கரபாணியோ மாட்டிக்கொண்ட வேதனையில் இருந்தார்.
“சொல்லுங்க சக்கரபாணி, எப்படி கார்வண்ணனைக் கொலைப் பண்ணீங்க?” சக்கரபாணியிடம் சிரஞ்சீவி கேட்க, அவர் பேசாமல் இருந்தார்.
“சரவணனன் எல்லாம் சொல்லிட்டான், கூடவே சந்தோஷும் ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டான். உங்களுக்கு வேற வழியில்லை சக்கரபாணி. அவுட் வித் ட்ரூத்” என்று மேஜை மீது ஓங்கியடிக்க ஒரு நிமிடம் படபடத்து விட்டது சக்கரபாணிக்கு.
“உங்களை கட்சியில இருந்து தூக்கிட்டாங்க, யாரும் சப்போர்ட் செய்ய கிடையாது, மாப்பிள்ளைக்குத் தனியா கவனிப்புப் போய்ட்டு இருக்கு. உங்க மகனையும் அமராவதியைக் கொல்ல முயற்சி செஞ்ச கேஸ்ல உள்ள போடனும். இந்த கொலையில உங்க மகனோட பங்கு என்ன அதையும் சொல்லுங்க” என்று அவன் அவசரப்படுத்தினான்.
மகனின் மேல் பழி சொல்லவும் சக்கரபாணி “இல்லை இல்லை, அவன் மேல தப்பில்லை” என்றார் பரபரப்பாய்.
“தென் அவுட் வித் ட்ரூத்” என்றான் கோபமாக.
“சொல்லிடுறேன், நான் மட்டும்தான் எல்லாத்துக்கும் காரணம். சரவணனும் சந்தோஷும் எனக்கு உதவி செஞ்சாங்க அவ்வளவுதான். அன்பு மேல தப்பில்லை, அவனை விட்டுடுங்க” தவித்தார் தந்தையாக.
“அது நீங்க சொல்ற உண்மையில இருக்கு, சந்தோஷ் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அது அன்பு கிட்ட கார்வண்ணன் இந்த விஷயத்தை சொன்னதை நான் கேட்டுட்டேன்”
“ஓஹ், மேல சொல்லுங்க” சிரஞ்சீவி கவனமாய்க் கேட்டுக்கொள்ள சக்கரபாணி தொடர்ந்தார்.
“கார்வண்ணனுக்கு சின்ன வயசுல இருந்தே ஆஸ்துமா ப்ரச்சனை, அதனால் அவனை எந்த ஹில் ஸ்டேஷனுக்கும் அனுப்பாம பத்திரமா பார்த்துப்பான் வீகே. இங்க வைச்சு மினிஸ்டர் மகனைக் கொல்றது ரொம்ப கஷ்டம், அமராவதி அவனை ஊட்டிக்கு அழைச்சிட்டுப் போற விஷயம் தெரிஞ்சதும் அங்கேயே அவனைக் கொன்னுடனும்னு முடிவு பண்ணினேன்”
“ஏன்? பதவி ஆசை?” சீரஞ்சீவி பதிலும் சொல்ல ஆம் என்பதாய்த் தலையசைத்தார் சக்கரபாணி.
“பட் இதுல அமராவதி எங்க வந்தாங்க?”
“அது… அரசியல் காரணத்துக்காக கொலைன்னு தெரிஞ்சா ரொம்ப தோண்டித் துருவாங்க, என் மேல என் மகன் மேல எல்லாம் சந்தேகம் வரும். அடுத்து கட்சியில பதவி கேட்கிறப்பவும் பிரச்சனை வரும். இதே குடும்ப விஷயம்னு முடிச்சிட்டா மத்த கோணத்துல விசாரிக்க மாட்டாங்கன்னு நினைச்சேன். அது மாதிரிதான் நடந்துச்சு”
“அவன் குளிரான இடத்துக்குப் போனா கண்டிப்பா இன் ஹேலர் யூஸ் பண்ணுவான், அதனால்தான் அதுல விஷம் கலக்க முடிவு செஞ்சேன், அவன் எப்பவும் வைச்சிருக்க இன் ஹேலரை சரவணனை வைச்சு மாத்த வைச்சேன், அமராவதியோட ஹேண்ட் பேக் திருடி அதையும் மாத்த வைச்சேன். சந்தோஷுக்குப் பணம் கொடுத்து அவனை அடிக்கடி அமராவதியைப் பார்த்து பேச சொன்னேன். போலீஸ் விசாரிக்கும்போது சந்தோஷை வைச்சு அமராவதியைப் பத்தி தப்பா சொல்ல வைச்சேன்”
“பக்கா” சிரஞ்சீவியின் இதழ்கள் ஏளனமாய் வளைந்தன.
“அப்படி கார்வண்ணன் இன்ஹேலர் யூஸ் செய்யாம போயிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?” என்று கேட்க சக்கரபாணியிடம் அமைதி.
“ஏமிரா இதி? எத்தனை தட கேட்கிறது?“ என்று தலையைத் தன் விரல் கொண்டு தேய்த்தவன்
“கண்டிப்பா ப்ளான் பி இருந்திருக்கும் சக்கரபாணி, இவ்வளவு பக்கா ப்ளான் போட்டவர் எதையும் மிஸ் பண்ணியிருக்க மாட்டீங்கன்னு தெரியும் எனக்கு” என்று சிரஞ்சீவி சொல்ல,
“அது.. அப்படி அவன் இன் ஹேலர் யூஸ் செய்யலன்னா ஊட்டியில இருந்து வர வழியில அவன் கிட்ட ராபரி செய்ற மாதிரி ரோட்ல வழி மறிச்சு கொல்லவும் ஆட்கள் ஏற்பாடு செஞ்சேன். அவனை வாட்ச் பண்ண ஆளுங்களும் போட்டிருந்தேன்” சக்கரபாணி சொல்லும்போதே
அறைக்கதவை வேகமாய்த் திறந்த பரத் சிரஞ்சீவியிடம்
“ஸர், மினிஸ்டர் வந்திருக்கார்” என்று சொல்ல
“என்னவாம்?”
“சக்கரபாணியைப் பார்க்கனுமாம்” என்று சொல்லும்போதே அமைச்சரும் கூடவே டிஜிபி அஷோக் ஷர்மாவும் வர, சிரஞ்சீவியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
சக்கரபாணியைப் பார்த்த வெங்கட கிருஷ்ணன்
“எப்படி டா உன்னால இப்படி செய்ய முடிஞ்சது? இத்தனை வருஷ நட்பு அதைக் கூட நினைச்சுப் பார்க்கலயா டா நீ?” என்று கோபத்துடன் கத்த
“நீ சொல்றியே அந்த நட்பு அதுதான் என்னை இப்படி செய்ய வைச்சது, நட்பு நட்புன்னு சொல்லியே என்னை உனக்குக் கீழ வைச்சிட்ட, உன்னோட புள்ளையும் அதேதான் செஞ்சான், அதான் அவனைக் கொன்னுட்டேன்” என்று சக்கரபாணி வஞ்சத்தில் கத்த
“ச்சீ, வாயை மூடு. உன் மகனை எம்பியாக்கி அழகு பார்க்க நினைச்சான் டா என் மகன், ராஜ்ய சபாவுல அவனுக்கு சீட் வாங்க பேசிவைச்சிருந்தோம் நானும் அவனும். கிடைச்சதும் சொல்லிக்கலாம்னு இருந்தேனே டா. உன் மகனுக்குப் பதவிக் கொடுத்து, அதுவும் அவனை விட பெரிய இடத்துல உட்கார வைக்க நினைச்ச என் மகனை இப்படி செஞ்சிட்டியே டா” வெங்கட கிருஷ்ணன் கண்கள் சிவப்பேற கத்தினார்.
“என் மகனை இல்லாம ஆக்கி, என் வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு மேல பழிசொல் போட்டு என் குடும்பத்தை சீரழிச்சிட்டியே டா பாவி, இப்ப சொல்றேன் கேட்டுக்கோ உன் மகனும் மருமகனும் இந்த ஜென்மத்துல வெளியே வர முடியாது டா. எந்த மகனுக்காக எல்லாம் செஞ்சியோ அந்த மகனை என்ன செய்றேன் பாருடா” என்றார் வஞ்சத்துடன்.
“கிருஷ்ணா, தப்பெல்லாம் என் மேலதான். என்னை என்ன வேணும்னா செய், அவனுக்கு இதுல சம்மந்தமே இல்லை. அவன் அப்பாவி அவனை விட்டுடு” வெங்கட கிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கெஞ்சினார் சக்கரபாணி. அப்படியே அவரைத் தரையில் தள்ளியை வெங்கட கிருஷ்ணன்
“என் மகன் மட்டும் என்னடா செஞ்சான் உனக்கு? உன்னைக் கொன்னுட்டா உனக்கு வலிக்காதுடா, என் புள்ளையைக் கொன்னு எனக்கு வலியைக் காட்டின இல்லை, நான் காட்டுறேன் டா உனக்கு நரக வேதனையை” என்று கர்ஜனையாய் சொன்னவர் சிரஞ்சீவியைப் பார்த்து
“இவனை என்ன வேணும்னாலும் செய்ங்க தம்பி, என் மருமக மேல தப்பில்லைன்னு இவன் கோர்ட்ல சொல்லனும். சொல்ல வைங்க” என்று சொன்னவர் அறையை விட்டு வெளியே போக
“கிருஷ்ணா அன்பு மேல தப்பில்லை, அவனை எதுவும் செஞ்சிடாத” என்று கண்ணீர் விட, அது வீகேவின் காதுகளில் விழவே இல்லை.