தன் முன் இருந்த மணிமாறனின் மேல் பார்வை வைத்திருந்த வீகேவிற்கு மனதெல்லாம் சஞ்சலம், சந்தேகம்!
அமராவதியின் கண்ணீர் அவரை அசைத்துப் பார்த்தது, அதனையும்விட வேறொருவனுடன் வாழ நினைத்து தன் மகனைக் கொன்ற பெண் எப்படி அவர்கள் வீட்டு வாரிசை வயிற்றில் சுமக்க நினைக்கிறாள் என்பது புரியாத புதிராகவே இருந்தது.
இதில் சக்கரபாணி வேறு மகனுக்கு நடந்த கொலை முயற்சியில் உடைந்து போய் இருந்தவர், யாரென சீக்கிரம் கண்டுபிடிக்க அவசரப்படுத்தினார், அதையும் தாண்டி அடுத்த மாதம் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்துவிடும். இப்படி பலவித குழப்பங்கள், சிக்கல்கள்!
அன்பழகனுக்கு நடந்த கொலை முயற்சி குறித்து விசாரிக்க சொன்னாலும் கூட, மனதில் மணிமாறன் மேல் அழுத்தமாய் ஒரு சந்தேக விதை விழுந்திருக்க, அது எழுச்சிப்பெற்றதே தவிர கொஞ்சமும் குறையவில்லை. வெங்கட கிருஷ்ணனின் கவலை என்னவென்றால் பதவி மோகத்தில், வேகத்தில் அன்பழகனைக் கொல்ல மணிமாறன் நினைத்து எதாவது செய்திருந்தால் விசாரணையில் அவனல்லவா சிக்கிக் கொள்வான்?
கட்சிக்கும் தனக்கும் குடும்பத்துக்கும் சக்கரபாணியுடனான இத்தனை வருட நட்புக்கும் அல்லவா களங்கமாகிவிடும், அதனால் மணிமாறனை தனியே அழைத்திருந்தார்.
“என்ன பெரியப்பா அமைதியா இருக்கீங்க?” என்று மணிமாறனே பேச ஆரம்பித்தான்.
“மாறா! பெரியப்பா கேட்கிறதுக்கு உண்மையை சொல்லனும். ஒருவேளை நீ தப்பே பண்ணியிருந்தாலும் கூட உன்னை மன்னிச்சு இதுல இருந்து என்னால கொண்டு வரமுடியும்” என்று அவர் ஆரம்பிக்க
“எந்த உண்மையை சொல்லனும்?” என்றான் கடுப்பாக.
“இதோ, இந்த கோபம்தான் டா எனக்குப் பயமாயிருக்கு. நீ அன்பழகனைக் கொல்ல ஆள் அனுப்பல தானே?” என்றார் தீவிரமான குரலில்.
“பெரியப்பா” என்று அவன் கோபத்தில் எழ
“உட்காருடா” என்று அதட்டினார்.
அவர் சொன்னதைக் கேட்டு உட்கார்ந்தவனிடம் பெரிய மூச்சுகள், இன்னும் கோபம் குறையவில்லை. மாறாய்க் கூடியது மணிமாறனுக்கு.
“இப்பவும் நீ இப்படிதானே செய்ற” என்றதும்
“செய்யாத தப்பை செஞ்சதா சொன்னா எல்லாருக்கும்தான் பெரியப்பா கோவம் வரும், பெரியண்ணா இல்லாம போனதும் எனக்குத்தான் சீட் கிடைக்கும்னு நான் நினைச்சது உண்மைதான். ஆசைப்பட்டேன் இல்லைன்னு சொல்லல, ஏன்னா கவியண்ணாவுக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. அப்போ அடுத்து நான்னு நினைக்கறதில்ல என்ன தப்பு?” என்றவனை தீவிரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் வீகே.
என்னவோ உள்ளத்தில் தடம் புரளும் உணர்வு. அவன் பேச்சுக்குக் குறுக்கே பேசாமல் முன்னே இருந்தவனின் பேச்சில் முழு கவனம் வைத்தார்.
“இதான் உங்ககிட்ட எனக்குப் பிடிக்காதது பெரியப்பா, கோவம் இருந்துச்சு. அதுக்காக கொலை செய்ற அளவு போவேன்னா நான்? என்னை விட உங்களுக்கு உங்க ப்ரண்ட் பையன் முக்கியமான்னு பயங்கர கோவம், அதனால அன்னிக்கு சத்தம் போட்டேன், சண்டைப் போட்டேன். அவரைக் கொன்னுட்டு நான் ஜெயிலுக்குப் போனா என்னோட அரசியல் கனவு என்னாகிறது?” என்றான் தெளிவாக.
“அப்போ நீ நிஜமா ஒன்னுமே செய்யல? பொறுமையா பதில் சொல்லு மாறா” கண்டிப்பான குரலில் கேட்டார் வீகே.
“இல்லை பெரியப்பா” என்றான் மாறனும் கோபம் தவிர்த்து. அவனுக்குத் தெரியும் குடும்பத்திலும் சரி கட்சியிலும் சரி அவரைப் பகைத்து ஒன்னுமாகாது என்று. அதனால் அமைதியாய் பதில் சொன்னான்.
“சரி மாறா, எப்படியும் இளைஞரணி செயலாளர் போஸ்ட் காலியா இருக்கு, அதைப் பத்தி நான் தலைவர் கிட்ட பேசுறேன். நீ போ” என்றதும்
“தேங்க்ஸ் பெரியப்பா” என்று சொல்லி மணிமாறன் சந்தோஷமாகப் போய்விட
‘அடுத்து நான்னு நினைக்கறதில்ல என்ன தப்பு?’ இந்த வார்த்தைகள் பெரிய தாக்கத்தை வீகேவின் மனதில் விதைத்திருந்தன.
மணிமாறனே கார்வண்ணனுக்குப் பின் நான் என்று நினைத்திருக்கிறான் என்றால் என் மகன் இல்லாமல் போனால் இவன் அடுத்து என்ற யோசனை இவனுள் இருந்திருக்கிறது என்பது புரிய யார் மீதும் நம்பிக்கை வரவில்லை.
அன்பழகன், மணிமாறன், பரந்தாமன் என்று அத்தனை பேரின் மீதும் சந்தேகமாய் இருந்தது. ஆனாலும் அமரவாதி??
அவளுக்கு எதிரான ஆதாரங்கள், அவை சொல்லும் உண்மைகள், அவள் மறைத்த உண்மைகள் என்று மொத்தமாய் வீகேவை எல்லாம் சேர்ந்து குழப்பின.
மகன் இறந்தது பெரும் அதிர்ச்சி! ஏதோ உடல் நிலை சரியில்லாதவன், கெட்ட பழக்கமிருப்பவன் என்றாலும் கூட எதிர்ப்பார்த்திருப்பார், கார்வண்ணனோ அப்படி கிடையாது. அவரை விடவும் நல்லவன்! நேர்மையாவன்! அதுவும் அவனைக் கொன்றது அமரா என்றபோது இன்னும் அதிர்ச்சி.
மகனின் மரணத்தில் உண்டான அதிர்ச்சி அவரை அடுத்து என்னவென்று யோசிக்கவே விடவில்லை. அந்த நேரத்தில் அமராவதி குற்றவாளி என நிரூபணமாகிவிட வேறு சிந்தனையே இவரிடம் கிடையாது.
இப்போதோ அமராவதியின் பேச்சும் மணிமாறன் சொல்லிய வார்த்தைகளுமே ரீங்காரமிட, தனது நண்பர் பைட்ட பள்ளி மோகன்ராமுக்கு அழைத்தார்.
அவர் ஆந்திராவின் ப்ரகாசம் தொகுதி எம்பி. அரசியல் ரீதியாகவும் சரி தனிப்பட்ட முறையிலும் மோகன்ராம் வீகேவுக்கு நல்ல பழக்கம். வீகே ராஜ்ய சபா எம்பியாக சில வருடம் முன் இருந்தபோது மோகன்ராமும் எம்பியாக இருந்தார். இப்போது அவர் லோக் சபா எம்பி. அவரை அழைத்து பேசியவர் சிரஞ்சீவி பற்றி கேட்டறிந்தார்.
உள்துறை அமைச்சர் கதிர்காமம் அன்பழகன் வழக்கை விசாரிக்க சிரஞ்சீவியை நியமித்து இருப்பது தெரிந்தாலும், இன்னும் அவனைப் பற்றி விசாரித்து அறிந்துகொண்டார்.
மோகன் ராம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிரஞ்சீவியைப் பற்றி விசாரித்து சொல்ல, சிரஞ்சீவியைப் பற்றி மோகன்ராம் பெருமையாய் சொல்லியிருந்தார். உடனே அவனுக்கு அழைத்துவிட்டார், தனது மகனின் மரணத்தில் சந்தேகித்தவராக.
“எஸ்பி சிரஞ்சீவி ஹியர்” என்றவனின் கம்பீரக் குரல் கேட்ட நொடி
“அமைச்சர் வெங்கட கிருஷ்ணன் பேசுறேன் தம்பி” என்றார் அந்த பக்கம் இருந்த வீகே.
“சொல்லுங்க” என்று இவன் சொல்ல
“உங்க கிட்ட தனியா பேசனும் தம்பி, ரொம்ப பெர்சனல்” என்றதும் தன் அருகே நின்றிருந்த பரத்திடம் வெளியே போ என்பதாக சைகை செய்தவன் அவரிடம் பேசினான்.
“நீங்க எங்கிட்ட தனியா பேச என்ன இருக்கு?” என்றதும்
“இருக்கு தம்பி, நேர்ல வாங்க நீங்க” என்றவர் அவனை மோகன்ராமின் சென்னை கெஸ்ட் அவுஸீற்கு வர சொன்னார். சிரஞ்சீவிக்கும் கார்வண்ணனின் வழக்கு மனதில் உறுத்த அவனும் சம்மதித்தான்.
அவரிடம் பேசிய சிரஞ்சீவி பரத்தை உள்ளே அழைத்து
“பரத், கெட் மீ தி டீடெய்ல்ஸ் சூன். நான் வெளியே போய்ட்டு வரேன்” என்றதும்
“நானும் வரவா ஸர்?” என்று கேட்ட பரத்தை அழுத்தமாய்ப் பார்த்தவன்
“சொன்னதை செய்ங்க” என்றதுடன் வேகமாக வெளியேறி விட்டான்.
‘எங்க போறார் இவர்?’ என்று பரத்திற்கு யோசனை சென்றாலும் அவன் வருவதற்குள் எல்லா வேலைகளையும் முடிக்க நினைத்தான்.
*******************
வெங்கட கிருஷ்ணனிடம் பேசிவிட்டு வந்த சீரஞ்சீவியின் மனதில் நிறை கேள்விகள் உலா வந்தன. பரத்தை அழைத்து கார்வண்ணனின் கேஸ் ஃபைலைக் கேட்டவன் அதைப் படித்தான்.
“அமராவதி.!” என்று உச்சரித்தன அவனின் இதழ்கள். அந்த சத்தம்கேட்டு பரத் அவனைப் பார்க்க
“ஸோ அமராவதிதான் அவங்க ஹஸ்பண்டோட டெத்குக் காரணம்?” என்று சிரஞ்சீவி பரத்தைப் பார்க்க
“எஸ் ஸர், வெல் ப்ளாண்ட் மர்டர்” என்றான்.
“இந்த கேஸ்ல அமராவதியோட எக்ஸ் லவ்வர் சந்தோஷ்க்கு என்ன பங்கு? அவனை ஏன் அரெஸ்ட் செய்யல?” என்று கேட்க
“ஸர், அவனுக்கு இதுக்கும் சம்மந்தமில்ல போல. அக்சுவலி இந்த அமராவதிதான் மேரேஜ் ஆன பின்னாடியும் சந்தோஷ் கூட பேசிட்டு இருந்திருக்காங்க, அவங்க ஹஸ்பண்டோட வாழ பிடிக்கலன்னு சொல்லி சந்தோஷை மேரேஜ் செய்ய ஆசைப்பட்டிருக்காங்க. சந்தோஷுக்கு இதுல விருப்பமில்லை” என்று சொன்னதும் நக்கலாய் ஒரு சிரிப்பு சிரஞ்சீவியிடம். அதைப் பார்த்து பரத்
“என்னாச்சு ஸர்?” என்றதும்
“அது எப்படி பரத் தன்னோட லவ்வர் சேர்ந்து வாழ ஒத்துக்காத போதும் கூட ஒரு பொண்ணு லைஃபை ரிஸ்க் எடுத்து ஹஸ்பண்ட், அதுவும் மினிஸ்டரோட சன்னைக் கொல்ல நினைப்பா? இந்த விஷயம் தப்பா தெரியல, சந்தோஷும் இதுக்கு உடந்தையா இருக்கனும். அவனுக்கு எதிரா ஸ்ட்ராங்க் எவிடன்ஸ் இல்லாம இருக்கலாம்”
“அமராவதி ஒருவேளை ஹஸ்பண்ட் இல்லாம போய்ட்டா அதுக்கு அப்புறம் சந்தோஷ் தன்னை ஏத்துக்குவான்னு நினைச்சிருக்கலாமில்லையா?” என்று பரத் சொன்னதும் சிரஞ்சீவி தனது வலக்கை கட்டை விரலால் தலையை அழுந்த தேய்த்தான்.
“நம்மதான் ஸர் லேடீஸ்னா பாவம் பார்க்கிறோம், இப்பவெல்லாம் பெத்த குழந்தைங்களைக் கூட இந்த மாதிரி கள்ளக்காதலுக்காக கொல்றாங்க ஸர்” பரத் கோபமாய் சொல்ல
“நோ பரத், என்னைப் பொறுத்தவரை ஆண் பெண்ணு வித்யாசம் கிடையாது. என்னோட பார்வையில் குற்றவாளி, நிரபராதினு இரண்டே பேர்தான்” என்றான் பரத்தின் மனதினைப் படித்தவனாக.
பரத் கொஞ்சம் தயக்கத்துடன் “ஸர், நம்ம அன்பழகனோட கேஸைத் தானே பார்க்கனும், முடிஞ்சு போய் ஜட்ஜ்மெண்ட் வந்த கார்வண்ணன் கேஸை ஏன் இவ்வளவு யோசிக்கனும்?” என்று சந்தேகத்தைக் கேட்டுவிட
“அன்பழகன் கேஸ் ஆரம்பிச்சது கார்வண்ணன் கேஸ்லனு எனக்குத் தோணுது, ஏன் அன்பழகனே கார்வண்ணனை கொல்ல நினைச்சிருக்க கூடாது?” என்றதும்
“நோ சான்ஸ் ஸர், அவங்க இரண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ப்ரண்ட்ஸ், அவ்வளவு க்ளோஸ். அதைவிட அமராவதியோட மோடிவ் அண்ட் அவங்களுக்கு எதிரானா எவிடன்ஸ்லாம் ஸ்ட்ராங்க் ஸர், நோ கேஸ் ஆஃப் டவுட்” என்றான் தீர்மானமாக.
“கார்வண்ணன் இல்லாம இருந்தா யாருக்கெல்லாம் நன்மை? டெல் மீ?” என்று பரத்திடம் கேட்டவன் நோட்பேடை எடுத்து எழுத ஆரம்பித்தான்.
“அன்பழகன், அமராவதி” என்று பரத் சொல்ல இருவரின் பெயரை எழுதிய சிரஞ்சீவி
“தென் வீகேவோட இரண்டாவது சன்” என்றதும்
“கவியரசனுக்கு பாலிடிக்ஸ்ல ஆர்வம் இல்லை ஸர்” பரத் உறுதியாய் சொன்னான்.
“அண்ணனோட பதவி வேண்டாம்னா, அவன் இல்லைன்னா சொத்தெல்லாம் கவியரசனுக்கு வருமில்லையா? நெக்ஸ்ட்” என்று கவியரனின் பெயரையும் எழுதினான்.
“ஸர், மணிமாறன்” என்றபோது பரத்தின் கண்களில் ஆர்வம் கொட்டியது.
“என்ன இந்த ரியாக்ஷன் பரத்?” சிரஞ்சீவி கேட்க
“இல்லை ஸர், நீங்க சொல்றதை வைச்சுப் பார்க்கும்போது கார்வண்ணன் அன்பழகன் இரண்டு பேரும் இல்லைன்னா பெனிஃபிட் இருக்க ஆள் மணிமாறன், மினிஸ்டரோட தம்பி மகன். அரசியல்ல ரொம்ப ஈடுபாடு, கார்வண்ணனுக்கு அப்புறம் அவன்தான்னு ஒரு பேச்சு, ஆனா அன்பழகனுக்கு சீட் கொடுக்கவும் இந்த மணிமாறன் கலாட்டா செஞ்சார்னு கூட ஒரு நியுஸ் “
பரத் சொல்வதைக் கேட்டவனுக்கு வீகே சொன்னது நினைவில் வந்தது.
‘எனக்கு என்னோட குடும்பத்தைக் கூட நம்ப முடியல தம்பி, யாரா இருந்தாலும் சரி, என் கார்வண்ணனைக் கொன்னவங்களை நான் சும்மா விடப்போறதில்லை, யாரையும் என்னால நம்ப முடியல. அதான் உங்களை நம்பி இந்த வேலையைத் தரேன்’ என்றவர் அமராவதியைப் பற்றியும் சொல்லியிருக்க
“எமோஷன்ஸை நம்பாதீங்க ஸர், எவிடன்ஸ் முக்கியம். அவங்களுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து ரிசல்ட் வரட்டும்” என்று சொல்லி வைத்தான்.
பரத் சொல்ல சொல்ல கேட்ட சிரஞ்சீவிக்கு கார்வண்ணன் ஒருத்தன் இல்லையென்றால் இத்தனை பேருக்கு சந்தோஷமா என்று நினைத்து
“பரத், நீங்க எல்லாரோட போன் கால்ஸ் ட்ரேஸ் பண்ணுங்க, ரிசண்ட் ட்ரான்சாக்ஷன்ஸ், கூடவே கார்வண்ணன் இறக்கறதுக்கு முன்னாடி ஒரு த்ரீ மந்த்ஸ் பேக் இவங்களோட ஆக்டிவிட்டிஸ் எல்லாம் செக் செய்யுங்க” என்றதும் பரத் வெளியே செல்ல
“பரத்! சந்தோஷை வாட்ச் பண்ணுங்க, அவன் புதுசா எதாவது பிஸீனஸ், இல்லை வீடு எதாவது வாங்கியிருக்கானா பாருங்க. கீப் என் ஐ ஆன் ஹிம்” என்று சொல்லி அனுப்பினான்.
சிரஞ்சீவியின் பேச்சைக் கேட்ட பரத்திற்கு அமராவதி மேல் கரிசனம் காட்டுவது போல் தோன்றியது. ஆனால் அது எல்லாம் அமராவதியும் சிரஞ்சீவியும் நேருக்கு நேர் சந்திக்கும்வரையில்தான். சிரஞ்சீவி ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் பார்க்க மாட்டான் என்பது அவன் அமராவதியை விசாரித்த போது தெளிவாய் விளங்கியது பரத்துக்கு.
இதற்கிடையில் சிரஞ்சீவி சொன்னது போல் அமராவதியின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது, வெங்கட கிருஷ்ணன் அதனை மிகுந்த ரகசியமாய் வைத்திருந்தார். முடிவுகளுக்காக காத்திருந்த நேரத்தில் தனது விசாரணையைத் தீவிரமாக்கினான் சிரஞ்சீவி.