வண்ணம் – (25)
அபிஷேக் சட்டையை பிடித்த ரித்விக், “நீ எதுக்கு டா அவள அரெஸ்ட் பண்ற?” என்றிட “மினிஸ்டர் பையன் கொலை கேஸ்க்காக” என்றான்.
இவர்கள் பேசுவதை கேட்டு இந்து வெளியே வர ரித்விக், அபிஷேக் சட்டையிலிருந்து கையை எடுத்து விட்டு “அவ மூஞ்சிய பாருடா. அவ குழந்தைடா, கொலை பண்ணானு சொல்ற” என்றான்.
அபிஷேக், “டேய் அவ எனக்கு தங்கச்சிடா. எனக்கு தெரியாதா அவள பத்தி, ஆனால் ஆதாரம் அவளுக்கு எதிரா இருக்குடா. இது மேல் இடத்தோட ஆடர்டா. என்னால எதுவும் பண்ண முடியாது. இப்ப நான் இவள கூட்டிட்டு போறேன். நீ லாயரை கூட்டிட்டு வாடா. ஜாமீன் டிரை பண்ணலாம்” என்றிட ரித்விக், “இந்துவ நீ கூட்டிட்டு போக கூடாது” என தடுக்க “புரிஞ்சுக்கோடா இப்ப நான் கூட்டிட்டு போகணும். நம்ம லாயரை வைத்து கோர்ட்ல நம்ம இந்துவை நிரபராதி என்று வெளியே கொண்டு வரலாம்” என்றவன் இந்துவை அழைத்துச் செல்ல கண்ணீர் வழியும் கண்களோடு அவனை திரும்பி பார்த்தவள், வண்டியில் ஏறிச் சென்று விட்டாள்.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன், சுவற்றில் ஓங்கி குத்த அவன் கைகளிலிருந்து ரத்தம் வழிந்தது. வேகமாக உள்ளே சென்றவன் வழக்கறிஞர் நம்பருக்கு அழைத்து விவரத்தைக் கூறி போலீஸ் ஸ்டேஷன் வருமாறு கூறியவன் போலீஸ் ஸ்டேஷன் விரைந்தான்.
கொலை வழக்கு என்பதால், அங்கு ஜாமீன் தரமுடியாது என்று மறுத்து விட்டனர். விஷயம் அறிந்து சாரதாவும் மீனாட்சியும் ரித்விகிற்கு அழைத்தனர்.
சுந்தரராஜன், “ரித்விக் என்னாடா நடந்துச்சு. நியூஸ்ல சொல்றது உண்மையா? இந்துவ அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?” என்றிட “ஆமாம்ப்பா, ஜாமீன்ல கூட விடமாட்றாங்க. அவ பாவம், யாருக்குமே கனவுல கூட துரோகம் நினைக்கமாட்டா. அவளை போய் கொலை கேஸ்ல உள்ள தள்ளீட்டாங்க…. எனக்கு என்ன பண்றதுனே தெரியலைப்பா” எனக் கூற “நீ கவலைப்படாதடா, இந்து மேல தப்பு இருக்காது. கண்டிப்பா அவள் வெளியில வந்துருவா. இரு நாங்க உடனே கிளம்பி வர்றோம்” என்று கூறியவர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டார்.
சதாசிவம் நியூஸை பார்த்து விட்டு கஜேந்திரன் தொடர்பு கொண்டு “டேய் டி.வில பார்த்தியா, அவங்க சொல்லுறது உண்மையா? என் புள்ளைய கொலை பண்ணது அந்த பொண்ணு தான.”
கஜேந்திரன், “ஐயா! அவங்க சொல்றது உண்மை தான். நான் விசாரிச்சுட்டேன்.”
சதாசிவம், “அப்ப அவளைக் கொல்லாம விட கூடாது. கோர்ட்டுக்கு வரும் போது நம்ம ஆளை வைச்சு போட்டுத் தள்ளிடு.”
“சரிங்கய்யா நீங்க சொன்ன மாதிரி செய்கிறேன்” எனக் கூறி அழைப்பை துண்டித்தான்.
ரித்விக், அபிஷேகை தொடர்பு கொண்டு “டேய் ஜாமீன் கிடைக்கலைடா. இப்ப என்ன பண்றது” என்று வினவ “நானும் ட்ரை பண்ணேன். எதுவுமே பண்ண முடியலை. இன்னும் ரெண்டு நாள்ல கோர்ட்டில ஆஜர் பண்ணுவாங்க. அங்கு வந்து வழக்கறிஞரை வைத்து ஜாமீன் வாங்கலாம்.”
“ரெண்டு நாள், அவ அங்க தான் இருக்கணுமா? வேற எதுவும் பண்ண முடியாதா?”
அபிஷேக், “எனக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. ஆனா என்ன பண்றது தெரியலை. நான் எல்லா வகையிலும் முயற்சி பண்ணீட்டேன்.”
ரித்விக், ” நான் ஒரு தடவை இந்துவைப் பார்க்க முடியுமா?” என்று வினவ சிறிது நேரம் யோசித்தவன் , “சரி வாடா” எனக் கூறி அழைப்பை துண்டித்தான்.
சுந்தரராஜன், “என்னப்பா என்ன சொல்றாங்க.”
ரித்விக், “இரண்டு நாள் கழிச்சு கோர்ட்ல தான் ஜாமீன் வாங்க முடியும்னு சொல்லீட்டான்ப்பா” என்றுக் கூற,
சாரதா, “ஐயோ என் பொண்ணு இரண்டு நாள் ஜெயில்ல தான் இருக்கணுமா? அவ எந்த தப்புமே பண்ண மாட்டாளே… அவள போய்” எனக் கதறியவர் அப்படியே மயங்கி விழுந்தார்.
மீனாட்சி ஓடிவந்து அவரை தூக்க, ரித்விக் சாரதா முகத்தில் தண்ணீர் தெளித்தான். அவள் கண்விழிக்க ரித்விக், “அத்தை நீங்க கவலைப்படாதீங்க, என்ன நம்புங்க, இந்து என் பொண்டாட்டி. அவள இந்த பிரச்சினையில் இருந்து வெளியே கொண்டு வரது என்னோட முழு பொறுப்பு” என்றான்.
சுந்தரராஜன், “சாரதா இந்து எங்க வீட்டு பொண்ணு. அவளுக்கு ஒரு பிரச்சனைனா நாங்க சும்மா விடுவோமா. நீ பயப்படாத நாங்க லாயர் கிட்ட பேசுறோம். தைரியமா இரு. இப்படி அழுது உடம்ப கெடுத்துக்கிட்டா நாங்க உன்ன நெனச்சு கவலைபடுறதா இல்ல இந்துவ பார்க்கிறதா?” என்றவர் “மீனாட்சி சாரதாவ உள்ள கூட்டிட்டு போ” என்றார்.
ரித்விக், “அப்பா நான் போய் இந்துவ பார்த்துட்டு வரேன்” எனக் கூறி கிளம்ப அஸ்வின் நானும் வரேன் என்றிட அவனையும் அழைத்துச் சென்றான்.
அங்கு சென்றவர்கள் அபிஷேக்கை பார்க்க “ரித்விக் இரண்டு நிமிஷம் தான், பார்த்துட்டு வேகமா வா. இதுவே அன்அபிசியலா தான் நான் பண்றேன்” என்றுக் கூறி அவனை உள்ளே அனுப்பினான்.
அங்கே இந்து ஒரு டேபிளில் அமர்ந்து இருக்க வேகமாக அவளை நோக்கிச் சென்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.
அவள் முகத்தை நிமிர்த்தி வழியும் கண்ணீரைத் துடைத்தவன் “நீ பயப்படாத, நான் இருக்கேன். கண்டிப்பா உன்ன இதிலிருந்து வெளியில் கொண்டு வருவேன்” எனக் கூற அவன் கையை விலக்கி்யவள் “எனக்கு டிவோர்ட்ஸ் வேணும். நான் கொலை கேஸ்ல உள்ள வந்துட்டேன்னு சொல்லி அப்ளை பண்ணு, கண்டிப்பா கிடைச்சுடும். நீ வேற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள்.
கோவமாக அவளை அடிக்க கை ஓங்கியவன், “என்ன பத்தி நீ என்ன நினைக்கிறடி. உனக்கு பிரச்சனைனு வந்தா விட்டுட்டு போயிடுவேன்னு. எப்ப பார்த்தாலும் டிவோர்ட்ஸ் வேற வார்த்தையே பேச மாட்டியா?” என்று சொல்ல அதை தூரத்திலிருந்து பார்த்த அஸ்வின் வேகமாக ஓடி வந்து அவன் தோளைத் தொட ரித்விக் கையை கீழே இறக்கி விட்டான்.
அஸ்வின், “என்னடா ஆச்சு, ஏன் இப்படி பண்ற?” எனக் கேட்க தன் தோளிலிருந்த அவனது கையை தட்டி விட்டு வேகமாக வெளியே சென்று விட்டான்.
அஸ்வின், “இந்து என்ன ஆச்சு, எதுக்கு அவன் இப்படி பண்றான்” என்று வினவ அவள் எதுவுமே கூறாது மௌனமாகக் கண்ணீர் சிந்தினாள்.
அவள் கண்ணீரை துடைத்து விட்டு “பயப்படாத நாங்கள் இருக்கோம். சீக்கிரமே உன்னை வெளிய கூட்டிட்டு வந்திடுவோம்” எனக் கூறி வெளியேற இருவரும் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
அஸ்வின் வண்டி ஓட்ட ரித்விக் பக்கத்து சீட்டில் கண்மூடி சாய்ந்திருந்தான்.
அஸ்வின், “ரித்விக் இந்துக்கிட்ட எதுக்கு அப்படி நடந்துகிட்ட. அவ எப்படி அழுகுறா பாரு. எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றிட தலையை நிமிர்த்தி அவனை பார்த்தவன் “எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா? அவ டிவோர்ட்ஸ் கேட்குறாடா” என்றான்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஸ்வின், “என்னடா சொல்ற” என்று வினவ,
“ஆமாடா, அதனால் தான் நான் டென்ஷன் ஆகி அவளை அடிக்க கை ஓங்கினேன்” என்று கூறியவன் அபிஷேக் மொபைல்க்கு அழைப்பு விடுக்க அது ஏற்கப்பட்டவுடன் “அபி எனக்கு ஒரு உதவி பண்ணுடா” என்று கூற “சொல்லுடா என்னால முடிஞ்சா கண்டிப்பா பண்றேன்.”
“இந்துவுக்கு எதிராக ஆதாரம் இருக்குன்னு சொன்னியே. அது என்னது மட்டும் சொல்ல முடியுமா?”
அபிஷேக், “இல்லடா இந்த கேஸ் ஒன் வீக் முன்னாடி தான் நான் என் உயர் அதிகாரி கைக்கு போச்சு. மினிஸ்டர பையன்றதால் பிரஷர் அதிகம்டா. அதனால தான் என்னால எந்த உதவியும் பண்ண முடியலை. நாளைக்கு கோர்ட்ல தான் சப்மிட் பண்ணுவாங்க. அப்ப தான் எனக்கே தெரியும். என்னால் எதுவுமே பண்ண முடியாது. சாரிடா.”
ரித்விக், “சரி பரவாயில்லை, நான் பாத்துக்கிறேன்” எனக் கூறி அழைப்பை துண்டித்தான். அஸ்வின் மொபைலுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க அவன் துண்டித்துக் கொண்டே இருந்தான். ரித்விக், “யாரு என்று பாருடா” என்றுக் கூற “வித்யா தான்டா கூப்பிடுறா, அப்புறம் பேசிக்கிறேன்” என்றான்.
இந்து இரண்டு நாள் கழித்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டாள். மற்றவர்களை வீட்டில் விட்டுட்டு அஸ்வின், ரித்விக் மட்டுமே கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.
இந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டாள். அரசு தரப்பில் “மினிஸ்டர் மகன் ஆர்யா கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த கேமராவை ஆராய்ந்த போது ஆர்யாவின் வண்டி அடுத்த இந்துவின் வண்டியைத் தவிர எந்த வண்டியும் அரைமணி நேரத்திற்கு செல்லவில்லை மற்றும் அதற்குப் பின் இந்து வண்டி மட்டும் அப்பகுதியை கடந்து உள்ளது. மேலும் ஒரு செயின் அந்த இடத்தில் இருந்து கிடைத்ததாகவும் அது இந்துவினுடையது என்று உறுதி செய்யப்பட்டதாகவும்” கூறப்பட்டது. மேலும் குற்றவாளியை வெளியே விட்டால் சாட்சியை கலைக்க நேரிடும். அதனால், பதினைந்து நாள் அரசு காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
ரித்விக் தரப்பு வழக்கறிஞர் வாதாடியும் பலன் கிடைக்காமல் இந்துவை பதினைந்து நாட்கள் அரசு காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
இந்துவை போலீஸ் ஜீப்பில் ஏற்ற பின்னாடி வேகமாக ஓடி வந்து ரித்விக், “நான் இவங்க ஹஸ்பெண்ட். ஒரு இரண்டு நிமிஷம் இவங்ககிட்ட பேசலாமா?” என அந்த போலீஸ்கார பெண்மணியிடம் கேட்க “இரண்டு நிமிஷம் தான். வேகமா போயிட்டு வாங்க” எனக் கூறி அனுப்பினார்.
சோர்வான அவளது முகத்தையும் மெலிந்த உடலையும் கண்டவன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க அதை அவளிடம் காட்டாமல்
மறைத்தவன் அவளைப் பார்த்து “மினிஸ்டர் பையன் கேஸ்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம். உன் செயின் எப்படி அங்க போச்சு” என்று வினவ அவள் மௌனத்தையே பதிலளித்தாள்.
“வாயை தொறந்து பேசுடி. ஏதாவது சொன்னால் தான உன்னை இதுல இருந்து காப்பாத்த முடியும். என்னால முடியலைடி, கொஞ்சம் கொஞ்சமாக செத்துகிட்டு இருக்கேன்.”
இந்து, ” இதுல எனக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் என்று எனக்கு தெரியும். அதான் என்னை விட்டு விலகிப் போனு சொன்னேன். எனக்காக உன்னோட வாழ்க்கையும் அழிச்சுக்காத” எனக் கூறியவள் வண்டியை நோக்கி புறப்பட்டாள்.
செல்லும் அவளது முதுகையே வெறித்து பார்த்தவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவனது தோளை தொட்டு அஸ்வின் திருப்ப அவனது கண்களில் வழியும் கண்ணீரைக் கண்டு “டேய்! நீ எதுக்குடா அழுகுற. கண்டிப்பா நம்ம அவள இதிலிருந்து வெளியே கொண்டு வரலாம்.”
ரித்விக், “நானும் அப்படி தான் நினைச்சேன். ஆனா ஆதாரத்தை பார்த்தா கண்டிப்பா அவளுக்கும் இந்த கேஸ்க்கும் சம்பந்தம் இருக்குனு தோனுது. நீ நினைக்கிற மாதிரி அவள வெளிய கொண்டு வரது அவ்வளவு ஈஸி இல்ல. என்ன நடந்ததுனு முழுசா தெரிஞ்சா தான் அவள எப்படி வெளிய கொண்டு வரதுனு யோசிக்க முடியும். அதுவும் இல்லாம இந்த கேஸ்ல சம்பந்த பட்டிருக்கிறது மினிஸ்டர் பையன். அதனால பிரஷர் அதிகமா இருக்கும். எனக்கு என்ன பண்றதுனே தெரியலை. அவ என்னை விட்டு போய்டுவாளோனு பயமா இருக்குடா” எனக் கூற,
அஸ்வின், “குழப்பமா இருக்கும் போது யோசிச்சா எந்த வழியும் கிடைக்காது. வா பொறுமையா யோசிப்போம். நிச்சயம் நமக்கு ஏதாவது க்ளு கிடைக்கும். அந்த பதினைந்து நாள் டைம் நமக்குனு நினைச்சுக்கிட்டு தேடுவோம். ஏதாவது கிடைக்கும் இந்த ஊர்லயே பெரிய வக்கீலா பார்ப்போம். நீ நம்பிக்கை மட்டும் தளர விடாத” என்று கூற தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவன் “நீ சொல்றது சரி தான். என்னால முடியும். கண்டிப்பா நான் அவளை வெளியே கொண்டு வருவேன்” என்றான். அதை கேட்ட அஸ்வின் ” இப்பதான்டா நீ எனக்கு அண்ணன் மாதிரி பேசுற. வா வீட்டுக்கு போகலாம் என கூறி அவனை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வண்ணங்கள் மிளிரும்…