வண்ணம் – (27)
கல்யாணம் என்று சொன்னவுடனே எனக்கு ரித்விக் நியாபகம் வந்துச்சு. ஆனா இப்ப அதை பத்தி சொல்லி என் அப்பா மனச கஷ்டப்படுத்த விரும்பலை. என் மனச கல்லாக்கிட்டு “நீங்க எது செஞ்சாலும் சரிதான்” என்று என் முடிவ மறைமுகமா சொல்லிட்டேன்.
அவர் “ரொம்ப சந்தோஷம்மா, நான் கூட நீ யாரையாவது லவ் பண்றேனு சொல்லிடுவேனு பயந்தேன்” என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.
நம்ம சொசைட்டி எவ்வளவோ வளர்ந்து இருந்தாலும் பொண்ணுங்க லவ் பண்றது தப்பா தான் நினைக்கிறாங்கனு தோனுச்சு. நல்லவேளை நான் ரித்விக் பத்தி சொல்லி எங்க அப்பாவ கஷ்டப்படுத்தலைனு நினைச்சேன்.
“எனக்கு ஒன்னும் இல்ல. உன் கல்யாணத்தில் நான் எப்படி வேலை பார்க்கிறேன் பாரு” என்றார். எனக்கு என் சந்தோசத்தை விட அவரோடு சந்தோஷம் தான் பெருசா தெரிஞ்சுது. நான் ரெண்டு நாளைக்கு அப்புறம் ஊருக்கு கிளம்பிட்டேன்.
ஒரு வாரம் கழித்து அப்பா போன் பண்ணார். ரொம்ப சந்தோஷமா பேசினார். மாப்பிள்ளை பார்த்துட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு, “மாப்பிள்ளை யார்னு தெரியுமா” என்று சொல்லும் போதே அதை கேட்க எனக்கு விருப்பமில்லை.
“அப்பா வேலை இருக்கு அப்புறமா கூப்பிடுறேன். உங்களுக்கு பிடிச்சருந்தா எனக்கு ஓகே தான்” என்று சொன்னேன். “இருந்தாலும் நீ ஒரு தடவை போட்டோ பாரும்மா. போட்டோ அனுப்புறேன்” என்று சொன்னார்.
“நான் மேலும் எதுவும் பேச விரும்பாமல் சரின்னு சொல்லி போனை வைத்து விட்டேன். அந்த போட்டோவை பார்க்கவே இல்லை”
என படித்துக் கொண்டிருக்கும் போது இடையே பக்கத்தை திருப்பி ரித்விக் ஆராய்ச்சி செய்ய அஸ்வின் “என்னடா ஆச்சு. எதுக்கு திருப்பற. மீதியப்படி” என்றான்.
ரித்விக், “இல்லடா இடையில ரெண்டு பக்கம் இல்ல பாரு. கிழிச்சு இருக்கு” என்று காட்ட அதை வாங்கிப் பார்த்தவன் “அட ஆமால்ல இங்கே பாரு. கிழிச்ச பிசிறு கூட இருக்கு. சரி மீதிய படி கடைசில பார்ப்போம்” என்று கூற “சரி” என கூறி விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.
அந்த நிகழ்வுக்கு அப்புறம் எனக்கு சரியா தூக்கமில்லை. ரொம்ப பயமா இருந்துச்சு. ‘கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது’ என்று நினைச்சு அழுதேன்.
அப்ப தான் அம்மா கால் பண்ணாங்க. நான் அழுதுட்டு பேசினதால் “என்ன ஆச்சு. ஒரு மாதிரியா பேசுற” என்று கேட்டாங்க. நான் உடம்பு சரியில்லைன்னு சொல்லி சமாளிச்சேன். இரண்டு நாள்ல நிச்சயம். அப்புறம் ஒரு வாரத்துல கல்யாணம். அதனால லீவ் போட்டுட்டு வீட்டுக்கு வர சொன்னாங்க.
எனக்கு அதுல விருப்பம் இல்லை. ஆனா அப்பாவுக்காக கிளம்பீட்டேன். அம்மா தான் மேக்கப் எல்லாம் போட்டு விட்டாங்க. எல்லோரும் சந்தோஷமா இருந்தாங்க. எனக்கு மட்டும் கஷ்டமா இருந்துச்சு.
என்னால அந்த பையனோட லைஃப் வேஸ்ட் ஆகக் கூடாதுன்னு நினைச்சு கல்யாணத்தை நிறுத்தலாம் என்று யோசித்தேன். ஆனால் அப்பா முகம் தான் ஞாபகம் வந்துச்சு. அதுக்கு அப்புறம் நான் வேற எதுவும் யோசிக்கிற நிலையில நான் இல்லை. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. நிச்சயத்துக்கு பொண்ண கூட்டிட்டு வாங்க என்னு சொன்னப்ப அம்மா என்ன கூட்டிட்டு போனாங்க. நான் யாரையும் நிமிர்ந்து பார்க்கலை. குனிஞ்சு கிட்டே இருந்தேன். பொண்ணு மாப்பிள்ளைய மோதிரம் மாத்திக்க சொன்னாப்ப தான் நிமிர்ந்து பார்துதேன்.
அங்க ரித்விக் நின்று அழகா சிரிச்சான். அந்த ஒரு நிமிஷம் என்னோட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆளு கொஞ்சம் மாறி இருந்தான். ஆனால் முகம் மட்டும் சின்ன வயசுல இருந்த மாதிரி அப்படியே இருந்துச்சு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. அவன் என் கையில் மோதிரம் போட்டப்ப தான் நான் சுயநினைவு பெற்றேன். நானும் அவன் கையில் மோதிரம் போட்டேன். போட்டோ எல்லாம் எடுத்தாங்க. மீனாட்சி அத்தை அஸ்வின் எல்லார்மே வந்து பேசினாங்க. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அப்புறம் எல்லார்மே கிளம்பிட்டாங்க. அம்மாவும் அப்பாவும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க.
திரும்பவும் ரூம்க்கு போனதுக்கு அப்புறம் எனக்கு அந்த ஞாபகம் வந்துருச்சு. என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். என்னால கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்த முடியாது. அதனால ரித்விக்கிட்ட உதவி கேட்கலாம்னு அவனுக்கு போன் பண்ணி தனியா பேசணும்” என்று கூப்பிட்டேன்.
அவனும் வந்தான். எனக்கு கல்யாணம் பிடிக்கலை நிறுத்திடு என்று சொன்னனேன். அவன் ஆழமா என்ன பார்த்து “நான் ஒன்னு கேக்குறேன். பதில் சொல்லு. அப்புறம் நீ சொன்னத பத்தி நான் யோசிக்கிறேன்” என்றான்.
நான் சரின்னு தலையாட்டினேன். அவன் “யாரையாவது லவ் பண்றியா” என கேட்டான். நான் வேகமாக நிமிர்ந்து பார்த்து இல்லை என்று தலையை ஆட்டினேன். அப்புறம் ஏன் கல்யாணத்தை நிறுத்த சொல்றேன்னு கேட்டான். நான் எதுவுமே சொல்லாமல் தலையை குனிஞ்சுகிட்டேன்.
என் கண்னை பார்த்து என்ன பிடிக்கலை என்று சொல்லு நான் போறேன்னு சொன்னான். நான் பாவமாக முகத்தை வச்சிகிட்டு அவனை பார்த்தேன். அவனுக்கு நான் சொல்ல மாட்டேன்னு தெரியும் போல, அவன் சிரிச்சான்.
அப்புறம் நாங்க ஆடர் பண்ண காபியை குடித்தோம். அவன் எழுந்து இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். வெயில்ல சுத்தி கருத்து போயிடாதனு நக்கல் பண்ணீட்டு கிளம்ப ரெடியானான்.
ரித்விக் “நான் சொன்னது” என்று கேட்டேன். அவன் “நீ போய் உங்க அப்பாகிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்து” என்று சொன்னான். நான் அவனை முறைச்சேன்.
அவன் எதுவுமே சொல்லாமல் கண்ணாடியை ஸ்டைலா மாட்டிகிட்டு போயிட்டு வரேன் பேபி அப்படின்னு சொல்லிட்டு என் கன்னத்தை தட்டிட்டு கிளம்பீட்டான்.
அதுக்கு அப்புறம் கல்யாணம் நடந்துச்சு எனக் கூறி அனைத்தையும் கூறியிருந்தாள்.
அதை படித்தவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதை துடைத்த அஸ்வின், “கவலைப்படாதடா, கண்டிப்பா சீக்கிரமே இந்து உன்கிட்ட வந்து விடுவா” என்றிட
“ம்ம்…” என தலையாட்டியவன் வீட்டைப் பூட்டி விட்டு டைரியை தன்னுடன் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அஸ்வின், “அந்த நேரத்துல என்ன நடந்துச்சுன்னு இந்துவா சொன்னால் தான் தெரியும். இல்லைனா வேற வழியே இல்லை” என்று கூற ரித்விக், “அவளைப் பார்க்க முடியுமானு தெரியலை. முயற்சி பண்ணி பார்ப்போம்” என்றவன் வண்டியை வீட்டை நோக்கி செலுத்தினான்.
வீட்டிற்கு வந்தவன் மனம் நிலையில்லாமல் தவித்தது. ரூம்க்குள் நுழைந்தவன் கட்டிலில் படுத்து கண்களை மூட இந்துவின் முகமே கண்முன் தோன்றியது. ‘என்னை எவ்ளோ லவ் பண்ணி இருக்க. அப்புறம் ஏன்டி என்ன விட்டுட்டு போன. நீ என்கூட இருக்கும்போது தெரியாத வலி இப்ப தெரியுது டி. ஆனா கண்டிப்பா என்னைய விட்டு போக விடமாட்டேன்’ என்று ஒரு மனது கூற மற்றொரு மனது ‘அது எப்படி காப்பாற்ற முடியும்’ எனக் கூறி அவனை தவிக்க செய்தது.
இப்படியே இரண்டு நாட்கள் நகர்ந்து. ரித்விக் மொபைல் ஒலித்து. அழைப்பை ஏற்றவன் “ஹலோ” என்றிட எதிர் திசையில் “ரித்விக் நான் ரோஹித் பேசுறேன்.”
“சொல்லுங்க ரோஹித்.”
“நானும் சுஷ்மியும் ஆஸ்பிட்டல் விஷயமா வெளிநாடு போயிட்டோம். இன்னைக்கு தான் வந்தேன். இப்ப தான் நியூஸ் கிடைச்சது. இந்துவ எதுக்கு அரெஸ்ட் பண்ணாங்க. அவளுக்கு அந்த பையனுக்கும் எந்த சம்பந்தம்.”
“தெரியலை ரோஹித். என்ன நடக்குதுனு எனக்கே புரியலை.”
“ரித்விக் நீங்க கவலைபடாதீங்க. எங்க லாயர் இருக்கார். எந்த கேஸ் எடுத்தாலும் கண்டிப்பா வெற்றி தான். நாளைக்கு வாங்க
நம்ம போய் அவரை பார்ப்போம்.”
“சரி ரோஹித் கண்டிப்பா நாம போகலாம்.”
“அப்புறம் ரித்விக் இந்துவ ஒரு தடவை பார்க்கலாமா? விஷயம் தெரிச்சதிலிருந்து சுஷ்மி ரொம்ப அழுகுறா.”
“சரி அவகிட்ட போனை கொடு. நான் பேசுறேன்” என்றிட ரோஹித் மொபைலை சுஷ்மியிடம் கொடுத்தான்.
ரித்விக், “ஹலோ சுஷ்மி.”
“சொல்லு ரித்விக், நீ இருந்தும் எப்படி அவளை அரெஸ்ட் பண்ண விட்ட.”
“இந்த விஷயத்தில என்னால எதுவுமே பண்ண முடியலை. இந்துகிட்டே மிரட்டி பார்த்துட்டேன். கெஞ்சி கூட பார்த்துட்டேன். வாயவே தொறக்க மாட்றா. அவளா என்ன நடந்தது என்று சொன்னா தான் நம்ம எதுவும் பண்ண முடியும்.”
“நான் அவ கிட்ட பேசி பார்க்கவா.”
“பார்க்க விடுவாங்கலானு தெரியலை. முயற்சி பண்ணி பார்ப்போம்.”
“சரி ரித்விக்” எனக் கூறி அழைப்பை துண்டித்தாள்.
மீனாட்சி, சுந்தரராஜன், சாரதா மூவரும் கோவிலுக்கு சென்று விட்டனர். அஸ்வினும், ரித்விக்கும் வீட்டில் இருந்தனர்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு அஸ்வின் கதவை திறக்க அங்கு நின்றிருந்த வித்யா வேகமாக உள்ளே வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
அவள் ஏங்கி அழுக “என்னடி கோலம் இது. ஏன் இப்படி இருக்க தலை கூட வாராம. என்னாச்சு” என அஸ்வின் கேட்க அந்த சத்தத்தைக் கேட்டு விட்டு ரித்விக் வெளியே வந்தான்.
அவள் அழுவதை கண்டவன் தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி குடித்தவள் சிறிது நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்தினாள்.
அவள் அழுகையை நிறுத்தியவுடன் ரித்விக், “இப்போ ஓகே வா” என்றிட அவள் “ம்ம்…ஓகே” என தலையாட்டினாள்.
“இப்ப சொல்லு என்ன ஆச்சு” என்று கேட்க “எங்க அம்மா தான் என்ன அடைச்சு வைச்சிட்டாங்க” என்றாள்.
அஸ்வின், “அவங்க எதுக்கு உன்ன அடைச்சு வைச்சாங்க.”
“இந்து அக்கா கேஸ்க்காக தான்” என்றுக் கூற ரித்விக் அதிர்ச்சியாகி, “வாட், உனக்கும் இந்த கேஸ்க்கும் என்ன சம்பந்தம்” என்றான்.
வண்ணங்கள் மிளிரும்…