நிலா – 24
சூர்யாவின் அத்தனை கோபத்தையும் கொஞ்சமும் அசையாமல் வெற்றி தாங்கிக்கொண்டிருந்தான். அவனின் கோபம் முழுவதும் தீரும் வரை அடித்துக்கொள்ளட்டும் என்பதை போல தன்னை ஒப்புக்கொடுத்து வெற்றி நிற்க,
“இப்பவும் சொல்றேன் அர்ச்சு, பாலாவுக்கு இதோட எல்லா கிரகங்களும் விலகிருச்சு. அவ உயிருக்கு வந்தது இதோட போயிருச்சு. என் மனசுக்கு நல்லதா படுது…” என கோபாலசுவாமி பேச மீண்டும் அவரின் சட்டையை பிடித்துவிட்டான் வெற்றி,
“எங்கிட்ட ஏன் மறைச்சீங்க? மறைச்சு இப்படி ஏமாத்தி எங்களை நடுங்க வச்சுட்டீங்களே. உங்க மேல உள்ள மரியாதை நம்பிக்கை எல்லாமே போய்டுச்சே. நீங்கலாம் ஒரு பெரியமனுஷன். உங்களுக்கு அந்தஸ்து வேறையா?…” என அவரை உலுக்க,
“வெற்றி வெற்றி விடு. வெற்றி நான் சொல்றதை கேளு…” என வருண் அவனை பிடித்து இழுக்க,
“விடுடா. எல்லாரும் சேர்ந்து என்னை முட்டாளாக்கிட்டீங்களே…” என்று கத்த,
“வெற்றிண்ணா, கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணா. ப்ளீஸ். அப்பாவை விடுங்க. அவர் எல்லாருக்கும் தானே நல்லது நினைச்சாங்க?…” என ஹரிணி வர அடுத்தடுத்து இந்த விஷயம் தெரிந்த ஆட்கள் ஒவ்வொன்றாய் தானாகவே முன்வந்து நிற்க சூர்யா அதிர்ச்சியுடன் பார்த்தான் தங்கையையும், அவளின் மாப்பிள்ளையையும்.
“என்னடா நடக்குது? என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? இன்னும் யாருக்கெல்லாம் இது தெரியும்? மொத்தமா சொல்லிடுங்க. ஒருத்தரையும் நம்ப கூடாதுல. பெத்த அப்பா, அம்மா, கூட பொறந்த பொறப்பு, நண்பன்னு எல்லாரும் கழுத்தறுத்துட்டீங்களே?…” என சூர்யா ஆவேசத்துடன் கேட்க,
“என்னங்க இதெல்லாம்? இப்பவாவது சொல்லுங்களேன்…” என ஜெய் சத்தம் போட,
“சூர்யா யாரு?…” என நர்ஸ் வந்து கேட்க,
“நான் தான்…” என்று முன்னே சென்றான்.
“அவங்க உங்க பேரை சொல்லிட்டே இருக்காங்க. இன்னும் மயக்கம் முழுசா தெளியலை. போய் பார்த்துட்டு மட்டும் வாங்க. அதிகமா எதுவும் பேசவேண்டாம்…” என்று அழைத்துவிட்டு செல்லல சூர்யா வேகமாய் அந்த அறைக்குள் நுழைய போக,
“நில்லு சூர்யா…” என்றார் மோகனா.
“நீ போக கூடாது…” என்று அவனின் முன்னே வந்து நின்றார் தடுமாறியபடி.
“எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாம போக கூடாது. யாரும் என் பொண்ணை பார்க்க கூடாது…” என்று முகம் இறுக சொல்ல தொய்ந்து போய் அமர்ந்தான் அவன்.
“மோகனா அவன் பார்த்துட்டு வந்திரட்டும் முதல்ல. எல்லா விவரத்தையும் நான் சொல்றேன் உங்களுக்கு…” என்று அர்ச்சனா சொல்ல,
“ஆமா மோகனா. சூர்யாவை போகவிடு…” என உமாவும் பேச,
“அண்ணி எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். இப்ப சூர்யாண்ணா போய்ட்டு வரட்டும்…” என்று மோகனாவின் கையை பிடித்து ஜெயஸ்ரீ கதவை விட்டு நகர்த்தி இழுக்க,
“விடு ஜெயஸ்ரீ…” என்று இரைந்தார்.
“இப்ப இங்க எனக்கு உண்மையை முதல்ல சொல்லுங்க. முடியுமா முடியாதா?…” என்றவர் சூர்யாவின் கையை பிடித்து எழுப்ப அவரை நிமிர்ந்து பார்க்காமல் எழுந்து நின்றவனின் சட்டையை காண்பித்து,
“இப்படி இவ்வளவு ரத்தத்தையும் பார்த்த பின்னால, அதுக்கு பின்னால பெரிய சதி இருக்குன்னு தெரிஞ்ச பின்னாலையும் நான் உங்க எல்லாரையும் நம்பனுமா? கூட பொறந்தவனும், கூட பொறந்தவனை மாதிரி பாசம் கொட்டி பழகினவனும் என்னோட பெத்த வயித்துல நெருப்பை வச்சுட்டானுங்க. இதுக்கு மேல நான் நம்பனுமா?…”
மோகனா பேசியதை தாளமுடியாமல் வெற்றி வந்து அவரின் காலை பிடித்துக்கொண்டு அழ,
“தொடாதடா. தொடாத. உன்னை வளர்த்து ஆளாக்கினத்துக்கு என் பொண்ணை கொண்டுபோய் குழில இறக்கிட்டியே. இவங்க எல்லாரை விடவும் உன்னோட துரோகம். அதை மன்னிக்கவே மாட்டேன் நான்…” என்றவர் உடைந்து அழ கல்லென இறுகி போனான் சூர்யா.
அவனின் அவனின் உயிரெல்லாம் உள்ளிருந்தவளை பார்க்க துடித்துக்கொண்டு இருக்க இங்கே பேசிக்கொண்டிருப்பவர்களை எல்லாம் மீறி போக முடியாமல் மோகனாவின் அன்பிற்கு கட்டுப்பட்டு நின்ற தன் நிலையை வெறுத்தான்.
“தப்பெல்லாம் நான் தான் பண்ணினேன். என்னை என்ன வேணாலும் தண்டிச்சுக்கோ. அவனை போய் பாலாவை பார்க்க விடுக்கா. சூர்யா பாவம். அவனுக்கு எதுவும் தெரியாது…” என்று வெற்றி அழ,
“அவனுக்கு தெரியாதா? நிஜமா தெரியாதா? எங்க என் முகத்தை பார்த்து சொல்ல சொல்லு. இதை நான் நம்பனுமா? சத்தியமா நம்ப மாட்டேன். நம்பவே மாட்டேன்…” என்றவர்,
“சொல்லு சூர்யா, உனக்கு இது தெரியுமா தெரியாதா? சொல்லு. இது இன்னைக்கு தான் தெரியுமா? சொல்லு என்னை மாதிரி உனக்கும் இது இன்னைக்கு தான் தெரியுமா?…” என்று கேட்க இல்லை என்று அவன் தலையசைக்கவும் அவனை பிடித்திருந்த சட்டையில் இருந்து கையை எடுத்தவர் வெற்றியை பார்த்து,
“கேட்டியா? கேட்டியா? கூட பிறந்தவன் நீயே இப்படி பண்ணும்போது அவன் பண்ணிருக்கமாட்டானா?…” என கேட்க,
“ஐயோ அக்கா அவனுக்கு கல்யாணம் முடியும் போது தெரியாது. அதுக்கு தானே கல்யாணமே வேண்டாம்னு சொன்னான். அவனுக்கு கொஞ்சம் நாள் முன்னாடி தான் தெரியும்…”
“எனக்கு இந்த விளக்கம் எதுவும் வேண்டாம். நடந்தது தான தெரியனும்…” என்று மோகனா பிடிவாதமாய் கேட்க வேறு வழியின்றி சொல்ல ஆரம்பித்தான் வெற்றி.
“எங்கிட்ட சூர்யா அப்பா பேசும் போது திவ்யாவும் கூட வந்திருந்தா. அவளோட காதலை பத்தி தெரிஞ்சதால தான் சூர்யாவோட கல்யாணத்தை ஏற்பாடு பண்ணலாம்னு அங்கிள் சொன்னாரு. ராகுலை பத்தி நான் தான் விசாரிச்சே தனிப்பட்ட முறையில. அங்கிளுக்கு நல்லா தெரிஞ்ச குடும்பமா இருந்தாலும் விசாரிக்க சொன்னார்…”
“அப்போதான் சூர்யா பத்தி விவரம் சொல்லி பாலா ஜாதகம் ரொம்ப பலமானதுன்னும் சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணினார். எனக்கு என் ப்ரெண்ட் உயிரும் முக்கியம். பாலாவும் நல்லா இருக்கனும். அதனால தான் சம்மதிச்சேன். வீட்டுல தெரிஞ்சா சம்மதிக்கமாட்டாங்கன்னு தான் நாங்க இந்த மாதிரி ப்ளான் பண்ணினோம்….”
“கடைசி நேரத்துல திவ்யாவை ராகுலோட கனடாவுக்கு அனுப்பிட்டு இங்க பாலாவை கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு முடிவு பண்ணினோம். ஹரிணி, வருணுக்கும் விஷயம் தெரியும். அவங்கக்கிட்ட பேசி எடுத்து சொல்லி அவங்களும் சம்மதிக்கவும் தான் இந்த மொத்த திட்டமும் நடந்தது. இதுல சூர்யாவுக்கு எந்த பங்கும் இல்லைக்கா…” என்று சொல்ல,
“நீயெல்லாம் ஒரு அண்ணனா? கூட பொறந்த தங்கச்சி பொண்ணையே இப்படி இன்னொருத்தனோட அனுப்பி வச்சிருக்கியே. எல்லாம் செஞ்சுட்டு இத்தனை நாள் நடிச்சு ஏமாத்திட்டியே. உன்னை சும்மா விடமாட்டேன்…” என்று உமா தன் அண்ணனை பிடித்து சட்டையை கிழிக்க,
“உமா, உமா அமைதியா இரு…” என உத்தமன் பிடித்து நிறுத்த பார்க்க,
“எப்படி அமைதியா இருக்க சொல்றீங்க? என் பொண்ணை என்கிட்டே இருந்து பிரிச்சிருக்காறே? அவ வாழ்க்கையை முடிவு பண்ண இந்தாளு யாரு? அவளுக்கு விருப்பம், விருப்பம் இல்லை. எதுவா இருந்தாம் என்கிட்டே பேசியிருக்கனும் தானே? ஏன் பேசலை?…”
“உமா, முடிஞ்சு போன விஷயம். திரும்ப அதை பேசாத…” உத்தமன் அவரை அமைதிப்படுத்த பார்க்க,
“உமா எதுவா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கலாம்மா. சொல்றதை கேளு. இங்க வச்சு பேச வேண்டாம்…” என அர்ச்சனா அவரின் கையை பிடிக்க,
“விடுங்கண்ணி. எத்தனை அயோக்கியத்தனம் இது? என் பொண்ணை என்கிட்டே இருந்து பிரிச்சு கண்காணாத இடத்துக்கு அனுப்பிட்டு, இப்ப இன்னொரு பொண்ணோட உசிர ஊசலாட விட்டிருக்காரே? ஜோஸியம் பார்த்துட்டா இந்தாளு கடவுளாகிடுவாரா? மோகனா கேட்கற ஒரு கேள்விக்காச்சும் மூஞ்சியை பார்த்து பதில் சொல்ல முடியுமா இவரால?…” என்ற உமா,
“பெத்த வயிறு ரெண்டும் பத்தி எறிஞ்சிட்டு இருக்குது. இந்த பாவம் உன்னை சும்மா விடுமாய்யா?…” என்று சகட்டுமேனிக்கு மரியாதை இல்லாமல் பேச,
“உமா, நான் தான் திவ்யாவுக்கு கல்யாணம் செஞ்சு ராகுலோட அனுப்பி வச்சேன். அன்னைக்கு அவங்களை ஏர்ப்போர்ட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தது நான் தான். என் முன்னாடி தான் என் சம்மதத்தோட தான் நம்ம பொண்ணு கல்யாணம் நடந்துச்சு. போதுமா?…” என உத்தமன் கத்த அடுத்த அதிர்ச்சி அக்குடும்பத்திற்கு.
எதற்கும் பதில் சொல்லாமல் அசையாமல் நின்றிருந்தார் கோபாலசுவாமி. இனி கடவுள் விட்டவழி என்பதை போல அவர் இருக்க உமா தன் கணவனை பிடித்துக்கொண்டார்.
“என்ன சொல்றீங்க? என்ன பேசறீங்க? பொய், பொய் தானே?…” என்று அவரிடம் கேள்வி கேட்க,
“இல்லை உண்மை தான். உண்மை தான்…” என்றவர் மேலும் உமா அங்கேயே இருந்தால் இன்னும் பிரச்சனை ஆகுமோ என்று,
“வீட்டுக்கு போய் உனக்கு விளக்கமா சொல்றேன். இங்க வச்சு வேண்டாம். ஆனா ஒன்னு மட்டும் உண்மை. உன் அண்ணன் என்கிட்ட பேசி என் முழு சம்மதத்தோட தான் திவ்யாவுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாரு…” என சொல்ல,
“ஏன்? ஏன் இப்படி பண்ணுனீங்க?…”
“நீ மட்டும் தான் காரணம். சூர்யாவோட ஏற்பாடான கல்யாணத்துல திவ்யாவுக்கு விருப்பமே இல்லைன்னு பெத்தவளுக்கு தெரிய வேண்டாமா? உனக்கு தெரிஞ்சா என்னவேணாலும் மிரட்டி இந்த கல்யாணத்தை முடிச்சு வைப்ப. சும்மாவே திவ்யாவை ஆட்டிப்படைப்ப உன் இஷ்டத்துக்குத்தான் இருக்கனும்னு…”
“அதான் பார்த்தேன். என் பொண்ணுக்கு அவ ஆசைப்பட்ட வாழ்க்கையாச்சும் நிறைவா அமையட்டும்னு சந்தோஷமா கல்யாணம் செஞ்சு வச்சேன். இல்லைன்னா என் பொண்ணு உயிரை விட்டிருப்பாளோ என்னவோ?…” என்று சொல்ல முகத்தை மூடிக்கொண்டு அழுதார் உமா.
இதுவரை தான் நடந்துகொண்டதன் விளைவே மகளை தன்னிடமிருந்து பிரித்திருகிறது என எண்ணி அவர் தேம்ப அவரின் தலையை தட்டிக்கொடுத்துக்கொண்டே,
“இங்க பாருமா மோகனா, இதுவரை என்னவேணா உங்களுக்கு தெரியாம நடந்திருக்கட்டும். ஆனா இனி அடுத்து என்ன செய்யனும்னு பொறுமையா முடிவு பண்ணிக்கலாம். அங்க சூர்யா முகத்தை பாருங்க. அவன் பாலாவை பார்த்துட்டு வரட்டும்…” என்று உத்தமன் சொல்ல மோகனா முகம் இறுகி நின்றார்.
“அக்கா, ப்ளீஸ். என்னை என்ன வேணாலும் சொல்லிக்கோ. அவனை விடு. அவன் போகட்டும். சூர்யா தாங்கமாட்டான்…” என வெற்றி சொல்ல,
“அப்ப அந்த மனுஷன் மட்டும் இதையெல்லாம் தாங்குவாறாடா?…” என சந்திரனை காண்பிக்க நெஞ்சை பிடித்தபடி கண்ணீர் உகுத்தபடி அழுதுகொண்டிருந்தார் சந்திரன்.
“அவரால கோபமா தட்டி கேட்க கூட முடியலை. அவரோட சுபாவம் தெரிஞ்சு தான யார் கேட்பான்னு என் பொண்ணை இவனுக்கு கட்டி வச்ச? அதானே?…” என வெற்றியிடம் பாய,
“அக்கா, உன்கிட்ட உண்மையை சொல்லாம மறைச்சது தப்பு தான். அதுக்குன்னு இப்படி பேசாத. நான் நல்லதுக்கு தான் பண்ணேன்…”
“யார் நல்லதுக்கு? என் பொண்ணுக்கா நல்லது?…” என்றவர் புடவை முந்தானையில் கண்ணீரை துடைத்துக்கொண்டார்.
“இங்க பாரு சூர்யா, உன்கிட்ட பிச்சையா கேட்கறேன்னு கூட வச்சுக்கோ. எனக்கு என் பொண்ணுக்கு பின்னாடி தான் எல்லாமே. எனக்கும், என் புருஷனுக்கும் அவதான் உலகம். எங்களுக்கு அவ வேணும். உயிரோட இருக்கனும்…”
“அக்கா…” என்றான் சூர்யா உதடு நடுங்க.
“இல்லை, அப்படி கூப்பிடாத. இனி நாங்க யாருக்கும் எந்த உறவும் இல்லை. எங்களுக்கும் யாருமில்லை. என் பொண்ணு எனக்கு முழுசா கிடைச்சதே பெரிய விஷயம். அதுவே போதும். விட்டுடுப்பா. எங்களை இத்தோட விட்டுடு…” என்று கையெடுத்து கும்பிட,
“அண்ணி, என்ன பேசறீங்க? சூர்யாண்ணா பாலாவோட புருஷன். விட்டுடுன்னு எந்த அர்த்தத்துல பேசறீங்க? அவசரத்துல எடுத்தோம், கவுத்தோம்னு முடிவு பண்ணாதீங்க…” என ஜெயஸ்ரீ சொல்ல,
“போதும்மா, உன் புருஷன் பண்ணினதே போதும். நீயும் உன் பங்குக்கு எதையாவது பேசாத…” என்றவர்,