இதோ பத்து நாட்கள் யாரிடமும் பேச்சுவார்த்தை இல்லை. அவனின் மொபைலை மட்டுமே வெறித்துக்கொண்டு அமர்ந்திருப்பான். பாலாவின் அழைப்பு எப்பொழுது வேண்டுமானலும் இருக்கலாம் என காத்திருக்க ஆரம்பித்தான்.
யாரிடமும் பேசாதவன் தானாகவும் மோகனாவிற்கு அழைக்கவில்லை. பாலாவை பற்றி கேட்கவும் இல்லை.
ஆனால் அவள் அழைப்பாள் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. அவளின் மொபைலும் தன்னிடமே இருக்க எப்படியும் அவள் அழைப்பாள் என்று நினைத்துக்கொண்டே இருந்தான்.
வீட்டில் இருந்து அர்ச்சனாவை தவிர யாரிடமும் பேசவில்லை. கோபாலசுவாமி பேச முயன்ற பொழுதும் பேச மறுத்துவிட்டான்.
வெற்றி இரு நாட்கள் சூர்யாவிடம் பேச முயன்று பின் தோற்று வேறு வழியின்றி அவனை தேடாமல் பேக்டரியை பார்த்துக்கொள்ள ஆரம்பித்தான் ஜெயஸ்ரீ அறிவுறுத்தலால்.
பதினைந்து நாட்கள் ஆனது. பைத்தியக்காரன் போல அந்த ஒற்றை வீட்டினுள் தென்றலின் மத்தியின் தன் உயிரை துழாவினான்.
வழக்கம் போல பால்கனியில் வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தவனின் மொபைல் புது எண்ணில் இருந்து அழைப்பு வர எடுத்து காதில் வைத்தான்.
“சூர்யா…” என்ற ஒற்றை சொல்லில் அவனின் மொத்த உயிர்ப்பையும் மீட்டெடுத்தாள் பாலதிரிபுரசுந்தரி.
“பாலா, பாலா எங்கடி இருக்க? பாலா…” என அவளின் பெயரை சொல்லி சொல்லி அவன் உருக அவள் விசும்பும் சத்தத்தில் இன்னும் பயந்தான்.
“பாலா, ஒன்னும் இல்லைல்ல. ஆர் யூ ஓகே. ஓகே தானே? சொல்லுடா. பாலா. ஏதாவது பேசு…” என சொல்லி வீட்டில் இங்குமங்குமாய் பரிதவித்து நடக்க,
“இப்ப சென்னைல தான் இருக்கோம். அந்த ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்கோம். பார்க்கனும் நான். வருவீங்களா?…” என யாசிப்பதை போல அவள் கேட்டதிலேயே இவன் மரித்து உயிர்த்தான்.
“வான்னா, வரேன். இப்படிலாம் பேசாதடாம்மா…” என்றவனின் பேச்சு ஒருநொடி நின்றுவிட,
“வந்து பார்த்தா நான் இருப்பேன். இல்லைன்னா…”
“அறை வாங்குவ ராஸ்கல்…” என்றவனின் அதட்டலை வெகு நாட்கள் கழித்து கேட்ட மகிழ்ச்சியில் பாலாவின் மனம் அவனின் வரவிற்காய் தவிக்க ஆரம்பித்தது.
“இது இங்க இருக்கற நர்ஸ் நம்பர்…”
“இதோ கிளம்பிட்டேன். வந்திருவேன்டா. அரைமணி நேரத்துல அங்க இருப்பேன்…” என்றவன் மோகனாவை மறந்தான். சந்திரனை மறந்தான். மனம் முழுவதும் அவனின் பாலா மட்டுமே.
ஹாஸ்பிட்டல் வந்ததுமே மோகனா இருப்பாரே என்ற பயத்தில் அப்படியே அங்கே நின்றுவிட்டவன் மனதில் பாலாவை பார்க்க வேண்டும் என்னும் ஆசை மட்டும் தீயாய் எரிந்தது.
மனதிற்குள் கள்ளத்தனம் புக உடனே அந்த நர்ஸின் எண்ணிற்கு அழைத்தவன் தனக்கு உதவுமாறு கேட்க அவரும் புரிந்ததை போல தான் சொல்லியபடி வர சொல்ல அவனும் சென்றான்.
அது ஸ்கேனிங் அறை. உள்ளே நுழைந்ததும் பார்வையால் பாலாவை தேடியவன் அவளை பார்த்த நொடி இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.
ஒற்றை அணைப்பில் அத்தனை தவிப்பையும் தணித்திட முயன்றவன் அவளுக்கு முத்தங்களால் அர்ச்சனை செய்து அவளை தன் முத்தத்தில் கட்டிவைக்க முயன்று அவனே கட்டுன்று நின்றான்.
“பாலா…” என்றவனின் குரல் உயிர் தீண்டினாலும் அவளிடம் பதிலில்லை. அவன் அருகாமையும் ஸ்பரிசமுமே போதும் என வசியத்திற்கு கண்டுண்டதை அவனின் கைக்குள் பொதிந்து போனாள்.
“என்னை கூட்டிட்டு போக மாட்டீங்களா?…” என ஆவலாக கேட்டவளிடம்,
“பாலா, அக்கா…” என்று இவன் சொல்ல,
“இங்க வாங்க…” என்றவள் அந்த பெட்டில் ஏறி படுக்கவும் புரியாமல் பார்த்து நின்றான் சூர்யா.
“இங்க இல்லை. அங்க…” என அவள் காட்டிய திரையில் தெரிந்த விஷயத்தை கண்டு மெய் சிலிர்த்தவன் விழியன் நீர் நிறைய அவளை பார்க்க,
“இதுக்குத்தான் வர சொன்னேன். இப்பவும் கூட்டிட்டு போகமாட்ட தானே?…” என்று கோபமாய் கேட்க,
“பாலா…” என்று இயலாமையுடன் அவன் பார்க்க,
“போ, கிளம்பிடு. உனக்கு தான் முதல்ல சொல்லனும்னு தோணுச்சு. அதான் வந்தேன். பார்த்துட்ட தானே? போ. போ. அட்லீஸ்ட் உன் குழந்தைக்காகவாச்சும் என்னை கூட்டிட்டு போவன்னு நினைச்சேன். போடா…” என அவனை பிடித்து வெளியேற சொல்ல வெளியில் இருந்த மோகனா உள்ளே வந்துவிட்டார்.
“மோகனாக்கா…” என அவரை பார்க்க அவரோ அவனின் முகத்தையும் பார்க்க பிடிக்காதவராக பாலாவை கூட்டிக்கொண்டு செல்ல பார்க்க,
“ம்மா, அவங்க மாசமா இருக்காங்க. இப்படி கூட்டிட்டு போறீங்க?…” என்று நர்ஸ் சொல்ல மோகனாவின் நடை அப்படியே நின்றது.
மகளை திரும்பி பார்க்க அவளும் அதே இறுக்கத்துடனே தான் இருந்தாள். இத்தனை நாட்களில் கேட்டதற்கு மட்டும் ஓரிரு வார்த்தைகள் தான் அவளிடம் பதில் வரும். எப்போதும் சூர்யா சம்பந்தமான எதோ ஒன்றை செய்துகொண்டிருப்பாள்.
அதில் மோகனாவிற்கு தான் தலைவேதனையாக போனது. ஒரு நொடி மகளை வதைக்கிறோமோ என்று அவர் நினைத்ததும் உண்டு. அதே நேரம் அவளின் தலையில் தெரிந்த காயமும், அவளை ரத்த கோலத்தில் பார்த்ததும் தான் ஞாபகத்தில் வரும். மனதை கடினமாய் இறுக்கிக்கொள்வார்.
இன்று மகளும், சூர்யாவுமாய் அவரின் மனதை அலைகழிக்க அதிலும் இந்த சிசுவின் வரவும் வேறு அவரை தடுமாற செய்தது. அங்கே இருந்தால் மிகவும் பலவீனமாகி போவோமோ என்று அஞ்சி அவளை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
பாலா சூர்யாவை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே செல்ல மோகனாவை மீறி அவளை நெருங்கமுடியவில்லை அவனால். தன்னையே வெறுத்தபடி பார்த்திருந்தவனை போலவெல்லாம் இதை அப்படியே விடவில்லை அவனின் மனைவி.
அத்தனை பேரின் பொம்மலாட்டத்தின் அத்தனை கயிறுகளையும் அறுத்தெறிய ஆரம்பித்தாள்.
திருவண்ணாமலைக்கு மீண்டும் வந்ததில் இருந்து இரண்டுநாட்கள் சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் பிடிவாதமாய் இருக்க பொருத்து பார்த்த மோகனா,
“இப்ப இப்படி பட்டினியா கிடந்து என்ன சாதிக்க போற பாலா? ஒழுங்கா சாப்பிட மாட்டியா?…” என்று பொறுமையிழந்து கத்திவிட,
“எதுக்கு சாப்பிடனும்? சாப்பிட்டு குழந்தையை நல்லபடியா பெத்து அவன் அப்பா இல்லாம வளரனும். இல்லைனா பிள்ளையையும் என்கிட்டே இருந்து பிரிச்சு சூர்யாக்கிட்ட விட்டுட்டு இங்க இன்னும் நான் தனியா சாகனும். அதுக்கு இப்படியே செத்துடறேன். என்னை விட்டுடு….” என்று அவருக்கு மேல் கத்தினாள்.
“பாலா அம்மா சொல்றதை கேளுடா. பொறுமையா இரு…”
“எனக்கு பொறுமை வேண்டாம். இருக்க மாட்டேன். சூர்யா தான் வேணும். என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும்? நினைச்சா கல்யாணம், நினைச்சா பிரிஞ்சிடனுமா?…” என்று கத்தியவள்,
“எனக்கு தாலி கட்டின புருஷனுக்கு அவனோட உடன்பிறவா அக்கா நீ முக்கியமாம். உன் வார்த்தை முக்கியமாம். உனக்கு நான் சந்தோஷமா இல்லைன்னாலும் உயிரோட உன்கூட இருக்கறது முக்கியம். ஆனா அவனோட நான் இல்லைன்னா எனக்கு உயிரோட ஏன் இருக்கனும்னு தோணுதே? நான் என்ன பண்ண?…”
“எங்களுக்கு நீங்களா திடீர்ன்னு கல்யாணம் செஞ்சு வைப்பீங்க. அதை ஏத்துக்கிட்டு உங்க சொல்படி சந்தோஷமா வாழனும். வான்னு சொன்னதும் கூடவே வந்திரனும். இங்க நான் சிரிப்பில்லாம, நிம்மதி இல்லாம இப்படி தான் வாழனுமா? நானே கூட்டிட்டு போன்னு சொன்னாலும் நீங்க சொல்லாம அவன் வரமாட்டான். நான் இப்படியே இருந்தா உங்களுக்கு சந்தோஷமா? சரி, இருக்கறேன்…” என்றவள் கண்ணீர் வழியும் கண்களுடன் தாயை பார்த்து,
“அன்னைக்கு என்ன சொன்னீங்க? நாலு மாசமா? அவ்வளவு ஈஸியா நாலு மாசம் தானே. மறந்திடுன்னு சொல்றீங்களே. மறக்க வச்சிருவேன்னு சொல்றீங்க. உன்கிட்ட இத நான் எதிர்பார்க்கலைம்மா. பிடிக்காம கல்யாணம் பண்ணி இப்ப பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு ஒரு சூழ்நிலையில எங்களை வாழவிடமாட்டேன்னு சொல்றியே. நான் அந்த ஜாதகம், ஜோசியத்தை எல்லாம் நம்பலை. சூர்யா என்னை பார்த்துப்பான்னு நம்பறேன். அவன்கூட வாழ நான் நல்லா இருப்பேன்னு நம்பறேன். உங்களுக்கு ஏன் அந்த நம்பிக்கை இல்லை?…”
“ஒரு கைதி மாதிரி கூட்டிட்டு வந்து வச்சிருக்கம்மா நீ. போன் குடுக்காம. வெளில எங்கயும் போக விடாம இப்படி என்னை அடைச்சு வச்சிருக்க. இதுக்கு பேர் தான் என்னை பார்த்துக்கறதா?…” என்று கூச்சலிட்டாள்.
பாலா அதன் பின்னும் அன்று முழுவது தொட்டதிற்கெல்லாம் சண்டை பிடித்தாள். அதிலும் வாக்குவாதம் மோகனாவிற்கும், அவளுக்கும் அதிகமாகவே இருக்க அன்று இரவு தூங்கவே வெகுநேரம் ஆனது.
விடியற்காலை பார்க்க பாலா அவளறையில் இல்லை. சென்றிருந்தாள் சூர்யாவிடமே சூர்யபாலா.
—————————————————–
காலை எழுந்த சூர்யா குளித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான். நேராக ப்ரிட்ஜை நோக்கி சென்றவனின் பார்வை சுவாதீனமாக சோபாவில் சென்று மீண்டு பின் மீண்டும் சோபாவை பார்த்து அதிர்ந்தான்.
உடலை குறுக்கியபடி சுடிதாரின் ஷால் கொண்டு போர்த்தியபடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் பாலா. சத்தியமாய் நம்பமுடியாமல் பார்த்தவன் அவளருகே வந்து அவளை தொட்டு பார்க்க,
“சூர்யா, பெட்ஷீட் வேணும்…” என்றபடி மறுபக்கம் திரும்பி படுக்க,
“பாலா இங்க என்ன பன்ற?…” என்று அதிர்வுடன் சந்தோஷத்தை மறைத்தபடி கேட்க,
“ப்ச், என்ன பண்ணனும்? இத்தனை மாசம் என்ன பண்ணேன்? அதான்…” என்றாள் எரிச்சலுடன்.
“பாலா, விளையாடாத? எப்போ வந்த?…” என கேட்க,
“மிட்நைட்ல அங்க இருந்து கிளம்பினேன். அப்பாவோட ட்ராவல்ஸ்ல இருக்கற அண்ணா கொண்டுவந்து விட்டாங்க…”
“வீட்டுக்கு தெரியுமா? மோகனாக்கா…”
“அக்கா அக்கா அக்கா. அக்கா சொன்னாங்கன்னா இங்க இருந்து என்னை தூக்கி கீழே போட்டுடுவியா?…” என்று அத்தனை கோபத்துடன் எழுந்து கத்த,
“பாலா, நான் சொல்றதை கேளு. அக்காவோட கோபம் போகட்டும். பொறுமையா பேசலாம். எனக்கு மட்டும் என்ன சந்தோஷமாடி. ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்ற?…” என்று சொல்ல,
“என்ன கொண்டு போய் விடுவியா? எங்க என்னை கூட்டிட்டு போ பார்ப்போம். போய்ருவியா? போய்ருவியாடா?…” என்று அவனின் கன்னத்தில் மாறி மாறி அடித்தாள்.
“என்னை என்னடா பன்றீங்க எல்லாரும் சேர்ந்து? என்ன செய்யறதுக்கு இப்படி என்னை கொஞ்சம் கொஞ்சமா உயிரை எடுக்கறீங்க? மொத்தமா இல்லாம போனா இந்த பாடு இல்லைல…” என்று அவனின் கன்னத்தில் வலிக்க வலிக்க அடித்து ஓய்ந்தவள்,
“இப்போ என்ன என்னை விட்டு போகனுமா? நீ போய்க்கோ. ஆனா நான் இந்த வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேன். உன்னை தடுக்கற உரிமை எனக்கில்லைன்னு நீ சொன்னா என்னை போன்னு சொல்ற உரிமையும் உனக்கில்லை. அதை நான் யாருக்கும் தரமாட்டேன். கல்யாணம் வேணும்னா யார் சொல்லியும் நடந்திருக்கட்டும். மத்தவங்க பேச்சை கேட்டு செஞ்சுக்கிட்டேன்….”
“என் பொண்டாட்டி என்னோட தான் இருப்பான்னு கூட்டிட்டு வர உனக்கு தைரியமில்லை. ஆனா நான் என் புருஷனோட தான் இருப்பேன்னு வெட்கத்தை விட்டு அர்த்த ராத்திரில உன்னை தேடி வந்தா அத்தனை ஏத்தமா உனக்கு? இஷ்டத்துக்கு கொண்டு போய் விடறேன்னு சொல்ற?…”
“ஆனா உன்னை விரும்பினது, உன்னைவிட்டு இருக்க கூடாதுன்னு முடிவு செஞ்சது நான் எடுத்த முடிவு. ஒருத்தரை பிடிக்க வைக்க யார் முயற்சி செஞ்சாலும் முடியாதுன்றது எத்தனை சத்தியமான வார்த்தையோ அதே மாதிரி ஒருத்தரை மறக்க வைக்கிறதும், வெறுக்க வைக்கிறதும், விலகி போறதும் கூட யார் நினைச்சாலும் முடியாது. இதுவும் சத்தியமான வார்த்தை தான்…”
“என்னால உன்னை விரும்ப மட்டும் தான் முடியும். நீ சொல்லி உன்னை நான் விரும்பலை. அப்படி இருக்க நீ சொன்னா விலகி போய்டுவேனா? போடா…” என்று பேசியவளை அணைத்துக்கொள்ள அவனின் கைகள் பரபரத்தன.
ஆனாலும் ஒரு நொடியே அந்த தயக்கம் எல்லாம். இருந்த கட்டுப்பாடுகள் அத்தனையும் தகர்ந்து பாலாவிடம் மொத்தமாய் சரண் புகுந்தான் சூர்யா.
உனை ஒருமுறை காணவே உயிர் முழுவதும் ஏங்குதே
நெஞ்சடியில் காணுகிறேன் நினைவே நினைவே நீங்காதே
அட நெஞ்சே உன்வசம் ஆகியபோது நினைவும் கனவும் ஏது