அத்தனை நாள் அடக்கி வைத்த அழுகையெல்லாம் மொத்தமாய் கதறி தீர்க்க அழுது ஓயட்டும் என்பதை போல அவளின் தலையில் முகம் புதைத்தபடி வருடிக்கொண்டிருந்தான்.
“என்னை பார்க்காம கூட போய்ட்ட நீ. எத்தனை தேடினேன் தெரியுமா? அம்மா கோபத்துக்காக மட்டும் நான் போகலை, நீ என்னை வேண்டாம்னு போய்ட்ட மாதிரி தோணுச்சு. அதுவும் எனக்கு ரொம்ப கோவம். அதான் போய்ட்டேன்…”
“அதோட அம்மாவும் அப்பாவும் ரொம்ப உடைஞ்சு போய் இருந்தாங்க. அதுக்காகவும். கொஞ்சம் நாள்ல சரியாகிடும்னு பார்த்தா அவங்க என்னை விடற மாதிரி இல்லை. குழந்தைன்னு வரவும் அப்போவாச்சும் எதாச்சும் யோசிப்பாங்கன்னு பார்த்தா இல்லவே இல்லை…”
“ஆனா நான் எப்ப நொறுங்கி போனேன் தெரியுமா? நீ நமக்கு குழந்தை வந்திருச்சுன்னு தெரிஞ்சும் என்னை கூட்டிட்டு போகாம நின்ன பார்த்தியா. அங்க உன் பொண்டாட்டியா தோத்துட்ட மாதிரி பீல் ஆகிடுச்சு. இப்ப மத்த எல்லாரை விடவும் நீ மட்டும் தான் முக்கியம்ன்னு நினைச்சேன்….”
“ஆனா உனக்கு உன் அக்காவுக்கு அப்பறம் தான் நான் அப்டின்ற மாதிரி காமிச்சது அதுவும் நான் இப்படி இருக்கும் போது கூட என்னை கன்ஸிடர் பண்ணாம நீ நடந்துகிட்டது தான் என்னால ஏத்துக்கவே முடியலை. அப்போ உனக்கு நான் முக்கியமில்லையா?…”
“பாலா, அப்படிலாம் இல்லடா. அப்படி நினைக்காத…” என்று அவளின் முகம் நிமிர்த்தி சொல்ல,
“அப்படித்தான். அப்படித்தான். நீ தான் என்னை ரெண்டுவாட்டி தனியா விட்டு போனியே. இப்ப நானா தான வந்தேன். என்னவோ உங்கப்பாட்ட சொன்ன, பாலா இல்லன்னா நானும் உங்களுக்கு இல்லைன்னு. யாரா இருந்தாலும் உன்னை விட்டு கூட்டிட்டு போக விடமாட்டேன்னு…”
“ஆனா நீ போய்ட்டியே. விட்டுட்டு தான போன? அப்போ என் பொண்டாட்டிய கூட்டிட்டு போக நீங்க யார்ன்னு கேட்டிருந்திருக்கனும். சரி, அந்த சூழ்நிலை அப்படி. ரெண்டாவதா நானே கூப்பிட்டேன் தானே? அப்போவாச்சும் பிள்ளைக்காகவாச்சும் நீ பேசுவன்னு பார்த்தேன்…”
“நீ ஏன்டா இவ்வளவு மோசமா இருக்க? தப்பு. தப்பு. எனக்கு இப்ப எல்லாரை விடவும் உன் மேல தான் அவ்வளவு கோவம் இருக்குது. கொலைவெறில இருக்கேன்…”
கோபம் கொண்டு சொன்னவள் வலிக்க வலிக்க இரு கன்னங்களையும் ஆத்திரமாய் கடித்து வைக்க அந்த வலி எல்லாம் அவள் எத்தனை வலியை அனுபவித்திருப்பாள் என்பதையே அவனுக்கு பறைசாற்றியது.
சூர்யாவின் கன்னம் இரண்டும் கன்றி சிவந்து பாலாவின் பற்கள் பட்டு அப்பட்டமாய் தெரிய அதை பார்த்தவள் இன்னும் அழுதாள்.
“என்னை நீ மோசமான பொண்ணா மாத்திட்ட. பாரு என்னலாம் பன்றேன். எல்லாம் உன்னால தான். நீ பேசி சமாதானம் செஞ்சிருக்கனும் தானே? ஏன் செய்யலை?…” என கேட்டு கேட்டு அவனை காயப்படுத்தி இன்னும் காயம்பட்டாள்.
“வலிக்குதா?…” என அவளே தனது துப்பட்டாவை கொண்டு அவனின் கன்னத்தை துடைக்க,
“இல்லை…” என்றான் புன்னகையோடு.
“இல்லை வலிக்கும். எனக்கு தெரியுமே. வலிக்கும் தானே?…” என முகம் சுருக்கி அவள் சொல்ல,
“இல்லை வலிக்கலை. உனக்கு எப்படி தெரியுமாம்? எங்க சொல்லு பார்ப்போம்…” என்று சிரிப்புடன் பேச,
“அதெல்லாம் சொல்ல மாட்டேன். நான் என்ன சொல்றேன்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். போடா…” என்று அந்த கன்னத்தில் மீண்டும் அடித்தவள்,
“கால் எல்லாம் வலிக்குது…” என்று சொல்ல உடனே அவளை கைகளில் ஏந்திக்கொண்டவன் சோபாவில் அமரவைக்க,
“நோ, என்னை தூக்கி வச்சுட்டே நில்லு. அதான் உனக்கு பனிஷ்மென்ட்…” என்று கறாராய் சொல்ல,
“ஈஸிட். வித் ப்ளஷர் பாலா…” என்றான் அவனும் உவகையுடன்.
“நைட் தூங்கவே இல்லை. அம்மா வந்து வந்து பார்த்துட்டே இருந்தாங்க. அவங்க அசந்து தூங்கவும் தான் எழுந்து வெளில வந்தேன்…” என சொல்ல அவளை கைகளில் வைத்தபடியே அந்த வீட்டை சுற்றி வந்தான்.
“நானும் தூங்கிற கூடாதுன்னு மனசுக்குள்ள தூங்கிறாத தூங்கிறாதன்னு சொல்லிட்டே இருந்தேன். எங்க தூங்கிட்டா எஸ்கேப் ஆகமுடியாதே. வான்னாலும் நீ வரமாட்ட. பயந்தாரி மாப்பிள்ளை எனக்கு…” என்று அவனின் தலையில் குட்ட வாங்கிக்கொண்டான்.
“இவ்வளோ ரிஸ்க் எடுத்து இங்க வந்தா போன்னு சொல்ற. என்னை வேண்டாம்னு சொல்ற அளவுக்கு உனக்கு தைரியம் ஆகிடுச்சு இல்ல?…” பாலா அவனின் பாலாவாக கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டுகொண்டு இருந்தாள்.
“இனி சொல்லமாட்டேன். சத்தியமா சொல்லவே மாட்டேன். போதுமா?…” என அவளிடம் தன்னை ஒப்புக்கொடுக்க,
“அப்படியெல்லாம் உன்னை விடமுடியாது. உன்னையும் நம்பமாட்டேன். இனி நான் சொல்றதை தான் நீ கேட்கனும். அக்கா சொக்கான்னு ஆரம்பிச்ச அவ்வளோ தான்…” என கண்களை உருட்ட,
“முதல்ல சொல்லுடி. இனி யார் வந்தாலும் உன்னை விடமாட்டேன். போதுமா?…” என்று அவன் சிரிக்க,
“சிரிக்காத. அப்படியே பத்திக்கிட்டு வருது…” என்று மீண்டும் அவனின் தலையில் தட்டினாள்.
“உனக்காக அங்க நான் சண்டை போட்டு வந்திருக்கேன். இப்ப மாசமா வேற இருக்கேன். என்னை நீ தான் பார்த்துக்கனும்…”
“ஹ்ம்ம், ஓகே…”
“நான் நடக்கமாட்டேன். இங்க இருந்து அங்க போகனும்னா நீ தான் தூக்கிட்டு போகனும்…”
“ஓகே…”
“கோபம் வரப்ப திட்டுவேன். சண்டை போடுவேன். நீ கோச்சுக்கிட்டு உன் அப்பா வீட்டுக்கு போக கூடாது…”
“ஓகே…”
“என்னை சமாதானம் செய்யனும். ஆனா ஆக மாட்டேன். உன் சமத்து தான்…”
“ஓகே…”
“எப்படியும் அம்மாவால ரொம்ப நாள் இருக்க முடியாது. கண்டிப்பா வந்துடுவாங்க. நீ குழைஞ்சுட்டு அக்கான்னு பாசத்தை பொழிஞ்ச சுடுதண்ணி தான்…”
“ஏன்?…”
“என்ன ஏன்? இத்தனைக்கும் ஓகே தான சொன்னா? அக்கான்னதும் ட்ராக் மாறுது?…” என்றவளின் பேச்சில் சிரிப்பு பொங்கியது.
“சரி நான் கேட்ட ஏன் கேன்சல். நீ சொல்லு…” என்றான் உடனடியாக.
“அந்த அக்காவுக்கு கூட பொறந்த அந்த தம்பியே போதும். அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கட்டும், என்னவும் செய்யட்டும். இனி உனக்கு அவங்க மாமியார். புரியுதா?…”
“ஹ்ம்ம், புரியுது…”
“கொஞ்சம் மாப்பிள்ளை கெத்தை வேணா காமிச்சுக்கோ. அப்பத்தான் தம்பின்னு உன்னை பாசத்தால லாக் பண்ணாம மருமகனேன்னு துளியூண்டு பயமாவது இருக்கும்….”
“அதுசரி…”
“இனி மோகனா யாரு? அக்கா இல்லை. அத்தை….”
“ஹ்ம்ம், ஓகே…” என்றவனுக்கு மனம் நிறைந்த, இதழ் விரிந்த, விழிகளில் உயிர் ஒளிர்ந்த புன்னகை. நெஞ்சை முட்டும் சந்தோஷத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்தும் முகம் விகசிக்கும் புன்னகை.
“இப்ப பசிக்குது, தூக்கம் வருது. வாஷ் ரூம் போகனும். அதுக்கு முதல்ல ரூம்க்கு போகனும்…” என்றவளை அறைக்குள் தூக்கி செல்ல கண்கலங்க அந்த அறையை பார்த்தாள்.
“என்னடா?…” என வாஞ்சையுடன் அவன் கேட்க அவனின் கன்னத்தை நறுக்கென்று கிள்ளினாள்.
“கனவோன்னு டவுட் ஆகிடுச்சு…” என்று துள்ளிக்கொண்டு சிரிக்க அவளின் முகத்தோடு முகம் இழைந்தவன்,
“வர முடியாதோன்னு நினைச்சயோ?…” என கேட்க,
“அப்படியெல்லாம் இல்லை. நீங்க கூட்டிட்டு வரலைனாலும் நானே வந்திருப்பேன். ஆனாலும் ஒரு சந்தோஷம்…” என்றவள் அவனின் கைகளில் இருந்து இறங்கி கட்டிலை, அதை சுற்றி கிடந்த உடைகளை பார்த்தவள் பார்வை அப்போது தான் அவனின் கால்சாராயை பார்த்தது.
“இது என்னோட ஷார்ட்ஸ். என்னிதை யாரு எடுத்து போட சொன்னா?…” என்று இடுப்பில் கை வைத்து முறைக்க,
“ஓஹ், உன்னுதா? நான் கவனிக்கலை. வீட்டுக்குள்ள இருக்கறது. என்னோட ட்ரெஸ் கூடவே இருந்துச்சு. அதான் என்னோடதுன்னு நினைச்சேன். உன்னை யார் என் சைஸ்க்கு எடுத்து வைக்க சொன்னா கும் பீஸ்…” என்றான் விஷமத்துடன்,
“ச்சீ, வெக்கமா இல்ல. சிரிச்சுட்டே சொல்றீங்க. ஒழுங்கா எல்லாத்தையும் வாஷ் பண்ணி தாங்க…” என்று அத்தனையும் அள்ளி அவனின் மேல் தூக்கி வீச அடக்கமாட்டாமல் சிரித்தபடி அவை எல்லாம் கேட்ச் பிடித்தவன்,
“இதை சொல்ல ஆள் இல்லாம தான் இத்தனை நாள் தனியா இருந்தேன். அதான் நீ வந்துட்டியே. இனி எடுத்து குடு போட்டுக்கறேன்…” என்றவனின் குரல் லேசாய் உடைவதை போல கரகரத்து தெரிய அவனை கட்டிக்கொண்டாள்.
“ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா? ரொம்ப திட்டிட்டேன்ல…” என்று நெஞ்சில் சாய்ந்துகொண்டு கேட்டவள் அமைதியாகிவிட,
“ம்ஹூம், நீ பேசு பாலா. பேசிட்டே இரு. தூங்காம என்னோட எவ்வளவு பேசனுமோ பேசு. திட்டு. சண்டைபோடு. இந்த வீட்டுக்குள்ள நான் மட்டுமே இருந்து என்னோட பேச்சை மறந்து கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டேன்டி. இனி இப்படி ஒரு சூழ்நிலை எந்த காலமும் வர கூடாது…”
சூர்யா அத்தனை உணர்ச்சிவசத்தோடு பேச பாலாவின் மனமோ அவனுக்காய் தவித்தது. இந்த கனத்த சூழ்நிலையை மாற்றவென முயன்று புன்னகைத்தவள்,
“பேசு பேசுன்னா. முதல்ல வாஷ்ரூம் போய்ட்டு வரேன்…” என்றவள் அவளுக்கான உடையை எடுத்துக்கொண்டு செல்ல பாலா குளித்து வரும் முன்னரே சாப்பிட உணவை தயாரித்து முடித்தான்.
தோசை ஊற்றி அவசரமாய் சட்னி செய்து எடுத்துக்கொண்டு வர பாலாவும் வந்துவிட அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர். அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு வர பாலா கட்டிலில் சாய்ந்தமர்ந்து இருந்தாள். அவளருகே வந்தமர்ந்தவன் தனது தோளில் சாய்த்துக்கொண்டு,
“நாளைக்கு ஹாஸ்பிட்டல் போவோம் பாலா. உனக்கு செக்கப் பண்ணனும். அன்னைக்கு எதுவும் கேட்க முடியலை…” என்று சொல்ல,
“நானும் அன்னைக்கு எதுவும் கேட்கலை. என்ன சொன்னாங்கன்னு தெரியலை. அன்னைக்கு செக்கப் இருக்குனு தான வர சொல்லிருந்தாங்க. போன இடத்துல தான் என்னை செக் பண்ணி பார்த்துட்டு டாக்டர் என்கிட்டே பேசும் போது கேட்க நானும் உனக்கு தான் முதல்ல சொல்லனும்னு கேட்டுக்கிட்டேன். அவங்க தான் ஹெல்ப் பண்ணாங்க…” என்றவள்,
“ஆனா நீ பண்ணினதை மட்டும் மறக்கவே மாட்டனே. குழந்தை பிறக்கட்டும் சொல்லி சொல்லி உதைக்க விடறேன். பொண்டாட்டி பீலிங்ஸ் தெரியலை. இதுல எல்லாம் தெரிஞ்சவராம்…” என அவனின் நெஞ்சில் குத்த,
“எல்லாம் எல்லாம் தெரிஞ்சவன் இல்லை. வெறும் சாதாரண மெக்கானிக் தான்டி. ஆனா உண்மையை ஒப்புக்கறேன். கொஞ்சம் இல்லை. நிறையவே தப்பு தப்பா தப்பு செஞ்சு சொதப்பிட்டேன். ஸாரி கேட்டுக்கட்டா?…”
“ஒன்னும் வேண்டாம், எல்லாம் செஞ்சுட்டு ஸாரி கேட்டா ஆச்சா? தப்பு தான். இருக்கலாம். ஆனா ரிசல்ட் பாஸிட்டிவ் தான்…” என போனால் போகிறதென்பதை போல மன்னிப்பு வழங்க,
“அடிங்…” என்று அவளின் தலையில் லேசாய் முட்டியவன்,
“அன்னைக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு பாலா…” என சொல்லி அவளின் வயிற்றில் முத்தமிட்டவன்,
“ஸாரிடா கண்ணா, அப்பாவை மன்னிச்சுக்கோ…” என மீண்டும் மீண்டும் மன்னிப்பை கேட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்க பாலா அப்படியே உறங்கியிருந்தாள் அமர்ந்தவாக்கிலேயே.
அவளை அலுங்காமல் தூக்கி நன்றாக படுக்க வைத்தவன் தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். அந்த நொடி வாழ்க்கை முழுவதும் தொடரவேண்டும் என்னும் பேராசையுடன் தன்னை தேடி வந்தவளை இதயம் பொங்கும் நேசத்துடன் பார்த்தபடியே இருந்தான்.
கண் மூடினால் கனவாகிவிட கூடுமோ என்று விழி திறந்து அவளின் அருகாமையை ஸ்பரிசித்து உணர்ந்தபடி அந்த நொடி மகிழ்ச்சியை நெகிழ்வாய் உள்வாங்கிக்கொண்டிருந்தான்.
காதில் உதைக்கும் பாதமும் மார்பில் கிடக்கும் நேரமும்
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே
ஆணில் தாய்மை கருவாகும் ஈரம் பூத்து மழையாகும்
கண்ணீர் சுகமாய் இமை மீறும் காலம் உந்தன் வரமாகும்