நிலா – 26
சென்னையை நெருங்கியதுமே அர்ச்சனாவுக்கு சூர்யாவிடம் தாங்கள் வருவதை சொல்லிவிடவேண்டும் என்று தோன்ற எப்படி மோகனாவை வைத்துக்கொண்டு பேசுவது என பார்த்தபடி இருக்க வழியில் ஒரு பெட்ரோல் பல்க்கில் காரை நிறுத்தினார் ட்ரைவர்.
“அர்ச்சு…” என கோபாலசுவாமி கண்ணை காட்ட,
“மோகனா அங்க பாத்ரூம் இருக்குது. வாங்க…” என கூட்டிக்கொண்டு சென்றார்.
கண்ணீர் மோகனாவிற்கு நின்றபாடில்லை. இன்னும் அழுதுகொண்டே இருக்க ஒன்றும் சாப்பிடாதது வேறு. போட்டு வைத்த டீயை கூட குடிக்கவில்லை. எழுந்து அப்படியே கிளம்பி வந்திருந்தார்.
“நீங்க முகத்தை கழுவிட்டு வாங்க மோகனா…” என சொல்லிய அர்ச்சனா அவர் உள்ளே சென்றதும் உடனே மகனுக்கு அழைத்தார்.
பாலா வந்ததில் இருந்து அவள் பேசிய பேச்சுக்கள் அத்தனையையும் அசைபோட்டபடி படுத்திருந்த சூர்யா மோகனா தான் அழைக்கிறாரோ என்று நினைத்தபடியே பதட்டத்துடன் எடுக்க அர்ச்சனாவின் எண்ணை பார்த்துவிட்டு ஒரு சலிப்புடன் வைத்துவிட்டான்.
பின் ஒருவேளை அங்கே அழைத்திருப்பாரோ மோனா என மீண்டும் தானே தாய்க்கு அழைக்க,
“சூர்யா, நாங்க உன் மாமனார், மாமியாரோட உன் வீட்டுக்கு தான் வந்திட்டிருக்கோம்…” என்று அர்ச்சனா படபடப்புடன் சொல்லவும்,
“வாட்? அங்க எப்போ போனீங்க நீங்க? எதுக்கு போனீங்க?…” என்று இவன் மெல்லிய குரலில் பாலாவின் உறக்கம் கலையாதவாறு பேச,
“இப்ப என்கிட்டே சண்டை போடறது தான் முக்கியமா? இன்னும் ஒருமணி நேரத்துல வந்திருவோம். பாலா அங்க தான் இருக்கன்னு எங்களுக்கு தெரியும். இனி நீ தான் பேசனும். வச்சிடறேன்…” என்று வைத்தவர் மோகனா வருகிறாரா என பார்த்துவிட்டு ஜெயஸ்ரீக்கும் அழைத்து விஷயத்தை சுருக்கமாக சொல்லி வைத்துவிட்டார்.
சூர்யாவின் வீட்டிற்கு சென்ற பின்னர் நிலவரம் பார்த்துவிட்டு போன் செய்வதாகவும் அப்போது வந்தால் போதுமென்றும் சொல்லிவிட ஜெயஸ்ரீயும் வெற்றிக்கு அழைத்து சொல்ல அவன் அப்போதே வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
இங்கே அவர்கள் எல்லாம் வருவதற்குள் வீட்டை ஒழுங்குபடுத்த எழுந்தவனை விடாமல் பாலா பிடித்திருக்க மெல்ல அவளின் பிடியிலிருந்து விலகி வெளியே வந்து வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்திருந்தான்.
ஒன்றரை மணி நேரத்தில் வீட்டையும் சுத்தம் செய்து எலெக்ட்ரிக் குக்கரில் சாதம் வைத்தவன் ரசம் செய்து, பருப்பு தாளித்து, அப்பளம் பொரித்து வைத்தான். அவனுக்கு தெரிந்த எளிமையான சமையல்.
‘சண்டை போட்டு பொண்ணை கூட்டிட்டு போக வராங்க. அவங்களுக்கு ஆக்கிபோடறியே?’ என அவனின் உள்ளம் அவனை எள்ளி நகையாட,
‘முடிஞ்சா கூட்டிட்டு போய்ட்டு பார்க்கட்டும்’ என ஸ்திரமாய் எண்ணிக்கொண்டான்.
அனைத்தையும் முடித்துவிட்டு வந்து பாலாவை பார்க்க இன்னும் நல்ல உறக்கத்தில் தான் இருந்தாள். எத்தனை நாள் தூக்கமில்லாமல் இருந்திருப்பாளோ? கண்ணுக்கு கீழே லேசாய் கருவளையம் படர்ந்திருக்க அவளின் முகத்தையே நின்று பார்த்திருந்தான்.
பின் பால்கனிக்கு காபியுடன் நின்றவன் கீழே அவர்கள் வருகிறார்களா என பார்த்தபடியே இருந்தான். தாய் சொல்லிய நேரமென்று பார்த்தால் இப்பொழுது வந்திருக்கவேண்டுமே என்ற கணக்கிடளுடன் இருக்க கோபாலசுவாமியின் கார் வந்து நின்றது.
உடலில் தானே ஒரு இறுக்கம் பரவ மனதை சமன் படுத்தியபடி வந்து கதவை திறந்து வைத்து நின்றான்.
அனைவரும் வந்ததும் பொதுவாய் வாங்க என்று அழைக்க மோகனா உள்ளே வரவே முடியாதென்பதை போல தான் நின்றார்.
“உள்ள வாங்க அக்…” என்றவன் பின்,
“உள்ள வாங்க. வந்து பேசுங்க. வெளில வச்சு வேண்டாம்…” என்று மட்டும் சொல்ல அவன் ‘அக்கா’ என்று சொல்லவந்து பின் ஒன்றுமில்லாமல் பேச மோகனாவிற்கு இதுவும் இன்னும் கஷ்டமாக இருந்தது.
‘உறவே வேண்டாம்’ என்று தான் சொல்லும் பொழுது அவன் எப்படி வேதனை அடைந்திருப்பான் என்று அவரால் இப்பொழுது உணரமுடிந்தது.
“போ மோகனா…” என சந்திரன் சொல்ல மோகனாவும் தயக்கத்துடனே உள்ளே வந்தார்.
“உட்காருங்க…” என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வர போக அர்ச்சனாவும் அவனின் பின்னே செல்ல,
“ம்மா, நீங்களும் அங்க உட்காருங்க. உங்களையும் சேர்த்து தான் சொன்னேன்…” என்ற மகனிடம்,
“இன்னுமா எங்க மேல கோவம் சூர்யா? அதான் பாலா வந்துட்டாளே?…” என்றவர் மகனின் முகத்தை திருப்பி,
“என்னப்பா இது?…” என்று கேட்க,
“என் வைஃப் ரொம்ப பாசமா குடுத்த கிப்ட்…” என சொல்லி அவரின் கையை எடுத்துவிட்டவன்,
“வந்துட்டா தான். ஆனா எதுவுமே இன்னும் சால்வ் ஆகலை. மோகனாக்கா வந்திருக்காங்க. என்ன பேசுவாங்கன்னு தெரியாது. நீங்க போங்க…” என்று சொல்லவும் வேறு வழியின்றி அர்ச்சனா வந்து மோகனாவுடன் அமர்ந்துகொண்டார்.
சூர்யா தண்ணீர் கொண்டுவந்து அவன் நீட்ட சங்கடத்துடன் எடுத்துக்கொண்டார் சந்திரன்.
“ட்ராவல் பண்ணி வந்திருக்கீங்க. அந்த ரெண்டு ரூமும் ப்ரீயா தான் இருக்குது. போய் ப்ரெஷ்அப் ஆகிட்டு வாங்களேன்…” என அவன் சொல்ல,
“எனக்கு என் பொண்ணை பார்க்கனும்…” என்றார் மோகனா அந்த தண்ணீரை தொடாமல்.
“அவ தூங்கறா. வேணும்னா போய் பாருங்க…” என சொல்ல, மோகனா எழுந்து செல்ல நினைத்தாலும் கால்கள் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. பின் கோபமாய் அவனிடம் திரும்பியவர்,
“இப்படி அவ கிளம்பி வந்தா…” என்று ஆரம்பிக்க அதை கை நீட்டி தடுத்தவன்,
“எது பேசறதா இருந்தாலும் பாலா எழுந்து வந்த பின்னாடி பேசிக்கலாம். அதுவரைக்கும் அமைதியா இருக்கலாம் நீங்க…” என சொல்ல,
“எதுக்கு, அவ என்னவோ நான் அவளை கஷ்டப்படுத்தற மாதிரி அத்தனை பேச்சு பேசிட்டு வந்தா. இப்பவும் அவ முன்னாடி பேசி நான் கெட்டவளாகனும். அதானே?…” என மோகனா கேட்க ஆச்சர்யமாய் அவரை பார்த்தான்.
“உங்களுக்கு இப்படி கூட பேச தெரியுமா? எனக்கு தெரியலை…” என்றவன்,
“என் பொண்டாட்டிக்கு புருஷனா அவ பக்கம் நான் யோசிக்கலைன்னு ரொம்ப கோவம், வருத்தம். அவளுக்குன்னு நான் பார்க்கலையாம். தாலி கட்டிட்டு அப்பாவாகிட்டு பொறுப்பே இல்லாம பொண்டாட்டியை விட்டுட்டு போய்ட்டியேன்னு என்னை கேட்டுட்டா. அதனால எதை பேசறதா இருந்தாலும் அவ வந்த பின்னாடி அவ தெரிஞ்சுக்கட்டும்…”
சூர்யா சிரிக்காமல் சொன்னாலும் குரலில் அத்தனை அழுத்தம் அப்பொழுதுதான் அவனின் முகத்தையே அனைவரும் கவனித்தனர்.
வெளிர்ந்த கன்னத்தில் சிவப்பாய் கை தடங்களும், பல் பதிந்த தடங்களும் அப்பட்டமாய் தெரிய மோகனா சந்திரனை திரும்பி பார்க்க கோபாலசுவாமி அர்ச்சனாவை பார்த்தார்.
“நான் வந்ததுமே பார்த்தேன்….” என அர்ச்சனா சொல்ல,
“ப்ச்…” என்று கோபாலசுவாமி மகனின் முகத்தை பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார்.
“உன் பொண்ணு உனக்கு மட்டுமில்லை, இங்கயும் சண்டை தான் போட்டிருக்கா. பாரு சாமி ஆட்டம் ஆடிருப்பா போல. இந்த மனுஷனும் கம்முன்னு இருக்கான்…” என சந்திரன் மோகனாவிடம் சொல்ல அவருக்கு பெரும் கவலையாகி போனது.
இருதலை கொல்லி எறும்பை போலானது அவரின் நிலை. அவருக்கு தெரிந்துவிட்டது இனி இங்கிருந்து பாலாவை அழைத்து செல்வது அத்தனை சுலபமில்லை என்று. அத்துடன் சூர்யாவின் முகத்திலிருந்த தீர்க்கம் வேறு மோகனாவை பின்னடைய செய்தது.
ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க சூர்யாவும் ஒருபக்கம் அமர்ந்துகொண்டான்.
பாலா எழுந்து வரும் வரை எதுவும் பேசுவதில்லை என்பதை போல இருந்தான். பார்வை மட்டும் கோபாலசுவாமியை சந்திக்கவே இல்லை. திரும்பி பார்க்கவும் இல்லை.
“சூர்யா. சூர்யா. டேய்…” என கத்திக்கொண்டே பாலா வர இவன் அவளின் குரலில் எழுந்து செல்லும் முன்னரே பாலா அதே சத்தத்துடன் ஹாலுக்கு வந்து சூர்யாவின் மேல் மோதி நின்றவள்,
“எங்கடா போன? போகாதன்னு சொல்லிருக்கேன்ல. எங்க போன?…” என யாரையும் கவனிக்காமல் அவனிடம் கத்த,
“மெதுவா பேசு பாலா. அங்க பாரு…” என்று அவன் காண்பிக்க அப்போதுதான் வந்திருந்தவர்கள் கண்ணுக்கு தெரிந்தனர்.
வருவார்கள் என்று தெரியும், ஆனா சூர்யாவின் பெற்றோரும் சேர்ந்தே வந்திருக்க மோகனாவின் முகத்தை பார்த்தாள். மோகனாவுக்கு அடங்கியிருந்த கோபம் மீண்டும் முகத்தில் பரவ,
“அம்மா கோவமா பார்க்கறாங்க…” என சொல்லி அவனின் முதுகின் பின்னால் அவள் ஒண்டிக்கொள்ள தாயாய் தவித்து போனார் மோகனா.
“நான் உன்ன பெத்தவடி? அந்தளவுக்கு கொடுமைக்காரியா தெரியறேனா?…” என பாலாவிடம் அழுதுகொண்டே கேட்க,
“நான் பேசறதெல்லாம் நேத்தே பேசிட்டேன்…” என இறுக்கமாக அவள் பதில் பேச,
“பாலா…” என மோகனா அதட்ட,
“ப்ச், நீ சும்மா இரு…” என அவளை அதட்டியவன் மோகனாவின் பக்கம் திரும்பினான்.
“இங்க பாருங்க. பாலா இனி என்னோட தான் இருப்பா…” என சூர்யா சொல்ல வேகமாய் மோகனா எதுவோ பேச வர,
“நீங்க பேசினப்போ நான் எதுவும் எதிர்த்து பேசினேனா? பேசறதுக்கு கூட எனக்கு வாய்ப்பு தரலையே நீங்க. அந்த இடத்துலயே நிக்க கூடாதுன்ற மாதிரி விரட்டத்தான செஞ்சீங்க. அதுவும் எமோஷனலா லாக் பண்ணி. எனக்கும் புரிஞ்சது அந்த சூழ்நிலைல நீங்க எப்படித்தான் இருந்திருப்பீங்க…”
“ஆனா, இப்போ என்னோட பக்கத்தையும் கேட்டுத்தான் ஆகனும். உங்களுக்கு என்ன பிரச்சனை? ஜாதகம். அதுதானே? நாங்க சேர்ந்து இருந்தா என்னால பாலாவுக்கு எதுவும் ஆகிடும்னு நினைக்கறீங்க. அதானே? அப்போ பிரிஞ்சுட்டா மட்டும் நிம்மதியா, சந்தோஷமா இருந்திருவோமா?…”
“சொல்ல போனா பிரிஞ்சா தான் இருக்கமாட்டோம். இருக்கமாட்டோம்னா இருக்கவே மாட்டோம். புரியுதா?…” என்றவனின் வார்த்தையில் இருந்த அழுத்தத்தில் மோகனாவுக்கு முந்தைய நாள் மகள் பேசியதில் வந்து நின்றது.
“பாலா இங்க திடீர்ன்னு வந்தது ஏன்னு எனக்கு தெரியாது. ஆனா இனி அவ என்னை விட்டு எங்கயும் வரமாட்டா. அது யார் கூப்பிட்டாலும். ஏன் அவளே போகனும்னு நினைச்சாலும் நான் விடப்போறதில்லை. எதுவா இருந்தாலும் நாங்க சேர்ந்து பேஸ் பண்ணிக்கறோம்…”
“எப்படி எப்படி பேஸ் பண்ணுவ? அன்னைக்கு பாலாவுக்கு தானே அடிப்பட்டுச்சு. உன்னால அதை இல்லைன்னு மாத்த முடிஞ்சதா? நீயும் கையை கட்டிட்டு எங்களை மாதிரி நிக்கத்தானே முடிஞ்சது?…” என மோகனா குத்தலாய் பேச,
“ஹ்ம்ம், ஆமா. நானும் நிக்கத்தான் செஞ்சேன். என்னால வேற எதுவும் செய்ய முடியலை. ஆனா இனி அப்படி ஒரு விஷயம் நடக்காம பார்த்துக்க முடியும் தானே? என்னால முடியும்…” என்ற சூர்யா,
“இவ்வளோ நேரம் ரொம்ப பொறுமையா, கோபப்பட கூடாதுன்னு தான் பேசிட்டு இருக்கேன். என்னால யாருக்கும் எந்த வித மனவருத்தமும் வந்திர கூடாதுன்னு இருக்கேன். அதனால தான் இத்தனை நிதானம்…” என்று சொலும் போதே மோகனா பார்க்க,
“இத்தனை வருஷம் என்னோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நல்ல புள்ளையா இருந்துட்டேன். உங்களுக்கு கூட பிறக்கலைனாலும் ஒரு நல்ல தம்பியா இருந்துட்டேன். ஆனா இனி முழுக்க முழுக்க நல்ல புருஷனா, என் பிள்ளைக்கு நல்ல தகப்பனா இருக்கனும்னு ஆசைப்படறேன்…”