அப்படி உடனடியாக முடிவெடுக்கும் விஷயமல்லவே. மகளின் வாழ்வும், அவளின் எதிர்காலம். இரு குடும்பங்களுக்கு மத்தியிலான வேறுபாடு. அது முக்கியமாக பட,
“தப்பா நினைக்க கூடாது. நாங்க வேற…” என சந்திரன் சொல்லிவிட,
“இது தெரியாம நான் பொண்ணு கேட்கலையே. தெரிஞ்சு தானே கேட்கறேன். ஒருவேளை இப்போதைக்கு சபை மரியாதைக்காக கேட்கறதா நினைக்கறீங்களோ?…” என பேச,
“இல்லை, அப்படியெல்லாம் இல்லை. சூர்யாவை எங்களுக்கு ரொம்ப வருஷமா தெரியுமே…” என்றார் சந்திரன் அப்பாவியாக.
மோகனாவிற்கு அதையும் தாண்டி ‘பாலாவிற்கும், சூர்யாவிற்கும் ஒத்துபோகாதே, இவர்கள் இருவரும் எப்படி திருமணத்தில்?’ என்ற கவலை.
அப்போது தான் பாலாவின் திருமணத்தை பற்றி அர்ச்சனாவின் பேச்சும் அவரின் அன்பும் புரிய இப்படி ஒரு குடும்பம் கிடைத்தால் மறுக்க அவசியமில்லை.
ஆனாலும் இரு குடும்பங்களில் உணவிலிருந்து பழக்கவழக்கம் முதற்கொண்டு எத்தனை வேறுபாடுகள். இதை எல்லாம் பாலாவால் அனுசரிக்க முடியுமா? என குழப்பத்துடன் இருந்தார் மோகனா.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதை போல கரைப்பதில் கை தேர்ந்தவராக இருந்தார் கோபலசுவாமி. பத்து நிமிடத்தில் மோகனாவும், சந்திரனும் சம்மதம் என்னும் நிலைக்கு வரவைத்துவிட,
“பாலாவுக்கு தான் விருப்பமான்னு தெரியனும்…” என மோகனா சொல்ல அனைவரின் பார்வையும் அவளிடத்தில் தான் சென்றது.
“நீ சொல்லும்மா பாலா? உனக்கு இதுல சம்மதமா?….” என கேட்க அவள் சூர்யாவை பார்த்தாள்.
‘நோ, நோ, நோ’ என சூர்யா அவளிடம் இறைஞ்சுதலான பார்வையில் மறுப்பு சொல்லிக்கொண்டிருக்க பாலா நேராக அவனருகே இருந்த வெற்றியிடம் சென்று நின்றாள்.
“மாமா, நீ சொல்லு. எனக்கு என்ன செய்யன்னு தெரியலை…” என அவள் சொல்ல வெற்றி அவளின் கையை பிடித்துக்கொண்டான்.
தள்ளி நின்று பார்க்கும் பொழுது தைரியமாக இதன் பாதிப்பில்லாதவளாக தெரிந்தவள் அருகே வந்ததும் தான் தெரிந்தது பாலாவின் முகம் முகம் முத்துமுத்தாய் வியர்த்திருந்தது.
வெற்றி அவளின் கையை பற்றியதுமே அவளின் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்துகொண்டவன் தோளோடு சேர்த்து அணைத்து பிடித்து,
“உனக்கு என்ன தோணுதோ சொல்லுடா பாலா…” என கேட்க,
“தெரியலையே. நீ சொல்லு. எனக்கு சுத்தமா தெரியலை…” என்றவள் சூர்யாவை பார்க்க மறுப்பாய் தலையசைத்தான் அவன்.
அவன் மறுக்க மறுக்க பாலாவிற்கு அவனை பார்க்கவேண்டாம் என தோன்ற வெற்றியை நோக்கினாள்.
“சொல்லு மாமா…” என சொல்ல,
“உனக்கு சூர்யா மாதிரி ஒருத்தன் புருஷனா வந்த நான் ஏன்டா நோ சொல்ல போறேன். எனக்கு இதுல ரொம்பவே சந்தோஷம். இப்ப சொல்லு உனக்கு ஓகே வா?…” என,
“அப்போ நானும் ஓகே சொல்லவா? சொல்லிடவா?…” என பேச அவர்கள் இருவரின் பேச்சிலேயே மற்றவர்களுக்கு புரிந்துபோனது.
“நோ, நோ, நோ, பாலா நோ…” என வெற்றியின் கை வளைவில் இருந்த பாலாவின் கையை முரட்டுத்தனமாய் பிடித்து தன் அருகே நிறுத்தினான்.
அவளை பார்த்ததில் இருந்து இதோ முதல் முறை அவளை ‘பாலா’ என அழைக்கிறான். அவளறிந்து இதுவே முதல் முறை அவனின் வாயால் அவள் பெயர் கேட்பது.
“நோ பாலா, உன் ப்யூச்சரை நீயே ஸ்பாயில் பண்ணிக்காத. இதுக்கு சம்மதிக்காத. பாலா நான் சொல்றதை கேளு…” என சூர்யா சொல்ல,
“சூர்யா நீ விடு அந்த பொண்ணை…” என கோபாலசுவாமி அதட்ட பிடித்திருந்த அவளின் கையை விட்டவன்,
“அப்பா, அவ படிக்கிற பொண்ணு. சின்ன பொண்ணு. நீங்க பன்றது மிகப்பெரிய பாவம். என்னால சத்தியமா…” என அவன் பேச வர,
“பாலா, உனக்கு சம்மதமாம்மா?…” என அர்ச்சனா கேட்க மோகனாவையும், சந்திரனையும் பார்த்தவள் அவர்களின் தலையசைப்பில்,
“ஹ்ம்ம், சம்மதம் ஆன்ட்டி…” என்றாள் ஸ்திரமாக.
முடிந்தது. அவளின் வாழ்வும், அவனின் வாழ்வும் அந்த நொடியிலிருந்து ஒரே பாதையில் பயணத்தை துவங்க அடிக்கல் நாட்டியது அந்த நாழிகை.
அதன் பின்னர் உமா அங்கிருந்து வேகமாய் செல்ல கோபாலசுவாமி அர்ச்சனாவை பார்த்ததும் அவரும் உமாவின் பின்னே சென்றார். இதில் கொஞ்சமும் ஒப்புதல் இல்லை என்றாலும் கோபாலசுவாமி பேச்சிற்கு மறுப்பு ஏது அந்த குடும்பத்தில்?
“சரி நான் சொல்லும் போது பாலாவை அழைச்சுட்டு வாங்க…” என்று சொல்லியவர் பாலாவின் அருகே நெருங்கி,
“நல்லா இருப்பம்மா. நிறைஞ்ச மனசோட சொல்றேன். என் மகனோட உன்னோட வாழ்க்கை சிறப்பா இருக்கும்…” என்று அவளின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தவர் அங்கிருந்து நகர்ந்தவர்,
“சூர்யா போய் தயாராகு. புரியும்னு நினைக்கறேன்…” என சொல்லி செல்ல அவரை கையாலாகத்தனத்துடன் பார்த்தவன்,
“நீயுமாடா?…” என கேட்டான் வெற்றியிடம். வெற்றி மௌனமாக நிற்க சூர்யா மோகனாவிடம் வந்தான்.
“நீங்க ஏன்க்கா இதுக்கு சம்மதிச்சீங்க? நான் எதிர்பார்க்கலை….” என சொல்ல,
“உனக்கு பாலாவை புடிக்காதா சூர்யா? இல்லை எங்க வீட்டுல சும்மா ப்ரெண்டா மட்டும் தான் பழகினியா? கல்யாணம்னு வரும் போது உனக்கும்?…”
“அக்கா ப்ளீஸ், இப்படி நீங்களும் பேசாதீங்க…” என்றவன் அங்கிருந்த கட்டிலில் தொப்பென்று அமர்ந்தான்.
எல்லாம் கையை மீறி போய்க்கொண்டிருந்தது. எதிர்காலமும், அதன் சாராம்சங்களும் பெரிதாய் அவனை பயம் காட்டியது.
“நான் பாலாக்கிட்ட டூ மினிட்ஸ் தனியா பேசனும்…” என உணர்வற்ற குரலில் சொல்ல,
“சூர்யா வா, நாம அந்த ரூம் போவோம். இப்போ எதுவும் பேச வேண்டாம்…” என வெற்றி சொல்ல,
“அதான் எல்லாரும் சேர்ந்து என்னை அவ தலையில கட்டிவைக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்களே? அப்பறம் என்ன? ஒன்னும் ஆகாது. போங்க…” என கத்த அனைவரும் வெளியே சென்று நின்றனர்.
மோகனா ஜெயஸ்ரீ கையை பிடித்துகொண்டு எடுத்த முடிவு சரியா தவறா என வெற்றியுடன் பேச்சில் இருந்தார். வெற்றியும் அவரை வெகுவாய் கன்வின்ஸ் செய்ய அறையில் பாலா நின்ற இடத்திலிருந்து நகர்ந்து சேரில் அமர்ந்தாள்.
“பாலா என்னை பாரு…” என அவளை அழைக்க நிமிர்ந்து பார்த்தாளே தவிர வாயை திறக்கவில்லை.
“ஏன் சரின்னு சொன்ன? யார் என்ன சொல்லியிருந்தாலும் வேண்டாம்னு சொல்லமாட்டியா நீ?…” என கோபமாக கேட்க,
“இப்ப அதை பத்தி பேச வேண்டாம்…”
“ஏன்? ஏன்? பேசனும். இன்னும் எதுவும் நடந்திடலை. நோ சொல்லிடு…” என சொல்ல பாலா என்ன நினைக்கிறாள் என்றே தெரியவில்லை அவனுக்கு.
“ப்ச், நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன் பாலா. இங்க பாரு உனக்கும் எனக்கு செட் ஆகவே ஆகாது. கிட்டத்தட்ட நம்ம ரெண்டுபேரோட கேரக்டர்ஸ் சிமிலியர். அதுவே நம்மளை இதுவரைக்கும் ஒரு கேஷுவலான ஒரு பேச்சுக்கு கூட கொண்டு போகலை…”
“பாலா நான் சொல்றது உனக்கு புரியுதா? நான் ஒரு ஈஸி பர்சனாலிட்டி இல்லை. நமக்கு கல்யாணம் ஆனா லைப் லீட் பன்றது ரொம்ப கஷ்டம். பின்னாடி முடியாம பிரிய கூட வாய்ப்பிருக்குது…” என சொல்ல,
“நான் எல்லார்ட்டயும் ஓகே சொல்லிட்டேன்…” என பாலா இறுக்கமாய் சொல்ல,
“என்னடி நான் சின்னப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டே இருக்கேன். நீ என்னடான்னா தேய்ஞ்ச ரெக்காடர் மாதிரி பேசிட்டு இருக்கற? இத்தனை வருஷத்துல இத்தனை பேசிருக்கறது இப்போ தான் முதல் தடவை. ஒரு ப்ரெண்ட் மாதிரி கூட வேண்டாம். ஆனா நாம எனிமிக்கும் மோசமா தான் நடந்திருக்கோம். வேண்டாம். வேண்டாம்…”
அவன் சொல்ல பாலா இன்னுமே அமைதியாக இருந்தாள். அவளுக்குமே அத்தனை பயம், குழப்பம், உள்ளுக்குள் கலவரம் என ஆட்டிப்படைத்தது.
“பாலா நான் உங்ககிட்ட எப்படி பேசுவேன். டூ பி ப்ராங்க்க். என்னால உன்னை வொய்பா அக்ஸப்ட் பண்ணிக்க முடியலை. புரிஞ்சுக்கோ பாலா. கல்யாணம் வெறும் தாலி கட்டுறதோட முடியாது. அடுத்து இன்னும் இன்னும். ப்ச். மரமண்டை. மரமண்டை. இத்தனை பேசறேன்…” என கத்தியவன்,
“என்னால நீ ரொம்ப கஷ்டப்படுவ பாலா. பாலா. புரிஞ்சுக்கோடி. இதுக்குமேல நான் எப்படி சொல்லன்னு எனக்கு தெரியலை. எனக்கு தெரிஞ்சே என்னால உன் வாழ்க்கை பாழாகிடுமோன்னு பயமா இருக்கு பாலா…” என்றவனின் குரல் தழுதழுத்து கண்கள் கலங்கி இருந்தது.
அவனின் இந்த கோலத்தை முற்றிலும் பாலா எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் தன் மீது அக்கறை கொண்ட அவனின் பேச்சு அவளை இன்னும் ஆழ்ந்து பார்க்க வைத்தது அவனை. வியப்பும் கூடவே தான்.
“இவங்க எல்லாருக்காகவும் பார்க்காத. உன்னோட வீட்டுக்காகவும் பார்க்காத. இப்ப நோ சொல்லு. உன்னை இங்க இருந்து நன் கூட்டிட்டு போய்டறேன்…” என சூர்யா சொல்ல அது எல்லாம் பாலாவின் காதில் விழுந்தால் தானே?
சூர்யாவின் இந்த கலங்கிய முகம் என்னவோ செய்தது அவளை. இவன் என்ன இப்படி கெஞ்சுகிறான் என்று நினைக்கும் போதே மனதை பிசைந்தது. அதன் நினைவுகளில் அவள் இருக்க எதையும் கேட்கவில்லை.
“சூர்யா…” என்றபடி உள்ளே வந்தான் வெற்றி.
மாமனின் அதட்டலான குரலில் உணர்வு வந்தவள் வேகமாய் அவனை சென்று கட்டிக்கொண்டாள்.
ஏதேதோ குழப்பங்கள் எல்லாம் சூழ யாரிடமும் பேசவோ, யாரின் பேச்சையும் கேட்கவோ அவள் தயாராக இல்லை. ஏதோ ஒரு வேகத்தில் சரி என்றுவிட்டாள். ஆனாலும் அது சரியா? தவறா? என அனுமானிக்கமுடியாமல் தடுமாறியவளுக்கு அதிலிருந்து பின்வாங்கவும் முடியாமல் தவித்து நிற்க தனிமை தேவைப்பட்டது அவளை ஆசுவாசப்படுத்திக்கொள்ள.
“மாமா எனக்கு கொஞ்சம் தனியா இருக்கனும். ப்ளீஸ்…” என கெஞ்சல் குரலில் கேட்க,
“ஓகே டா. நாங்க கிளம்பறோம்…” என்ற வெற்றி,
“ஜெய் நீ மட்டும் கூட இரு…” என்றவன் மற்றவர்களை அழைத்துக்கொண்டு தனக்கு கொடுத்திருந்த அறைக்கு வந்துவிட்டான்.
சூர்யா அதன்பின்னர் யாருடனும் பேசவில்லை. கீழே மேளச்சத்தம் காதை கிழிக்க அதன் அதிர்வுகள் இவனிடத்தில் அதிகமாய்.
அவனும் வெற்றி இருந்த அறையில் இருக்க அஸ்வினி வந்துவிட்டாள் அவனை தேடி.
“அண்ணா அப்பா கூப்பிடறார்…” என சொல்ல சிவந்த விழிகளுடன் தங்கையை பார்க்க அவளும் அழுதிருந்தாள்.
“வரேன்…” என சொல்லி எழுந்து வெளியே செல்ல வெற்றியும் உடன் வந்தான்.
“ஓடியாடா போக போறேன்?…” என பல்லை கடித்துக்கொண்டு அவன் கேட்க,
“அங்கிள் என்னையும் தான் வர சொன்னாராம்…” என்றான் வெற்றியும்.
அஸ்வினி வந்ததும் வெற்றியை அழைத்துவிட்டு தான் சூர்யாவை அழைத்தாள். அதை கவனிக்காமல் சூர்யா எகிற வெற்றி பொறுமையாக இருந்தான்.
அங்கே உமா ஒரு இடத்தில் அழுதபடி இருக்க கோபாலசுவாமி எல்லாம் சொல்லியிருந்தார்.
ஒன்றரை மணிநேர முகூர்த்தம் என்பதால் முதலில் மணவறையில் ஹரிணி திருமணம் முடிந்ததும் அடுத்ததாக சூர்யா, பாலா திருமணம் என்றும் ஹரிணி திருமணம் முடிந்தபின் பாலாவை அழைத்து வந்தால் போதுமானது என்று சொல்ல மற்றவர்கள் பொம்மலாட்ட பொம்மைகள் தாம் அங்கே. ஆட்டிவைப்பவர் கோபாலசுவாமி ஆகிற்றே.
எந்த சூழ்நிலையிலும் திவ்யா இல்லை என்பது ஹரிணி திருமணம் முடியும் வரையாவது தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உமாவிற்கு கட்டளையிட்டிருந்தார்.
உத்தமன் மகளை தேடுகிறேன் என கிளம்பி சென்றிருக்க அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அதுவரை திவ்யா அங்கு இல்லாதது ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஹரிணிக்கு முதலில் திருமணம் நடக்க திவ்யாவை அனைவரும் கேட்க, ‘சற்று உடல்நிலை சரியில்லை’ என்று ஒருவாறாக பதில் சொல்லி சமாளித்தனர்.
ஹரிணி திருமணம் முடிந்ததும் சூர்யாவிற்கு எங்கோ ஓடிவிடலாமா என்ற எண்ணம் உதிக்க எந்தவகையிலும் தப்பிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்றான்.
கோபாலசுவாமியிடம் இப்படி ஒரு முடிவை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் அடுத்தடுத்த அதிர்ச்சிகளாக வெற்றி, மோகனா ஒப்புதல், பாலா சம்மதம் இவை இன்னும் அவனை மயக்கத்தில் வைத்திருப்பதை போல இருக்க எப்படி மணவறையில் அமர்ந்தான் என்றே தெரியவில்லை.
அதற்குள் ஏதோ சலசலப்புகளும் பேச்சுக்களும் தனக்கு முன்னால் யார் யாரோ கூச்சல் போட அப்போதுதான் தன்னருகே பாலா வந்து அமர்ந்ததயே அவன் உணர்ந்தான்.
“எல்லாரும் என்னை மன்னிக்கனும். தயவு செய்து இந்த கல்யாணத்தை எந்தவித பிரச்சனையும் இல்லாம நடத்தி குடுக்கனும்…” என மேடையில் நின்றவாறு கோபாலசுவாமி கைகூப்பி சொல்ல,
“எந்த தைரியத்துல நீங்க இந்த முடிவை எடுத்தீங்க சுவாமி? இதுக்கு நம்ம ஆளுங்க எப்படி சம்மதிப்பாங்க? இதோட விளைவு என்னன்னு உங்களுக்கு தெரியாதோ?…” என்று ஆளாளுக்கு அவரை பேச சிலர் வெளிநடப்பு செல்ல என அந்த இடமே களேபரமாக போதாததிற்கு ஹரிணியின் குடும்பத்தினர் வேறு பிரச்சனை செய்தனர்.
“இப்படி செய்யறதுக்கு முன்னாடி எங்கக்கிட்ட ஏன் சொல்லலை? என்ன செஞ்சிட முடியும்னு ஒரு ஆணவம் தானே?…” என ஹரிணயின் மாமனார் பேச,
“பொண்ணோட வாழ்க்கை முக்கியம்னு நினைச்சிருந்தா இப்படி செஞ்சிருப்பாரா? பொண்ணு வேண்டாம்னு விட்டுட்டு வாங்க…” என மாமியார் பேச,