இரண்டு நாட்களாக இதே கண்ணாமூச்சி ஆட்டம் தான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவள் பேச முயல்வதும், அவன் விலகிப் போவதும் என ஒரு வித்தியாசமான விளையாட்டு.
அவளுக்கு முதலில் தவறாக பேசி விட்டோமா என்று பதட்டமாக இருந்தது, பின்னர் பயமாக கூட இருந்தது. ஆனால், தான் அப்படி ஒன்றும் தவறாக கேட்டு விடவில்லை என்று உணர்ந்ததும், கணவனின் முகம் திருப்பலைப் பார்த்து கோபம் தான் வந்தது.
அதிலும், ராகவி குடும்பம் வீட்டை விட்டு கிளம்பப் போகிறார்கள் என்று விசாலாட்சி அறிவித்ததும், அவளை கண்கள் சிவக்க, ஆத்திரத்துடன் ஒரு பார்வை பார்த்தான் ராகவன். அவ்வளவு தான்.
அதன் பின் அவளிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்தான்.
அவன் கோபப்பட்டு, கத்தி, அவளை கேள்வி கேட்டு, எதையாவது சொல்லி திட்டினால் கூட பரவாயில்லை என்று தான் அவளுக்குத் தோன்றியது.
இந்த மௌனம் தாங்கிக் கொள்ள இயலாததாக இருந்தது.
அவர்களுக்கு நடுவில் பேரிரைச்சலுடன் ஒலித்துக் கொண்டிருந்த மௌனத்தை எதைக் கொண்டும் நிறுத்த முடியாமல், அவனை, அவன் போக்கில் விடத் தான் அவளும் நினைத்தாள். அவளால் முடியவில்லையே.
ராகவி எப்போதும் ஏதாவது வேலையில் மூழ்கி இருந்தாள். மூன்று குழந்தைகள், கூடவே கடை மற்றும் அவளுக்கேயான வீட்டு வேலை என திணறி கொண்டிருந்தவளை எப்படி அணுகி பேசுவது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றிருந்தாள் மதுமிதா.
உதய், வீட்டிலேயே இல்லை. மாமனார் மருந்தகம், ஐயா, ஆயா கடை என அனைவருமே அவரவர் வேலையை பார்க்க சென்றிருந்தனர்.
அவளுக்கு தான் மட்டும் தனித்து விடப் பட்டது போன்றதொரு உணர்வு மனதை ஆக்கிரமிக்க, எந்த வேலையிலும் முழுதாக கவனம் செலுத்த முடியவில்லை அவளால்.
“நான் என்ன தவறாக பேசினேன்?” அவளுக்கு விளங்கவே இல்லை.
எவ்வளவு நேரம் தான் தனிமையுடன் பேசுவது?
எத்தனை முறை தான் புகைப்படத்தில் இருந்த ராகவனிடம் கேள்விகள் கேட்பது?
அவனது நிழலிடம் மட்டுமே அவளால் அனைத்து உணர்ச்சிகளையும் கொட்ட முடிந்தது. அந்த புகைப்படத்தை பார்த்து கோபப்பட்டாள், கெஞ்சினாள், கொஞ்சினாள், அழுதாள் அப்படியே அந்த கண்களைப் பார்த்துக் கொண்டே சரிந்து அமர்ந்தாள்.
மனம் புலம்பி அழ ஒரு ஜீவனை தேடியது. சாய்ந்து கொள்ள தோள்கள் கேட்டது. கண்ணீர் துடைக்கும் விரல்களுக்கு ஏங்கியது. தலைக் கோதும் கரம் வேண்டியது.
அவளுக்கு யாரிடமாவது தன் மனதில் இருப்பதை சொல்லி, புலம்ப வேண்டும் போலிருந்தது.
மனதில் இருந்த பாரம் விலகினால் தான் தெளிவாக சிந்திக்க முடியும் என்று தோன்றியது.
யாரேனும் இரு பக்க நியாயமும் எடுத்துச் சொன்னால் தேவலாம் என்றிருந்தது. தன் பக்கத் தவறை அவளுக்கு தெரிந்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
ஆனால், அப்படி கேட்பதற்கும், பேசுவதற்கும் தான் அவளுக்குக்கென்று இவ்வுலகில் யாருமில்லையே.
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள இருப்பதே ஒரே தங்கை. வெண்பா. அவளும் வெளிநாட்டில் வாழ்கிறாள். அவளிடம் பொதுவாகவே தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசியதில்லை மதுமிதா.
முன்னர் மும்பையில் வேலை பார்த்ததால், அவளுக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி, நெருக்கமான தோழிகளும் கிடையாது.
மனம் விட்டு பேசக் கூட யாருமில்லா நிலை… தன்னிரக்கம் அவளை கொன்று தின்றது.
இதுவே அவளின் பாட்டி சிவகாமி இருந்திருந்தால், “வாயை அடக்கி பேசணும் மது மா. பேசிட்டு அப்புறம் யோசிக்க கூடாது. நீயெல்லாம் அந்த வீட்டு மருமகளா போனதே பெரிய விஷயம்….” என்று அவருக்கு தோன்றியதை எல்லாம் சொல்லி அவளை அர்ச்சித்து இருப்பார்.
ஆனால், அதற்குப் பின் ஆறுதலும் கிடைத்து இருக்கும். மடி சாய்த்து, தலைக் கோதி, “யோசிச்சு பேசணும் மது மா. எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க டா” என்று அறிவுரையும் கிடைத்து இருக்கும்.
அவர் என்ன செய்தாலும், குட்டினாலும், திட்டினாலும்… தனக்கென்று ஒருவர் இருக்கிறார் என்ற மனத் திடம் அவளுக்கு மிஞ்சி இருக்கும்.
இன்று, இப்படி தனிமையில் கலங்கித் தவித்திருக்க தேவை இருந்திருக்காது.
அதற்கு மேல், அந்த வீடே அந்நியமாய் தோன்ற, அமைதியாய் கிளம்பி அவளது பிறந்த வீட்டிற்கு சென்று விட்டாள் அவள்.
புகுந்த வீட்டில் அத்தனை பேருக்கு நடுவில் இருந்த தனிமையை காட்டிலும், ஆட்களே இல்லாது, முழு தனிமையில் இருந்த அவளது வீடு அப்படி ஒன்றும் கொடுமையானதாய் இருக்கவில்லை.
அப்பா, பாட்டி, தங்கை வெண்பாவின் நினைவுகள் மனதை நிறைக்க அவர்களே உடன் இருப்பது போன்றதொரு மாய உணர்வு, சிறு நிம்மதியை அவளுக்குத் தந்தது.
அதுவும் கூட சிறிது நேரத்திற்கு தான், மனம் மீண்டும் கணவனிடமே போய் நின்றது.
அவனை அழைத்துப் பேசுவது என்ற முடிவுடன், அலைபேசியை எடுத்து பார்த்தாள்.
ஏற்கனவே அவனிடம் இருந்து வந்திருந்த குறுஞ்செய்தி அவளின் முகத்தில் அறைந்தது.
வழக்கம் போல அறுவை சிகிச்சை அரங்கத்தில் இருப்பதாக குறிப்பிட்டு வந்திருந்தது.
அலைபேசியை அணைத்து சோஃபாவில் எரிந்தாள். அவளால் தற்போது செய்ய முடிந்தது அது மட்டும் தானே.
அப்படியே சரிந்து படுத்து உறங்கத் தொடங்கினாள்.
சற்று நேரத்தில் எல்லாம் அழைப்பு மணியோசை அவளின் தூக்கத்தையும் கலைத்து விட, எழுந்துப் போய் பார்த்தாள், வெளியில் சுஹாசினி நின்றிருந்தாள்.
“ஹாய் மது, உன்னைத் தேடி அங்க போனேன். பார்த்தா நீ இல்ல. ஆளைக் காணோம்னு ராகவியை கேட்டா, நீ இங்க இருப்பனு சொன்னா. வீடு க்ளீன் பண்ண வந்தியா?” கண்களால் வீட்டை ஆராய்ந்த படி சுஹாசினி கேட்க,
“ஹ்ம்ம். ஆமா” என்றாள் மதுமிதா.
வழக்கமாக இரு வாரங்களுக்கு ஒருமுறை வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு போவாள் தான், அதையே இப்போதும் ராகவி சொல்லி இருக்க, மதுமிதாவிற்கு சிரிப்புத் தான் வந்தது.
“சொல்லுங்க சுஹாசினி”
மதுமிதாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் எழுந்து, அடுப்படியை தேடிப் போனாள் சுஹாசினி.
“ஒன்னுமே சமைக்கலை மது? காலையில என்ன சாப்பிட்ட? மதியம்?” சுஹாசினி கேட்க, மதுமிதா எதிரில் இருந்த சுவரை வெறித்தாள்.
“எனக்கு ஒரு விஷயம் எப்பவுமே புரியாது மது. நீங்க எல்லாம், ஏன் இப்படி இருக்கீங்க? சாப்பாட்டுக்கு இவ்வளவு அவமரியாதை?? ஏன் சாப்பாட்டை அவமதிக்கறீங்க? என்னமோ, சாப்பாடு தான் உங்களை கொடுமை பண்ண மாதிரி, கோபம், சோகம், ஆத்திரம் மொத்தத்தையும் அது மேல தான் காட்டுறது. நல்லா யோசிச்சு பாருங்க. பதிலுக்கு சாப்பாடு உங்ககிட்ட முகம் திருப்பிட்டு போனா என்ன ஆகும்னு. கண்ணை இருட்டி, காது அடைச்சு, தலை சுத்தி, மயக்கம் வந்து, உசுரு போகும்… வா, வந்து சாப்பிடு”
அந்நேரம் மதுமிதா இருந்த மனநிலையில் உணவு என்ன, தண்ணீர் கூட உள்ளிறங்காது என்று அவளுக்கு நிச்சயமாக தெரியும். ஆனாலும், சுஹாசினியின் வரவும், வார்த்தைகளும் ஏதோ ஒரு விதத்தில் இதம் தர, எழுந்து சென்று கையைக் கழுவி வந்து அவளோடு அமர்ந்தாள்.
சுஹாசினி அவளே அத்தனையையும் செய்தாள். அடுப்படியில் தேடி இரண்டு தட்டுகள் எடுத்து வந்து, அதில் அவள் வாங்கி வந்திருந்த உணவை பரிமாறி, மதுவின் கைகளில் திணித்தாள்.
மதுமிதா, “சாப்பிட்டேன்” என்று காண்பித்துக் கொள்ள, ஒரு வாய் சோற்றை தண்ணீர் குடித்து உள்ளே தள்ளினாள்.
“ராகவன் ரொம்ப சாப்ட் நேச்சர் மது. பாசக்காரன். அவனுக்கு கல்யாணமானா, பொண்டாட்டியை ரொம்ப நல்லா பார்த்துப்பான்னு தான் நாங்க எல்லோருமே நினைச்சோம். அட்லீஸ்ட், நான் அப்படித் தான் நினைச்சேன் மது” சுஹாசினி சொல்ல, மதுமிதா அவளையே சலனமின்றி பார்த்திருந்தாள்.
“ஆனா, அவனும் எல்லா ஆண்களையும் போல தான் இருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. பொதுவா ஆண்களுக்கு தன் குடும்பம் தான் ஆல்வேஸ் முதல் ப்ரையாரிட்டின்னு தெரியும். அம்மா, அப்பா, தங்கச்சி, தோம்பி.. கடைசியா தான் கட்டினவ வருவா. அது அவங்க டிசைன். நாம ஒன்னும் பண்ண முடியாது. வெளில சக்சஸ்ஃபுல்லா இருக்க ஆண்கள் கூட வீட்ல சொதப்புறவங்களா தான் இருப்பாங்க. “என்னை தவிர வேற யாராலும் இந்த மனுஷன் கூட குப்பைக் கொட்ட முடியாதுன்னு”, தான் பொண்டாட்டி புலம்புவா.
எங்க வீட்லயும் இதே கதை தான் மது. அவர் கோவா, நான் தமிழ்நாடு. அவர் கொங்கனியில் கத்த, பதிலுக்கு நான் தமிழ்ல கத்த.. சிறப்பா போகும்.” சுஹாசினி சிரிக்க, இதுவே வேறொரு நேரமாக இருந்திருந்தால் மதுமிதாவும் கூட சிரித்திருப்பாள் தான். சுஹாசினி சொன்னதை கற்பனை செய்து பார்க்கவே சுவாரசியமாக தான் இருந்தது.
“எவ்வளவு பெரிய சண்டைக்கும், நான்.. அவரை விட்டு பிரிந்து போகனும்னு யோசிச்சது இல்ல மது.”
“நீங்க என்ன சொல்ல வர்றீங்க?” மதுமிதா அழுத்தமாக கேட்க,
“ராகவனுக்கு, ராகவி மேல பாசம் அதிகம் தான். ஆனாலும்…”
“அவர் என்னை ஒன்னுமே சொல்லலைங்க சுஹாசினி. நாங்க சண்டை எல்லாம் போடல. நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? எதைப் பத்தி பேசிட்டு இருக்கீங்க? எதுக்கு அவரை குறை சொல்ற மாதிரி பேசுறீங்க? எனக்குப் புரியல” மதுமிதாவின் கேள்வியில், ஒரு நொடி அசந்து போனாள் சுஹாசினி.
“ஒன்னுமில்ல மா. நான் தான் தெரியாம பேசிட்டேன். நீ சாப்பிடு” என்றாள் சுஹாசினி. ஆனால், மதுமிதா தட்டை அப்படியே உணவோடு தரையில் வைத்தாள்.
சுஹாசினிக்கு அவளது செய்கையில் சட்டென கோபம் துளிர்த்தது. அதே நேரம், அவள் ராகவனை விட்டுக் கொடுக்காமல் பேசியது சிரிப்பை கிளறியது.
“உனக்கு ஒன்னு தெரியுமா மது? ராகவனும், நானும் கல்யாணம் பண்ணிப்போம்னு நிறைய பேர் நினைச்சாங்க. ஆனா,…” என்று சிறு இடைவெளி விட்ட சுஹாசினி.
“நான் தப்பிச்சேன்” என்று முடிக்க, கண்ணில் கனலுடன் அவளைப் பார்த்தாள் மதுமிதா.
“வீட்டை க்ளீன் பண்ணிட்டு வா மது. நான் குழந்தைகளை அப்பா கிட்ட விட்டுட்டு உன்ன பார்க்க வந்தேன். நான் கிளம்பறேன்” என்று சுஹாசினி எழுந்து கொள்ள, தனக்காக இவ்வளவு மெனக்கெட்டு வந்தவளை காயப்படுத்தி விட்டோமோ என்று வருத்தப்பட்டாள் மதுமிதா.
“தாங்க்ஸ்” கட்டுப்படுத்த முடியாது சொல்லி விட்டாள் மதுமிதா.
மெல்ல புன்னகைத்த சுஹாசினி, “இட்ஸ் ஓகே மது. சாப்பாட்டை வேஸ்ட் பண்ணாம சாப்பிடு. நீ பேசினதை விட, சாப்பாட்டை வேஸ்ட் பண்ணா தான், நான் ரொம்ப ஹர்ட் ஆகி ஃபீல் பண்ணுவேன். அதனால், மறக்காம சாப்பிட்டு முடி. மனசும், உடம்பும் தெம்பாகும்” புன்னகையுடன் சொன்ன சுஹாசினி, கையசைத்து விடை பெற்று, வண்டியை கிளப்பிக் கொண்டுப் போனாள்.