அந்த அறையில் இருந்த அனைவரையும், கண்களால் ஒரு முறை தொட்ட ராகவன்,
“ஒரு நாளைக்கு ரெண்டு, மூனு, ஏன் அஞ்சு ஆபரேஷன் கூட அட்டென்ட் பண்ணி இருக்கேன். சில மேஜர் ஆபரேஷனுக்கு எல்லாம் தொடர்ச்சியா எட்டு, ஒன்பது மணி நேரம் கூட நின்னு இருக்கேன். ஆனா, எண்ட் ஆஃப் த டே.. என் பேரு கூட என்னோட பேஷண்ட்க்கு தெரியாது. நூறுல பத்து பேருக்கு என் பேர் தெரிஞ்சாலே அதிசயம் தான். பெருசா எதையும் எதிர்பார்த்து நாங்க மருத்துவம் பார்க்கலை தான்.. ஆனாலும், எங்க பேர் கூட…” என்றவனின் குரலில், அதிகமான வலி இருந்தது.
“என் குடும்பத்துக்கே என் வேலையோட இம்பார்ட்டன்ஸ் புரியல. இதுல ஊர்ல இருக்கவங்களுக்கு எப்படி புரியும் சொல்லு மது?”
“ஒரு லட்சம் பேருக்கு ஒரு.. ஒரு மயக்கவியல் மருத்துவர் தான் இருக்கார்… அதுவும் வளர்ந்த நகரங்களில்…”
பேச முடியாமல் அடைத்த தொண்டையை செறுமி சரி செய்தாள் அவள்.
“பார்த்துக்கோ… இதான் நிலைமை. இங்க திரும்பின பக்கம் எல்லாம் ஹாஸ்பிட்டல். அதுல ஒரு நாளைக்கு எத்தனை ஆபரேஷன் நடக்குது தெரியுமா? உயிர் காக்கும் அறுவை சிகிச்சை ஒரு பக்கம்னா, ஒரு உயிரை உலகத்துக்கு கொண்டு வர்ற பிரசவம் இன்னொரு பக்கம். ஒரு நாளைக்கு எத்தனை குழந்தைங்க பொறக்குது நம்ம நாட்ல… அதுல பாதிக்கும் மேல சிசேரியன் தான்..
எல்லாத்துக்கும் மயக்க மருந்து மருத்துவர் இருந்தாகனும். இல்லைன்னா, என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.
நாங்க அனிஸ்தீசியா அப்படின்றதை முடிவு பண்ண கணமே, எங்களுக்கு தெரியும். எங்க வேலை எப்போ முடியும்னு எங்களுக்கே தெரியாதுன்னு. எப்போ வீட்டுக்கு போவோம்னு… நேரம், காலம் கிடையாதுன்னு…” அவன் நீளமாக பேசிக் கொண்டே போக,
“சாரி ராகவ்” அழுதபடி கேட்டாள் ராகவி.
இப்படி அவளிடம் பேச வேண்டிய சூழல் வரும் என்று ராகவன் ஒரு நாளும் நினைத்ததே கிடையாது. அவளை வருத்தப்படுத்தி விட்டோம் என்பதை அவனால் நன்றாக உணர முடிந்தது.
“இட்ஸ் ஓகே பாப்பா” என்றான் அவன்.
உதய் மனைவியின் கையை இறுகப் பற்றி வெளியில் இழுத்துப் போக முயற்சிக்க,
“ராகவி” என்று அழைத்து, அவளைப் போக விடாமல் நிறுத்தினான் ராகவன்.
“நேத்து, எட்டு வயது பையனுக்கு அப்பண்டிக்ஸ் வெடிச்சுடுச்சு. மூனு, நாலு அனஸ்தீஸியாலஜிஸ்ட்கு கால் பண்ணி பார்த்துட்டு, யாரும் அந்நேரம், அவரசத்துக்கு.. வர முடியலைனு தான் என்னை கூப்பிட்டாங்க. நான் போனது தப்பா சொல்லு?” அவன் அழுத்தமாக கேட்க, எச்சில் கூட்டி விழுங்கினாள் ராகவி.
“மனசாட்சி இருக்க எந்த டாக்டராலயும் போகாம இருக்க முடியாது.” முணுமுணுத்தான் அவன்.
“நேத்து, இதே நம்ம குடும்பத்தில் ஒருத்தருக்கு ஏதாவது எமர்ஜென்சி…”
“டேய்.. உன் நிலைமை எங்களுக்கு புரியுது.” என்று கத்திய உதய்,
“எல்லோருக்கும், எல்லோருடைய வேலையும், அதுல இருக்கற கஷ்ட, நஷ்டங்களும் புரியாது தான் ராகவ். அதுக்காக நீ இப்படி எமோஷனல் ஆகாத டா. ஏற்கனவே உனக்கு சரியான தூக்கம் இல்ல. சும்மா டென்ஷன் ஆகாம, மாடில போய் ரிலாக்ஸ்டா உட்காரு. நீயும் கூடப் போ மா” இருவரையும் பார்த்து சொன்னான் அவன்.
உதய் சொல்வதில் உள்ள நியாயம் ராகவனுக்கு புரிந்தாலும் கூட, ஏனோ அவனது கோபம் குறையவில்லை. கோபம் என்பதை விட ராகவி இப்படி நடந்து கொள்வாள் என்று எதிர்பார்த்திராதவனுக்கு, மிகுந்த வேதனையாக இருந்தது.
“தலைவலியும், காய்ச்சலும்.. தனக்கு வந்தா தான் வலி.. அடுத்தவனுக்கு வந்தா.. எக்கேடோ கேட்டுப் போகட்டும் தான்” சொல்லிக் கொண்டே மதுமிதாவை இழுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் போனான் ராகவன்.
இந்த ராகவன் அவர்களுக்கு புதிது.
அவர்களை கடந்து சென்ற ராகவனை, உதய், ராகவி இருவருமே அதிசயமாக பார்த்தனர். அவர்களிடம் அவன் கோபமாக பேசுவான் என்பதே பெரும் அதிர்ச்சியாக இருக்க, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மாடி ஹாலை ஒட்டி இருந்த பால்கனியில் சென்று அங்கிருந்த ஊஞ்சலில் பொத்தென்று அமர்ந்தான் ராகவன்.
அவனையே கண்களில் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதாவை இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தான் அவன்.
“ராகவ், ஐ ஆம் சாரி” பக்கவாட்டில் கைக் கோர்த்து அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் மதுமிதா.
ஒரு மயக்கவியல் மருத்துவர் தன் பணியினால், தினசரி வாழ்க்கையில் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை சற்று முன்னர் படித்து அறிந்து கொண்டிருந்தவளின் மனம் கணவனுக்காக அதிகம் வருந்தியது. அவன் மேல் காதலும், அவன் செய்யும் தொழிலின் மேல், உயிர் காக்கும் மருத்துவத்தின் மேல் மதிப்பும், மரியாதையும் அதிகரித்திருந்தது.
“நீ ஏன் சாரி சொல்ற மது?”
“எனக்கும் சேர்த்து தானே அவ்ளோ பெரிய லெக்சர் கொடுத்தீங்க. எனக்கும் உங்க வேலையை பத்தி முழுசா தெரியாது ராகவ். உங்க கிட்ட கேட்காதது என் தப்பு தான்..” குற்ற உணர்வுடன் அவள் சொல்ல,
“விடு மது.” என்று அவள் முகம் பார்த்து அவன் சொல்ல, அணைத்திருந்த கரங்களில் இறுக்கத்தை கூட்டி, அவன் முகமெங்கும் முத்தமிட தொடங்கி இருந்தாள் அவள்.
பால்கனியின் ஒரு பகுதியை அடர்ந்து வளர்ந்திருந்த மல்லிகை கொடி ஆக்கிரமித்திருக்க, ஊஞ்சலை மொத்தமாக மறைத்திருந்தது அது.
“மது..” அவள் முகத்தை கைகளில் ஏந்தி அவளிதழ்களில் அழுத்தமாக முத்தமிடத் தொடங்கி இருந்தான் ராகவன்.
காதலும், கவிதையுமாக அவர்கள் வாழ்வு தொடங்கவில்லை தான். ஆனால், இருவருக்கும் நடுவில் அழகான புரிதலுடன் தொடங்கியது.
ஒரு வாரம் அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை ராகவன். விடுமுறை எடுத்திருந்தான். முடிந்த வரை மனைவியுடன் நேரத்தை செலவிட்டான்.
பெரிதாக வெளியில் எங்கயேயும் அழைத்து செல்லவில்லை. அதைப் பற்றி அவளும் கவலைக் கொள்ளவில்லை. இருவருமே அவர்களுக்கே அவர்களுக்கான நேரத்தை ரசித்து அனுபவித்தனர்.
அவர்களின் திருமணத்திற்காக சிங்கப்பூரில் இருந்து விடுமுறையில் வந்திருந்த மதுவின், தங்கை வெண்பா திரும்பி போகும் போது மட்டும் அவர்களை வழியனுப்ப விமான நிலையம் சென்றனர்.
மறுநாளே அவர்களும் தேனிலவு கொண்டாட கேரளா கிளம்பி விட்டனர்.
முதல் நாளே ஆலப்புழாவில் படகு இல்லத்தில் ஒரு நாளை கழிக்க பதிவு செய்திருந்தான் ராகவன்.
பேக் வாட்டரில் படகில் மிதந்தபடி செல்வதே புதுவித அனுபவமாக இருக்க, கணவனின் நெருக்கம் இனிமையை கூட்ட, மதுமிதாவின் கண்களில் நிரந்தரமாக வந்து அமர்ந்துக் கொண்டது புது மயக்கம்.
மது என்ற பெயர் மட்டுமில்ல, அவளின் காதலும், அவளுடன் காதலில் திளைத்த நிமிடங்களும் கடந்த சில நாட்களாக அந்த மயக்க மருந்து நிபுணனை மீள முடியா மயக்கத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.
அவர்களை கடந்து சென்ற ஊரும், உலகமும் தவழ்ந்து, மிதந்து கடந்து செல்ல, மதுமிதாவும் மகிழ்ச்சி கடலில் மிதந்து கொண்டிருந்தாள்.
அந்த படகு இல்லத்தில் அவர்கள் மட்டுமே இருக்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு அறைக்குப் போனான் ராகவன்.
“யாரது யாரது யாரது.. இடைவிடாது இசைப்பது…” பாடல் அறையை நிறைத்து கொண்டிருக்க,
“இடைவிடாது… இசைப்பது….இதோ இந்த மயக்கற டாக்டர் தான். அவருக்கு இது தான் வேலையே..” கிளுக்கி சிரித்தபடி சொன்னாள் மதுமிதா. சத்தமாக சிரித்தான் ராகவன்.
“அதென்ன எப்ப பாரு பாட்டு?” அவள் கேட்க,
“இசையில் தொடங்குதம்மா.. விரக நாடகமே…” தாபத்துடன் ஒலித்தது அவன் குரல்.
கையில் ஏந்தி இருந்தவளை, சிரித்தபடி படுக்கையில் விட்டான், கண் இமைக்கும் நேரத்தில் உருண்டு அவன் கைக்கு சிக்காமல் நகர்ந்தாள் அவள்.
மென்மையாக கை நீட்டி அவளை தன் பக்கமாக இழுத்தவன், அவளின் மணிக்கட்டில் தன் பெரு விரல் கொண்டு வருடி,
“இது அல்நார் நர்வ் (ulnar Nerve). இங்க இருந்து, இதோ இங்க வரைக்கும் போகும்…” மணிக்கட்டில் இருந்து மெலிதாக முன் கை தொட்டு, தோள் வரை கோடிழுத்தான் ராகவன்.
அதில் உடல் கூசி சிலிர்க்க, “ராகவ், என்ன பண்றீங்க?” கோபமாக கேட்கத் தான் நினைத்தாள். ஆனால், கிறக்கமாக காற்றாக வந்தது அவள் குரல்.
“உன்னைக் கொடு, என்னைத் தருவேன்.. இது தான் காதலடி…” பாடலும் பொருத்தமாக ஒலிக்க,
கண் சிமிட்டி, குறும்பாக சிரித்து, அவளின் கழுத்தில் இதழ் பதித்து, “இது அன்சா சர்விகலிஸ் (ansa cervicalis). இந்த நர்வ்…” ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் இதழ்கள், அவளின் சங்கு கழுத்தில் முத்தமிட, மீசையின் உரசலில் அவள் மேனி மொத்தமாக சிலிர்த்தது. கழுத்து நரம்பில் பதித்த முத்தம், கால் நகம் வரை பயணித்திருந்தது.
அவன் கழுத்தில் கரம் கோர்த்து,
“ராகவ்.. நீங்க படிச்சதை சரி பார்க்க.. நான் தான் கிடைச்ச…” மேலே அவனது இதழ்களோடு தான் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.
தேனாய் தித்தித்த தேனிலவில் அடுத்து வந்த மூன்று நாட்களை கழித்து விட்டு சென்னை திரும்பினர் தம்பதிகள்.