மதுமிதா கண்களால் மண்டபத்தை சுழல விட்டாள். பூக்களும், பெண்களும், பட்டுமாக நிறைந்திருந்தது அந்த திருமண மண்டபம். திரும்பிய பக்கம் எல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்த முகங்கள், அவளது மனநிலையை ஒத்திருந்தது.
அவளின் பாட்டி, தங்கை வெண்பா அவளுடனேயே நின்றிருந்தனர். ஆனால், அவளின் கண்கள் சில நொடிகளில் தன் கணவன் ஆகப் போகும் ராகவனையும், அவனது குடும்பத்தையுமே சுற்றி வந்தது.
உதயும், ராகவியும் பம்பரமாக சுழன்று, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
மதுமிதாவின் கண்கள் ராகவனை விட, ராகவி, உதய் மற்றும் அவர்களின் குழந்தைகளை தான் அதிகம் வட்டமிட்டது. ராகவியின் புடவை நிறத்திலேயே பட்டு பாவாடை, சட்டை அணிந்திருந்தாள் உதய்தாரா. அதே நிறத்தில் சட்டையும் பட்டு வேட்டியும் அணிந்திருந்தனர் உதய் மற்றும் உதய்நந்தா. மணமக்களை தேடித் தழுவிய கண்கள் தவறாமல் அவர்களையும் தொட்டே மீண்டது.
ராகவியையே பின் தொடர்ந்து கொண்டிருந்த மதுவின் பார்வையை ராகவனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
“மது..” ரகசிய குரலில் அழைத்த ராகவன்,
“ரொம்ப அழகா இருக்க. இத்தனை நாள் இந்த அழகை எல்லாம் எங்க ஒளிச்சு வச்சிருந்த?” அவள் புறம் தலை சரித்து கிசுகிசுத்தான்.
கன்னச் சதை கடித்து சிரிப்பை விழுங்கிய மதுமிதா, “உங்களுக்கு இன்னைக்கு தான் கண்ணு தெரியுது போல ராகவ்” எனச் சொல்ல,
“ஆமா, ஆமா. இனி மேல் கண்ணு மட்டுமில்ல…”
“அச்சோ, மணமேடையில் இருக்கோம் ராகவ். ஒழுங்கா மந்திரம் சொல்லுங்க” அவள் கண்டிப்புடன் முணுமுணுக்க,
“நான் என்ன சொல்ல வந்தேன்னா… அப்புறம் சொல்றேன், ஓகே?” ஒற்றை கண் சிமிட்டி சொன்னான் அவன். முகச் சிவப்பை, வெட்கத்தை அவனை கண்ணை உருட்டி, மிரட்டி மறைத்தாள் அவள்.
இளஞ்சிவப்பு நிற காஞ்சிப் பட்டில், அதற்கு பொருத்தமான நகைகளுடன், திருத்தமான முக ஒப்பனையுடன், வெகு எளிதான தலை அலங்காரத்துடன் இருந்தவள் அவனின் கண்களை மட்டுமல்ல, மனதையும் மொத்தமாக கொள்ளை கொண்டாள்.
மீண்டும் அவள் புறமாக சாய்ந்து, “என்னை மயக்க இத்தனை எஃபோர்ட் எல்லாம் நீ போடத் தேவையில்ல மது” கண்ணை அவள் தலையில் இருந்து கால் வரை ஜாடையாக அவன் அசைத்துக் காண்பிக்க, உதடு கடித்து வெட்கத்தை விழுங்கி, தலை குனிந்தாள் மதுமிதா.
அவர்களின் நெருக்கம் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை முகங்களிலும் புன்னகையை வரவழைத்தது.
திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அவர்களது காதல் திருமணம் என்று உரக்க சொல்லாமல், சொல்லிக் கொண்டிருந்தான் ராகவன்.
“டேய், பேசாம உட்காரு” உதய் குனிந்து, ராகவனின் மாலையை சரி செய்யும் சாக்கில் சொல்ல,
“ஹா, அதை யார் சொல்றா பாரு. உங்க கல்யாணத்துல நடந்ததை ஞாபகப்படுத்தவா மாமா?” என்று இப்போது உதயை வம்புக்கு இழுத்தான் ராகவன்.
அவனை முறைத்துக் கொண்டு பின்னே நகர்ந்து நின்றான் உதய்.
நேற்று இரவு நடந்த கலாட்டாவிற்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை போல மணமேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் ராகவன்.
அன்று அதிகாலை வேளையில் ராகவி மணமகனின் அறைக்கு தான் முதலில் சென்றாள்.
அங்கு ராகவன், உதய் இருவருமே இல்லாதிருக்க, தடதடக்கும் இதயத்துடன் கார் பார்க்கிங்கை அடைந்தாள் அவள். அங்கே கணவனோடு சேர்த்து காரையும் காணாது, உடனே அவனுக்கு அலைபேசியில் அழைத்தாள்.
அந்த அதிகாலை வேளையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.
உதய், அவளின் அழைப்பை ஏற்றதும் மின்னல் வேகத்தில் சொல்ல, “ஓகே” என்று விட்டு, அலைபேசியை அணைத்தாள் அவள்.
இன்னும் சற்று நேரத்தில் மண்டபமே விழித்துக் கொள்ளும், அதற்குள் அவர்கள் வந்து விட வேண்டும் என்பது மட்டுமே அவளது அப்போதைய கவலையாக, வேண்டுதலாக இருந்தது.
மெல்ல விழிக்கத் தொடங்கியிருந்தது நகரம். சாலை அப்போது தான், துணைக்கு ஆள் சேர்க்கத் தொடங்கி இருந்தது. பரபரப்பில்லாத சாலையில் பத்தே நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்து விட்டான் உதய்.
அவன் காரில் இருந்து இறங்கி உள்ளே செல்ல, அந்நேரம் லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்தான் ராகவன்.
அங்கே காத்திருப்போருக்காக போடப்பட்டிருந்த இருக்கையில் சரிந்து அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் பேச்சி முத்து.
ராகவனின் காரை பேச்சி முத்து ஓட்டிக் கொண்டு வர, உதயின் காரில் ஏறினான் ராகவன்.
காரில் ஏறி அமர்ந்து, இருக்கையில் சாய்ந்த மறுகணம் கண்களை மூடி உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான் அவன்.
“இப்படி அசந்து தூங்கறான். இவனை எப்படி எழுப்பறது?” பேச்சி முத்துவிடம் கேட்டான் உதய்.
அவர்கள் மண்டபத்தை அடைந்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. ஆனால், ராகவன் கார் நின்றதை கூட கவனிக்காமல் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவனை அலேக்காக தூக்கப் போனான் உதய்.
“யோவ் மாமா, என்னப் பண்றீங்க?” என்று சிரித்துக் கொண்டே கண்ணை கோடாக திறந்துக் கேட்டான் ராகவன்.
உதய் முறைக்க, “டைம் ஆகுது, வாங்க உள்ளப் போகலாம்” என்று புயலாக காரில் இருந்து இறங்கி, இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி, மண்டபத்தினுள் சென்றான் ராகவன்.
காலை 9 – 10 முகூர்த்தம் என்பதால், மூன்று மணி நேரம் நன்றாக தூங்கி எழுந்து, தெளிந்த முகத்துடன் மணமகனாக தயாராகி மணமேடையில் அமர்ந்திருந்தான் அவன்.
அதுவரை இருந்த அத்தனை குழப்பங்களும் துடைத்து தூக்கி எறிந்திருந்தான்.
எவ்வித தயக்கமும் இன்றி முழு மனதுடன் மதுமிதாவை இருவரின் குடும்பத்தினர் மற்றும் சொந்த பந்தங்களின் ஆசியுடன் தன் மனைவியாக்கி கொண்டான் ராகவன்.
வெகு இயல்பாக அவனை நெருங்கி நின்று புகைப்படத்திற்கு புன்னகைத்தாள் மதுமிதா.
காதலை அடைந்து விட்ட மகிழ்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
“தலை முதல் கால் வரை எவ்வளவு அலங்காரம், அணிகலன். பட்டு, பூக்கள்ன்னு உங்களை மயக்க நாங்க எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கு. ஆனா, நீங்க? ஒரு பட்டு, வேட்டி சட்டை போதும். கம்பீரம், கவர்ச்சி எல்லாம் வந்துடுது. மயக்கறீங்க. மயக்க டாக்டர்” அவள் கிசுகிசுத்த விதத்தில் அவனுக்கு வெட்கமும், சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
மதுமிதாவின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டான் ராகவன். புதியதொரு உறவில் அடி எடுத்து வைத்திருந்த அவர்களின் முகங்கள் மகிழ்ச்சியில் பூரித்திருக்க, கண்களில் மிதந்த கனவையும், காதலையும் கச்சிதமாக கைப் பற்றி, அழகானதொரு புகைப்படமாக்கி இருந்தன கேமிராக்கள்.
சடங்குகள், சம்பிரதாயங்கள் என நேரம் ரெக்கை கட்டி பறக்க, அனைத்திலும் நாயகியாக இருந்தவளும் சிறகுகள் இல்லாமல் பறந்து தான் கொண்டிருந்தாள்.
நேரம் மாலை ஆறை கடந்திருக்க அவனது அறையில் நல்ல உறக்கத்தில் இருந்தான் ராகவன்.
அது பொறுக்காத அலைபேசி அடித்து அவனை எழுப்பி விட, கண்களை கசக்கி விட்டுக் கொண்டு எழுந்து அமர்ந்தான் அவன்.
அலைபேசி அழைப்பை ஏற்று பேசினான்.
அந்த பக்கம் அவனுக்கு திருமண வாழ்த்துகள் தெரிவிக்க,
“தாங்க்ஸ் மா” என்றவன், “வெயிட் பண்ணுங்க. பேசிட்டு சொல்றேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டு நண்பனை அழைத்தான் அவன்.
“வாழ்த்துகள் புது மாப்பிள்ளை. சாரி டா, கல்யாணத்துக்கு வர முடியல. இன்னைக்கு ரெண்டு மேஜர் ஆபரேஷன் அவோய்ட் பண்ண முடியல….” எடுத்ததும் படபடவென பேசிக் கொண்டே போன நண்பனை,
“முரளி, இட்ஸ் ஓகே டா. வாழ்த்திற்கு நன்றி” என்ற ராகவன், ஒரு மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டு, அங்கே அடுத்த ஒரு மணி நேரத்தில் நடக்க வேண்டிய மிக அவசரமான அறுவை சிகிச்சைக்கு அவனால் போக முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
“அவங்க எப்பவும் கூப்பிடுற, எல்லோரும் இன்னைக்கு பிஸி போல டா. அவங்க ஒரு பக்கம் டிரை பண்றாங்க. நானும்…” பேசிக் கொண்டிருந்தவனை கலைத்தது, அறைக் கதவு தட்டப்படும் ஓசை. பேசிக் கொண்டே எழுந்து போய் கதவை திறக்க அங்கே ராகவி நின்றிருந்தாள்.
அவனது பேச்சை கேட்டவளின் முகம் கோபத்தில் கடினமாகியது.
சட்டென பேச்சை துண்டித்துக் கொண்டான் ராகவன்.
அவனை தாண்டி அறைக்குள் நுழைந்து நின்றாள் ராகவி. நேற்றைய தினத்தில் இருந்தே அவன் மீது அவள் கோபமாக இருப்பதை ராகவன் உணர்ந்தே இருந்தான். ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவளை நிமிர்ந்து என்னவென்று பார்த்தான் அவன்.
“என்னடா பண்ணிட்டு இருக்க? உன் வேலை முக்கியமானது தான். நான் இல்லைனு சொல்லல. அதுக்காக உன் கல்யாணத்தன்னைக்கு கூட நீ இப்படி பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல ராகவ்” பல்லைக் கடித்து வார்த்தைகளை துப்பினாள் ராகவி.
“சாரி கா…” என்று சொன்னவனை கையை நீட்டி தடுத்த ராகவி,
“இப்பவும் ஏதோ ஆபரேஷன் பத்தி தானே பேசிட்டு இருந்த? கிளம்பிட்டியா என்ன? நேத்து நைட்டு நீ காணாம போனதை உங்க மாமா சாமர்த்தியமாக மறைச்சிருக்கலாம். ஆனா, இன்னைக்கு அப்படி ஏதாவது செய்தீன்னா, அவ்வளவு தான் ராகவ்.”
“ராகவி…” குரலை உயர்த்தி அவளை பேச விடாமல் செய்தான் ராகவன்.
அவன் பார்வை ராகவிக்கு பின்னே குளியல் அறை கதவை பிடித்தபடி ஸ்தம்பித்து நின்றிருந்த மனைவியின் முகத்தில் நிலைத்தது.
“இப்பவே தூங்கி நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்கு தூங்க நேரம் இருக்காது” இறுக அணைத்து, காதில் காதல் பேசியதாக அவள் நினைத்திருக்க, அவளை தூங்க சொல்லி விட்டு அவன் வேலையை பார்க்க சென்றிருக்கிறான் என்ற செய்த தந்த அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் மதுமிதா.
திருமணமாகி முழுதாக ஒரு நாள் கூட ஆகி இருக்கவில்லை. அதற்குள் நிதர்சனம் அவள் முகத்தில் பளிச்சென்று அறைந்திருந்தது.
இனி, அவளின் வாழ்வு இப்படி தான் தொடரப் போகிறதா என்று ஓடிய எண்ணத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.
“உனக்கு என்ன வேணும் ராகவி. இப்போ எதுக்கு இங்க வந்த?” முகத்தில் அடித்தது போல கேட்டான் ராகவன்.
அவன் குரல் அறைக்கு வெளியேயும் கேட்டிருக்க, “ராகவ்” என்று அழைத்த படி உள்ளே வந்தாள் பனிமலர். அவளோடு அவள் கணவன் வீராவும் உள்ளே வர, அனைவரையும் எரிச்சலுடன் பார்த்தான் ராகவன்.
மதுமிதா அறையில் இருந்ததை கவனிக்கவில்லை ராகவி. அவளுக்கு மதுமிதா அங்கிருப்பது தெரிந்திருந்தால் நிச்சயமாக இந்த பேச்சை இப்போது ஆரம்பித்திருக்க மாட்டாள்.
இதயம் தாறுமாறாக துடிக்க, கையைப் பிசைந்து கொண்டு தவிப்புடன் ராகவனை பார்த்தாள் ராகவி.
“ராகவ், என்ன சத்தம்? என்று கேட்டபடியே உதயும் வந்து சேர, அப்படியே தலையை பிடித்துக் கொண்டு, படுக்கையில் அமர்ந்தான் ராகவன்.
“மதுமிதா…” சத்தமாக அழைத்தான். அவ்வளவு நேரமும் சிலையாக நின்றிருந்தவள் மெல்ல கலைந்து, கணவனின் முன் வந்து நின்றாள்.
“நீங்க எல்லாம், இவன் ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க? வெளில வாங்க” மனைவி மற்றும் அவளின் தோழி பனிமலர், அவளது கணவன் வீரா, மூவரையும் பார்த்துக் கேட்டான் உதய். ராகவி கண்ணீரை கணவனிடம் காட்டி விடாமல் இருக்க பெரும்பாடு பட்டாள்.
மதுவின் கையை பிடித்தபடி எழுந்து நின்றான் ராகவன்.
“ராகவி…” மெல்ல அழைத்து, “உனக்கு டுவின்ஸ் சிசேரியன் தானே?” என்று அவன் கேட்க, “ஆம்” என்று தலையை அசைத்தாள் ராகவி.
இப்போது, எதற்கு இந்த கேள்வி கேட்கிறான் என்ற கேள்வி அவள் விழிகளில் தொக்கி நின்றது.
“அப்போ உனக்கு மயக்க மருந்து கொடுத்த டாக்டர் பேர் என்ன?” ராகவன் கேட்க, ராகவி மௌனத்தையே பதிலாக தந்தாள்.
“குழந்தைங்களோட பீடியாட்ரிசன் பேர் என்ன?” அவன் அடுத்த கேள்வியை கேட்க,
“டாக்டர் தேவா… தேவராஜன்” சொன்னாள் ராகவி.
“உன்னோட கைனக் பேரு?”
“மகாலட்சுமி” பதில் பட்டென்று வந்தது.
மெதுவாக திரும்பி உதயை பார்த்த ராகவன், “நீங்க சொல்லுங்க மாமா, இதுவரை ரெண்டு, மூனு முறை எமர்ஜென்சியில் இருந்து இருக்கீங்க தானே? உங்க அனஸ்தீஸியாலஜிஸ்ட் பேர் என்ன?”
உதய் கண்களில் கோபமும், அதிர்ச்சியும் போட்டிப் போட, பதிலின்றி அவனை வெரித்தான்.
“உங்க மனைவிக்கு டெலிவரி ஆனதும் ஹாஸ்பிடல் ஃபுல்லா ஸ்வீட் கொடுத்து கொண்டாடுனீங்க இல்ல? பிரசவம் பார்த்த கைனகாலஜிஸ்ட்க்கு நன்றி சொன்னீங்க தானே?”
உதய் தலை தானாக ஆடியது.
“அந்த ஆபரேஷன் நடக்க முக்கிய காரணமா இருந்த, மயக்கவியல் மருத்துவரின் பேர் என்ன மாமா?”
“ராகவ்…” என்ற உதயை கை நீட்டி பேச விடாமல் தடுத்தான் ராகவன்.
“தெரியாது. இல்ல மாமா?” நக்கலாக சொன்னான் அவன்.
மெதுவாக மனைவியின் பக்கம் திரும்பி, “உன் தங்கச்சி வெண்பாவோட அனஸ்தீஸியாலஜிஸ்ட் பேர் என்ன?”
தலையை இட வலமாக அசைத்தாள் மதுமிதா.
“உன்னோட பல் மருத்துவர் பேர்?”
“டாக்டர் விவேக்” என்றாள் உள்ளே போய் விட்ட குரலில்.
“உங்க பாட்டியோட கார்டியாலஜிஸ்ட் பேர்?”
“கார்த்திக்” அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.
“போன்ல கூகிள் ஓபன் பண்ணு” என்று அவன் சொல்ல, அதை அப்படியே செய்தாள் மதுமிதா. காரணமின்றி ஒரு பதட்டம் அவளின் விரல்களை நடுங்கச் செய்தது.
“மொத்தம் எத்தனை விதமான சர்ஜன்ஸ் இருக்காங்கன்னு பார்த்துச் சொல்லு”
“பத்து… பதினாலு..” திக்கியபடி சொன்னாள் மதுமிதா.
“என்னடா ராகவ் இதெல்லாம்..” என்று எரிச்சலுடன் ஆரம்பித்த உதயை ஒற்றைப் பார்வையிலேயே அடக்கினான் ராகவன்.
“ஜெனரல் சர்ஜன், கார்டியாலஜிஸ்ட், நியூரோ சர்ஜன், மகப்பேறு மற்றும் மகளிர், கண் அறுவை சிகிச்சை, பீடியாட்டிரிக், பெருங்குடல் மற்றும் மலக்குடல், ஆர்தோ, யூரோலஜிஸ்ட்…” ஒவ்வொன்றாக படித்துக் கொண்டே போனாள் மதுமிதா.
“இத்தனை விதமான சர்ஜன் இருக்காங்க இல்ல? ஆனா, இவங்க அத்தனை பேருக்கும் ஒரே ஒரு மயக்கவியல் மருத்துவர் தான். இதயம், மூளை, வயிறுன்னு தனி தனி மயக்க மருந்து நிபுணர்கள் இங்க கிடையாது. தலையில் இருந்து கால் வரைக்கும்.. ஒரே ஒரு மருத்துவர் தான் கவனிக்கனும். நாங்க ஒருத்தரா நின்னு தான் ஒரு உயிரை கையில் பிடிச்சு வைச்சு, திரும்ப அவங்க உடம்புக்குள்ள பத்திரமா அதை வைக்கணும்.
மயக்க ஊசி போட்டுட்டு வேலை முடிஞ்சதுன்னு, கை வீசிட்டு வெளில போய்ட முடியாது. ஒரு ஆபரேஷன் முடிஞ்சு, பேஷண்ட் ரூமுக்கோ, ஐசியுக்கோ மாறுற வரை நாங்க அங்க இருந்தாகணும்.
திடீர்னு ஹார்ட் பீட் கூடும், பிபி எகிறும், சிலருக்கு பாதியில மயக்க மருந்து சரியா வேலை செய்யாம கண் முழிச்ச நிகழ்வுகள் எல்லாம் இருக்கு தெரியுமா? அந்நேரம் நாங்க பதற கூடாது. நாங்க பதறினா மொத்த தியேட்டரும் பதறும். சர்ஜன் கையில கத்தியை நிதானமா பிடிச்சா தான் ஆபரேஷன் வெற்றிகரமா, நல்லபடியா நடக்கும்.. முடியும்.
எல்லா மேஜர் ஆபரேஷன் முடிஞ்ச பின்னாடியும் ஒரு மயக்க மருந்து நிபுணரோட பிபி செக் பண்ணி பார்த்தா, நிச்சயமா அது ஹையா தான் இருக்கும்.”
அங்கிருந்தவர்கள் மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
அவன் சொன்னதில் சில விஷயங்கள் அவர்களுக்கு தெரிந்து தான் இருந்தது.
ஆனாலும், அவனுக்கிருந்த கோபத்தில் அப்படி ஒரு கடினமான குரலில் அவன் சொல்வதை கேட்கையில் அவன் வேலையின் அழுத்தத்தை, பளுவை, அவனது பொறுப்பை, முக்கியத்துவத்தை அன்று முழுமையாக உணர்ந்து கொண்டனர்.
“ஐசியு பெரும்பாலும் எங்க கண்காணிப்புல தான் இருக்கும். அது தெரியுமா உங்களுக்கு?” அவன் கேட்க,
“தெரியும் ராகவ். பிளீஸ் ரிலாக்ஸ்” என்றான் உதய்.
அவனை பாசமான தம்பியாக, நல்ல நண்பனாக மட்டுமே அறிந்திருந்த ராகவியும், பனிமலரும் அவனை திகைப்புடன் பார்த்தனர்.
ராகவனின் வேலை ஓரளவு உதய்க்கு தெரியும் என்றாலும், அவனுக்குமே அதை ராகவனின் வாயிலாக அறியும் போது மனதை என்னவோ செய்தது.
அவன் நேரம், காலம் பார்க்காமல் வேலையை கட்டிக் கொண்டு அழுகிறான் என்று மட்டுமே இத்தனை நாட்களும் நினைத்திருந்த ராகவி, இன்றைக்கு அவனது வேலையின் அழுத்தமான சூழலை உணர்ந்து கண் கலங்கினாள்.
பல நாட்கள் நள்ளிரவில், அதிகாலையில் அவன் வீடு திரும்புகையில் திட்டி இருக்கிறாள்.
ஆனால், இன்றைக்கு.. அதுவும் மதுமிதா முன்பு… இந்த பேச்சை எடுத்ததற்காக மனதில் அவ்வளவு வருந்தினாள் அவள்.
அங்கே மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் கையில் கொடுத்தாள் மதுமிதா.
அதை ஒரே மடக்கில் குடித்து விட்டு நிமிர்ந்தவனை அனைவரும் ஒருவித அச்சத்துடன் பார்க்க,
“இந்தியால அனஸ்தீயாலஜிஸ்ட் எவ்வளவு பேர் இருக்காங்கன்னு பார் மது” என்றவனின் கைப் பற்றி,
“ராகவ், பிளீஸ்” என்றாள் மதுமிதா.
அவனை இறுக அணைக்க துடித்த கரங்களை ஒன்றோடொன்று கோர்த்து கொண்டு நின்றாள் அவள்.