நாட்கள் ஒளியின் வேகத்தில் மாதங்களை நகர்த்தியிருந்தது. அவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது என்பதையே இன்னும் மதுமிதாவால் நம்ப முடியவில்லை.
தினம் அவள் கண் விழிக்கும் போதும், கண் மூடும் போதும் எதிரில் தெரியும் கணவனின் முகமே இது கனவல்ல நிஜம் என்று அவளுக்கு ஊர்ஜிதப் படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிமிடமும் அவனது முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளையே கூர்ந்து பார்க்கும் கண்களுடன், இதழ்களில் மறைக்கப்பட்ட புன்னகையுடன் அவர்களின் திருமண புகைப்படத்தில் இருந்த கணவனை இமைக்காமல் பார்த்தாள் மதுமிதா.
நாளின் பெரும் பகுதியை அவனுடன் தான் கழிக்கிறாள். அதனுடன் என்று சொல்ல வேண்டுமோ?
அவனில்லாத பொழுதுகளிலும் அவளையே பின் தொடர்ந்து கொண்டிருந்த அந்த விழிகளின் மேலிருந்த மயக்கம் அவளுக்கு இன்னமும் குறையவில்லை தான்.
என்றுமே குறையாது என்றே அவளுக்குத் தோன்றியது.
“என்ன பார்வை? எப்ப பாரு டூப்ளிகேட்டையே ரசிச்சிட்டு இருக்க? ஒரிஜினல் இங்க தான் இருக்கேன்” அவளின் தோளில் தன் நாடியை பதித்து, காதில் கிசுகிசுத்தான் ராகவன்.
‘டூப்ளிகேட் இருபத்தி நாலு மணி நேரமும் என் கூடவே இருக்கே. நான் பேசுறது எல்லாத்தையும் கேட்குதே. என்னையே பார்க்குதே. ஒரிஜினல் அப்படியா?’ உதடு தொட்ட வார்த்தைகளை உச்சரிக்கவில்லை அவள்.
அவன் வீட்டிற்கு வந்து பத்து நிமிடங்களே ஆகியிருந்தது. அப்போது தான் குளித்து விட்டு வந்திருந்தான்.
எலுமிச்சையும், ரோஜாவும் கலந்ததொரு நறுமணமும், அவன் வாசமும் கலந்து அவளது நுரையீரலை நிறைக்க, ஆழ மூச்சிழுத்து, மௌனமாய் அவனோடு இழைந்து, கண் மூடி நின்றாள் அவள்.
“டீ எடுத்துட்டு வரவா? உங்களுக்கு ஆபரேஷன் எதுவும் இருக்கா இன்னைக்கு?” மெல்ல அவள் விசாரிக்க,
“ஆபரேஷன் எதுவும் இல்ல. ஆனா, எமர்ஜென்சி கால் வந்தா போகனும்.” என்றவன்,
“நான் டீ போடுறேன். வா” என்று அவளின் கைப் பிடித்து கீழே அடுப்படிக்கு அழைத்துக் கொண்டு போனான்.
அவன் டீ போடும் நேரத்தில் அவளின் கைகள் பரபரவென வாழைக்காயை வெட்ட, அடுத்த ஐந்தாம் நிமிடம் பஜ்ஜி தயாராகி இருந்தது.
அவர்களை தவிர வீட்டில் யாருமே இல்லை. வீடே அமைதியில் மூழ்கி இருந்தது.
சூடான டீ, பஜ்ஜியை ஒரு ட்ரேயில் அடுக்கி எடுத்துக் கொண்டு, மாடியை நோக்கி நடந்தனர் இருவரும்.
மாடியின் ஒரு பக்கம் முழுவதையும் பல வண்ண மழை லில்லிக்கள் ஆக்கிரமித்திருந்தை, ஆச்சரியமாய் பார்த்தான் ராகவன்.
“வாவ் மது. யார் பார்த்த வேலை இது? அவ்ளோ அழகா இருக்கு. எப்படி இத்தனை கலர்ஸ் கிடைச்சது?” அதிசயித்து அவன் வினவ, அமைதியாய் பதில் தந்தாள் அவள்.
“நான் தான் கலெக்ட் பண்ணி வச்சேன்.”
“ஓ…” குனிந்து மஞ்சள் நிற லில்லியை வருடியவனின் விழிகள் மட்டும் உயர்ந்து அவளை வருட,
“சும்மா, ஏதாவது.. நேரம் போக..” என்று திணறியவள்,
“பூ, செடி, கொடி எல்லாம் பிடிக்கும். அதான், வாங்கி வச்சேன். அதுவும் ஒரே பூ வேற வெற கலர்ல பார்க்க அவ்வளவு அழகா இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்தில வாங்கிட்டு வரும் போது, வளருமான்னு ரொம்ப சந்தேகமா தான் இருந்தது. ஆனா, ஒரே வாரத்துல செடி நல்லா வளர்ந்துடுச்சு. பூவும் பூத்திடுச்சு இப்போ” குரலில் மகிழ்ச்சி பொங்க சொன்னாள் அவள்.
பூக்களை பூரிப்புடன் பார்த்தவளை சற்றே பொறாமையாக பார்த்தான் அவன்.
“வா, டீ ஆறுது. குடிப்போம்” பூக்களின் மேலிருந்து, பூவையின் பார்வையை தன் மேல் திருப்பினான் அவன்.
சுவரில் சாய்ந்து நின்று டீயை அருந்திக் கொண்டே, “அப்புறம், பூ தவிர வேற என்ன பிடிக்கும்” விசாரித்தான்.
“உன்னைப் பிடிக்கும்” பளிச்சென்று பதில் சொல்லியது அவளது விழிகள். ஆனால், அவள் மௌனமாக தான் நின்றாள்.
இடக் கரத்தால் தலைக் கோதி கொண்டான்.
“என்ன பதிலை காணோம்?” புருவம் உயர்த்தி கேட்டான். மெல்ல அவனுக்கு நெருக்கமாக வந்து நின்றாள் அவள்.
இமைகளை பிரித்து, உயர்த்தி அவன் விழிகளைத் தொட்டாள்.
“இந்த மீசை, அதுக்கு கீழ நீங்க அடிக்கடி மறைக்கற இந்த கள்ளச் சிரிப்பு ரொம்ப பிடிக்கும்” அவள் சொல்ல சொல்ல, அவனது இதழ்கள் பிரிந்து விரிந்தது.
“உலகமே கண் முன்னாடி இருந்தாலும் என்னை மட்டுமே பார்க்கற இந்த கண்ணை பிடிக்கும்” சிரிப்பில் மின்னிய அவன் கண்களை நேருக்கு நேராக சந்தித்து அவள் சொல்ல, அவன் கரம் அவளது இடையை அனிச்சையாய் வளைத்தது.
“தினம் நாலு பேரை மயக்கினாலும், என்னை மயக்க போராடுற, என்கிட்ட மயங்கி நிக்கற இந்த மயக்க மருந்து டாக்டரை…”
“பேசியே மயக்கற மது..” அவனின் ஒரு கரத்தில் இருந்த டீ கோப்பை மேஜைக்கு மாறி இருந்தது.
அவளை இறுக்கமாக தன்னோடு சேர்த்து அணைத்து, தலை சாய்த்து அவளின் இதழ் தொட யத்தனித்தான்.
“முத்தத்தாலே சேலை நெய்யற இந்த உதடுகள்..”
சட்டென்று இதழ்களை அணைத்திருந்தான்.
தேநீரும், சிற்றுண்டியும், பூக்களும், அந்தி மாலையும் கேட்பாரற்று தனித்திருக்க, அவர்கள் கூடடையும் பறவைகளின் வேகத்துடன் தங்களின் அறையை அடைந்திருந்தனர்.
அத்தனை நேரம் அவளுக்கு பிடித்தமானதை சொல்லிக் கொண்டிருந்தவளிடம் இப்போது தனக்கு பிடித்தமானது எது என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால், கேட்கும் நிலையில் தான் அவளில்லை.
இம்முறையும் அவளை மயக்க முயன்று அதில் தானும் மயங்கி, இல்லறத்தில் விழிப்புடன் வெற்றியை தொட்டுக் கொண்டிருந்தான் ராகவன்.
“வேலைக்கு எங்கயாவது போகலாம் இல்ல மது?” அவளின் அடர்ந்த கூந்தலில் கை நுழைத்து, விளையாடிய படி கேட்டான் அவன்.
மெல்ல புரண்டு படுத்து, “எத்தனை டைம் சொல்றது ராகவ்? நான் ஃபேஷன் டிசைனர். எட்டு மணி நேரம் ஆபீஸ் போய் வேலை பார்க்கணும்னு அவசியம் இல்ல. வீட்ல உட்கார்ந்து வேலைப் பார்த்தா போதும். கம்யூட்டரில் ஸ்கெட்ச் பண்றேன், ட்ரெஸ் டிசைன் பண்றேன். சில நேரம் பேப்பர்ல பண்றேன். எல்லாத்தையும் மும்பையில் இருக்கற என்னோட பாஸுக்கு அனுப்பி வைக்கறேன். தேவைப்பட்டா, நேர்ல போய்ட்டு வரேன்” அவள் நீளமாக சொல்ல,
“ம்ம்” என்றான் அவன்.
“நல்ல சம்பளம் கொடுக்கறார். மும்பையில் சின்ன வீடு, பெரிய வாடகை, நினைச்சாலே பயமுறுத்தற டிராபிக் ஜாம், மூனு நேரமும் வெளி சாப்பாடு.. உங்க கூட இருக்க முடியாது. ஆனா, அங்கேயும் இதே வேலை தான் பார்க்க போறேன். ஒரே ஒரு வித்தியாசம் ஆபீஸில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பேன். ஆனா, இங்க பொறுமையா, நிதானமா, ரசிச்சு வீட்ல உட்கார்ந்து வேலை செய்ய முடியுது. இன்ஃபேக்ட், இந்த மூனு மாசத்துல என்னோட ஒரு டிசைன் கூட பாஸ் ரிஜெக்ட் பண்ணவே இல்ல. சின்ன சின்ன கரெக்சன்ஸ் பண்ணி எல்லாத்தையுமே யூஸ் பண்ணிக்கிட்டார்”
கணவனின் மார்பில் தலை வைத்து சொல்லிக் கொண்டிருந்தாள் மதுமிதா. சீராக அவன் மார்பு ஏறி இறங்கியதில் மெல்ல விழிகளை உயர்த்திப் பார்க்க, எப்போதோ உறங்கி இருந்தான் அவன்.
அவனது உறக்கத்தை கலைத்து விடாமல், மெல்ல படுக்கையில் இருந்து இறங்கினாள் அவள்.
அடுத்த பத்தாம் நிமிடம், “என்ன சமைப்பது?” என்ற யோசனையுடன் அவள் குளிர்சாதனப் பெட்டியை ஆராய்ந்து கொண்டிருக்க,
“அத்த…” ஓடி வந்து அவளின் காலைக் கட்டிக் கொண்டான் உதய்நந்தா.
ராகவி, உதய், குழந்தைகள் அவளுடன் இணைந்துக் கொள்ள அந்த இரவு கண்ணை சிமிட்டி கொண்டு இனிமையாக மறைந்தது.
“லவ் யூ, பார்த்து போங்க. மறக்காம சாப்பிடுங்க, பிளீஸ்.” குனிந்து பாதி இறங்கியிருந்த காரின் கண்ணாடியில் முகம் பதித்து சொன்ன மனைவியை பார்த்து மலர்ந்து புன்னகைத்த ராகவன்,
“ஓகே மது. பை” என்று காரை மெதுவாக அங்கிருந்து நகர்த்தினான்.
எப்போதும், “லவ் யூ” என்று சொல்லிக் கொண்டே இருந்தவளுக்கு நிரந்தரமாக, “பை” சொல்லி விட்டேன் நான்.
தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன்.
இருளில், தனிமையில், அவளில்லாத வெறுமையில், அவளை மறக்க முடியாத மனதை திட்டிக் கொண்டு, சதா அவளையே நினைவூட்டும் நினைவுகளை விழுங்க முயன்று கண்களை இறுக மூடினான். அவ்வளவு நேரமும் அவள் வலம் வந்த கண்ணில் உறக்கம் வர மறுத்தது.
வேகமாக எழுந்து, மேஜையை நகர்த்தி, பரணில் இருந்த திருமண புகைப்படத்தை எடுத்துக் கொண்டு இறங்கினான். அதை படுக்கைக்கு பக்கத்தில் வைத்து விட்டு படுக்கையில் சரிந்தான்.
மனம் மீண்டும் நினைவுகளை நிர்தாட்சண்யம் பார்க்காமல் எடுத்து நீட்டியது. தலையணையில் முகம் புதைத்து, அதை தவிர்க்க முயன்றான்.
தலையணையை அவன் முகத்தில் வீசியெறிந்து, “இப்பவும்.. யாரும் உங்களை தடுக்கலை இங்க. போங்களேன். போய், நல்ல டாக்டர் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்களேன். கல்யாணம் சரி வராதுன்னா.. கூட்டிட்டு வந்து குடும்…”
“ஏய்…” அவளை மேலே பேச விடாமல், கையை மனைவியின் முகத்துக்கு நேராக வீசியது, அவனுக்கு கண்ணில் படமாக ஓடியது.
பயத்தில் விழிகளை இறுக மூடி, அடி வாங்க ஏதுவாகவோ அல்லது அடியில் இருந்து தப்பிக்கவோ, தயாராக முகத்தை சட்டென்று மறு புறமாக திருப்பி, கைகளை இறுக்கி, உதடு துடிக்க நின்றிருந்த மதுமிதா கண் முன் வந்தாள்.
இப்போது அதை நினைக்கையிலும் சில்லிட்டது அவன் உடல்.
“ச்சே. நிம்மதியே போச்சு” அன்றைக்கு உதிர்த்த அதே வார்த்தைகளை இன்றைக்கும் உதிர்த்து விட்டு, பெரும் போராட்டத்திற்கு பின் உறங்கினான் அவன்.