போன் பேசிவிட்டு வைத்த வாசமல்லிக்கு அபர்னிதாவிடம் நேரடியாக கேட்கமுடியவில்லேயே என்ற வருத்தம் இருந்தாலும் கொஞ்சம் நாளைக்கு இப்படியே சமாளிப்போம் என நினைத்தாள்.
அப்படியே மீண்டும் படுத்தவள் உறங்கியும் போக நள்ளிரவு கடந்து ஷ்ரவன் வந்தது கூட அவளுக்கு தெரியவில்லை. வந்தவன் சத்தமின்றி உடை மாற்றி முடித்து வந்து வாசுவின் அருகே வந்து அவளை கையில் அள்ளிக்கொண்டான்.
நல்ல உறக்கத்தில் இருந்தவளுக்கு எங்கோ பறப்பதை போல இருக்க மெல்ல கண்விழித்து பார்த்தவள் தான் அறையில் கட்டிலில் இருப்பது அரை உறக்கத்தில் புரிந்தது.
“அத்தான் வந்துட்டீங்களா?…” என்று புரண்டு குப்புற படுத்தவள் எழுந்துகொள்ள பார்க்க,
“ஹ்ம்ம், இப்போ தான் வந்தேன் வாசு. நீ தூங்கு, லைட் எல்லாம் ஆஃப் பண்ணிட்டு வரேன்….” என ஷ்ரவன் வெளியே செல்ல,
“ஆஆ…” என்ற அவளின் அலறலில்,
“ஏய் என்ன இப்படி கத்துற?….” என பதறிக்கொண்டு வர அங்கே கட்டிலில் குப்புற படுத்திருந்தவள் நிமிரும் பொழுது மூக்கில் போட்டிருந்த மூக்குத்தி சுருட்டி போர்த்தியிருந்த போர்வையின் நூல் பட்டு இழுத்திருக்க,
“வாசு…” என வந்தவனை நிமிர்ந்து பார்க்க சட்டென மூக்குத்தியில் சிக்கியிருந்த நூல் அறுபட்டு லேசாய் ரத்தம் வளையம் போல கோடிட்டு அந்த இடமே கன்றி சிவந்து போனது.
“என்னாச்சு வாசு?…” என அவள் முகம் நிமிர்த்தியவன் அவளின் கண்களை பார்க்க வலியில் லேசாய் கலங்கியிருந்தது.
“போர்வையில் மூக்குத்தி மாட்டிடுச்சு. எடுத்தேன் வரவே இல்ல. நீங்க ஓடி வரவும் வேகமா பாத்தேனா? அதான் வெடுக்குன்னு அந்துபோச்சு. வலிக்குது…” என மூக்கை உறிஞ்ச வலியில் முகத்தை சுண்டினாள்.
“ரொம்ப வலிக்குதா ?…” என கேட்டு காற்றை இழுத்து ஊதிவிட்டவனை பார்த்தபடி இருந்தவள் கண்களை அப்போதுதான் கவனித்தான்.
இத்தனை நாளும் அவன் தான் அவளை அணைத்திருந்தானே தவிர்த்து அவள் அவனை நெருங்கி வந்ததே இல்லை.
இன்றானால் அவனை கட்டிக்கொண்டு நன்றாக முகத்தை காண்பித்தபடி இருக்க அந்த நெருக்கமான அணைப்பில் மனதின் உந்துதலில் சட்டென்று மூக்கில் மென்மையாய் முத்தமிட்டவன்,
“ஏன்டி நித்தமும் எதையாச்சும் பண்ணிவச்சு உன் பின்னாடியே சுத்த வைக்கிற?…” என கிறக்கமாய் கேட்டுக்கொண்டே சற்று அழுத்தமாய் முத்தம் வைத்தான்.
“ஸ்ஸ், வலிக்குதுத்தான்…” என்றாள் மெதுவாய்.
“ஓகே ஓகே…” என மீண்டும் ஊத,
“பரவாயில்லை இன்னும் ரெண்டு. கன்னத்துல கூட குடுக்கலாம்…” என குறும்பாய் கண்சிமிட்டினாள்.
“போடி…” என சிரிப்போடு அவளை தள்ளியவன்,
“இரு வரேன்…” என்றவன் உடனே தேங்காய் எண்ணை எடுத்து வந்து அவளின் மூக்குத்தியின் மேல் வைக்க போக,
“மூக்குத்தி கல்லுல எண்ணை இறங்கிடும். உசத்தியான கல்லாம். அம்மா திட்டும்…” என்றவளை முறைத்தவன்,
“வேற வாங்கிக்கலாம். இதை இப்போ கழட்டு…” என கேட்டதும் பின்னால் நகர்ந்தாள்.
“அதெல்லாம் ஆறிடும். இதெல்லாம் புதுசா என்ன?…” என்று அவனுக்கு போக்கு காண்பிக்க அவனும் அவளை விரட்டிய படி,
“கழட்டி தான்னா தாயேன்…” என சுற்றி சுற்றி வந்தான்.
“அத்தான் வேணாம், விடுங்க….” என்று அவளும் வீட்டை சுற்றி ஓட அவளை வளைத்து பிடித்தவன் ஒற்றை கையால் துள்ள துள்ள தூக்கிக்கொண்டு சோபாவில் அமர்த்தி அசையவிடாமல் பிடித்துக்கொண்டான்.
“ஒழுங்கா கழட்டி குடுத்தா தப்பிச்ச. இல்ல…”
“என்னால இங்க ஓட முடியலத்தான். இதே கதவ தெறந்து விடுங்க. எப்படி ஓடுவேன் தெரியுமா? எங்கூர்ல…”
“நான் போலீஸ்காரன். ட்ரெய்னிங்ல நான் ஓடாத ஓட்டத்தையா நீ ஓடிட போற?…” என்று கலாய்க்க,
“அப்ப சரி. நாளைக்கு ரெண்டுபேருக்கும் போட்டி வச்சுக்குவோம். யாரு ஜெயிக்கிறான்னு பாப்போமா?…” என்றாள் வாசு சவாலாய்.
“சுத்தம், கல்யாணம் பண்ணினது ஓட்டப்பந்தயம் வைக்கிறதுக்கா வாசு? இத நாலுபேர் கேட்டா துப்பிருவானுங்க…”
“யாரும் ஏன் கேட்கனும்? ரகசியம்…” என மெதுவாய் அவள் சொல்ல,
“இன்னும் நம்மளோட ரகசியமே நாம பார்க்கலை. இதுல இது பெரிய ரகசியம் தான்…” என்று அவளின் தோளில் சாய்ந்துகொண்டவனின் பேச்சு வாசமல்லிக்கு அப்போதுதான் விளங்கவே செய்தது.
“என்ன வாசு ஒன்னும் பேசலை?…” என்று அவளின் மூக்கை லேசாய் நிமிண்ட,
“என்ன பேசறது? எனக்கு தெரியலை அத்தான்…” என்றாள் கிசுகிசுப்பாய்.
“பார்ரா வெட்கமெல்லாம்…” என அவளின் முகம் பார்த்து குனிந்து சொன்னவன்,
“வா உள்ள போகலாம்…” என அவளுடன் எழுந்து அறைக்கு செல்ல அவனின் பின்னே தயக்கத்துடன் வந்தவள் முகம் மீண்டும் குழப்பம் சூழ்ந்தது.
கதவை சாற்றிவிட்டு அவளருகே வந்தவன் மெதுவாய் மூக்குத்தியை கழற்ற மறுக்கவும் தடுக்கவும் முடியாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“ரெண்டு நாள் இதை போட வேண்டாம். விட்டுடு…” என அதை பத்திரமாய் நகைப்பெட்டியில் வைத்துவிட்டு வந்தான்.
“ஏதாவது கேட்கனுமா வாசு?…” என்று அவளின் முகத்தை நிமிர்த்த,
“உங்களுக்கு என்னை புடிக்குமாத்தான்?…” என்றாள் பரிதவிப்புடன்.
திருமணத்தன்று அவன் கேட்டதற்கு தானே அத்தனை இலகுவுடன் பதில் சொல்லியவளால் இப்பொழுது ஷ்ரவனின் வாயால் மீண்டும் தன்னை பிடிக்கவில்லை என கேட்க நேருமோ என பயத்துடன் பார்த்தாள்.
இதுநாள் வரை தன் மீதான அபர்னிதாவின் அன்புதான் இந்த திருமணத்தின் அடிப்படை என அவள் நினைத்திருக்க அந்த எண்ணத்தை தான் சுக்குநூறாக அவள் உடைத்துவிட்டு சென்றுவிட்டாளே.
கேட்டதில் இருந்து பெரிய தவறு செய்துவிட்ட மனப்பான்மை மனதினுள் வளர வளர நிலையில்லாமல் கொதிக்க ஆரம்பித்தது அவளுள்ளம்.
“என்னவாம் திடீர்ன்னு?…” என்று அவள் கேள்வியில் சிரித்தவன்,
“அதான் என்னை உனக்கு புடிச்சிருக்கே? போதாதாமா?…” என்று கட்டிலில் சாய்ந்தவன் தன் மீது அவளை இழுத்துக்கொள்ள,
“விடுங்கத்தான். அப்போ உங்களுக்கு என்னை பிடிக்காது தான? எனக்கு தெரியும்….” என மீண்டும் கேட்க,
“ஏய் ஆர்வம், அடங்குடி. பிடிக்காதவட்ட தான் இப்படி இழைஞ்சிட்டு இருக்கேனா? பாரு நாம எப்படி இருக்கோம்னு…” என்று சுட்டி காட்ட,
“அதெல்லாமில்ல. வந்தன்னைக்கு கூட நீங்க கட்டி தான் புடிச்சீங்க. ஆனா விட்டுட்டீங்க. எனக்கு தெரியும்…”
“ப்ச், வாசு சொல்றதை புரிஞ்சுக்கோ…” என்றவனின் பேச்சும் அவளின் மூளையில் ஏறவில்லை. செயலும் மூளையில் ஏறவில்லை.
வாசு பேசிக்கொண்டே தான் இருந்தாள். நீ என்னவும் பேசிக்கொள் என்பதை போல ஷ்ரவன் தனது செயலில் தீவிரம் காண்பிக்க ஒருகட்டத்தில் துள்ளி அவனை விலக்கியவள்,
“அத்தான் என்ன பன்றீங்க?…” என மீண்டும் அவனின் நெஞ்சில் முகம் மறைத்துக்கொண்டாள்.
“உனக்கு சொன்னா எல்லாம் புரியாது. அதான்…” என்றவன் குரல் வாசுவிற்கு புதிதாய் இருக்க,
“லைட் அத்தான்…” என்று விளக்கை சுட்டி காண்பித்தாள்.
“ஓஹ், இதானா?….” என்று எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு வந்து அவளை அணைக்க,
“இன்னும் பிடிக்குதுன்னே சொல்லலை நீங்க…” என மீண்டும் பேச, அவளின் வாயில் சப்பென்று அடித்தவன்,
“மூச்ச், இனி எதாச்சும் தொணதொணன்னு பேசு. ரெண்டு நாளைக்கு வாயே திறக்கமுடியாம பண்ணிருவேன். கம்முன்னு இரு…” என்று மிரட்ட,
“அதான் தெரியுமே. உங்களுக்கு என்னை புடிக்கல. நான் பேசினாலும் புடிக்கலன்னு. எப்ப பாத்தாலும் அத பேசாத இத பேசாத. என்னதான் நான் பேச?…” என்றவளின் குரல் கலங்கி போய் இருக்க லேசாய் நடுங்கியது.
“வாசு பெட்ஷீட்க்குள்ள வா. வெறும் புடவையை போர்த்திட்டு குளிரும். வா வாசு…” என்று அவளை தனது அணைப்பிற்குள் கொண்டு வந்து போர்த்திவிட்டவன்,
“ஓகே நான் சொல்றது உனக்கு புரியுமா எனக்கு தெரியலை. ஆனா என்னோட பக்கத்தை சொல்லிடறேன். கூட கூட ஊடால பேசின அப்பறம் என்ன செய்வேன்னே தெரியாது. ஏற்கனவே மனுஷன் அவஸ்தை புரியாம தொணதொணன்னு என்னை படுத்தற…” என்றவன்,
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் வாசு. நான் போய் சொல்லலை. நிஜமாவே சொல்றேன்…” என்று சொல்ல அவனை அவனின் முகத்தை அண்ணார்ந்து பார்த்தவள்,
“அய்யனாரு சத்தியமா?…” என்று அவனுக்கு கையை நீட்ட,
“அது யாரு அய்யனாரு?…”
“அதான் தேங்காய் உடைச்சேனே? அந்த அய்யனாரு…” என்று சொல்ல அவளின் கையை பிடித்தபடி வாய்விட்டு சிரித்தவன்,
“சத்தியம் பண்ணலைன்னா நம்ப மாட்ட போல. உன் அய்யனாரு சத்தியமா இந்த ஊர்நாட்டானை தான் ரொம்ப பிடிச்சிருக்குது போதுமா?…” என்றவன் மேலும் பேசும் முன்னர் அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டவள்,
“இது நிஜம்னா இது போதும்த்தான்…” என்று அவனை கட்டிக்கொண்டவள் உள்ளம் துள்ள அந்த சந்தோஷமெங்கும் உடல்மொழியில் பரவ,
“வாசு, இன்னும் நான் பேசி முடிக்கலை…”
“உங்களுக்கு என்னை பிடிக்குதேத்தான்…” அந்த ஒற்றை வார்த்தையே அவளின் மொத்த வாழ்க்கையாய் மாறி போனதை அவனுக்கு உணர்த்த முற்பட்டாள்.
“எல்லாமே உன்கிட்ட அவசரம்தான்டி. ஆர்வம் ஆர்வம்…” என்று அவளுள் புதைந்தவனின் வேகத்தை அவளின் நிறைந்த மனம் கொண்டு தாங்கி நின்றாள்.
எந்தவித சஞ்சலமும், தயக்கமும் இன்றி முழுமனதுடன் அவளுடன் அண்டசராசரங்களும் சாட்சியாக அவளை தன்னில் சரிபாதியாக்கினான் ஷ்ரவன்.
விருப்பமின்றி நடந்த திருமணமாக இருந்தாலும் நிதர்சனம் மட்டுமின்றி, கொண்டவளின் மீதான பிடித்தமும் சேர்ந்துகொள்ள வாசமல்லியின் மணத்தை மொத்தமாய் மனதிற்குள் நுகர்ந்து அவளை கவர்ந்துகொண்டான்.
“அத்தான்…” என்ற அவளின் எந்த பேச்சுக்கும் அவன் அதன்பின்னர் அனுமதிக்கவேயில்லை.
“உன்னை பேசாவிட்டா இன்னைக்கும் நான்…” என்றவனை அவள் தான் அதன் பின்னர் பேசவிடவில்லை. மென்சிரிப்புடன் அவளுள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்துபோனான்.
ஈக்கி மின்னல் அடிக்குதடி ஈர கொல துடிக்குதடி
அவ நெற்றியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியும் ஒட்டுதே
அவ பார்வையில் எலும்புகள் பல்பொடியாச்சே