பூ – 19
ஷ்ரவன் சொல்லியதை போல மாலை கிளம்பி இரவு வாசமல்லியுடன் ஊர் வந்து சேர்ந்துவிட்டான்.
வரும் வழியெல்லாம் அவள் ஒரே அனத்தல். கோவிலுக்கு போகனும், ஊர்வலம் பார்க்கனும், ஆட்டம், பாட்டம் எல்லாம் பார்க்கனும் என்று திருவிழாவின் டாப் டூ பாட்டம் அவனுக்கு சொல்லி சொல்லி காதில் ரத்தம் வராத குறைதான் ஷ்ரவனுக்கு.
“சத்தியமா சொல்றேன். நீயே இவ்வளவு படம் போட்டு விளக்கின பின்னாடியும் ஊருக்கு போகனுமான்னு இருக்கு. இதுவே திருவிழா பார்த்தமாதிரி தான் எனக்கு. வண்டியை திரும்ப மலையேத்தவா?…” என்ற பின்னர் தான் முறைப்புடன் வாயை மூடினாள்.
“ரொம்பத்தான் பொறாமை உங்களுக்கு…” என்று உதட்டை சுளிக்க,
“ஆமாமா, கண்டுட்ட. பேசாம வா வாசு…” என்று அவளின் தலையில் தட்டியவன் அவினாசியை நோக்கி சென்றான்.
ஊரின் எல்லையில் நுழையவுமே அங்கிருந்தே தோரணங்கள், மைக் செட்டில் ஒலித்த பாடல்கள் என்று ஜீப்பிலேயே வாசமல்லியின் உடல்மொழி மாற கால்கள் நிற்கவில்லை.
“இன்னும் வீடு போய் சேரலை. விட்டா இறங்கி ஆடிட்டே போவ போல?…” என்று ஷ்ரவனின் கிண்டலை கூட பொருட்படுத்தவில்ல அவள்.
“அத்தான் இதான் எங்க ஊர் திருவிழா. பார்த்தீங்கல்ல…” என்றவள் கையும் காலும் துள்ள முகம் அப்படி ஒரு கொண்டாட்டத்தை காட்டியது.
“ஐயோ இப்பவே கோவிலுக்கு போவனும். என்ன பூ வாங்கி வச்சிருக்காங்களோ? அம்மா உதிரி வாங்கி கட்டி தான் வைக்கும். நேத்தே சொல்லாம போனேன்…” என்றவள் தனது போனை எடுத்து சித்ராவிற்கு அழைக்க,
“வாசு இன்னும் நாலு தெரு தாண்டினா வீடு. இதுக்கொரு போனா? உன் அழிச்சாட்டியம் ஓவரா போய்டுச்சு. தண்ணியடிச்சவன் மாதிரி இந்த ஆர்ப்பாட்டம் பன்ற?…”
“உங்களுக்கு இதெல்லாம் புரியாது. பாருங்க என் கையெல்லாம் எப்டி இருக்குன்னு. அப்படியே புதுசா ரத்தம் பாய்ஞ்ச மாதிரி ஜிவ்வுன்னு இல்ல…”
“ம்ஹூம். இல்லையே…” என்றாலும் அவளின் அதிகப்படியான சந்தோஷத்தில் சிரிப்புதான் வந்தது.
“ப்ச் அத்தான், அம்மா சில நேரம் அவசரத்துல கட்டறேன்னு பூவை நெருக்க தொடுக்காம அலக்கலக்கா கட்டிருவாங்க. எனக்கு நெருக்கமா இருக்கற பூ அதுவும் மொட்டா இருந்தா தான் பிடிக்கும். உங்களுக்கு தெரியும்ல. அதான் கேட்க…” என்று சொல்ல சித்ரா போனை எடுக்கவே இல்லை.
“இது வேற. மல்லிப்பூ கிடைக்கலைன்னு எதாச்சும் சொல்லட்டும் வச்சிக்கறேன்…” என்றவள் முகம் குதூகலத்துடன் பத்து பலூனை வாங்கிக்கொடுத்தால் குழந்தை சிரிக்குமே அப்படி வாயெல்லாம் பல்லாக முகமெல்லாம் விகசித்து மின்னியது.
“ஊர்க்காரி, வேற எப்படி இருப்ப?. ஊர்நாட்டான், ஊர்நாட்டான்…” என்றபடி அவளின் வாசலில் என்று ஜீப்பை நிறுத்த உள்ளிருந்து வந்துவிட்டான் சங்கர்.
அப்போதுதான் ஆதவ்வுடன் கோவிலுக்கு கிளம்பி இவர்களுக்காக காத்திருந்தவன் ஜீப் வரும் நேரம் பார்த்து வெளியே வந்தான்.
“ஷ்ரவா இங்க நிப்பாட்டாத. சாமி ஊர்வலம் வரும். அதனால டிப்போ பக்கம் நிப்பாட்டிட்டு வரலாம் வா…” என்று ஜீப்பில் அவன் ஏறிக்கொள்ள ஷ்ரவன் இறங்கி உள்ளே ஓடிய வாசமல்லியை பார்த்து ஒரு தலையசைப்புடன் கிளப்பினான்.
“என்னடா மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்க?…” என்று அவனின் தோளில் தட்ட,
“பின்ன என்னத்தான்? முதல்தடவை இந்த திருவிழாவுக்கு வரேன். கொஞ்சமாச்சும் நின்னு சேர்ந்து போகனும்னு நினைக்காளா உங்க தங்கச்சி?…” என்று சலிப்பாய் சொல்ல சங்கரின் முகத்தில் புன்னகை.
“என்ன? இல்ல என்னன்றேன்?…”
“நீ சொன்னியா சேர்ந்து போவோம்ன்னு…”
“இல்லையே…”
“அப்போ அவ நிக்கனும்னு நீயா எதிர்பார்த்தா? நீ என்ன நினைக்கிறன்னு நீ தான் சொல்லனும். அப்ப தான் அவளுக்கும் தெரியும். வரப்பவே நீ வர இஷ்டம் இல்லாத மாதிரி பேசிருக்க. ..”
“அதுக்கு, நிக்கமாட்டாளாமா? இப்படியே நான் கிளம்பிட்டா?…”
“அதுலயே நில்லு. இப்படியே மிரட்டிட்டு இருந்தா கிளம்புன்னு சொன்னாலும் சொல்லுவா…” என்றவன் டிப்போவை காண்பிக்க ஜீப்பை அங்கே உள்ளே நிறுத்தி பூட்டிவிட்டு இருவருமாய் இறங்கி நடந்து வந்தனர்.
வரும் வழியில் தெருவில் பூக்கடை போட்டிருக்க அதை பார்த்ததும் மனைவிக்கு பிடித்தமான மல்லிகை பூவை வாங்கினான்.
“எதுக்குடா இவ்வளவு பூ?…” சங்கர் கேட்க,
“உங்க தங்கச்சிக்குத்தான். வரப்பவே அத்தைக்கு போன் பண்ணிட்டே வந்தா. அவங்க எடுக்கலை. தலையில வைக்கிற பூவுக்கு ஆயிரம் நொரநாட்டியம் ஆடுவா அவ. கேட்கவா வேணும். அதான் இங்க நல்லா நெருக்கமா பூ தொடுத்து இருக்காங்க. எதுக்கும் இருக்கட்டும்ன்னு வாங்கிட்டு போறேன்…”
“ஹ்ம்ம், தேறிட்ட போ. கல்யாணத்தன்னைக்கு பார்த்த ஷ்ரவனா நீ?…”
“என்ன பார்த்தீங்க கல்யாணத்தன்னைக்கு?…”
“ஹ்ம்ம், உன் கண்ணு வேர்த்து இருந்ததை தான்…” என்று சிரிக்க,
“அதை வேற ஞாபகப்படுத்தீட்டீங்களா?…” என்று இப்போதும் கண்ணை துடைப்பதை போல ஷ்ரவன் போலியாய் நடிக்க,
“அடேங்கப்பா. முதல்ல பசங்க கண்ணீரை தான் நம்ப கூடாதுன்னு தான்டா சொல்லனும். அழுத அழுகை என்ன? இப்ப கவனிக்கறதென்ன?…”
“கண்ணு வைக்காதீங்க அத்தான்…” என்றபடி இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வர வாசமல்லி வாசலில் நின்றாள்.
“நீ அப்பவே உள்ள ஓடின. இந்நேரம் நீ போன வேகத்துக்கு ட்ரெஸ் மாத்தி கோவிலுக்கு போயிருப்பன்னு நினைச்சேன்…” என்று அவள் நிற்பதை பார்த்து கிண்டலடித்தான் ஷ்ரவன்.
“சும்மா இருடா, அவளே திட்டு வாங்கிட்டு வந்து நிக்கறா…” என அமலா சொல்ல,
“யார் திட்டினாங்க?…” என தாயிடம் கேட்டவன்,
“என்ன பண்ணின வந்ததும்? பூ சரியில்லைன்னு பேசினியா நீ? வாயை வச்சுட்டு சும்மா இருக்கமாட்ட இல்ல?…” என்று அவளை கடிந்தவன்,
“நீ இப்படிலாம் செய்வன்னு தான் நானே பூ வாங்கிட்டு வந்துட்டேன். சந்தோஷமா? எல்லாருக்குமே சேர்த்தே வாங்கிருக்கேன்…” என்று ஷ்ரவன் சொல்லவும்,
“அதான, அத்தான்னா சும்மாவா?…” என்று பூவை வாங்கிக்கொண்டவள் முகம் பளிச்சிட சிரிக்க,
“இப்ப சொல்லு என்ன பண்ணின?…” என மீண்டும் கேள்வி கேட்டான் ஷ்ரவன்.
“அடேய் சும்மா விடேன். வாசல்ல வச்சே எல்லாம் கேட்கனுமா?…” என்று சங்கர் சொல்லிவிட்டு,
“நீ உள்ள போம்மா…” என தங்கையிடம் சொல்ல,
“அம்மா இவங்க வரவரைக்கும் நிக்க சொல்லிட்டாங்க. சேர்ந்து வராம ஆளுக்கு முன்னாடி குதிச்சு வந்துட்ட, மருமகன் என்ன நினைப்பாரு, இன்னும் உனக்கு பொறுப்பில்லைன்னு அத்தனை திட்டு…” என வாசமல்லி புகார் வாசிக்க,
“ஆமா நா பாத்தேன்…” என்றான் ஆதவ்.
“ஹேய் ஹீரோ உன்னை நான் பார்க்காம விட்டுட்டேனே…” என்று ஆதவ்வை தூக்கிக்கொண்டான் ஷ்ரவன்.
அதற்குள் சித்ரா உள்ளிருந்து வந்துவிட ஷ்ரவனுடன் சேர்ந்தே வீட்டிற்குள் நுழைந்தாள்.
“ம்மா, பார்த்தீங்களா? அத்தான் எனக்கு எவ்வளவு பூ வாங்கிட்டு வந்திருக்கார்ன்னு…” என்று காண்பிக்க,
“அதான் உனக்கு இந்த ஆட்டம். பேசாம இரு…” என்ற சித்ரா ஷ்ரவனை கவனிக்க அதையெல்லாம் கண்டுகொள்பவளா அவள்.
“ம்மா, இந்த புடவை கட்டட்டா?…” என்று சித்ராவிடம் வந்துவிட்டு பின்,
“அத்தை நீங்க சொல்லுங்க. இது ஓகே வா?…” என்று அமலாவிடம் வந்தவள்,
“பெரிம்மா நீங்க சொல்லுங்க. இதுவரைக்கு நீங்க சொல்லி கட்டினதில்லை. சொல்லுங்க பார்ப்போம்…” என்று சங்கரின் அம்மாவை பிடித்துக்கொள்ள அவரும் ஆர்வமாய் அவளுக்கு பார்த்து பார்த்து எடுத்து கட்டிவிட்டு அலங்காரம் செய்துவிட்டார்.
“ம்மா, இதையெல்லாம் பெரிம்மாட்ட இருந்து கத்துக்கோங்க…” என்ற கூடுதல் அறிவுரையையும் சொல்லிவிட்டு சித்ராவிடம் சத்தமில்லாத திட்டுக்களையும் வாங்கிகொண்டாள்.
ஆனாலும் சித்ராவிற்கு மகளின் வாழ்க்கையை எண்ணி அப்படி ஒரு பூரிப்பு. இதை தானே அவரும் எதிர்பார்த்தார்.
அனைவரும் கிளம்பி வாசலுக்கு வர ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. ஊர் மொத்தமும் சீரியல் பல்புகளும் வீட்டிற்கு வீடு வெளியே ட்யூப்லைட்களும் கட்டப்பட்டு பார்க்கவே கண்களை கவர்ந்தது.
கொட்டுச்சத்தம் காதை கிழிக்க சாமி வந்ததும் தேங்காய்பழம் உடைத்துவிட்டு ஊர்வலம் அந்த தெருவை தாண்டி செல்லும் வரை இருந்து பார்த்துவிட்டு தான் உள்ளே வந்தனர்.
“நாளைக்கு பொங்கல் வைக்க போகனும். காலையிலையே கிளம்பனும்….” என்று பெரியவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்க,
“அத்தான் வாங்க கடத்தெருவுக்கு போவோம்…” என்று வந்தாள் அவள்.
“வாசு அதான் முடிஞ்சதே எல்லாம்…”
“எங்க முடிஞ்சது? கோவிலை சுத்தி அவ்வளவு கடை போட்டிருப்பாங்க. ராட்டினம் எல்லாம் பெருசு பெருசா கொண்டுவந்து இறக்கியிருக்காங்க. போலாம் வாங்க…”
“இருட்டுல என்ன வாங்குவ வாசு? காலையில போகலாம்…” என ஷ்ரவன் சொல்லவும்,
“கூட வரீங்களா இல்லயா அத்தான்? வந்து பாருங்க. எனக்கு போகனும்…” என நிற்க,
“எஸ், நானு…” என்று வாசமல்லியை போலவே ஆதவ்வும் நின்றான் லேசான முறைப்புடன்.
“டேய் இவளோட சேராத…” என்று ஷ்ரவன் அவன் நின்ற விதத்தில் அடக்கமாட்டாமல் சிரிக்க அதை அப்படியே தனது மொபைலில் படம் பிடித்துக்கொண்டான் சங்கர்.
ஆசிரியரிடம் மாட்டிக்கொண்ட பிள்ளைகள் போல இருவரும் முறைப்புடன் நிற்க அதை கண்ட சிரிப்போடு ஷ்ரவன்.
“வாவ். பெர்பெக்ட் ஸ்நாப்…” என்றான் சங்கர் அதை பார்த்து.
“அத்தான் அப்படியே ஒரு செல்பி…” என ஷ்ரவன் சொல்ல ஆதவ்வை முன்னால் விட்டு லேசாய் காலை வளைத்து நின்று படம் எடுத்துக்கொள்ள,
“ஷ்ரவா என்ன பன்ற?…” என அமலா கேட்க,
“செல்பிம்மா…” என்றான் அவன்.
“இந்தா வந்துட்டேன். அவளைத்தான் தேடிட்டு இருந்தேன்….” என சொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்த சித்ரா,
“இப்பத்தான வந்தான்னாங்க…” என்று மீண்டும் உள்ளே வந்தவர்,
“எங்கடி செல்வி?…” என்றார்.
“என்ன செல்வி?…”
“ப்ச், இப்ப மாப்பிள்ளை சொன்னார்ல, செல்விம்மான்னு…” என்று சொல்லி,
“மாலைக்கு சொல்லிருந்தேன் காலையில கோவிலுக்கு போறதுக்கு வேணும்னு. இன்னும் கட்டி கொண்டு வாரா. அதான் மாப்பிள்ளை சொல்லவும் எந்திச்சு வந்தா அதுக்குள்ளே போய்ட்டா போல. திரும்ப வந்தான்னா நிப்பாட்டு. மாலைய சரிபாத்து வாங்கனும் நானு…” என்று சொல்லி உள்ளே சென்றுவிட ஷ்ரவன் சிரிப்பை அடக்கியபடி வாசுவை பார்த்தான்.
“கோவிலுக்கு போகனும். இந்தம்மா செல்விக்கு காவக்காக்க வைக்குதே…” என்று அவளும் புலம்பியபடி உள்ளே சித்ராவின் பின்னாலே சென்றாள்.
“ஏன் அத்தான் உங்க குடும்பம் எப்பவும் இப்படித்தானா? இல்ல திருவிழா திருவிழாவுக்கு இப்படியா?…” என அடக்கமாட்டாமல் சிரிக்க,
“டேய்…” என்று அவனின் தோளில் தட்டினான் சங்கர்.