“பின்ன என்ன அவங்க தான் புரியாம பேசறாங்கன்னா, இவளுக்கு தெரியும்ல. அதை சொல்லாம இவளுக்கு இவ கவலை. ஹைய்யோ ஹைய்யோ…” என்று இன்னும் சிரிக்க அதற்குள் வந்துவிட்டாள் வாசு.
“அம்மாட்ட சொல்லிட்டேன். செல்விக்கு போன்ல பேசறேன்னு சொல்லிட்டாங்க. வாங்க போகலாம்…” என்று நிற்க,
“என்னவோ சப்போர்ட்டுக்கு வந்தீங்க. இனி வாங்க வச்சு செய்யறேன் அண்ணனையும், தங்கச்சியையும்…” என்ற ஷ்ரவன் ஆதவ்வை தூக்கிக்கொள்ள,
“என்னண்ணே? என்ன சொல்லுறாரு?…” என்று வாசு சங்கரிடம் கேட்க,
“அவனுக்கு பசிக்குதாம். அதான் உளறிட்டு இருக்கான்…” என சங்கரும் சொல்ல,
“அத்தான் கடை நிறைய இருக்கும். சாப்பிட, கொறிக்கன்னு. அங்க போய் பாத்துப்போம்…” என்று நடக்க,
“உங்க வேலையா? இனி ஒண்ணொண்ணா இதெப்படி இருக்குன்னு சாப்பிட்டு பார்க்க வச்சே என்னை ஒருவழி ஆக்கிடுவா. கோர்த்துவிட்டுட்டீங்க…” என்று பாவமாய் புலம்ப,
“இப்பத்தான் கல்யாணத்தன்னைக்கு பார்த்தமாதிரி அழகா இருக்கு. அந்த கண்ணுல அந்த பயத்த நான் பார்த்துட்டேன்…”
“அத்தான்…” என்று ஷ்ரவன் பல்லை கடிக்க,
“இதுதான்டா வச்சு செய்யறது. சொல்லிட்டு எல்லாம் வச்சு செய்ய கூடாது…” என்று அவனும் கிண்டல் பேச,
“டேய் ஹீரோ எங்கியாச்சும் தப்பிச்சு ஓடிடுவோமா?…” என ஆதவ்விடம் டீல் பேசினான் ஷ்ரவன்.
“நோ மாமா. அப்பா போலீஸ். நம்மளை கேட்ச் பண்ணிடுவார்…” என்றான் ஆதவ் தீவிரமாக.
“அடேய் மருமகனே அப்ப நான் யாராம்?….”
“நீங்க குட்டி போலீஸ். அப்பா பெரிய போலீஸ்…” என கையை விரித்தும் சுருக்கியும் காண்பித்து ஆதவ் சொல்ல அவனை இறுக்கமாய் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.
“நீ எங்களை விட ஸ்மார்ட் டா…” என்று சில்லாகிக்க ஆதவ் வாய்விட்டு சிரித்தான்.
இத்தனை மாதத்தில் அபியை தேடுவதை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்திருந்தாலும் மனதின் ஏக்கம் உடலை பாதித்தது. நன்றாய் மெலிந்து போயிருந்தான் அவன்.
என்னதான் அத்தனை பேர் இருந்து பார்த்துக்கொண்டாலும் குழந்தையிடம் எதையும் சரிசெய்ய முடியவில்லை.
ஏற்கனவே அபி இருந்த பொழுது என்ன சொன்னாலும் சரி என்று கேட்கவேண்டும் என்று அவள் கற்றுக்கொடுத்திருக்க யார் என்ன சொன்னாலும் மறுப்பில்லாமல் செய்தது குழந்தை.
அதுவே அனைவருக்கும் வருத்தத்தை அளித்தது உடனிருப்பவர்களுக்கு. முடிந்தளவிற்கு அவனை சந்தோஷமாகவே வைத்துக்கொள்ள பார்த்தனர்.
கடைத்தெரு வந்ததும் ஆதவ்விற்கு என்ன வேண்டும் என்று ஒவ்வொன்றாய் காண்பித்து வாங்கித்தர ஆரம்பித்துவிட்டாள் வாசு.
“இவளுக்கு யாராச்சும் கூட இருந்துட்டா தனக்கு வேணுன்றத மறந்துருவா…” என்று சிரித்தபடி ஷ்ரவன் சொல்ல அந்த கடைத்தெருவையே ஒரு கலக்கு கலக்கிவிட்டே வீடு வந்து சேர்ந்தனர்.
ராட்டினம் சுற்றவேண்டும் என்று இருவரும் நிற்க பகலில் சுற்றலாம் என்று வம்படியாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் ஷ்ரவன். ஆதவ்வை மட்டும் குழந்தைகள் ஏறும் சிறு சிறு ராட்டினங்களில் ஏற்றிவிட்டு கூட்டி வந்தனர்.
வீட்டிற்குள் வந்த குழந்தை தான் வாங்கியதை எல்லாம் எல்லோருக்கும் ஒவ்வொன்றாய் காண்பித்து சென்று வந்ததை பற்றி கதை பேச ஆரம்பிக்க அப்படியே இரவு உணவை முடித்துவிட்டு அனைவருமே முற்றத்திலே பாய் விரித்து படுத்துக்கொண்டனர்.
ஆதவ் ஒவ்வொருவரிடமும் சென்று கொஞ்சம் கொஞ்ச நேரம் படுத்து விளையாடி கடைசியில் சங்கரின் மேல் படுத்து அவனை கட்டிக்கொண்டு தூங்கிபோனான்.
காலை எல்லரும் எழுந்து குளித்து கோவிலுக்கு கிளம்ப ஆதவ் தான் முதலில் சென்றான். அவன் உயரத்திற்கு வேஷ்டி கட்டி சங்கர் போட்டிருக்கும் ப்ளூ கலரில் ஷர்ட் போடவும் அப்படி ஒரு சந்தோஷம்.
“நானு அப்பா ஆகிட்டேன். சேம் சேம் ட்ரஸ்…” என்று ஒவ்வொருவரிடமும் சொல்லி சொல்லி ஓய்ந்துபோனான்.
பத்து நொடிக்கு ஒருமுறை தந்தையை பார்த்து ஒரு சிரிப்பு வேறு சிரிக்க சிரிக்க பெற்றவனுக்கே வெட்கமாகியது.
“என்ன குட்டி இப்படி பார்க்கற?…” என்று கேட்கவும்,
“அப்பா க்யூட், தம்பி க்யூட்…” என்று அவனே இருவரின் கன்னத்தை கிள்ளி கொஞ்ச,
“போதும்டா இப்படி ரசிக்கிற உன் அப்பாவை…” என்று ஷ்ரவனும் வர அவனும் அதே போலவே உடை அணிந்திருக்க,
“மாமாவும் க்யூட்…” என்று அவனிடம் தாவினாலும் சங்கரை பார்ப்பதை மட்டும் அவன் விடவே இல்லை.
தானும் பெரிய மனிதன் போல உடை அணிந்திருப்பது ஒரு மகிழ்ச்சியையும், வெட்கத்தையும் தந்திருக்க ஆதவை கையில் பிடிக்கமுடியவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தான்.
“முதல்ல பேரனுக்கு சுத்தி போட்டுட்டு போவோம். நம்ம கண்ணே பட்டுடுச்சு…” என சித்ரா அவனுக்கு திருஷ்டி எடுத்துவிட்டு பின் பொங்கல் பானையை எடுத்துக்கொண்டு அனைவருடனும் ஊர்வலத்தில் கலந்தார்.
ஊர் மொத்தமும் பொங்கல் பானையுடன் அனைத்து தெருக்களையும் சுற்றிவிட்டு கடைசியாக கோவிலுக்கு வர அவரவர் அடுப்பு கூட்டியிருந்த இடத்தில் பொங்கல் வைக்க ஆரம்பித்தனர்.
ஆண்கள் எல்லாம் ஓரிடத்தில் சென்று நின்றுகொள்ள ஷ்ரவன் ஆதவ்வுடன் தேவகி தனியே வரும் நேரத்தை பார்த்து நின்றான்.
அவன் நினைத்ததை போல தேவகியும் சிறிது நேரத்தில் கோவில் பூசாரியிடம் எதையோ கொண்டுவந்து கொடுத்துவிட்டு திரும்ப,
“ஆதவ் கோ. சொன்னது ஞாபகம் இருக்குல…” என்று அவனை அனுப்பிவிட்டு தள்ளி நின்று பார்த்தான்.
வேகமாய் தேவகியை நோக்கி ஓடி வந்த ஆதவ் அவளின் முன்னால் வந்து நின்று நிமிர்ந்து பார்த்து சிரிக்க அவனை பார்த்தவளுக்கு மனது கலங்கி போனது.
அவன் வந்திருக்கிறான் என்று வீட்டில் பேசியதை வைத்து தெரிந்திருக்க இப்போது எதிர்க்கே வந்து நின்ற குழந்தையை பார்த்துவிட்டு கடந்து செல்ல முடியவில்லை.
“இங்க வாங்களேன்…” என அவன் கை நீட்டி அழைத்து தெளிவாய் பேச அவன் உயரத்திற்கு குனிந்து மண்டியிட்டாள்.
“என்னவாம்?…” என சிரிப்புடன் கேட்டவள் ஆதவ்வின் கையை பார்த்து சிரித்தபடி,
“ஏன் வேஷ்டியை இப்படி தூக்கி பிடிச்சிருக்க?…” என அவனின் கையை எடுத்துவிட மீண்டும் தூக்கி சுருட்டி பிடித்தான்.
“ஸ்பீடா நடக்க முடியல. உங்கள பாக்க வந்தேன்…” என்று சொல்லவும்,
“அவ்வளவு தான? இரு மடிச்சு கட்டிவிடறேன்…” என்று அவனுக்கு மடித்து கட்டிவிட,
“வாவ், குட்…” என்று பெருவிரலை நீட்டி காண்பித்தான்.
“ஏன் என்னை பார்க்கனும்?…” என்று அவனின் கன்னம் வருடி கேட்டபடி நெற்றியில் இருந்த விபூதி குங்குமத்தை ஒன்றுபோல திருத்திவிட,
“தேங்க்ஸ் சொல்ல. லாஸ்ட் நீங்க என்னை சேவ் பண்ணுனீங்க இல்ல…”
“என்னது?…” என்றவள் அபியுடன் வந்த பொழுது அவன் கீழே விழுந்து இவள் தூக்கிவிட்டதை சொல்கிறான் என்று புரிந்துகொண்டவள்,
“ஓஹ், பெரியமனுஷன் ஆகியாச்சா தேங்க்ஸ் எல்லாம் சொல்ற?…” என்று சிரித்தாள் தேவகி.
“எஸ், ஐ’ம் பிக் பாய். யூ ஸீ…” என்று தன்னுடையை காண்பித்து சிரிக்க,
“அழகுடா…” என்று அவனின் கன்னம் வழித்து சொல்லி முத்தமிட,
“ஐ னோ…” என்றான் குழந்தை.
“ஹ்ம்ம், சரி நான் வரேன்…” என அவள் எழுந்து போக போக அவளின் தோளை பற்றி அப்படியே நிறுத்தியவன்,
“மம்மி இல்ல, பேசுங்க. பைட் பண்ண அவங்க இல்ல. பேசுங்க…” என்றதும் தேவகியின் கண்களில் லேசாய் கண்ணீர் உடைப்பெடுக்க,
“உங்க மம்மி பைட் பண்ணுவாங்களா?…” என்றான்.
“ம்ஹூம், இல்ல…”
“அப்ப நோ க்ரையிங்…” என்று அவளின் கண்ணீரை துடைக்கவும் தேவகி அவனின் செயலில் சிரிக்க,
“தேங்க்ஸ்…” என்றான் ஆதவ் மீண்டும்.
“எதுக்கு?…”
“நீங்க ஸ்மைல் பண்ணுனீங்க…”
“ஹ்ம்ம் ஆதவ் சிரிச்சுட்டே இருந்தா நானும் சிரிப்பேனாம்…”
“ஓகே…” என்றவன் ஷ்ரவன் இன்னொன்று கேட்க சொன்னானே என்று மறந்து போக திருதிருவென்று முழித்தான்.
“என்னாச்சு ஆதவ், யாரையாவது தேடறியா?…” என கேட்க,
“உங்கட்ட கேட்கனும். மறந்து போச்சே…” என்று ஆதவ் கை விரிக்க,
“ஓகே, ஞாபகம் வர வரைக்கும் என் கூட இருப்பியா?…”
“அப்பாட்ட சொல்லனும்…”
“உன் அத்தைட்ட நான் சொல்லிடறேன். ஒன்னும் சொல்லமாட்டாங்க…” என்றவள் அவனை தூக்கிகொண்டு பொங்கல் வைக்கும் இடத்திற்கு செல்ல அவர்களில் இருந்து சற்று தள்ளி தான் சித்ரா பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தார்.
“அத்தே…” என அவள் வந்து நின்றதை பார்த்ததும் சந்தோஷத்தில் பேச்சற்று போனார் சித்ரா.
ஏற்கனவே தேவகி ஆதவ்வுடன் பேசிக்கொண்டிருக்க அதை ஊரே வேடிக்கை பார்த்தது. அத்தனைபேருக்கும் தெரியுமல்லவா. சட்டென ஆதவ்வை தூக்கிகொண்டு அவள் செல்லவும் ஆச்சர்யத்துடன் ஆளாளுக்கு அதை பற்றி பேசியபடி பார்த்தனர்.
சித்ரா உடன் அமர்ந்திருந்த சங்கரின் தாய்க்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. அமலாவும் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருக்க,
“வாங்க மதினி. பொங்கல் பொங்கிருச்சா? ஆதவ் உங்கட்ட எப்ப வந்தான்? அத்தான் தான கூட்டிட்டு போனாங்க…” என்று எழுந்து ஆதவ்வை வாங்க போக,
“சொதப்புறாளே…” என்று தலையில் கை வைத்தபடி,
“வாசு…” என்று வேகமாய் வந்து நின்றான் ஷ்ரவன்.
“எங்க போனீங்க அத்தான்? இவனை கூட்டிட்டு போய்ட்டு இப்ப வரீங்க? சரி இருங்க….” என்று தேவகி பக்கம் திரும்பினாள்.
“குடுங்க மதினி, நானும் பொங்கல் பொங்கறப்ப இவனை கூப்பிடனும்னு இருந்தேன். நல்லவேள வந்துட்டீங்க…” என்று சொல்ல,
“மவளே வாயை மூடிட்டு நிக்கலை. பொண்டாட்டின்னு பாக்காம பெரிய பொங்க பானையா பார்த்து ஒரே அமுக்கா உள்ள அமுக்கிருவேன்…” என்று அவளின் காதில் சொல்லியவன் தேவகியை பார்த்து சிரிக்க,
“இல்லை, ஆதவ்வை கொஞ்சம் நேரம் என்கூட வச்சுக்கறேன். அவன் உங்கட்ட கேட்கனும்னு சொன்னான்…” என்று தேவகி சொல்ல,
“நோ நோ, அப்பாட்ட. அப்பா அங்க…” என்று சங்கரை நோக்கி கையை நீட்டி காண்பிக்க அவனை பார்த்ததும் ஒரு நிமிடம் ஆதவ்வை இறக்கிவிட்டுவிடலாம் என்றே நினைத்தவள் லேசாய் கையை தளர்த்தவும் ஆதவ் அவளின் கழுத்தை கட்டிக்கொண்டு,
“நல்லா புடிங்க ஆன்ட்டி…” என்று சொல்லவும் அவனை வேகமாய் திரும்பி பார்த்தாள்.
“ஆதவ், ஆன்ட்டி இல்லை. சித்தி சொல்லு. உனக்கு சித்தி முறையாகனும்…” என்று ஷ்ரவன் சொல்லித்தர அவனை முறைக்க முடியாமல் பார்வையை திருப்பிய தேவகி,
“நான் வரேன். அப்பறமா இவன் வருவான்…” என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு செல்ல இதை தூர இருந்தே பார்த்துக்கொண்டு தான் இருந்தான் சங்கர்.
ஷ்ரவனின் வேலை என்று பார்த்ததும் புரிந்தது அவனுக்கு. ஆனாலும் எதிலும் தலையிடவும் இல்லை, தடுக்கவும் இல்லை. அமைதியாய் இருந்துகொண்டான்.
“அத்தான், எதுக்கு என்னைய பானைல போட்டு அமுக்கனும்னு சொன்னீங்க?…” என்று மல்லுக்கு நின்றாள் வாசு.
“சத்தியமா என்னால முடியலடி உன்னோட…” என்று அழாதகுறையாக சொல்லியவன் அவளை தள்ளி அழைத்து வந்து விவரமாய் எடுத்து சொல்ல,
“அப்ப இதையும் என்கிட்டே சொல்லல நீங்க…” என்றாள் அவன் சொல்லியதெல்லாம் விட்டுவிட்டு.