எத்தனை பேசியும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. என்னவும் பேசிக்கொள் என்று சொல்லிவிட ஊட்டிக்கு சென்றவனுக்கு ஒருவாரம் தாக்குபிடிக்கமுடியவில்லை.
“வாசு கிளம்பி வாயேன். இதுக்கெல்லாம் சண்டை போடமாட்டியாடி நீ?…” என அவளிடம் வேறு எகிறினான்.
திருமணம் ஆகி அந்த வாழ்க்கையை நல்லவிதமாய் வாழவேண்டும் என்று மனைவியிடம் கணவனாய் அன்போடு நடந்துகொண்டவன் இன்று அவளில்லாத தருணத்தில் தான் எந்தளவிற்கு அவளை தேடுகிறோம் என்று தனிமையில் இருந்தவனுக்கு அப்போதுதான் அந்த புரிதலே உண்டானது.
“இந்த ஊர்நாட்டான் என்னை இப்படி புலம்ப விட்டுட்டாளே?…” என வீடெங்கும் அவளின் இருப்பை தேடினான்.
“அத்தான், எனக்கு ஊருக்கு ட்ரான்ஸ்பர் வேணும். ஏற்பாடு பண்ணுங்க…” என கடைசியாக சங்கரிடம் தான் வந்து நின்றான்.
“உடனேவா?…” என அவன் சிரிக்க,
“ஆமா உங்க கல்யாண வேலை எல்லாம் இருக்கே. நான்தான் இருந்து பார்க்கனும். எல்லாம் வயசானவங்க. நீங்க எதுலையும் பட்டுக்கமாட்டீங்க. அதனால ட்ரான்ஸ்பர் வேணும்…”
“ஏன்டா அதென்ன பஞ்சுமிட்டாயா, கடையில் இருக்கறதை நீ கேட்டதும் வாங்கி குடுக்க? ஒரு போலீஸ்காரன் மாதிரி பேசு…”
“குடும்பமா சேர்ந்து எனக்கு கும்மியடிச்சுட்டு அப்படி பேசு இப்படி பேசுன்னு சொல்ற வேலை எல்லாம் வேண்டாம். உங்களோட பவர் யூஸ் பண்ண முடியுமா முடியாதா?…”
“இது அபென்ஸ் தெரியும் தானே?…”
“சோ வாட்? எனக்கு வேணும்…” ஷ்ரவன் பிடிவாதமாய் நின்றான்.
“இப்போ என்ன உனக்கு மல்லியை உன் கூட கூட்டிட்டு போகனும். அதானே?…”
“கல்நெஞ்சக்காரர், கொஞ்சமாச்சு கரையுறீங்களா? ட்ரான்ஸ்பர் ட்ரான்ஸ்பர் தான். வேற எதுவும் பேசமாட்டேன்…” என்றவனின் முகத்தை பார்த்த சங்கர்,
“எவ்வளவு பிடிச்சு அங்க போஸ்ட்டிங் வாங்கின நீ? இப்ப இதுக்காக போய் வேண்டாம்ன்னு சொல்றியே?…” என்றதற்குமே ஷ்ரவனிடத்தில் மௌனம் தான்.
“கொஞ்சம் நாள் கழிச்சு தானாவே உனக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கும் ஷ்ரவா. திரும்ப ஊட்டிக்கு போக முடியுமான்னு தெரியாது. நான் அத்தைட்ட பேசறேன்…”
“ப்ச், வேண்டாம் அத்தான். இதுல வாசுவோட ஹெல்த் இருக்குது. நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை. ஊட்டியா வாசுவான்னா எனக்கு பர்ஸ்ட் என் பொண்டாட்டி தான்…”
“வாரேவ்வா…” சங்கர் கேலி பேச,
“எங்களுக்கும் நேரம் காலம் எல்லாம் வந்துட்டே இருக்குது அத்தான். இன்னும் முழுசா ரெண்டு மாசம் இருக்குது. பார்த்துக்கறேன் உங்களை…” ஷ்ரவனும் சங்கரை கேலி பேச,
“அதை அப்போ பார்ப்போம். இப்போ நீ சொல்றது கன்பார்மா? அப்போ தான் மூவ் பண்ணுவேன்….”
“கண்டிப்பா அத்தான். கன்பார்ம் தான்…” என்று சொல்லவும்,
“ஓகே நான் என்னன்னு பார்க்கறேன்…” என்று சங்கர் சொல்லியதை போல இரு மாதங்களில் ஷ்ரவனுக்கு கோவைக்கு மாற்றுதல் வாங்கி தந்துவிட்டான்.
அதற்கு மறுவாரமே சங்கர் தேவகி திருமணம் நடந்து முடிய ஒரு பெரிய நிம்மதி குடும்பத்தினர் அனைவருக்கும்.
இந்த விஷயம் அனுசுயாவிற்கு தெரியப்படுத்தி திருமணத்திற்கு அவரை அமலா அழைக்க அவருக்கு இது அதிர்ச்சி.
“என்ன அந்த பொண்ணா? என் பொண்ணு போய் இன்னும் வருஷம் திரும்பலை. நீங்கல்லாம் நல்லா இருப்பீங்களா?…” என்று அமலாவிடம் ஆரம்பிக்க,
“ஒரு மரியாதைக்கு தான் உங்களுக்கு சொன்னோம். ஆதவ்க்கு ஒரு நல்ல அம்மாவா அபியை விட ஒரு அம்மாவா தேவகி இருப்பா. அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை….”
“அபியும் தேவகியும் ஒண்ணா? உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை அமலா….”
“கண்டிப்பா ஒண்ணில்லை தான். அனு கொஞ்சமாவது நீயாவது யோசி. அபியை மாதிரியே கண்ணை மூடிட்டு நீ நினைக்கிறது தான் சரின்னு பேசாத…” என்று அமலா சொல்லி சொல்லி ஒருவழியாய் அமைதியானாலும் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“என்ன சொல்லு, நான் இதுல தலையிடலை. ஆனா கல்யாணத்துக்கு நான் வரமாட்டேன். எனக்கு இஷ்டம் இல்லை…” என்று சொல்லிவிட அதன்பின்னர் யாரும் அவரை அழைக்கவேண்டும் என்று சொல்லவில்லை.
திருமணம் முடிந்த அன்று மாலை மீண்டும் அமலாவிற்கு போன் செய்தவர் புலம்பித்தள்ளினார்.
“என்னை யாரும் திரும்பவும் இன்வைட் செய்யலை, என் பேரனை பார்க்கனும்னு இருந்தேன். திரும்ப கூப்பிட்டிருந்தா வந்திருப்பேன்…” என சொல்ல,
“நீயா நினைச்சுட்டு இருந்தா யாரும் பொறுப்பில்லை. என்கிட்ட நீ அப்படி பேசினதால தான் நான் தான் அழைக்க வேண்டாம்னு சொன்னேன்…” என அமலாவும் பேசிவிட அனுசுயா ஒன்றும் சொல்லாமல் போனை வைத்துவிட்டார். நீலகண்டனிடம் அமலா நடந்ததை சொல்ல,
“அவ பத்தி தெரிஞ்சது தானே? அதெல்லாம் திருந்தாத ஆளு. விட்டுத்தள்ளு…” என்றுவிட்டார்.
அன்றிரவு சண்டங்கிற்கென சங்கர் வீட்டில் தயாராக இப்போது வரை தன்னை பார்க்காத தேவகியை எண்ணி உள்ளுக்குள் சற்று நடுக்கம் தான் அவனுக்கு.
எப்படி அவளை எதிர்கொள்வது என்ற யோசனையுடன் மாடியில் இங்குமங்கும் உலாத்த கீழே ஆதவ்வின் பலத்த சிரிப்பு கேட்க எட்டி பார்த்தான்.
கீழே ஷ்ரவன், வாசு, தேவகி, மற்றும் குடும்பத்தில் சிலர் என்று இருக்க ஆதவ் விளையாடிக்கொண்டு இருந்தான். மகனை தாண்டி இப்போது பார்வை தேவகியின் மேல் படிந்தது.
காலையில் திருமணத்தின் பொழுது கட்டியிருந்த அதே புடவை, அந்த அலங்காரம் என்று அவள் இருக்க பல வருடங்களுக்கு பின்னர் அசையாத பார்த்துக்கொண்டே இருந்தான்.
அபியுடனான திருமணத்தின் பின்பு அவளை பார்த்தால் அரை நொடிக்கும் குறைவான பார்வை தான். இல்லையென்றால் முடிந்தளவு அவளை பார்ப்பதையே தவிர்த்துவிடுவான். இப்போதோ பார்க்கவேண்டும் என்ற உந்துதலில் பார்க்க,
“அத்தான் கீழே வந்து நல்லா பார்க்கலாம்…” என்ற ஷ்ரவனின் கிண்டலில் தான் தன்னுணர்வு வந்தவன்,
“ஆதவ்வை கூப்பிடத்தான்…” என்று ஷ்ரவனை சமாளித்தவன்,
“ஆதவ் இங்க வா…” என அழைக்க,
“நோ ப்பா விளையாடனும்…” என மகன் வரவில்லை.
அவனை கைக்குள் அடக்கமுடியவில்லை இந்த இரண்டுநாட்களும். தேவகியின் வீட்டில் நன்றாக ஒட்டிக்கொண்டவனுக்கு அந்த கூட்டமும், உறவுகளும், கிண்டலும் சிரிப்பும் அப்படி பிடித்திருந்தது.
கெட்டிமேளம் கொட்ட தாலியை எடுத்து கட்டவும் அந்த சத்தத்தில் சங்கரின் மடியில் இருந்த ஆதவ் எழுந்து ஆட ஷ்ரவனும் அவனை ஊக்குவித்து விசிலடிக்க என அவ்விடமே களைகட்டியது.
“என் மகனுக்கு குத்து டான்ஸ் சொல்லிக்குடுத்தது உன் வேலையாடா?…” என்று ஷ்ரவனை பார்க்க அவனோ ஆதவ்வை பார்த்து கண்ணடித்து ஹைபை குடுத்துக்கொண்டான் ஷ்ரவன்.
இங்கும் வந்ததில் இருந்து ஆதவ் விளையாடி விளையாடியே களைத்தாலும் அந்த களைப்பு கொஞ்சமும் தெரியாமல் சுற்றி வந்தான் பிள்ளை.
இரவு உணவு முடிந்ததும் பெரியவர்கள் அனைவரையும் தங்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்த ஷ்ரவன் தானும் வாசுவும், ஆதவ்வுடன் அங்கே இருந்துகொண்டனர்.
“வாசு நேரமாச்சு…” என ஷ்ரவன் மணியை பார்த்து சொல்ல அவன் சொல்ல வருவதை பார்த்த தேவகி,
“ஆதவ்…” என்றதும்,
“ம்மா…” என ஷ்ரவனின் அருகில் அமர்ந்து போன் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை ஓடி சென்று தேவகியிடம் நின்றது.
“நீ போய் தூங்கு மல்லி. டேப்லட் போட்டுட்டியா?…” என்று கேட்க,
“நான் போட்டாச்சு மதினி. ஆதவ் எங்களோட இருக்கட்டும். நீங்க போங்க. மேல தான் அண்ணே ரூம் இருக்கு…” என சொல்ல,
“நான் வந்ததே ஆதவ்க்காக. அவனை நீ பார்த்துக்கறன்னா நான் எதுக்கு இங்க?…” என்றாள் தேவகி.
வாசமல்லியால் பதில் சொல்லமுடியாமல் போக ஷ்ரவனை பார்த்தாள். அவனும் அங்கிருக்கமுடியாமல் தண்ணீர் குடிப்பதை போல எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.
“மதினி…”
“எல்லாம் தெரியும். நீ போய் தூங்கு…” என்றவள்,
“ஆதவ், நீ அம்மாக்கூட தூங்கறியா? உன் அத்தை கூடவா?…” என கேட்க இருவரையும் மாறி மாறி பார்த்தவன் வாசுவின் முகத்தில் இருந்த கெஞ்சல் பாவனையில் ஓடிவந்து அவளை கட்டி கன்னத்தில் முத்தமிட்டவன்,
“அம்மா கூட…” என்றான் அவளிடத்தில் இருந்துகொண்டே.
“விவரம்டா நீ. முத்தம் குடுத்து என்கிட்டையே அம்மாட்டன்னு சொல்ற…” என வாசு சிரிக்க,
“ஓகே, இப்ப நீ போய் படு…” என தேவகி சொல்லிவிட்டு ஆதவ்வுடன் கை பிடித்து மாடிக்கு சென்றாள்.
“என்னத்தான் இப்படி ஆகிடுச்சு?…” என ஷ்ரவனை தேடி வந்து சொல்ல,
“ஓகே, அவங்களுக்கும் டைம் வேணும்ல. ஒண்ணா ஒரே ரூம்ல இருக்காங்களே அதுவே போதும்…”
“இருந்தா மட்டும்?…” என்றவள் பேச ஆரம்பிக்கும் முன் அவளை தள்ளிக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தவன்,
“இப்ப அதை பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். ஒரு நல்ல மூவி கொண்டு வந்திருக்கேன். பார்ப்போம்…” என சொல்லி டிவியை ஆன் செய்து படத்தை போட பத்து நிமிடத்தில் தூக்கத்திற்கு சொக்கிய வாசு அங்கயே உறங்க ஆரம்பித்துவிட்டாள்.
“உன்னோட இப்ப வரைக்கும் ஒரு முழு படம் பார்க்க முடியுதா?…” என்று சிரித்துக்கொண்டே அவளின் கை கால்களை நன்றாக இழுத்து வாகாய் படுக்கவைத்து பெட்ஷீட்டை போர்த்திவிட்டவன் இன்னொரு பக்கத்தில் தானும் படுத்துவிட்டான்.
அறைக்குள் நுழைந்த தேவகியோ சங்கர் என்று ஒருவன் இருப்பதை போல கண்டுகொள்ளாமல் அந்த அறையின் உலகத்தில் தானும் ஆதவ்வும் மட்டுமே இருப்பதை போல எண்ணிக்கொண்டு நடந்தாள்.
ஆதவ்வுடன் வந்து அவனுக்கு உடை எங்கிருக்கிறது என கேட்டு எடுத்து தர அவனே சென்று உடை மாற்றி வந்தான். அதற்குள் தனக்கும் உடையை எடுத்துகொண்டவள் தானும் போய் மாற்றிவிட்டு வந்து ஆதவ்வை நடுவில் படுக்கவைத்து மெல்லிய குரலில் அவனிடம் பேசிக்கொண்டே உறங்கி போனாள்.
அவள் வந்ததில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் முதலில் தேவகியிடம் பேசவேண்டும் என்று தான் நினைத்திருந்தான். ஆனால் இப்படி அவள் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்க குற்றவுணர்வு மறைந்து இப்போது எரிச்சல் மண்டியது.
‘மனுஷன் ஒருத்தன் இங்க இருக்கேன்னு ஒரு நினைப்பாவது இருக்குதா?’ என்று நினைத்த நொடி மனதினுள் அபியுடன் தான் வாழ்ந்த வாழ்க்கை. ‘இப்போது மட்டும் எதற்கு உனக்கு இந்த எதிர்பார்ப்பு? இதுதான் உன் விதி’ என எள்ளி நகையாடியது அவனின் மனது.
ஒரு பெருமூச்சுடன் கீழே விரித்து படுக்க நினைத்தவன் பின் மனதை மாற்றிக்கொண்டு கட்டிலில் மறுபக்கம் படுத்தான்.
தேவகி உறங்குவதை போல அசையாமல் படுத்திருந்தாலும் மனதில் அப்படி ஒரு வலியும் வேதனையும் கத்தியை கொண்டு இதயத்தை கிழிக்க உதட்டை கடித்தபடி படுத்திருந்தாள்.
இருவருக்குமே உறங்கா இரவாக போனாலும் அதை ஒருவரிடத்தில் ஒருவர் காட்டிக்கொள்ள முயலவில்லை.
மறுநாள் காலை அனைவரும் வந்துவிட்டாலும் இருவரின் முகத்தை கொண்டும் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. வாசு தான் தேவகியின் பின்னாலே சுற்றிக்கொண்டு வந்தாள்.