“கூப்பிட தானே செஞ்சாங்க. உடனே கிளம்பிடுவியா?…” என அவளை முறைத்தவன் சங்கருக்கு போன் போட முதலில் அடுக்காமல் இரண்டாவது அழைப்பில் எரிச்சலுடன் போனை எடுத்தான்.
“என்னடா?…” என கேட்க,
“சும்மா அத்தான். மாடிக்கு போனவங்க இன்னும் வரலையேன்னு…”
“இப்ப வரமுடியாது. எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பு…” என்று சொல்லி போனை வைத்துவிட அவன் பேசிக்கொண்டிருந்த நேரம் தேவகி நழுவ பார்க்க,
“எங்க ஓடற?…” என அவளை அணைத்தவன் இடையில் விட்டதை தொடங்க,
“ஒரே நாள்ல ஹீரோ ஆக ட்ரை பண்ணாதீங்க. அரைக்கிழவன் அரைக்கிழவன் தான்…”
“சொல்லிட்டு போ. எனக்கொரு நஷ்டமும் இல்லை…” என்றவனின் உல்லாச சிரிப்பில் அவனின் முகத்தில் தெரிந்த நிறைவான மகிழ்ச்சியில் மனம் ஒன்றினாள் தேவகி.
அபர்னிதாவை திருமணம் முடிந்து ஒரு நாள் கூட அவனின் முகத்தில் இந்த மகிழ்ச்சியை, ஒரு நிம்மதியை அவள் கண்டதில்லை. தங்களுக்குள் எத்தனை நடந்திருந்தாலும் இப்போது அந்த இழப்புகள் எல்லாம் மீட்கப்பட போவதில்லை.
ஆனாலும் இத்தனை காலம் கழித்து விரும்பிய வாழ்க்கை கிடைத்திருக்க அதனை முழுமனதுடன் வாழ நினைத்தனர்.
——————————————–
பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வழிய ஊர் பெண்களின் குலவை சத்தத்தில் காது கிழிந்தது.
அனைவரும் வாசமல்லியின் ஊருக்கு திருவிழாவிற்கு வந்திருந்தனர். பிள்ளைகளின் நிறைவான வாழ்க்கை பெற்றோர்களின் மனதை குளிர்வித்திருக்க ஒவ்வொரு திருவிழாவிற்கும் தெய்வத்திற்கு வேண்டுதலை நிறைவேற்ற தவறுவதில்லை அவர்கள்.
அனுசுயாவின் தலையீடு அவ்வப்போது இருந்தாலும் இப்பொதெல்லாம வந்தால் பார்த்துவிட்டு அமைதியாக சென்றுவிடுகிறார்.
தேவையில்லாத வார்த்தை வரக்கூடாது என்று ஷ்ரவன் சொல்லியிருக்க சங்கரும் அவனை போலவே எச்சரித்திருந்தான். அதனால் அவரும் அடக்கி வாசித்தார்.
“அரிசியை போடும்மா…” என சித்ரா தேவகியிடம் சொல்லிக்கொண்டிருக்க குடும்பம் மொத்தமும் அங்கே தான் குழுமி இருந்தனர் வாசமல்லியையும், மகள் தாமரையையும் தவிர்த்து.
“அத்தான் வாசு எங்க போனா?…” என ஷ்ரவன் கேட்க,
“என்னை கேட்டா? நான் பொங்கல் வைக்கிறதை பார்த்திட்டு இருக்கேன்…” என்று சொல்லிய சங்கர் தோளில் அன்று காலை மொட்டையிட்டு காது குத்தியிருந்த தனது இரண்டாவது மகன் தருணின் தேம்பலை தட்டிக்கொடுத்து சமாதானம் செய்துகொண்டு இருந்தான்.
மொட்டை போட்டிருக்க தலையை தடவியபடியே பார்த்து பார்த்து கையை விரித்து மழலையில் முடி இல்லை என்பதை சொல்ல தெரியாமல் கேட்டு அழ அவனை மாறி மாறி சமாதானம் செய்துகொண்டு இருந்தனர்.
ஆதவ் தன் தலையிலும் முடி இல்லை என்று அவனுக்கு மொட்டை எடுத்திருப்பதையும் காண்பித்து தம்பிக்கு விளையாட்டு காட்ட அதையும் பார்த்து பார்த்து சங்கரின் முகத்தை பார்த்து அழுதது குழந்தை.
“ஆதவ் கூட இத்தனை படுத்தலடா என்னை. அப்படியே அம்மாவை மாதிரி பிறந்திருக்க….” என மகனை பார்த்து சொல்ல தன்னை திட்டுகிறானோ என்று ஒருநொடி அழுகையை நிறுத்தி தகப்பனின் முகத்தை முறைத்துவிட்டு மீண்டும் உதட்டை பிதுக்க,
“அப்பா ஆதவ் இல்லையா?…” என ஆதவ் கேட்க,
“ஆதவ் அப்பா மாதிரி…” என அவனின் கன்னம் வருடி சொல்ல ஆதவ் கை தட்டியதில் தருண் அவனிடம் தாவ சென்றான்.
“விழுந்துடுவடா…” என்று இருவரையும் பார்த்துக்கொண்டு அங்கே அமர்ந்துவிட்டான் சங்கர்.
மனைவியை தேடி வந்த ஷ்ரவன் அவள் கடைத்தெருவில் மகளுடன் ஐஸ் வண்டியின் முன்பு நின்றுகொண்டிருக்க வேகமாய் அவளை நோக்கி சென்றான்.
“இங்க என்ன பன்ற?…” என கேட்க,
“பாக்கெட் ஐஸ் வாங்க வந்தேன் அத்தான். அந்த வண்டில இல்லை. அதான் இவர்ட்ட வந்தேன். அப்படியே பாப்பாவுக்கும் விளையாட்டு காட்ட…” என சொல்ல,
“ஒன்னும் வேண்டாம். சளி புடிக்கும்…”
“அதெல்லாம் புடிக்காது எனக்கு. சும்மா இருங்கத்தான். இன்னைக்கு ஒரு நாள் தானே?…” என சொல்ல,
“வாசு அத்தான் சொன்னா கேட்கமாட்டியா நீ?…” என நிற்க,
“கேட்பேனே. எத்தனை விஷயம் யாருக்கும் சொல்ல கூடாதுன்னு சொல்லிருக்கீங்க. ரகசியமா வச்சிருக்கேன்ல. நான் உங்க பேச்சை கேட்காமலா இருக்கேன்…” என மெதுவாய் அதை அவனின் அவள் சொல்ல சிரிப்போடு கேட்டுக்கொண்டே நின்றவன் தங்களை அனைவரும் பார்ப்பதை கண்டு சுதாரித்து,
“எல்லாம் வேடிக்கை பார்க்கறாங்கடி. வா போகலாம்…” என்று கையை பிடிக்க,
“அத்தான்…” என்றவளின் எந்த கொஞ்சல், கெஞ்சலுக்கும் அவன் மசியவில்லை.
“போதும் வாசு. இந்த கொஞ்சலை வீட்டுக்கு வந்து வச்சுக்கோ. போலீஸ்க்காரன் பொண்டாட்டி மாதிரி நட வாசு…”
“அப்படி நடந்தா அசிங்கமா இருக்காது? விரப்பா கைய கால பொம்மை மாதிரி தூக்கிட்டு ஒத்த ஒத்த எட்டா எட்டுவச்சு நடந்து என்னைக்கி சோறாக்கி குடும்பம் நடத்த? அதுக்கு நீங்கதான் சரி. நான்லாம் வேலைக்காவமாட்டேன் த்தான்…” என சொல்லிவிட்டு நடக்க ‘ங்கே’ என்று விழித்தான் ஷ்ரவன்.
“நான் சொன்னதுக்கும் இவ சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்? நடக்கறதுக்கும் குடும்பம் நடத்தவும் கம்பேர் பன்றா. எப்ப பார்த்தலும் இவகிட்ட மொக்கை வாங்கிட்டே இருக்கேன்…” என புலம்பிக்கொண்டே மனைவியின் பின்னால் ஓடினான்.
பூஜை முடிந்து அனைவரும் வீடு வந்து சேர அன்று இரவே அனைவரும் அவரவர் ஊர்களுக்கு கிளம்ப ஷ்ரவன் வாசமல்லி, குழந்தையுடன் ஊட்டி கிளம்பினான். அவன் கிளம்பும் முன்,
“இதுக்குத்தான் கூட ரெண்டு நாள் லீவ் போட்டியா நீ?…” என சங்கர் பார்க்க,
“கத்துக்கோங்க அத்தான். நீங்க சரியில்லை…” என தேவகியை பார்த்தபடி மாட்டிவிட,
“ஏன்டா கோர்த்துவிடற?…” என்றபடி சங்கர் மனைவியை பார்க்க,
“அரைக்கிழவன்னு சொல்றது சரி தானே?…” என அவனின் காதில் முணுமுணுத்துவிட்டு தேவகி செல்ல,
“போச்சு…” என்ற சங்கரின் அலறலில்,
“அத்தான் பனிஷ்மென்ட் திரும்பவும். இந்த தடவை வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை தான். போங்க போங்க…” என்று சிரித்தபடி அவர்களை வழியனுப்பிவிட்டு மனைவியுடன் தனது ஆஸ்தான இருப்பிடமான ஊட்டிக்கு கிளம்பினான்.
அங்கிருந்து இடமாற்றல் வாங்கி வந்தாலும் நினைத்த நேரமெல்லாம் அவன் வாசமல்லியை அழைத்துக்கொண்டு செல்வது என்னவோ ஊட்டிக்கு தான்.
நாதனிடம் சொல்லி அங்கே குறைந்த விலையில் சின்னதாய் ஒரு வீட்டை வாங்கியிருந்தான். ஒரு படுக்கை அறை, ஹால், கிட்சன் என்று அளவான வீடு. சுற்றி கொஞ்சம் இடமும் இருக்க அதுவே அவனுக்கு மிகப்பெரிய நிறைவு.
ஜீப்பை கொண்டுவந்து நிறுத்தியவன் உறங்கிக்கொண்டிருந்த மகளை தூக்கிக்கொண்டு வாசமல்லிக்கு கை கொடுத்தான்.
“எனக்கு இறங்கவே தெரியாதாக்கும்?…” என்றவள் கால் லேசாய் மழை ஈரத்தில் வழுக்க,
“வாய் வாய். ஏன் எதுக்கு செய்யறேன்னு யோசிக்கறதே இல்ல…” என்று சொல்லியபடி அவளை கை பிடித்து வாசல் வரை கூட்டிக்கொண்டு வந்தவன் சாவியை கொண்டு வீட்டை திறந்தான்.
“வாசு கோயிங் ஆன்…” என்று சிரிக்க,
“நான் பண்ணமாட்டேன். போங்க…” என முறுக்கிக்கொண்டாள் அவள். தானே விளக்குகளை போட்டுவிட்டு உள்ளே சென்றவன்,
“வாசு இங்க வந்து பெட்க்கு கவர் மாத்து. பாப்பாவை படுக்க வைக்க…” என்றதும் கதவை பூட்டியவள் அந்த அறையை கூட்டிவிட்டு படுக்கை விரிப்பை மாற்றிவிட அதற்குள் பாத்ரூமில் ஹீட்டரை போட்டுவிட்டவன் மகளை படுக்கவைத்துவிட்டு சென்று முகம் கழுவி உடை மாற்றி வந்தான்.
“அத்தான், சாப்பாட்டை சூடு பன்றேன். சாப்பிடுவோம்….” என்று ஊரில் இருந்து கொண்டு வந்த உணவுகளை சுட்டு செய்தவள் சூடாக சாதம் மட்டும் வைத்துக்கொண்டாள்.
அதற்குள் ஷ்ரவன் வீட்டை முழுவதும் சுத்தம் செய்து முடித்திருக்க இருவருமாய் சாப்பிட்டு முடித்தனர். நாதனின் சத்தம் கேட்க வெளியே வந்தவன் அவரிடம் பேசிவிட்டு அவர் தந்ததை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தான்.
சாப்பிட்டு முடித்ததை எல்லாம் எடுத்து வைத்து ஒழுங்கு படுத்தியவள் பாத்திரங்களை காலையில் தேய்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள்.
மிச்சம் இருந்த குழம்பு, வறுவல் அனைத்தையும் மீண்டும் சுட வைத்து மூடிபோட்டுவிட்டு அடுப்பை துடைத்துக்கொண்டு இருக்க பின்னால் இருந்து அணைத்தான் ஷ்ரவன்.
“அத்தான் விடுங்க. வேலையை முடிச்சுட்டு வரேன்…” என்று சொல்ல,
“முதல்ல இதை பாரு…” என அவளின் கையில் திணித்துவிட்டு அடுப்பை ஆன் செய்து அவளுக்கு குடிக்க வெந்நீர் வைத்தான்.
“ஐஸ்க்ரீமா?…” என அதை பார்த்ததும் முகம் சுருக்க,
“என்னடி சந்தோஷப்படுவன்னு பார்த்தா முகத்தை திருப்பற? உனக்காக வரவழைச்சேன்…”
“எதுக்கு?…”
“கோவில்ல அந்த ஐஸ் சாப்பிட முடியலன்னு மூஞ்சிய தூக்கி வச்சியேன்னு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்தா?…”
“இப்ப மட்டும் சளி புடிக்காதோ? போங்கத்தான். கோவம் தான்…” என்று சொன்னாலும் அதை பிரித்து சாப்பிட தானும் அவளோடு சேர்ந்தே அதில் பங்குக்கு சென்றான்.
“இப்போ ஓகே தானே?…” என அவன் கேட்க,
“ஆனாலும் அந்த டேஸ்ட் வருமா?…” என்றாள் அவள்.
“டேஸ்ட் தானே நான் ஹெல்ப் பன்றேன்…” என்றவளின் இதழில் முத்தமிட அவனை தள்ளியவள்,
“சளி புடிக்கும்ன்னு சொல்லி அதை சாப்பிடவிடாம செஞ்சுட்டு இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை…”
“அதுக்குத்தான் வெந்நீர் வைக்கறேன். ஜில்லுன்னு சாப்பிட்டு சூடா குடிச்சா ஒன்னும் ஆகாது…” என்று ஐஸ்க்ரீமோடு அவளின் மூக்கில் முத்தமிட,
“அத்தான் ஐஸ்க்ரீம் மூக்குத்தில ஒட்டிக்கும். பிசிபிசுன்னு…” என்று அதை துடைத்தாள்.
“ஒட்டிக்கட்டும்…” என முகமெல்லாம் முத்தம் வைக்க,
“கோவமா இருக்கேன்னு சொல்றேன். திரும்ப திரும்ப பன்றீங்க…” என துள்ள,
“அவ்வளவு கோவம்னா ஏன் இதை சாப்பிடற?…” என்று சிரிக்க,
“உங்களுக்கு துணைக்கு தான். இல்லன்னா அழுவீங்க நீங்க…” என்றாள் அவளும் சிரிப்போடு.
“நான் என்ன அழவா செஞ்சேன்? அப்படியே அழுதா உனக்கென்னடி?…” என,
“யூ க்ரை அத்தான், ஐ க்ரை. நம்ம க்ரை பார்த்து பாப்பா க்ரை. ஆல் க்ரை…” என அவள் அவிழ்த்து விட,
“ஆத்தாடி ஆத்தா. அழுகையே அழுதுடும். போதும்டி…” என சிரிப்போடு அவளை கட்டிக்கொண்டவன்,
“ரொம்ப இன்னேசென்ட் வாசு…” என மூக்கோடு உரசினான் மனைவியை.
“கூசுது அத்தான்…” என்று தள்ளியவள்,
“அந்த சென்ட் மணக்குமா?…” என கேட்க,
“ஹ்ம்ம், இன்னும் கிட்ட வா. பார்த்து சொல்றேன்…” என்று அவளை தனக்குள் ஆழமாய் புதைத்தவன் அவளை ஆழந்து வாசம்பிடித்து,
“உன்னளவுக்கு எந்த சென்ட்டும் வாசம் குடுக்காதுடி வாசமல்லி…” என்றான் கிறங்கிய குரலில்.
“அத்தான் கழுத்துலையே தூங்கிட்டீங்களா?…” என ரகசியம் போல கேட்க அவளின் குரலில் சிரிப்பு பொங்க,
“இன்னைக்கு உனக்கும், எனக்கும் தூக்கமில்லை….” என்று சொல்லி அவளை கைகளால் அளந்தான்.
“அப்ப இருங்க பாப்பாவையும் எழுப்பறேன். கேம் விளையாடலாம்…” என்று குறும்புடன் அவள் சொல்ல,
“வர வர நீ என்னை கலாய்க்க ஆரம்பிச்சிட்ட வாசு…” என சொல்ல உள்ளே மகள் சிணுங்கும் குரலில் இருவருமே ஓடினர்.
பாதி உறக்கத்தில் இருந்து முழித்திருந்த குழந்தை தாயின் அணைப்பில் மீண்டும் உறங்க ஆரம்பிக்க,
“வாயை வச்சிட்டு இருக்கியா நீ? பாரு பாப்பா முழிச்சுட்டா…” என அவளின் தலையில் குட்ட,
“எல்லாம் நான் சொன்னதால தான் நடக்குதாக்கும்?…” என அவள் சிணுங்க,
“உனக்கு குளிருதா வாசு?…” என்றான் பேச்சை மாற்றி.
“ஒன்னும் இல்லை. இப்போ குளிர் பழகிருச்சு…” என தன்னை நெருங்கிய அவனை தள்ள அவன் அவளோடு விளையாட என இருவரின் விளையாட்டில் குழந்தை நன்றாக விழித்துவிட்டது. இருவரையும் மாறி மாறி பார்க்க,
“வாசு அசையாத. சிரிக்காத. அப்பத்தான் பாப்பா தூங்குவா…” என கிசுகிசுப்பாய் சொல்ல,
“அதெல்லாம் தூங்கிருவா அத்தான்…” என்றவள் மகளை பார்த்து சிரிக்கவும் வாசுவின் மடியில் இருந்து உருண்டு எழுந்து அமர்ந்துகொண்டு பளீர் என்று சிரித்தது குழந்தை.
“அத்தான் இன்னைக்கு நிஜமாவே தூங்கமாட்டோம் தான்…” என்று வாசமல்லி சொல்லி சிரிக்க அவளை முறைக்க முயன்று தோற்றவன் சிரிப்போடு இருவரின் நடுவில் அமர்ந்து அணைத்துக்கொண்டான்.
“சோ ஸ்வீட் மை ப்யூட்டிஃபுல் பிளவர்ஸ்…” என்றவன் இருவருக்கும் ஆத்மார்த்தமாக முத்தம் பதித்தான்.
வாழ்க்கையின் வெற்றி அது தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்ல அமைவதை சிறப்பாக மாற்றிக்கொள்ளும் நிதானமும், புத்திசாலித்தனமும் இருந்தாலே அத்தனை பேரின் வாழ்வும் சந்தோஷ பிருந்தாவனம் தான்.
தன் வாழ்க்கையை அழகாக்கிய இரு பெண் பூக்களையும் அதன் வாசம் மாறாமல் காத்து இன்னும் தாங்கியபடி வாழ்க்கையில் இன்னும் பல படிகளை தாண்டி ஜெயித்துக்கொண்டே இருந்தான் ஷ்ரவன்.
நிறைவுற்றது