பூ – 8
அவர்கள் ஊட்டிக்கு வந்து ஒரு வாரம் ஆகிற்று. அந்த வாரம் முழுவதும் வீட்டை அத்தனை தீட்டு தீட்டினாள் வாசமல்லி. ஒவ்வொன்றையும் எடுத்து சுத்தம் செய்து அமைப்பு செய்யவே அந்த வாரம் பிடித்தது.
காலை ஷ்ரவன் காவல்நிலையத்திற்கு சென்றதும் மெதுவாய் வேலைகளை தொடங்குபவள் கொஞ்சம் கொஞ்சமாய் அடுக்கி அமைத்து முடிக்க ஊரிலிருந்து வருகிறோம் என்று அழைப்பு.
முதலிலேயே நீலகண்டன் வருவதாய் சொல்லி ஷ்ரவனுக்கு அழைக்க அவனோ இன்னும் ஒருவாரம் சென்று வருமாறு சொல்லிவிட்டான்.
இந்த வாரம் முழுவதும் வாசமல்லி பார்த்த வேலைகள் அப்படி இருக்க அவள் சற்று ஓய்வெடுக்கட்டும் என்று நினைத்து அவன் சொல்லிவிட அமலா வாசமல்லியிடம் பேச அவள் உடனே கிளம்பி வருமாறு சொல்லிவிட்டாள்.
“நீ அடங்கவே மாட்டியா? எதுக்கு வர சொல்லி அம்மாட்ட பேசின நீ? நான் தான இன்னும் ஒருவாரம் கழிச்சு வாங்கன்னு சொல்லிருந்தேனே?…”
“அது எனக்கு தெரியாதே அத்தான். நீங்க என்கிட்டே சொல்லவே இல்ல…” என்றவளிடம்,
“இன்னும் இங்கயே ஒன்னும் செட்டாகலை. இதுல ப்ச்…” என்று தலையை பிடிக்க,
“என்ன செட்டு? யாருக்கு செட்டு?…” என கேள்வியை கேட்டவளிடம்,
“சேவிங் செட்டு. போடி அங்கிட்டு…” என்று கடுப்படித்தான் ஷ்ரவன்.
இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் ஏதோ ஒருவகையில் சிறு புரிதல் உண்டாக்கிக்கொண்டு இருக்க இப்போது அவர்களின் வரவு, அதிலும் மழை நேரம் இங்கே அவர்களுக்கு ஒத்துக்கொள்ளுமோ என்னவோ என்ற யோசனை வேறு.
“எல்லாரும் வாராங்க. அண்ணன்னுக்கும் சொல்லுங்க. இல்லனா வருத்தப்படும்ல…” என்று சங்கரை அழைக்க வேறு அவனிடம் வாசமல்லி பேச ஒரு முறைப்போடு அவனுக்கு அழைப்பு விடுத்தான் ஷ்ரவன்.
வாசுவின் குடும்பமும், ஷ்ரவனின் குடும்பமும் சேர்ந்து கிளம்ப சங்கர் இப்போது முடியாதென்று மறுத்துவிட்டான். இன்னொருமுறை குடும்பமாக வருவதாக சொல்லிவிட அவனின் பேச்சில் அபர்னிதா நிற்பாளா?
வழக்கம் போலவே பின்னிருந்து காய் நகர்த்தினாள். அமலா, நீலகண்டன் மூலம் பேசவைத்துவிட,
“நாங்க அபியையும், பேரனையும் கூட்டிட்டு போய்ட்டு வரோம் சங்கர். அங்க மருமகளுக்கும் ஒத்தாசையா பேச்சுக்கு இருக்கும்ல. அபி வரட்டும்…” என்று சொல்ல சங்கரால் ஒன்றும் சொல்லமுடியாத நிலை.
அபர்னிதாவிடம் எதுவும் பேசவில்லை அவன் ஷ்ரவனுக்கு அழைத்து அபர்னிதா மட்டும் வருவதை சொல்லியவன்,
“பார்த்துக்கோ ஷ்ரவா…” என்று மட்டும் சொல்ல ஓரளவு புரிந்ததை போல சரி என்றான் அவன்.
பேசியபடி அந்த வாரம் வெள்ளி மாலையே வந்து சேர்ந்தனர் அனைவரும். வந்ததில் இருந்து அவனால் வாசமல்லியிடம் சுத்தமாய் பேச முடிவதில்லை. வேலை வேலை என்று அது வேறு கழுத்தை பிடிக்க போதாததிற்கு இரவு உறக்கத்தையும் அபர்னிதா பொதுவாய் சொல்லிவிட்டாள்.
“ஷ்ரவா அப்பாவுக்கு கீழே மெத்தை போட்டு படுத்தாலும் எழுந்துக்க சிரமம். அதனால அவங்க உன் ரூம்ல படுத்துக்கட்டும். அமலாம்மாவும் அங்கயே படுக்கட்டும். ஆதவ்க்கு கீழே படுத்து பழக்கம் இல்லை. அதனால நானும் வாசுவும் இந்த ரூம்ல பெட்ல படுத்துக்கறோம்…” என்று சொல்ல,
“அப்போ அத்தையும் மாமாவும் எங்க தூங்குவாங்கலாம்?…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
“அதெல்லாம் வேண்டாம்மா, நாங்க இங்கயே படுத்துப்போம். அதான் இம்புட்டு இடமிருக்குல…” என்று வாசுவின் அப்பா சொல்ல,
“நாங்களும் ஹால்ல படுத்துக்குவோம். ஷ்ரவா நீயும் வாசுவும் உள்ள தூங்குங்க. அம்மா அபி கூட அங்க போய் படுக்கட்டும்…” என்று நீலகண்டன் சொல்ல,
“என்னடா ஷ்ரவா நீ? நீ அமைதியா இருக்கன்னு தான் உன் ரூம்ல தூங்க சங்கடப்படறாங்க. இது உன் வீடுடா, நீ தான சொல்லனும்…” என்று அபி பேச,
“அத்தான் மதினி சொல்றது தான் சரி. நானும் அவங்களும் ஆதவ் கூட படுத்துக்கறோம்…” என்று வாசு சொல்ல அதற்கு மேலும் மறுக்கவும் முடியாமல் வேறு எதுவும் பேசவும் முடியாமல் பார்த்த ஷ்ரவன்,
“”எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை. அபி சொன்ன மாதிரியே அப்பா என்னோட தூங்கட்டும்…” என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
“ஷ்ரவா ஹால் குளிரும்ல. அத்தையும் மாமாவும் எங்களோட அந்த ரூம்ல படுத்துக்கட்டும். மேல இருக்கற பெட்டை இறக்கி தா…” என அவனை அழைக்க,
“வாசு, வா பெட் எடுத்து தாரேன்…” என்று மனைவியை அழைத்தான்.
“அவ எதுக்குடா? அப்பா குடிக்க சூடா வென்னீர் வேணும்னு கேட்டாங்க. நான் வரேன். அவ அதை பார்க்கட்டும்…” என்று அவள் எழுந்துவர பெரியவர்களும் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
ஆனாலும் அபர்னிதாவை அப்படி பெருமையாக பேசினார்கள் இருவீட்டு பெரியவர்களும்.
“என்ன சொல்லுங்க அபிக்கு படிச்சு, பெரிய இடத்து பொண்ணுன்னு கொஞ்சமும் பகட்டு இல்ல. எப்படி புரிஞ்சு நடந்துக்குது. இப்படி ஒரு பொண்ணு கிடைக்க சங்கர் குடுத்து வச்சிருக்கனும்…” என சித்ரா சொல்லி,
“உங்க மதினி பண்ணின ஒரே நல்ல காரியம் அபி மாதிரி ஒருத்திய சங்கருக்கு கட்டி வச்சது தான். அவங்கள மாதிரி ஒரு குணசாலியா பாக்காம விட்டாங்களே. இந்த பொண்ணுக்குத்தான் எம்புட்டு அனுசரண…” என புகழ்ந்து தள்ளிவிட நீலகண்டனுக்கு பெருமை பிடிபடவில்லை.
தான் பார்த்து அமைத்து தந்த சம்பந்தம், தங்களின் பெண்ணையே வாழ்த்தியதை போல அப்படி மகிழ்ந்து போனார்.
ஷ்ரவனுக்கு தான் அத்தனை கோபம். வாசமல்லி என்றைக்கும் போல அவர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு சுற்றி வந்தாள்.
மறுநாள் காலை எழுந்து அவன் கிளம்பும் போது அவளை அழைக்க அழைக்க வாசுவை அபி இங்குமங்கும் விடவில்லை.
“அவர் கூப்பிட்டுட்டே இருக்காருல மல்லி. நீ கிளம்பற வரைக்கும் கூட இருந்து அனுப்பிட்டு இந்த வேலைய பாரேன்…” என்று சித்ரா சொல்ல,
“அத்தை இங்க அவ பார்க்கட்டும். அவன் இத்தனை நாள் தனிய அதான எல்லாம் மேனேஜ் பண்ணான்…” என்று அபி சொல்ல,
“இல்லம்மா, அவ போகட்டும்…” என்றுவிட்டார் சித்ரா அழுத்தமாய்.
“இன்னுமா இங்க நிக்கற மல்லி? பொண்ணு சொல்றேன்ல. முதல் புருஷன் தான் முக்கியம். அவரை கவனி. அதுக்கப்பறம் நாங்க எங்க போக போறோம்? போ போ…” என்று மகளை அனுப்பியவர் அபியின் புறம் திரும்பி,
“இதெல்லாம் நீயே சொல்லனும் அபி. உனக்கு தெரியாதா? புதுசா கல்யாணம் ஆனவங்க. நேத்தே மாப்பிள்ளை முகம் ஒரு மாதிரி ஆகிடுச்சு. நீயும் சொல்லவும் பெருசா நாங்க சொல்ல முடியலை. அவ எந்திச்சதுல இருந்து அவரை பாக்கவே இல்லை…” என்று சொல்லியவரை இடைமறித்த அபி,
“ஐயோ அத்தை நான் வாசுவை அனுப்பக்கூடாதுன்னு நினைக்கலை. ஷ்ரவன் அவ சமையலை விரும்பி சாப்பிடறான். நேத்து கூட பார்த்தேனே. அதான் அவளே செய்யட்டும்னு விட்டேன். அவ செய்யும் போது நாம ஏதாவது சொதப்பி. அதுக்குத்தான். நீங்க தப்பா நினைக்காதீங்க…” என்று சொல்ல,
“ஐயோ, உன்னை போய் தப்பா நினைப்பேனா? எனக்கு தெரியாதா உன்னை பத்தி? ஆனா இது சாப்பாடு விஷயம் இல்லை அபி. சாப்பாடும் இதுவும் ஒண்ணாம்மா? சரி சரி நாம கவனிப்போம்…” என்று சொல்ல அபர்னிதாவுக்கு கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு நின்றாள்.
“சொல்லுங்க அத்தான்…” என வந்து நின்ற மனைவியின் கையில் இருந்த சட்னியை பார்த்தவன்,
“என்ன பண்ணிட்டிருந்த இவ்வளவு நேரமும்?…” என்று முறைத்தான்.
“தக்காளி சட்னி அரைச்சுட்டு இருந்தேன். நீங்க கிளம்புவீங்க தானே? அதான் செய்யறேன். என்னத்தான்?…” என்றவளை கையை பிடித்து தன்னருகே நிறுத்தியவன்,
“எதுக்கு கூப்ட்டேன்னு மறந்துட்டேன். ஞாபகம் வரும் போது சொல்றேன். அதுவரைக்கும் நில்லு…” என்று சொல்ல,
“ஹ்ம்ம்…” என்று தலையசைக்க,
“நைட் எப்போ தூங்கின?…” என்றான் சிவந்திருந்த அவளின் கண்களை பார்த்து.
“படுத்ததும் தூங்கிட்டேன். ஏன்?…” என்று சொல்ல சப்பென்று அவளின் வாயில் அடித்தவன்,
“பொய் சொல்லாத வாசு…” என்று இன்னொரு அடி வைக்க,
“வலிக்குது அத்தான்…” என அவனின் கையை பிடித்தாள்.
“நைட்டெல்லாம் பேசிட்டு இருந்தியா? தூங்காம?…”
“ஹ்ம்ம், மதினியோட பேசிட்டு இருந்தேன்…” என்றாள் உள்ளடங்கிய குரலில்.
“என்ன பேசின?…” என்றதும் திருதிருவென முழிக்க,
“ட்யூஷன் எடுத்தாளா உன் மதினி?…” என்றதற்கு ஆமாம் என தலையசைக்க,
“இனிமே எதாச்சும் கத்து தரேன்னு சொன்னா அத்தான் சொல்லிதரேன்னு சொன்னாங்கன்னு சொல்லனும். புரியுதா?…”
“ஹ்ம்ம், புரியுது…”
“என்ன புரிஞ்சது?…”
“நீங்க சொல்லிதரேன்னு சொன்னீங்கன்னு சொல்லனும்னு புரிஞ்சது…”
“என்ன சொல்லி தரேன்னு சொன்னேன்?…”
“ஐயோ, திரும்ப சொல்லுங்க. தலை சுத்திருச்சு…” என்று யோசனையுடன் கேட்க அவளின் கேள்வியில் புன்னகைத்தவன்,
“இப்போதைக்கு இதை மட்டும் சொல்லு, என்னன்னு அப்பறமா சொல்றேன்…”
“ஹ்ம்ம், சரி…” என நகர பார்க்க,
“ஏன் எல்லாத்தையும் நீயே இழுத்து போட்டு செஞ்சிட்டு இருக்க?. எல்லாரும் ஹெல்ப் பண்ணுவாங்க தானே?…” என்றவனிடம்,
“மதினி தான் சொன்னாங்க, இங்க எல்லாம் நானே செஞ்சா என்னோட அம்மாப்பாவுக்கு பெருமையாவும், மாமனார் மாமியாருக்கு மதிப்பாவும் இருக்கும்னு. அத்தையும், அம்மாவும் சேர்ந்து பாக்கறேன்னு தான் நிக்கறாங்க. ஆனாலும் நானே செஞ்சா அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்ல…”
“நீ கேட்கலையா உன் மாமியார் வீட்டுல நீ இப்படித்தான் செஞ்சியான்னு?…” என்று அவன் பல்லை கடிக்க,
“இல்லையே…” என்று கையை விரித்தாள் வாசு.
“வாசு, வாசு உனக்கு எப்படி நான் புரிய வைக்க?…” என்று அவன் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே,
“அத்தை எனக்கு தோசை வேணும். பசிக்குது…” என்று வந்து நின்றன ஆதவ்.
“வந்துட்டேன் குட்டி…” என்றவள்,
“விடுங்கத்தான் போறேன்…” என்று நழுவ பார்க்க,
“ஆதவ், அம்மாவை ஊத்தி தர சொல்லு. மாமாவுக்கு அத்தை கூட கொஞ்சம் பேசனும்…” என்று சொல்ல,
“அம்மா தான் அத்தை சூப்பரா எனக்கு புடிச்ச மாதிரி தோசை ஊத்துவாங்கன்னு சொன்னாங்க. அத்தை தான் ஊத்தனும். அத்தை வா…” என அவளின் புடவையை பிடித்து இழுக்க,
“போறேன் அத்தான். மாமாவுக்கும், அப்பாவுக்கும் கூட செய்யனும்…” என்று சொல்ல எரிச்சல் மண்டியது ஷ்ரவனுக்கு.
‘அபி வேணும்னே செய்யறா. இவளுக்கு புரியமாட்டிக்கே? எதுக்கு இப்படியெல்லாம் அபி செய்யறா?’ என்று கோபமாக வந்தது.
“ஓகே, ஆதவ். அத்தை எனக்கு ஒரு ஷர்ட் எடுத்து குடுத்துட்டு உடனே வருவா. நீ ஹால்ல வெய்ட் பண்ணு…” என்று அவனை மென்மையாய் சொல்லி அனுப்பியவன் வாசுவை பார்க்க,
“வேலைக்கு போகலையா அத்தான்? என்ன சட்டை வேணும்? என்கிட்ட கேட்கறீங்க புதுசா? நான் போகனும்….” என நிற்க,
“இனி அப்படித்தான்…” என்றவன்,
“சட்னி ரொம்ப காரமா இருக்குமோ சட்னி?…” என்று அவளின் விரலில் இருந்ததை பிடித்து சுவை பார்க்க,
“அத்தான் என்ன பன்றீங்க?…” என்று நெளிந்தாள் வாசு.