“கதவு திறந்திருக்கு. யாராச்சும் வருவாங்க…” என்று அவளின் கையை பிடித்து இழுக்க பார்க்க,
“இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக்கோ…” என சொல்லி நிதானமாகவே அவளை விட்டவன்,
“நான் ரெடி ஆகிட்டு வரேன்…” என அனுப்பி வைத்தான்.
வாசமல்லிக்கு அங்கிருந்து செல்லவே கால்கள் நகரவில்லை. அவளின் நிலை புரிந்தவன் போல சிரிப்புடன்,
“போகலையா நீ?…” என்று மீண்டும் கையை பிடிக்க வர,
“போய்ட்டேன். போய்ட்டேன்…” என்று வேகமாய் ஓடிவிட்டாள்.
“கிரேசி…” என்று சிரித்தபடி தானும் கிளம்பி வந்தான்.
வந்ததும் அவனுடனே சேர்ந்து அவனின் தந்தையும், மாமனாரும் சாப்பிட அப்போதும் வாசமல்லி வரவில்லை. அபியே ஓடி ஓடி பரிமாற வாசு தோசை வார்த்துக்கொண்டு இருந்தாள்.
உண்டு முடித்தவன் கிட்சாணி பார்க்க அங்கே மாமியாரும், தாயும் சேர்ந்து நின்றுகொண்டு இருக்க பொதுவாய் கிளம்புவதாக சொல்லிக்கொண்டு கிளம்பியவன் மதிய உணவிற்கும் வரவில்லை.
“அவங்க போறப்பயே கேக்கனும்னு இருந்தேன். இப்ப இம்புட்டு நேரமாச்சு இன்னும் வரல…” என சொல்லியபடி அவனுக்கு அழைக்க ஷ்ரவன் எடுக்கவே இல்லை.
இங்கே எத்தனை வேலை பார்த்துக்கொண்டு இருந்தாலும் வாசு புலம்பியபடியே தான் இருந்தாள். முகமும் அத்தனை பொலிவில்லாமல் இருக்க சித்ராவிற்கு மனதே சரியில்ல.
“ஏங்க நீங்களாச்சும் போன போட்டு என்னன்னு கேளுங்க. அவரு எடுக்கவே இல்லையாம்…” என்று கணவரிடம் சொல்ல,
“மாமா, அவன் என்ன வேலைய இருக்கானோ? ப்ரீயா இருந்தா அவனே பேசிருவான். வாசு வேற அப்பா இருந்து கூப்பிட்டுட்டே இருக்கா. அவன் வேலைக்கு எத்தனை டென்ஷனோ? நாம தான் புரிஞ்சுக்கனும். நான் மெசேஜ் பண்ணிருக்கேன். அவனே கூப்பிட்டும்…” என்று அவரையும் தடுக்க சித்ராவிற்கு இப்போது எரிச்சலானது.
மகளையும் இதை செய்யாதே அவனுக்கு அழைக்காதே என்று எதெற்கெடுத்தாலும் சொல்லிக்கொண்டே இருக்க நேரம் செல்ல செல்ல மகளின் முகம் வேறு வாடி இருக்க அபியின் பேச்சு கடுப்பாக்கியது அவரை.
இப்போதென்னவென்றால் தனது கணவரையும் இப்படி சொல்ல அவர் அமலாவையும், நீலகண்டனையும் பார்த்தார். அவர்களும் அபி சொல்வது சரி என்பதை போலவே அமர்ந்திருந்தனர்.
பேசிக்கொண்டிருக்கும் போதே வாசுவிற்கு அழைத்துவிட்டான் ஷ்ரவன். வேகமாய் போனை எடுத்தவள்,
“என்னத்தான் சாப்பிட கூட வரலை? போன் பண்ணாலும் எடுக்கலை…” என கவலையுடன் சொல்ல,
“ஒரு விசாரணைக்காக போய்ட்டேன் வாசு. இப்ப வரமுடியாது. நான் வெளில பார்த்துக்கறேன். நீ சாப்பிட்டியா? வீட்டுல எல்லாரும் சாப்ட்டாச்சா?…” என கேட்டான்.
“இல்ல, இனிமேதான் அத்தான். எல்லாருமே இனிதான் சாப்பிடனும்…” என்று சொல்லும் பொழுதே சட்டென,
“குடு வாசு, நான் பேசறேன்…” என்று அவளிடமிருந்து போனை வாங்கிவிட்டாள் அபி.
“என்ன ஷ்ரவா நீ? இவ்வளவு கேர்லெஸ் உனக்கு? எத்தனை தடவி உனக்கு போன் பன்றது? மெசேஜ் பண்ணிருக்கேன். இப்படியே இருப்ப? கல்யாணம் ஆகிருச்சு. கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? இப்பவே நாங்க எல்லாரும் இருக்கும் போதே நீ இப்படி இருந்தா வாசு தனியா இருக்கும் போது நினைச்சு பாரு?…” என்று பேச,
“எல்லார் முன்னாடியுமா இதை பேசற அபி? என்ன நினைக்கிற நீ? வாசு பேரன்ட்ஸ் இதை நினைச்சு பயந்து அவங்களை நீ சமாதானம் செஞ்சு ஸ்கோர் பண்ணலாம்னு நினைக்கிறியா? கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பு இருக்கா? போனை வாசுக்கிட்ட குடு நீ…” என்று அவன் இரைந்ததில் அபர்னிதா அதிர்ந்துபோனாள்.
“ஷ்ரவா…” என்றபடி எழுந்து சற்று தள்ளி வந்தவள்,
“என்னை நீ என்னடா நினைக்கிற? அப்படி உன் பேரை கெடுத்து வாசு அப்பாம்மாட்ட ஸ்கோர் பண்ணி எனக்கு என்ன ஆக போகுது?…” என்று மெல்லிய குரலில் கேட்க,
“அதே தான் நானும் உன்கிட்ட கேட்கறேன். அப்படி என்ன இதுல உனக்கு ஒரு சந்தோஷம்? எனக்கு உன்னோட நேச்சர் ஓரளவு தெரியும். மத்த விஷயங்கள்ல எப்படியோ இது என்னோட குடும்ப விஷயம். நீ கொஞ்சம் அடக்கி வாசி. அவ்வளோ தான் சொல்லுவேன். வாசுக்கிட்ட போனை குடு…”
“ஷ்ரவா நீ தப்பா…”
“வாசுக்கிட்ட போனை குடுக்கறியா? இல்ல என் அப்பாவுக்கு கூப்பிட்டு குடுக்க சொல்லட்டுமா?…” என்றவனின் பேச்சை தவிர்க்க முடியாமல் உள்ளே சென்றவள் வாசுவிடம் போனை நீட்டினாள்.
“அபிக்கு ஷ்ரவன் மேல ரொம்ப பாசம். இப்ப என் மருமக மேலையும் அதைவிட அன்பு. பார்த்தீங்க தானே? என் மருமகளுக்காக என் மகனை என்ன வாங்கு வாங்கறான்னு…” என நீலகண்டன் சொல்லிக்கொண்டிருக்க அதை கேட்டு சிரித்த அபி,
“ஆமாப்பா, புடிச்சு லெப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டேன். அதான் வாசுவை சமாதானப்படுத்த போனை குடுக்க சொன்னான்…” என்று தன்னுரிமையை அங்கே மைய்யப்படுத்தினாள்.
“சொல்லுங்க அத்தான்…” என மனைவியின் குரல் கேட்டதும்,
“நைட் வர லேட் ஆகும் வாசு. நீ சாப்பிட்டு தூங்கு. எனக்காக வெய்ட் பண்ண வேண்டாம்…” என்று சொல்லியவன் மேலும் பேசும் முன்,
“வாசு அப்பாவுக்கு பசிக்குது. நீ போய் பேசு. நான் எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கறேன். சுகர் மாத்திரை வேற போடனும். எல்லாம் இந்த ஷ்ரவனால…” என பேசியபடி அபி அடுக்களைக்குள் செல்ல,
“அத்தான் நான் அப்பறம் பேசறேன். மாமாவுக்கும் எல்லாருக்கும் சாப்பிட குடுக்கனும்…” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு செல்ல சித்ரா மகளை கவலையாக பார்த்தார்.
வாசு ஷ்ரவனிடம் பேச ஆரம்பிக்கவுமே தானும் அமலாவும் எழுந்து உள்ளே செல்ல போக அபர்னிதா இப்படி பேசவும் போனை வைத்துவிட்டு வந்த மகளின் மேல் ஆற்றாமையாக வந்தது. அதே நேரம் அபர்னிதாவின் முகத்தையும் ஆராய்ச்சியுடன் பார்த்தார்.
‘இந்த பொண்ணு என்ன பண்ணுது?’ என அவளின் பேச்சை, நடவடிக்கையை கவனிக்க ஆரம்பித்தார். அபர்னிதாவிடம் தெரியும் வித்தியாசம் உண்மையா இல்லையா என்று குழப்பமாக இருந்தது.
ஏதோ ஓன்று அங்கே தவறாக இருப்பதை போலவும் இருந்தது. இல்லாததை போலவும் இருந்தது. ஆனால் மகள் இப்படி இருப்பது சரியில்லை என்று மட்டும் புரிந்தது.
——————————————————————-
அன்று காலை தூக்கம் கலைந்ததில் இருந்தே கசகசவென்று பேச்சுக்குரல் கேட்க யார் யாரோ வந்து செல்லும் சத்தம் வேறு ஷ்ரவனின் உறக்கத்தை கலைத்தது. டிவி சத்தம் வேறு அறைக்கதவு திறந்திருந்ததால் காதை பிளந்தது.
ஏற்கனவே நடு இரவில் தான் வீடு வந்து சேர்ந்திருந்தான் அவன். அத்தனை சோர்வுடன் வந்தவன் மனைவியை தேட அவளோ அபர்னிதா, அவள் குழந்தை ஆதவ்வுடன் சேர்ந்து இன்னொரு அறையில் உறங்கிக்கொண்டு இருந்தாள்.
சலிப்புடன் தங்கள் அறைக்கு வர கட்டிலில் நீலகண்டன் உறங்க கீழே ஒரு மெத்தை விரித்து அதில் அமலா தூங்கிக்கொண்டு இருந்தார். வந்தவனை கவனிக்கவும் யாருமில்லாமல் போக இன்னும் எரிச்சல் ஆகியது.
உடனே உடை மாற்றி தானே சென்று பாலை காய்ச்சி குடித்துவிட்டு வந்து படுத்துவிட்டான். உடல் களைப்புடன் மனதும் களைப்பாய் உணர்ந்தது.
படுத்தவன் வெகுநேரம் விழித்திருந்து பின் அதிகாலை போல தான் தூங்கவே செய்ய இப்போதானால் அதற்கும் இங்குமங்கும் நடமாடி அதையும் கலைக்க,
“வாசு…” என்று உச்சஸ்தானியில் அவன் கத்த வந்து நின்றதோ அபர்னிதா.
“வாசு எங்க?…” என கடுப்புடன் கேட்டவனிடம்,
“என் பையனுக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருக்கா. என்னன்னு சொல்லு…” என்றதும்,
“ஒன்னும் தேவை இல்லை. இந்த கதவை சாத்திட்டு போ…” என்று சொல்லி படுத்தவன் கண்ணை மூடிக்கொள்ள,
“மதினி…” என்றபடி வந்தாள் வாசமல்லி.
அவள் குரல் கேட்டதும் ஷ்ரவன் தலையை திருப்பி பார்க்க அபர்னிதாவோ வேகமாய் அந்த அறை வாசலுக்கு விரைந்தாள்.
“என்ன வாசு சாப்பாட்டை ஊட்டி முடிச்சுட்டியா?…” என வேகமாய் கேட்டாள். வேண்டுமென்றே இப்போதெல்லாம் வாசமல்லியை ஷ்ரவன் அழைப்பதை போல வாசு என்றே அழைக்க ஆரம்பித்திருந்தாள்.
“ஆங், சாப்பிட்டான் மதினி. டிவி பார்க்கறான். அத்தான் கூப்ட்ட மாதிரி இருந்துச்சே…” என்று உள்ளே வர பார்க்க,
“அவன் திரும்ப தூங்கறான். நீ வா…” என கதவை சாத்த,
“வாசு…” என்றான் சத்தமாய் ஷ்ரவன் மீண்டும்.
“நீ தூங்குடா. அவ சாப்பாடு ஊட்டின கையோட இருக்கறா. கழுவ கூட இல்லை…” என்ற அபி,
“நீ போய் ஆதவ்க்கு முகம் கழுவி நீயும் கையை கழுவு. ஷ்ரவன் தூங்கட்டும்…” என அனுப்ப பார்க்க,
“உன் மகனை நீ பார்க்க வேண்டியது தானே? ஏன் உனக்கு சாப்பாடு ஊட்ட தெரியாதா?…” என வேகமாய் எழுந்து வந்துவிட்டான்.
“நீ போய் உன் பையனை பாரு…” என்று சொல்லிவிட்டு,
“நீ வாடி…” என்று வாசமல்லியின் கையை பிடித்து உள்ளே இழுத்தவன் கதவை பட்டென்று சாற்ற அபர்னிதாவின் முகம் கறுத்துவிட்டது.
“ஒருதடவை கூப்பிட்டா நேரா என்கிட்டே வந்து என்னனு கேட்கனும். அதை விட்டுட்டு வாசல்ல நிக்கற? தள்ளுங்கன்னு சொல்லிட்டு உள்ள வர தெரியாதா உனக்கு? உன் புருஷன் தானே நானு?…” என்று அவள் மேல் எரிந்துவிழ,
“என்னாச்சு அத்தான்? இவ்வளவு கோபம்?…” என புரியாமல் பார்த்தாள் அவள்.
“உள்ள போய் கையை கழுவிட்டு வா…” என்று பாத்ரூம் நோக்கி கை நீட்டியவன் மீண்டும் கட்டிலில் படுத்துக்கொள்ள ‘என்ன பிரச்சனையோ என்ற நினைப்பில் கையை கழுவி புடவை தலைப்பில் துடைத்தபடி வந்து நிற்க,
“உட்காருன்னு சொன்னா தான் உட்காருவியோ?…” என்றவனின் கடின குரலில் அவனருகே அமர்ந்தாள்.
சில நொடிகள் அவளின் முகத்தையே பார்த்தபடி இருந்தவனுக்கு இரக்கம் சுரந்தது அவளின் மேல்.
“எதாச்சும் சண்டையா அத்தான்?…” என அவள் பேச,
“இப்ப உன்னோட தான் சண்டை. ரெண்டு நாளா உன் முகத்தை கூட சரியா பாக்க முடியலை?…” என்று சொல்லி கண்ணை மூடிகொண்டான்.
அவனுக்கு புரிந்தது தன் மனம் அவளை எந்தளவிற்கு தேடுகிறது என்று. அது அவளுக்கு புரிந்தால் தானே?
“நான் போகவா அத்தான்?…” என்று கேட்டதும் படக்கென்று கண்ணை திறந்தவன்,
“அம்மாவும் அப்பாவும் எங்க? வீட்டுல சத்தத்தையே காணோம்? இப்ப வரைக்கும் இங்கிட்டும் அங்கிட்டுமா போய்ட்டிருந்த மாதிரி இருந்துச்சு…” என கேட்க,
“வீட்டுல நானும் மதினியும் தான் இருக்கோம். ஆதவும். இப்பத்தான் எல்லாரும் அந்த பார்க்குக்கு பக்கத்துல இருக்க புள்ளையார் கோவிலுக்கு போயிருக்காங்க…”
“ஹ்ம்ம், சரி…” என்றவன் அவளின் கையை எடுத்து தனது தலைக்குள் நுழைத்துக்கொள்ள,
“தலையை பிடிச்சு விடனுமா அத்தான்?…”
“சொன்னா தான் செய்வியா? செய்டி…” என்றான் மெல்லிய குரலில்.
மெதுவாய் லேசாய் அவனின் தலையை பிடித்துவிட்டவள் கதவை ஒரு பார்வை பார்த்துவைக்க,
“என்ன?…” என்றான் கோபமாய்.
“இல்ல, கதவு மூடி இருக்கு. மதினி மட்டும் தான இருக்காங்க. அதான்…”
“அவ வீட்டுக்குள்ள தான இருக்கா. நீ பேசாம இரு…” என,
“சங்கட்டமா இருக்குத்தான். கதவ திறந்து வச்சிட்டு வரட்டா?…”
“உன்னையெல்லாம் என்னதான் செய்யறது? இங்க என்ன நடக்குதுன்னு இத்தனை சங்கடம் உனக்கு? என்னோட தான் இருக்க?…” என்று எழுந்தமர்ந்தவன்,
“சரி போய் திறந்து வச்சுட்டு வா. உன் மடில சாஞ்சுக்கறேன்…” என்று சொல்ல ஒன்றும் பேசமுடியாமல் உதட்டை அழுத்தமாய் மூடியபடி இருந்தாள் அவள்.
“ப்ச், எனக்கு தூக்கமே இல்ல வாசு. ஒரு மாதிரி டிஸ்டர்ப் ஆகுது…” என தலையை பிடித்தவன்,
“இங்க தூங்கறேன்னு தெரியுதுல. அந்த ரூம் யூஸ் பண்ண வேண்டியது தானே? இது கூட நீ சொல்லமாட்டியா?…” என கேட்க,
“மதினி தான் இங்க அனுப்பி விட்டாங்க. ஒவ்வொருத்தரா என்னைக்கு குளிச்சு கிளம்பன்னு சொல்லி ரெண்டு பாத்ரூம்லையும் குளிச்சுட்டு வாங்கன்னு சொன்னாங்க. அப்பறம் நான் எப்படி சொல்ல?…” என சொல்ல,
“அபி…” என்று அவன் பல்லை கடிக்கும் பொழுதே,
“இன்னைக்கு வெளில போகலாம்னு மாமா சொல்லிட்டு இருந்தாங்க. நான் கதவை பூட்டிட்டு போறேன். நீங்க தூங்கி எந்திச்சு வாங்க…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே வெளியே ஆதவ் அழும் குரல் கேட்க வேகமாய் எழுந்து சென்றனர் இருவரும்.
“என்னாச்சு அபி? ஏன் அவனை போட்டு அடிக்கிற?…”என ஷ்ரவன் கேட்க வாசு ஆதவை பிடித்து அணைத்துக்கொண்டாள்.
“என்ன செய்ய? நீ எதுவானாலும் இவனை என்னை பார்க்க சொல்லி சொல்ற. அவ எடுத்ததுக்கெல்லாம் வாசு வேணும்னு நிக்கறான். அதான் நாலு சாத்து சாத்தினேன்…” என்று உர்ரென முகத்தை வைத்துக்கொண்டு சொல்லியவள்,
“இதுக்குத்தான் இங்க வரவே யோசிச்சேன். மதிப்பில்லாத இடத்துல வந்துட்டு இன்னைக்கு என் மகனுக்கும் கஷ்டம்…” என்று குத்தலாய் சொல்ல ஷ்ரவன் அவளை முறைத்து பார்த்தான்.
ஆனால் அவளின் அந்த பேச்சு வாசமல்லியை காயப்படுத்த அவளுக்கு கஷ்டமாகி போனது.
“சும்மா இருங்க மதினி. என்னை கூப்பிட்டா உங்களுக்கு என்ன? என்னைத்தான கூப்பிட்டான். நான் பார்த்துப்பேன் அவனை. இனி அடிக்கிற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க…” என்றவள் ஆதவை தூக்கிக்கொண்டு அவனை சமாதானம் செய்தபடி உள்ளே செல்ல ஒன்றுமே நடக்காததை போல தனது மொபைலுடன் வாசலுக்கு சென்றாள் அபர்னிதா.
இருவரும் நகர்ந்ததும் யாமின்றி தனியே நின்றான் ஷ்ரவன். மனைவியின் நிலை புரிந்தவனுக்கு இதில் தான் என்ன செய்ய முடியும் என்று யோசித்தான்.