பிரசவ நாளுக்கு பத்துநாட்கள் முன்பே காசியாத்தா முருகய்யன் வீட்டில் வந்து தங்கிக்கொள்ள அழகுப்பாட்டிக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.
காசியாத்தா வந்து நான்கு நாட்களில் ஒருநாள் நடுநிசியில் ராஜாத்திக்கு வலி எடுக்க வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது அவருக்கு.
அக்கம்பக்கத்தினர் வேறு அந்நேரமே கூடிவிட்டிருக்க குழந்தையை முதலில் மின்னொளியிடம் தான் தரவேண்டும் என்றதற்கு ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் சொல்ல குழந்தையை வாங்க ஆசையுடன் இருந்த மின்னொளி இந்த பேச்சில் கோபம் வந்தாலும் அது சரியான நேரம் இல்லை என்பதால் அமைதியாகி வாங்க மறுத்துவிட முருகய்யன் வாங்கிக்கொண்டார்.
“மின்னு மொத நீ உள்ள போத்தா…” என அழகுப்பாட்டியே சொல்லிவிட ஒருவிதமாய் உடைந்து போனாள் அவள்.
அழகுப்பாட்டி அவள் இங்கே இருந்தால் தேவையில்லாத பேச்சுக்களும் அவளை குத்திக்காட்டி பேசவும் செய்வார்கள் என்பதால் உள்ளே செல்ல சொன்னார்.
அதிலும் ராஜாத்தியின் ஊர்க்காரர்களும், உள்ளூர் சொந்தங்களும் வேறு அப்பொழுதே விஷயத்தை கேள்விப்பட்டு வந்துவிட்டிருந்தனர்.
வந்திருப்பவர்களை கண்டிக்க முடியாது. ஆனால் அவர்கள் பேச இடமளிக்காமல் இருக்கலாம் அல்லவா? அதற்காக செல்ல சொல்ல தாயின் இறப்பிற்கு பின்னர் மின்னொளி வெகுவாய் கலங்கி நின்ற தருணம் அது.
உடலில் ஏதேதோ சில மாற்றங்கள் வேறு அவளை நிலைகுலைய செய்திருக்க விடியும் நேரம் வேறு. வழக்கமாக வீட்டில் இருப்பவர்கள் எழும் முன்பே குளித்து முடித்திருப்பவள் அன்றும் அதே போல குளியலறை செல்ல அப்பொழுதுதான் தன் உடலின் மாற்றமே அவளுக்கு புரிந்தது.
பார்த்தவளுக்கு சந்தோஷம் கொள்வதா வேதனை கொள்வதா என பிரித்தறியமுடியாத அந்த நேரத்தில் தடுமாறி நின்றவள் அழகுப்பாட்டியை அழைக்கவென மீண்டும் கூடத்திற்கு வந்தாள்.
அவிழ்க்கப்பட்ட கூந்தலுடன் அவள் படபடப்புடன் வேகமாய் வந்தது கூட அழகுப்பாட்டியின் கருத்தில் பதியவில்லை.
மின்னொளி நகர்ந்ததும் அவளை பற்றி கூட்டத்தினர் அங்கே அழைத்து செல், இப்படி மருந்து கொடுத்து பாருங்க. தோஷமாக இருக்கும். என்று இஷ்டத்திற்கு பேசிக்கொண்டிருக்க அதனை நிறுத்தமுடியாது திண்டாடிக்கொண்டிருந்த அழகுப்பாட்டி பேத்தியை பார்த்ததும்,
“மொதல்ல முடிய அள்ளி முடிடி. கூடத்துக்கு வரைக்கும் வார. போயி குளி மொத…” என்று அனைவரின் முன்பும் பதட்டத்தில் சத்தம் போட்டுவிட இன்னுமே கலங்கி நின்றாள்.
அந்த நேரம் உடலின் மாற்றம், ஒருவித பதட்டம் அழகுப்பாட்டி பேசியதற்கான காரணத்தை யூகிக்க முடியாது ஒரு அநாதரவான நிலையில் தான் இருப்பதாக நினைத்தவள் நேராக தன் தாயின் அறைக்கு வந்துவிட்டாள்.
“அம்மோவ்…” என்று கதறி அழுதவள்,
“ஆருக்கிட்ட சொல்லுவே? அம்மோவ், அம்மோவ் எனக்கு இப்ப நீ வேணும்போல இருக்கே. சொல்லும்மோவ், எனக்காகவாச்சும் இருந்துருக்கலாமில்ல. எல்லாருக்கு எல்லாரு இருக்காக. எனக்கு? நா இப்ப எப்பிடி இருக்கே தெரியுமாம்மோவ்?…”
என்றவளின் வயிற்றில் சுருக்கென வலி எடுக்க இதற்கு மேலும் குளிக்காமல் இருக்க முடியாது என்பதால் அதற்கு அவசரத்துக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றவள் அவளாகவே முகத்திற்கு பூச வைத்திருந்த மஞ்சளை தண்ணீரில் கலந்து அவளுக்கு அவளே நீர் ஊற்றிக்கொண்டாள்.
கண்ணீர் தண்ணீருடன் கரைந்து செல்ல மீண்டும் திடமான மின்னொளியாய் மீண்டு எழுந்தவள் குளித்து முடித்து வந்து அறைக்குள் நுழைந்து தாயின் படத்தின் முன்னால் ஆசிர்வாதம் வாங்கியவள் அப்படியே அமர்ந்துகொண்டாள்.
தன்னுடைய உடையை அப்பொழுதுதான் கவனித்தவள் வெகு நேர யோசனைக்கு பின்னர் பாவாடை சட்டையை தவிர்த்து தாவணியை அணிந்துகொண்டாள்.
பதினான்கு வயதை அடைந்ததும் அவளுக்கு உடை எடுக்கும் நேரமெல்லாம் முருகய்யன் பாவாடை தாவணியும் சேர்த்தே எடுத்துவைத்து தந்திருக்க அதுவே உடுத்தப்படாமல் இருந்தது.
அழகுப்பாட்டி எத்தனை முறை சொல்லியும் அணியாதவள் இன்று தானாகவே எடுத்து அணிந்துகொண்டாள்.
அவளின் வயதிற்கு எல்லாம் தெரிந்திருந்தது. அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது முதற்கொண்டு ஒரு முதிர்ந்த பெண்ணின் மனதுடன் அதனை எதிர்கொண்டாள்.
உடல் வலியிலும், அசதியில் அமர்ந்தவாக்கிலேயே உறங்கியிருக்க பசி வயிற்றை கிள்ளவும் தான் கண் விழித்தாள். அதுவரை அவளை யாரும் அழைக்கவும் இல்லை. எழுந்து வெளியில் வந்தவள் சாப்பிட செல்ல அப்பொழுது தான் ஊரில் உள்ளவர்களுக்கு தன் வீட்டில் சாப்பாடு நடப்பதே தெரிந்தது.
அனைத்தையும் ஒரு வலியுடன் பார்த்தவள் தனக்கு ஒரு தட்டில் போட்டுக்கொண்டு அங்கேயே அமர்ந்து சாப்பிட அங்கே வந்த காசியாத்தா பார்த்ததும் பதறிப்போனார்.
“ஆத்தே என்னடி இது இங்கன ஒக்காந்து சாப்புடுத?…” என கேக்கவும் மின்னொளிக்கு தொண்டை அடைக்கும் வேதனை.
“ஒண்ணுமில்ல, பசிச்சது. அதேன்…” என சொல்லி அடுத்த வாயை வைக்க,
“இந்த வீட்டு மவராசி ஒன்னிய மறந்துப்புட்டோமே ஆத்தா. இரு ஒனக்கு நா வெக்கிதேன்…” என அவளுக்கு பரிமாற வர எங்கே இருந்தால் அழுதுவிடுவோமோ என பயந்து,
“இல்ல போது, சாப்புட்டேன்…” என தட்டை போட்டுவிட்டு கையை கழுவிக்கொண்டு வெளியே வர அழகுப்பாட்டி அவரின் மடியில் குழந்தையை வைத்திருக்க அந்த நேரம் தூக்க கூடாது என தெரிந்தாலும் முகத்தை பார்க்கும் ஆவலில் மின்னொளி நிற்க,
“என்னத்தா சாப்புட்டியா?…” என்று கேட்டுவிட்டு குழந்தையை கொஞ்ச ஒரு சிரிப்புடன் பார்த்தவளை தாண்டிக்கொண்டு வந்த முருகய்யன்,
“ஆத்தா மதியத்துக்கு கடாவுக்கு சொல்லிப்பிட்டேன். சோதி ஆள கூட்டியாற போயிருக்கான். வேற எதுவு செய்யனுமா?…” என மகளை கவனிக்காமல் கேட்டவர் மகனை பார்வையால் ஆசையுடன் வருடினார்.
“போதுமய்யா, ஆளுவ வந்துக்கிட்டே இருப்பாக இன்னு ஒரு நாலு நாளைக்கி சமையலுக்கு சொல்லிரு. இங்கன அடுப்ப பத்த வெக்க முடியாதுல…” என்றதும் சரி என்றவர் மின்னொளியை பார்த்துவிட்டு செல்ல ஒருவருக்கும் மின்னொளியின் உடை மாற்றம் கவனத்தில் பதியவே இல்லை.
அவளின் முகவாட்டத்தை கவனித்த காசியாத்தா வருத்தத்துடன் அவளுக்கு வேறு எதுவும் வேண்டுமா என கேட்க தலையாட்டி மறுத்துவிட்டு நேராக தொழுவத்திற்கு வந்து அமர்ந்துகொண்டாள்.
உடல் உபாதை வேறு, மனதளவில் மொத்தமாய் சுருண்டுபோன தருணம் அது. கண்கள் கசிவது போல இருக்க காலை கட்டிக்கொண்டு தலையை காலுக்குள் புதைத்துக்கொண்டாள்.
அமரவும் முடியவில்லை. சென்று படுக்கவும் விரும்பவில்லை. பயங்கர மனவுளைச்சலில் தத்தளித்துக்கொண்டிருக்க,
“யே புள்ள நீயா?…” என்றவனின் குரலில் நிமிர்ந்து பார்க்க அங்கே விறகுகளை சுமந்தபடி நின்றுகொண்டிருந்தான் அருள்ஜோதி.
ஏதாவது பேசி வம்பு செய்வான். பதில் பேச முடியாத அளவுக்கு நொந்துபோய் இருப்பவள் அசூயையுடன் முகத்தை திருப்ப,
“என்னடி தாவணிலாம் கெட்டியிருக்க? இன்னிக்கு என்னவா புதுசா புத்தி தெளிஞ்சிருக்கதாட்டம் இருக்கு?…” என கேலியாய் ஆரம்பிக்க அவனை நிமிர்ந்து பார்த்து,
“இப்ப ஒனக்கு என்ன வேணு? பேசாம போ…” என்றவள் மீண்டும் முகம் சாய்த்துக்கொள்ள,
“என்னத்தா மேலுக்கு நோவுதா? கண்ணெல்லா கலங்கி கெடக்குது?…” என பரிவாய் கேட்டதும் காலை வேகமாய் கீழே போட போட்ட வேகத்தில் தானாக கை வயிற்றை பிடிக்க,
“என்ன புள்ள வவுத்து சூடா? இரு வாரேன்…” என்றவன் சென்ற வேகத்தில் இரண்டு இளநீரை கொண்டுவந்து நீட்ட அவனை பார்த்தபடி இருந்தவள் அதனை வாங்காமல் போக,
“ஆனாலு ரொம்பத்தேன் வைராக்கியம்டி ஒனக்கு. நா போன பொறகாச்சும் குடிச்சு தொல. ஒன்னோட ரோதனடி…” என அவள் அமர்ந்திருந்த கல்லில் வைத்துவிட்டு சென்றுவிட மின்னொளியின் மனது அவனின் அருகாமையை விரும்பியது.
இந்த வீட்டில் உள்ளவர்கள் ஒருவரும் கவனிக்காததை இத்தனை வேலையிலும் இவன் எப்படி கவனித்தான் என்று எண்ணி எண்ணி அவனை அதிகமாய் எண்ண ஆரம்பித்தாள்.
அதற்கு முன்பு அவனிடம் வம்புக்கு நின்றாலும் அந்த நிகழ்விற்கு பின்னர் வேண்டுமென்றே அவனிடம் வார்த்தையாட ஆரம்பித்தாள். அவனை அதிகமாய் சீண்டிவிட்டு அவனின் கோபத்தை தூண்டிவிட்டாள்.
இளவரசன் பிறந்து நான்கு நாட்களுக்கு பின்னர் தான் அழகுப்பாட்டிக்கு அவளின் உடை கண்ணில் தெரிந்தது.
“எப்பருந்துடி கட்டுத? நா கெவனிக்கல. நல்லதுக்குதேன். இல்லனா வந்தவளுக இதுக்குங்காட்டி என்னத்தையாச்சும் பேசுவாளுக…” என அதற்கும் அவராக காரணம் சொல்லிக்கொள்ள மின்னொளி எதுவும் மறுத்து பேசவில்லை.
நேரத்தில் சொல்லாதது நேரம் கடந்து சொல்ல அவளுக்கு விருப்பம் இல்லை. அதற்காக அவர்கள் மேல் கோபமும் கொள்ளவில்லை.
இப்படி தெரியாமலே இருந்துவிட்டு போகட்டும் என்பதில் உறுதியாக இருந்துகொண்டாள்.
ராஜாத்தியாக எழுந்து நடமாட ஆரம்பித்ததும் தான் அவர் மயக்கத்தில் இருக்கும் பொழுது நடந்தவைகளை காசியாத்தா சொல்லியிருக்க வீடு கூட்டி சடங்கு முடிக்கும் முன்பு அனைத்து இடத்திலும் நடமாடகூடாது என்பதால் பல்லை கடித்துக்கொண்டு பதினாறு நாட்களும் அமைதியாக மின்னொளியை கவனித்துக்கொண்டு இருந்தார்.
பதினாறாம் நாள் சடங்கை முடித்ததும் தரையில் அமர்ந்துகொண்டு பால் கணக்கை சரிபார்த்துக்கொண்டிருந்தவளின் மடியில் கட்டாயமாக குழந்தையை கிடத்திவிட்டு,
“எத்தே வேல இருக்கு, புள்ளைய வெச்சிக்க சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட,
“கெழவி இப்ப நா தூக்குனா மட்டு யே ராசி ஒன்னும் பண்ணாதாக்கும்? தூக்கு புள்ளைய…” என மின்னொளி கத்த அவளின் கத்தலில் குழந்தை வீறிட்டது.
“ஏன்டி இம்புட்டு இடும்பு ஒனக்கு?…” என்று குழந்தையை அழகுப்பாட்டி தூக்க வர,
“செத்த ஒதுங்கி நிக்கிதீகளாத்தே…” என கோபமாக வந்துவிட்டார் ராஜாத்தி.
“ஏத்தா அவதேன் தூக்குங்குதால…”
“அவ சொன்னா? அன்னிக்கே நம்ம வீடேறி பேசினவகள வாய கிழிச்சி விட்டிருந்தா இன்னிக்கி இவ இப்பிடி பேசுவாளா? இவ இந்த வீட்டு மனிசிதேன? ஒதுங்கி ஒதுங்கி ஆருமில்லாதவளாட்டம் நிக்கா ஒங்களுக்கு சவுக்கியமா? சொல்லுங்க…” என அத்தனை பேச்சு பேசிவிட்டு மின்னொளி அமர்ந்திருந்த இடத்தை பார்த்தால் அவள் அங்கே இல்லை.
குழந்தை அழுததை பொறுக்கமாட்டாமல் இவர்கள் கத்திக்கொள்ளட்டும் என குழந்தையை தூக்கிக்கொண்டு முன்பக்கமாய் விளையாட்டு காண்பிக்க சென்றுவிட்டாள்.
“பாத்துக்கிடுங்க, அவள இப்பிடி பிடிச்சாதேன் உண்டு. பேசாம கம்மின்னு இருங்கத்தே. எம்மவனாச்சும் அவள இறுக்கி பிடிக்கட்டும்…” என்று சென்றுவிட ராஜாத்தி சொல்லியதை போலத்தான் இளவரசன் மீது மட்டுமே ஒட்டுதலுடன் இருந்தாள் மின்னொளி.
மனதுக்குள் பதுக்கியிருந்த மொத்த பாசத்தையும் அவனிடம் மொத்தமாய் காண்பித்து அவனுக்கு தாயாகி போனாள். இதில் ராஜாத்திக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றால் மிகையில்லை.
ராஜாத்தி மட்டும் அன்று பிரசவம் ஆகாமல் இருந்திருந்தால் மின்னொளியின் உடல் மாற்றத்தை சரியாக கவனித்திருப்பார். அது இப்பொழுது மின்னொளிக்கு ஏதுவாகிவிட அவள் பூப்பெய்த விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்வது மிக எளிதாய் போனது.
தனக்கு அந்த நேரத்தில் என்ன தேவையோ அதனை தானே வாங்கிக்கொள்வதும் அதனை சமாளிக்கவும் முடிந்தது. அதிலும் வலிகளை தாங்கிக்கொள்ள முடிந்த ஆரோக்கியமான பெண். அவளால் அதனை கடக்க எளிதாக முடிந்தது.
பெரிதாக அவளின் விஷயத்தில் யாரும் தலையிடுவதும் இல்லை என்பதால் எதுவும் தெரியவில்லை.
திருமணம் என்ற ஒன்று அதனை பற்றி அவள் நினைக்கவும் இல்லை. அவளின் உலகமே இளவரசன் என்றாகி போனான்.
ஆனால் அவளின் அடிமனதில் தங்கிப்போன ஒரு பயம் தான் அதிகமாக அன்பு வைப்பவர்கள் அந்தளவிற்கு தன்னுடன் நீடித்து இருப்பதில்லை என்பது அழுத்தமாய் பதிந்துபோய் இருந்தது.
முதலில் தன் தாய், அதன் பின்னர் தானே விலக்கிவைக்க நேர்ந்த தன் தந்தை, அன்பாய் சுற்றிவந்த தோழியை போன்ற ராஜாத்தி, தூக்கிக்கொண்டு ஊர் சுற்றிய மாமன் அருள் இப்படி அத்தனை பேரும் அவளை விட்டு தள்ளி நிற்க இளவரசனிடம் பாசம் காண்பிக்கும் பொழுதும் அந்த பயம் இருந்துகொண்டே தான் இருந்தது.
“புள்ளைய பாத்துக்கம்மா பாத்துக்கம்மா…” என தாயிடம் நித்தமும் வேண்டிக்கொண்டிருந்தாள் மின்னொளி.
எதற்கும் கலங்காத முருகய்யன் அருள் மின்னொளியை திருமணம் செய்ய மறுத்ததும் அழுது கண்ணீர் விட்டதை தாங்க முடியாமல் தான் அவனை வந்து கட்டிக்கொள் என மிரட்டியது.
ஆனால் அதன் பின்னரான நிகழ்வுகளால் சந்தோஷம் கொள்ள முடியாமல் சஞ்சலம் அவளை ஆட்டிப்படைத்து நிம்மதியாக உறங்க கூட இல்லை.
இன்று இளவரசனுக்கு உடல்நிலை இப்படி ஆகவும் அதற்கும் தான் தான் காரணம் என்று நினைத்து இப்பொழுது கண்ணீர் விட்டபடி தனியாக மின்னொளி.
ஆரம்பத்தில் இருந்து அனைத்தும் தன்னால் தான் என்று நினைத்து மருகியவள் இப்பொழுது கூட தன்னை நினைத்து ஏக்கத்தில் தான் அவனுக்கு இப்படி ஆகிவிட்டது என பயந்து போய் இருந்தாள் மின்னொளி.
வெகு நேரம் ஆகியும் அந்த அறையை விட்டு மின்னொளி வெளியே வராமல் இருக்க நெஞ்சை நீவியபடி படுத்திருந்த அருள் மீண்டும் எழுந்து அந்த கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றவன் மின்னொளியின் முகத்தை பார்த்து ஒரு பெருமூச்சுடன் சென்று அவளருகே அமர்ந்துகொண்டான்.
“யே புள்ள கனவு காங்குததுன்னா ஒத்த வார்த்த சொல்லிப்பிட்டு வந்திருந்தியனா நானு ஒங்கூட வந்துருப்பேனில்ல?…” என்று அவளின் முகவாட்டத்தை போக்கும் பொருட்டு அவன் இலகுவாய் பேச மின்னொளியின் முகத்தில் மின்னல் கீற்றாய் புன்னகை அரும்பியது.